December 24, 2007

"ஆண்டவனின் கருவறையில் அனைவரும் சமம்" - 'வாரமொரு ஆலயம்' நடராஜ் பிரகாஷ்

நிலாச்சாரலுக்காக நான் கண்ட நேர்முகம் : வாழ்க்கையே வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது கலாசாரமும், பண்பாடும் மறந்துபோகக் கூடாதென்கிற நல்லெண்ணத்தில் அவற்றை நினைவுபடுத்துகிற சேவைகளைச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தனது லட்சியமே தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தைப் பற்றியும் இந்த உலகத்துக்கு விளக்கிக் கூறுவதுதான் என்று கூறும் நடராஜ் பிரகாஷ், வாரமொரு ஆலயம் என்ற இணையச் சேவையை நடத்திவருகிறார். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலீஸுக்கு அருகில் வசிக்கிறார். தனது முழுநேரப் பணிக்கு நடுவே, பல்வேறு எதிர்ப்புகளுக்கும், ஏளனங்களுக்கிமிடையில் விடாமுயற்சியோடு தன் சேவையைத் தொடர்கிறாரென்றால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் அருள்மிகு மலிபு வெங்கடேஸ்வரா திருக்கோவிலில், வாரக் கடைசி நாட்களில் தன்னார்வத் தொண்டராக, அங்கு வரும் பக்தகோடிகளுக்குச் சேவையும் செய்து வருகிறார். துளியும் சுயவிளம்பரத்தை விரும்பாத இந்த வித்தியாசமான துருதுரு இளைஞர், நீண்ட யோசனைக்குப் பிறகு நிலாச்சாரல் வாசகர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார். நண்பருடனான செவ்விக்குச் செல்வோம்.


வித்தியாசமான இந்த “வாரமொரு ஆலயம்” செய்ய எப்படி எண்ணம் வந்தது?



நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பது ஆலயம். ஓவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு ஸ்தலபுராணம் உண்டு. அவை ஆலயத்தின் பெருமையை, ஸ்தலம் (இடம்), விருக்ஷ்ம் (மரம்), தீர்த்தம் (புண்ணிய நீர்), மூர்த்தி (இறைவனின் வடிவம்) ஆகிய பரிமாணங்களால் விளங்குகின்றன. வலைப் பதிவுகளை (Blogs) விட பாட்காஸ்டிங் (podcasting) நான்கு மடங்கு வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இணைய நுட்பமாகும். அதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான பாட்காஸ்டை எந்த நேரத்திலும் கேட்கலாம். நமது ஆலயங்களின் பெருமையை பாட்காஸ்டிங் மூலமாக பரப்ப நினைத்ததில் உருவானதுதான் "வாரமொரு ஆலயம்".


பாரம்பரியம் மிக்க இந்துக் கோவில்களைப் பற்றிய விபரங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?


பெரும்பாலும் நான் அல்லது எனது குடும்பத்தினர் சென்று தரிசித்த கோவில்களைப் பற்றி பாட்காஸ்ட் செய்கிறேன். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. நமது முன்னோர்கள் மற்றும் அறிஞர்கள் அளித்துள்ள களஞ்சியமான நூல்கள், ஆய்வுகள், கட்டுரைகள், தலபுராணங்கள் என என்னால் முடிந்த அளவு தொகுத்து வழங்குகிறேன். "வாரமொரு ஆலயம்" சிறப்பாக வர எனக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கும், ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த நன்றி.


அமெரிக்காவில் நமது பக்தர்களின் ஈடுபாடு எப்படி உள்ளது?


ஆன்மீக வாழ்வில்தான் நிம்மதி அதிகமென்பதால் அமெரிக்காவில் தற்பொழுது கோவில்களில் நமது பக்தர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. ஆன்மீகம் என்ற பெயரில் ஆண்டவனின் முன் நமது ஆசையை முன்வைத்து வேண்டுகிறோம். ஆன்மீகம் என்பது அன்பு. மற்றவர்களுக்கு உதவுவதும் கூட. அமெரிக்காவில் கோவில்களில் தொண்டு செய்வதையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.


இந்தியாவில் இருந்திருந்தால் இதைச் செய்திருப்பீர்களா?


"அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்". கோபத்தைக் குறைத்து அன்புணர்வைப் பெருக்கும் ஆன்மீக இறையுணர்வைப் பரப்புவதற்கு இடம் ஒரு பொருட்டேயல்ல. எங்கிருந்தாலும் கண்டிப்பாகச் செய்திருப்பேன்.


பாட்காஸ்ட் தவிர வேறு ஏதாவது எதிர்காலத் திட்டம்?


இந்த பாட்காஸ்ட் தவிர, "அதிகாலை.காம்" என்ற பெயரில் புதிய தமிழ் இணையதளம் ஒன்று நண்பர்களுடன் இணைந்து தொடங்குகிறேன். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களும் அதில் இடம் பெறும். தமிழ் தளங்கள் தொடாத பகுதிகள் எல்லாம் இதில் பதிவு செய்யப்படும். இது சம்பந்தமாக உலகளவில் நிபுணத்துவம் பெற்ற நம் சமூக முன்னோடிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் அத்தளம் நம் சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்படும்.


பக்திப் படங்கள் முன்புபோல் தமிழில் வருவதில்லையே, இது எதனைக் காட்டுகிறது?


பக்திப் படங்கள் குறைந்துவிட்டால் மக்களிடம் பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தமல்ல. திரையில் பக்தியின் முழுப்பரிமாணத்தைக் காட்ட எந்தத் தயாரிப்பாளரும் முன் வருவதில்லை. தற்பொழுது ரசிகனும் பக்தியைத் திரையில் தேடிக் கொண்டிருக்கவில்லை.


ஆன்மீகம் வியாபாரமாக்கப் படுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?



தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.nilacharal.com/ocms/log/12240711.asp

இன்றைய குறள்

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்தமாட்டார்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

ஒரு டாலருக்கு! ஒரு பாலம்

அமெரிக்கா விஸ்கோன்சினில் உள்ள கிகாப்பூ நதியின் மீதுள்ள பாலத்தை வாங்க வேண்டுமா? ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இந்தப் பாலம் கடந்த 31 ஆண்டுகளாக உபயோகிக்கப் படாததால் பழுதாகி நொறுங்கி நதியில் விழுகின்ற நிலையில் இருக்கிறதாம். அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விற்கப் போகிறார்கள் ஒரு டாலருக்கு!

நியுயார்க் டைம்ஸ் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவித் தொகையில் 500 கோடி டொலர்கள் பயங்கரவாததுக்கு எதிரான யுத்தத்தில், மோதல் முன்னரங்கில் செயலாற்றும் துருப்பினரைச் சென்றடையவில்லை என்று நியுயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளியான செய்தியை முட்டாள் தனமான கூற்று என்று சொல்லி பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை வாங்குவதில் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தப் பத்திரிகைச் செய்தி குற்றம் சாட்டுகிறது. வடமேற்கு பாகிஸ்தானில் மோதலில் ஈடுபட்டுவரும் படையினர் பனிப் பிரதேசத்திற்கு உதவாத தலைக்கவசமும் காலணிகளும் அணிந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இராணுவ பேச்சாளர் வஹீத் அர்ஷத், குற்றம் சொல்பவர்கள் படையினரின் நிலைமையை நேரடியாக வந்து பார்த்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் உதவுவதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதி வழங்குகிறது.