October 16, 2015

புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது

அன்பிற்கினிய எம் தமிழுறவுகளே ! தோழர்களே !! வணக்கம். கடந்த (அக்டோபர்) 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை நகரமே கலை கட்டியது. ஆம் ! வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015, நான்காம் ஆண்டு திருவிழாவில் புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே, அமெரிக்காவிலிருந்து வந்த எனக்கும், வந்திருந்த தோழர்களுக்கும் மிக்சிறந்த மரியாதை செய்து, அற்புதமான முறையில் விழாவினை ஏற்பாடு செய்திருந்த விழாக்குழுவினருக்கு வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் வலைப்பதிவு தோழர்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு எதிர்வரும் அடுத்த பதிவர் விழாவுக்காகக் காத்திருக்கிறேன். காலையில் விழாவிற்கு வந்த நான் மாலையும் திரும்ப வந்துவிட்டேன். இடையில் சில மணி நேரங்கள் அரங்கில் இருக்க இயலாமைக்கு வருந்துகிறேன். தோழர்கள் என்னை மன்னிக்கவும். காரணம், என் நெருங்கிய தோழர் இல்லத்தில் ஓர் எதிர்பாரா சம்பவம் நிகழ்ந்தமையால் நான் அங்கு விரைந்து செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. எனவே, சில தோழர்களின் அற்புதமான சொற்பொழிவைக் கேட்க இயலவில்லையே என்ற வருத்தத்தை விழாக்குழுவினரின் அற்புதமான மிக நீண்ட காணொளி நிவர்த்தி செய்தது. காலை முதல் விழா முடியும்வரை விழாக்குழுவினரின் சுறுசுறுப்பும், உபசரிப்பும் என்னைத் திக்கு முக்காடச் செய்தது. விழாவில் கலந்து கொள்ள இயலாத தோழர்கள் தயவுசெய்து கீழ் காணும் சுட்டிகளின் மூலம் விழாவினை முழுவதுமாக கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, தயவு செய்து கீழுள்ள  வலைப்பதிவின் வாயிலாக அங்குள்ள கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இன்னொரு தருணத்தில் நாமனைவரும் சந்திப்போம் என்று கூறி விழாக்குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகளை இங்கே சமர்ப்பிக்கிறேன். நன்றி, வணக்கம்.

புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் “எந்தக் குறையும் இல்லை” என்று, வந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!

வலைப்பதிவர்களின் சந்திப்பு நிகழ்வுளுக்கான வலைப்பதிவு முகவரிக்கு அழுத்தவும்

காணொளிகள்

October 13, 2015

திண்ணையில்.... என் "ஒத்தப்பனை"

என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா ...... http://puthu.thinnai.com/?p=30574

October 08, 2015

ஒத்தப்பனை - நவநீ

என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா சுப்பராசா (இப்படித்தான் அவரை அழைப்பார்கள்). நான் அவருடைய பேரனின் மகன், கொள்ளுப்பேரன். அதிகாலையில் நான் கண் விழிக்கும் முன்னரே வயல் காட்டில் கண் விழிக்கும் அவர், நான் பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாய் என்னைக் கட்டியணைத்து, சிவக்கச் சிவக்க வெற்றிலை நிரம்பிய வாயால் என்னை முத்தமிட்டு... "அய்யாடி வாங்க, எங்கப்பென் வாங்க... என்னெப்பெத்தவுக வாங்க..." என்று கொஞ்சிய கையோடு, கட்டி வைத்திருந்த குழி பணியாரங்களை ஒன்று விடாமல் ஊட்டி விடுவார். ஒரு வழியாகப் பணியாரங்கள் முடிந்ததும், என் வீட்டு மைலைப்பசுவின் மடியிலிருக்கும் அசல் பால் இறக்குமதி செய்யப்பட்டு, மிச்ச மீதியுள்ள என் வயிற்றின் காலியிடத்தை 'காப்பி'யாய் கச்சிதம் செய்யும். பிறகு, சுமார் ஆறரை அடி உயரமிருக்கும் என் தாத்தா, என்னைத் தூக்கி, தன் தோள்களின் இருபுறமும் கால்கள் போட வைத்து சுமந்துகொண்டு, "அந்தப் பனமரத்துல யாகுமுத்து இருக்கானான்னு பாருய்யா" என்பார். "ஆமா தாத்தா, இப்பத்தான் மரத்துல ஏறிகிட்டு இருக்காரு"... இது நான். இருவரும்.... இல்லை, இல்லை அவர்மட்டும் அந்த மரத்தை நோக்கி நடக்க ஆரம்பிப்பார். அவர் தோளில் இருந்தபடி நான் பாதை பார்த்து முள், மேடு, பள்ளம் என அவருக்குத் தற்காலிகக் கண்ணாக இருந்து வழி சொல்லுவேன் . அவருக்குச் சற்று தூரப்பார்வை குறைவாதலால் என்னை தினந்தோறும் அந்த மரத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு வழியாக மரத்தடி வந்து சேரவும், யாகுமுத்து என்ற அந்த 'கள்' இறக்கும் கணவான் மரத்திலிருந்து இறங்கவும் சரியாக இருக்கும். பொங்கும் நுரையோடு ததும்பத் ததும்ப பனங்கள்ளை சுரைக்குடுக்கையில் (முற்றி, காயவைத்து, விதைகள் நீக்கப்பட்டு, காம்பு வெட்டப்பட்ட சுரைக்காய்) நிரப்பி, இடுப்பிற்குப் பின்புறம் அது தொங்கும் அழகு, அப்பப்பா... நானும், என் தாத்தாவும் இன்னும் சில என் தாத்தாவின் சிநேகிதர்களும் மரத்தடியில் காத்திருப்போம். உடனே, பக்கத்தில் உள்ள பனங்குட்டிகளில் உள்ள பனை ஓலைகளை வெட்டி, சிறு சிறு பட்டைகள் செய்து, கள்ளில் தற்கொலை செய்துகொண்ட தேனீக்களை வாயால் ஊதி, அகற்றிவிட்டு, அந்த சோமபானமானத்தை பட்டைகளில் ஊற்றி ஒவ்வொருவரும் உரிந்து குடிக்கும் சத்தமும், சுத்தமும், அந்த வாசமும், பாசமும், பறிமாறலும் என் எண்ணம் விட்டு நீங்காமல் இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. 'யாரிடமும் சொல்லக்கூடாது' என்ற என் தாத்தாவின் சத்தியப் பிரமாணத்தோடு, நானும் பலமுறை பனங்கள்ளைச் சுவைத்திருக்கிறேன். 

ஆனாலும், குடிக்கும்போது என் உடம்பு சிலிர்க்கும். திடீரென்று ஒரு வாசனை... சுட்ட உப்புக்கண்டமும், கருவாடும் கட்டி வைத்திருந்த இடுப்பை விட்டு விடுதலை செய்யப்பட்டு கள் பட்டைக்கருகே காத்திருக்கும். பனங்கள், சுட்ட கருவாடு, உப்புக்கண்டம்..... சொர்க்கம்... சுரைக்குடுக்கை சுத்தமாகும்.....

இதோ..... இன்று.... பக்கத்தில், பட்டை பிடிக்க உதவிய பனங்குட்டிகள் ஒத்தப்பனைக்கு இணையாக ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.

இனியொருமுறை அது நடக்குமா? நானும் ஒவ்வொரு முறை என் கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம், என் தாத்தா சிநேகிதர்களோடு அமர்ந்து கள் பருகிய அந்த இடத்தையும், அந்த 'ஒத்தப்பனை'யையும், கள் இறக்கிய யாகுமுத்துவையும் பார்க்கத் தவறுவதில்லை. அந்த ஒத்தப்பனையைக் கட்டியணைக்கும் போதெல்லாம் அது என்னிடம் ஏதோ பேசும்....

என் தாத்தா உயிரோடு இல்லை.... அதனால் என்ன? அதோ..... காற்றில் அசைந்து அசைந்து, என்னைப் பார்த்துக் கையசைத்து.... கம்பீரமாய் காட்சியளிக்கும் என் ஒத்தப்பனை இருக்கிறதே....

