June 19, 2008

கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா?" - இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்

பகவத் கீதையை மேற்கோள் காட்டும் கனிமொழிக்கு, பைபிள், குரான் பற்றி பேசும் துணிச்சல் உள்ளதா என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : பெண்கள் சீரழிந்து கெட்டுப் போவதால்தான் வர்ண ஆசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றனர் என்று பகவத் கீதையில் உள்ளதாக பொருள் சொல்லி இருக்கிறார் கனிமொழி. தந்தையைப் போலவே மகளும் தெரியாத விஷயத்தை பற்றி ஆவேச விளக்கம் சொல்லியிருக்கிறார். கீதையை மேற்கோள் காட்டுவதோ, உபநிஷத்தை, மகாபாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை மேற்கோள் காட்டுவது என்பதோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. உலகத்தின் அத்தனை மரபுகளும், மதங்களும், கோட்பாடுகளும், கொள்கைகளும், இலக்கியங்களும், படைப்புகளும், ஒரு மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கையில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார். கீதையைக் கூறிய கனிமொழி, பைபிள், குரான் போன்ற நூல்களில் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கும் உதாரணங்களைக் கூறத் தயாரா? அப்படி மேற்கோள் காட்டினால் அவரை துரத்தி, துரத்தி, துரத்தி விரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பார்கள். அல்லது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் போல நாடு கடத்தி இருப்பார்கள். முதலமைச்சரின் மகள் என்ற திமிரோடு பேசுவதை கனிமொழி நிறுத்திக் கொள்ளவேண்டும். கனிமொழிக்கு தைரியம் இருக்குமேயானால் பகவத் கீதை பற்றி விஷயம் தெரிந்தவர்களோடு விவாதிக்க தயாரா? அப்படியானால் அவருக்கு வசதியான தேதி, பொது இடம் குறிப்பிடட்டும்.

No comments: