August 23, 2007

எக்காலத்துக்கும் பொருந்துவது "திருக்குறள்" மட்டுமல்ல, இந்த மாமேதையின் சொற்பொழிவும்தான்! நான்கு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோமா?


குடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை ஜூலை 5, 2003 வாழ்த்துக்கள் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இன்று நீங்கள் வாழ்ந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சுதந்திர தினம். இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நாளும் கோளும் ஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்த தருணத்தில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் சென்று பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் சயின்டிஸ்ட்டாக இந்தியாவில் பணியாற்றி வந்தேன். பிறகு அண்ணா யுனிவர்ஸிட்டியில் புரொபஸராக பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களை சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு என்னை பிரஸிடென்ட் ஆக நாமினேட் செய்தார்கள். இந்த பிரஸிடென்ட் ஆகும் வைபவத்தை கோ-ஆர்டினேட் செய்ய ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த மினிஸ்டர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் "கலாம்ஜி உங்கள் preference என்ன? எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன் "பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே time என்பது இந்த நடைமுறையை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும் வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்". அந்த அமைச்சருக்கு ரொம்ப ச்ந்தோஷம். இதை பத்திரிக்கை நியூஸாக கூட கொடுத்துவிட்டார்.
இவ்வாறாக நான் ஜூலை 25-ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆகவே பூமி சூரியனை சுற்றுவது போல சூரியன் கேலக்ஸியை சுற்றி வருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடங்கள் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் laws of motion என்ற தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் electro magnetic theory கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், "சந்திரசேகர் லிமிட்" என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் life எத்தனை நாள் என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்க்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவ புத்தகத்தின் மூலமாக இந்த கருத்துகளை அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாக தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து யூனிஃபைட் தியரி உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம்? எப்படி பிறந்தோம்? எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.
இந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரா சொன்னது - அஷ்டவக்ரா ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் "I am the universe and universe is my conciousness" என்றார். நான் நினைக்கிறேன் இந்த தத்துவத்தை சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனிஃபைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது. The Creator நான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 2,00,000 பள்ளிக்கூட குழந்தைகளைச் சந்தித்தேன். அது போல சில மாதங்களுக்கு முன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னைக் கேட்டாள் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேனா என்று. நான் மாணவர்களை சந்தித்த இடம் ஒரு open air theatre. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் "பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் கேலக்ஸியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி யுனிவர்ஸில் ஒரு சின்ன கேலக்ஸி. நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய கேலக்ஸியிலும் நமது சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிட பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனிலும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு insignificant planet. நாம் மேலே பார்த்தால் ஆயிரமாயிரமாக தெரியும் அந்த நட்சத்திரங்களை பார் - இதையெல்லாம் ஒரு creator தான் create செய்யமுடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன்", என்றேன்.
இவ்வாறாக insignificant ஆக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய முடியும். இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. வானகம் திறந்து வழிவிடும் அந்த அற்புதமான பாடலை எந்து நண்பர் திரு. செல்வமூர்த்தியுடன் - நண்பர் செல்வமூர்த்தி ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்கு பாடிக் காட்ட விரும்புகிறேன்.
அரிது அரிது மானிடராதல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு
செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி
பிறந்தாலும் ஞானமும்
கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தக் காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே
இந்தப் பாடல் நன்றாக இருந்ததா? இந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள்.
அந்தக் குறள்:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
இதன் பொருள் என்ன? The higher you aim you will raise to that level. You will succeed. This is the message. இரண்டு ஆசைகள் நான் சமீபத்தில் சென்னையில் அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன். அந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காணவேண்டும் என்று. அது முடியுமா? என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா? இதுவா உண்மை நிலை? நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த original இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவதாக, அந்த கவிஞன், திருக்குறளில் எங்குமே தான் யார்? என்ன குலம்? எந்த நாடு? எந்த மதம்? என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனை பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவர் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார். இந்த மனிதனில் அறிவு ஒளியைப் பாருங்கள். அவன் எந்த சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான்? எந்த சூழ்நிலையில் வாழ்ந்தான்? இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதை காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் - என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பெரும்பணிதானே? இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை செய்ய வேண்டும். PURA நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? உங்களில் பலர் சிறு சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் இந்த கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. புரொபஸர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - I.I.T Director ஆக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களை செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு Electronic connectivity கொடுக்கவேண்டும். அதாவது டெலிபோன், இண்டர்நெட் வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் டெலிமெடிஸின், டெலி எஜுகேஷன், இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவு இணைப்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும். இந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமையான பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும். இளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம் இந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந் தனில் சிந்தனை
வீணாவதை மாபெரும் குற்ற மென்போம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் நூறாகிலும்
இந்த லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
எனக்கு உங்களை எல்லாம் பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கு எல்லாம் அருள் கொடுப்பானாகுக. இப்போது உங்களில் ஒருசிலர் 8 அல்லது 4 பேர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
ஆ.ப.ஜெ அப்துல் கலாம், 5.7.2003 இது குடியரசுத் தலைவரின் இணையப் பக்கத்திலிருந்து யூனிகோடுக்கு மாற்றப்பட்டது.

கர்நாடகாவில் நாங்கள்தான் பூர்வக்குடிகள்! நாங்கள் பிழைக்கவந்த தமிழர்கள் இல்லை

பெங்களுர் வாழ் தமிழ் மக்களுகெல்லாம் தாம் இம் மண்ணின் மைந்தர் அல்ல பிழைக்க வந்த மக்கள் என்ற தவறான என்ணம் இருக்கின்றது. அந்த கருத்தாக்கம் தவறு தமிழரே இம் மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2001-வருட மக்கள் தொகை கணக்குப்படி கருநாடகத் தமிழரின் எண்ணிக்கை 95-இலக்கம். அவர்கள் எல்லாம் வந்தேறிகளாய் இங்கு வந்தவர்களா? தொன்று தொட்டு இங்கேயே வாழ்ந்து வந்தவர்களா? இதற்கு விடை காண, வரலாற்றை விவரிக்க வேண்டும். 1956-ம் ஆண்டில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, அதன் பிறகு, பழைய சென்னை மாகாணத்திலிருந்த எல்லையோரப் பகுதிகளான பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, சித்திரதுருகம், கொள்ளேகாளம் போன்ற இடங்களில்தான் கரு நாடகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கெல்லாம் அப்பகுதிகளுடனான தனி வரலாறு உண்டு. பத்திராவதி, சிக்கமக்ளூர், சிவமுகா போன்ற பகுதிகளில் உள்ள இரும்பாலைகள், கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய கண்கானி முறையில் ஆசைக்காட்டியும் வலியவும் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பணிக்கமர்த்தப்பட்டனர். கருநாடகத்தின் உட்பகுதியில் தனி பண்பாட்டு தீவுகளாக வாழ்வமைத்துக் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் பெங்களூர் மற்றும் தங்க வயல் தமிழர்களின் நிலையோ, இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை. பெங்களூர் தமிழர்கள் நகரின் மக்கள் தொகையில் தற்போது 35% விழுக்காடுகள் உள்ளனர். முசுலிம்களோ, பெங்களூரில் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். கன்னடரோ, கருநாடகத்தின் தலைநகரில் 25% விழுக்காடுதான் உள்ளனர். தெலுங்கரில் சிலரும் மராட்டியரில் சிலரும் தங்களை கன்னடர் என்றே சொல்லிகொள்கின்றனர். பழைய சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளையும், ஐதராபாத் நிசாமிடமிருந்து சில பகுதிகளையும், பம்பாய் மாகாணத்திருந்து சிலபகுதிகளையும், மைசூர் மாகாணத்தின் சில பகுதிகளையும் இணைத்து கருநாடக மாநிலம் அமைக்கப்பெற்ற பின்னரே கன்னடர்கள் பெங்களூர் நகருக்கு பெரிய அளவில் வந்து குடியேறத் தொடங்கினார்கள் என்பதே வரலாற்று உண்மை.
பெங்களூரிலும், கோலார் தங்க வயலிலும் காணப்படும் தமிழர்-கன்னடர் இனப்பூசல் தமிழர்கள் பிழைப்புத் தேடி வந்தேறியதால் வந்த ஒரு பூசல் அன்று. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த தமிழகத்தின் எல்லைப்புறத் தமிழ்ப்பகுதிகளை 1956-ம் ஆண்டில் "மொழிவழியில்" கன்னடருக்கு அரிந்துகொடுத்தமையால் வந்த வினையே அப்பூசலாகும். அண்மையில் பெங்களுருக்கு வந்து குடியேறிய கன்னட வெறியர்கள், இப்பெங்களுரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல், இப்பகுதியில் தொன்று தொட்டுவாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கு அண்டி பிழைக்க வந்தவரே என்று சொல்லித் தமிழரை விரட்டவும் அழிக்கவும் பார்க்கின்றனர். இந்நிலையில், பெங்களுரின் வரலாற்றை சுருங்கப் பார்க்கலாம். பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களுர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத்தலை நகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கி.பி.997-ம் ஆண்டில் ஓசக்கோட்டை முதலான இம் மாவட்டத்தின் பல பகுதிகள் சோழ அரசன் இராசராசதேவனால் வெல்லப்பட்டன. மாகடிப் பட்டணத்தை 1139-ம் ஆண்டில் நிறுவியவர்கள் சோழர்கள்தான். இன்று எலவங்கா என்றழைக்கப்படும், பெங்களுர் பகுதி சோழவள நாட்டின் ஒருபகுதியாக இருந்தது. அதற்கு "இலைப்பாக்கநாடு" என்று பெயர். இந்த இலைப்பாக்கநாடு ஹொய்சோழர்கள் ஆட்சியில் "எலவக்கா" என்றாகி பிறகு "எலவங்கா" என்று திரிந்தது. சோழ கங்கர்கள் அல்லது நுளம்பர்கள் என்னும் சிற்றரச மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலி சோழர்க்கு அடங்கிய சிற்றரசாக ஆண்டு வந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. மைசூர் மாவட்டத்திலுள்ள தலைக்காட்டை தலைநகராக் கொண்டு ஆண்டு வந்த கங்கர்கள் தமிழையே பேசி வந்ததால், தமிழ் கங்கர் எனப்பட்டனர். Source : (பெங்களுரில் சோழர் ஆட்சியா..? )
தொடரும்
அன்புடன்அரவிந்தன்
பெங்களூர்

இன்றைய குறள்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை

அறத்துப்பால் : விருந்தோம்பல்

அமைதி எப்படி கிடைக்கும்?

"பல்லைக்காட்டிச் சிரிப்பு சிறுபிள்ளைத்தனமானது. உங்கள் மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ள ஏதாவது காரணமிருந்தால் புன்னகை செய்வதே போதும்"

- புத்தர்

தமிழோசை

  • பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தற்போது நாடு கடந்து வாழ்ந்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப் நாடு திரும்பலாம் என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது
  • இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் எண்ணம் இடதுசாரிக் கட்சிகளுக்கு இல்லை. ஆனாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்த அரசின் முடிவையடுத்தே ஆதரவு குறித்து தெரிவிக்கப்படும் என இந்திய இடதுசாரிகள் கூறியுள்ளனர். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 23 வியாழக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 22, 2007

தமிழ்நாடு அரசின் கேபிள் தொலைக்காட்சி : ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 1

கலைஞர் கருணாநிதிக்கும் மாறன் பிரதர்ஸ்-க்கும் போர் தொடக்கம்! பொறுத்திருந்து பார்ப்போம்!!

ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 2

ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 3

"பாதங்கள் நடக்கலானால் பாதைகள் தடுப்பதில்லை"

இன்றைய சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள் அனைவருமே வசதி வாய்ப்புகள் பெருகும்போது அதனை எப்படிப் பல மடங்காகப் பெருக்கலாம் என்று நினைக்கும் இந்தச் சுயநலம் மேலோங்கும் காலத்தில், இயலாதவர்களுக்கும் ஏழைக்குழந்தைகளுக்கும் எப்படியெல்லாம் உதவமுடியும் என்ற நல்லெண்ணத்தில் கிட்டத்தட்ட 28 வருடங்களாக யாருக்கும் தெரியாமலே இப்படியொரு சேவையைச் செய்துவந்திருக்கிறது மரியாதைக்குரிய நடிகரும் நல்ல மனிதருமான திரு.சிவகுமார் குடும்பம்! அவர்களின் இந்த அற்புதமான தொண்டினையும், சேவையையும் நாம் அனைவரும் பாராட்டாமல் இருக்கமுடியாது.

இன்றைய குறள்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்கப் பண்பாடல்ல

அறத்துப்பால் : விருந்தோம்பல்

அமைதி எப்படி கிடைக்கும்?