 - நவநீ

நல்லா வருவ - தமிழ் குறும்படம்

September 15, 2015

நானும் என் ஈழத்து முருங்கையும்

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி தன் மண்ணைவிட்டு வரும்போது, தன் கொள்ளைப்புறத்தில் பல வருடங்களாய் பாசத்தோடு பார்த்து பார்த்து  வளர்த்த, அந்த முருங்கை மரத்தை மட்டும் விட்டுவர மனம் வருமா என்ன? போரின் உச்சத்தில் உணவுப் பண்டங்கள் வாங்கக் கூட வெளியில் செல்ல இயலாத நாட்களில் தாயாய் தன் குடும்பத்துக்கே உணவளித்தது அந்த முருங்கை உறவுதானே! தன் சொந்த மண்ணைப் பிரிகையில் கண்ணீர் மல்க இரண்டே இரண்டு முருங்கைக் கிளைகளை மட்டும் வெட்டி தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த நம் தொப்புள் கொடி உறவுத் தாயோடு, அந்த முருங்கைக் கிளைகளும் அகதிகளோடு அகதிகளாய் தமிழகம் வந்து சேர்ந்தன.
மண்ணைப் பிரிந்து கடல் கடந்து தப்பி வந்த தம் மக்களோடு மக்களாய், கனத்த மனத்துடன் தானிருக்கும் இராமேஸ்வரம்-மண்டபம் முகாமில் வலியறிந்து, குறிப்பறிந்து, தாயாய் சேவை செய்த செவிலி ஒருத்திக்கு ஒரு முருங்கை உறவை தத்துக்கொடுக்கிறாள் அந்த ஈழத்துத்தாய். அன்போடு பெற்றுக்கொண்ட செவிலித்தாய் அந்தக் கிளையை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தபோதிலும், தம்மால் இயலுமோ இயலாதோ? என்ற ஐயத்தில் "அண்ணன் கை.... ராசி, அவன் கையில் கொடுத்தால் அவன் எப்படியும் ஆளாக்கி/மரமாக்கி விடுவான்" என்ற தன்னம்பிக்கையில் தன் அண்ணனிடம் அன்போடு தருகிறாள். அண்ணன் ஆசை ஆசையாய் அள்ளி அணைத்து அந்த ஈழத்து உறவை நம் மண்ணில் நிரந்தரமாக்குகிறான்.

அபார வளர்ச்சி, அற்புதமான சுவை.... முழுமையாய் வளர்ந்து அந்த அண்ணனை மகிழ்விக்குமுன் அவன் அமெரிக்கா சென்று விடுகிறான். சில வருடங்கள் கழித்து ஒரு கோடையில் வந்தவன் கண்களில்... குளிரூட்டியது. ஓங்கி வளர்ந்து, மென்மையான வாசத்துடன், பூக்களும், காய்களுமாய் நிறைந்து கம்பீரமாய் காட்சியளித்தது அந்த முருங்கை உறவு. அண்ணன் கண்களில் "ஈழம் தந்துவிட்ட அந்த அண்ணன்" கண்களின் ஆனந்தக் கண்ணீர்". கண்கள், மனம், வயிறு எல்லாம் நிறைந்து போனது. சில மாதங்கள் கழித்து உச்சியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த முருங்கை நெத்து (முதிர்ந்த நெற்று) அண்ணனை பார்த்து கைசைத்துக்கொண்டே சலசலவென்ற சத்தத்துடன் காலடியில் வந்து விழுந்தது. அள்ளி அணைத்து முத்தமிட, அந்த நெத்து தந்த சத்தம் 'அம்மா எப்படியிருக்கிறாள், அண்ணன் எங்கிருக்கிறார்' என்று கேட்பதாய் கேட்டது.  
அண்ணன் திரும்பவும் அமெரிக்க பயணத்திற்கு ஆயத்தமாகிறான். கூடவே, அந்த முருங்கை நெத்தையும் எடுத்துச் செல்ல முடிவு செய்கிறான். சட்ட விரோதம் என்பது பற்றியெல்லாம் சற்றும் அவன் சிந்திக்கவில்லை. ஈழத்து முருங்கை இறங்கிய வேகத்தில் அழகான தொட்டிக்குள் அமொிக்க மண்ணோடு ஐக்கியமானது. சிறு வயதில் தன் கொள்ளுத்தாத்தா கையாண்ட உத்தியைப் பயன்படுத்தி அந்த நெத்தை முழுவதுமாக தொட்டிக்குள் புதைத்தான். தனித்தனி விதையை நட்டு வைக்காமல் முழு நெத்தையும் அப்படியே ஆழத்தில் நட்டு வைத்தால் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக, செழிப்பாக வளரும் என்ற தன் தாத்தாவின் உத்திதான் அது. அந்த முருங்கை நெத்தை அண்ணன் அமெரிக்காவின் தன் கொள்ளைப்புறத்தில் நட்டு வைக்க ஆசைதான். ஆனால், அமெரிக்க தட்பவெப்பநிலையில் முருங்கை வளராதென்பதால் தொட்டிக்குள் கட்டாயமாக்கப்பட்டது.

திரும்பவும் தாயகப் பயணம். ஓர் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிகாலை எழுந்ததும் கைப்பேசியை திறக்கையில் கண் கொள்ளாக்காட்சி. மனைவி அனுப்பியிருந்த புகைப்படத்தில் அந்த முருங்கைக் கன்று அவன் கைபேசியில் கண்ணைப் பனி(றி)த்தது. அப்பப்பா.... அந்த சந்தோசத்திற்கு இணையேது. தன் முதல் மகள் பிறந்த தினம் நினைவுக்கு வந்து போனது. இப்படியாக குளிர்காலங்களில் குழந்தைகளோடு குழந்தையாக வீட்டுக்குள்ளும், கோடை காலங்களில் மரங்களோடு மரமாக கொள்ளைப்புறத்தில் மளமளவென்று வளர்ந்தது. ஈழ மண்ணில் பிறந்து இந்திய வம்சாவழியாய் இப்போது அமெரிக்க மண்ணில் எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராய் மாறிப்போன என் முருங்கை உறவை காணும்போதெல்லாம் என் கண்ணில் ஈழம் மலர்ந்துவிட்ட மகிழ்ச்சி. இந்த என் முருங்கை வித்து, நெத்து தரும் அந்த தருணத்திற்குள்ளாவது ஈழம் மலர்ந்து விடுமா? என்ற ஏக்கத்தை எனக்குள்ளிருந்து எடுக்க இயலவில்லைதான். 

கடந்த முறை நான் செல்லும்போது முருங்கைக்கீரையை முழுவதுமாய் பறித்து சுவைத்துவிட எத்தனிக்கையில் மனதுக்குள் எங்கோ ஓர் மூலையில் வலிக்கத்தான் செய்தது. என் மனைவி பறிக்கவே கூடாது என்று தடுத்தும், அவன் வளர்ச்சிக்காக அதை செய்யாமலிருக்க முடியவில்லை. மொத்தமாக குடும்பத்தோடு நின்றுகொண்டு காம்புக்குக்கூட காயம் பட்டுவிடக் கூடாதென்ற கவனத்தில் பக்குவமாய் பறித்தெடுத்த நிமிடங்கள் இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது.

அந்த முருங்கைக்கீரை மொத்தமாய் எங்களது இரத்தத்தில் சங்கமித்தது. மீண்டும் நான் அமெரிக்கா செல்லும்வரை அந்த முருங்கை உறவை அன்போடு கவனிக்க தாயாய் என் மனைவி, தமக்கையராய் என் மகள்கள்....

ஒவ்வொரு முறை அலைபேசும்போதும் மறக்காமல் நலம் விசாரிக்கிறேன். வாரமொரு முறையேனும் வலை முகநேரம்/நேரடி காணொளி செய்கிறேன் (Face Time / Web cam). காத்திரு......

இதோ இரண்டே மாதங்களில் வந்து விடுகிறேன் என் ஈழத்து உறவே.....

ஏக்கத்தோடு உன் அண்ணன்


January 21, 2015

"தொட்டால் தொடரும்" நாளை 23.01.2015 வெள்ளியன்று உலகமெங்கும்...

வணக்கம் உறவுகளே !
" FCS கிரியேஷன்ஸ் துவார் சந்திரசேகர் தயாரிப்பில், இயக்குனர் கேபிள் சங்கரின் இயக்கத்தில் தமன், அருந்ததி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் "தொட்டால் தொடரும்" திரைப்படம் நாளை 23.01.2015 வெள்ளியன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். இந்தப் படத்தில் உங்களின் வற்றாத அன்பிற்கினிய நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து எனதன்பு மிக்க உறவுகளனைவரும் "திரையரங்கிற்கு சென்று" இத்திரைப்படத்தினை பார்த்து படக்குழுவினர் அனைவருக்கும் உங்களின் மேலான ஒத்துழைப்பினை நல்குமாறு வேண்டி நிற்கிறேன்.

நன்றியோடும் வற்றாத அன்போடும் 
உங்கள் - நவின் சீத்தாராமன் smile emoticon

"முன்னோட்டங்கள் உங்கள் பார்வைக்கு"


January 02, 2015

என் மனமார்ந்த 2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)

வணக்கம் என் உறவுகளே! தங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)
 
தங்களின் அற்புதமான நேரத்திற்கு முதற்கண் என் நன்றி. காரணம், இந்த பதிவு சற்று நீளமானது.

இதுவரை நாம் பல வருடங்களை கடந்து வந்திருப்போம். ஆனால், ஒவ்வொருவருக்கும் தாம் கடந்து வந்த வருடங்களுள் மிக முக்கியமான, சுவாரஸ்யமான, மைல் கல்லாய், மனதில் குதூகலமாய் அல்லது வலி நிறைந்ததாய்.... இப்படி எப்படியாயினும் மறக்கவியலா சில வருடங்கள் மனதில் வந்து செல்லும். அப்படி என்னில் வந்து செல்லும் வருடங்களுள் மிக முக்கியமானதொரு வருடம், இதோ இன்னும் சில மணித்தியாலங்களில் நம்மைவிட்டு பிரியப்போகும் இந்த 2014. எத்தனை தவம் இருந்தாலும் இனி திரும்பக்கிடைக்குமா இந்த 2014 ? என் ஆத்மார்த்த முத்தங்களுடன் உன்னைவிட்டுப் பிரியும் இந்த தருணத்தில், என் கண்கள் பணிப்பதை என்னால் மறைக்க முடியவில்லை. போய் வா.... 2014.

உன்னையும், உன்னோடு என்னில் பயணித்த என் அன்பான உறவுகளையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

விமான விபரீதங்கள் அதிகம் நிறைந்தது இந்த 2014, நான் அடிக்கடி விமானப் பயணம் செல்வதாலோ என்னவோ அதன் வலி சற்று மிகுதியாகவே என்னை பாதித்தது. இனி வரும் ஆண்டிலாவது அப்படி நடக்காதிருக்க பிரார்த்திப்போம்.

------------
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். உடலளவில் இங்கிருந்தாலும், உள்ளத்தளவில் என் மண்ணில் மாத்திரமே வசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை ஒளிவு, மறைவின்றி இங்கே பதிவு செய்கிறேன். இங்கு பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், அமெரிக்காவில் படமாக்கப்படும், நம் தமிழ் உட்பட இந்திய திரைப்படங்களில் தொடர்ந்து பணி புரிந்தாலும், எனக்குள் தீராத பசியொன்று இருந்தது. அது, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். சென்னையிலேயே இருந்து முயற்சிக்க வேண்டும். தேவைப்படும்பொழுது மாத்திரம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த இரண்டு வருடங்களாக நான் சென்னையில் தங்கி, நடிக்கும் வாய்ப்புக்காக முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கொருமுறை அமெரிக்கா சென்று வருவதும், அதன் பொருட்டு ஆகும் பொருட்செலவும், மனைவி மற்றும் பத்து வயதுகூட நிரம்பாத குழந்தைகளைப் பிரிந்திருப்பதால் அவர்களின் மனநிலை, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டும், பணி செய்துகொண்டும், எனக்குத் தேவையான பொருளாதார உதவிகளை செய்துகொண்டும் அன்றாடம் மன அழுத்தத்திலும், பணிப்பளுவிலும் வாழ்வை நகர்த்திக் கொண்டுள்ள என் மனைவியின் மனநிலை..... இப்படி சிக்கல்களையும், சிரமங்களையும், சச்சரவுகளையும்... அடுக்கிக்கொண்டே போகலாம்...

இப்படி இவ்வளவு சுமைகளுடன் நான் தமிழ் சினிமாவில் நடித்தேதான் ஆக வேண்டுமா? பேசாமல் அமெரிக்காவில் இருந்தால் குறைந்த பட்சம் மாதமொன்றுக்கு சுமார் 5000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கலாமே?

ம்ம்.... ஆக... "தமிழ் சினிமாவில் நடித்தே தீருவேன்" ஒரு வழியாக என் குடும்பத்தினரை தேற்றி, ஒரு தீர்க்கமான முடிவெடுத்து சென்னை புறப்படுகிறேன். என் கையில் வெறும் 90 நாட்களேயான என் குழந்தை. காரணம், ஏற்கனவே இருக்கும் என் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதே என் மனைவிக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும்போது நடுநிசி, 90 நாட்கள் சரியாக நிறைவடைந்திருந்தது. நான் 90 நாட்களே நிரம்பிய குழந்தையோடு சென்னை வருவேன் என்பது என் அம்மா உட்பட யாருக்குமே தெரியாது. பிறகு, நாட்கள் செல்லச் செல்ல.... என்னோடு பயணித்த என் நெருங்கிய நண்பர்களுக்கு மாத்திரம் தெரிய வந்தது. அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான்.

"நீ என்ன லூசா...... நீதான், திமிரெடுத்து, சினிமாவில் நடிச்சு, கிழிச்சே தீருவேன்னு வந்திருக்கே, பாவம் அந்த கொழந்தை, என்னடா பண்ணுச்சு?"

அமெரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்த என் குழந்தையைக் ஒரு வழியாக மீள் குடியமர்த்தி சென்னைவாசியாக்க முயற்சிக்கையில், கிராமத்தில் இருக்கும் என் அம்மாவையும் கூட வைத்துக்கொண்டால், எனக்கு வாய்ப்புத் தேட வசதியாய் இருக்குமே என ஒரு நப்பாசையில் என் அம்மாவை சென்னை அழைத்து வந்தேன். சுமார் பத்து நாட்கள் கடந்தது. ஒரு வழியாக என் அம்மாவுக்கும், குழந்தைக்கும் தீவிர பயிற்சி கொடுத்து, எல்லாம் கூடி வரும் வேளையில்...  என் அம்மா,

"தென்னம்பிள்ளைக்கி நம்மள மாதிரி ஒழுங்கா யாரும் தண்ணி ஊத்த மாட்டங்கையா, 20 முட்டையோட கோழிய அடை வச்சுட்டு வந்து இன்னிக்கோட 22 நாளாச்சு, இன்னும் அஞ்சாறு நாள்ல அம்புட்டும் பொறிச்சிரும், ஆளில்லாட்டி அம்புட்டு புறாவையும் நாய் புடிச்சிட்டு போயிரும், கோழிய சாயந்தரத்துல டயத்துக்கு புடிச்சு கோழிக்கூட்டுல அடைக்காட்டி அம்புட்டையும் கீறிப்புள்ள சாப்டுரும், கம்மாய்ல வேற தண்ணியில்ல, வாத்துக்கு நேரா நேரம் தொட்டில தண்ணி வைக்கணும்....." இப்படியாக பொலம்பல். என் மூன்று மாத குழந்தையை பார்த்துக்கொள்வதைவிட, என் அம்மாவை அந்த உறவுக்கார கோழிகளிடமிருந்தும், வாத்துகளிடமிருந்தும் மீட்க பெரும்பாடாய் போனது. இதற்கு ஒரே வழி..... அம்மாவின் வழியிலேயே விட்டுப்பிடிப்பதுதான். என் குழந்தையை அம்மாவுடன் அனுப்பி கிராமத்தில் இருக்க வைப்போம். எனக்குத்தான் அந்த அற்புதமான வாய்ப்பு கிடைக்கவில்லை. என் குழந்தைக்காவது கிடைக்கட்டும் என முடிவெடுத்து, என் இரண்டு குழந்தைகளையும் (என் அம்மாவையும்தான்) கொண்டுபோய் என் கிராமத்தில் விட்டு வந்தேன்.

தினம் தினம் அலைபேசியில் பேசிக்கொண்டாலும், மாதத்திற்கொருமுறை போய் பார்த்துக்கொள்வதும், ஒருபுறம் என் மனைவியை தேற்றுவதும், ஒரு புறம் குழந்தைகளைத் தேற்றுவதும், ஒரு புறம் என்னைத் தேற்றுவதும், ஒரு புறம் வாய்ப்புக்கள் தேடி அலைவதுமாய் கழிந்தது சில மாதங்கள். நான் என் கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம்...

என் அம்மா கண்களில் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு....

"ஏய்யா.... நானும் ஒங்கூட அமெரிக்க வந்திருக்கேன். எப்படிப்பட்ட ஊரு அது, வேர்க்கவே வேர்க்காத ஊர்ல பொறந்த இந்தப்புள்ள அங்க
இருந்திருந்தா எப்படியெல்லாம் வளந்திருக்கும்! இந்த கொசுக்கடியிலயும், வெயில்லயும், வேணக்கட்டிலயும் இப்படி கஷ்டப்படணுமா? என்ன பாவம் செஞ்சுச்சு இந்த பச்ச சிசு?" என் அம்மா.

"நீயும் இங்கதான இருக்கே! நீ என்ன பாவம் பண்ணே ? நானும் இங்கதானே இருந்தேன்...." இது நான்.

"அதுக்கு சொல்லலய்யா.... எனக்கு பழகிருச்சு"

"இவளுக்கும் பழகிரும்"

"ஒனக்கு எப்பவும் பிடிவாதம், நான் சொல்றத கேளு. பேசாம போயி அங்க பிள்ளையளோட இரு. நீ நடிச்சு கிழிச்சது போதும்".

நான் கல்லூரி செல்லும் வரையில் மின் விசிறி கண்டிராத என் கிராமத்து வாழ்க்கை என்னவென்பது எனக்குத் தெரியும். ஆனாலும், என் தங்கையின் சடங்குக்கு தாய்மாமன் கொடுத்த டேபிள் ஃபேன்தான் என் வீட்டின் முதல் மின் விசிறி. அதுவும் அவ்வளவாய் அன்று தேவைப்படவில்லை.

ஆனால், இன்றோ.... ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட என் கிராமம் இன்னொரு சவூதி அரேபியா. என் கிராமத்தில் நான் தங்கும் சில இரவு நேரங்களில் புரண்டு புரண்டு அழும் என் குழந்தையை தூக்கினால், அப்போதுதான் குளிப்பாட்டிய குழந்தையைப்போல் ஈர உடலோடு துவண்டு விழுவதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அவ்வப்போது, சில இயக்குனர்கள் சிறு பாத்திரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தனர். நடித்தேன். இந்த நேரத்தில் அவர்களுக்கும் என் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்.

சினிமாவில் நடிக்கவும், இயக்குனராகவும் அன்றாடம் அலைந்து திரிந்து போராடும் எத்தனையோ நண்பர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களோடு ஒப்பிடுகையில் என் சிரமம்
எனக்கொன்றும் மிகப்பெரிதாகத் தெரியவில்லை. கையால் எழுதப்பட்ட காகிதத்தின் நகல்களோடு சினிமா கம்பெனிகளின் முகவரிகளைத் தேடித் தேடி மிதிவண்டியிலும், ஷேர் ஆட்டோவிலும், பைக்கிலும், பஸ்ஸிலும், நடந்தும் வீதி வீதியாக வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகத்தான என் உறவுகளின் சிரமத்தைவிடவா என் சிரமம் பெரிது ? அவர்களின் வலியை விடவா என் வலி பெரிது ?

எத்தனை கதைகள் வேண்டும்? எத்தனை ஆவணப்படங்கள் வேண்டும்? எத்தனை குறும்படங்கள் வேண்டும்? வடபழனி, ஏவி.எம்-மிற்கு எதிரேயுள்ள அருணாச்சலம் சாலையில் "காவேரி கார்னர்" தேநீர் நிலைய வாசலிலும், மணி தேநீர் கடை வாசலிலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் வந்து நின்று ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்வதும், சினிமா கம்பெனிகளின் முகவரிகள் நிறைந்த கையெழுத்து நகல்களை பரிமாறிக்கொள்வதும்.... பசி நிறைந்த வயிற்றோடும், கனவுகள் நிறைந்த கண்களோடும், எதிர்காலம் பற்றிய தீர்க்கமான வெறியோடும்.... அப்பப்பா...

எத்தனையெத்தனை விதவிதமான கதாபாத்திரங்கள் !!

என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் ஹாலிவுட் திரையுலக வாய்ப்புகள் மிகச் சுலபம், அனுபவத்தில் கூறுகிறேன்.

சாலிகிராமம் காவேரி கார்னரும், மணி டீக்கடையும் என்னை சென்னையில் இருக்க கட்டாயப்படுத்தியவை. இப்படி நான் பார்த்து பிரமித்த இந்த தமிழ் திரையுலக நடமாடும் எதிர்காலங்களில் என்னையும் ஐக்கியமாக்கிக் கொள்வதில் எனக்குக் கிடைத்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

அது ஒரு சுகமான வலி... ஆம்... எங்களுக்கு அதுதான் வழி....

இவ்வளவு தெரிந்த பின்னும் நான் எப்படி திரும்ப அமெரிக்கா செல்வேன் ? என்னையும் அவர்களோடு இணைத்துக்கொண்டு வீதி வீதியாக வாய்ப்புக்கள் தேடி அலைந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான எதிர்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கலைஞர்களுள், நானும் ஒருவன்.

சென்னை வீதிகளில் இதோ வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறேன்.....

காவேரி கார்னரிலும், மணி டீக்கடையிலும் முகவரி வாங்கி, வாய்ப்புத்தேடி, பிறகு ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து, இன்று தமிழ் திரையுலகில் பிஸி நடிகர்களாக, இயக்குனர்களாக வலம் வரும் எவரும் இதனை பதிவு செய்ய விரும்பவில்லை அல்லது பதிவு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில், அப்படிப்பட்ட வசதியற்ற எம் உறவுகள், கைகள் கடுக்கக் எழுதி, அதனை சொந்த செலவில் நகலெடுத்து, அனைத்து நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களோடு தாமும் சேர்ந்து வாய்ப்புத் தேடும் அந்த மாபெரும் மகான்கள், துர்பாக்கிய மனிதர்கள், நடிகர்கள் யார்..... ? யாருக்காவது தெரியுமா ?

முதலில் அவர்கள்  ஜெயிக்க வேண்டும், காவேரி கார்னர், மணி டீக்கடை மகாநடிகர்கள் ஜெயிக்க வேண்டும்.... பிறகு நானும் ஜெயிக்க வேண்டும்.

ஜெயிப்போம்.... எனக்காக இல்லையேனும், என்னோடு பயணித்த 90 நாட்களேயான என் பிஞ்சுக்  குழந்தைக்காக.... என் மனைவி, குழந்தைகளின் தியாகத்திற்காக.... என் அம்மாவின் தள்ளாத வயது சிரமத்திற்காக.... என் குடும்பத்தினரின் எனக்கான பங்களிப்பிற்காக.... இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒராயிரம் வலிகளோடு நிறைந்த வாழ்க்கையின் கனவுகளுக்காக.... வயிற்றுக்காக.... வைராக்கியத்திற்காக.... நிச்சயம் ஜெயிப்போம், தொடர்ந்து போராடுவோம்... தொடும் தூரம் தொலைவில் இல்லை.....

