October 31, 2007

"நான் நினைக்கிறததான் எடுப்பேன்" - 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் இயக்குநர் ராமின் பேட்டி

எண்பது, தொண்ணூறுகளில் எஸ்.பி.முத்துராமன்களும், ஜெகன்னாதன்களும் வணிகப்படங்களை கொளுத்திப் போட்டுக் கொண்டேயிருக்க, மகேந்திரன், பாலுமகேந்திரா வகையறாக்களிடமிருந்து வெளிப்படும் கலாபூர்வமான மென்மையான படங்களின் வரவு அபூர்வமாகத்தானிருந்தது. இன்றைய சூழ்நிலையிலும் வணிகப்படங்களின் ஆதிக்கத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லையெனினும் சேரன், பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என்று நம்பிக்கை தரக்கூடிய இயக்குநர்கள் தட்டுப்பட்டு அவர்களின் படைப்புகளும் பொருளாதார ரீதியாக ஒரளவிற்கு வெற்றிகரமாகவே பயணிக்கிறது. அந்தவரிசையில் இன்னொரு இயக்குநராக 'கற்றது தமிழ்' இயக்குநர் ராம்- ஐ சொல்லாம் என்று நினைக்கிறேன். இவரின் படத்தை இன்னும் நான் பா¡க்கவில்லை. பத்திரிகைகளின், நண்பர்களின் விமர்சன ஆரவாரங்கள், பரபரப்புகள் போன்றவைகள் அடங்கிய பின்பே "நல்லபடம்" என்று சுட்டப்படுபவைகளை நான் பார்ப்பது வழக்கம். புதியபார்வை (நவம்பர் 1-15) இதழில் இவரின் ஆரோக்கியமான 'திமிருடன்' கூடிய உரையாடல் பதிவை வாசித்த போது மகிழ்வாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். சற்று நேரம் செலவு செய்து படித்து விடுங்கள். (நன்றி: புதிய பார்வை) இயக்குநர் ராம் உடன் புதிய பார்வைக்காக தொலைபேசியில் நடந்த உரையாடல்..........
"ஹலோ ராம்... எப்படியிருக்கீங்க... புதிய பார்வைக்காக கொஞ்ச நேரம் பேசலாமா?"
"பத்து நிமிஷம் போதும் இல்லையா?.. உங்க பேர் என்ன சொன்னீங்க?"
"பரசுராம்"
"ஓ.. பரசுராம்.. கேள்விப்பட்ட மாதிரி இருக்குது. எங்கேயாவது பாத்திருக்கமா?"
"ஆமாம். படம் வெளிவர்றதுக்கு முன்னால, ஒரு ஹோட்டல்ல மதிய சாப்பாட்டுக்குப் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம்"
" சரி. கேள்வி கேளுங்க"
"எப்படி இந்தப் படத்தை ஆரம்பிச்சீங்க?"
"எனக்கு வசதியா எந்தப் படம் இருக்குமோ அதைத்தான் என்னால எடுக்க முடியும்"
"எப்படி இருக்கு படத்துக்கு இருக்கற வரவேற்பு?"
"நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படல. படம் எடுத்தாச்சு. அவ்வளவுதான். பாலுமகேந்திரா சார் பாத்துட்டு ஆசியாவிலேயே ஐந்து சிறந்த திரைப்படத்தை வரிசைப்படுத்தினா அதுல கற்றது தமிழ் வரும்னார். அவருக்கு கண் கலங்கிடுச்சு. வண்ணதாசன் இந்த வயசுல என்னைத் தேடி வந்து படத்தைப் பத்தி நிறைய பாராட்டிப் பேசி ஒரு இராத்திரி என்னோடவே தங்கிட்டுப் போனார். சாருநிவேதிதா ஒரு பத்திரிகையில படத்தைப் பத்தி பதினைந்து பக்கம் எழுதியிருக்கிறதா சொன்னார். ஊர் ஊரா கூப்பிட்டுப் பாராட்டறாங்க"