"நல்ல செயல்களையே செய்யுங்கள். பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாதீர்கள். சிறு உயிருக்குக் கூட தொந்தரவு தராதீர்கள். இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் புனிதமானவர்கள் ஆவர்"
- புத்தர்

காயாத கானகத்தே

  • தமிழ் நாடக வரலாறு குறித்து தொடர்
    தமிழ் நாடகத்துக்கென்று தனியான ஒரு பாணிமட்டுமல்லாது, சிறப்புமிக்க ஒரு வரலாறும் உள்ளது.
    தெருக்கூத்தில் ஆரம்பித்து, இலக்கியம் வரை பல்வேறாகப் பரிமாணித்துள்ள தமிழ் நாடகத்தின் வளரச்சி குறித்து பெட்டகத் தொடர் இது.
    தமிழ் சினிமாவின் அடித்தளமாக இருந்த நாடகம், அரசியல் களத்திலும், சமூக களத்திலும் பெரும் பங்காற்றியுள்ளது.
    தமிழ் சமூகத்தில் நாடகம் ஆற்றிய பங்கு குறித்தும், தற்போதைய உலகில் நாடகம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நமது தமிழக செய்தியாளர் டி என் கோபாலன் இந்த நீண்ட தொடரைத் தயாரித்து வழங்குகிறார்.
    நாடகத் துறையில் புகழ்பெற்று விளங்கியவர்களின் செவ்விகளுடன், தமிழ் நாடக வரலாற்றை இந்தத் தொடர் மூலம் நேயர்கள் அறிந்து கொள்ளலாம். இணைப்பில் செல்க... http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml
  • இந்தியாவுக்கும் - ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் வெகுவாக மேம்படும் என்று ஜப்பானியப் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
  • இராக் அரசாங்கம் குறித்த அமெரிக்க விமர்சனங்கள் பொறுப்பற்றவை என்றும், நாகரீகமற்றவை என்றும் இராக்கிய பிரதமர் நூரி அல் வர்ணித்துள்ளார். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 22 புதன்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க....

"போங்கடா நீங்களும் உங்க தேசியமும்" பாமரனின் பகிரங்கக் கடிதம்!

‘Patriotism is the last resort for the Culprits.’ - மார்டின் லூதர் கிங்.
“என் தாய் நாடு இந்தியா…இந்தியர் அனைவரும் எனது உடன்பிறப்புகள்…” படித்துக் கொண்டே போனான் மகன். அவன் படிக்கப் படிக்க சிரிப்பு வந்தது.
இது கர்நாடக இந்தியர்களுக்குப் புரிபடவில்லையே என்று. காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சனை வந்தாலே போதும் நமது ‘தேசியக்’ கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக திரண்டு ‘சொட்டு நீர்கூட கொடுக்கக்கூடாது’ என்று போடுவார்கள் தீர்மானம். கர்நாடக காங்கிரஸ் சொல்வது சரியா…
தமிழக காங்கிரஸ் சொல்வது சரியா… இதில் எது சரி…? வாயே திறக்காது அவர்களது ‘தேசியத்’தலைமை.

ஜனதா தளம் மட்டும் சும்மாவா… ஐக்கியமோ… ஐக்கியமற்றதோ… யாருக்கும் குறைந்தவர்களா என்ன…? எடுத்துவிடு அங்கொரு அறிக்கை… இங்கொரு அறிக்கை… இது குறித்து இவர்களது தலைமையும் கப்சிப். இந்தத் ‘தேசியச்’ சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்பாத மற்ற தலைமைகளோ… ‘நயாகரா நீர் வீழ்ச்சியைத் தமிழகத்திற்குத் திருப்பிவிட வேண்டும்…செவ்வாய் கிரத்தில் தண்ணீரைக் கண்டுபிடித்து தாமிரபரணியோடு இணைக்க வேண்டும்…’ என்றெல்லாம் அள்ளி வீசுவார்கள். காஷ்மீரிலுள்ள பண்டிட்டுகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் காவிரியையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது வேறு கதை. மொத்தத்தில் கேணையர்கள் நாம்தான். நமக்கு தேசபக்தியை டன் கணக்கில் ஊட்டோ ஊட்டென்று ஊட்டும் தேசிய ஒருமைப்பாட்டின் ஒட்டுமொத்த ஏஜண்டுகளோ இந்த விஷயத்தில் மட்டும் முக்காடு போட்டுக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள்.ஆக இவர்களது தேசீயம்… ஒருமைப்பாடு… எல்லாம் தமிழகத்திற்கு மட்டும்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வித்தியாசமானதொரு‘தேசிய ஒருமைப்பாட்டு’ பார்முலாவே வைத்திருக்கிறார்கள்.
பார்த்திபனாகட்டும்… அர்ஜுனாகட்டும்… விஜயகாந்த் ஆகட்டும்… முதலமைச்சர் என்றால் கடத்தப்பட வேண்டும். பிரதமர் என்றால் காப்பாற்றப்பட வேண்டும்… என்பதே அது. இந்திய விடுதலைக்காவே போராடிய வ.உ.சி.யை பற்றிப் படம் எடுக்கும்போதுகூட ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றே எடுத்தார்கள். ஆனால் டிராபிக் போலீசைத் தட்டிக் கேட்கிற கிழடுக்குப் பெயர் ‘இந்தியன்’.

போதாக்குறைக்கு ’40 லட்சம் தமிழர்கள் ‘பிணைக் கைதிகளாக’ கர்நாடகாவில் இருக்கிறார்கள்…பெருமூச்சையும் கொஞ்சம் மெதுவாக விடுங்கள்…’ என்கிற ரகத்தில் வேதம் ஓதுகிறார் படையப்பா. இது அரசு தூதரல்ல. தேவதூதரே போனாலும் தீர்க்கமுடியாத பிரச்சனை… ஆகவே 40 லட்சம் தமிழரின் பாதுகாப்புக்காக முறத்தால் புலி துரத்திய கூட்டம் வாயையும் மற்றதையும் மூடிக் கொண்டிருப்பது தான் தேசிய சேவை. அரசியலைப் பொறுத்தவரை… ‘தேசிய’ அரசியலில் குப்பை கொட்டி விட்டு மாநிலக் கட்சியானவைகளும் உண்டு… உள்ளூரிலேயே ஓணான் பிடிக்க முடியாத ‘ஜாம்பவான்கள்’ ‘தேசிய’ அரசியலை வெட்டி முறிக்கக் கிளம்பிய கதைகளும் உண்டு. ஆனால் அப்பாவித் தமிழர்களைப் பொறுத்தவரை… ‘தேசிய ஒருமைப்பாடு…’ ‘இறையாண்மை…’ என்பதற்கெல்லாம் அர்த்தமே வேறு. ஈழத்தைப் பொறுத்தவரை இலங்கையின் ‘இறையாண்மைக்குப்’ பங்கம் வராதவாறு உதை வாங்க வேண்டும்.

பம்பாயிலோ… கர்நாடகத்திலோ… என்றால் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் நேராமல் உதை வாங்க வேண்டும். எங்கு எவ்வளவு வாங்கினாலும் அங்கங்குள்ள அரசுகளின் இறையாண்மை பாதிக்கப்படாமல் வாங்கவேண்டும் என்பதே தேசபக்திக்கு அடையாளம்.

போங்கடா நீங்களும் உங்க தேசியமும்.
நன்றி: தீராநதி

August 21, 2007

தோழர் ஜீவா

பொதுவாழ்க்கையில் அரசியலில் எத்தனையோ பேர் இயங்கியுள்ளார்கள். பலர் தலைவராகவும் அறியப்படுகிறார்கள். ஆனால் சிலர் தாம் பொதுவாழ்க்கையில் இயங்குவதற்கான முன் மாதிரிகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாகத் தமிழகச்சூழலில் முற்போக்கு, சனநாயக, இடதுசாரிச் சிந்தனை மரபின் முகிழ்ப்புக்கும் அதனின்று மேற்கிளம்பும் செயற்பாட்டுக்கும் உறுதியான தளம் அமைத்தவர்களில் ப. ஜீவானந்தத்துக்குத் தனியான இடமுண்டு. தமிழ் மரபுக்குள்ளிருந்து முற்போக்கு சனநாயக இடதுசாரிச் சிந்தனை மற்றும் செயல் வாதத்துக்கு உத்வேகம் கொடுத்தவர் ஜீவா என்று கூறலாம். தமிழ்நாட்டில் நிலவி வந்த காந்திய, பெரியாரிய, மார்க்சியச் சிந்தனைகளின் தாக்கத்துக்கு உட்பட்டு தமிழ்ச் சமூகத்தில் புரட்சிகரமான மாற்றம் உருவாகத் தீவிரமாக உழைத்தவர் ஜீவா.
இவர் தமிழறிஞர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், பத்திரிகையாளர், பகுத்தறிவுவாதி, தேசியவாதி, போராளி, பொதுவுடைமைவாதி, விவசாயத் தொழிலாளர்களின் உற்ற தோழன், போராட்டக்களம் பல கண்ட தளபதி... என்றெல்லாம் பலவாறு சொல்லி ஜீவாவைப் புகழும் மரபு இன்றுவரை உள்ளது. இவை வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல. ஜீவாவை அவர் வாழ்ந்த காலத்தில் வைத்துப் புரிந்து கொள்ளும்போது மேற்குறித்த பண்புகளுக்கான கூறுகள் வெளிப்பட்டன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. தமிழரின் மொழி, இனம், மற்றும் நாடு சார்ந்து ஜீவா முழங்கிய சொற்கள் வெறும் உணர்ச்சி மயமானவை அல்ல. தமிழ்ப் பண்பாடு மற்றும் சிந்தனை மரபில் இழையோடிவரும் உயிர்ப்பான முற்போக்கு, சனநாயக, இடதுசாரி மரபை மீளக்கட்டமைக்கும் இலட்சிய பூர்வமான நடைமுறைகள் கொண்டவையும் ஆகும். இதற்கேற்ற சொல்-செயல் இணைவுதான் ஜீவா. சமூக, அரசியல், கலாசார தளங்களில் கொள்கை சார்ந்த விளக்கங்கள் அறிவுபூர்வமாக வேண்டிநின்ற காலத்தில் ஜீவாவின் வருகை அதனைத் தக்கவாறு பூர்த்தி செய்யத் தொடங்கிற்று. தமிழ்ச் சமூக இயக்கத்தின் விமரிசனப் பரப்பில் செயற்பாட்டாளராக ஜீவாவின் பாகம் இன்னும் தொடர்வதற்கான முழுச்சாத்தியத்தையும் கொண்டுள்ளது. இதனாலேயே ஜீவா தலைவராக, சிந்தனையாளராக, செயற்பாட்டாளராக, தொண்டராக இனம் காணுவதற்கான முழுத் தகுதியையும் வெளிப்படுத்தியுள்ளார், வாழ்ந்துள்ளார்.
"கொள்கை எங்களுக்குக் கிடையாது" என்கிறார் ஸ்ரீமான் ராஜகோபாலச்சாரியார். எங்கள் கொள்கையெல்லாம் ராஜாஜியை எதிர்ப்பது ஒன்றுதான் என்று கூறுகிறார். ஏன் என்று கேட்கிறேன்? ராஜகோபாலாச்சாரியை எதிர்ப்பதற்கு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமில்லை. அவர் ஒருவரை மாத்திரம் எதிர்ப்பதற்கு ஐக்கிய முன்னணி ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்குமேயானால், அதைப் போன்ற அவசியமற்றதான வேறு ஒரு கட்சி இந்த நாட்டில் இருக்க முடியாது. ஒரு ராஜாஜியை எதிர்ப்பதற்காகவோ 10 இலட்சக் கணக்கான மக்கள் இந்த மாகாணம் முழு வதிலும் வோட்டுப் போட்டார்கள்? காங்கிரஸ்காரர்களுடைய அதிகார பலத்தை எதிர்த்து, காங்கிரஸ்காரர்களுடைய திமிர் நடத்தையை எதிர்த்து, காங்கிரஸ்காரர்களுடைய ஜபர் தஸ்துக்களை எதிர்த்து இவ்வளவையெல்லாம் எதிர்த்து 10 ஆயிரக் கணக்கில் வெள்ளமாகத் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள். "இவ்வாறு சட்டப்பேரவையில் முழங்கினார் ஜீவா. இந்த முழக்கம் ஜீவாவின் முதல் முழக்கம். 1952 ஜூலை 1-ம் தேதி தொடங்கிய ஜீவாவின் இந்த முழக்கம் சட்டப்பேரவையில் அன்று தனித்துவமாக ஒலித்தது. கொள்கை சார்ந்த நிலைப்பாடுகளை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் அறிவுபூர்வமாகவும் எடுத்துரைத்த பாங்கு ஜீவாவினுடையது. அன்று காங்கிரஸ் கட்சி குறித்த ஜீவாவின் விமரிசனம் அக்காலத்து நடைமுறையில் அக்கட்சி எத்தகைய திமிர்த்தனத்துடன் விளங்கியது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அக்கட்சியின் மீதான மோகம் எங்கும் புனிதப்படுத்தப் பட்டிருந்த பொழுது ஜீவாவின் இந்த முழக்கம் உண்மையின்பால் கவனம் குவிக்க வைத்தது. கொள்கை சார்ந்த நிலைப்பாடுகளின் மேல் கவன ஈர்ப்பை ஜீவா ஏற்படுத்தினார்.
சட்டப்பேரவையில் முற்போக்கு சனநாயக இடதுசாரி அரசியல், சிந்தனை, கலாசார நடை முறைகளுக்கான தளம் அமைத்துக் கொடுத்த பெருமை ஜீவாவையே சாரும். 1952 பிப்ரவரியில் 'வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை' என்ற அடிப் படையில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சென்னை வண்ணாரப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார் தோழர் ஜீவா. இவரை எதிர்த்து நின்றவர்களை கட்டுக்காசு இழக்கச் செய்து வெற்றி வாகை சூடினார். ஜீவா தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவராகப் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டிருந்தார்; வறிய விவசாய, தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக்கொண்டு பணியாற்றினார்; மக்கள் தலைவராக வாழ்ந்து மறைந்தார். ஜீவாவின் ஆளுமை வளர்ந்த விதம் சராசரி எதிர்பார்ப்புக்களிலிருந்து முற்றிலும் மாறு பட்டதாகவே இருந்தது. குழந்தைப் பருவத்திலேயே ஆதிக்க எதிர்ப்புக் குணம் இவரிடம் இயல்பாக அமைந்திருந்தது. ஆனால் இதன் தோற்றம் முரட்டுத்தனமானது. எதிலும் மோதிப் பார்த்துவிடும் இயல்பு கொண்டது. இந்த இயல்புதான் இவரைப் போர்க்குணம் கொண்ட மனிதராக உருவாக்கியிருந்தது. அவரை நன்கு உணர்ந்த தோழர்கள் இவ்வாறுதான் பதிவு செய்துள்ளார்கள். இளவயதிலேயே தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கிவந்தார். சக மனிதர்களைக் கேவலப்படுத்தும் தீண்டாமைக் கொடுமைகள் அவரைப் பாதித்தது. அப்போதே மனவுறுதியோடு தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். தீண்டாமைக்கு உட்பட்ட மக்களுடன் நெருங்கிப் பழகிவந்தார் இந்தச் செய்கைகளால் இவருடைய வீட்டார் இவருடன் முரண்பட்டார்கள். இதனால் இவர் வீட்டை விட்டே வெளியேறினார். தனக்குச் சரியென்று படுவதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாமல் உறுதியுடன் போராடும் மனவுறுதி ஜீவாவின் வாழ்க்கையை மாற்றியமைக்கத் தொடங்கியது. காரைக்குடிக்கு அருகில் உள்ள சிராவயல் என்ற கிராமத்தில் நண்பர்கள் உதவியுடன் 'காந்தி ஆசிரம்' என்ற பெயரில் ஆசிரமம் உருவாக்கினார். இதன்மூலம் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்விடங்களை உருவாக்கிக் கொடுப்பது ஜீவாவின் நோக்கமாக இருந்தது. இக்காலத்தில் வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய 'பரத்வாஜ ஆசிரமம்' சாதிய உணர்வோடு நடத்தப்பட்டது பெரும் விவகாரமாக இருந்தது. இந்த நடைமுறையை எதிர்த்து ஈ.வே.ரா, வரதராஜுலு நாயுடு நடத்திய கிளர்ச்சியிலும் ஜீவா பங்கு கொண்டார். வ.வே.சு. ஐயர் நடத்திய ஆசிரமத்துக்கு மாறான ஆசிரமம் உருவாக்குவது தான் ஜீவாவின் நோக்கமாக இருந்தது. ஜீவாவின் ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பெண்கள் ஆகியோரை மிகுதியாகச் சேர்த்தார். இதைவிட இக்காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் இரவுப் பள்ளிக்கூடங்களை உருவாக்குவதிலும் அக்கறை கொண்டு செயற்பட்டார். ஜீவா நடத்திய ஆசிரமத்துக்கு காந்தி வந்தார். அத்தருணத்தில் நால்வருணப் பாகுபாட்டைப் பற்றி ஜீவா எழுப்பிய வினாவுக்கு அதனை ஆதரிக்கும் நிலை எடுத்து காந்தி பதில் கூறியமையால் காந்தியுடன் ஜீவாவுக்குக் கருத்து வேறுபாடு பிறந்தது. காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆழமாகிவிடவே தலைவர் கும்பலிங்கத்துக்கும் ஜீவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியது. ஜீவா ஆசிரமத்திலிருந்து விலகி நாச்சியார்புரத்தில் 'உண்மை விளக்க நிலையம்' அமைத்து அதனைச் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தார். ஜீவாவைத் தனித்தமிழ் இயக்கம் ஈர்த்தது. சுயமரியாதை இயக்கத்தில் இணைந்த பின்னர் தனது பெயரை 'உயிர் இன்பன்' என்று மாற்றிக் கொண்டார். தனித்தமிழ் இயத்தின் முதல்வர்களில் ஒருவரான மறைமலையடிகளை ஒருமுறை சந்திக்கச் சென்றார் ஜீவா. அப்பொழுது அடிகளார் 'போஸ்ட்மேன்', 'காரணம்' என்ற சொற்களைக் கையாண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் நடை முறை குறித்து மேலும் ஆழமாக சிந்திப்பதற்கான தேவையை உணர்ந்தார். 1920களில் தமிழ்ச்சூழல் பல புதிய பரிமாணங்களை ஏற்றுச் செயற்பட்டது. காலனியம் உருவாக்கிய கல்வி மூலம் படித்தவர்-படிக்காதவர் என்ற சமூக முரண் உருவானது. ஏற்கனவே சமூகத்தில் புரையோடியிருந்த சமூக முரண்கள் புதிய வடிவம் பெறத் தொடங்கின. இப்பின்புலத்தில் பல்வேறு இயக்கங்கள் தோன்றின. 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்', 'சுயமரியாதை இயக்கம்', 'தனித்தமிழ் இயக்கம்', 'தமிழிசை இயக்கம்' போன்ற இயக்கங்கள் தோன்றின. தமிழ்நாட்டுச் சமூக அரசியல் பண்பாடு கருத்துநிலைத் தளங்களில் இந்த இயக்கங்களின் தாக்கம் வலுவாக இருந்தன. இதைவிடக் காலனித்துவ ஆட்சிக்கெதிராகச் சுதந்திரப் போராட்டம் பல முனைகளிலும் வேகம் கண்டது. அரசியல், விடுதலை பற்றிய எண்ணக்கருக்கள் சமூகத்தின் மாறுநிலைக் காலகட்டத்தின் வாழ்வியல் புலமாக மாற்றம் பெற்றன. இதனால் சிந்தனையிலும், செயற் பாட்டிலும் புதிய தன்மைகளையும் புதிய பண்புகளையும் வேண்டிநின்றன. இயக்கங்கள் சார்ந்த அரசியல் போக்குகள் பல நிலைகளிலும் வெளிப்பட்டன. இந்த மாற்றங்களும் இயக்கங்களுக்கும் முகம் கொடுத்து, அவற்றின் தாக்கங்களுக்கு உட்பட்டு வளர்ந்த தலைமுறை யில் ஒருவராக ஜீவா இருந்தார். 1931-ல் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பங்கு பற்றினார். சாதி ஒழிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்; பிரச்சாரமும் செய்தார். இது பொறுக்காமல் நண்பரொருவரே இவரை வெட்டரிவாளால் தாக்கிக் காயப்படுத்தினார். இந்தக் காயத்தழும்பு அவருடைய வாழ்நாள் முழுவதும் இருந்தது. 1932-ல் காங்கிரஸ் போராட்டத்தில் ஓராண்டு சிறைத்தண்டனை அடைந்தார். சிறையில் பகத்சிங்கின் தோழர்கள் சிலருடைய தொடர்பு கிடைத்தது. இதனால் சோசலிஸ்டாக மாறினார்.

பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறி குடியரசு இதழை உருவாக்கி அதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டுவதில் மும்மரமாக ஈடுபட்டார். பெரியாரோடு இணைந்து செயற்படும் மனநிலையில் ஜீவா அப்பொழுது இருந்தார். 1935வரை சுயமரியாதை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார். 1934-ம் ஆண்டு பகத்சிங்கின் 'நான் நாத்திகன் ஏன்?' என்னும் நூலை ஜீவா மொழி பெயர்த்தார். இந்நூல் ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்தது. இதனால் ஜீவாவும், கண்ணம்மையும் (ஈ.வே.ரா.வின் தங்கை) கைது செய்யப்பட்டனர். கருத்துரிமைக்காக முதன்முதலில் தமிழகத்தில் சிறைசென்றவர்கள் இவ்விருவருமாகவே இருப்பார்கள். சுயமரியாதை இயக்கம் இக்காலங்களில் சோவியத் யூனியன் மீதும் லெனின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இயக்கமாக இருந்தது. பெரியாரின் சோவியத் பயணம் மற்றும் அது தொடர்பான அவரது அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தின. மார்க்சியச் சிந்தனையில் தன்னை இணைத்துக்கொண்ட மா. சிங்கார வேலரும் இக்காலங்களில் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயற்பட்டு வந்தார். இந்தச் சூழலில் சுயமரியாதை இயக்கம் காங்கிரஸ் கட்சியைவிட முற்போக்கானது என்று ஜீவா கருதினார். ஜீவா குடியரசு இதழில் பாடல்களையும், கட்டுரைகளையும் எழுதி வந்தார். பெரியார் நடத்திய மாநாடுகளிலும் சிறப்பாகக் கலந்து வந்தார். சோசலிசம், பகுத்தறிவு, விஞ்ஞான நோக்கு ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். 1935-ல் நடைபெற்ற திருத்துறைப்பூண்டி மாநாட்டில் ஜீவா மற்றும் பெரியாரின் அணுகு முறைகளிக்கிடையே முரண்கள் வெளிப்பட்டன. இதனால் அவ்வியக்கத்திலிருந்து ஜீவா விலகிக் கொண்டார். பின்னர் 1936-ல் சாத்தான்குளம் அ. இராகவன் உள்ளிட்டோருடன் இணைந்து 'சுயமரியாதை சமதர்மக்கட்சி' என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் சார்பில் 'அறிவு' என்ற இதழையும் தொடங்கினார். சுயமரியாதை சமதர்மக் கட்சி ஏன் தொடங்கப் பட வேண்டும்? சுயமரியாதை இயக்கத்தி லிருந்து இந்தக்கட்சி எந்தவிதத்தில் வேறு படுகிறது? இவற்றை விளக்கி ஒரு துண்டுப் பிரசுரத்தை ஜீவா வெளியிட்டார். சுயமரியாதை இயக்கம் பற்றிய ஜீவாவின் மதிப்பீடு எத்தகையது என்பதை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சியும் இக்காலங்களில் இயங்கிவந்தது. இக்கட்சிக்குள் கம்யூனிஸ்டுகள் உட்புகுந்து செயற்படத் தொடங்கினார். கம்யூனிஸ்டுகளின் செயற்பாடுகள் பலமுனைகளில் நிகழ்ந்தன. இவர் களுடனும் இணைந்து ஜீவா செயற்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜீவா தேர்ந்தெடுக்கப்படார். 1937-ல் ஜனசக்தி இதழின் ஆசிரியராகவும் பொறுப்பெடுத்தார். 'சோசலிஸ்டு வார இதழ்' என்ற தலைப்போடு ஜனசக்தி வெளிவரத் தொடங்கியது. தமிழக இடதுசாரி அரசியல் முகிழ்ப்பின் சின்னமாக ஜீவா இயங்கினார். அவரது பணிகள் பலநிலைகளில் வேகம் கண்டன. 1938 டிசம்பரில் 'தாமரை' இதழ் தொடங்கப் பட்டது. இதன் மூலம் இடதுசாரி இலக்கிய மரபுக்கான விரிதளம் உருவாக்கப்பட்டது. ஜீவா சங்க இலக்கியம், திருக்குறள், கம்பன், பாரதி படைப்புகள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு மிக்கவராக இருந்தார். தமிழ் இலக்கிய மரபுகளுடன் பரிச்சயம் மிக்கவராக இருந்தது அவரது தனிச்சிறப்பு. சமூகம், இலக்கியம் பற்றிய புதிய பார்வைக்கான தளம் அமைத்துக் கொடுத்தார். 1930களின் இறுதியில் இருந்து தமிழ் இலக்கியம், தமிழிப்பண்பாடு குறித்து முற்போக்கு இடதுசாரிப் பார்வையை முன்னெடுத்து வளர்த்துச் சென்றார். திமுக வினர் 1950-களின் பின்னர் மேற்கொண்ட தமிழ் இலக்கியம் பற்றிய உரையாடல்களை ஜீவா 1930-களில் இறுதியில் இருந்து முன்னெடுத்தார். இதன் மூலம் பண்பாட்டுப் போராட்டக் களத்தில் ஜீவா முன்னோடியாகச் செயற்பட்டுள்ளார். இதனையே ஜீவாவின் 'தளமும் வளமும்' உறுதிப்படுத்துகின்றது. "குறிப்பிட்ட இனம் சார்ந்த பண்பாட்டு விழுமியங்களை கம்யூனிஸ்டுகள் எப்படி உள்வாங்குவது என்பதில் இந்திய இடது சாரிகள் மத்தியில் முரண்பட்ட அணுகு முறைகள் இருந்தன. ஜீவா இதில் தெளிவாகச் செயற்பட்டார் என்று கூற முடியும். அதுவே அவரின் மிகப்பெரும் பலம் என்று கூறலாம் பண்பாட்டுத் தளத்தில் இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு விமரிசனங்களுக்கு இன்னும் கூட ஆட்படுத்தப்படுவதைக் காணமுடியும். இதில் ஜீவாவின் அணுகுமுறை வேறுபட்டிருந்தது" என்று பேரா.வீ.அரசு குறிப்பிடுவதை சமகாலப் பின்புலத்தில் வைத்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
ஜீவா 1952-56 காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட பொழுது அவரது சட்டமன்ற உரைகள் பண்பாட்டுப் போராளியாக அவர் செயல்பட்ட பாங்கை மிகத்துல்லியமாக அடையாளப்படுத்துகிறது. 'சட்டப்பேரவையில் ஜீவா' என்ற ஜீவபாரதி தொகுத்த நூல் இதற்கு சிறந்த ஆவணமாகும். தமிழ் ஆட்சிமொழி, பயிற்றுமொழி, நீதிமன்ற மொழி பற்றியெல்லாம் அவரது சிந்தனை விரிவானவை அறிவு பூர்வமானவை மேலும் மொழிவழி மாநிலங்கள் உருப்பெறுவதற்கும் கருத்தியல் விளக்கங்களை அறிவுபூர்வமாக முன்வைத்தவர்களுள் ஜீவாவுக்கும் முதன்மை யான பங்கு உண்டு. பண்பாட்டு தளத்தில் சிறந்த போராளியாக இயங்கினார். இந்தப் பின்புலம் பற்றிய விரிவான ஆழமான பார்வை நமக்கு இன்று வேண்டும்.
தெ. மதுசூதனன்