இந்த 2015 நமக்கான ஆண்டு... நம் ஆண்டு...

என்னை அன்போடு அழைத்துச் சென்று பல திரையுலக அலுவலகங்களை அறிமுகம் செய்த எனதன்பு உறவுகளை இங்கே நன்றியுணர்வோடு நினைத்துப்பார்க்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் என் எதிர்கால பயணங்களில் என்னோடு அவர்களும் பயணிப்பார்கள் என்பதை இங்கே தெளிவாகப் பதிவு செய்கிறேன். நான் சந்தித்த, என்னோடு பயணித்த சென்னையில் மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள எனது அன்பான உறவுகளில் கசப்பானவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். "அவர்களால்தான் உண்மையானவர்கள் பிரகாசமாய் தெரிந்தார்கள்" என்பதைத் தவிர அவர்கள் செய்த பிழைதான் என்ன? ஒரு வகையில் அவர்கள் நமக்கு நன்மை புரிந்துள்ளார்கள் என்பதை மாத்திரம் நம் நினைவிற்கொள்வோம்.

எப்படியாயினும்....

உலகம் முழுக்க இருக்கும் என் அன்பான உறவுகள் அனைவரையும் இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நிறைந்த மனதோடு வாழ்த்துகிறேன். நன்றி :)

தொடர்பில் இருப்போம்.... தொடர்ந்து பயணிப்போம்....

வற்றாத அன்புடன் - நவின் சீத்தாராமன்

December 29, 2014

என் அழகான சின்ன தேவதை

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம் அறிந்த விசயம்தான். கிட்டத்தட்ட அக்டோபரிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை ஹாலோவின் (Halloween), நன்றி தெரிவிக்கும் விழா (Thanks Giving), கருப்பு வெள்ளி (Black Friday), கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக விழாக்கள் கோலாகலமாய் இருக்கும். இந்த மாதங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் இலையுதிர்கால விடுமுறை (Fall Break) என்றும், குளிர்கால விடுமுறை (Winter Break) என்றும் அதிகான நாட்கள் விடுமுறையாக இருப்பதால், எங்கு பார்த்தாலும், போக்குவரத்து நெருக்கடியும், எல்லாக்கடைகளிலும் ஜன நெருக்கம் அதிகமாகவும் இருக்கும். இதனால் எல்லா கடைகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏகக் கொண்டாட்டம்தான். நம் ஊர் ஆடித்தள்ளுபடி, அட்சய திரிதியை ஸ்பெஷல் மாதிரி வியாபாரிகள் இங்கும் தள்ளுபடி என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டுவார்கள். இப்படி தள்ளுபடி காலங்களில்தான் அமெரிக்காவில் வசிப்பவர்கள் அதிகமான பொருட்கள் வாங்குவார்கள். வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களின் குடும்பங்களோடு சேர்ந்து கொண்டாடுவதும் இந்த பண்டிகைகள்தான். மேலும் நம் இந்தியர்கள் போல் பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் எல்லா மதத்தினரும் இந்தப் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இப்படி கொண்டாட்டங்கள் நிறைந்த இம்மாதங்களில் அமெரிக்காவில் நான் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு இங்கு அமெரிக்காவில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் இந்த ஆண்டு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் குடும்பத்தில் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இப்படி கொண்டாட்டங்களினூடே பக்கத்து மாநிலமான அலபாமாவுக்கு (Alabama) ஒருவார பயணமாக குடும்பத்துடன் சென்றிருந்தேன். பகல் முழுக்க குதூகலமாய் ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இப்படியொரு நாள் நான் குடும்பத்தோடு நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக அன்று அதிக நபர்கள் இல்லை. நீச்சல் குளத்தில் மொத்தமே சுமார் 6-7 பேர்தான் இருக்கும். அப்போது ஒர் அமெரிக்க தம்பதியினர் சுமார் மூன்று வயதிருக்கும், ஒரு பெண் குழந்தையோடு உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். காரணத்தை பிறகு சொல்கிறேன். அந்தப் பெண் குழந்தை என் குழந்தைகளோடு மிக நெருங்கி, குதூகலமாய் நீந்தியும், விளையாடியும், சிரித்தும் மகிழ்ந்தது எங்களுக்கும், அந்த தம்பதியினருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நானும் என் மனைவியும் அடிக்கடி பார்த்துக்கொள்வதை தவிர்க்க இயலவில்லை. காரணம், அந்தப் பெண் குழந்தைக்கு அப்படியே தமிழ் முகம். அந்த தம்பதியினர் இருவருமே அமெரிக்கர்கள். கட்டாயம் அவர்கள் அந்தப் பெண் குழந்தையை தத்து எடுத்திருக்க வேண்டும் என எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட எங்களை தவிர யாருமே நீச்சல் குளத்தில் இப்பொழுது இல்லை. குழந்தையோடு வந்த அந்தப் பெண்மணியும், என் மனைவியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நானும், அந்த அமெரிக்கரும் நீச்சல் குளத்தில் குழந்தைகளோடு விளையாடுவதில் மிக மும்முரமாய் இருந்தோம். ஆனால், இரண்டு மேற்பற்கள் விழுந்திருந்த அந்த அழகான குழந்தை மட்டும் என்னிடமும், என் குழந்தைகளிடமும் படுபயங்கர மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாய் நாங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு நீச்சல் குளத்திலிருந்து விடை பெற்றோம். அப்போது இரவு மணி சுமார் 10 இருக்கும். என் மனைவியின் முகத்தில் ஏதோ ஒரு சோகம் பற்றிக் கொண்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் கண்களால் "என்ன?" என கேட்கையில், "பிறகு சொல்கிறேன்" என அவள் கண்களால் கூறியதைப் புரிந்துகொண்டு, குழந்தைகள் உறங்கும்வரை காத்திருந்தேன். பிறகு, என்

மனைவி கூறியவை....

"அவர்கள் இருவரும் நாம் நினைத்ததுபோல், கணவன் மனைவி இல்லை. அம்மாவும், மகனும். (முதற்கண் அவர்களை தம்பதியர் என நினைத்ததற்கு மன்னிக்கவும். காரணம், பொதுவாக, அமெரிக்கர்களின் தலைமுடியின் நிறம் மற்றும் உடல் அமைப்பை வைத்து வயதை கணிக்க இயலாத ஒரு குழப்பம் ஏற்படும். சரி, அது போகட்டும்). அந்த அம்மாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். கணவர் பிரிந்து சென்று விட்டார். மூன்று மகன்களும் அம்மாவோடு வசிக்கின்றனர். பெண் குழந்தைமேல் அம்மாவுக்கு மட்டுமின்றி, மகன்களுக்கும் அளவற்ற ஆசை. கண்டிப்பாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க விருப்பப் படுகின்றனர். ஆனால், மூன்று பேருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆனபின் தம் மனைவியர் தன் அம்மாவுடன் வசிப்பார்களா ? கேள்விக்குறி ? எனவே, திருமணம் ஆவதற்கு முன்னரே ஒரு பெண் குழந்தையை நாம் தத்தெடுப்போம் என முடிவு செய்கின்றனர். இப்படியாக, இணையத்தில் தேடும்பொழுது கிடைத்த தகவல்களின் பேரில் அவர்கள் தத்தெடுத்தது நம் மண்ணில் பிறந்த பெண் குழந்தை. சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை தேடி அடைக்கலம் தந்து வளர்க்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். அப்படி தத்தெடுக்கப்பட்ட அழகான பெண் குழந்தைதான் எங்களோடு நீச்சல் குளத்தில் கொஞ்சி விளையாடிய அந்த அழகான தேவதை. அவள் பிறந்த மண் ஆந்திர மாநிலம், ஐதராபாத். அங்கிருந்து தத்தெடுக்கப்பட்டு, இன்று அமெரிக்க மண்ணில் அனைத்து சுக சௌகரியங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அழகு தேவதையின் முகம் என் கண்ணைவிட்டு இன்றளவும் நீங்கவில்லை. அந்தக் குழந்தையை அவர்கள் காப்பகத்திலிருந்து ஏற்றுக்கொண்டபொழுது, கிட்டத்தட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையால் (Mal-Nutrition) மூன்று கிலோ குறைவாக இருந்ததாகவும், தற்போது கடந்த மூன்று மாதங்களில் இரண்டு கிலோ எடை அதிகரித்திருப்பதாகவும் அந்த தாய் கூறி ஆறுதலடைந்ததை என் மனைவி என்னிடம் கூறியதை நினைக்கையில் என் கண்கள் என் கட்டுப்பாட்டை மீறி கலங்குவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.

மேலும், அந்த அமெரிக்க தாய் கூறியவை : பல நாடுகளில் இதுபோல் இருந்தாலும், நாங்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறோம். குறிப்பாக எங்களுக்கு தென்னிந்தியாவை அதிகம் பிடிக்கும், அங்குள்ள கலாச்சாரம், கூட்டுக்குடும்ப முறை, உணவு பழக்க வழக்கங்கள் இப்படி பிடித்தவை ஏராளம். அதனால்தான் இந்தக் குழந்தையை நாங்கள் தத்தெடுத்தோம்" என்று அந்த தாய் கூறியதை நான் பெருமையாக நினைக்க இயலவில்லை. மனமெங்கும் மரணவலி. பாரம்பரியமிக்க நம் மண்ணில் இன்னும் இப்படிப்பட்ட கொடுமைகளும், அதனால் ஏற்படும் வரலாற்று இழுக்குகளும் என்னை தீராத வேதனைகளுக்குள்ளாக்கியதை நான் எப்படி இங்கே விளக்க முடியும். எப்படியாயினும், அந்த மாபெரும் மகத்தான உள்ளங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பாரம்பரியமும், கலாச்சாரமும், தேசப்பற்றுமாய் இன்னும் ஆயிரம்....ஆயிரம் நாம் எழுதலாம். ஆனால் எங்கோ, யாரோ, எப்படியோ வந்த அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கும் வரும்?

வருத்தத்தோடும், வலியோடும், ஆயிரமாயிரம் கேள்விகளோடும், நிற்கதியாய் நான்........

என் அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

September 20, 2014

"கன்னியும் காளையும் செம காதல்" முன்னோட்டம்

வணக்கம் உறவுகளே ! "கன்னியும் காளையும் செம காதல்" முன்னோட்டம். நான் இதில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து இந்த முன்னோட்டத்தினை பார்த்து, தங்களின் முக நூல் பக்கத்திலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்களுடன் பகிர்ந்து, தங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு வேண்டுகிறேன். நன்றி :)



Vanakkam Friends,

I did a Comedy Role in this Movie. Please watch and share "Kanniyum Kaalaiyum Sema Kadhal" Trailer in your FB Timeline, Social websites/Forums and with your friends. Thanks in Advance for your continuous Support and Encourage' :)

July 09, 2014

"தொட்டால் தொடரும்" முன்னோட்டம்

வணக்கம் உறவுகளே! "தொட்டால் தொடரும்" இந்த படத்தில் நான் ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன். படத்தின் "முன்னோட்டம்" அதாவது 'ட்ரெய்லரை' பார்த்துவிட்டு நண்பர்களிடம் பகிருமாறும், விரைவில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல் தங்களின் மேலான ஒத்துழைப்பினையும், வாழ்த்துகளையும் வழங்கவேண்டும் என்றும் வேண்டி நிற்கிறேன். நன்றி, வணக்கம்.


October 26, 2012

Sillunnu Oru Sandhippu Trailer : www.adhikaalai.com

March 12, 2012

கருவ மரம் பஸ் ஸ்டாப் : நவநீ

என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரத்திலிருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் எனக்கு, குறிப்பாக ஒரேயொரு பேருந்து நிலையத்தை மாத்திரம் மறக்கவே இயலாது. ஆம்! அதுதான் அந்த ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’. தினமும் கல்லூரிக்குச் செல்லும் எனக்கு தவறாமல் என் தந்தை பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம். பேருந்து பயணச்சீட்டு ஆறு ரூபாய் போக மீதி நான்கு ரூபாய் எனக்கு மிச்சம். கல்லூரி முடிந்து மாலை நேரம், சில நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் மற்றும் வடை சாப்பிட்டாலும் இரண்டு ரூபாயாவது மிஞ்சும். இப்படி மாதம் முழுவதும் மிஞ்சும் பணத்தை வைத்துப் போட்ட மூலதனத்தில் அறிமுகமானவர்கள்தான் கவிஞர் மீரா தொடங்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மு.மேத்தா, நா.காமராசன், மாக்சிம் கார்க்கி, கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், வைரமுத்து, கல்யாண்ஜி, பாமரன், இராகுலதாசன், டாக்டர் வ.தேனப்பன், ஊடி வயலார், கவிஞர் கண்ணதாசன், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, அறிவுமதி, சுப.வீரபாண்டியன், பா.ராகவன் என கவிஞர் மதுமிதா வரை எனக்குப் பரிச்சயம். இப்படியாக சென்று கொண்டிருந்த என் கல்லூரி வாழ்க்கையில் தேவகோட்டை பேருந்து நிலையத்தில், காலையில் வந்திறங்கியவுடன் தினமும் தவறாமல் ஒருவரைச் சந்திப்பேன். என்னைப் பார்த்தவுடன் அவர் புன்முறுவலுடன் எனக்கு வணக்கம் வைப்பார். நானும் வணக்கம் வைப்பேன். உடனே என்னையறியாது என் கைகள் எனது சட்டைப்பைக்குள் செல்லும். கட்டாயம் அவருக்கென வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயம் யாருமறியாது அவரின் கைக்குள் கைமாறும். அடிமனதிலிருந்து திரும்ப ஒரு நன்றி சொல்லிவிட்டு கைகளாலேயே நடந்து அடுத்த பக்கம் சென்று விடுவார். ஆம்! அவருக்கு கால்கள் இரண்டும் போலியோவால் பாதிக்கப்பட்டு, சுட்டெரிக்கும் தார் ரோட்டில் கைகளாலேயே நடந்து செல்லும் மாற்றுத் திறனாளி நண்பர் முருகேசன். இப்படித்தான் எங்கள் பந்தம் பல வருடங்கள் தொடர்ந்தன. 

ஒருமுறை கல்லூரி மதியமே விடுமுறை அறிவிக்க, கட்டாயமாக நண்பர்களுடன் திரைப்படத்திற்குச் செல்லும் நான், ஏதோ ஒரு முக்கிய விசயத்துக்காக வீட்டுக்கு விரைந்தேன். வழக்கமாகச் செல்லும் பேருந்து மாலைதான் வரும். வேறொரு பேருந்தைப் பிடித்து வீடு செல்லவேண்டும் என்ற வேகத்தில் விரைந்தேன். எனது நண்பர் முருகேசனைச் சந்தித்த நான், எப்போதும்போல் என் சட்டைப்பைக்குள் கை விட்டேன். எடுத்தேன், அவசரத்தில் வந்ததைக் கொடுத்தேன். வழக்கத்துக்கும் மீறிய புன்முறுவல் என் நண்பர் முருகேசனிடம். பிறகுதான் தெரிந்தது அது ஒரு ரூபாய் அல்ல, ஐந்து ரூபாய் நாணயம். ஒரு வழியாகப் பேருந்தில் ஏறி நின்று கொண்டேன். “சீட்டு வாங்கணுமா? வண்டில யாரும் சீட்டு வாங்கணுமா?” நடத்துனர் முன் பக்கத்திலிருந்து பயணச்சீட்டு கேட்டுக்கொண்டே நெருங்குகிறார். நான் சட்டைப் பைக்குள் கை விடுகிறேன். தூக்கி வாரிப் போட்டது. பேண்ட் பைக்குள் கை விடுகிறேன்…. மீண்டும் அதிர்ச்சி. பேருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு சென்ற போதும் என் உடல் முழுவதும் வியர்வை. பேருந்தில் கிட்டத்தட்ட என்னைச் சேர்த்து மூன்றோ அல்லது நான்கு பேரோதான் நின்று கொண்டிருக்கிறோம். இன்று பார்த்து ஏராளமான வயதுப் பெண்கள் பேருந்தில் அமர்ந்து இருப்பதாகத் தெரிகிறது. திகைத்துப் போகிறேன். காரணம், ஒரு நயா பைசாகூட என்னிடம் இல்லை. இது எப்படி நடந்தது? சத்தியமாய்த் தெரியவில்லை. “என்ன செய்வது? யாரிடம் கேட்பது? அந்தப் பேருந்தில் ஓட்டுனர், நடத்துனர் உட்பட எனக்குத் தெரிந்த முகங்கள் யாருமே இல்லை. வழக்கமாய் போகும் பேருந்து என்றாலும் ஒரு வழியாய் சமாளிக்கலாம். அட கடவுளே! அவமானமாய்ப் போய்விடுமே!” கிட்டத்தட்ட நடத்துனர் எனக்கு அருகாமையில் வந்து பயணச்சீட்டு கொடுத்துக்கொண்டுள்ளார். “கருவ மரம் பஸ் ஸ்டாப் எந்திரிச்சு வாங்க”, சீட்டு வாங்கணுமா? யாராச்சும் சீட்டு வாங்கணுமா?”. கசக்கிப் பிழிகிறது என் அடிவயிறு. எனக்கு அடி வயிறு இருப்பதை அன்றுதான் உணர்கிறேன். அப்படியொரு மரண வேதனை. “காசு இல்லாம ஒனக்கெல்லாம், பேண்ட், சட்டை. அதுல வேற இன்-பண்ணிருக்கே, கீழ எறங்குடா வெண்ணெ” என்று யாரோ திட்டுவதாக என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

“டமார்!! ஓ…ஓ… பாத்து… பாத்து, ஏய்.. ஏய்.. என்னாச்சுப்பா… என ஆங்கங்கே சத்தம். நான் மேலே பிடித்திருந்த கம்பியை மீறி, நடத்துனர் மீது பலமாக இடித்து, அவர் நிலை தடுமாறி, ஒரு வழியாய் சுதாரித்துப் பார்த்ததில், பேருந்து கிட்டத்தட்ட பக்கத்தில் இருக்கும் வயலில் தலைகீழாக விழும் தருவாயில் நின்று கொண்டிருந்தது. “எல்லாரும் சீக்கிரம் எறங்குங்க, எறங்குங்க….” ஒரே இறைச்சல், சத்தம்… எதிரே வந்த லாரி பேருந்து மீதி மோதி, லாரி ஓட்டுனர் இறங்கி ஓடிவிட, அனைவரும் கீழே இறங்கினோம். நெற்பயிர் வளர்ந்து கதிர்களோடு சேறும், சகதியுமாய் இருந்த அந்த வயலுக்குள் அனைவரும் இறங்கி, ஒரு வழியாக சாலையோரம் வந்தால்…. சரியாக அந்தக் கருவ மரம் பஸ் ஸ்டாப். யாருக்கும் எந்தக் காயமும் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்து நொறுங்கி, முன்புறம் சேதமடைந்திருந்தது. எல்லோரும் கருவ மரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தோம்.

எனக்கு தலை சுற்றியது. இந்த விபத்து எனக்காகவே நடந்ததோ! எனக்குள் ஓராயிரம் கேள்விகள்….. “சரி, பேசாமல் மாலை வரும் எனது வழக்கமான பேருந்திலேயே சென்று விடுவோமா?” என நினைக்கிறேன். விபத்து நடந்தும், யாருக்கும் எதுவும் நடக்கவில்லையே என்ற திருப்தி ஒருபுறம் இருந்தாலும்…. என்னிடம் காசு இல்லாமல் போனதற்கும், என் நண்பர் முருகேசனுக்கும், அந்தக் கருவமரம் பஸ் ஸ்டாப்பிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவே நான் உணர்ந்தேன். இதற்கிடையில் இரு புறமும் பேருந்து செல்ல இயலாத சூழல்…. வந்த பேருந்து அனைத்தும் வந்த வழியே திரும்பி வேறு வேறு வழியில் செல்லத் தயாராகிக்கொண்டுள்ளன. கிட்டத்தட்ட நான் மட்டுமே அந்தக் கருவமரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கிறேன். நான் போக வேண்டிய திசையில் வந்த ஒரு பேருந்து திரும்புவதற்காக நடத்துனர், ஒருவர் கீழே இறங்கி “வரலாம் வா… வரலாம், வரலாம் வா… வரலாம், என விசிலடிக்கும் சத்தம். “நம் நிலைமை இப்படியாகிவிட்டதே! ‘நீயே பிச்சையெடுக்கிற நிலையில இருக்கிற, இதுல வெட்டிப் பந்தா வேற… அஞ்சு ரூவாயா போடுறே, மவனே அஞ்சு ரூவா… ஒரு ரூவாதாண்டி ஒனக்கு லிமிட்டு, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல” என என்னை யாரோ திட்டுவதாக எனக்குத் தோன்றியது. விசிலடிக்கும் நடத்துனரைப் பார்க்கிறேன். திடீரென ஒரு மகிழ்ச்சி. அவர் எனக்குத் தூரத்துச் சொந்தம் என என் தந்தை ஒருமுறை எப்போதோ அந்தப் பேருந்தில் வரும்போது அறிமுகம் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட திரும்பி, கிளம்பி விட்ட பேருந்தை தலை தெறிக்க ஓடிப்போய், விரட்டிப் பிடித்தே விட்டேன். பேருந்தில் நல்ல இடம் பார்த்து நின்று கொண்டேன். மீண்டும் நடத்துனர்…. அருகே பயணச்சீட்டு கேட்டுக்கொண்டே வருகிறார். நான் அவரைப் பார்த்து அசடு வழியாத குறையாய் சிரிக்கிறேன். “என்ன தம்பி நல்லாருக்கியளா? அப்பா எப்படி இருக்காரு? என்ன, இன்னிக்கி சீக்கிரமே வந்துட்டியே, காலேசு லீவா?” என ஒரே மூச்சில் கேட்டு முடித்தார். “ம்ம்.. நல்லாருக்கேன், நான் வந்த ஆர்.பி.எஸ். பஸ் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு, அதான்…” என இழுத்தேன். உடனே அவர் என் பஸ் நிறுத்தத்திற்கான பயணச்சீட்டைத் தந்தார். நான் என் சட்டைப்பைக்குள் கையை விட்டேன். “அட சும்மா வைய்ங்க…..” என்றார். எனக்கு மீண்டும் தலை சுற்றியது. சட்டைப்பையும், பேண்ட் பையும் காலி என்பது அவருக்கெங்கே தெரியப் போகிறது. ஆனாலும், ஏதோ… அந்தக் கணத்தில், எனக்குள் தோன்றிய எண்ணங்கள், கேள்விகள், தற்காலிக திருப்தி….. இவை என்றுமே எனக்குள் அழிக்க முடியாத அற்புதமான நினைவுகள். சில மணித்துளிகளுக்கு முன் நான் அந்தக் ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’பின் அடியில் நிற்கும்போது தோன்றிய எண்ணங்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத இந்த நினைவுகள் நிரந்தரமானவைகளா? அப்போது, எனக்கு எதுவும் தெரியாது. நான் செய்த ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் தர்மம், ஓர் அற்பக் காரியமானாலும்….. “தர்மம் தலை காக்கும்” என கர்ணன் ரேஞ்சுக்கு கற்பனையில் மிதந்ததென்னவோ உண்மைதான்.

இன்றும் நான் என் சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள அந்த “கருவ மரம் பஸ் ஸ்டாப்”பில் ஒரு இரண்டு நிமிடங்களாவது நின்று விட்டுச் செல்வது வழக்கம். நான் தவறாது கருவ மரத்தைப் பார்க்கிறேன். ஆனால், என் நண்பர் முருகேசனை இன்றுவரை சந்திக்கவே இல்லை. பேருந்து நிலையத்தில் பூக்கடை அக்கா முதல், பழக்கடை ராசேந்திரன் வரை அனைவரிடமும் விசாரித்து விட்டேன். என் நண்பர் முருகேசன் பற்றி இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. 

“நண்பரே! நீங்கள் எங்கிருந்தாலும், சகல சவுகரியங்களோடு, நலமாய், வளமாய் வாழ வேண்டும் என்பதுதான் எனது தீராத ஆசை. கடவுள் என்ற ஒருவன் உண்மையிலேயே இருந்தால், இனி…. ஒரேயொரு முறை உங்களைச் சந்தித்து, மனமாற கட்டியணைத்து…. முத்தமிட்டு நாம் இருவரும் ஒன்றாய்…. ஒரே உணவு விடுதியில் சமமாய் அமர்ந்து…. வயிறார சாப்பிடும் வரம் ஒன்று வேண்டும்….. அந்த வாய்ப்பை எனக்குத் தருவீர்களா?…. அதுவே எனது தீராத ஆசை. முருகேசா….. நீங்கள் எங்கேயோ நலமாக இருக்கிறீர்கள் என்பது மட்டும் எனக்குள் தெளிவாய்த் தெரிகிறது. நண்பா…. ம்ம்….ப்ச்ச்…. நான் இழுத்து விடும் பெருமூச்சு என் நண்பனுக்கு அவசியம் கேட்கும்….. நீ வாழ்க! நலமோடும், வளமோடும் வாழ்க!! இனி அடுத்த முறை செல்லும்போது குறைந்த பட்சம் அந்தக் கருவ மரத்தைத் தவறாது கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றுவதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

‘கருவமரம் பஸ் ஸ்டாப் எந்திரிச்சு வாங்க….. போலாம் ரைட்……’ இன்னும் அந்தக் குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது…..

- நவநீ

நன்றி : திண்ணை

February 23, 2012

"பனித்துளி" திரைப்படத்தில் நான் எழுதிய 'சல்சா' இசைப் பாடல் !!

நண்பர்களே! விரைவில் வெளிவர இருக்கும் பனித்துளி திரைப்படத்தின் பாடல்களை கீழுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். இதில் ஐந்தாவதாக உள்ள "பசியா தூக்கமா" என்ற சல்சா இசையில் அமைந்த பாடல் நான் எழுதியது. நண்பர்கள் கேட்டு, ரசித்து தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள். இடையிடையே வரும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் நண்பர்கள் மன்னிக்க :) கதையின் சூழல் கருதி தவிர்க்க இயலாமல் எழுத வேண்டிய கட்டாயம். நண்பர்களின் புரிதலுக்கு நன்றி!! தொடர்ந்து சிறந்த பாடல்களை தருவேன் என்று கூறி பாடலை ரசித்தமைக்கு நன்றியையும் முன்கூட்டியே தெரிவிக்கிறேன். நன்றி!!

இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளவும். http://mp3.tamilwire.com/panithuli-2012.html

December 18, 2011

"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" : கலெக்டர் சகாயம்

"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" என தான் பதிலெழுதிய சுவாரசியமான தகவல்களை ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் தெரிவித்தார். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது :

"அனைத்து துறைகளிலும் தாய் மொழியாம் தமிழை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்பட்ட கருத்துக்களை நீங்கள் அனைவரும் உங்கள் அலுவலகத்தில் களத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கருதுவதில் நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மைதான் இடர்பாடாக இருக்கிறது. தமிழ் மொழி பேசுவதால் நமக்குள் நாமே தாழ்வானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் அகற்ற வேண்டும்.

எந்தவொரு பொருளும் தொலைவில் இருக்கின்ற வரைதான் அதன் மேல் நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும். எப்பொழுது அந்தப் பொருள் நமது கைக்குள் வருகிறதோ அப்பொழுது அதன் மேல் உள்ள ஈர்ப்பு போய்விடும். அதற்காகதான் நான் எப்பொழுதும் சொல்வதுண்டு. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மாறாக ஆங்கில அடிமைத்தனத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று!

ஒரு முறை ஒரு கிராமத்தில் சமபந்தி நிகழ்வில் எனக்கு ஒரு அலுவலர் மனு கொடுக்கும் பொழுது மனுவின் இறுதியில் கருப்பையா என்ற தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டிருந்தார். நான் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறேன். யாரோ ஒரு ஆங்கிலேயர் எனக்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார். அவருடைய மனுவைப் பரிசீலிக்க நான் தயாராக இல்லை எனக் கூறிய பொழுது அந்தக் கருப்பையா என்னிடத்தில் வந்து அய்யா நான் தமிழன் தான் என்று சொன்னார்.

நீங்கள் இருப்பது தமிழ்நாட்டில்; பழகுவது தமிழ் மக்களோடு; பிறகு ஏன் உங்கள் கையெழுத்தை மட்டும் ஆங்கிலத்தில் போடுகிறீர்கள். அதை தமிழில் போட்டு கொண்டு வாருங்கள். ஒரு முறை போட்டால் உங்களுக்குப் பழகாது. அதனால் குறைந்தது 50 முறை ஒரு தாளில் போட்டு கொண்டு வாருங்கள் என்று கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார். இந்த நிகழ்வு அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தது. இதை படித்த யாரோ ஒருவர் எனக்கு ஒரு தந்தியை அனுப்பியிருந்தார்.

அதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே, கையெழுத்தைத் தமிழில்தான் போட வேண்டும் என்று சொல்லுவது எங்கள் உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பது போன்ற செயலாகும். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இவ்வளவு மெனக்கட்டு எனக்கு தந்தி அனுப்பியிருந்த அவருக்கு 'ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரத்தைப் பற்றி பேச அருகதை இல்லை' என்று பதில் அனுப்பியிருந்தேன். எதற்கு இதை சொல்லுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஆங்கில மோகம் நம் தமிழ் மக்களிடையே பரவி கிடைக்கிறது.

பல்வேறு மொழிகளை அறிந்திருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினான். ஆனால் ஒரு மொழியைக்கூட உருப்படியாக தெரிந்து கொள்ளாத நாம், நம் தாய் மொழியை விட்டு ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்டவர்களாக ஆங்கில அடிமைகளாக உள்ளோம்.

எனவே, தமிழர்களாகிய நாம் நம்முடைய பழம் பெருமைகளைப் பேசி பேசியே காலங்களைக் கடத்துவதில் பயனில்லை. என்றைக்கு ஆங்கில அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறோமோ அன்று தான் தமிழன் என்ற பெருமை நிலைக்கும். இதற்கு இந்த ஆட்சி மொழி கருத்தரங்கம் நல்ல பாதை வகுக்கும். இந்த நிகழ்ச்சி வெறும் ஆட்சி மொழி கருத்தரங்காக மட்டுமல்லாமல் உங்களுக்குச் சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் களமாக அமைந்திருக்கும். உங்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் எழுதப்படும் கோப்புகளும், தங்களின் கையெழுத்துகளும் இனி தமிழிலேயே அமையும் என்று உறுதியேற்க வேண்டும். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சதவீதம் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி நடைமுறைப்படுத்தப்படும்" என்று கலெக்டர் சகாயம்பேசினார்.

இறுதியில் ஆட்சி மொழியை அலுவலகங்களில் சிறந்த முறையில் பயன்படுத்திய அலுவலர்களுக்குப் பரிசு கேடயமும், பாராட்டுச் சான்றிதழ்களையும், ஆட்சி மொழி கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களுக்குச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர். பெ.சந்திரா, திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி.லெ.கல்யாணசுந்தர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கோ.விசயராகவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர்.கா.பசும்பொன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மாவட்ட ஆட்சியாளரின்ன் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அலிஅக்பர் நன்றியுரையாற்றினார்.