August 19, 2007

அறுசுவை உணவு என்றால் என்னவென்று தெரியுமா?

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

இன்றைய குறள்

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

அறத்துப்பால் : அன்புடைமை

அமைதி எப்படி கிடைக்கும்?

"பொய் பேசுதல், புறங்கூறுதல், இழித்துரைத்தல், பயனற்ற சோம்பல் பேச்சு இவைகளால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, இவற்றில் இருந்து விலகியே இருங்கள்"

- புத்தர்

தமிழோசை

  • கைத்தறி நெசவிற்கு பெயர் பெற்ற அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் சுனாமிக்கு பின்பு கைத்தறி நெசவு மீண்டும் உயிர் பெற்று வருவதாக அந்த பிரதேச நெசவாளர்கள் கூறுகின்றார்கள்.
    சுனாமியின் போது இந்த பிரதேசத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் அழிந்து போயின. பலர் மரணமடைந்தனர்.
  • இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து காரணமாக நீரில் படகு மூழ்கி ஐஸ் கட்டிகள் கொண்டு வந்த பெட்டிகளைப் பிடித்தபடி தத்தளித்துகொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்பாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
  • இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பிரச்சனையில் ஆளும் மத்திய அரசுக்கு நெருக்கடி: இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகளின் பிடி இறுகி வரும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியாக, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கூட்டங்களை நடத்தியது.
  • ஆசிய பசிபிக் பிராந்திய எட்டாவது சர்வதேச எயிட்ஸ் மாநாடு ஞாயிற்றுகிழமையன்று கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது. எதிர்வரும் 23 ம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் 60 நாடுகளிலிருந்து சுமார் 3000 பேர் கலந்துகொண்டு இந்தக் கொடிய நோயின் தாக்கம் குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக
    http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

அண்ணாகண்ணன் : பொதிகை நேர்காணல் 2005

ஆகஸ்ட் 18, சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாள் அந்தக் காலம் மீண்டும் வராதா ? !
- வி.ஏ.எம். அழகுமுத்து

''இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க) இந்துஸ்தான் ஆஸாத் (இந்தியா சுதந்திரம்) நேதாஜிக்கு ஜே!' என்று நாங்கள் யுத்த முழக்கமிடும் போது... நேதாஜி பின்புறம் இரு கைகளையும் கட்டிக் கொண்டு பார்வையிட்டவாறே வருவார். முதல் இரண்டு முழக்கத்திற்கும் கையை உயர்த்துவார். நேதாஜிக்கு ஜே எனும்போது கையை உயர்த்த மாட்டார். அவருடைய குறுகுறுப்பான பார்வை. அதிர்ந்து பேசத் தெரியாத குரல், சுவாமி விவேகாநந்தருக்குப் பிறகு யாரையும் எளிதில் கவரக்கூடிய முகக் கவர்ச்சி. உடலை அசைக்காமல் அப்படியே முகத்தை மட்டும் திருப்பிப் படையினரைப் பார்வையிடும் தன்மை...'' இப்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த காலம் நோக்கி தன் நினைவைச் செலுத்திய வி.ஏ.எம். அழகுமுத்து, நா தழுதழுத்து, மீறி வந்த அழுகையைக் கொஞ்ச நேரம் மெளனித்து அடக்கிக் கொண்டார். சிறிது நேரம் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிரும்போது ''எனக்கு நேதாஜிதான் தலைவர். இப்ப எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால், யாரையும் என்னால் தலைவர் என்று ஒத்துக் கொள்ளவே முடியாது'' என்று திட்டவட்டமாகக் கூறியவரிடம் இடைமறித்து,
''நீங்கள் இந்திய தேசியப் படையில் சேர்வதற்கான காரணம் பற்றியும் அதில் உங்களுடைய பங்கு, நேதாஜியின் நடவடிக்கையில் மறக்க முடியாத நிகழ்வு இதைப் பற்றி சொல்லுங்கள்'' என்றதும் நிமிர்ந்து இருக்கையின் நுனியில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
வி.ஏ.எம். அழகுமுத்துவின் தந்தை தேசப் பற்று மிகுந்தவர். அவர், வி.ஏ.எம். மிடம் காந்தி, நேரு, விவேகாநந்தர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரைப் பற்றியெல்லாம் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். அழுகுமுத்துவுக்குப் பத்து வயது நிரம்பும்போது தந்தை இறந்துபோக, கூலி வேலைக்குச் சென்று தனது தாயையும், தமக்கையையும் காப்பாற்ற வேண்டிய குடும்பச்சூழல். இந்தக் காலகட்டத்தில் இவர்கள் வசித்தது பர்மாவின் தலைநகர் ரங்கூனிலிருந்து 83வது கிலோ மீட்டரில் உள்ள 'தன்னாமீன்' எனும் இடத்தில். ஜப்பானியர்களிடம் இவரைப் போலவே இன்னும் ஏராளமான தமிழர்கள் கூலி வேலை செய்தவர்கள். எந்தக் குற்றமும் செய்யாத ஒரு தமிழரை ஜப்பானியப் படை வீரன் ஒருவன் அடித்துவிட, இவர்களுக்கு மேஸ்திரியாக வேலை செய்த 'ஐயர் சாமி' என்பவரிடம் முறையிட்டிருக்கிறார்கள். இதற்கு அவர் ''பயப்படாதீர்கள். அடுத்த வருடம் இதே நேரம் எந்த ஜப்பானியனும் உங்களை அடிக்க மாட்டான். அடிக்கவும் அவர்களால் முடியாது'' என்று கூறியிருக்கிறார். இதற்கு விளக்கம் கேட்டபோது, ''சுபாஷ் சுந்திரபோஸ் என்னும் மாபெரும் தலைவர் இந்தியாவில் பிரிட்டிஷாரின் கட்டுக் காவலில் இருந்து தப்பி ஜெர்மனை அடைந்து, அந்நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரோடு தோழமை கொண்டு, அங்கிருக்கும் இந்தியர்களைத் திரட்டி ஒரு படையை அமைத்து இந்திய சுதந்திரத்தை மீட்க இருக்கிறார். எனவே அவரை அங்கிருந்து ஆசியாவுக்கு அழைத்து வரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்று பதில் வந்தது ஐயர்சாமியிடமிருந்து.
மேலும் ஐரோப்பா முழுவதும் ஜெர்மனியின் (ஹிட்லரின்) ஆதிக்கத்தில் இருந்தாலும் அங்குக் குடியேறி வாழும் இந்தியர்கள் மிகக் குறைவு. ஆனால் கிழக்காசியாவில் முப்பது லட்சம் இந்தியர்களுக்கு மேல் வாழ்கிறார்கள். ஜப்பானியர்களிடம் ஐம்பதாயிரம் பிரிட்டிஷ் இந்தியப் படைகள் கைதாகியிருப்பதால், அவர்களையும் இணைத்துக் கொண்டு இங்கு ஒரு பெரும் படையைத் திரட்டி, பிரிட்டிஷார் மேல் படையெடுக்கும் திட்டம் உருவாகி வருகிறது. அதைத் தலைமையேற்று நடத்த சுபாஷ் சந்திரபோஸ்தான் தகுதியானவர் என்பதால் அவர் விரைவில் இங்கு வர இருப்பதாகவும் மேஸ்திரியான ஐயர் சாமி என்பவர் கூறியிருக்கிறார். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆசியாவில் ஜப்பான் சீனாவின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டதுடன், இந்தோ சீன நாடுகளையும், கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பர்மா போன்ற நாடுகளும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் ஜப்பானியர் ஆதிக்கத்திற்குள் வந்திருந்தன. சீனாவின் பெரும் பகுதியையும், இந்தியாவையும், இலங்கையையும் தவிர, பிற ஆசிய நாடுகள் எல்லாம் ஜப்பானியர்களின் ஆளுகைக்குள் வந்திருந்தன. அடுத்த இலக்கு இந்தியா. இந்தியாவைத் தாக்குவது உறுதி என்று எல்லோரும் அறிந்திருந்தாலும், ஜப்பான் உடனடியாக அந்த வேலையைச் செய்யவில்லை. ஏனென்றால் சுபாஷ் சந்திரபோஸின் வருகைக்காகவே ஜப்பான் இந்தியாவின் மேல் தாக்குதல் நடத்தக் காலம் தாழ்த்துகிறது. அவர் இங்கு வந்தவுடன் ஜப்பானியரிடம் கைதாகியுள்ள ஐம்பதாயிரம் இந்தியப் படை வீரர்களையும், ஆயுதங்களுடன் ஒப்படைத்து எல்லாவித உதவிகளையும் செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாகவும், அப்போது எல்லோரும் சுபாஷ் சந்திரபோசின் சுதந்திரப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்த இருப்பதால் எந்த ஜப்பானியன் உங்களைத் தொட்டு அடிக்க முடியும்? என்றும் அவர் விளக்கியிருக்கிறார்.
வி.ஏ.எம். அழகுமுத்து போன்றவர்களுக்கு மேஸ்திரியான ஐயர் சாமி கூறிய இந்தச் செய்தி மகிழ்ச்சியை அளித்தது என்றாலும், ''எப்படி எதிரிகளை ஏமாற்றிவிட்டு ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்கு வர முடியும்?'' என்ற சந்தேகக் கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். இதற்கு முன்பு 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற பெயரையே கேள்விப்படாதவராக இருந்திருக்கிறார். மேஸ்திரி சொல்லச் சொல்ல 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற மாமனிதரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல். இந்நிலையில் தண்டோரா போட்டு எல்லோரையும் பர்மியப் பள்ளிக் கூடத்தில் மாலையில் கூடி விட வேண்டும் என்று அறிவித்திருந்தனர். 150 பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் டாக்டர் பரூவா, படாமியா ஆகியோர் ரங்கூன் சென்று திரும்பியதையும் ராஷ்பிகாரிபோஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின்' கிளை ரங்கூன் தலைநகரான 'தன்னாபீனில்' நிறுப்பட்ட விஷயத்தையும் அதன் நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்போது, 'சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ஏழு எட்டு மாதங்களாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து ஜப்பானை அடைந்து மன்னர் ஹிரா ஹிட்டோவையும், பிரதமர் டோஜோவையும் கண்டு பேசியிருக்கிறார். அங்கிருந்து சிங்கப்பூர் வந்து ராஷ்பிகாரி போஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கிழக்காசியாவில் உள்ள இந்திய மக்களை ஒன்று திரட்டி, ஒரு சுதந்திரப் படையை ஏற்படுத்தி இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை விரட்ட இந்தியாவின் மேல் படையெடுக்கும் பணியைச் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி கிழக்காசியாவில் படை திரட்டிக் கொண்டிருந்தார். அவரது பணி தடங்கலின்றி நிறைவேற தன்னாபீன் தமிழர்களும் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ''1943ம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் சந்திரபோஸ் வந்து சேர்ந்தார். நான் மறுமாதமே அவரது இந்திய தேசியப் படையில் சேர்ந்தேன். அங்கு எனக்களிக்கப்பட்ட வேலை என்பது ஒற்றுவேலை. வேவு பார்ப்பதும், காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதும் தான் பிரதானமாகயிருந்தது. என்னுடைய ஆசை ஒருவாறு நிறைவேறி சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்துவிட்டேன். அவருடைய அதிகாரம் இப்போதுள்ள முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் இந்த மூன்று பேருடைய அதிகாரத்தையெல்லாம் மிஞ்சியது. ஆனால் பார்வைக்கு மிகவும் எளிமையானவர். அதே நேரத்தில் கம்பீரமானவர். அவர் மேடையேறினால் கீழே ஜப்பானியப் படையினர் உட்கார்ந்திருப்பார்கள்.