"பத்திரிகை விமர்சனங்களை எல்லாம் பார்த்தீங்களா?"
"நீங்க எத்தனை தடவை படம் பார்த்தீங்க?"
"ஒரு தடவை"
"எநதத் தியேட்டர்ல?"
"உதயம்"
"ஒரு நாவலை விமர்சனம் பண்றதுக்கு எத்தனை தடவை படிப்பீங்க?"
"இரண்டு மூன்று தடவை"
"அப்பப் படத்தை மட்டும் ஒரே ஒரு தடவை பாத்திட்டு விமர்சனம் எழுத முடியுமா?"
"கஷ்டம்தான்"
"அதான். பத்திரிகையில வர்றது எல்லாமே வெறும் பதிவுதான். ஒரு தனிநபரால எழுதப்படுகிற பதிவு. என்னை கற்றுக் கொள்ள வைக்கிற விமர்சனம் எதையும் இந்தத்தேதி வரை - இன்னைக்குத் தேதியை குறிச்சுக்கோங்க - வரலை. சில தனிநபர்கள் நேர்ல நான் கத்துக்கற மாதிரி சில விஷயங்கள் சொன்னாங்க. பிரிண்ட்ல இதுவரைக்கும் வந்ததெல்லாம் விமர்சனமே இல்ல"
"ம்.... படம் நீங்க நினைச்சு எடுத்த மாதிரி ரிசீவ் பண்ணப்படுதா?"
"படம் எடுக்கறதுதான் என்னோட வேலை. புரிய வைக்கறதா என்னோட வேலை?"
"எந்த அடிப்படையில் கதாபாத்திரத்தைத் தொடங்க ஆரம்பிக்கிறீங்க?"
"தத்துவத்தின் அடிப்படையில்தான்"
"என்ன தத்துவம்"
"தத்துவத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா? சென்னைதான் என் தத்துவம்"
"சென்னையா?"
"ஆமாம். சென்னை என்கிற நகரம்தான். அதற்குள் புறத்திலிருந்து வரும் மாந்தர்கள்தான் என் கதாபாத்திரங்கள். அவர்களின் அக..புறச் சிக்கல்கள், முடிச்சுகள்"
"தமிழ் படிச்சவனோட பிரச்சினையைத்தான் படத்தில் பேசியிருக்கிறதா நிறைய பேச்சு இருக்கு. நீங்க அப்படி நினைச்சு எடுத்தீங்களா?"
"உங்களுக்கு எப்படி தோணுது?"
"எனக்கென்னவோ தமிழ் படிச்சவனோட பிரச்சினையை மட்டுமே பேசற மாதிரி தெரியலை"
"இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுது. படத்தில் நிறைய sub text வச்சிருக்கேன். அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ பேசிக்கட்டும்"
"இந்த ஐ.டி. துறை மேல வச்சிருக்கிற விமர்சனத்துக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருது?"
"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-னு போடுங்க. ஆயிரக்கணக்குல பேசியிருக்காங்க. படிங்க"
"படம் சுய விவரிப்புல நடக்குது. ஆனா முடியும் போது நீங்க வந்து... ஒரு மூன்றாவது குரல் - பேசுவது எதற்கு?"
"அப்படி வரக்கூடாதுன்னு எந்த சினிமா மேதை எந்தக் கலைக் கோட்பாடுல பேசியிருக்கார். இருந்தா பேர் சொல்லுங்க. இல்ல இது நீங்களே சொல்றதா? சிட்டி ஆப் காட்-னு ஒரு படம் பாத்திருக்கீங்களா? அதுல சுயவிவரிப்பும் வரும். மூன்றாவது குரலின் விவரிப்பும் வரும்"
"ஒரு விவாதத்தை இப்படி ஆரம்பிச்சா முடிவு கிடைக்காது"
"எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கிறததான் எடுப்பேன்"

மிக மிக மெதுவான கேமரா

October 30, 2007

அஞ்சலி : முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ரா மரணம்

லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91-வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர். அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது (ஒரு நாவல்தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார். தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916-ம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18-வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்றைய குறள்

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கவிதையில்தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது

"கவிதைகளுக்கும், வழக்கத்தில் உள்ள மொழிக்கும் உள்ள உறவு தினசரி மாறிக் கொண்டே இருக்கிறது. மொழி குறித்த நமது பிரக்ஞையை விடாமல் புதுப்பித்துக் கொள்ள கவிதை உதவுகிறது. கவிதையில் தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட அனுபங்களை வெளிப்படுத்துவதே சிறந்த கவிதை. ஒரு சொல்லை கவிஞர் தேர்ந்தெடுக்கிறார் என்பதைவிட அந்த சொல்லை கவிதைதான் தேர்ந்தெடுக்கிறது" - பிரம்மராஜன், எழுத்தாளர்

கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

  • நைஜீரியாவில் கடத்தப்பட்டவர்கள் விடுதலை : நைஜீரியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியன்று, பெட்றோலியம் அகழும் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களும், இரண்டு போலந்து நாட்டுக்கார்ரகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய துணைத் தூதர் அணில் திரிகுணாயத் தமிழோசையிடம் தெரிவித்தார். விடுவிக்கப்பட்டவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார். இந்தக் கடத்தல் தொடர்பாக எந்தக் குழுவும் உரிமைகோரவில்லை என்றும் இவர்களை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இந்தியத் தூதர் தெரிவித்தார். கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட அஜித் காமராஜின் இளைய சகோதரர் சுதர்சனன் தனது அண்ணன் விடுவிக்கப்பட்ட பிறகு தம்மிடம் பேசியதாகவும், கடத்தியவர்கள் தம்மை துன்புறுத்தவில்லை என்று தம்மிடம் கூறியதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார். இது குறித்த மேலதிகத் தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • நூற்றுக்கும் அதிகமான ஆப்பிரிக்கக் குழந்தைகளை அழைத்துச் சென்ற தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளை சாட் அரசு கைது செய்துள்ளது : ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இருந்து நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற தன்னார்வ அமைப்பு ஒன்றின் அதிகாரிகளை சாட் நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
  • நானூறு வயதான சிப்பி : சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்
  • இராக்கில் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை நீதி விசாரணைக்கு உட்படுத்த வழி செய்யும் சட்டமூலம் : இராக்கில் செயற்படுகின்ற வெளிநாட்டு பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள், குற்றவிசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க வழி செய்யும் தற்போதைய சலுகையை ரத்துச் செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்றுக்கு இராக்கிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது
  • பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகாமையில் ஒரு தற்கொலைதாரி குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும், பலர் காயமடைந்தார்கள் என்றும் கூறப்படுகிறது
  • எலிசபெத் மகாராணியாரைச் சந்தித்த சவூதி அரசர் : லண்டனில் சவூதி மன்னர்பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருக்கும் சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அவர்களின் பயணத்தின் முதல் நிகழ்வாக, எலிசபெத் அரசியார் அவரை முறைப்படி வரவேற்றார்
  • இராக்கின் மிகப் பெரிய அணையின் பாதுகாப்புக் குறித்து அமெரிக்கா கவலை : இராக்கில் உள்ள மிகப் பெரிய அணையின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    மோசூல் நகருக்கு வடக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் டைக்ரிஸ் நதியின் குறுக்காக இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது

October 29, 2007

இன்றைய குறள்

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப்பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

சம்பாதிக்க வழியா இல்ல.. இவரப்பாருங்க!

முட்டாள்தனம் மனித இனத்தின் அசிங்கம்

"சமூகத்தில் நடக்கிற எல்லா தவறுகளுக்கும் மக்களோட முட்டாள்தனம் தான் மூலகாரணம். அறியாமை மனித இனத்தின் அழகு. முட்டாள்தனம் அசிங்கம்" - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு கத்திக்குத்து

  • தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமியை இன்று திங்கட்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சில அடையாளம் தெரியாத நபர்கள் வேல்கம்புகளாலும் கத்தியாலும் குத்தியிருககின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிசமான அளவு இரத்த இழப்பு ஏற்பட்டிருககிறது, அவர் தற்போது மதுரை தனியார் மருத்துவமனையன்றில் அனுமதிககப் பட்டிருககிறார். உயிருககு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது. நாளை பசும்பொன்னில் நடைபெறவிருககும் முத்துராமலிங்கத்தேவர்அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. முக்குலத்தோரைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவரென நினைத்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டிருகககூடும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
  • நைஜீரியாவில் 3 தமிழர்கள் உட்பட 4 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் : எஃப்.பி.எஸ்.ஓ. மிஸ்ட்ராஸ் என்ற இத்தாலிய நிறுவனத்திற்காக நைஜீரியாவின் எண்ணைக் கிணறு ஒன்றில் வேலைபார்த்துவந்த நான்கு இந்தியர்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட வடக்கான் குளம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டனர். நான்காவது நபர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர்களை விடுவிக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நைஜீரியாவுக்கான இந்தியாவின் துணைத் தூதர் அனில் த்ரிகுணாத் தமிழோசையிடம் விளக்கினார். கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
    அவர் தெரிவித்த விபரங்களை நேயர்கள் கேட்கலாம்
  • மும்பை பங்கு சந்தையின் புதிய சாதனையும், நிலமற்ற ஏழை விவசாயிகளின் போராட்டமும் : இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் இன்று 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துசென்றுள்ளது. பங்குச் சந்தையின் அதிவேக வளர்சியின் காரணமாக இந்திய நிறுவனங்களின் மதிப்பு உயந்துள்ளது
  • வட இலங்கையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல் வலுத்துள்ளது : இலங்கையின் வடக்கே மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மன்னார் தம்பனை பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்திருந்த பொறிவெடியில் சிக்கிய இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் மேற்குலக நாடுகளின் ஈடுபாடு போதாது என்கிறார் சவுதியரேபிய மன்னர் : பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் போதிய முயற்சி எடுக்கவில்லை என்று தான் நம்புவதாக சவுதியரேபிய மன்னர் அப்துல்லா கூறியுள்ளார்

October 28, 2007

வெளிநாடுகளுக்குச் சென்ற விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வரவேண்டும்

"உயரே செல்லச் செல்ல பூமி ஒரு புள்ளியாகிவிடுவது போல், அறிவில் உயர உயர மனிதகுலம் அன்பை இழந்து கொண்டிருக்கிறதா? நம் தொழில்நுட்பம் அமெரிக்காவை அடுத்த வீடு ஆக்கிவிட்டது. ஆனால், அடுத்த வீட்டை அமெரிக்காவாக்கிவிட்டது. வயிறு, மூளை, இதயம் மூன்றுக்கும் சமபந்தி வைப்பது போல்தான் கல்வி. தொழில்நுட்பக் கல்வி பெற்ற பலர் அமெரிக்க, ஐரோப்பியக் கனவுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தாய்நாடு தந்த அறிவை இந்த தாய்நாடே முதலில் அனுபவிக்கட்டும். வெளிநாடுகளுக்குச் சென்ற விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வரவேண்டும்"

- வைரமுத்து

இன்றைய குறள்

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்

நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

சம்பாதிக்க வழியா இல்ல.. இவரப்பாருங்க!!

கறும்புலிகள் புதைக்கப்பட்ட சர்ச்சை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி கருத்து

  • சமீபத்தில் அநுராதபுர விமானதள தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் சடலங்கள் முறையான நீதிமன்ற உத்தரவின்றி புதைக்கப்பட்டு விட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த பின்னணியில், இந்த சடலங்களை புதைக்கும் முடிவை தாம் எடுத்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் இந்த சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜெயசேன. போதுமான குளிர்பதன வசிதியில்லாததன் காரணமாக அனுராதபுரத்தில் இந்த சடலங்களை வைக்க தங்களுக்கு வசதியில்லை என்றும் அதனால் பேரிடர் ஏற்படும்போது சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட நடைமுறைக்கேற்ப தற்காலிகமாக உடல்களை புதைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சடலங்களை புதைக்க நீதிமன்ற உத்தரவு தேவை என்றும் அது போன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கும் அஜித் ஜெயசேன, தாம் உள்ளிட்ட பிரேதப் பரிசோதனை செய்த குழுவினர் இந்த 21 சடலங்களை தற்காலிகமாக புதைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். இந்த சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பெற்றுக்கொள்ள விடுதலைப் புலிகள் விரும்பினால் அது சாத்தியம் என்றே தாம் நினைப்பதாகவும், இந்த சடலங்களை பொறுப்பானவர்கள் எடுத்துச்செல்லும்வரை அவற்றை குறிப்பிட்ட காலத்துக்கு புதைத்து வைத்த முடிவுக்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
  • இந்தியாவில் ஆடை தயாரிக்க குழந்தை தொழிலாளர் பயன்படுத்தப்பட்டது குறித்து 'கேப்' நிறுவனம் அதிர்ச்சி : இந்தியாவிலிருந்து 'கேப்' நிறுவனத்துக்கு கொள்முதல் செய்யப்படும் ஆயத்த ஆடைகளை தயாரிக்க சில இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக விவாதிக்க இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகளை அனுப்பும் நிறுவனங்களை சர்வதேச ஆடை நிறுவனமான 'கேப்' அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆடைகளை தயாரிக்க குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றுவந்த தகவல்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆடைகள் அழிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. பிபிசி நிறுவனத்துக்கு கிடைத்த தொலைக்காட்சி படத்தில்,'கேப்' நிறுவனத்திற்கான ஆடைகளை தயாரிக்கும் ஒரு துணை ஒப்பந்ததாரரின் தொழிற்சாலையில் ஒரு சிறுவன் 'கேப்' நிறுவனத்தின் அச்சு பொறுத்தப்பட்ட உடையை தைப்பது தெரிந்தது.
  • நெஞ்சம் மறப்பதில்லை - ஆறாம் பாகம் : ஒரு மூலக் கதையை திரையில் சுவாரஸ்யமாக அளிக்கும் வகையில் திரைக்கதை அமைப்பதில்தான் ஒரு இயக்குநரின் திறமை அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். திரைக்கதை அமைப்பதில் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டை இயக்குநர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள்; கதைக்கு ஏற்ப அழகான முறையில் பாத்திரங்களை உருவாக்கி சம்பவங்களைக் கோர்த்து கொடுப்பதில் இவர்கள் வல்லவர்கள் என்கிறார் சம்பத்குமார். அண்ணாதுரையின் கதை வசனத்தில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் உருவான 'நல்லதம்பி' திரைப்படமானது, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற பிரச்சாரங்களை செய்வதாகவும் சமதர்ம சமுதாயத்தை இலக்காகக் கொண்ட படமாகவும் விளங்கியது. அவர்கள் இயக்கிய 'பராசக்தி' திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல். கருணாநிதியின் கணல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜி கணேசனின் ஆக்ரோஷ நடிப்பும், புரட்சிக் கருத்துகளும் அடங்கிய படமிது. கிருஷ்ணன்-பஞ்சு படங்களில் கனமான கதையம்சம், உணர்ச்சிப்பூர்வமான பாத்திரப்படைப்பு, கண்ணியமான காட்சியமைப்பு இருந்ததை நெஞ்சம் மறப்பதில்லை ஆறாம் பாகம் எடுதியம்புகிறது.
  • நிலச் சீர்திருத்தம் கோரி தில்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் : இந்தியத் தலைநகர் புதுதில்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 25 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருந்திரளாக கூடியுள்ளனர். நான்கு வார காலம் நடைப் பயணமாக 325 கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் மேற்கொண்டு வந்துள்ள இவர்கள் விவசாய நிலங்களில் தமக்கும் பங்கு கேட்டு போராடுவதற்காக தில்லி வந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நிலமற்ற பழங்குடியின மக்களும் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளும் அடங்கிய இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நிலச் சீர்திருத்தம் வரவேண்டும், விவசாய நிலங்களின் மீதான உரிமை குறித்து தெளிவான சட்டங்கள் வரவேண்டும் என்று கோருகின்றனர். தெளிவான சட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே தொழிலாளிகளுக்கு நிலம் கிடைப்பதில்லை என்றும் நடைமுறையிலுள்ள விதிமுறைகளும் பெரு நில உரிமையாளர்களுக்கு சாதகமாகவே இருப்பதாகவும் அவர்கள் குமுறுகின்றனர். கிராமத்து ஏழை மக்களிலேயே மிகவும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களடங்கிய இந்த ஊர்வலத்தினர் தமது கோரிக்கையை அதிகார உயர்மட்டத்துக்கு கொண்டுசெல்ல விழைகிறார்கள்.
    மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை அவர்கள் ஏற்கனவே சந்தித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கையும் நாளை திங்கட்கிழமை அவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். நில மறு பங்கீட்டு கோரிக்கை என்பது இந்திய அரசியல் அரங்கின் வழமையான ஒரு அங்கம்தான் என்றாலும் தற்போது கோரிக்கைகளை செவிமடுக்கும் ஒரு மனோநிலையில் அரசாங்கம் இருப்பதுபோல் தெரிகிறது. நில மறு பங்கீட்டு ஆணைக்குழு இதோ வந்துகொண்டிருக்கிறது என்று அரசு வாக்குறுதியளித்துள்ளது. தில்லி நிலச் சீர்திருத்த ஆர்ப்பாட்டம் பற்றி செய்தியாளர் ஜதிந்தர் சித்து வழங்ய தகவல்களின் தமிழ் வடிவத்தையும் இந்திய விவசாய நிலங்களின் தற்போதைய நிலைமை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
  • இலங்கை மோதல்களில் புலிகள் 14 பேர், இராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் : இலங்கையின் வடக்கே இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • இராக்-துருக்கி நெருக்கடி ஆபத்தானது: இராக் வெளியுறவு அமைச்சர்
    இராக் மற்றும் துருக்கி இடையிலான எல்லைப் பகுதியில் குர்த் இன பிரிவினைவாத இயக்கம் பி.கே.கே நடத்திய தாக்குதல் காரணமாக இருநாடுகள் இடையில் ஏற்பட்டுள்ள தகராறு 'மிக ஆபத்தானது' என்று இராக்கி வெளியுறவு அமைச்சர் ஹொஷ்யார் ஸெபாரி கூறியுள்ளார்
  • ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் 80 பேரை கொன்றுள்ளதாக அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகள் அறிவிப்பு : ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் சுமார் 80 பேரை கொன்றுகுவித்திருப்பதாக அங்குள்ள அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகள் கூறுகின்றன
  • பாகிஸ்தானில் தொடரும் மோதல் : சமீப காலமாக பதற்றம் நிலவி வரும் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் தாக்குதல் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் செயல்படும பாகிஸ்தானிய படையினரும் - இஸ்லாமியத் தீவிரவாதிகளும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்