இன்றைய குறள்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே

அறத்துப்பால் : விருந்தோம்பல்

அமைதி எப்படி கிடைக்கும்?

அமைதி என்பது ஆசை, தீய செயல், பொருட்களின் மீது விருப்பம் கொள்ளாமை ஆகியவற்றில் இருந்து விலகியிருப்பதால் கிடைக்கக் கூடியதாகும். இம்மூன்றையும் மனதில் வைத்துக்கொண்டு, அமைதியும் வேண்டுமென்றால் கிடைக்காது. அமைதி கிடைக்க இவற்றை நிச்சயமாக இழந்துதான் ஆக வேண்டும்
- புத்தர்

தமிழோசை

  • இந்தியா – அமெரிக்கா அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ரோனன் சென் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்களால் இந்திய நாடாளுமன்றத்தில்l பெரும் அமளி ஏற்பட்டது.
  • இராக்கை எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் முகமாக சிரியாவுடன் அதிக அளவிலான ஒத்துழைப்பை இராக்கியப் பிரதமரான நூரி அல்மலிக்கி கோரியுள்ளார். இராக்கின் ஸ்திரத்தன்மைக்கு சிரியா ஆதரவளிக்கும் என அதன் அதிபர் கூறியுள்ளார். இன்றைய (ஆகஸ்ட் 21 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 20, 2007

தண்ணீரே வேண்டாம்! பெப்சி, கோகோ-கோலா போதும்!!

இன்று தண்ணீரே வேண்டாம். கோலா கோலா என்று அடம் பிடிக்கும் பிள்ளைகள், காலம் பூராவும் கோலாவையே குடித்து (அது பெப்சி கோலாவாக இருக்கட்டும் அல்லது கொக்கோ கோலாவாக இருக்கட்டும்) 100 வருடங்கள் சுகதேகியாக வாழ்வார்களா? 100 வயது வரை வேண்டாம். குறைந்த பட்சம் 80 வயது வரையாவது ஆரோக்கியமாக, கோலா கோலா என்று அலையும் நாளைய சமுதாயம் வாழுமா?

பெற்றோர்கள் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை, பிள்ளைகளுக்குச் சிறுவயதில் இருந்தே பழக்கினால், பல பாரதூரமான பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாமல்லவா? தண்ணீரின் அற்புதம் பற்றி இவர்கள் முழுமையாக அறிவது மிக அவசியம். பல உலக நாடுகளில், பல கோடி மக்கள் , நல்ல குடிநீர் இன்றி அவஸ்தைப்படுவதை இவர்கள் அறிவார்களா? சுத்தமான, நல்ல தண்ணீர் வசதி தாரளமாக இருக்க, இனிப்பும் வண்ணமும் சேர்த்து அதிக விலையில் விற்கும், மென்பானங்களை வாங்கி, நமது பிள்ளைகளுக்குக் கொடுப்பதை இனியாவது நிறுத்துவோமே.
ஐந்து இந்திய மாவட்டங்கள், பகுதியாகவும், ஒரு மாவட்டம் முழுமையாகவும், பெப்சி, கோகோகோலா என்ற இரு நிறுவனங்களின் மென்பானங்களின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளமை, பரபரப்பான செய்தித் தலைப்பாகி இருந்தது. கடைகளில் விற்பனையாகும் இந்த மென் பானங்களில் கிருமி நாசினிகளின் கலவை இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், இது உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதே இவர்கள் குற்றச்சாட்டாக இருக்கின்றது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க...

அமைதி எப்படி கிடைக்கும்?

"தவறான வழியில் பொருள் சேர்க்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவ்வாறு சேர்க்கப்பட்ட பொருள் நிலைக்காது. எவன் ஒருவன் நியாய வழியில் சம்பாதிக்கிறானோ, அவனே அனைவரிலும் நல்லவனாக திகழ்கிறான். அவனது வாழ்க்கையே நல்வாழ்க்கையாக இருக்கிறது"

-புத்தர்

ஆமடா சின்னத் தம்பி! திரு.ரமணன்

இசைக் கவி ரமணனின் இன்னொரு பாடல் இங்கே. நாட்டு நடப்புகளை, உள் மனத்தின் ஆற்றாமைகளை, ஏக்கங்களை, நம்முடன் கவிஞர் பகிர்ந்துகொள்கிறார்; வருத்தம் தோய்ந்த இந்த வரிகள், உங்கள் செவியோரம் இதோ வலம் வருகின்றன....... இந்த இணைப்பில் சென்று பாடலைக் கேளுங்கள்
http://tamil.sify.com/columns//fullstory.php?id=14451388

இந்தப் பாடலைப் பாடியவர்கள்: கவிஞர் ரமணன், சர்ஜனா.முதலில் பாடலைக் கேளுங்கள்: நேர அளவு: 4.42 நிமிடங்கள்உங்கள் கணினியில் இசை கேட்கும் அமைப்பு இல்லாதவர்களின் வசதிக்காக அந்தப் பாடலை எழுத்திலும் தருகிறோம்:


ஆமடா சின்னத்தம்பி!

ஆமடா சின்னத்தம்பி

அறிவுரொம்ப வளந்திருச்சி

அன்புமட்டும் மனசெவிட்டுக் குருவிபோலப் பறந்திருச்சி!

சாஞ்சி காலெ நீட்டுறாப்புலெ ஆயுளெயும் நீட்டிக்கலாம்

சட்டெதுணி மாத்துறாப்புலெ காலுகையெ மாத்திக்கலாம்

நட்டநடு வானத்துலெ நாடகம் நடத்திக்கலாம்

நாலு எண்ணி முடிக்குமுன்னெ நம்மவூரு போயிவரலாம்

ஆனாக்க நமக்குமட்டும் ஆழாக்கு அரிசியில்லெ

மானமில்லெ மதிப்புமில்லெ மண்ணுலே உரிமெயில்லே

மண்ணுல உரிமெயில்லே மானத்துல மாளிகெயாம்! (ஆமடா)


தப்பாமெ கணக்குப்போடும் பொல்லாத பூதங்களாம்

பத்தாளு வேலெகளெப் பாத்துக்குற ராச்சசனாம்

அப்பன் ஆயி வேணாமாம் செப்புக்குள்ளெ கொழந்தெகளாம்

ஆத்தாடி கல்லுகளுக்கும் நம்மப்போலெ உசிரிருக்காம்!

ஒழெக்கிற சாதிக்கும் உசிரு இருக்குதின்னு

பொழெக்கிற சாதிக்குப் புரியாமெ போகுறதென்ன?

குள்ளநரி அறிவாலே கோழிக்கு லாபமென்ன?

மண்ணுல போதாமத்தான் மானத்தெச் சொரண்டுறாய்ங்க

மானத்துக்கும் நம்மளெத்தான் மாரடிக்கக் கூப்பிடுவாய்ங்க.

இன்றைய குறள்

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும், இல்லையேல் அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்

அறத்துப்பால் : அன்புடைமை

தமிழோசை

  • இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி உடன்பாட்டை மேலெடுத்துச் செல்லக் கூடாது என இந்திய இடதுசாரிகள் தொடர்ந்து வற்புறுத்துகின்றன
  • துருக்கியின் புதிய அதிபருக்கான தேர்தலில் முக்கிய வேட்பாளரான வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் பற்றி பல மாதங்களாக நீடித்த சர்ச்சைகளுக்கு பின்னர் புதிய அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளன. மேலும் தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 20 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க.. http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

August 19, 2007

மாலனின் அரசியல்!

கடந்த வாரம் சிறீலங்கா பாஸ்போர்ட் பற்றி தமிழ் வலைப்பதிவுலகம் பற்றி எரிந்தது. இது பற்றி தமிழ் சசி அவர்கள் விரிவான பதிவு ஒன்று இட்டுள்ளார் மாலனின் அரசியல். அவர் இந்த பிரச்சினை பற்றி வாழ்வியல் மற்றும் அரசியல் கோணத்தில் மிக விரிவாக அலசி இருந்தார். எனக்கு தெரிந்த ஒன்றையும் இதன் மூலம் சொல்ல விரும்புகிறேன். சிறீலங்கா பாஸ்போர்ட்டில் ஒரு சிறப்பு இருக்கிறது. அது நம் யாருடைய பாஸ்போர்ட்டிலும் இல்லாதது. சிறீலங்கா பாஸ்போர்ட்டில் முகப்பு பக்கத்தில் தமிழ் இடம் பெற்று இருப்பது தான் அந்த சிறப்பு. உங்கள் பார்வைக்காக இதோ............................................

சென்னை பதிவர் பட்டறையில் மாலன் அவர்கள் வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்தும், ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்துக் கொள்வது பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாலன் சிறந்த பத்திரிக்கையாளர், எந்தவித பந்தாவும் இல்லாதவர் என்ற காரணத்தால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சிறந்த, நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் என்பதால் அவர் முன்வைக்கும் "அரசியலை" எதிர்க்காமல் இருக்க முடியாது.

  • புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு மத்தியில் அவர் விதைக்க விரும்புவதை "அதிகபட்ச ஜனநாயகம்" இருக்கும் வலைப்பதிவுகளில் எதிர்க்காமல் எங்கு சென்று எதிர்ப்பது?
  • இந்தப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியா எதிர்க்க முடியும்?
  • அப்படி வாசகர் கடிதம் எழுதினாலும் அதனை இந்தப் பத்திரிக்கையாளர்கள் வெளியிடுவார்களா?
  • அல்லது இது வரை தீவிரமான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களா?

நான் பள்ளியில் படிக்கும் பொழுது பொங்கல் சிறப்பு இதழாக ஒரு முறை புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பிதழ் என்ற ஒரு இதழ் வெளிவரும் என்று தினமணிக்கதிரில் அறிவித்திருந்தார்கள். அப்பொழுது தினமணிக்கதிரின் ஆசிரியராக இருந்தவர் மாலன் என்பதாக ஞாபகம். நானும் அந்த சிறப்பிதழுக்காக ஆவலுடன் இருந்தேன். வந்த பொழுது புலம் பெயர்ந்த சிறப்பிதழ் என்பது முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான இதழாக இருந்தது. அதைக் கண்டித்து நான் எழுதிய வாசகர் கடிதம் வெளிவரவேயில்லை.

ஆனால் இன்றைக்கு என் வலைப்பதிவு மூலமாக என் கருத்துக்களை கூற முடிகிறது. யாரையும் கேள்வி கேட்க முடிகிறது. ஒரு சாமானியனுக்கு இணையம் கொடுத்த இந்த ஜனநாயக உரிமை பலரின் கண்களை உறுத்துகிறது. இந்த ஜனநாயக உரிமையை முறிக்க அவர்கள் இணையத்தில் நன்னடத்தை என்பதை முன் வைக்கிறார்கள்.

இணையத்தில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலிலும், தமிழக மற்றும் இந்திய வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கெல்லாம் நன்னடத்தை வேண்டும் என யாரும் போதிப்பதில்லை.

எனக்கு முதன் முதலில் அறிமுகமான இலக்கிய சண்டை என்று சொன்னால் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சமுத்திரத்திற்கும், திலகவதிக்கும் இடையே நடந்த சண்டையை குறிப்பிடலாம். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் பெண் எழுத்தாளர்கள் குறித்து உளறி வைக்க, திலகவதி நாங்கள் இப்படி பட்டவர்களை அடிக்க செருப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். பதிலுக்கு திலகவதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமுத்திரம் தாக்க திலகவதி நீதிமன்றம் சென்று சமுத்திரம் என்னைப் பற்றி எழுதக்கூடாது என தடை உத்திரவு வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது.

அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் நன்னடத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இந்த இலக்கியவாதிகள் எப்படி "உதாரண புருஷர்களாக" இருக்கலாம் என்பது குறித்து இலக்கிய மேடைகளில் பேசலாம்.

இந்திய வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனை மைய அமைச்சர் பதவியில் இருந்து திமுக விடுவித்துக் கொண்ட பொழுது தினமலர் "கொசு தொல்லை ஒழிந்தது" என்பதாக தலைப்பு செய்தி வெளியிட்டது. தினகரன் அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்ட பொழுது "தஞ்சையில் எலிகளின் தொல்லை" என தலைப்பு செய்தி வெளியிட்டது. இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்களே. தனிமனித தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமா அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்வியலை சிதைக்கும் போக்கும் ஊடகங்களில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஹனீப் இவ்வாறே ஊடகங்களால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி எனக்கூறிய பொழுது அந்த ஊடகங்கள் சிறு மன்னிப்பு கூட கோரவில்லை. அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறி விட்டன.

இன்றைய வணிக மயமான ஊடகங்களுக்கு மத்தியிலே வலைப்பதிவுகளிலும், சிற்றிதழ்களிலும் தான் காத்திரமான பல நல்ல படைப்புகள் வெளிவருகின்றன. வெகுஜன ஊடகங்களில் நல்ல படைப்புகள் வெளிவருவது எப்பொழுதோ நின்று போய் விட்டது. வலைப்பதிவுகளில் சிரீயஸான விடயங்கள் மட்டும் தான் வர வேண்டும் என்ற கோட்பாடு தேவையில்லை. வலைப்பதிவுகள் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதே நல்லது. அந்த வகையில் மொக்கைகள்/கும்பிகள் தேவையற்றவை எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வலைப்பதிவுகளில் அனைத்தும் கிடைக்கிறது. வருகின்ற வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.

வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம். ஒரு சிலர் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டு தங்களை மட்டுமே எழுத்தாளர்கள் என்பதாக உருவாக்கி கொண்ட முறைக்கு எதிராக "எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனே" என்பதை உருவாக்கிய சமதர்மம் வலைப்பதிவு உலகம். இங்கு மொக்கைகளும் கிடைக்கும், நல்ல காத்திரமான படைப்புகளும் கிடைக்கும். இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.

அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு

இரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்!!

போரினது தேவையையும் அசைபடமொன்று செய்யக்கூடிய பிரசாரத்தினையும் இங்கே விட்டுவிடுவோம். போராளிகள், பயங்கரவாதிகள் போன்ற அரசியல் நுழைந்த சொற்கூட்டுகளையும் விட்டு விடுவோம். இப்படங்கள் அவற்றினைத் தயாரிப்பதற்கிருக்கும் பொருளாதார, தொழில்நுட்ப இடைஞ்சலுள்ளும் அவை சொல்ல வேண்டியவற்றைச் சுட்டும் திறனுக்காகப் பாராட்டப்படக்கூடியன.
ஜிகினாக்கோடி கொட்டித் தயாராகும் கோடம்பாக்கத் திரைப்படங்கள் இலங்கையிலே சிறப்பாக ஓடுவது குறித்தும் அரசியலை மூச்சிலுங்கூட வெளிவிடா ஈழத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட புலம் வாழும் எழுத்தாளர்கள் பற்றியும் கட்டுரைகள் வெளிவிடும் தமிழகச் சஞ்சிகைகள் இப்படியான ஈழத்திலிருந்து வெளிவரும் குறும்திரைப்படங்கள், இசைவட்டுக்கள், படைப்பு நூல்கள் குறித்தும் துணிச்சலோடு அறிமுகமும் திறனாய்வும் பார்வையும் விரைவிலே தந்து இவற்றினை "அங்கீகரிக்கும்" என நம்புவோம்.

விலை

ஈரமண்

ஈரமண்

சரத்குமாரின் புதிய கட்சி : திராவிட மற்றும் கழகம் என்ற வார்த்தைகளே ஊழல் நிறைந்தது

சரத்குமாரின் புதிய கட்சி : திராவிட மற்றும் கழகம் என்ற வார்த்தைகளே இல்லாத ஒரு கட்சியாக இருக்கும். இந்த இரண்டு வார்த்தைகளைக் கொண்ட கட்சிகளனைத்துமே ஊழல் நிறைந்ததாகச் சொல்கிறார் இந்த ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரும், சரத்குமாரின் கட்சியின் ஒரு முக்கிய நபருமான திரு.முருகன் IAS அவர்கள்! பொறுத்திருந்து பார்ப்போம்!

இடஒதுக்கீடு பகுதி 2

இடஒதுக்கீடு பகுதி 3

இடஒதுக்கீடு பகுதி 4

டாடா தொழிற்சாலை பற்றிய பதிவு : பகுதி 5

அறுசுவை உணவு என்றால் என்னவென்று தெரியுமா?

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.
தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

இன்றைய குறள்

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

அறத்துப்பால் : அன்புடைமை

அமைதி எப்படி கிடைக்கும்?

"பொய் பேசுதல், புறங்கூறுதல், இழித்துரைத்தல், பயனற்ற சோம்பல் பேச்சு இவைகளால் மனிதர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே, இவற்றில் இருந்து விலகியே இருங்கள்"

- புத்தர்

தமிழோசை

  • கைத்தறி நெசவிற்கு பெயர் பெற்ற அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் சுனாமிக்கு பின்பு கைத்தறி நெசவு மீண்டும் உயிர் பெற்று வருவதாக அந்த பிரதேச நெசவாளர்கள் கூறுகின்றார்கள்.
    சுனாமியின் போது இந்த பிரதேசத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் அழிந்து போயின. பலர் மரணமடைந்தனர்.
  • இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து காரணமாக நீரில் படகு மூழ்கி ஐஸ் கட்டிகள் கொண்டு வந்த பெட்டிகளைப் பிடித்தபடி தத்தளித்துகொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்பாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
  • இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பிரச்சனையில் ஆளும் மத்திய அரசுக்கு நெருக்கடி: இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகளின் பிடி இறுகி வரும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியாக, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கூட்டங்களை நடத்தியது.
  • ஆசிய பசிபிக் பிராந்திய எட்டாவது சர்வதேச எயிட்ஸ் மாநாடு ஞாயிற்றுகிழமையன்று கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது. எதிர்வரும் 23 ம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் 60 நாடுகளிலிருந்து சுமார் 3000 பேர் கலந்துகொண்டு இந்தக் கொடிய நோயின் தாக்கம் குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக
    http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

அண்ணாகண்ணன் : பொதிகை நேர்காணல் 2005

ஆகஸ்ட் 18, சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாள் அந்தக் காலம் மீண்டும் வராதா ? !
- வி.ஏ.எம். அழகுமுத்து

''இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க) இந்துஸ்தான் ஆஸாத் (இந்தியா சுதந்திரம்) நேதாஜிக்கு ஜே!' என்று நாங்கள் யுத்த முழக்கமிடும் போது... நேதாஜி பின்புறம் இரு கைகளையும் கட்டிக் கொண்டு பார்வையிட்டவாறே வருவார். முதல் இரண்டு முழக்கத்திற்கும் கையை உயர்த்துவார். நேதாஜிக்கு ஜே எனும்போது கையை உயர்த்த மாட்டார். அவருடைய குறுகுறுப்பான பார்வை. அதிர்ந்து பேசத் தெரியாத குரல், சுவாமி விவேகாநந்தருக்குப் பிறகு யாரையும் எளிதில் கவரக்கூடிய முகக் கவர்ச்சி. உடலை அசைக்காமல் அப்படியே முகத்தை மட்டும் திருப்பிப் படையினரைப் பார்வையிடும் தன்மை...'' இப்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த காலம் நோக்கி தன் நினைவைச் செலுத்திய வி.ஏ.எம். அழகுமுத்து, நா தழுதழுத்து, மீறி வந்த அழுகையைக் கொஞ்ச நேரம் மெளனித்து அடக்கிக் கொண்டார். சிறிது நேரம் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிரும்போது ''எனக்கு நேதாஜிதான் தலைவர். இப்ப எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால், யாரையும் என்னால் தலைவர் என்று ஒத்துக் கொள்ளவே முடியாது'' என்று திட்டவட்டமாகக் கூறியவரிடம் இடைமறித்து,
''நீங்கள் இந்திய தேசியப் படையில் சேர்வதற்கான காரணம் பற்றியும் அதில் உங்களுடைய பங்கு, நேதாஜியின் நடவடிக்கையில் மறக்க முடியாத நிகழ்வு இதைப் பற்றி சொல்லுங்கள்'' என்றதும் நிமிர்ந்து இருக்கையின் நுனியில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
வி.ஏ.எம். அழகுமுத்துவின் தந்தை தேசப் பற்று மிகுந்தவர். அவர், வி.ஏ.எம். மிடம் காந்தி, நேரு, விவேகாநந்தர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரைப் பற்றியெல்லாம் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். அழுகுமுத்துவுக்குப் பத்து வயது நிரம்பும்போது தந்தை இறந்துபோக, கூலி வேலைக்குச் சென்று தனது தாயையும், தமக்கையையும் காப்பாற்ற வேண்டிய குடும்பச்சூழல். இந்தக் காலகட்டத்தில் இவர்கள் வசித்தது பர்மாவின் தலைநகர் ரங்கூனிலிருந்து 83வது கிலோ மீட்டரில் உள்ள 'தன்னாமீன்' எனும் இடத்தில். ஜப்பானியர்களிடம் இவரைப் போலவே இன்னும் ஏராளமான தமிழர்கள் கூலி வேலை செய்தவர்கள். எந்தக் குற்றமும் செய்யாத ஒரு தமிழரை ஜப்பானியப் படை வீரன் ஒருவன் அடித்துவிட, இவர்களுக்கு மேஸ்திரியாக வேலை செய்த 'ஐயர் சாமி' என்பவரிடம் முறையிட்டிருக்கிறார்கள். இதற்கு அவர் ''பயப்படாதீர்கள். அடுத்த வருடம் இதே நேரம் எந்த ஜப்பானியனும் உங்களை அடிக்க மாட்டான். அடிக்கவும் அவர்களால் முடியாது'' என்று கூறியிருக்கிறார். இதற்கு விளக்கம் கேட்டபோது, ''சுபாஷ் சுந்திரபோஸ் என்னும் மாபெரும் தலைவர் இந்தியாவில் பிரிட்டிஷாரின் கட்டுக் காவலில் இருந்து தப்பி ஜெர்மனை அடைந்து, அந்நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரோடு தோழமை கொண்டு, அங்கிருக்கும் இந்தியர்களைத் திரட்டி ஒரு படையை அமைத்து இந்திய சுதந்திரத்தை மீட்க இருக்கிறார். எனவே அவரை அங்கிருந்து ஆசியாவுக்கு அழைத்து வரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது'' என்று பதில் வந்தது ஐயர்சாமியிடமிருந்து.
மேலும் ஐரோப்பா முழுவதும் ஜெர்மனியின் (ஹிட்லரின்) ஆதிக்கத்தில் இருந்தாலும் அங்குக் குடியேறி வாழும் இந்தியர்கள் மிகக் குறைவு. ஆனால் கிழக்காசியாவில் முப்பது லட்சம் இந்தியர்களுக்கு மேல் வாழ்கிறார்கள். ஜப்பானியர்களிடம் ஐம்பதாயிரம் பிரிட்டிஷ் இந்தியப் படைகள் கைதாகியிருப்பதால், அவர்களையும் இணைத்துக் கொண்டு இங்கு ஒரு பெரும் படையைத் திரட்டி, பிரிட்டிஷார் மேல் படையெடுக்கும் திட்டம் உருவாகி வருகிறது. அதைத் தலைமையேற்று நடத்த சுபாஷ் சந்திரபோஸ்தான் தகுதியானவர் என்பதால் அவர் விரைவில் இங்கு வர இருப்பதாகவும் மேஸ்திரியான ஐயர் சாமி என்பவர் கூறியிருக்கிறார். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆசியாவில் ஜப்பான் சீனாவின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டதுடன், இந்தோ சீன நாடுகளையும், கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பர்மா போன்ற நாடுகளும், அந்தமான் நிக்கோபார் தீவுகளும் ஜப்பானியர் ஆதிக்கத்திற்குள் வந்திருந்தன. சீனாவின் பெரும் பகுதியையும், இந்தியாவையும், இலங்கையையும் தவிர, பிற ஆசிய நாடுகள் எல்லாம் ஜப்பானியர்களின் ஆளுகைக்குள் வந்திருந்தன. அடுத்த இலக்கு இந்தியா. இந்தியாவைத் தாக்குவது உறுதி என்று எல்லோரும் அறிந்திருந்தாலும், ஜப்பான் உடனடியாக அந்த வேலையைச் செய்யவில்லை. ஏனென்றால் சுபாஷ் சந்திரபோஸின் வருகைக்காகவே ஜப்பான் இந்தியாவின் மேல் தாக்குதல் நடத்தக் காலம் தாழ்த்துகிறது. அவர் இங்கு வந்தவுடன் ஜப்பானியரிடம் கைதாகியுள்ள ஐம்பதாயிரம் இந்தியப் படை வீரர்களையும், ஆயுதங்களுடன் ஒப்படைத்து எல்லாவித உதவிகளையும் செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாகவும், அப்போது எல்லோரும் சுபாஷ் சந்திரபோசின் சுதந்திரப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்த இருப்பதால் எந்த ஜப்பானியன் உங்களைத் தொட்டு அடிக்க முடியும்? என்றும் அவர் விளக்கியிருக்கிறார்.
வி.ஏ.எம். அழகுமுத்து போன்றவர்களுக்கு மேஸ்திரியான ஐயர் சாமி கூறிய இந்தச் செய்தி மகிழ்ச்சியை அளித்தது என்றாலும், ''எப்படி எதிரிகளை ஏமாற்றிவிட்டு ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்கு வர முடியும்?'' என்ற சந்தேகக் கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் கூறியிருக்கிறார். வி.ஏ.எம். இதற்கு முன்பு 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற பெயரையே கேள்விப்படாதவராக இருந்திருக்கிறார். மேஸ்திரி சொல்லச் சொல்ல 'சுபாஷ் சந்திரபோஸ்' என்ற மாமனிதரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல். இந்நிலையில் தண்டோரா போட்டு எல்லோரையும் பர்மியப் பள்ளிக் கூடத்தில் மாலையில் கூடி விட வேண்டும் என்று அறிவித்திருந்தனர். 150 பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் டாக்டர் பரூவா, படாமியா ஆகியோர் ரங்கூன் சென்று திரும்பியதையும் ராஷ்பிகாரிபோஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின்' கிளை ரங்கூன் தலைநகரான 'தன்னாபீனில்' நிறுப்பட்ட விஷயத்தையும் அதன் நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்போது, 'சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ஏழு எட்டு மாதங்களாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து ஜப்பானை அடைந்து மன்னர் ஹிரா ஹிட்டோவையும், பிரதமர் டோஜோவையும் கண்டு பேசியிருக்கிறார். அங்கிருந்து சிங்கப்பூர் வந்து ராஷ்பிகாரி போஸ் தலைமையிலான 'இந்திய சுதந்திர லீக்கின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கிழக்காசியாவில் உள்ள இந்திய மக்களை ஒன்று திரட்டி, ஒரு சுதந்திரப் படையை ஏற்படுத்தி இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை விரட்ட இந்தியாவின் மேல் படையெடுக்கும் பணியைச் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி கிழக்காசியாவில் படை திரட்டிக் கொண்டிருந்தார். அவரது பணி தடங்கலின்றி நிறைவேற தன்னாபீன் தமிழர்களும் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ''1943ம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் சந்திரபோஸ் வந்து சேர்ந்தார். நான் மறுமாதமே அவரது இந்திய தேசியப் படையில் சேர்ந்தேன். அங்கு எனக்களிக்கப்பட்ட வேலை என்பது ஒற்றுவேலை. வேவு பார்ப்பதும், காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதும் தான் பிரதானமாகயிருந்தது. என்னுடைய ஆசை ஒருவாறு நிறைவேறி சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்துவிட்டேன். அவருடைய அதிகாரம் இப்போதுள்ள முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் இந்த மூன்று பேருடைய அதிகாரத்தையெல்லாம் மிஞ்சியது. ஆனால் பார்வைக்கு மிகவும் எளிமையானவர். அதே நேரத்தில் கம்பீரமானவர். அவர் மேடையேறினால் கீழே ஜப்பானியப் படையினர் உட்கார்ந்திருப்பார்கள்.
சுபாஷ் சந்திரபோஸ் பதவியேற்கும்போது கண்ணீர் வடித்ததை நான் பார்த்தேன். ''இத்தனையாயிரம் வீரர்கள் நம்மை நம்பி வந்திருக்கிறார்களே. இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்'' என்பதை நினைத்து அழுதார். அதே நேரத்தில் தமது சொந்த நாட்டில் அரசாங்கம் நடத்துவதைப் போல் துணிச்சலாக அரசு நடத்தினார். சுபாஷ் சந்திரபோஸ் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. நான் இரண்டே இரண்டு முறை மட்டுமே அவர் சிரித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை நாங்கள் இருந்த முகாமுக்கு ஒரு சர்க்கஸ் கோமாளி வந்தான். அவனைக் கர்னலிலிருந்து அனைவருக்குமே நன்றாகத் தெரியும். தொழில் இல்லாததனால் அவன் அங்கு வந்தான். அவனுடைய ஆசை நேதாஜியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பது. உள்ளே வந்தவன் 'என்னை யாராவது தூக்க முடியுமா?'' என்றான். ' அப்படி என்னைத் தூக்க முடியாவிட்டால் எனக்கு இரண்டு ரூபாய் தர வேண்டும். தூக்கிவிட்டாலோ நான் நான்கு ரூபாய் அவர்களுக்குத் தருவேன்'' என்றான். முதல் தடவை தூக்கிவிடலாம். இரண்டாவது முறை மூச்சைப் பிடித்து நின்று கொள்வான். இதை சுபாஷ் சந்திரபோஸ் தூரத்தில் நின்று பார்த்துவிட்டு மெளனமாகச் சிரித்தார். அந்தக் கோமாளி ஒரு கர்னலிடம் சுபாஷைப் பார்க்க விருப்பம் தெரிவித்தான். கர்னல் இதைப்போய் அவரிடம் சொன்னவுடன் அவனைக் கூப்பிட்டனுப்பினார். போனவன் ''என்னைத் தூக்குங்கள் பார்ப்போம்'' என்றான். மெளனமாகச் சிரித்த நேதாஜி அலக்காகப் பிடித்துத் தூக்கிவிட்டார். ''மற்றொரு முறை தூக்குங்கள் பார்ப்போம்'' என்றவனை தூக்கிப் பார்த்தார். இரண்டாவது முறை அவனைத் தூக்கவே முடியவில்லை. அப்போது அவர் பலமாகவே சிரித்ததைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். மற்றொரு முறை, பயங்கரமாகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நமது ராணுவத்தினர் அணிவகுத்து நின்று போர் முழக்கம் செய்துவிட்டுத் தாக்குதலுக்குத் தயாரானோம். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் எங்களை நோக்கி வரும்போது, கர்னல் நேதாஜியைப் பார்த்து, பதுங்கு குழிக்குள் போய் விடும்படி கூறினார். அப்போது நேதாஜி ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு, ''வெள்ளைக்காரர்கள் இன்னும் என் மேல் போடுகிற குண்டைத் தயாரிக்கவில்லை'' என்று சொன்னார். பெரும்பாலும் அமைதியாகவேதான் பேசுவார். எந்த நேரமும் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார். பயிற்சிக்களத்திற்கு வந்தால், நேராக சமையல் அறைக்குச் செல்வார். தயாரித்து வைத்திருக்கும் உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பார்ப்பார். தண்ணீரைக் குடித்துப் பார்ப்பார். கடைசியாக ''தண்ணீரைக் கொதிக்க வைத்தீர்களா?'' என்று கேட்பார். ஒரு முறை பத்திரிகையாளர்கள் நேதாஜியிடம், ''ஜப்பான் படையினரைச் சேர்த்துக் கொண்டு இந்திய விடுதலைக்குப் போராடுகிறீர்கள். அதே ஜப்பானியர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்த நினைத்தால் என்ன செய்வீர்கள்?'' என்றார்கள். அதற்கு அவர் சொன்னார், ''வெள்ளைக்காரர்களைச் சுட்ட துப்பாக்கியை கையில்தானே வைத்திருக்கிறோம்'' என்றார். நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜே! நேதாஜிக்கு ஜேதான். அடடா! அந்தக் காலம் மீண்டும் வராதா? அந்தக் கொந்தளிப்பிலும், பேரலையிலும் நீந்திக் குளிக்க மாட்டோமா? அந்தப் பெருமழையிலும், பெரும் புயலிலும் பூகம்பத்திலும் மகிழ்ச்சி பொங்க ஓடியாடி வினையாற்றும் பேறு கிட்டாதா? உருகியோடும் எரிமலை என்னும் தியாகக் குழம்பில் உருகி ஓட மாட்டோமா? மீண்டும் அந்தக் காலம் வராதா? அந்தத் தலைவன் போல் மற்றொரு தலைவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கி தவிக்கிறேன்'' என்று முடித்தார் கண்களைத் துடைத்துக் கொண்டே.
சந்திப்பு - பி. நந்தகுமார்.

August 18, 2007

நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் இதயத்தைப் பிழிந்து எங்கோ எடுத்துச் செல்லும் யேசுதாஸின் இனிய பாடல்கள்!! இசையை ரசிக்கும் எவருக்கும் மொழி அவசியம் இல்லை என்பது இந்தப் பதிவின் மூலம் நிரூபணமாகும் என்பதில் ஐயமில்லை!

Powered by eSnips.com

இன்றைய குறள்

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது

அறத்துப்பால் : அன்புடைமை

ஆராய்ச்சிக்குச் சமமான ஞானம் இல்லை, யோகத்துக்குச் சமமான பலம் இல்லை. இவ்விரண்டும் ஒன்றே என்று அறியத்தக்கது
- யாக்ஞவல்க்யர்

தமிழோசை

  • பருவ மழையினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளில் உணவுப்பற்றாகுறை ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
  • இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையைத் தளர்த்திக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 18 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க

August 17, 2007

எனது நெருங்கிய நண்பரும் நடிகருமான திரு.கரண் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறிய நேர்முகம்

கரண் பகுதி 2

கரண் பகுதி 3

"ஒருவன் நம்மிடம் கோபப்படும் போது நாமும் திருப்பிக் கோபப்பட்டால், அவனை தண்டித்தால், அது அவனது கையிலுள்ள புண்ணுக்கு மருந்து போட்டு ஆற்றுவதற்கு பதில், அதைக் குத்தி மேலும் பெரிதாக்குவது போன்றது. அதன் பலனாக காயத்திலிருக்கும் சீழ் நம்மீதும் படுகிறது. நம் உடலிலும் துர்நாற்றம் பரவுகிறது. நமது கோபத்தால் அவன் மேலும் அகங்காரம் கொண்டவனாக மாறுகிறான். நாமோ அஞ்ஞானியாகின்றோம். மாறாக, நாம் பொறுமையாக இருந்தோமானால், அது கையிலுள்ள காயத்துக்கு மருந்து வைத்து ஆற்றுவதற்கு சமமாகும்"
- மாதா அமிர்தானந்தமயி

இந்தியாவுல எல்லோராலும் நல்ல மனிதன் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு ஆள் அப்துல்கலாம்தான்

அவர் புத்தகம் இவ்வளவு காப்பி வித்ததற்கு அப்துல்கலாம்ங்கிற hype மிக முக்கிய காரணம். ஒரு கிராமத்துலயிருந்து ஒரு ஆள் வந்தார். சார் அப்துல்கலாம் புக் ஒரு காப்பி குடுங்க சார்ன்னு கேட்டார். எதுக்காக வாங்குறார்ன்னு ஒரு ஆர்வத்துல விசாரிச்சப்போ அவர் சொன்னார். சார் என்காலம் முடிஞ்சுப் போச்சு, இப்ப படிக்கிற புள்ளைங்களாவது நல்லா படிச்சு நல்ல பிள்ளைங்களா வரட்டும். எங்க ஊரு பள்ளிக்கூடத்து புள்ளைங்களுக்கு குடுக்கிறதுக்குதான் சார். ஊருக்கு இரண்டு அப்துல்கலாம் வந்தாகூட நல்லதுதானே.
பெரிய பெரிய விஷயங்களைக்கூட தன்னடக்கத்துடன் கூறும் காந்தி கண்ணதாசனின் பண்பும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்.. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க.. http://www.andhimazhai.com/news/viewmore.php?id=2839

எழுத்தாளன் பணி எழுதிக்கொண்டிருப்பதே. எவர் அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் எதிர் பார்ப்பவன் நல்ல எழுத்தாளன் அல்ல - பாலகுமாரன்


ஜனரஞ்சக பத்திரிக்கையில் எழுதுபவர்களுக்கு இலக்கிய அந்தஸ்த்து கொடுக்க மறுக்கும் விமர்சகர்கள் பற்றி?
ஒருவரை அங்கீகரிப்பதற்கோ அல்லது அங்கீகரிக்க மறுப்பதற்கோ இன்று வாழும் சகமனிதர் எவருக்கும் அதிகாரம் இல்லை. தற்குறியே தான் அங்கீகரித்ததாக கபடம் பேசுவான், தான் அங்கீகரிக்கவில்லை என ஆணவம் காட்டுவான். காலம் மனிதரை விட பெரிய விஷயம், அதற்கு ஒரு இலக்கிய படைப்பை என்ன செய்ய வேண்டுமென்று தெரியும். எழுத்தாளன் பணி எழுதிக்கொண்டிருப்பதே. வேறு எவர் அங்கீகரிப்பையும் நிராகரிப்பையும் எதிர் பார்ப்பவன் நல்ல எழுத்தாளன் அல்லஎழுத்தாளர் பாலகுமாரன் நேர்முகம் தொடாந்து படிக்க இணைப்பில் செல்க http://www.andhimazhai.com/news/viewmore.php?id=849

இன்றைய குறள்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்

அறத்துப்பால் : அன்புடைமை

தமிழோசை

கொழும்பில் கடந்த ஜூன் மாதத்தில் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் இருவரின் கொலைச் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார், அவர்களைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு சன்மானமும் அறிவித்துள்ளனர். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 17 வெள்ளிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

காலஞ்சென்ற மாபெரும் மேதை திரு.மதுரை சோமு அவர்களின் "தேவரின் தெய்வம்" பாடல் இங்கே மீண்டும் சிறுவன் விக்னேஷ் குரலில்!

வறுமை, வேலையில்லை என்ற நாய் என்னைத் துரத்த அதுக்குப் பயந்து ஓடினவந்தான் நான். இப்ப இளைப்பாறும் போதுதான் தெரியுது இவ்வளவு தூரம் ஓடிவந்த்துருக்கேன்னு"

போலீஸ்காரர்களின் துரத்தல் எங்கே போய் முடியுமென்று எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் பாலனின் அனுபவம் வேறு விதம் போலீஸ்காரனின் துரத்தல் பாலனை கோடீஸ்வரர் ஆக்கியிருக்கிறது.
எப்படி..? 1981 ல் வீட்டை விட்டு சென்னைக்கு ஒடிவந்த பாலனுக்கு படிப்பு, பணம், மற்றவர்கள் ஆதரவு எதுவுமே கிடையாது. எழும்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலா, பயண ஓட்டல் நிறுவனங்கள் என்று தென்பட்ட எல்லாரிடமும் வேலை கேட்டும் பார்த்தார்.கிடைக்கவில்லை. ஒரு நாள் இரவு பசி மயக்கத்தில் இவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் போலீஸ்காரர் சந்தேகக் கேஸில் இவரைக் கைது செய்ய அடித்து எழுப்பி ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறு கும்பலுடன் போய் நிற்கச் சொன்னார். ஒன்றும் புரியாமல் பக்கத்திலிருந்தவரிடம் பேச்சு கொடுத்த பாலனுக்கு இவர்களோடு போனால் சிறையிலடைத்து விடுவார்கள் என்பது புரிந்தது. போலீஸ்காரர் வேறொருவரை எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில் திசை தெரியாமல் ஓடத் தொடங்கினார். போலீஸ்காரர் துரத்த இன்னும் வேகமெடுத்தார். சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்த போது போலீஸ்காரர் இல்லை.
ஓடி ஓடி களைத்துப் போய் மனிதர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த ஒரு இடத்தைப் பார்த்து, அதுதான் பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்து அங்கேயே நின்றுவிட்டார். சோர்ந்து போய் அந்த இடத்தில் உட்கார்ந்தவர் கண் அயர்ந்து போய்விட்டார். காலையில் விழித்துப் பார்த்தால் அவருக்கு முன்னால் 20 பேரும் பின்னால் 200 பேரும் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் அவரிடம் வந்து, 'தம்பி, இடம் தருவாயா, 2 ரூபாய் தருகிறேன்' என்றார் இன்ப அதிர்ச்சிக்குள்ளான பாலன் பணத்தை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார். அது அவரது முதல் வருமானம். முதலீடும் கூட. அதன் பிறகு தான் அவருக்குத் தெரிந்தது அது அமெரிக்கத் தூதராலயம் என்று. வருமானத்துக்கு இதுவே சிறந்த வேலை என நினைத்த பாலன் அங்கு வந்து செல்லும் பயண முகவர்களுடன் நல்லுறவுகளை ஏற்படுத்தி விமான டிக்கெட்டின் விலை, விசா, பயணத் தேவைக்கான விபரங்கள் அனைத்தையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். வரிசையில் நிற்கும் நேரத்தில் உடன் நிற்பவர்களுடன் பேச்சுக் கொடுத்து அவர்களுக்கு பயணச் சீட்டு வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பயணத் தேவைகளை பூர்த்தி செய்வது, விமான நிலையம் வரை அவர்களது பெட்டி படுக்கைகளை சுமந்து சென்று வழியனுப்புவது என்று தனது பணிகளை விரிவாக்கினார். வாடிக்கையாளரின் திருப்தியே , தமது திருப்தி என்று இயங்க ஆரம்பித்த பாலனை நம்பி பல லட்சங்களும் கடன் கொடுக்க பல விமான பயண முகவர்கள் முன்வந்தனர். இதனையே மூலதனமாகக் கொண்டு 1986ல் மதுரா டிராவல் சர்வீஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார் பாலன். இன்று அது வருடத்துக்கு 12 கோடிக்கும் மேலான வர்த்தக எல்லையைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது. "நான் எதையும் சாதிச்சுட்டுதா நினைக்கல. பெருசா தன்னம்பிக்கை வைச்சு பிளான் பண்ணி எல்லாம் வரல. ஒருநாய் துரத்தினா உயிருக்குப் பயந்தவன் எப்படி ஓடுவான்? வறுமை, வேலையில்லை என்ற நாய் என்னைத் துரத்த அதுக்குப் பயந்து ஓடினவந்தான் நான். இப்ப இளைப்பாறும் போதுதான் தெரியுது இவ்வளவு தூரம் ஓடிவந்த்துருக்கேன்னு"என்று தன்னுடைய வளர்ச்சி பற்றி கூறுகிறார் 'மதுரா டிராவல்ஸ்' கம்பெனியின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான வீ.கே.டீ. பாலன்
உங்கள் வளர்ச்சிக்கான காரணங்கள்?
நான் 'நாணயம்' தவறியதேயில்லை. நாணயத்தை நான் கட்டிப்பிடிச்சுக்கிட்டேன். ஒரு மனிதன் நாணயத்தை இழந்துட்டானா அதுக்குமேல அவனிடம் இழப்பதற்கு எதுவுமிருக்காது. 'நாணயம்'னா "சொல்வதைச் செய் செய்வதைச் சொல்" அவ்வளவே. உழைச்சு முன்னேறுவதுங்கிறது மோசடி வார்த்தை.வெயில்ல ரோட்டுல கான்கிரீட் போடுறவனை விட, மூட்டை தூக்குறவனை விட யாராவது கஷ்டப் பட்டு உழைக்க முடியுமா? கஷ்டப்பட்டு உழைச்சா மட்டும் முன்னேறிட முடியாது. இஷ்டப்பட்டு உழைச்சாத்தான் முன்னேறலாம்.
மிகவும் குழப்பமான நேரங்களில் சரியான முடிவுகளை எடுப்பதெப்படி?
எல்லா மனிதனும் எல்லா முடிவுகளும் சரியாக எடுப்பதில்லை. அப்படி எடுத்திருந்தா ஹிட்லர், முசோலினி, எல்லாம் செத்திருக்கமாட்டாங்க.என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்புவதை விட ஏதாவது முடிவெடுப்பதே சிறந்தது. எந்த முடிவும் சரியான முடிவு, தவறான முடிவுன்னு அதன் விளைவுகளைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுது. ஜெயிச்சவங்க எல்லாரும் சரியா முடிவெடுத்து ஜெயிச்சவங்க கிடையாது. அவங்க ஒவ்வொரு முறை சறுக்கி விழும் போதும் காப்பாத்துறதுக்கு யாராவது இருந்திருப்பாங்க. கொஞ்சம் மனசாட்சியோட பேசினோம்னா பலர் ஒருவருக்காகவும் ஒருவர் பலருக்காகவும் வாழ்றதுதான் வாழ்க்கை தொழில் செய்யனுங்கிற முடிவு நிச்சயம் வெற்றியைத்தான் தரும். தொழில் ஒருவன் தோற்றுப் போனால் அது தொழில் செய்தவனின் தவறேயொழிய தொழிலின் தவறல்ல. If you don't run your business properly, one day you'll have to run away from your business.
உங்களை மாதிரி சில முதல் தலைமுறையினர் கஷ்டப்பட்டு நிறுவனத்தை வளர்க்க அவர்கள் வாரிசுகள் மிக எளிதாக நிர்வாகப் பொறுப்புக்கு வந்துடறாங்களே?
வாரிசுகளை நிர்வாகம் பண்ணவிடறது தப்பு. அவங்களுக்கு அனுபவிக்க மட்டும் தான் தெரியும்.வியாபாரத்தை வளர்க்கணும், இன்னும் உயாரத்துக்கு கொண்டு போகணும் அப்படின்னெல்லாம் எண்ணமிருக்காது. பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கிறதே அவர்களுக்குச் செய்ற மிகப் பெரிய தீங்கு. நல்ல பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கணும்னு அவசியமில்லை. கெட்ட பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துப் பிரயோஜனமில்லை.வாரிசுகளுக்கு உண்மையிலேயே வியாபாரத்துல விருப்பம் இருந்தா கம்பெனியில சாதரண ஊழியரா வேலைக்குச் சேர்ந்து படிப்படியா வளர்ந்து வரணும். இல்லைன்னா நல்ல காலேஜ்ல முறைப்படி M.B.A படிச்சுட்டு கூட வரலாம்.
எதுவுமே படிக்காமல் தொழில் தொடங்குபவருக்கும் M.B.A படித்து தொழில் தொடங்குபவருக்கும் இருக்கும் வித்தியாசம்?
முதல் முதலா பள்ளிக்கூடம் கட்டினவன் பள்ளிக்கூடம் போகாதவனாத்தான் இருப்பான். முதன்முதல் சிலபஸ் பள்ளிக்கூடம் போகாதவங்க, அனுபவம் மூலமா வாழ்வை புரிஞ்சிகிட்டவங்க எல்லாம் சேர்ந்து உருவாக்கினதாத்தான் இருக்கும். 'சேர்மன்' பதவி, 'M.D' பதவி எல்லாருக்கும் கிடைக்கும். ஆனா 'Founder' பதவி வேணும்னா நீங்கதான் ஏதாவது உருப்படியா செய்யணும்.
நீங்க டிராவல் ஏஜென்சி ஆரம்பித்த காலத்துக்கும் இன்றைக்கும் உள்ள மாற்றங்கள்?
முதல் டிராவல் ஏஜன்ட் எப்படி வேலை பார்த்திருப்பான்.. தோள்ல வைத்து மனிதர்களை தூக்கிட்டுப் போயிருந்திருப்பான். அப்புறம் பல்லக்குல . நீங்க சீஸன் நேரங்கள்ல சபரிமலைக்குப் போனீங்கன்னா இன்றும் பல்லக்குத் தூக்குபவர்களை பார்க்கலாம். அறிவியல் வளர்ச்சியோடு எப்போதும் தொழிலை இணைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்க்கையைத் திரும்பி பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். துயரமா இருந்தது. Suicide பண்ணக்கூடபோய்ட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியே மயங்கி விழுந்துட்டேன்.இன்னிக்கு மகிழ்ச்சியா இருக்கேன். Suicide பண்ணியிருந்தா இந்த நல்ல வாழ்க்கையை இழந்திருப்பேனில்லையா. நல்ல வாழ்க்கைன்னா நான் வசதி வாய்ப்பைச் சொல்லலை. நண்பர்கள் உறவினர்கள் என்று எவ்வளவு பேர் உங்களை நேசிக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் தாய், தந்தை, தம்பி, பக்கத்துவீட்டுக்காரர்கள், பால்காரி, மீன்காரி என்று எல்லாருடனும் உங்கள் உறவு எப்படியிருக்கிறது என்று பாருங்கள். இந்த வீதியில் தான் உங்கள் தேரோட வேண்டும். இவங்க தானே உங்கள் வாழ்க்கை. உங்க மேல் யார் பொறாமைப்படப் போறாங்க.அப்துல்கலாமா? பில்கிளின்டனா? உங்க அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டும் தானே. அவர்களோடு உறவுகளை நன்றாக அமைத்துக்கொள்ளுங்கள். வியாபார நேரம் போக மீதமிருக்கிற நேரத்தை சமூகத்திற்காக செலவழிக்கும் பாலன் இதுவரை பேட்டி காணப்படாத சாமானிய மனிதர்களை பொதிகை சேனலின் வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சிக்காக பேட்டி காண்கிறார். இரண்டாம் மகளின் திருமணத்திற்காக கிட்னி விற்ற தாய், இருபத்தி மூன்று வயதில் கணவன் மூலம் எய்ட்ஸ் நோயாளியான பரிதாப மனைவி, சென்னை பொது மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யும் மருத்துவர் என்று பல்வேÚ விதமான மனிதர்களை வாரந்தோறும் சந்திக்கிறார். 300 வாரங்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி பலரின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்திருக்கிறது. இது போன்ற விஷயங்கள் தான் திருப்தியைக் கொடுக்கிறது என்கிறார் பாலன். வெற்றியடைவது மட்டுமல்ல, வெற்றிபெற்றபின் தனது பங்களிப்பாக சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் மனது சிலருக்கு தானிருக்கும். அந்த சிலரில் வி.கே.டி.பாலனும் ஒருவர்.
- சந்திப்பு என்.எஸ்.ராமன்

August 16, 2007

கொதித்து போயிருக்கேன் - ராமதாஸ் (மருத்துவர் இராமதாசு) பேட்டி

கட்சியை வளர்ப்பதற்காக நாட்டை காடாக்கும் எந்த போராட்டத்தையும் நடத்தலாம் என்று செயல்படுபவர்கள் குறித்து முடிவெடுக்கும் காலம் நெருக்குவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதை கண்டு மனம் கொதித்துப் போயிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆதரவு மட்டும் போதும் என்று கருணாநிதி கருதுகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
கே: முடிவெடுக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்று முதல்வர் கூறுவதன் அர்த்தம் என்ன?
ப: முதல்வர் என்ன கருதுகிறார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதற்கான காரணம் என்று கூறியிருப்பதுதான் என்னை பெரிதும் பாதித்துள்ளது. திரும்ப திரும்ப அதை படித்து மனம் கொதித்துப் போயிருக் கிறேன்.சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும், ஒற்றுமையும், அமைதியும் ஏற்பட வேண்டும் என்று மாவட்டந் தோறும் மாநாடுகளை நடத்தி வருகிறேன். அப்படி நடந்த ஒரு மாநாட்டில் முதலமைச்சரே கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.இப்படியெல்லாம் பாடுபட்டு வருகிற எங்களை பார்த்து நாட்டை காடாக்கும் நாகரீகமற்ற முறைகளுக்கு தூபம் போடுபவர்களை போலவும், வன்முறையை தூண்டுபவர்களை போலவும் முத்திரை குத்தும் முயற்சி என்னை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் நான் மனம் நொந்து போயிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக இந்த பழிச் சொற்கள் என்னை பெரிதும் பாதித்துள்ளது. தொடர்ந்து பாமக மருத்துவர் இராமதாசு நேர்முகம் படிக்க இணைப்பில் செல்க http://idlyvadai.blogspot.com/2007/08/blog-post_6694.html

இப்படியும் கணக்குப் போடலாம்!?

இயக்குனர் திரு.சீமான் நேர்முகம்

இவ்வளவு பெரிய கோபத்தோடும், கொள்கைகளோடும் இருக்கிற உங்களோட லட்சியம் கடைசிவரை சினிமாவா இருக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு தோணுது. சினிமாவுக்கு அடுத்து என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பெண்ணை நேசிச்சேன். எனக்குத் தெரியும் அவங்களோட வாழ முடியாதுன்னு. ஆனா இன்னும் அவங்களை என்னால மறக்க முடியலை. அதுமாதிரிதான் விவரம் தெரியாத வயசிலேயே சினிமா மேல ஒரு ஆசை வந்திடுச்சி. நான் இந்த சினிமாவுக்கு பொருத்தமான ஆள் இல்லைன்னு இப்போது எனக்குத் தெரியுது. மானம், ரோஷம், சுயமரியாதை இருக்கிற எவனும் இந்தத் தொழிலுக்கு பொருத்தமானவன் கிடையாது.நான் எடுக்கிறது தான் சினிமா, அதை வாங்கி விக்கிறதுக்கு ஒரு குழு, அதைப் பார்க்கிறதுக்கு என் மக்கள் இப்படி ஒரு நிலை வந்தால் சினிமா ஒரு சுகமான தளமாக இருக்கும். அது இல்லாதபோதும் இதை விட்டுட்டுப் போக முடியலை. விட்டுட்டுப் போனா தோத்துட்டு போறான்னு சொல்லுவாங்க. அதனாலே இங்க இருந்துட்டே, இந்த ஊடகத்தை எப்படி என் மண்ணுக்கேத்த, மக்களுக்கேத்த ஊடகமா மாத்த முடியும்னு தான் யோசிக்கறேன். நானும் இங்க இல்லைன்னா ஒரு கலகக்காரன், கிளர்ச்சியாளன் இங்க இல்லை. என்னை மாதிரி நூறு பேராவது உருவாகிட்டா எனக்கு இங்கே வேலை இல்லை.தம்பி படத்தோட தணிக்கையில் ஒரு அதிகாரி, ‘அய்யய்யோ என்ன நீங்க ஏன் இவ்வளவு இடதுசாரி இருக்கீங்க? சே ஒரு தீவிரவாதி, அவரோட இயக்கங்களை உலக நாடுகள் தடை பண்ணியிருக்கு. அவரைப் போய் படத்தில காட்டியிருக்கீங்களே’ அப்படின்னார். ‘சே தீவிரவாதியாவே இருக்கட்டும். அவரை நெஞ்சிலத் தாங்கின என்னோட கதாநாயகன் யாரையுமே கொலை பண்ணலையே. இதில என்ன தப்பு’ன்னு கேட்டேன்.படத்துல ஒரு இடத்தில மயிருன்னு ஒரு வார்த்தை வரும். ‘ஒரு பெண் அதிகாரி இந்த மாதிரி வார்த்தையெல்லாம் பயன்படுத்தக்கூடாது, அதை எடுத்துடணும்’னு வாதம் பண்ணினாங்க. அவங்ககிட்ட கேட்டேன். ‘மயிரு என்ன அவ்வளவு கெட்ட வார்த்தையா’?‘ஆமா அநியாயத்துக்கு கெட்ட வார்த்தை’ன்னாங்க. ‘அப்புறம் எதுக்காக அதை அவ்வளவு நீளமா வளர்த்து கோவில்ல போய் காணிக்கையா குடுக்கறீங்க. மோசமான விஷயத்தை தான் கடவுளுக்கு தருவீங்களா, அப்படின்னா உங்க கடவுளை நீங்க அவ்வளவு கேவலமானவராத்தான் மதிக்கிறீங்களா’ன்னு கேட்டேன். அந்தம்மா பதிலே சொல்லலை. இந்த மாதிரி பல நெருக்கடிகளைத் தாண்டித்தான் ஒரு நல்ல படம் குடுக்க முடியுது. என்னை மாதிரி ஆட்களாலத் தான் இவங்களோட எல்லாம் போராட முடியுது.படத்தோட தயாரிப்பாளருக்கோ, நடிச்சவருக்கோ சே, மாவோ பத்தியெல்லாம் தெரியாது. தெரிஞ்சா படத்தை இயக்கியிருக்கவே முடியாது. இங்க ஒரு விஷயத்தை சொல்றதுக்குள்ள நம்மளை எவ்வளவு தளர்ச்சியடைய வைக்க முடியுமோ அவ்வளவு தளர்ச்சியடைய வைச்சி, வீரியமில்லாத ஆளா மாத்திடுவாங்க. தமிழ் வார்த்தைகளில் உரையாடல்கள் எழுதினாலே பார்க்கிறவன் சிரிச்சிடுவான் வேண்டாம்னு தடுத்துடுவாங்க. என் சொந்த மண்ணில், சொந்த மொழியில் படம் எடுக்கிறதுக்கே அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குது.இதையெல்லாம் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இப்ப சொற்ப பொருளாதாரத் தேவை இருக்கிறது. ஊரில் அம்மாவுக்கு ஒரு வீடு, என்னை சார்ந்திருக்கிற என் தோழர்கள், தம்பிகளுக்கான தேவைகள். எப்ப சீமான்கிட்ட போனாலும் வயிறார சாப்பிடலாம், காசுக் கேட்டா கடன் வாங்கியாவது தருவாங்கிற நம்பிக்கையில் என்கிட்ட வருகிறவர்களுக்கு உதவணும். இதுக்கெல்லாம் கொஞ்சம் பொருளாதாரம் தேவை. அதுக்காக இந்தத் தொழிலை செய்ய வேண்டியிருக்குது. இதிலும் என் கொள்கைக்கு விரோதமாக நடக்க வேண்டியிருந்தால் இதை விட்டுட்டு போய் பெட்டிக்கடை வைச்சிடுவேன். விவசாயம் செய்வேன், எதுவும் சரிவரலைன்னா சாராயம் கூட காய்ச்சுவேன். எப்படியும் பிழைச்சுக்கலாம். ஆனால் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.இதைத்தவிர சினிமாவில் இருந்துட்டே மாற்று வேலைகள் செய்யும் எண்ணமும் இருக்கு. நல்லப் படங்கள் எடுக்கிற ஒரு தயாரிப்பாளரா மாறலாம். அதுக்கு முதலில் பணம் தேவை, சீமானை நம்பி யாரும் பணம் தரலாங்கிற நம்பிக்கையை உருவாக்கணும். இதைத்தவிர நான் செய்ய வேண்டிய சமூகப்பணிகள் நிறைய இருக்கிறது. பேச்சுதான் எனக்கு ஆயுதம். பேசிப் பேசியே இவங்களை மாத்தணும். யாரோ ஒருத்தரோட பேச்சு தான் என்னை மாத்தியிருக்கு. என் பேச்சும் நிச்சயம் சிலரையாவது மாத்துங்கிற நம்பிக்கையில் தான் என் பயணம் தொடர்கிறது.  இயக்குனர் திரு.சீமான் நேர்முகம் முழுவதும் படிக்க இணைப்பை அழுத்தவும். http://keetru.com/literature/interview/seemaan.php

இன்றைய குறள்

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

வீரச்செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்

அறத்துப்பால் : அன்புடைமை

"ஆத்மாவைப் பற்றி மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதமாகச் சொன்னாலாவது சம்சாரிகள் ஆத்மாவின் பெருமையறிந்து சம்சார பந்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்யக்கூடும் என்று பரிவுடன் கருதி, சொன்னதையே திரும்பச் சொல்லுகிறான் வாசுதேவன்"

- ஸ்ரீ சங்கரர்