சுபாஷ் சந்திரபோஸ் பதவியேற்கும்போது கண்ணீர் வடித்ததை நான் பார்த்தேன். ''இத்தனையாயிரம் வீரர்கள் நம்மை நம்பி வந்திருக்கிறார்களே. இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்'' என்பதை நினைத்து அழுதார். அதே நேரத்தில் தமது சொந்த நாட்டில் அரசாங்கம் நடத்துவதைப் போல் துணிச்சலாக அரசு நடத்தினார். சுபாஷ் சந்திரபோஸ் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. நான் இரண்டே இரண்டு முறை மட்டுமே அவர் சிரித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை நாங்கள் இருந்த முகாமுக்கு ஒரு சர்க்கஸ் கோமாளி வந்தான். அவனைக் கர்னலிலிருந்து அனைவருக்குமே நன்றாகத் தெரியும். தொழில் இல்லாததனால் அவன் அங்கு வந்தான். அவனுடைய ஆசை நேதாஜியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பது. உள்ளே வந்தவன் 'என்னை யாராவது தூக்க முடியுமா?'' என்றான். ' அப்படி என்னைத் தூக்க முடியாவிட்டால் எனக்கு இரண்டு ரூபாய் தர வேண்டும். தூக்கிவிட்டாலோ நான் நான்கு ரூபாய் அவர்களுக்குத் தருவேன்'' என்றான். முதல் தடவை தூக்கிவிடலாம். இரண்டாவது முறை மூச்சைப் பிடித்து நின்று கொள்வான். இதை சுபாஷ் சந்திரபோஸ் தூரத்தில் நின்று பார்த்துவிட்டு மெளனமாகச் சிரித்தார். அந்தக் கோமாளி ஒரு கர்னலிடம் சுபாஷைப் பார்க்க விருப்பம் தெரிவித்தான். கர்னல் இதைப்போய் அவரிடம் சொன்னவுடன் அவனைக் கூப்பிட்டனுப்பினார். போனவன் ''என்னைத் தூக்குங்கள் பார்ப்போம்'' என்றான். மெளனமாகச் சிரித்த நேதாஜி அலக்காகப் பிடித்துத் தூக்கிவிட்டார். ''மற்றொரு முறை தூக்குங்கள் பார்ப்போம்'' என்றவனை தூக்கிப் பார்த்தார். இரண்டாவது முறை அவனைத் தூக்கவே முடியவில்லை. அப்போது அவர் பலமாகவே சிரித்ததைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். மற்றொரு முறை, பயங்கரமாகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நமது ராணுவத்தினர் அணிவகுத்து நின்று போர் முழக்கம் செய்துவிட்டுத் தாக்குதலுக்குத் தயாரானோம். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் எங்களை நோக்கி வரும்போது, கர்னல் நேதாஜியைப் பார்த்து, பதுங்கு குழிக்குள் போய் விடும்படி கூறினார். அப்போது நேதாஜி ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு, ''வெள்ளைக்காரர்கள் இன்னும் என் மேல் போடுகிற குண்டைத் தயாரிக்கவில்லை'' என்று சொன்னார். பெரும்பாலும் அமைதியாகவேதான் பேசுவார். எந்த நேரமும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார். பயிற்சிக்களத்திற்கு வந்தால், நேராக சமையல் அறைக்குச் செல்வார். தயாரித்து வைத்திருக்கும் உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பார்ப்பார். தண்ணீரைக் குடித்துப் பார்ப்பார். கடைசியாக ''தண்ணீரைக் கொதிக்க வைத்தீர்களா?'' என்று கேட்பார். ஒரு முறை பத்திரிகையாளர்கள் நேதாஜியிடம், ''ஜப்பான் படையினரைச் சேர்த்துக் கொண்டு இந்திய விடுதலைக்குப் போராடுகிறீர்கள். அதே ஜப்பானியர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்த நினைத்தால் என்ன செய்வீர்கள்?'' என்றார்கள். அதற்கு அவர் சொன்னார், ''வெள்ளைக்காரர்களைச் சுட்ட துப்பாக்கியை கையில்தானே வைத்திருக்கிறோம்'' என்றார். நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜேதான். அடடா! அந்தக் காலம் மீண்டும் வராதா? அந்தக் கொந்தளிப்பிலும், பேரலையிலும் நீந்திக் குளிக்க மாட்டோமா? அந்தப் பெருமழையிலும், பெரும் புயலிலும் பூகம்பத்திலும் மகிழ்ச்சி பொங்க ஓடியாடி வினையாற்றும் பேறு கிட்டாதா? உருகியோடும் எரிமலை என்னும் தியாகக் குழம்பில் உருகி ஓட மாட்டோமா? மீண்டும் அந்தக் காலம் வராதா? அந்தத் தலைவன் போல் மற்றொரு தலைவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கி தவிக்கிறேன்'' என்று முடித்தார் கண்களைத் துடைத்துக் கொண்டே.
சந்திப்பு - பி. நந்தகுமார்.

August 18, 2007

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் இதயத்தைப் பிழிந்து எங்கோ எடுத்துச் செல்லும் யேசுதாஸின் இனிய பாடல்கள்!! இசையை ரசிக்கும் எவருக்கும் மொழி அவசியம் இல்லை என்பது இந்தப் பதிவின் மூலம் நிரூபணமாகும் என்பதில் ஐயமில்லை!

Powered by eSnips.com

இன்றைய குறள்

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது

அறத்துப்பால் : அன்புடைமை

ஆராய்ச்சிக்குச் சமமான ஞானம் இல்லை, யோகத்துக்குச் சமமான பலம் இல்லை. இவ்விரண்டும் ஒன்றே என்று அறியத்தக்கது
- யாக்ஞவல்க்யர்

தமிழோசை

  • பருவ மழையினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளில் உணவுப்பற்றாகுறை ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
  • இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையைத் தளர்த்திக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 18 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க

August 17, 2007

எனது நெருங்கிய நண்பரும் நடிகருமான திரு.கரண் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறிய நேர்முகம்

கரண் பகுதி 2

கரண் பகுதி 3

"ஒருவன் நம்மிடம் கோபப்படும் போது நாமும் திருப்பிக் கோபப்பட்டால், அவனை தண்டித்தால், அது அவனது கையிலுள்ள புண்ணுக்கு மருந்து போட்டு ஆற்றுவதற்கு பதில், அதைக் குத்தி மேலும் பெரிதாக்குவது போன்றது. அதன் பலனாக காயத்திலிருக்கும் சீழ் நம்மீதும் படுகிறது. நம் உடலிலும் துர்நாற்றம் பரவுகிறது. நமது கோபத்தால் அவன் மேலும் அகங்காரம் கொண்டவனாக மாறுகிறான். நாமோ அஞ்ஞானியாகின்றோம். மாறாக, நாம் பொறுமையாக இருந்தோமானால், அது கையிலுள்ள காயத்துக்கு மருந்து வைத்து ஆற்றுவதற்கு சமமாகும்"
- மாதா அமிர்தானந்தமயி

இந்தியாவுல எல்லோராலும் நல்ல மனிதன் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு ஆள் அப்துல்கலாம்தான்

அவர் புத்தகம் இவ்வளவு காப்பி வித்ததற்கு அப்துல்கலாம்ங்கிற hype மிக முக்கிய காரணம். ஒரு கிராமத்துலயிருந்து ஒரு ஆள் வந்தார். சார் அப்துல்கலாம் புக் ஒரு காப்பி குடுங்க சார்ன்னு கேட்டார். எதுக்காக வாங்குறார்ன்னு ஒரு ஆர்வத்துல விசாரிச்சப்போ அவர் சொன்னார். சார் என்காலம் முடிஞ்சுப் போச்சு, இப்ப படிக்கிற புள்ளைங்களாவது நல்லா படிச்சு நல்ல பிள்ளைங்களா வரட்டும். எங்க ஊரு பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு குடுக்கிறதுக்குதான் சார். ஊருக்கு இரண்டு அப்துல்கலாம் வந்தாகூட நல்லதுதானே.
பெரிய பெரிய விஷயங்களைக்கூட தன்னடக்கத்துடன் கூறும் காந்தி கண்ணதாசனின் பண்பும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்.. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க.. http://www.andhimazhai.com/news/viewmore.php?id=2839

எழுத்தாளன் பணி எழுதிக்கொண்டிருப்பதே. எவர் அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் எதிர் பார்ப்பவன் நல்ல எழுத்தாளன் அல்ல - பாலகுமாரன்


ஜனரஞ்சக பத்திரிக்கையில் எழுதுபவர்களுக்கு இலக்கிய அந்தஸ்த்து கொடுக்க மறுக்கும் விமர்சகர்கள் பற்றி?
ஒருவரை அங்கீகரிப்பதற்கோ அல்லது அங்கீகரிக்க மறுப்பதற்கோ இன்று வாழும் சகமனிதர் எவருக்கும் அதிகாரம் இல்லை. தற்குறியே தான் அங்கீகரித்ததாக கபடம் பேசுவான், தான் அங்கீகரிக்கவில்லை என ஆணவம் காட்டுவான். காலம் மனிதரை விட பெரிய விஷயம், அதற்கு ஒரு இலக்கிய படைப்பை என்ன செய்ய வேண்டுமென்று தெரியும். எழுத்தாளன் பணி எழுதிக்கொண்டிருப்பதே. வேறு எவர் அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் எதிர் பார்ப்பவன் நல்ல எழுத்தாளன் அல்லஎழுத்தாளர் பாலகுமாரன் நேர்முகம் தொடாந்து படிக்க இணைப்பில் செல்க http://www.andhimazhai.com/news/viewmore.php?id=849

இன்றைய குறள்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

அறத்துப்பால் : அன்புடைமை

தமிழோசை

கொழும்பில் கடந்த ஜூன் மாதத்தில் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் இருவரின் கொலைச் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவர்களைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு சன்மானமும் அறிவித்துள்ளனர். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 17 வெள்ளிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

காலஞ்சென்ற மாபெரும் மேதை திரு.மதுரை சோமு அவர்களின் "தேவரின் தெய்வம்" பாடல் இங்கே மீண்டும் சிறுவன் விக்னேஷ் குரலில்!

வறுமை, வேலையில்லை என்ற நாய் என்னைத் துரத்த அதுக்குப் பயந்து ஓடினவந்தான் நான். இப்ப இளைப்பாறும் போதுதான் தெரியுது இவ்வளவு தூரம் ஓடிவந்த்துருக்கேன்னு"

போலீஸ்காரர்களின் துரத்தல் எங்கே போய் முடியுமென்று எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் பாலனின் அனுபவம் வேறு விதம் போலீஸ்காரனின் துரத்தல் பாலனை கோடீஸ்வரர் ஆக்கியிருக்கிறது.
எப்படி..? 1981 ல் வீட்டை விட்டு சென்னைக்கு ஒடிவந்த பாலனுக்கு படிப்பு, பணம், மற்றவர்கள் ஆதரவு எதுவுமே கிடையாது. எழும்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலா, பயண ஓட்டல் நிறுவனங்கள் என்று தென்பட்ட எல்லாரிடமும் வேலை கேட்டும் பார்த்தார்.கிடைக்கவில்லை. ஒரு நாள் இரவு பசி மயக்கத்தில் இவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் போலீஸ்காரர் சந்தேகக் கேஸில் இவரைக் கைது செய்ய அடித்து எழுப்பி ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறு கும்பலுடன் போய் நிற்கச் சொன்னார். ஒன்றும் புரியாமல் பக்கத்திலிருந்தவரிடம் பேச்சு கொடுத்த பாலனுக்கு இவர்களோடு போனால் சிறையிலடைத்து விடுவார்கள் என்பது புரிந்தது. போலீஸ்காரர் வேறொருவரை எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில் திசை தெரியாமல் ஓடத் தொடங்கினார். போலீஸ்காரர் துரத்த இன்னும் வேகமெடுத்தார். சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்த போது போலீஸ்காரர் இல்லை.
ஓடி ஓடி களைத்துப் போய் மனிதர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த ஒரு இடத்தைப் பார்த்து, அதுதான் பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்து அங்கேயே நின்றுவிட்டார். சோர்ந்து போய் அந்த இடத்தில் உட்கார்ந்தவர் கண் அயர்ந்து போய்விட்டார். காலையில் விழித்துப் பார்த்தால் அவருக்கு முன்னால் 20 பேரும் பின்னால் 200 பேரும் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் அவரிடம் வந்து, 'தம்பி, இடம் தருவாயா, 2 ரூபாய் தருகிறேன்' என்றார் இன்ப அதிர்ச்சிக்குள்ளான பாலன் பணத்தை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார். அது அவரது முதல் வருமானம். முதலீடும் கூட. அதன் பிறகு தான் அவருக்குத் தெரிந்தது அது அமெரிக்கத் தூதராலயம் என்று. வருமானத்துக்கு இதுவே சிறந்த வேலை என நினைத்த பாலன் அங்கு வந்து செல்லும் பயண முகவர்களுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தி விமான டிக்கெட்டின் விலை, விசா, பயணத் தேவைக்கான விபரங்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். வரிசையில் நிற்கும் நேரத்தில் உடன் நிற்பவர்களுடன் பேச்சுக் கொடுத்து அவர்களுக்கு பயணச் சீட்டு வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பயணத் தேவைகளை பூர்த்தி செய்வது, விமான நிலையம் வரை அவர்களது பெட்டி படுக்கைகளை சுமந்து சென்று வழியனுப்புவது என்று தனது பணிகளை விரிவாக்கினார். வாடிக்கையாளரின் திருப்தியே , தமது திருப்தி என்று இயங்க ஆரம்பித்த பாலனை நம்பி பல லட்சங்களும் கடன் கொடுக்க பல விமான பயண முகவர்கள் முன்வந்தனர். இதனையே மூலதனமாகக் கொண்டு 1986ல் மதுரா