ஈழக்கிழவனின் கொஞ்சநேரம்



இதயத்தைப் பிழியும், உயிர்வலிக்கும் நம் சகோதரர்களின் சோககீதம்

October 27, 2007

யுகேந்திரன் மலேசியா வாசுதேவன்

இன்றைய குறள்

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு

  • ஜனதாதளத்தில் திடீர் மாற்றம் : கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு மூன்று வாரங்கள் ஆன நிலையில் இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சி அமைக்க முனைந்திருக்கின்றன. பாரதீய ஜனதா ஆதரவுடன் இருபது மாதங்கள் ஆட்சி நடத்திய மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒப்பந்தப்படி பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்துவிட்டது. மக்களைச் சந்திக்கத் தயார் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்தது.
    அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும், சட்டப்பேரவை கலைக்கப்படாமல், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அதை மீண்டு்ம் இயக்கத்துக்குக் கொண்டுவர முடியும். இந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாஜக-வின் யெதியூரப்பா தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து, மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் மற்றும் கர்நாடக ஆளுநருக்கு கடிதங்களை அனுப்பியிருப்பதாக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவர் தேவகெளடவின் மகனுமான எச்.டி. குமாரசாமி தெரிவித்தார். இந்த திடீர் அரசியல் மாற்றம் குறித்து, கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கட்டா சுப்ரமணியத்திடம் கேட்டபோது, ஏற்கெனவே ஆதரவு தர மறுத்த மதச்சார்பற்ற ஜனதாதளத்தினர் தற்போது தாங்களாகவே ஆதரவு தர முன் வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
    கர்நாடக ஆளுநரிடம் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரியிருப்பதாகவும், ஆதரவுக் கடிதங்களை ஆய்வு செய்துவிட்டு முடிவு அறிவிப்பதாக அவர் தெரிவித்திருப்பதாகவும் கட்டா சுப்ரமணியம் தெரிவித்தார்.
  • இந்திய காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்திய நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியின் பிரதான நகரமான ஸ்ரீநகரில் இந்தியப் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்துள்ளது
  • பாகிஸ்தானில் கடும்போக்கு மதகுரு ஆதரவாளர்கள் 13 பேரை கொன்றுள்ளனர் : வடமேற்குப் பாகிஸ்தான் பகுதியில் சுமார் 13 பேர் கடும்போக்கு முஸ்லிம் மதகுரு ஒருவருடைய ஆதரவாளர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்
  • மன்னார் மாவட்ட மடு தேவாலயப் பகுதியை பாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்க மன்னார் ஆயர் ஜனாதிபதியிடம் கோரிக்கை : மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் கஷ்டங்களைப் போக்குவது தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், கொழும்பு பேராயர் மற்றும் மடு தேவாலய பரிபாலகராகிய அருட்தந்தை எமிலியாஸ் பிள்ளை ஆகியோருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்
  • ஜார்க்கண்ட் மாவோயியவாதிகள் தாக்குதலில் 17 பேர் பலி : இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் சனிக்கிழமை அதிகாலை மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 17 பேர் கொல்லப்பட்டார்கள்
  • சோமாலியத் தலைநகரில் கடும் சண்டை : சோமாலியத் தலைநகர் மொகதிஷுவில் பலத்த மோதல் வெடித்துள்ளது. நகரின் தென்பகுதியில் ஷெல் குண்டுகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டுள்ளன
  • இன்றைய (அக்டோபர் 27 சனிக்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews