December 12, 2007

சரண்யா பாக்யராஜ்

இன்றைய குறள்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஐ.ஐ.எம்- (IIM)மின் ஊழல்

தினம் தினம் பேப்பர்களில் வருகிற செய்திகளைப் பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. நிர்வாகப் படிப்பான M.B.A. பயிற்சி தரும் உயர் கல்வி நிறூவனங்களில் (Indian Institute of Management) நுழைவுத் தேர்வில் மாணவர்களுக்குப் பதிலாக கெட்டிக்காரர்களை டம்மியாக அமர்த்தித் தர ஏஜென்ஸிகள் இருக்கின்றனவாம். பீஹார், உ.பி. மாநிலங்களில். இறுதித் தேர்வுக்கும் ஏற்பாடு செய்து விடுவார்கள் போல. இந்த உயர் படிப்பு “படித்து” வெளி வரப்போகும் மாணவர்கள்தாம் எதிர்காலத்தில் நிர்வாகிகளாக உயர் பதவிகளில் அமரப்போகிறார்கள். ஏற்கெனவே, நமது அமைப்புகளில் நேர்மை கொடி கட்டிப் பறக்கிறது. இனி கேட்கவே வேண்டாம்

இந்தியாவின் வேலை செய்திறன் பற்றாக்குறை குறித்த சந்திப்பு

இந்தியாவின் வேலை செய்திறன்களில் ஏற்பட்டு வரும் பற்றாக்குறை பிரச்சினைகள் குறித்து இந்தியாவின் அரசியல் தலைவர்களும், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று, இந்தியத் தலைநகர் புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய தொழில் துறையின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கலந்துரையாடலில் பேசிய பலரும் கல்வி இன்மையும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமையுமே இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்று கருத்து தெரிவித்தனர். 2012 ஆண்டில், இந்தியாவின் பணியாளர் பற்றாக்குறையை நிறைவு செய்ய வேண்டுமானால், ஐந்து லட்சம் பொறியாளர்களும், ஐந்து லட்சம் மருத்துவர்களும் தேவைப்படுவார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பழமையான தொழிலாளர் நல சட்டங்கள் பாரதூரமான அளவில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தொழிலதிபர்கள் கோருவதாக, தில்லியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்

December 11, 2007

இன்றைய குறள்

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்

அறத்துப்பால் : புறங்கூறாமை

ஆண் குழந்தை வேண்டுமா அல்லது பெண் குழந்தை வேண்டுமா?

"சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது"

பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானியை பா.ஜ.க அறிவித்தது

இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்து வரக்கூடிய தேர்தலில், பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக எல். கே. அத்வானி அவர்களை அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2009 ஆம் ஆண்டிலேயே நடக்கவுள்ள இன்றைய சூழ்நிலையில், இந்த அவசர அறிவிப்பு ஏன் என்ற கேள்வி இந்தியாவில் பலதரப்பாலும் எழுப்பப்பட்டுள்ளது. அதேவேளை குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி அவர்கள் பெரும் வெற்றியைப் பெறும் தருணத்தில், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தனது பெயரை அறிவிக்குமாறு அவர் கோரலாம் என்ற சந்தேகத்திலேயே, அதற்கு முன்னதாக இப்படியான அறிவிப்பு வந்துள்ளதாகவும் சில தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால், அத்வானி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை, மூத்த பத்திரிகையளரான சோ. இராமசாமி வரவேற்றுள்ளார். அதேவேளை அரசாங்கம் எதிர்க்கொள்ளும் நிலைமைகள் காரணமாக, ஆளும் காங்கிரஸ் கட்சியே முன்கூட்டியே தேர்தலை அறிவிக்கும் நிலையும் உருவாகலாம், என்று கூறிய சோ அவர்கள், அதனாலேயே இந்த அறிவிப்பை பா.ஜ.க முன்கூட்டியே வெளியிட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த விடயம் குறித்த சோ அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

மின்சார பற்றாக்குறை விவகாரம்: பாமக - திமுக முறுகல்

திமுக-பாமக தலைவர்கள்தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை, பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரை மட்டுமன்றி, அரசியல் கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளது. தமிழக மின்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடலூர் மாவட்டம் தியாகவள்ளி பகுதியில் தனியார் மின் நிறுவனத்தின் சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையம் தொடர்பாக திமுக – பாமக இடையே சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஆர்க்காடு வீராசாமி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

மலேசியத் தமிழர்களின் போராட்டம் தேவையா?

December 10, 2007

இலங்கை

மு.க.ஸ்டாலின் முதல்வராவாரா?

இன்றைய குறள்

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு

அறத்துப்பால் : புறங்கூறாமை

சரண்யா பாக்யராஜ்

கிசு கிசு

எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜனின் 80-வது பிறந்த நாள் விழாவில் விழுந்த கிசு கிசு. ரா.கி.ர.விடம் யார் வேலை கேட்டு வந்தாலும் முதலில் அவர்களது பெயரைக் கேட்பாராம். இப்படித்தான் ஒருவர் தனது பெயர் ரங்கராஜன் என்றதும் ரா.கி. "முதல்ல உன் பெயரை மாத்துப்பா, அப்புறம் நீ நல்ல கதை எழுதி பேர் வாங்கிடுவ, அது நான்தான்னு எல்லாரும் என்னைப் பாராட்டுவாங்க" என்றாராம். அந்த ரங்கராஜனும் திருமணத்திற்குப் பிறகு பெயரை மாற்றிக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தாராம். அவர் வேறு யாருமில்லை பிரபல எழுத்தாளர் சுஜாதாதான்

சர்வதேச சமூகம் குறித்து பாகிஸ்தான் நீதிபதி வருத்தம்

பாகிஸ்தானில் நிலவும் நிலைமைகளைச் சரி செய்யப் போதுமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ளவில்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் விமர்சித்துள்ளார். அதிபர் முஷாரஃப் அவர்களால் நெருக்கடி நிலைச் சட்டத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதியான ராணா பகவான் தாஸ் அவர்களே, பிபிசிக்கு அளித்த அபூர்வமான பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார். தாமும், தம்முடன் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளும் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு, சட்டத்தின் மாட்சிமை மீண்டும் அமல்படுத்தப்படாவிட்டால், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமானதாகவும் இருக்காது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். எந்தவிதமான சட்ட முகாந்திரமும் இல்லாமல், தாமும் தமது சக நீதிபதிகளும் ஏறக்குறைய வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அமைதிக்கான நோபல் பரிசு அல்கோருக்கு வழங்கப்பட்டது

அல் கோர் உலக பருவநிலை மாற்றம் குறித்த நாடுகள் இடையிலான ஐ.நா.மன்ற செயற்குழுவான ஐ.பி.சி.சி.யும் முன்னாள் அமெரிக்கத் துணையதிபர் அல் கோர் அவர்களும் ஒஸ்லோவில் நடந்த வைபவம் ஒன்றில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டனர். புவி மொத்தத்துக்குமான ஒரு நெருக்கடி நிலையை உலகம் எதிர்கொள்கிறது என்று அல்கோர் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க அமெரிக்காவும் சீனாவும் மிக தைரியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஒருவரின் செயற்பாட்டை குறிப்பிட்டு மற்றவர் சாக்கு சொல்வதை இருநாடுகளும் நிறுத்த வேண்டும் என்றும் அல்கோர் குறிப்பிட்டுள்ளார்

December 09, 2007

"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம் 2

நான் நிலாச்சாரலுக்காக எடுத்த செவ்வி : முதல்பகுதி கடந்த வாரம் பிரசுரமானது நினைவிருக்கலாம். இரண்டுக்குமே இடது பக்கதில் இணைப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

தங்களின் படைப்பால் இதுவரை ஏதாவது சர்ச்சை அல்லது சுவாரஸ்யமான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

கவிதையைப் பரிசோதனைக்கு உரிய ஒன்றாக நான் பார்த்து வருகிறேன். என் பள்ளி நாள்களில் என் பள்ளி ஆசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் ஏற்பாட்டில் நடந்த கவிதைப் பட்டிமன்றம் ஒன்றுக்கு நடுவராக இருந்தேன். 1995-ல் கின்னஸ் சாதனைக்காகக் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை 48 மணிநேரத் தொடர் கவியரங்கம் ஒன்றை நடத்தியது. அதில் சுமார் 30 கவிஞர்கள், ஒருவர் மாற்றி ஒருவர் கவிதை வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதில் நானும் கலந்துகொண்டேன். கவிதையை வடிவ ரீதியாகப் பல சோதனைகளுக்கு உள்ளாக்கியுள்ளேன். சித்திரக் கவிதைகள் எழுதியது அப்படித்தான். தலைகீழாகப் படித்தால் அதே பாடல் வரும் மாலை மாற்று, உதடு ஒட்டாமல் பாடும் நீரோட்டகம், உதடு ஒட்டிப் பாடும் ஒட்டியம், வரிகள் வளைந்து வளைந்து செல்லும் கோமூத்திரி எனப் பல சித்திரக் கவிகள் படைத்துள்ளேன். பலராலும் அவற்றை எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. நானே விளக்கம் அளிக்க வேண்டிய நிலை இருந்தது. பிறகு, அத்தகைய கவிதைகளைப் படைப்பதில்லை. பெண் கவிஞர்களின் படைப்புகள் பற்றிய என் பார்வையைக் 'கவிதாயினி' என்ற தலைப்பில் அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தேன். அப்போது, யோனி, முலை எனப் பாலியல் சொற்களைப் பயன்படுத்திக் கவிதை புனைவது குறித்துக் கடும் விமர்சனம் இருந்தது. ஆனால், அது, படைப்பாளியின் உரிமை. அது, படைப்புக்குத் தேவையாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும் என அந்தப் போக்கை நான் ஆதரித்து எழுதினேன். அது குறித்துச் சிலர், குறைப்பட்டுக் கொண்டார்கள். இதயம் பேசுகிறது வார இதழில் வயது வந்தவர்களுக்கு மட்டுமான உள்ளடக்கத்தோடு, ஓர் இலவச இணைப்பு அளித்து வந்த நேரம். அதில் நான் சில கவிதைகள் எழுதினேன். 'இல்லை, ஆனால் இருக்கு!' என்ற கவிதைக்கு அமோக வரவேற்பு கிட்டியது. அது, கிளாசிக்கலாக இருந்தது என்று சிலர், வெகு காலத்திற்குப் பிறகும் பாராட்டினார்கள். ஆனால், 'அந்த' மாதிரி கவிதைகளை எப்படி எழுதலாம்.... எனக் கண்டனங்களும் எழுந்தன. எழுத்தாளர் மாலனின் திசைகள் மின்னிதழில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் எப்படி இருக்கும்? என்ற கருவில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்ததோடு சாதகமாகவும் பாதகமாகவும் சில கருத்துகளை வைத்தேன். 'அடுத்த 50-ஆவது ஆண்டிற்குள், நான் சொன்னவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்காது போனாலும் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன், அப்போது என் தலையில் முடி இருந்தால்' என்று முடித்திருந்தேன். கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆயினும் சிலர், நான், எதிர்மறையாகக் கருத்து தெரிவித்ததற்கு வருந்தினார்கள். அந்தக் கட்டுரையில் தமிழ், செம்மொழி அந்தஸ்து பெறும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதன்படியே தமிழ், செம்மொழி ஆகிவிட்டது.


தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், இங்கிலாந்தின் இன்னொரு மாநிலம்தான் தமிழகம் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழகத்தில் ஆங்கிலத் தாக்கம் அதிகம் என்பது ஊரறிந்த உண்மை. தாங்கள் கலப்புத் தமிழில் பேசுவதோடு மட்டுமின்றி, யாரேனும் நல்ல தமிழில் பேசினால், அவரைக் கேலி செய்து, பிழைக்கத் தெரியாத ஆள் என முத்திரை குத்தும் குணம் பலரிடமும் உள்ளது. இது, இரட்டைக் குற்றம். மிகவும் போலித்தனமான ஒரு வாழ்வை இங்கே பலரும் வாழ்கிறார்கள். ஆங்கிலத்திலோ, தமிழிலோ தனித்துப் பேசும் வல்லமை இல்லாமல், இரண்டையும் கலந்து பேசித் திரிகிறார்கள். இது, தமிழனின் மொழியாற்றல் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்றைய சிறுவர்களிடம் பெற்றோர் - ஆசிரியர் - ஊடகங்கள் - சமூகம் என ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தைத் திணித்து வருகிறார்கள். இது, அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழுக்குப் பெரும் இழப்பை அளிக்கும். இங்கிலாந்தின் இன்னொரு மாநிலம்தான் தமிழகம் என்று எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியிருப்பதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்கள் பிரபலமாகும் போது ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகிவிடுகிற வாய்ப்புகள் ஏற்படுகின்றனவே? இன்றைய சூழலில் அண்ணாகண்ணன் எப்படி?

அரசியல் என்பதை நேரிய நிர்வாகம், சீரிய வழிநடத்தல், ஒளிவு மறைவற்ற மக்களாட்சி என உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையில் நான் காண்கிறேன். அத்தகைய அரசியலில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் போலித்தனம், இலஞ்சம், ஊழல், ஊதாரித்தனம், ஏமாற்றுதல், சுரண்டல், இரட்டை நாக்கையும் மிஞ்சி, 20 நாக்குகளுடன் பேசுதல், அதிகார துஷ்பிரயோகம், பாரபட்ச அணுகுமுறை, தீர்க்க தரிசனமற்ற திட்டங்கள், மக்களை மழுங்கடித்து, சாதி - மத - இன உணர்வுகளைத் தூண்டி வாக்கு வேட்டை ஆடுவது என எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலோர் உலவுகிறார்கள். இது குறித்துப் பெரும் கவலையும் துக்கமும் உண்டாகிறது. இதற்கான தீர்வுகள் குறித்துச் சிந்தித்து வருகிறேன். மக்களிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தி, நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். ஓரளவுக்கு என்னைத் தற்காத்துக்கொண்ட பின், பொதுநல ஊழியனாகி, இந்தச் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. என் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குத் தமிழில் மின்னாளுகை என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதன் மூலம் வெளிப்படையான, விரைவான, சிக்கனமான ஆட்சி நடத்த வாய்ப்பு உண்டு.


தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும் என்று பதிவிட்டிருந்தீர்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு வித்திட்டது எது? .....

இன்றைய குறள்

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்

கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று
அறத்துப்பால் : புறங்கூறாமை

சிறந்த வணிகத்தலைவருக்கான விருது - திரு.சையது முகமது சலாஹீதின்

"முழுச் செய்தியையும் படிக்க தலைப்பைக் க்ளிக் செய்யவும்"

வார்ப்பில் ..... எனது கவிதை

1.விஞ்ஞானம் தோற்கிறது!

என்னவள்
உள்ளிழுத்து வெளிவிடும்
மூச்சுக்காற்று
கார்பன் டை ஆக்ஸைடாம்
யார் சொன்னது?
பிறகெப்படி நான்
இத்தனை நாள் உயிரோடு!?

2.தண்ணீர்ப் பஞ்சம்

என்னவளே!
உன் புருவங்களின்
ஓரத்தில் பொதிந்து நிற்கும்
அந்த வியர்வை
முத்துக்களைச் சற்றே
உன் சுண்டுவிரலால்
சுழற்றிவிடு!
தண்ணீர்ப் பஞ்சமாவது தீரட்டும்
இந்தத் தமிழகத்தில்!

3.அவளுக்காக!

என்
இதயத்துடிப்பைச் சற்றே
நிறுத்திவைத்தேன்
என்னவள்
எந்தன் மார்பில்
முகம்புதைத்தபோது!
அவள் தூக்கம்
கலைந்துவிடக்கூடாதென்பதற்காக!

சென்னை நவின்,
இர்வைன், கலிபோர்னியா (USA)

http://www.vaarppu.com/view.php?poem_id=935