டிராவல் சர்வீஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார் பாலன். இன்று அது வருடத்துக்கு 12 கோடிக்கும் மேலான வர்த்தக எல்லையைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது. "நான் எதையும் சாதிச்சுட்டுதா நினைக்கல. பெருசா தன்னம்பிக்கை வைச்சு பிளான் பண்ணி எல்லாம் வரல. ஒருநாய் துரத்தினா உயிருக்குப் பயந்தவன் எப்படி ஓடுவான்? வறுமை, வேலையில்லை என்ற நாய் என்னைத் துரத்த அதுக்குப் பயந்து ஓடினவந்தான் நான். இப்ப இளைப்பாறும் போதுதான் தெரியுது இவ்வளவு தூரம் ஓடிவந்த்துருக்கேன்னு"என்று தன்னுடைய வளர்ச்சி பற்றி கூறுகிறார் 'மதுரா டிராவல்ஸ்' கம்பெனியின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான வீ.கே.டீ. பாலன்
உங்கள் வளர்ச்சிக்கான காரணங்கள்?
நான் 'நாணயம்' தவறியதேயில்லை. நாணயத்தை நான் கட்டிப்பிடிச்சுக்கிட்டேன். ஒரு மனிதன் நாணயத்தை இழந்துட்டானா அதுக்குமேல அவனிடம் இழப்பதற்கு எதுவுமிருக்காது. 'நாணயம்'னா "சொல்வதைச் செய் செய்வதைச் சொல்" அவ்வளவே. உழைச்சு முன்னேறுவதுங்கிறது மோசடி வார்த்தை.வெயில்ல ரோட்டுல கான்கிரீட் போடுறவனை விட, மூட்டை தூக்குறவனை விட யாராவது கஷ்டப் பட்டு உழைக்க முடியுமா? கஷ்டப்பட்டு உழைச்சா மட்டும் முன்னேறிட முடியாது. இஷ்டப்பட்டு உழைச்சாத்தான் முன்னேறலாம்.
மிகவும் குழப்பமான நேரங்களில் சரியான முடிவுகளை எடுப்பதெப்படி?
எல்லா மனிதனும் எல்லா முடிவுகளும் சரியாக எடுப்பதில்லை. அப்படி எடுத்திருந்தா ஹிட்லர், முசோலினி, எல்லாம் செத்திருக்கமாட்டாங்க.என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்புவதை விட ஏதாவது முடிவெடுப்பதே சிறந்தது. எந்த முடிவும் சரியான முடிவு, தவறான முடிவுன்னு அதன் விளைவுகளைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுது. ஜெயிச்சவங்க எல்லாரும் சரியா முடிவெடுத்து ஜெயிச்சவங்க கிடையாது. அவங்க ஒவ்வொரு முறை சறுக்கி விழும் போதும் காப்பாத்துறதுக்கு யாராவது இருந்திருப்பாங்க. கொஞ்சம் மனசாட்சியோட பேசினோம்னா பலர் ஒருவருக்காகவும் ஒருவர் பலருக்காகவும் வாழ்றதுதான் வாழ்க்கை தொழில் செய்யனுங்கிற முடிவு நிச்சயம் வெற்றியைத்தான் தரும். தொழில் ஒருவன் தோற்றுப் போனால் அது தொழில் செய்தவனின் தவறேயொழிய தொழிலின் தவறல்ல. If you don't run your business properly, one day you'll have to run away from your business.
உங்களை மாதிரி சில முதல் தலைமுறையினர் கஷ்டப்பட்டு நிறுவனத்தை வளர்க்க அவர்கள் வாரிசுகள் மிக எளிதாக நிர்வாகப் பொறுப்புக்கு வந்துடறாங்களே?
வாரிசுகளை நிர்வாகம் பண்ணவிடறது தப்பு. அவங்களுக்கு அனுபவிக்க மட்டும் தான் தெரியும்.வியாபாரத்தை வளர்க்கணும், இன்னும் உயாரத்துக்கு கொண்டு போகணும் அப்படின்னெல்லாம் எண்ணமிருக்காது. பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கிறதே அவர்களுக்குச் செய்ற மிகப் பெரிய தீங்கு. நல்ல பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கணும்னு அவசியமில்லை. கெட்ட பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துப் பிரயோஜனமில்லை.வாரிசுகளுக்கு உண்மையிலேயே வியாபாரத்துல விருப்பம் இருந்தா கம்பெனியில சாதரண ஊழியரா வேலைக்குச் சேர்ந்து படிப்படியா வளர்ந்து வரணும். இல்லைன்னா நல்ல காலேஜ்ல முறைப்படி M.B.A படிச்சுட்டு கூட வரலாம்.
எதுவுமே படிக்காமல் தொழில் தொடங்குபவருக்கும் M.B.A படித்து தொழில் தொடங்குபவருக்கும் இருக்கும் வித்தியாசம்?
முதல் முதலா பள்ளிக்கூடம் கட்டினவன் பள்ளிக்கூடம் போகாதவனாத்தான் இருப்பான். முதன்முதல் சிலபஸ் பள்ளிக்கூடம் போகாதவங்க, அனுபவம் மூலமா வாழ்வை புரிஞ்சிகிட்டவங்க எல்லாம் சேர்ந்து உருவாக்கினதாத்தான் இருக்கும். 'சேர்மன்' பதவி, 'M.D' பதவி எல்லாருக்கும் கிடைக்கும். ஆனா 'Founder' பதவி வேணும்னா நீங்கதான் ஏதாவது உருப்படியா செய்யணும்.
நீங்க டிராவல் ஏஜென்சி ஆரம்பித்த காலத்துக்கும் இன்றைக்கும் உள்ள மாற்றங்கள்?
முதல் டிராவல் ஏஜன்ட் எப்படி வேலை பார்த்திருப்பான்.. தோள்ல வைத்து மனிதர்களை தூக்கிட்டுப் போயிருந்திருப்பான். அப்புறம் பல்லக்குல . நீங்க சீஸன் நேரங்கள்ல சபரிமலைக்குப் போனீங்கன்னா இன்றும் பல்லக்குத் தூக்குபவர்களை பார்க்கலாம். அறிவியல் வளர்ச்சியோடு எப்போதும் தொழிலை இணைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்க்கையைத் திரும்பி பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். துயரமா இருந்தது. Suicide பண்ணக்கூடபோய்ட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியே மயங்கி விழுந்துட்டேன்.இன்னிக்கு மகிழ்ச்சியா இருக்கேன். Suicide பண்ணியிருந்தா இந்த நல்ல வாழ்க்கையை இழந்திருப்பேனில்லையா. நல்ல வாழ்க்கைன்னா நான் வசதி வாய்ப்பைச் சொல்லலை. நண்பர்கள் உறவினர்கள் என்று எவ்வளவு பேர் உங்களை நேசிக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் தாய், தந்தை, தம்பி, பக்கத்துவீட்டுக்காரர்கள், பால்காரி, மீன்காரி என்று எல்லாருடனும் உங்கள் உறவு எப்படியிருக்கிறது என்று பாருங்கள். இந்த வீதியில் தான் உங்கள் தேரோட வேண்டும். இவங்க தானே உங்கள் வாழ்க்கை. உங்க மேல் யார் பொறாமைப்படப் போறாங்க.அப்துல்கலாமா? பில்கிளின்டனா? உங்க அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டும் தானே. அவர்களோடு உறவுகளை நன்றாக அமைத்துக்கொள்ளுங்கள். வியாபார நேரம் போக மீதமிருக்கிற நேரத்தை சமூகத்திற்காக செலவழிக்கும் பாலன் இதுவரை பேட்டி காணப்படாத சாமானிய மனிதர்களை பொதிகை சேனலின் வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சிக்காக பேட்டி காண்கிறார். இரண்டாம் மகளின் திருமணத்திற்காக கிட்னி விற்ற தாய், இருபத்தி மூன்று வயதில் கணவன் மூலம் எய்ட்ஸ் நோயாளியான பரிதாப மனைவி, சென்னை பொது மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யும் மருத்துவர் என்று பல்வேÚ விதமான மனிதர்களை வாரந்தோறும் சந்திக்கிறார். 300 வாரங்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி பலரின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்திருக்கிறது. இது போன்ற விஷயங்கள் தான் திருப்தியைக் கொடுக்கிறது என்கிறார் பாலன். வெற்றியடைவது மட்டுமல்ல, வெற்றிபெற்றபின் தனது பங்களிப்பாக சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் மனது சிலருக்கு தானிருக்கும். அந்த சிலரில் வி.கே.டி.பாலனும் ஒருவர்.
- சந்திப்பு என்.எஸ்.ராமன்