April 26, 2007

"வைகோ" - 8

"வைகோ" - 9

தாஜ்மாஹாலின் காதிலே
இராமகாதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்று சேரலாம்

என்ன? புரியவில்லையா?

எழுதியவர் கவிஞர் மு.மேத்தா
அவர் எழுதிய "ஆகாயத்திற்கு அடுத்த வீடு" கவிதைத் தொகுப்பிற்கு 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்துள்ளது. அவரைப் பாராட்டிப் பேசும்போது, திரு.ஜெயகாந்தன் "இந்தியில் வருவது மட்டுமல்ல இந்திய இலக்கியங்கள்", இந்தியாவின் வேர் தெற்கேதான் இருக்கிறது, இமயமலை வடக்கே இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் எழுதுபவர்கள் தென் மாநிலக் கவிஞர்கள்தான் " என்றாராம். மொத்தத்தில் அவர் ஒரு தமிழன் என்ற முறையில் மட்டுமல்லாது ஒரு "வியாபார நோக்கமில்லாத கவிஞர்" என்ற முறையில் நாம் பாராட்டுவோம். மேலும் கவிஞர் மு.மேத்தா பற்றி அறிய
Please click
மு. மேத்தா - Mu Mehta - Tamil Language & Literature

"உன் பிரிவு"

முதன்முதலாய் வந்த
காதலைச் சொல்லத்துடிக்கும்
ஓர் ஊமையின்
உயிர் வலிக்கும் இந்த வலிக்கும்
வித்தியாசம் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை...

புரியாமல் தவிக்கிறேன்.

"பாலா" - சென்னை

விபத்துக்கள் நேர்வதற்கு முக்கிய காரணங்கள் Please 'Click' 'ME'

ஒரு எளிய கவிஞர்

திரு.என்.சுரேஷ் அவர்களின் பேட்டி. சுவாரஸ்யமாக இல்லையென நினைக்காமல் கடைசிவரை பாருங்கள். உண்மையில் வார்த்தைகள் திக்கித்திக்கி வந்தாலும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். உணர்ச்சிவயப்படும்போது வார்த்தைகள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்யும். பேட்டியைப்பார்க்க "ஒரு எளிய கவிஞர்" தலைப்பை 'க்ளிக்' செய்யவும்

April 24, 2007

"மேஸ்ட்ரோ" - "இசைஞானி"




ஓஷோ - இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லை

கண்ணில்லை காதலிக்கும்போது மட்டும்

ஒரு வழியாகத்
தண்டவாளங்களைக் கடந்துவிட்ட காதல் இளசுகள்...
வாழ்க்கையை??

சங்கர் - சவூதி

“நாம மனசு வச்சா நடக்குமுங்க”

மனசு என்பது என்ன?
அது எங்கே இருக்கிறது?
எப்படி இருக்கிறது?

அது வாழ்க்கையில் வெற்றிக்கான வழியைக்காட்டுமா?

மனம்தான் வாழ்வின் நிர்ணய சக்தி. நம் இன்ப துன்பங்களின் கர்ப்பப்பை. வெற்றி தோல்விகளின் விளைநிலம். மனம்தான் வாழ்க்கைப் போராட்டத்துக்கான போர்க்கருவிகளின் பட்டறை, பாசறை, பள்ளியறையும்கூட. வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் மனம்தான் செதுக்குகிறது. வாழ்வா - சாவா? புகழா - இகழா? வெற்றியா - தோல்வியா? இவையெல்லாம் நம் கையில் இருக்கிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. வாழ்வில் எண்ணத்தின் உயரம் நம் உள்ளத்தின் உயரம். உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் உயர்வதைக் கடவுளாலும் தடுக்க முடியாது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு - குறள்

தந்தையின் உடலில் ஓர் உயிர் அணுவாக இருந்த நாம், தாயின் கர்ப்பப்பை நோக்கி பிரயாணம் செய்து, நம்மோடு கூட வந்த லட்சக்கணக்கான உயிர் அணுக்களை ஜெயித்து தாயின் கருவில், சினைமுட்டையில் கலந்தோம். ஓடி ஓடித் தாயின் கருவில் இடம் பிடித்த நாம், ஓடி ஓடிப் பூமித்தாயின் மடியில் இடம்பிடிக்க வேண்டியதும் அவசியம்தானே! இந்த உலக வாழ்க்கையே ஓர் ஓட்டப்பந்தயம்தான்! ஓடுவது நமது இயல்பு. ஜெயிப்பது நமது இயற்கை. ஓடத்தயங்குபவர்களை உலகம் வாரிச்சுருட்டி வெளியில் தள்ளிவிடும். இந்த உலகம் இயங்கவேண்டிய கர்மபூமி. இயங்காமல் இருக்க எவருக்கும் உரிமையில்லை.

வாழ்க்கைப் பயணத்தில் கடுமையாக ஓடி ஓடி உழைத்து மேலே வரவேண்டியதுள்ளது. மேலே வந்துவிட்டோமே என்று உழைப்பை நிறுத்திவிட்டால் கண்டிப்பாக விபத்து நேரிடும். உழைப்பே உணவு, உழைப்பே ஓய்வு, உழைப்பே உயிர். எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம். சாகிறவரை வாழவேண்டாமா? அதற்காக வாழ்வில் உழைப்பை விடமுடியுமா? இந்த வாழ்க்கை வளையத்துக்குள், சுழற்சிக்குள் புகுந்து விளையாடி எதிர் நீச்சல் போடவேண்டும்.

வாழ்க்கையில் ஜெயிக்க கடவுளின் கருணை இயல்பானது. ஆனால் மனித முயற்சி, கடும் உழைப்புதான் ஜெயத்தை நிர்ணயிக்கிறது. பஞ்சபூதங்களும் நமது பாதுகாவலர்கள்தான். அவற்றைக்கண்டு சோர்வடைய வேண்டாம். மனதைக் கவிழ்த்து வைத்திருப்பவர்களுக்கு, கடவுளின் அருள் ஒருபோதும் கிடைப்பதில்லை. கவிழ்த்து வைத்த பாத்திரத்தில் தண்ணீரைச் சேமிக்க முடியுமா? திறந்த மனத்தோடு பிரபஞ்சத்தோடு தொடர்புகொண்டால் பஞ்சபூதங்களும் நமக்குச் சாதகமானவைகளே!

நமக்கு எதிரான எண்ணங்களைத் தவிர்த்து, எதிர்ப்பனவற்றைக்கூட சாதகமாக்கிக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றிதான். இப்படி இருந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இல்லாத ஒன்றைக் காரணம் காட்டி தோல்வியை நியாயப் படுத்தவேண்டாம். எதுவும் நம்மை தோற்கடிக்கக் கூடாது என்ற வைராக்யம் இருந்துவிட்டால் பாதகமான குறைகள், சாதகமான நிறைகள் ஆகிவிடும். நம்முடைய குறைகள் 1. மாற்றக்கூடியது. 2. மாற்ற முடியாதது. மாற்றவே முடியாத குறைகளை ஒருபோதும் குறைகளாகக் கருதாமல் அவற்றை மூலதனமாக்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதனால் வெற்றி உறுதியாகிறது. எல்லோரையும் மாற்றவேண்டும் என்று நாம் துடிக்கிறோம். மாறவில்லையே! என்று மன அமைதி இழக்கிறோம். ஆனால் நாம் அதற்குத் தகுந்தாற்போல் மாறியிருக்கிறோமா? வலிமை வாய்ந்த இரும்பத்தூணை வெளியிலிருந்து எதுவும் வீழ்த்துவதில்லை. அதனுள் உருவாகும் ஷஷதுருதான் தூணை சாய்த்து விடுகிறது.

நம்மிடம் இருக்கும் நல்லதும், கெட்டதும்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. மனிதன் தன்னைத்தானே பார்க்கிறபோது வேகம் குறைகிறது. விவேகம் பிறக்கிறது. வாழ்வில் உயர உங்களை நீங்களே உற்றுப்பாருங்கள். தன்னையே தான் உற்றுப்பார்க்கும் முயற்சி சுயவிமர்சனத்தால் வெற்றிபெறும்.

நம்மை உயர்த்த, நம்மைக் கவனிக்க நேரமில்லை என்றால், நம்மீது நமக்கு அக்கறை இல்லையா? அவ்வளவு அலட்சியமா? நம்மீது நமக்கு ஈடுபாடு இருந்தால் நம்மை உயர்த்த எப்படியாவது நேரத்தை ஒதுக்குவோம். அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி அமைதியான பிச்சைக்காரன்வரை 24 மணிநேரம்தான் இருக்கிறது. நிற்கவே இடமில்லாத டவுன்பஸ்ஸில் கண்டக்டர் திரும்பத் திரும்ப போய் வர இடம் கிடைக்கிறதே எப்படி? நம்மை மாற்றியமைப்பது மிக முக்கியமான, அவசியமான அவசர வேலை என்றால் அதற்கான நேரம் கிடைத்துவிடும்.

மனசுக்கு இயல்பான இன்ப நாட்டம் உண்டு. கஷ்டத்தை அது விரும்பாது. இன்பம் விழையும் இயல்பு. எது இன்பம் எனத் தோன்றுகிறதோ அதையே திரும்பத் திரும்பச் செய்யத் தோன்றும். புதிய புதிய வரவுகளை அது தேடுவதேயில்லை. குழந்தைப்பருவம் தொடங்கி சாகிறவரை இந்த இன்பம் விழையும் இயல்பை யாரும் விடமாட்டோம். வளர வளர நாம் செயல்களை மாற்றியிருப்போம். செயல்களை மாற்றியிருப்பதால் வளர்ந்து விட்டோம் எனத் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் வளர்வதே இல்லை.

இன்பம் விழையும் மன இயல்பு துன்பத்தில்தான் முடிகிறது. இடையிடையே விளம்பரங்கள் இல்லாமல் எப்படி டி.வி. சீரியல் பார்க்கமுடியாதோ அது போலத்தான் க~;டங்கள் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறைக்கு வராது. சோதனையும், வேதனையும் இல்லாமல் சாதனை பிறக்கவே முடியாது. பிரச்சினையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. நாம் பிறப்பதற்கு முன்பும் பிரச்சினைகள் இருந்தன. நம் மரணத்திற்குப் பின்பும் அவை இருக்கப் போகின்றன. நாம்தான் இடையில் வந்து இடையில் போகிறோம். நமக்குப் பிரச்சினைகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு நாம் அவசியம் தேவை. எனவே அவற்றை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும். நமது பிரச்சினைகளின் அகல ஆழம் தெரிந்தவர்கள் நாம்தான். நாம் மட்டுமே உறுதியான முடிவை எடுக்கமுடியும். அதனைத் தீர்க்கமுடியும். கனமான பறவைகளை அதன் லேசான இறக்கைகள்தான் மேலே தூக்குகின்றன.

நமது பிரச்சினைகளுக்கு பிறருடைய கருத்துக்களைக் கேட்கலாம். பரிசீலனை செய்யலாம். அவைபற்றி ஆலோசனைகூட செய்யலாம். ஆனால் அவைதான் தீர்ப்பு என்று முடிவெடுக்கக்கூடாது. பேண்ட் முதல் பெண்டாட்டிவரை நண்பர்களின் அபிப்ராயப்படி தேர்ந்தெடுக்கும் ஆண்கள் தோற்றுப்போவது நிச்சயம். புடவை முதல் புரு~ன் வரை தோழிகளிடம் யோசனை கேட்கும் பெண்கள் நிம்மதியாக வாழமுடியாது. எல்லோரையும் ஓர் எல்லையில் நிறுத்தவும். எதற்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்புவதில்லை. ஆரோக்யமாக இருக்கிற நாம் ஏன் பிறரைச் சார்ந்திருக்கவேண்டும்? இந்த மன ஊனம் சகிக்க முடியாதது. பிறரைச் சார்ந்து வாழ்வது என்கிற ஊன்றுகோலை உதறி எறிய வேண்டும். இல்லையென்றால் மந்திர தந்திர மதவாதிகள், குட்டிச்சாமியார்கள், ராசிபலன் பார்ப்பவர்கள் நம்மை வசப்படுத்தி நிரந்தர ஊனமாக்கி விடுவார்களென்பது நிச்சயம்.

வாழ்க்கை விசித்திரமானது. நாம் தயாரித்து வைத்துள்ள பதில்களுக்கேற்ப வாழ்வில் கேள்விகள் பிறப்பதில்லை. எல்லா கேள்விகளுக்கும் யாராவது பதில் சொல்லமாட்டார்களா? என்று தடுமாற வேண்டாம். பிறரது அபிப்ராயங்களால் பாதிக்கப்படக்கூடாது. நாம்தான் விடைகாணவேண்டும். அதுதான் உண்மையான தன்னம்பிக்கை.

“தன்னைத் தன்னாலே உயர்த்திக்கொள்க!
தன்னை இழிவுறுத்தலாகாது! தானே தனக்குப் பகை!
தானே தனக்கு நண்பன்!
- பகவத் கீதை

நாம் பரபரப்புடனும், அவசரத்துடனும், கவலையுடனும் எதைத் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. கிடைத்தாலும் கிடைத்தது தெரியாது. தெரிந்தாலும் ருசிக்காது. எண்ணங்களே வாழ்வை உருவாக்குகின்றன. எண்ணங்களை நம் மனம்தான் உருவாக்குகிறது. எனவே மனம் நம் வசம் இருக்கவேண்டும்.

"வாழ்க்கை ஒரு உற்சவம்,
அதனைக்கொண்டாட வேண்டும்"
என்பார் ஓஷோ
ஆனந்தமாக இருக்கவேண்டும். கண்களில் கனவுகளையும், மனசில் ஆனந்தத்தையும் நிரப்பினால் "வானம் வசப்படும்"
‘வெற்றி நிச்சயம்’ நம்மைத்தேடி வரும்,
மொத்தத்துல இது எல்லாமே................


“நாம மனசு வச்சா நடக்குமுங்க”

ஆக்கம் - சங்கர் (க.சங்கரநாராயணன் : சவூதி அரேபியா)

"மேஸ்ட்ரோ"




April 22, 2007

"கிராமம்"

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் தன் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான். ஐந்து பிள்ளைகளைப்பெற்று, உத்யோக காரணங்களுக்காக எல்லோருமே வெளியூரில் இருப்பதை நினைத்தும், சமீபத்தில் மறைந்துபோன தன் கணவரை நினைத்தும் கவலைப்படும் அம்மா, எப்போது பிள்ளைகள் போனில் பேசினாலும் அவர்கள் கவலைப்படக்கூடாதென்பதற்காக சந்தோசமாகத்தான் பேசுவாள். அந்தப் பகுதியில் யாருக்கு என்ன குறை நேர்ந்தாலும் தான் முன்னின்று தீர்த்துவைத்து நல்லது செய்யும் ஒரு உன்னதமான நல்ல மனிதர்தான் பாலுவின் அப்பா சீதாராமன். அவர் மறைவின்போது அந்தப்பகுதி மக்களே கண்ணீர் விட்டுத் துடித்துக் கதறிய காட்சி இன்னும் கண்ணைவிட்டு நீங்கவில்லை. மரணம் யாரைத்தான் விட்டுவைத்தது? அம்மா குரலில் ஏதோ ஒரு மாற்றம், “என்னம்மா! என்னாச்சும்மா! ஒடம்பு கிடம்புக்கு முடியலையாம்மா? பணம் வந்து சேந்துச்சாம்மா?” பாலு கேட்டான். “இல்லைய்யா! நான் நல்லாருக்கேன்! பணமெல்லாம் வந்துருச்சு, நீ எப்படிய்யா இருக்கெ?” அம்மா நலம் விசாரிக்க ஆரம்பித்தாள். பாலுவுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல். அம்மாவைத் திரும்பத் திரும்பக் கேட்டான். இனி அம்மா மறைக்க விரும்பவில்லை. “அய்யா! நீ மனசு சங்கடப்படாத! நம்ம முருகையா மாமா இல்லைய்யா! அவம்பொண்டாட்டி இருளாயி ராத்திரி மருந்தக் குடிச்சிட்டு செத்துப்போய்ட்டாய்யா….ஏதோ மாமியா மருமவக்குள்ள சண்டையாம், அத புருசன் கேக்கலேன்னு…இந்தச் சண்டாளி இப்படிப் பண்ணிப்புட்டா....ய்…யா…. ” அம்மாவின் தொண்டையில் துக்கம் வார்த்தைகளை வரவிடவில்லை. பாலு பதறிப்போனான், அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, தொடர்ந்து அவனால் போனில் பேச முடியவில்லை. பாலுவின் தந்தை மறைவுக்குப்பின் அந்த ஊரில் எல்லாமே துரதிஷ்டவசமாகத்தான் நடக்கிறது. அவர் உயிரோடிருந்தபோது தன் பிரச்சினைகளை யார் வந்து சொன்னாலும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பக்குவமாகப் பேசி, பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துவைத்துவிடுவார். இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கக் காத்திருக்கிறதோ என்று வேதனையுடன் பாலு சோபாவில் சாய்ந்தான்…..

