September 06, 2007

3 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற வாலிபரை அடித்துக் கொன்ற மக்கள்

லக்னோ:
உ.பி. மாநிலத்தில் 3 வயது சிறுமியைக் கற்பழித்த காமக் கொடூர வாலிபரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. தலைநகர் லக்னோ அருகே உள்ள பாண்டே கஞ்ச் என்ற பகுதியில் பெற்றோருடன் வசித்து வருபவர் 3 வயது சிறுமியான ரியா. திடீரென ரியா காணாமல் போய் விட்டார். அவரது பெற்றோரும், அப்பகுதி மக்களும் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் ரியா கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ரியாவின் தந்தைக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர் 10 மணிக்குள் ரியா வீடு திரும்பி விடுவாள் என கூறியுள்ளார். இதனால் அவர்கள் குழப்பமடைந்தனர்.

அருகே உள்ள ஒரு தொலைபேசி பூத்திலிருந்துதான் அந்த போன் வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து யார் பேசியது என்பதை பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது சிவ்மோகன் என்பவர்தான் அந்த சமயத்தில் போனில் பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிவ்மோகனின் வீட்டுக்கு படையெடுத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி ரியா, கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடலை துணியைப் போட்டு மூடி வைத்திருந்தார் சிவ்மோகன்.

ரியாவை கற்பழித்து பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளது தெரிய வந்தது. இதைப் பார்த்த ரியாவின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் பெரும் கொதிப்படைந்தனர்.

சிவ்மோகனை சுற்றிச் சூழ்ந்து சரமாரியாக, வெறித்தனமாக அடித்து நொறுக்கினர். வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து தாறுமாறாக அடித்ததில் சிவ்மோகன் உயிரிழந்தார். அப்படியும் வெறி தீராமல் வீட்டில் இருந்த சிவ்மோகனின் 70 வயது தாயாரையும் அடித்து கொல்ல கூட்டத்தினர் பாய்ந்தனர். ஆனால்அதற்குள் விரைந்து வந்த போலீஸார் அந்த மூதாட்டியை கூட்டத்தினரிடமிருந்து மீட்டுக் கொண்டு சென்றனர்.

கொல்லப்பட்ட சிவ்மோகன் ஏற்கனவே 12 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற வழக்கில் கைதானவர். சமீபத்தில்தான் அந்த வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தார். வந்தவுடன் 3 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்துக் கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: