January 02, 2015

என் மனமார்ந்த 2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)

வணக்கம் என் உறவுகளே! தங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)
 
தங்களின் அற்புதமான நேரத்திற்கு முதற்கண் என் நன்றி. காரணம், இந்த பதிவு சற்று நீளமானது.

இதுவரை நாம் பல வருடங்களை கடந்து வந்திருப்போம். ஆனால், ஒவ்வொருவருக்கும் தாம் கடந்து வந்த வருடங்களுள் மிக முக்கியமான, சுவாரஸ்யமான, மைல் கல்லாய், மனதில் குதூகலமாய் அல்லது வலி நிறைந்ததாய்.... இப்படி எப்படியாயினும் மறக்கவியலா சில வருடங்கள் மனதில் வந்து செல்லும். அப்படி என்னில் வந்து செல்லும் வருடங்களுள் மிக முக்கியமானதொரு வருடம், இதோ இன்னும் சில மணித்தியாலங்களில் நம்மைவிட்டு பிரியப்போகும் இந்த 2014. எத்தனை தவம் இருந்தாலும் இனி திரும்பக்கிடைக்குமா இந்த 2014 ? என் ஆத்மார்த்த முத்தங்களுடன் உன்னைவிட்டுப் பிரியும் இந்த தருணத்தில், என் கண்கள் பணிப்பதை என்னால் மறைக்க முடியவில்லை. போய் வா.... 2014.

உன்னையும், உன்னோடு என்னில் பயணித்த என் அன்பான உறவுகளையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

விமான விபரீதங்கள் அதிகம் நிறைந்தது இந்த 2014, நான் அடிக்கடி விமானப் பயணம் செல்வதாலோ என்னவோ அதன் வலி சற்று மிகுதியாகவே என்னை பாதித்தது. இனி வரும் ஆண்டிலாவது அப்படி நடக்காதிருக்க பிரார்த்திப்போம்.

------------
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். உடலளவில் இங்கிருந்தாலும், உள்ளத்தளவில் என் மண்ணில் மாத்திரமே வசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை ஒளிவு, மறைவின்றி இங்கே பதிவு செய்கிறேன். இங்கு பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், அமெரிக்காவில் படமாக்கப்படும், நம் தமிழ் உட்பட இந்திய திரைப்படங்களில் தொடர்ந்து பணி புரிந்தாலும், எனக்குள் தீராத பசியொன்று இருந்தது. அது, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். சென்னையிலேயே இருந்து முயற்சிக்க வேண்டும். தேவைப்படும்பொழுது மாத்திரம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த இரண்டு வருடங்களாக நான் சென்னையில் தங்கி, நடிக்கும் வாய்ப்புக்காக முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கொருமுறை அமெரிக்கா சென்று வருவதும், அதன் பொருட்டு ஆகும் பொருட்செலவும், மனைவி மற்றும் பத்து வயதுகூட நிரம்பாத குழந்தைகளைப் பிரிந்திருப்பதால் அவர்களின் மனநிலை, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டும், பணி செய்துகொண்டும், எனக்குத் தேவையான பொருளாதார உதவிகளை செய்துகொண்டும் அன்றாடம் மன அழுத்தத்திலும், பணிப்பளுவிலும் வாழ்வை நகர்த்திக் கொண்டுள்ள என் மனைவியின் மனநிலை..... இப்படி சிக்கல்களையும், சிரமங்களையும், சச்சரவுகளையும்... அடுக்கிக்கொண்டே போகலாம்...

இப்படி இவ்வளவு சுமைகளுடன் நான் தமிழ் சினிமாவில் நடித்தேதான் ஆக வேண்டுமா? பேசாமல் அமெரிக்காவில் இருந்தால் குறைந்த பட்சம் மாதமொன்றுக்கு சுமார் 5000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கலாமே?

ம்ம்.... ஆக... "தமிழ் சினிமாவில் நடித்தே தீருவேன்" ஒரு வழியாக என் குடும்பத்தினரை தேற்றி, ஒரு தீர்க்கமான முடிவெடுத்து சென்னை புறப்படுகிறேன். என் கையில் வெறும் 90 நாட்களேயான என் குழந்தை. காரணம், ஏற்கனவே இருக்கும் என் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதே என் மனைவிக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும்போது நடுநிசி, 90 நாட்கள் சரியாக நிறைவடைந்திருந்தது. நான் 90 நாட்களே நிரம்பிய குழந்தையோடு சென்னை வருவேன் என்பது என் அம்மா உட்பட யாருக்குமே தெரியாது. பிறகு, நாட்கள் செல்லச் செல்ல.... என்னோடு பயணித்த என் நெருங்கிய நண்பர்களுக்கு மாத்திரம் தெரிய வந்தது. அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

"நீ என்ன லூசா...... நீதான், திமிரெடுத்து, சினிமாவில் நடிச்சு, கிழிச்சே தீருவேன்னு வந்திருக்கே, பாவம் அந்த கொழந்தை, என்னடா பண்ணுச்சு?"

அமெரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்த என் குழந்தையைக் ஒரு வழியாக மீள் குடியமர்த்தி சென்னைவாசியாக்க முயற்சிக்கையில், கிராமத்தில் இருக்கும் என் அம்மாவையும் கூட வைத்துக்கொண்டால், எனக்கு வாய்ப்புத் தேட வசதியாய் இருக்குமே என ஒரு நப்பாசையில் என் அம்மாவை சென்னை அழைத்து வந்தேன். சுமார் பத்து நாட்கள் கடந்தது. ஒரு வழியாக என் அம்மாவுக்கும், குழந்தைக்கும் தீவிர பயிற்சி கொடுத்து, எல்லாம் கூடி வரும் வேளையில்...  என் அம்மா,

"தென்னம்பிள்ளைக்கி நம்மள மாதிரி ஒழுங்கா யாரும் தண்ணி ஊத்த மாட்டங்கையா, 20 முட்டையோட கோழிய அடை வச்சுட்டு வந்து இன்னிக்கோட 22 நாளாச்சு, இன்னும் அஞ்சாறு நாள்ல அம்புட்டும் பொறிச்சிரும், ஆளில்லாட்டி அம்புட்டு புறாவையும் நாய் புடிச்சிட்டு போயிரும், கோழிய சாயந்தரத்துல டயத்துக்கு புடிச்சு கோழிக்கூட்டுல அடைக்காட்டி அம்புட்டையும் கீறிப்புள்ள சாப்டுரும், கம்மாய்ல வேற தண்ணியில்ல, வாத்துக்கு நேரா நேரம் தொட்டில தண்ணி வைக்கணும்....." இப்படியாக பொலம்பல். என் மூன்று மாத குழந்தையை பார்த்துக்கொள்வதைவிட, என் அம்மாவை அந்த உறவுக்கார கோழிகளிடமிருந்தும், வாத்துகளிடமிருந்தும் மீட்க பெரும்பாடாய் போனது. இதற்கு ஒரே வழி..... அம்மாவின் வழியிலேயே விட்டுப்பிடிப்பதுதான். என் குழந்தையை அம்மாவுடன் அனுப்பி கிராமத்தில் இருக்க வைப்போம். எனக்குத்தான் அந்த அற்புதமான வாய்ப்பு கிடைக்கவில்லை. என் குழந்தைக்காவது கிடைக்கட்டும் என முடிவெடுத்து, என் இரண்டு குழந்தைகளையும் (என் அம்மாவையும்தான்) கொண்டுபோய் என் கிராமத்தில் விட்டு வந்தேன்.

தினம் தினம் அலைபேசியில் பேசிக்கொண்டாலும், மாதத்திற்கொருமுறை போய் பார்த்துக்கொள்வதும், ஒருபுறம் என் மனைவியை தேற்றுவதும், ஒரு புறம் குழந்தைகளைத் தேற்றுவதும், ஒரு புறம் என்னைத் தேற்றுவதும், ஒரு புறம் வாய்ப்புக்கள் தேடி அலைவதுமாய் கழிந்தது சில மாதங்கள். நான் என் கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம்...

என் அம்மா கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு....

"ஏய்யா.... நானும் ஒங்கூட அமெரிக்க வந்திருக்கேன். எப்படிப்பட்ட ஊரு அது, வேர்க்கவே வேர்க்காத ஊர்ல பொறந்த இந்தப்புள்ள அங்க
இருந்திருந்தா எப்படியெல்லாம் வளந்திருக்கும்! இந்த கொசுக்கடியிலயும், வெயில்லயும், வேணக்கட்டிலயும் இப்படி கஷ்டப்படணுமா? என்ன பாவம் செஞ்சுச்சு இந்த பச்ச சிசு?" என் அம்மா.

"நீயும் இங்கதான இருக்கே! நீ என்ன பாவம் பண்ணே ? நானும் இங்கதானே இருந்தேன்...." இது நான்.

"அதுக்கு சொல்லலய்யா.... எனக்கு பழகிருச்சு"

"இவளுக்கும் பழகிரும்"

"ஒனக்கு எப்பவும் பிடிவாதம், நான் சொல்றத கேளு. பேசாம போயி அங்க பிள்ளையளோட இரு. நீ நடிச்சு கிழிச்சது போதும்".

நான் கல்லூரி செல்லும் வரையில் மின் விசிறி கண்டிராத என் கிராமத்து வாழ்க்கை என்னவென்பது எனக்குத் தெரியும். ஆனாலும், என் தங்கையின் சடங்குக்கு தாய்மாமன் கொடுத்த டேபிள் ஃபேன்தான் என் வீட்டின் முதல் மின் விசிறி. அதுவும் அவ்வளவாய் அன்று தேவைப்படவில்லை.

ஆனால், இன்றோ.... ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட என் கிராமம் இன்னொரு சவூதி அரேபியா. என் கிராமத்தில் நான் தங்கும் சில இரவு நேரங்களில் புரண்டு புரண்டு அழும் என் குழந்தையை தூக்கினால், அப்போதுதான் குளிப்பாட்டிய குழந்தையைப்போல் ஈர உடலோடு துவண்டு விழுவதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அவ்வப்போது, சில இயக்குனர்கள் சிறு பாத்திரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தனர். நடித்தேன். இந்த நேரத்தில் அவர்களுக்கும் என் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்.

சினிமாவில் நடிக்கவும், இயக்குனராகவும் அன்றாடம் அலைந்து திரிந்து போராடும் எத்தனையோ நண்பர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களோடு ஒப்பிடுகையில் என் சிரமம்
எனக்கொன்றும் மிகப்பெரிதாகத் தெரியவில்லை. கையால் எழுதப்பட்ட காகிதத்தின் நகல்களோடு சினிமா கம்பெனிகளின் முகவரிகளைத் தேடித் தேடி மிதிவண்டியிலும், ஷேர் ஆட்டோவிலும், பைக்கிலும், பஸ்ஸிலும், நடந்தும் வீதி வீதியாக வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகத்தான என் உறவுகளின் சிரமத்தைவிடவா என் சிரமம் பெரிது ? அவர்களின் வலியை விடவா என் வலி பெரிது ?

எத்தனை கதைகள் வேண்டும்? எத்தனை ஆவணப்படங்கள் வேண்டும்? எத்தனை குறும்படங்கள் வேண்டும்? வடபழனி, ஏவி.எம்-மிற்கு எதிரேயுள்ள அருணாச்சலம் சாலையில் "காவேரி கார்னர்" தேநீர் நிலைய வாசலிலும், மணி தேநீர் கடை வாசலிலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் வந்து நின்று ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்வதும், சினிமா கம்பெனிகளின் முகவரிகள் நிறைந்த கையெழுத்து நகல்களை பரிமாறிக்கொள்வதும்.... பசி நிறைந்த வயிற்றோடும், கனவுகள் நிறைந்த கண்களோடும், எதிர்காலம் பற்றிய தீர்க்கமான வெறியோடும்.... அப்பப்பா...

எத்தனையெத்தனை விதவிதமான கதாபாத்திரங்கள் !!

என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் ஹாலிவுட் திரையுலக வாய்ப்புகள் மிகச் சுலபம், அனுபவத்தில் கூறுகிறேன்.

சாலிகிராமம் காவேரி கார்னரும், மணி டீக்கடையும் என்னை சென்னையில் இருக்க கட்டாயப்படுத்தியவை. இப்படி நான் பார்த்து பிரமித்த இந்த தமிழ் திரையுலக நடமாடும் எதிர்காலங்களில் என்னையும் ஐக்கியமாக்கிக் கொள்வதில் எனக்குக் கிடைத்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

அது ஒரு சுகமான வலி... ஆம்... எங்களுக்கு அதுதான் வழி....

இவ்வளவு தெரிந்த பின்னும் நான் எப்படி திரும்ப அமெரிக்கா செல்வேன் ? என்னையும் அவர்களோடு இணைத்துக்கொண்டு வீதி வீதியாக வாய்ப்புக்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான எதிர்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கலைஞர்களுள், நானும் ஒருவன்.

சென்னை வீதிகளில் இதோ வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறேன்.....

காவேரி கார்னரிலும், மணி டீக்கடையிலும் முகவரி வாங்கி, வாய்ப்புத்தேடி, பிறகு ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து, இன்று தமிழ் திரையுலகில் பிஸி நடிகர்களாக, இயக்குனர்களாக வலம் வரும் எவரும் இதனை பதிவு செய்ய விரும்பவில்லை அல்லது பதிவு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில், அப்படிப்பட்ட வசதியற்ற எம் உறவுகள், கைகள் கடுக்கக் எழுதி, அதனை சொந்த செலவில் நகலெடுத்து, அனைத்து நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களோடு தாமும் சேர்ந்து வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகான்கள், துர்பாக்கிய மனிதர்கள், நடிகர்கள் யார்..... ? யாருக்காவது தெரியுமா ?

முதலில் அவர்கள்  ஜெயிக்க வேண்டும், காவேரி கார்னர், மணி டீக்கடை மகாநடிகர்கள் ஜெயிக்க வேண்டும்.... பிறகு நானும் ஜெயிக்க வேண்டும்.

ஜெயிப்போம்.... எனக்காக இல்லையேனும், என்னோடு பயணித்த 90 நாட்களேயான என் பிஞ்சுக்  குழந்தைக்காக.... என் மனைவி, குழந்தைகளின் தியாகத்திற்காக.... என் அம்மாவின் தள்ளாத வயது சிரமத்திற்காக.... என் குடும்பத்தினரின் எனக்கான பங்களிப்பிற்காக.... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒராயிரம் வலிகளோடு நிறைந்த வாழ்க்கையின் கனவுகளுக்காக.... வயிற்றுக்காக.... வைராக்கியத்திற்காக.... நிச்சயம் ஜெயிப்போம், தொடர்ந்து போராடுவோம்... தொடும் தூரம் தொலைவில் இல்லை.....

இந்த 2015 நமக்கான ஆண்டு... நம் ஆண்டு...

என்னை அன்போடு அழைத்துச் சென்று பல திரையுலக அலுவலகங்களை அறிமுகம் செய்த எனதன்பு உறவுகளை இங்கே நன்றியுணர்வோடு நினைத்துப்பார்க்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் என் எதிர்கால பயணங்களில் என்னோடு அவர்களும் பயணிப்பார்கள் என்பதை இங்கே தெளிவாகப் பதிவு செய்கிறேன். நான் சந்தித்த, என்னோடு பயணித்த சென்னையில் மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள எனது அன்பான உறவுகளில் கசப்பானவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். "அவர்களால்தான் உண்மையானவர்கள் பிரகாசமாய் தெரிந்தார்கள்" என்பதைத் தவிர அவர்கள் செய்த பிழைதான் என்ன? ஒரு வகையில் அவர்கள் நமக்கு நன்மை புரிந்துள்ளார்கள் என்பதை மாத்திரம் நம் நினைவிற்கொள்வோம்.

எப்படியாயினும்....

உலகம் முழுக்க இருக்கும் என் அன்பான உறவுகள் அனைவரையும் இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நிறைந்த மனதோடு வாழ்த்துகிறேன். நன்றி :)

தொடர்பில் இருப்போம்.... தொடர்ந்து பயணிப்போம்....

வற்றாத அன்புடன் - நவின் சீத்தாராமன்

December 29, 2014

என் அழகான சின்ன தேவதை

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம் அறிந்த விசயம்தான். கிட்டத்தட்ட அக்டோபரிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை ஹாலோவின் (Halloween), நன்றி தெரிவிக்கும் விழா (Thanks Giving), கருப்பு வெள்ளி (Black Friday), கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக விழாக்கள் கோலாகலமாய் இருக்கும். இந்த மாதங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இலையுதிர்கால விடுமுறை (Fall Break) என்றும், குளிர்கால விடுமுறை (Winter Break) என்றும் அதிகான நாட்கள் விடுமுறையாக இருப்பதால், எங்கு பார்த்தாலும், போக்குவரத்து நெருக்கடியும், எல்லாக்கடைகளிலும் ஜன நெருக்கம் அதிகமாகவும் இருக்கும். இதனால் எல்லா கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏகக் கொண்டாட்டம்தான். நம் ஊர் ஆடித்தள்ளுபடி, அட்சய திரிதியை ஸ்பெஷல் மாதிரி வியாபாரிகள் இங்கும் தள்ளுபடி என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள். இப்படி தள்ளுபடி காலங்களில்தான் அமெரிக்காவில் வசிப்பவர்கள் அதிகமான பொருட்கள் வாங்குவார்கள். வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களின் குடும்பங்களோடு சேர்ந்து கொண்டாடுவதும் இந்த பண்டிகைகள்தான். மேலும் நம் இந்தியர்கள் போல் பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் எல்லா மதத்தினரும் இந்தப் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இப்படி கொண்டாட்டங்கள் நிறைந்த இம்மாதங்களில் அமெரிக்காவில் நான் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் இந்த ஆண்டு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் குடும்பத்தில் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இப்படி கொண்டாட்டங்களினூடே பக்கத்து மாநிலமான அலபாமாவுக்கு (Alabama) ஒருவார பயணமாக குடும்பத்துடன் சென்றிருந்தேன். பகல் முழுக்க குதூகலமாய் ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இப்படியொரு நாள் நான் குடும்பத்தோடு நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக அன்று அதிக நபர்கள் இல்லை. நீச்சல் குளத்தில் மொத்தமே சுமார் 6-7 பேர்தான் இருக்கும். அப்போது ஒர் அமெரிக்க தம்பதியினர் சுமார் மூன்று வயதிருக்கும், ஒரு பெண் குழந்தையோடு உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். காரணத்தை பிறகு சொல்கிறேன். அந்தப் பெண் குழந்தை என் குழந்தைகளோடு மிக நெருங்கி, குதூகலமாய் நீந்தியும், விளையாடியும், சிரித்தும் மகிழ்ந்தது எங்களுக்கும், அந்த தம்பதியினருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நானும் என் மனைவியும் அடிக்கடி பார்த்துக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை. காரணம், அந்தப் பெண் குழந்தைக்கு அப்படியே தமிழ் முகம். அந்த தம்பதியினர் இருவருமே அமெரிக்கர்கள். கட்டாயம் அவர்கள் அந்தப் பெண் குழந்தையை தத்து எடுத்திருக்க வேண்டும் என எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட எங்களை தவிர யாருமே நீச்சல் குளத்தில் இப்பொழுது இல்லை. குழந்தையோடு வந்த அந்தப் பெண்மணியும், என் மனைவியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நானும், அந்த அமெரிக்கரும் நீச்சல் குளத்தில் குழந்தைகளோடு விளையாடுவதில் மிக மும்முரமாய் இருந்தோம். ஆனால், இரண்டு மேற்பற்கள் விழுந்திருந்த அந்த அழகான குழந்தை மட்டும் என்னிடமும், என் குழந்தைகளிடமும் படுபயங்கர மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாய் நாங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு நீச்சல் குளத்திலிருந்து விடை பெற்றோம். அப்போது இரவு மணி சுமார் 10 இருக்கும். என் மனைவியின் முகத்தில் ஏதோ ஒரு சோகம் பற்றிக் கொண்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் கண்களால் "என்ன?" என கேட்கையில், "பிறகு சொல்கிறேன்" என அவள் கண்களால் கூறியதைப் புரிந்துகொண்டு, குழந்தைகள் உறங்கும்வரை காத்திருந்தேன். பிறகு, என்

மனைவி கூறியவை....

"அவர்கள் இருவரும் நாம் நினைத்ததுபோல், கணவன் மனைவி இல்லை. அம்மாவும், மகனும். (முதற்கண் அவர்களை தம்பதியர் என நினைத்ததற்கு மன்னிக்கவும். காரணம், பொதுவாக, அமெரிக்கர்களின் தலைமுடியின் நிறம் மற்றும் உடல் அமைப்பை வைத்து வயதை கணிக்க இயலாத ஒரு குழப்பம் ஏற்படும். சரி, அது போகட்டும்). அந்த அம்மாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். கணவர் பிரிந்து சென்று விட்டார். மூன்று மகன்களும் அம்மாவோடு வசிக்கின்றனர். பெண் குழந்தைமேல் அம்மாவுக்கு மட்டுமின்றி, மகன்களுக்கும் அளவற்ற ஆசை. கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க விருப்பப் படுகின்றனர். ஆனால், மூன்று பேருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆனபின் தம் மனைவியர் தன் அம்மாவுடன் வசிப்பார்களா ? கேள்விக்குறி ? எனவே, திருமணம் ஆவதற்கு முன்னரே ஒரு பெண் குழந்தையை நாம் தத்தெடுப்போம் என முடிவு செய்கின்றனர். இப்படியாக, இணையத்தில் தேடும்பொழுது கிடைத்த தகவல்களின் பேரில் அவர்கள் தத்தெடுத்தது நம் மண்ணில் பிறந்த பெண் குழந்தை. சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை தேடி அடைக்கலம் தந்து வளர்க்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். அப்படி தத்தெடுக்கப்பட்ட அழகான பெண் குழந்தைதான் எங்களோடு நீச்சல் குளத்தில் கொஞ்சி விளையாடிய அந்த அழகான தேவதை. அவள் பிறந்த மண் ஆந்திர மாநிலம், ஐதராபாத். அங்கிருந்து தத்தெடுக்கப்பட்டு, இன்று அமெரிக்க மண்ணில் அனைத்து சுக சௌகரியங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அழகு தேவதையின் முகம் என் கண்ணைவிட்டு இன்றளவும் நீங்கவில்லை. அந்தக் குழந்தையை அவர்கள் காப்பகத்திலிருந்து ஏற்றுக்கொண்டபொழுது, கிட்டத்தட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையால் (Mal-Nutrition) மூன்று கிலோ குறைவாக இருந்ததாகவும், தற்போது கடந்த மூன்று மாதங்களில் இரண்டு கிலோ எடை அதிகரித்திருப்பதாகவும் அந்த தாய் கூறி ஆறுதலடைந்ததை என் மனைவி என்னிடம் கூறியதை நினைக்கையில் என் கண்கள் என் கட்டுப்பாட்டை மீறி கலங்குவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.

மேலும், அந்த அமெரிக்க தாய் கூறியவை : பல நாடுகளில் இதுபோல் இருந்தாலும், நாங்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறோம். குறிப்பாக எங்களுக்கு தென்னிந்தியாவை அதிகம் பிடிக்கும், அங்குள்ள கலாச்சாரம், கூட்டுக்குடும்ப முறை, உணவு பழக்க வழக்கங்கள் இப்படி பிடித்தவை ஏராளம். அதனால்தான் இந்தக் குழந்தையை நாங்கள் தத்தெடுத்தோம்" என்று அந்த தாய் கூறியதை நான் பெருமையாக நினைக்க இயலவில்லை. மனமெங்கும் மரணவலி. பாரம்பரியமிக்க நம் மண்ணில் இன்னும் இப்படிப்பட்ட கொடுமைகளும், அதனால் ஏற்படும் வரலாற்று இழுக்குகளும் என்னை தீராத வேதனைகளுக்குள்ளாக்கியதை நான் எப்படி இங்கே விளக்க முடியும். எப்படியாயினும், அந்த மாபெரும் மகத்தான உள்ளங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பாரம்பரியமும், கலாச்சாரமும், தேசப்பற்றுமாய் இன்னும் ஆயிரம்....ஆயிரம் நாம் எழுதலாம். ஆனால் எங்கோ, யாரோ, எப்படியோ வந்த அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கும் வரும்?

வருத்தத்தோடும், வலியோடும், ஆயிரமாயிரம் கேள்விகளோடும், நிற்கதியாய் நான்........

என் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

September 20, 2014

"கன்னியும் காளையும் செம காதல்" முன்னோட்டம்

வணக்கம் உறவுகளே ! "கன்னியும் காளையும் செம காதல்" முன்னோட்டம். நான் இதில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து இந்த முன்னோட்டத்தினை பார்த்து, தங்களின் முக நூல் பக்கத்திலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்களுடன் பகிர்ந்து, தங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு வேண்டுகிறேன். நன்றி :)



Vanakkam Friends,

I did a Comedy Role in this Movie. Please watch and share "Kanniyum Kaalaiyum Sema Kadhal" Trailer in your FB Timeline, Social websites/Forums and with your friends. Thanks in Advance for your continuous Support and Encourage' :)

July 09, 2014

"தொட்டால் தொடரும்" முன்னோட்டம்

வணக்கம் உறவுகளே! "தொட்டால் தொடரும்" இந்த படத்தில் நான் ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன். படத்தின் "முன்னோட்டம்" அதாவது 'ட்ரெய்லரை' பார்த்துவிட்டு நண்பர்களிடம் பகிருமாறும், விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் தங்களின் மேலான ஒத்துழைப்பினையும், வாழ்த்துகளையும் வழங்கவேண்டும் என்றும் வேண்டி நிற்கிறேன். நன்றி, வணக்கம்.


October 26, 2012

Sillunnu Oru Sandhippu Trailer : www.adhikaalai.com

March 12, 2012

கருவ மரம் பஸ் ஸ்டாப் : நவநீ

என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரத்திலிருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் எனக்கு, குறிப்பாக ஒரேயொரு பேருந்து நிலையத்தை மாத்திரம் மறக்கவே இயலாது. ஆம்! அதுதான் அந்த ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’. தினமும் கல்லூரிக்குச் செல்லும் எனக்கு தவறாமல் என் தந்தை பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம். பேருந்து பயணச்சீட்டு ஆறு ரூபாய் போக மீதி நான்கு ரூபாய் எனக்கு மிச்சம். கல்லூரி முடிந்து மாலை நேரம், சில நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் மற்றும் வடை சாப்பிட்டாலும் இரண்டு ரூபாயாவது மிஞ்சும். இப்படி மாதம் முழுவதும் மிஞ்சும் பணத்தை வைத்துப் போட்ட மூலதனத்தில் அறிமுகமானவர்கள்தான் கவிஞர் மீரா தொடங்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மு.மேத்தா, நா.காமராசன், மாக்சிம் கார்க்கி, கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், வைரமுத்து, கல்யாண்ஜி, பாமரன், இராகுலதாசன், டாக்டர் வ.தேனப்பன், ஊடி வயலார், கவிஞர் கண்ணதாசன், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, அறிவுமதி, சுப.வீரபாண்டியன், பா.ராகவன் என கவிஞர் மதுமிதா வரை எனக்குப் பரிச்சயம். இப்படியாக சென்று கொண்டிருந்த என் கல்லூரி வாழ்க்கையில் தேவகோட்டை பேருந்து நிலையத்தில், காலையில் வந்திறங்கியவுடன் தினமும் தவறாமல் ஒருவரைச் சந்திப்பேன். என்னைப் பார்த்தவுடன் அவர் புன்முறுவலுடன் எனக்கு வணக்கம் வைப்பார். நானும் வணக்கம் வைப்பேன். உடனே என்னையறியாது என் கைகள் எனது சட்டைப்பைக்குள் செல்லும். கட்டாயம் அவருக்கென வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயம் யாருமறியாது அவரின் கைக்குள் கைமாறும். அடிமனதிலிருந்து திரும்ப ஒரு நன்றி சொல்லிவிட்டு கைகளாலேயே நடந்து அடுத்த பக்கம் சென்று விடுவார். ஆம்! அவருக்கு கால்கள் இரண்டும் போலியோவால் பாதிக்கப்பட்டு, சுட்டெரிக்கும் தார் ரோட்டில் கைகளாலேயே நடந்து செல்லும் மாற்றுத் திறனாளி நண்பர் முருகேசன். இப்படித்தான் எங்கள் பந்தம் பல வருடங்கள் தொடர்ந்தன. 

ஒருமுறை கல்லூரி மதியமே விடுமுறை அறிவிக்க, கட்டாயமாக நண்பர்களுடன் திரைப்படத்திற்குச் செல்லும் நான், ஏதோ ஒரு முக்கிய விசயத்துக்காக வீட்டுக்கு விரைந்தேன். வழக்கமாகச் செல்லும் பேருந்து மாலைதான் வரும். வேறொரு பேருந்தைப் பிடித்து வீடு செல்லவேண்டும் என்ற வேகத்தில் விரைந்தேன். எனது நண்பர் முருகேசனைச் சந்தித்த நான், எப்போதும்போல் என் சட்டைப்பைக்குள் கை விட்டேன். எடுத்தேன், அவசரத்தில் வந்ததைக் கொடுத்தேன். வழக்கத்துக்கும் மீறிய புன்முறுவல் என் நண்பர் முருகேசனிடம். பிறகுதான் தெரிந்தது அது ஒரு ரூபாய் அல்ல, ஐந்து ரூபாய் நாணயம். ஒரு வழியாகப் பேருந்தில் ஏறி நின்று கொண்டேன். “சீட்டு வாங்கணுமா? வண்டில யாரும் சீட்டு வாங்கணுமா?” நடத்துனர் முன் பக்கத்திலிருந்து பயணச்சீட்டு கேட்டுக்கொண்டே நெருங்குகிறார். நான் சட்டைப் பைக்குள் கை விடுகிறேன். தூக்கி வாரிப் போட்டது. பேண்ட் பைக்குள் கை விடுகிறேன்…. மீண்டும் அதிர்ச்சி. பேருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு சென்ற போதும் என் உடல் முழுவதும் வியர்வை. பேருந்தில் கிட்டத்தட்ட என்னைச் சேர்த்து மூன்றோ அல்லது நான்கு பேரோதான் நின்று கொண்டிருக்கிறோம். இன்று பார்த்து ஏராளமான வயதுப் பெண்கள் பேருந்தில் அமர்ந்து இருப்பதாகத் தெரிகிறது. திகைத்துப் போகிறேன். காரணம், ஒரு நயா பைசாகூட என்னிடம் இல்லை. இது எப்படி நடந்தது? சத்தியமாய்த் தெரியவில்லை. “என்ன செய்வது? யாரிடம் கேட்பது? அந்தப் பேருந்தில் ஓட்டுனர், நடத்துனர் உட்பட எனக்குத் தெரிந்த முகங்கள் யாருமே இல்லை. வழக்கமாய் போகும் பேருந்து என்றாலும் ஒரு வழியாய் சமாளிக்கலாம். அட கடவுளே! அவமானமாய்ப் போய்விடுமே!” கிட்டத்தட்ட நடத்துனர் எனக்கு அருகாமையில் வந்து பயணச்சீட்டு கொடுத்துக்கொண்டுள்ளார். “கருவ மரம் பஸ் ஸ்டாப் எந்திரிச்சு வாங்க”, சீட்டு வாங்கணுமா? யாராச்சும் சீட்டு வாங்கணுமா?”. கசக்கிப் பிழிகிறது என் அடிவயிறு. எனக்கு அடி வயிறு இருப்பதை அன்றுதான் உணர்கிறேன். அப்படியொரு மரண வேதனை. “காசு இல்லாம ஒனக்கெல்லாம், பேண்ட், சட்டை. அதுல வேற இன்-பண்ணிருக்கே, கீழ எறங்குடா வெண்ணெ” என்று யாரோ திட்டுவதாக என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

“டமார்!! ஓ…ஓ… பாத்து… பாத்து, ஏய்.. ஏய்.. என்னாச்சுப்பா… என ஆங்கங்கே சத்தம். நான் மேலே பிடித்திருந்த கம்பியை மீறி, நடத்துனர் மீது பலமாக இடித்து, அவர் நிலை தடுமாறி, ஒரு வழியாய் சுதாரித்துப் பார்த்ததில், பேருந்து கிட்டத்தட்ட பக்கத்தில் இருக்கும் வயலில் தலைகீழாக விழும் தருவாயில் நின்று கொண்டிருந்தது. “எல்லாரும் சீக்கிரம் எறங்குங்க, எறங்குங்க….” ஒரே இறைச்சல், சத்தம்… எதிரே வந்த லாரி பேருந்து மீதி மோதி, லாரி ஓட்டுனர் இறங்கி ஓடிவிட, அனைவரும் கீழே இறங்கினோம். நெற்பயிர் வளர்ந்து கதிர்களோடு சேறும், சகதியுமாய் இருந்த அந்த வயலுக்குள் அனைவரும் இறங்கி, ஒரு வழியாக சாலையோரம் வந்தால்…. சரியாக அந்தக் கருவ மரம் பஸ் ஸ்டாப். யாருக்கும் எந்தக் காயமும் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்து நொறுங்கி, முன்புறம் சேதமடைந்திருந்தது. எல்லோரும் கருவ மரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தோம்.

எனக்கு தலை சுற்றியது. இந்த விபத்து எனக்காகவே நடந்ததோ! எனக்குள் ஓராயிரம் கேள்விகள்….. “சரி, பேசாமல் மாலை வரும் எனது வழக்கமான பேருந்திலேயே சென்று விடுவோமா?” என நினைக்கிறேன். விபத்து நடந்தும், யாருக்கும் எதுவும் நடக்கவில்லையே என்ற திருப்தி ஒருபுறம் இருந்தாலும்…. என்னிடம் காசு இல்லாமல் போனதற்கும், என் நண்பர் முருகேசனுக்கும், அந்தக் கருவமரம் பஸ் ஸ்டாப்பிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவே நான் உணர்ந்தேன். இதற்கிடையில் இரு புறமும் பேருந்து செல்ல இயலாத சூழல்…. வந்த பேருந்து அனைத்தும் வந்த வழியே திரும்பி வேறு வேறு வழியில் செல்லத் தயாராகிக்கொண்டுள்ளன. கிட்டத்தட்ட நான் மட்டுமே அந்தக் கருவமரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கிறேன். நான் போக வேண்டிய திசையில் வந்த ஒரு பேருந்து திரும்புவதற்காக நடத்துனர், ஒருவர் கீழே இறங்கி “வரலாம் வா… வரலாம், வரலாம் வா… வரலாம், என விசிலடிக்கும் சத்தம். “நம் நிலைமை இப்படியாகிவிட்டதே! ‘நீயே பிச்சையெடுக்கிற நிலையில இருக்கிற, இதுல வெட்டிப் பந்தா வேற… அஞ்சு ரூவாயா போடுறே, மவனே அஞ்சு ரூவா… ஒரு ரூவாதாண்டி ஒனக்கு லிமிட்டு, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல” என என்னை யாரோ திட்டுவதாக எனக்குத் தோன்றியது. விசிலடிக்கும் நடத்துனரைப் பார்க்கிறேன். திடீரென ஒரு மகிழ்ச்சி. அவர் எனக்குத் தூரத்துச் சொந்தம் என என் தந்தை ஒருமுறை எப்போதோ அந்தப் பேருந்தில் வரும்போது அறிமுகம் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட திரும்பி, கிளம்பி விட்ட பேருந்தை தலை தெறிக்க ஓடிப்போய், விரட்டிப் பிடித்தே விட்டேன். பேருந்தில் நல்ல இடம் பார்த்து நின்று கொண்டேன். மீண்டும் நடத்துனர்…. அருகே பயணச்சீட்டு கேட்டுக்கொண்டே வருகிறார். நான் அவரைப் பார்த்து அசடு வழியாத குறையாய் சிரிக்கிறேன். “என்ன தம்பி நல்லாருக்கியளா? அப்பா எப்படி இருக்காரு? என்ன, இன்னிக்கி சீக்கிரமே வந்துட்டியே, காலேசு லீவா?” என ஒரே மூச்சில் கேட்டு முடித்தார். “ம்ம்.. நல்லாருக்கேன், நான் வந்த ஆர்.பி.எஸ். பஸ் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு, அதான்…” என இழுத்தேன். உடனே அவர் என் பஸ் நிறுத்தத்திற்கான பயணச்சீட்டைத் தந்தார். நான் என் சட்டைப்பைக்குள் கையை விட்டேன். “அட சும்மா வைய்ங்க…..” என்றார். எனக்கு மீண்டும் தலை சுற்றியது. சட்டைப்பையும், பேண்ட் பையும் காலி என்பது அவருக்கெங்கே தெரியப் போகிறது. ஆனாலும், ஏதோ… அந்தக் கணத்தில், எனக்குள் தோன்றிய எண்ணங்கள், கேள்விகள், தற்காலிக திருப்தி….. இவை என்றுமே எனக்குள் அழிக்க முடியாத அற்புதமான நினைவுகள். சில மணித்துளிகளுக்கு முன் நான் அந்தக் ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’பின் அடியில் நிற்கும்போது தோன்றிய எண்ணங்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத இந்த நினைவுகள் நிரந்தரமானவைகளா? அப்போது, எனக்கு எதுவும் தெரியாது. நான் செய்த ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் தர்மம், ஓர் அற்பக் காரியமானாலும்….. “தர்மம் தலை காக்கும்” என கர்ணன் ரேஞ்சுக்கு கற்பனையில் மிதந்ததென்னவோ உண்மைதான்.

இன்றும் நான் என் சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள அந்த “கருவ மரம் பஸ் ஸ்டாப்”பில் ஒரு இரண்டு நிமிடங்களாவது நின்று விட்டுச் செல்வது வழக்கம். நான் தவறாது கருவ மரத்தைப் பார்க்கிறேன். ஆனால், என் நண்பர் முருகேசனை இன்றுவரை சந்திக்கவே இல்லை. பேருந்து நிலையத்தில் பூக்கடை அக்கா முதல், பழக்கடை ராசேந்திரன் வரை அனைவரிடமும் விசாரித்து விட்டேன். என் நண்பர் முருகேசன் பற்றி இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. 

“நண்பரே! நீங்கள் எங்கிருந்தாலும், சகல சவுகரியங்களோடு, நலமாய், வளமாய் வாழ வேண்டும் என்பதுதான் எனது தீராத ஆசை. கடவுள் என்ற ஒருவன் உண்மையிலேயே இருந்தால், இனி…. ஒரேயொரு முறை உங்களைச் சந்தித்து, மனமாற கட்டியணைத்து…. முத்தமிட்டு நாம் இருவரும் ஒன்றாய்…. ஒரே உணவு விடுதியில் சமமாய் அமர்ந்து…. வயிறார சாப்பிடும் வரம் ஒன்று வேண்டும்….. அந்த வாய்ப்பை எனக்குத் தருவீர்களா?…. அதுவே எனது தீராத ஆசை. முருகேசா….. நீங்கள் எங்கேயோ நலமாக இருக்கிறீர்கள் என்பது மட்டும் எனக்குள் தெளிவாய்த் தெரிகிறது. நண்பா…. ம்ம்….ப்ச்ச்…. நான் இழுத்து விடும் பெருமூச்சு என் நண்பனுக்கு அவசியம் கேட்கும்….. நீ வாழ்க! நலமோடும், வளமோடும் வாழ்க!! இனி அடுத்த முறை செல்லும்போது குறைந்த பட்சம் அந்தக் கருவ மரத்தைத் தவறாது கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றுவதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

‘கருவமரம் பஸ் ஸ்டாப் எந்திரிச்சு வாங்க….. போலாம் ரைட்……’ இன்னும் அந்தக் குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது…..

- நவநீ

நன்றி : திண்ணை

February 23, 2012

"பனித்துளி" திரைப்படத்தில் நான் எழுதிய 'சல்சா' இசைப் பாடல் !!

நண்பர்களே! விரைவில் வெளிவர இருக்கும் பனித்துளி திரைப்படத்தின் பாடல்களை கீழுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். இதில் ஐந்தாவதாக உள்ள "பசியா தூக்கமா" என்ற சல்சா இசையில் அமைந்த பாடல் நான் எழுதியது. நண்பர்கள் கேட்டு, ரசித்து தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள். இடையிடையே வரும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் நண்பர்கள் மன்னிக்க :) கதையின் சூழல் கருதி தவிர்க்க இயலாமல் எழுத வேண்டிய கட்டாயம். நண்பர்களின் புரிதலுக்கு நன்றி!! தொடர்ந்து சிறந்த பாடல்களை தருவேன் என்று கூறி பாடலை ரசித்தமைக்கு நன்றியையும் முன்கூட்டியே தெரிவிக்கிறேன். நன்றி!!

இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளவும். http://mp3.tamilwire.com/panithuli-2012.html

December 18, 2011

"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" : கலெக்டர் சகாயம்

"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" என தான் பதிலெழுதிய சுவாரசியமான தகவல்களை ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் தெரிவித்தார். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது :

"அனைத்து துறைகளிலும் தாய் மொழியாம் தமிழை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்பட்ட கருத்துக்களை நீங்கள் அனைவரும் உங்கள் அலுவலகத்தில் களத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கருதுவதில் நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மைதான் இடர்பாடாக இருக்கிறது. தமிழ் மொழி பேசுவதால் நமக்குள் நாமே தாழ்வானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் அகற்ற வேண்டும்.

எந்தவொரு பொருளும் தொலைவில் இருக்கின்ற வரைதான் அதன் மேல் நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும். எப்பொழுது அந்தப் பொருள் நமது கைக்குள் வருகிறதோ அப்பொழுது அதன் மேல் உள்ள ஈர்ப்பு போய்விடும். அதற்காகதான் நான் எப்பொழுதும் சொல்வதுண்டு. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மாறாக ஆங்கில அடிமைத்தனத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று!

ஒரு முறை ஒரு கிராமத்தில் சமபந்தி நிகழ்வில் எனக்கு ஒரு அலுவலர் மனு கொடுக்கும் பொழுது மனுவின் இறுதியில் கருப்பையா என்ற தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டிருந்தார். நான் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறேன். யாரோ ஒரு ஆங்கிலேயர் எனக்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார். அவருடைய மனுவைப் பரிசீலிக்க நான் தயாராக இல்லை எனக் கூறிய பொழுது அந்தக் கருப்பையா என்னிடத்தில் வந்து அய்யா நான் தமிழன் தான் என்று சொன்னார்.

நீங்கள் இருப்பது தமிழ்நாட்டில்; பழகுவது தமிழ் மக்களோடு; பிறகு ஏன் உங்கள் கையெழுத்தை மட்டும் ஆங்கிலத்தில் போடுகிறீர்கள். அதை தமிழில் போட்டு கொண்டு வாருங்கள். ஒரு முறை போட்டால் உங்களுக்குப் பழகாது. அதனால் குறைந்தது 50 முறை ஒரு தாளில் போட்டு கொண்டு வாருங்கள் என்று கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார். இந்த நிகழ்வு அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தது. இதை படித்த யாரோ ஒருவர் எனக்கு ஒரு தந்தியை அனுப்பியிருந்தார்.

அதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே, கையெழுத்தைத் தமிழில்தான் போட வேண்டும் என்று சொல்லுவது எங்கள் உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பது போன்ற செயலாகும். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இவ்வளவு மெனக்கட்டு எனக்கு தந்தி அனுப்பியிருந்த அவருக்கு 'ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரத்தைப் பற்றி பேச அருகதை இல்லை' என்று பதில் அனுப்பியிருந்தேன். எதற்கு இதை சொல்லுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஆங்கில மோகம் நம் தமிழ் மக்களிடையே பரவி கிடைக்கிறது.

பல்வேறு மொழிகளை அறிந்திருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினான். ஆனால் ஒரு மொழியைக்கூட உருப்படியாக தெரிந்து கொள்ளாத நாம், நம் தாய் மொழியை விட்டு ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்டவர்களாக ஆங்கில அடிமைகளாக உள்ளோம்.

எனவே, தமிழர்களாகிய நாம் நம்முடைய பழம் பெருமைகளைப் பேசி பேசியே காலங்களைக் கடத்துவதில் பயனில்லை. என்றைக்கு ஆங்கில அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறோமோ அன்று தான் தமிழன் என்ற பெருமை நிலைக்கும். இதற்கு இந்த ஆட்சி மொழி கருத்தரங்கம் நல்ல பாதை வகுக்கும். இந்த நிகழ்ச்சி வெறும் ஆட்சி மொழி கருத்தரங்காக மட்டுமல்லாமல் உங்களுக்குச் சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் களமாக அமைந்திருக்கும். உங்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் எழுதப்படும் கோப்புகளும், தங்களின் கையெழுத்துகளும் இனி தமிழிலேயே அமையும் என்று உறுதியேற்க வேண்டும். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சதவீதம் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி நடைமுறைப்படுத்தப்படும்" என்று கலெக்டர் சகாயம்பேசினார்.

இறுதியில் ஆட்சி மொழியை அலுவலகங்களில் சிறந்த முறையில் பயன்படுத்திய அலுவலர்களுக்குப் பரிசு கேடயமும், பாராட்டுச் சான்றிதழ்களையும், ஆட்சி மொழி கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களுக்குச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர். பெ.சந்திரா, திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி.லெ.கல்யாணசுந்தர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கோ.விசயராகவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர்.கா.பசும்பொன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மாவட்ட ஆட்சியாளரின்ன் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அலிஅக்பர் நன்றியுரையாற்றினார்.

November 02, 2011

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

7 ஆம் அறிவு படம் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். தங்கம் ஆசிரியர் ஷேக் மொய்தீன் அக்டோபர் 26 ஆம் தேதி “படம் எனக்கு பிடித்திருக்கிறது. படத்தை பாராட்டி வரும் தங்கம் இதழில் எழுதுவதாக இருக்கிறோம். நீங்கள் அவசியம் பாருங்கள்” என்றார். சரியென்று ஒருவழியாக குடும்பத்தோடு சென்று பார்த்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் கவின் சொன்னான், “தசாவதாரம் கதையையே எடுத்து இருக்காங்கப்பா. அதுலேயும் ஆரம்பத்துல அந்தக் காலத்து சம்பவம் வரும். இதுலேயும் அது மாதிரிதான். அதுல அமெரிக்காவிலிருந்து, ஒருத்தன் மோசமான கிருமியை தேடி இந்தியாவுக்கு வருவான். இதுல சீனாவுல இருந்து ஒருத்தன் வர்றான்.” என்றான்.

உண்மைதான். தசாவதாரம், வைணவப் பெருமையோடு அய்யங்கார் உயர்வை பேசியது. நேரடியான பார்ப்பனிய கருத்தை அய்யங்கார் Version ஆக காட்டியது. 7 ஆம் அறிவோ, இந்து பார்ப்பனிய சார்பு நிலைக்கு தமிழன் Paint அடித்திருக்கிறது.


தசாவதாரம், 7 ஆம் அறிவு இரண்டும், கதையில் மட்டுமல்ல, பவுத்தம் பற்றிய கருத்துக்களை இருட்டடிப்பு செய்ததிலும் ஒரே மாதிரி இணைந்திருக்கின்றன.
தசாவதாரம், வைணவ கோயில்களை சைவர்கள் இடித்ததாக காட்டியது. ஆனால் வரலாற்றில் பவுத்த கோயில்களை வைணவர்கள் இடித்ததே அதிகம்.
ஸ்ரீ ரங்கநாதனிலிருந்து, காஞ்சிபுரம் அத்தி வரதர், திருமலை கோவிந்தா வரை அந்த சிலைகள் இருக்கும் நிலை, உலகம் முழுக்க புத்தர் சிலைகள் இருக்கும் நிலை.


குறிப்பாக பள்ளிகொண்ட நிலையிருக்கும் புத்தர் சிலை உலகப் புகழ் பெற்றது. அதுதான் ஸ்ரீ ரங்கத்திலிருக்கிறது.

***


போதிதர்மன், புத்தனின் பாதங்களில் சரணடைந்தான். அவன் ஒரு பவுத்தன். போதிதர்மன் தமிழன் என்பதினாலோ சித்த வைத்தியனாகவோ சீனாவிற்கு செல்லவில்லை. புத்தரின் கருத்துக்களை சுமந்து கொண்டுதான் அவன் சீனாவிற்கு சென்றான். போதிதர்மன் தமிழனாக மட்டும் இருந்திருந்தால், காஞ்சிபுரத்தில் அவன் இருந்த தெருவுக்கே தெரிந்திருக்க மாட்டான். பவுத்தனாக இருந்ததினால்தான், அவன் உலகமெங்கும் உள்ள பவுத்த நாடுகளில் கொண்டாடப்பட்டு, இந்து ஜாதி வெறி பவுத்த எதிர்ப்பு மன்னர்களால், தமிழகத்தில், இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்டான். புத்தரை எந்த பிராந்திய, மொழி உணர்வுகளுக்குள் அடக்க முடியும்? அவருக்கு இந்தியாவில் என்ன மரியாதை இருக்கிறது? பிறகு அவரின் சீடனுக்கு மட்டும் என்ன மரியாதை இருக்கும்? நல்லதும் கெட்டதும் புத்தருக்கு என்ன நேர்ததோ அதுவே அவர் சீடர்களுக்கும் நேர்ந்தது.


போதிதர்மனிடம் பவுத்தத்தை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமில்லை. ஆக, அவன் தமிழனல்ல. பவுத்தன்.


ஆனால், 7 ஆம் அறிவு பவுத்ததிடமிருந்து அவனை பிரித்து, தமிழனாக அடையாளப்படுத்துகிறது. சிக்கல் அதிலிருந்தே, அதனாலேயே துவங்குகிறது.
தமிழன் என்பதற்கு மொழியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லுபடியான அடையாளங்கள் இல்லை. அதனால்தான் இந்து அடையாளங்களை எல்லாம் தமிழன் அடையாளமாக காட்ட வேண்டிய மோசடியும் அறியாமையும் இணைந்து, 7 ஆம் அறிவாக அவதாரம் எடுத்திருக்கிறது.


“இன்னைக்கு வந்திருக்கிற கடிகாரம் என்னங்க நேரம் காட்டுது, ஒவ்வொன்னும் ஒவ்வொரு நேரம் காட்டுது. எங்க பாட்டி சூரிய வெளிச்சத்த வைச்சே சரியான டைம் சொல்லுவாங்க. துல்லியமா இருக்கும். அதாங்க நம்ம தமிழனோட அறிவியல்” என்று சுவிஸ்லிருந்து வாங்கிய, கருணை கிழங்கு சைசு கடிகாரத்தை கையில கட்டிக்கொண்டு பேசுகிற ஒரு ……… மாதிரி,
இந்த படத்துலேயும் வாழ்க்கையை நவீன அறிவியல் வளர்ச்சியின் மீது வசதியாக வைத்துக் கொண்டு, வாயலேயே வடை சுடுகிற வசனங்கள் நிறைய இருக்கு.


“நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வீரத்தையும நாகரீகத்தையும் இந்த உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தாங்களே அவுங்கதான் உண்மையான தமிழர்கள்” என்று வசனம் பேசிவிட்டு, பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’ என்று தமிழனின் பெருமையாக பேசுகிறது. ஆரிய பட்டா தமிழனா? பெயரிலேயே ஆரிய என்று இருக்கிறது.


பட்டறிவுக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்னவென்று சொல்வது? நல்லா.. வருது.. சொன்னா அசிங்கமாயிடும்.


நவீன தொடர்பு சாதனங்களின் உச்சமான இணையத்தில், Face Book ல் ஜாதி பெருமை பேசுகிற படித்த ஒருவனைப் போல், கிராபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தமிழனின் பெருமையாக இந்துப் பெருமை பேசுகிறது 7 ஆம் அறிவு.

(எப்படியோ சிரமப்பட்டு சினிமாகாரனா ஆயிடுறாங்க. பிறகு கருத்து கந்தசாமியா மாறி கண்டத சொல்லி நம்ம தாலிய அறுக்குறாய்ங்க. இருக்குற முக்கியமான வேலையெல்லாம் உட்டுட்டு இந்த அக்கப்போருக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தொலைக்க வேண்டியதா இருக்கு.)


நம்ம ஊர்ல சண்டைன்னு வந்துட்டா மண்ண வாரி தூத்துறதுதான் வழக்கம். அதையே கிராபிக்ஸ்ல, அப்படியே புழுதிய கிளப்பி போதிதர்மன் எதிரி மேலே குப்பையை வாரி அடிப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். இந்த முறையை சென்னை Corporation க்கு சொல்லிக் கொடுத்தா, சென்னையாவது சுத்தமாகும்.
கொடிய தொற்று நோயிலிருந்து சீன மக்களை காப்பாற்றுவதற்காக போதி தர்மன் சீனாவிற்கு போனாராம்.


ஆனால், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60 வயதை தாண்டியது.


அதுபோல், சீன மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்தியது, போதிதர்மனின் குங்பூ கலையல்ல. மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே.


‘மனிதர்களை கொன்று நரபலி கொடுக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்தபோது, நாம் கலைகள் பல வற்றி்லும் மருத்துவம்…’ என்று பெருமை பேசுகிறது படம்.


போன நூற்றாண்டுவரை பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் உயிரற்ற கணவனின் உடலோடு, ஒன்றாக வைத்துக் கொளுத்திய இந்து சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி இந்த ‘பெருமையை’ கூச்சமில்லாமல் எழுத முடிந்தது?


ஹாலிவுட் படங்களை பார்த்து, வில்லனுக்கு கிறிஸ்துவ பெயர்களை வைக்கிற தமிழ் பட இயக்குநர்கள், கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள். அதுவும் விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.


இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்.


‘ஊழல் விஞ்ஞானியாக வருகிறவருக்கு பெயர், ரங்கராஜன்தானே. அது பிராமண பெயர்தானே’ என்று சிலர் பதில் சொல்லலாம். அது சரி, தமிழை குரங்கு என்று சொன்னவர் பெயர் நெல்சன். உளுந்தூர்பேட்டை ஊரு. அவரைத்தான் மிக அசிங்கமான வார்த்தையால் சுபா சீனிவாசன் திட்டுவார்.
தமிழுக்கு எதிராக கருத்து சொன்னவர் நெல்சன் என்கிற கிறித்துவ குறியீட்டோடு, படத்தின் கடைசியில் ‘மதம் மாற்றத்தினால் நம் அடையாளத்தை அழித்து விட்டார்கள்’ என்ற அறிவுரையை பொறுத்திப் பார்த்தால் புரியும். ஆனால், போதிதர்மனின் சிறப்பே அவர் புவுத்தனாக மதம் மாறியதுதான்.


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக உருவானதற்கு அவர் குடும்பத்தின் கிறித்துவ மதமாற்றம் ஒரு முக்கியக் காரணம். கிறித்துவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் இசை துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கிறித்துவ மதம் எந்த வகையில் தமிழனின் அடையாளத்தை மறைத்தது.
(பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அதிக சத்தத்தோடு சிரமப்படுத்திட்டாரு. பாடல்களில் இளைராஜா சாயில் அமைந்த, எம்மா..எம்மா.. காதல் பொன்னம்மா… பாடல், அபூர்வசகோதரர்கள் படத்தில் வந்த ‘உன்ன நினைச்சு பாட்டு படிச்சேன்..தங்கமே..’ என்ற பாடலை நினைவுபடுத்தியது. சூழலும் அந்த படம்போன்றே சர்க்கசில் வேலை செய்பவரின் காதல் தோல்வி. அதற்காகத்தான் அதே எஸ்.பி.பியை பாட வைத்தார்களோ? சீன இசை பாடல், ‘டிவிங்கிள், டிவிங்கள் லிட்டில் ஸ்டார்…’ Rhymes யை நினைவுட்டியது.)


“நம்முடைய வீரமும், பெருமையும் நமக்கு தெரியக்கூடாது என்பதினால், நம்ம ஆண்ட ஒவ்வொருத்தரும் அத திட்டமிட்டு மறைச்சிட்டாங்க” என்று வீரமாக பேசுகிறார் போதிதர்மனோட DNA.


சரி, வீரமா இருந்த நம்மள ஒருத்தன் மட்டுமா, ‘ஒவ்வொருத்துனும்’ எப்படி அடிமையாக்கி ஆண்டான்? அப்போ நம்ம வீரம் அப்படிங்கறது என்ன?

‘மஞ்சள உடம்புல பூசிக்கிறத மருத்துவம்ன்னு சொல்லிக் கொடுங்க..’ சரி. சொல்லிக் கொடுத்துடலாம். ஆனால், பொம்பளதான் மஞ்சள் தேச்சி குளிக்கனும்னு இருக்கே, அதுக்கு என்ன சொல்றது?

இதுபோக, சீன எதிர்ப்பு, இலங்கை தமிழர்களின் துயரங்களை நினைவூட்டுவது போன்ற வசனம் இவைகள் எல்லாம் புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்களை குறிவைத்து எழுதப்பட்ட எப் எம் ரைட்ஸ் வசனங்களாகத்தான் இருக்கிறது. இலங்கைக்கு 7 ஆம் அறிவு போகும்போது அந்த வசனங்களை தூக்கிட்டுதான் அனுப்புவாங்க. இல்லன்னா சிங்கள அரசு இந்தப் படம் எடுத்தவங்கள சூ…. லேயே சுடுவான்.


ஆனால், இங்கு இருக்கிற இளியச்சவாய் தமிழன்கிட்ட மட்டும் இடஓதுக்கிட்டுக்கு எதிரான வசனங்களோட திரையிடலாம். காரணம் நம்மதான் தமிழர்களாச்சே.


இதுல பெரிய கொடுமை படத்தோட தயாரிப்பாளர் இடஓதுக்கிட்டுகாகவே கட்சி நடத்துகிற திமுக தலைவரோட பேரன். கஷ்டம். யாருக்கு? யாருக்கோ!

***


பல்லவ மன்னர்களை தமிழர்களாக காட்டியிருக்கிறது 7 ஆம் அறிவு. அவர்கள் தமிழர்களா இல்லையா என்கிற பட்டிமன்றம் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் பவுத்தர்கள் இல்லை.


களப்பிரர்கள் என்கிற சமண மற்றும் பவுத்த மன்னர்களின் காலங்கள் முடிந்த பிறகு, துவங்குகிறது பல்லவர்களின் காலம். களப்பிரர்கள் சமணர்கள் என்பதினாலேயே அவர்களின் காலத்தை இருண்ட காலம் என்று, வரலாற்று ரீதியாக பொய் சொல்லப்பட்டது.


அவர்கள் நிச்சயம் தமிழர்கள் இல்லை என்பது மட்டுமல்ல தமிழின் விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.


பல்லவர்களின் பவுத்த வெறுப்பும், சமஸ்கிருத விருப்பும், சைவ, வைணவ சமயங்களுக்கு அவர்கள் விளக்கு பிடித்த காரணத்தினாலும் அவர்களின் ஆட்சி சிறப்பானது, அவர்கள் தமிழர்கள் என்றும் கட்டுக்கதை பரப்பப்பட்டது. பல்லவர் காலத்தில்தான் தேவாரம் எழுதிய திருஞானசம்பந்தனும், திருநாவுக்கரசும் சமண சமயத்தை கொன்று, சாகும் தருவாயில் இருந்த, சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர்.


அதேபோல் வைணவத்திற்கும் பல்லவர்கள் தீவிட்டி பிடித்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்களை ‘மங்களா சாசனம் செய்த திருப்பதிகள்’ என பல்லவர்களால் அழைக்கப்பட்டன. பல கிராமங்கள் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தானமாக தரப்பட்டன.


பவுத்தத் துறவிகளை கேலி செய்து மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் வட மொழியில் எழுதியுள்ளான். எவனெல்லாம் சமண, பவுத்த சமயங்களை தீ வைத்துக் கொளுத்தி, சைவ சமயத்திற்கு தீவிட்டி பிடித்தானோ அவனை எல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள், தேர்ந்த கதாசிரியர்கள் போல், மகா மன்னர்கள் என்றும் பச்சைத் தமிழர்கள் என்றும் கதைகளையே வரலாறாக எழுதினார்கள்.


அப்படித்தான் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன் போன்றவர்கள், ஆனந்த விகடன் கிருஷ்ணமூர்த்தியாக இருந்து பின் கல்கி அவதாரம் எடுத்த, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கு மகா மன்னர்களாக தெரிந்தார்கள். அதனால்தான் பொன்னியன் செல்வனில் ராஜராஜ சோழனையும், சிவகாமி சபதத்தில் நரசிம்ம பல்லவனையும் தமிழனின் சிறந்த மன்னர்களாக சித்தரித்தும் பவுத்த மன்னன் புலிகேசியை வில்லனாகவும் கதை எழுதினார்.


அதன் பொருட்டே இன்றுவரை ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், புலிகேசி மன்னர்களை கோமாளிகளாக சித்தரித்து தொடர்ந்து கார்டூன், ஜோக் என்று நக்கலடிக்கிறார்கள். ஆனந்த விகடனில் பயிற்சி எடுத்த ஒரு இயக்குரும் புலிகேசி மன்னனை கோமாளியாக படம் எடுத்தார்.


கல்கிக்கும், இந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களும் இவரைப்போல் நாவல்கள்தான் எழுதினார்கள்.
டாக்டர் அம்பேத்கர் சொல்வார், ‘இந்தியாவிற்கு ஒரு முறையான வராலாறு என்று சொன்னால், அது பவுத்ததிற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டம்தான்’ என்பார்.


7 ஆம் அறிவில் குறிப்பிடுகிற காலம் முதலாம் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் காலம். ஏறக்குறைய திருநாவுக்கரசு சைவ சமயம் பரப்பிய காலம். அதற்கு பிறகு இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேஸ்வரவர்மன் இவர்களுக்குப் பிறகு இரண்டாம் நரசிம்மவர்மன் காலம். இவன் காலத்தில்தான் தேவாரம் பாடிய சுந்தரர் இந்த மன்னனின் துணையோடு, சமண சமயத்தை சூறையாடி, சைவ சமயத்தை பரப்பிய காலம். இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டதுதான் காஞ்சி கைலாச நாதர் கோயில்.


அந்தக் கோயில் கல்வெட்டுகளில், அவன் தன் வரலாறை முழுக்க சமஸ்கிருதத்தில் பதித்துள்ளான்.


ஆக, 7 ஆம் அறிவில் காட்டப்படுகிற போதிதருமன், பல்லவ ராஜகுமாரன் அல்ல, அவன் பல்லவர்களால் ஒடுக்கபட்ட பவுத்த போதகர். காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த மடத்தில், பயின்றவர். ‘இனி இங்கு பவுத்தத்தை பரப்ப முடியாது’ என்ற காரணத்தால், சீனா சென்றவர். அவரைப் போலவே அவருடன் படித்த போதிருசி என்பவர் ஜப்பான் சென்றார்.


சரி, போதிதர்மனை தமிழன் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அந்த பெருமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரின் உயரிய கருத்துக்களை பின்பற்றுவதற்கு பதில், வள்ளுவரையே ‘தன் ஜாதிக்காரர்’ என்று எல்லா ஜாதிக்காரனும் உரிமை கொண்டாடுகிறான்.


இப்படி ஜாதி வெறி பிடித்த படித்த தமிழர்களிடம், போதிதர்மனை பரிந்துரைப்பதின் மூலம், இனி போதிதர்மனையும் தங்கள் ஜாதிக்காரராகத்தான் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் தமிழின உணர்வு, ஜாதி உணர்வில்தானே முடிகிறது.


***


இந்தப் படத்தில், நாடு கெட்டுபோவதற்கான மூன்று முக்கிய காரணங்களாக சொல்லபடுவதில் முதல் காரணம் Reservations. இடஓதுக்கீடு. எனக்கும் கூட அப்படித்தான் தோணுது.


தந்தை பெரியார் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, கல்வியில் இடஓதுக்கீடும் கிராமப்புற பள்ளிக்கூடமும் கொண்டு வருவதற்கு பாடுபட்டார்.


ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமூகத்திலிருந்து படித்த வந்த சிலர், சினிமாகக்காரனாக மாறி இப்படி சமூகத்திற்கும், ஒடுக்கபட்ட மக்களுக்கும் எதிராக வாயில வர்றத எல்லாம் வசனமா எழுதிகிட்டு இருக்காங்க. இதுக்கா இவுங்க படிச்சது?


இதுக்கு இவுங்க பெசமா ஆடு, மாடே மேய்ச்சிருக்கலாம். அதுவே இவர்கள் எடுக்கிற சினிமாவை விட மேன்மையானது. சமூகத்திற்கு பயனுள்ளது.


வே.மதிமாறன்

October 28, 2011

மீண்டும் நெருக்கடியில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" : படம் வெளியிடத் தடை!


மீண்டும் நெருக்கடியில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" : படம் வெளியிடத் தடை! இயக்குனர் வடிவுடையான் இயக்கி, கரண், அஞ்சலி நடிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழக கேரள எல்லையைச் சுற்றி நடைபெற்ற உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளுக்கும், படப்பிடிப்பில் அடிதடி, தகராறு போன்றவற்றிற்கும் குறைவில்லை என்றே கூறலாம். கிட்டத்தட்ட தீபாவளிக்குப் பிறகு ஓரிரு வாரங்களில் படம் வெளியிடப்படும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் விழுந்திருக்கிறது இன்னொரு அதிர்ச்சி செய்தி. இப்படத்தினை திரையிட விடாமல் தடை வாங்குவோம் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் மட்டுமின்றி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவிக்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக வரும் திங்களன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர் ஒரு தரப்பினர். மேலும், படம் வெளியிடுவதற்கு முன்னர் இந்தப்படத்தினை எங்களிடம் திரையிட்டுக் காண்பிக்கவேண்டும், அதன் பின்னரே படம் வெளியிடப்படவேண்டும் என்று 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' பட இயக்குனர் வி.சி.வடிவுடையான் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிற்கு "லைன் பால் அசோஸியேட்ஸ்" (Line Ball Associates) என்ற தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டிஸில் கூறப்பட்டிருப்பதாவது : 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் முழுக்க முழுக்க கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறினாலும்,







அந்தப்படத்தில் வரும் சம்பவங்களும், காட்சிகளும் அந்தப் பகுதியைக் கொச்சைப் படுத்தும் விதமாகவும், வரலாற்றுச் சம்பவங்களுக்கு முன்னுக்குப் பின் முரணாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்தப் படம் கண்டிப்பாக எங்கள் பகுதி மக்களின் மனநிலையையும், கெளரவத்தையும் பெருமளவில் பாதித்து மன உளைச்சலுக்கு உட்படுத்தும். மேலும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக மாறக்கூடும் என்றும் அஞ்சுகிறோம். எனவே, இந்தப்படத்தினை வெளியிடாமல் உடனடியாக நிறுத்தி, படத்தினை திரையிடுவதற்கு முன் எங்கள் மனுதாரர்களிடம் திரையிட்டுக் காண்பித்து, மேற்கண்டவாறு படத்தில் எதுவும் தவறுதலாகச் சித்தரிக்கப்படவில்லை என்று எமது மனுதாரர்கள் உறுதியளிக்கும் பட்சத்தில் படத்தினை வெளியிடலாம். மீறி படத்தினை வெளியிட்டால் நாங்கள் படத்தினை வெளியிடத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்'. இது சம்பந்தமாக நோட்டிஸ் கிடைத்த மூன்று தினங்களுக்குள்ளாக எங்களுக்கு பதிலளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் திங்களன்று நடைபெறப்போகும் ஆர்ப்பாட்டத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


என்ன வடிவு சார்..... பாடர்னாலே.... பிரச்சினைதான்.


படத்திற்கு தடையா? அல்லது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு விடையா? நீங்கதான் சொல்லணும்.

July 05, 2011

"தம்பி வெட்டோத்தி சுந்தரம்" "பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

வணக்கம் அன்புத் தோழமைகளே! எனது பாசத்திற்குரிய நண்பரும், இயக்குனருமான V.C.வடிவுடையான் இயக்கி, கரண், அஞ்சலி, பாலாசிங், கஞ்சா கருப்பு கூடவே :) நானும் நடித்துள்ள "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" திரைப்படத்தின் "பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா" வரும் 16.07.2011 அன்று மாலை 7.00 மணியளவில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற இருப்பதால் எனது அன்பிற்கினிய நண்பர்களனைவரையும், தங்களின் குடும்பத்தாருடனும், நண்ப - நண்பிகளுடனும் வந்திருந்து இப்படக்குழுவிருக்கும், இப்படத்தின் இமாலய வெற்றிக்கும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். அனுமதி இலவசம்.... நன்றி!!