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு முருகையா கையில் எட்டு மாத கைக்குழந்தையோடு தன் மனைவி இருளாயியை அழைத்துக்கொண்டு, கொட்டும் மழையில், இடி மின்னலோடு கூடிய அந்த கும்மிருட்டில் தன் வீட்டுக்கதவைத் தட்டியது தன் கண் முன்னே வந்தது, இவையெல்லாம் ஏதோ நேற்று நடந்தது போல இருந்தது பாலுவுக்கு. “கதவத்தெறந்து, யாருன்னு பாருய்யா, ரசம் அடுப்புல கெடக்கு, கொதிச்சுப்போய்ட்டா ரசம் வாய்க்கி வெளங்காது” என்ற அம்மாவின் குரலையடுத்து, பாலு கதவைக் கஷ்டப்பட்டு திறந்தான். அப்போது பாலுவுக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது, பாலுவைப் பார்த்தவுடன், “மச்சான் இல்லையா? மருமயனே!” முருகையா. “இல்ல மாமா” பாலு. “யாருடாது இந்த அடமழையில?” அம்மா குரல் அடுப்படியிலிருந்து ஒலித்தது. “நாந்தாக்கா முருகையா, அக்கோவ்! செத்த இங்குட்டு வந்துட்டு போக்கோவ்! அம்மா வெளியே வந்தாள், முருகையா, ஒரு கிழிந்த சாக்கை மடித்து தன் எட்டுமாதப்பெண் குழந்தை நனையாமல் இருக்க மேலே கொங்கானியாகப் போட்டுக்கொண்டு மனைவியோடு நனைந்து நடுங்கிக்கொண்டு நின்றதைப் பார்த்த அம்மா, “அடப்படுபாவி, என்னடா புத்தியா கெட்டுப்போச்சு ஒனக்கு, பச்சப்புள்ளய நனையவிட்டுக்குட்டு அங்கன நிக்கிற, உள்ள வாடா மொதல்ல, இந்தா தலைய தொவட்டுறா” என்று தன் முந்தானையை எடுத்துக்கொடுத்த தன் கூடப்பிறக்காத அக்காவைப் பார்த்த உடன் முருகையா கதறி அழுதே விட்டான். “அக்கா ஙப்பன் என்னயும், எம்பொண்டாட்டி, புள்ளையும் வீட்ட விட்டு வெளில போடான்னு அடிச்சு வெரட்டிட்டாருக்கா, இருளாயிக்கும் அவருக்கும் என்னமோ பெரச்சனைக்கா, நான் எங்கக்கா போவேன், எனக்கு யாருக்கா இருக்கா?” மச்சான் வந்த ஒடனே ஒரு முடிவு பண்ணனும்க்கா, அதுக்குத்தாங்க்கா இங்க வந்தேன்” என்று புலம்பிக்கொண்டிருந்தான். “சரி சரி நீ உள்ள வா, மச்சான் வெள்ளெனதேண்டா வருவாரு, நீ ஒன்னும் கவலப்படாமெ இரு! இந்தாடி இருளாயி அங்கன கொடில யாம்புட்டு பழய சீலை கெடக்குடி எடுத்துக் கட்டிகிட்டு இந்த ஈரத்துணிய மாத்துடி சட்டுனு, பச்சப்புள்ளக்காரி ஒடம்புக்கு எதுகும் வந்துறப்போகுது”. பொழுது விடிந்தது, அடைமழை விட்டு வானம் வெளுத்திருந்தது, “ஏலே! பாண்டி நம்ம பனமரத்துல கொஞ்சம் ஓலை வெட்டியாடோவ்! டேய்! முருகையா! இங்கன கெழக்குப் பக்கத்துல எரவாரத்துல ஓலைய மோஞ்சு குடிசயப் போட்டுக்கடா!” சீதாராமன் சொல்லி முடித்தார்.
முருகையாவுக்கு மேலும் இரண்டு ஆண்குழந்தை பிறந்து இன்று நிம்மதியாக அந்த ஓலைக்குடிசையில் வாழ்ந்துகொண்டிருந்தான். சீதாராமனின் கைக்குழந்தைகளை, முருகையா தன் குழந்தைகளாகக் கருதி கைகளுக்குள்ளேயே போட்டு வளர்த்தான். முருகையாவின் தந்தை ராமச்சந்திர வேளார் கோயில் பூசாரியாதலால் மிகவும் கட்டுப்பாடு மிக்கவர். அவருக்கு, தன்னை ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் சீதாராமன் முருகையாவுக்குத் தஞ்சம் கொடுத்தது இன்றுவரை கொஞ்சம் மனவருத்தம்தான். ஆனாலும் நல்ல மரியாதைக்குரிய மனிதர் என்பதாலும், அவர் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற அவ்வட்டார மக்களின் அபார நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ ராமச்சந்திர வேளார் சீதாராமனிடம் இதுவரை அந்த விஷயம் பற்றிப் பேசியதே இல்லை. அந்தக் கிராமத்தில் இவர்கள் வேறு வேறு சமூகத்தினர் என்றாலும், அனைவருமே மாமன், மருமகன் என்று முறைவைத்து ரத்த சம்பந்த உறவுகளைப்போலவே உறவு கொண்டாடும் அந்த கிராமங்களுக்கே உரிய பண்பாடு இருந்தது. எந்த விசயத்தையும் சீதாராமனின் ஆலோசனைப்படியே நடத்துவார்கள். எத்தனையோ பிரச்சினைகள் நடந்த போதிலும் அந்தப்பகுதிக்குப் போலீஸ் இதுவரை வந்ததில்லை, கிராமக்கட்டுப்பாடு, ஒழுக்கம் எல்லாமே இன்றுவரை சிறப்பாகத்தான் இருக்கிறது.

அக்காவின் அதிகாலை டீயை உறிஞ்சிக்கொண்டே “மச்சான் எனக்கும் குடும்பம் கொஞ்சம் பெரிசாயிருச்சு, இந்தக்குடிசையில கொஞ்சம் செரமமா இருக்கு, நம்ம கம்மாக்கரையில் இருக்கற வரகாம்புஞ்சயில ஒரு குடிசையப் போட்டுக்கிறனே, கூடவே புஞ்சயப் பாத்துக்கிறேன் மச்சான்” என்றான் முருகையா. பதிலுக்கு சீதாராமன் சிரித்துக்கொண்டே, “கேட்டியா சங்கதிய, ஒந்தம்பி வரகாம்புஞ்சயப் பாத்துக்கறேன்னு சொல்றாம் பாத்தியா?” என்று கொட்டத்தில் பசுவுக்குத் தவிடு வைத்துக்கொண்டிருந்த தன் மனைவியிடம் சொன்னார். “சரி அவெஞ்சொல்றது நாயந்தானே! கையில எட்டுமாசக் கொழந்தையோட வந்தான், இப்ப கூட ரெண்டு பயலுகளாயிப்போயிட்டாங்கெ, நம்ம புஞ்சையும் பூதிலதானே கெடக்கு, அவந்தான் பாத்துக்கிறேன்னு சொல்றானே, பாத்துக்கிறட்டும்” என்றாள் பதிலுக்கு.


“முருகையா மாமா முன்னாடி மாதிரி ஏம்மா நம்ம வீட்டுக்கு வர்றதில்ல?” பாலு, எப்போது விடுமுறைக்குத் தன் சொந்த ஊருக்குச் சென்றாலும் கேட்பதுண்டு. “அவனுக்குப் பேரன் பேத்தி ஆயிப்போச்சுய்யா, மூத்தவ பாண்டியம்மாளுக்கு இது மூணாவது பெரசவமாம், இருளாயி அங்கெ பொய்ட்டா, இவன் மயம்புட்டு புள்ளயல வச்சுகிட்டு அல்லாடறான் பாவம், இதுல எங்கெ இங்கெ வர்றது?” என்றாள் அம்மா பதிலுக்கு.
பாலுவுக்கு விடிந்ததே தெரியவில்லை, அப்படியே சோபாவில் சாய்ந்தவன் கண்ணயர்ந்துவிட்டான். மனசு கேட்கவில்லை, மறுபடியும் போனை எடுத்தான், இப்போது இந்தியாவில் பொழுது சாயும் நேரம்தான், அம்மா தூங்கியிருக்கமாட்டாள். எதிர்முனையில் அம்மா அரசல்புரசலாக, பதட்டத்துடன் போனை எடுத்து “யாரு பேசறது”, “நாந்தாம்மா! பாலு” சொல்லி முடிப்பதற்குள், “அய்யோ! அந்த வகுத்தெரிச்சலெ ஏய்யா கேக்குறே! அந்தப் பாதகத்தி மருந்தக்குடிச்சது தாங்காமெ, ஊர ஒன்னுகூடி அங்கனெ நிக்கையில, இந்தப்பய முருகையா, எல்லாரு கண்ணுலயிம் மண்ணெத்தூவிப்புட்டு சுடுகாட்டு ஊரணி வேம்புல கயத்துல தொங்கிட்டான்யா.. நான் என்ன செய்யிவேன், இந்தா... ஊரே அலறியடிச்சு ஓடுதே!” என்று அலறி அம்மா போனை வைத்தாள். பாலு உறைந்துபோய் நின்றான்.

- நவநீ

April 21, 2007

"ஆதங்கம்"

என்னதான்
உனக்கு நான்
மிகநெருக்கமானவனாக

இருந்தாலும் - என்னை
உன் வீட்டு
வாசல்வரைதானே
அனுமதிக்கிறாய்...
செருப்பு

பாலா - சென்னை

"தேசியகீதம்"

என்னைப் புல்லரிக்கவைத்த ஒரு வீடியோ இங்கே!!

April 20, 2007

நம்ம ஊருங்க..

வெளிநாடுகளில் வாழக்கூடிய எத்தனையோ நண்பர்கள், குடும்பங்கள் இன்னும் நம் சிங்காரச் சென்னையை, தமிழகத்தை மறந்திருக்கமாட்டார்கள்....
மறந்து போன மறத்தமிழர்களுக்கு...
இந்த வீடியோ தமிழகத்தை நினைவூட்டும் என நினைக்கிறேன்

Night Life in Chennai: IT நண்பர்களின் வாதம் சரியா??

இரவு நேரங்களில் நடக்கக்கூடிய அவலங்களை நியாயப்படுத்தி வாதாடலாம், ஆனாலும் இதெல்லாம் கலாச்சாரச் சீரழிவுக்கு அடிகோலும் தொடக்கமென்றுதான் நான் கருதுகிறேன்...
உங்களின் கருத்துக்களை நீங்களும் இங்கு தெரிவிக்கலாம்...If you are not able to view here, Please double click "YouTube" and put the heading in search box and view..(Sorry for this issue)

"மேஸ்ட்ரோ"

இசைஞானி இளையராஜாவின் இசையில்....
கொஞ்சம் நனைவோமா?



April 19, 2007

"நீ"

உன்னை
நினைக்கவே கூடாதென்றுதான்
நினைக்கிறேன் - ஆனாலும்
என் பொழுதுகளில் சில நிமிடங்களிலாவது
வந்து செல்லும்........நீ
லைகா - சென்னை

April 18, 2007

பி.சுசீலா

எப்பொழுது கேட்டாலும் மனதுக்கு இதம் தரக்கூடிய சில பாடல்கள் உண்டு என்றால் அவற்றில் இவைகளும் அடங்கும்.. நீங்களும் கேட்டுப்பாருங்கள்!



"தேடல்"

எங்கு தேடியும்
கிடைக்காமல்போன
அந்த வார்த்தைகளை
அலங்கரிப்பதற்காகவேணும் - நாம்
இன்னொருமுறை சந்தித்தே ஆகவேண்டும்.......

லைகா - சென்னை