November 02, 2007

இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் மரணம்

  • விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் வேறு ஐந்து பேரும் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்ச்செல்வன் - ஒரு பார்வை : தமிழ்ச்செல்வன் என்றவுடன் பலரது நினைவுக்கும் வருவது அவரது மலர்ந்த புன்னகை பூக்கும் முகம்தான்.
    இந்த மிக மோசமான உள்நாட்டுப்போரில் அவரது எதிரிகளுக்கோ, இந்த புன்னகை என்பது அவரது கொடூரத்தை மறைத்த ஒரு முகமூடி. அவ்வளவுதான். ஆனால் அவரது நண்பர்கள், அவரை ஒரு மதிப்புக்குரிய மற்றும் நன்கு அறியப்பட்ட போராளியாகவும், ஒரு நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவராகவும் கருதினர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1984-ல் இணைந்த தமிழ்ச்செல்வன் அவர் பிறந்த மண்ணான யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிகாக்கும் படைகளை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கியமானவர். 1993-ல் அவர் ஒரு விமானத்தாக்குதலில் காயமடைந்து ஒரு காலில் இருந்து எல்லா சதையும் எடுக்கப்பட்டு, கோல் ஊன்றாமல் நடமாட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழ்ச்செல்வன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளியே தெரிந்த முகமாக விளங்கினார். புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுக்கு தலைமை தாங்கியதுடன், இலங்கை அரசுடன் நடந்த ஏறக்குறைய எல்லா அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார். இலங்கையில் உள்ள மற்ற எல்லா அரசியல்வாதிகளையும்விட ஒருக்கால் மிகவும் அதிகமாக பேட்டி காணப்பட்டவர் அவராக இருக்கலாம். தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வருடங்களுக்கு முன்னர் பிறந்த ஒரு மகன் ஆகியோர் இருக்கின்றனர்
  • இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் : இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் மூலம் திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, புதிய தமிழகம் கட்சியின் சார்பில், புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • மெக்ஸிகோவில் பெரு வெள்ளம் : மெக்ஸிகோவின் தென்பகுதி மாநிலமான தபஸ்கோவில், இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மிகவும் மோசமான வெள்ளப்பெருக்கில் அகப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றுவதற்காக, மீட்புப் பணியாளர்கள் மும்முரமாகப் போராடி வருகிறார்கள்
  • இந்தியாவில் சிறார் தொழிலாளர்கள் பலர் மீட்கப்பட்டனர் : இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் சோதனை நடத்திய பொலிஸார் அங்கு வேலை செய்த குறைந்தது 70 சிறார்களை மீட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்

சம்பாதிக்க வழியா இல்ல...இவரப்பாருங்க!

November 01, 2007

இன்றைய குறள்

அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கடவுள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள நான் பட்டை அடிக்கிறேன்

"நெற்றியில் ஏன் இப்படி வீபூதி பட்டை அடிக்கிறீங்க?" என்று கேட்டதற்கு பதில் இப்படி வந்தது.. "வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சுண்ணாம்பு அடிக்கிறோம் அதை போல கடவுள் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள நான் பட்டை அடிக்கிறேன்" - கிருபானந்த வாரியார்

வட இலங்கையில் கடுமையான மோதல்

  • இந்தியாவின் அரச மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு விசாரணை : இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவின் மத்திய அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்க்கீடு வழங்கி இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய நடுவணரசு சட்டம் கொண்டுவந்தது.
    இதை எதிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணைகள் இன்று முடிவடைந்திருக்கின்றன.
    தீர்ப்புக்கான தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். இந்த பின்னணியில், சுமார் மூன்று மாதகாலம் நீடித்த, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு விசாரணைகள் குறித்து, இந்த விசாரணையை தொடர்ந்து அவதானித்து வரும், இந்து பத்திரிகையின் புது தில்லி செய்தியாளர் ஜெ.வெங்கடேசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
  • வட இலங்கையில் கடுமையான மோதல்: மக்கள் இடம்பெயர்வு
    இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தின் தென்மேற்கே மன்னார் கட்டுக்கரை மற்றும் வடக்கே யாழ்ப்பாணம் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்
  • இந்தியாவில் அருகிவரும் புலிகள் பற்றிய ஆய்வுக்கூட்டம் : இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அருகி வருகிறதுஇந்தியாவில் குறைந்துவரும் புலிகளைப் பாதுகாப்பதற்கான ஆய்வுக்கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
    தேசிய வனவிலங்குப் பாதுகாப்புக் குழு என்ற அந்தக் குழுவில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர்கள் ரகுபதி, நமோ நாராயண மீனா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வனம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள், பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் உள்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் 17 மாநிலங்களில், 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில், 28 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றை, தேசிய புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
    ஏற்கனவே, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறம்பட செயல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
    இவை குறித்த மேலதிக தகவல்களையும், இந்தியாவில் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புலிகளின் எண்ணிக்கை அருகி வருவதற்கான காரணங்கள் குறித்து, இந்தியாவின் முன்னோடி வன உயிரியல் ஆய்வாளர், டாக்டர் ஏ.ஜே.டி.ஜான்சிங் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • மட்டக்களப்பில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கவலை : மட்டுநகரின் ஒரு தோற்றம்இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் பலவற்றில் அண்மைக் காலமாக ஆயுதமுனையிலான கொள்ளைச் சம்பவங்களும், வீதி வழிப்பறிகளும் மிகவும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • உகாண்டாவின் கிளர்ச்சிக் குழுவினர் அரசுடன் சமாதான பேச்சு வார்த்தைகளை துவங்கவுள்ளனர் : ஆப்பிரிக்காவின் மிக மோசமான மற்றும் நெடுநாளைய மோதல் ஒன்றை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாக தேவனின் போராட்டப் படை என்றழைக்கப்படுகின்ற உகாண்டாவின் கிளர்ச்சிக்குழு ஒன்றின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக தலைநகர் கம்பாலா வந்தடைந்துள்ளனர்
  • இராக்கில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது : இராக்கில் கொல்லப்பட்ட சாமானியப் பொதுமக்களின் எண்ணிக்கையானது அண்மைய மாதங்களோடு ஒப்பிடுகையில் கடந்த அக்டோபரில் குறைவாக இருப்பதாக கடைசியாக பெறப்பட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு மாதங்களாக பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
  • 2005 லண்டன் சுரங்க ரயில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியமைக்காக காவல்துறைக்கு அபராதம் பொலிசாரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி2005 ஆம் ஆண்டு லண்டன் சுரங்க ரயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த அப்பாவியான ஜான் சார்ல்ஸ் டி மெனசஸ் என்பவரை லண்டன் காவல் துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் போது, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி விட்டதாக, லண்டனின் பிரதான காவல்துறையான லண்டன் பெருநகர காவல்துறை தண்டிக்கப்பட்டுள்ளது
  • ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு உதவப்போன ஜப்பான் கப்பற்படை கப்பல்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன : ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுவரும் அமெரிக்க தலைமையிலான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயலாற்றிவரும் தனது இரண்டு கடற்படை கப்பல்களை உடனடியாக தனது பணிகளை இடைநிறுத்திவிட்டு நாடு திரும்பும்படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது
  • சாட் நாட்டிலிருந்து கடத்த முயற்சிக்கப்பட்ட குழந்தைகள் அனாதைகள் அல்ல: சர்வதேச தொண்டு நிறுவனங்கள் - சாட் நாட்டில் பிரஞ்சு உதவி அமைப்பு ஒன்று குழந்தைகளை கடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்க்கு பெற்றோர்கள் இருப்பதாய் தெரியவந்துள்ளதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் கூறுகின்றன
  • சொமாலியாவில் மனித அவலம்: ஐ.நா.மன்றம் - சொமாலியாவின் இடைக்கால அரசை ஆதரிக்கும் எத்தியோப்பிய படையினருக்கும், பலமான ஆயுதங்களை தன்னிடம் கொண்டிருக்கும் ஆயுத குழுக்களுக்கும் இடையில் சமீபத்தில் உருவாகியிருக்கும் சண்டை காரணமாக, சொமாலிய தலைநகரான மொகதிஷுவில் இருந்து சுமார் தொண்ணூறா யிரம் பேர் வெளியேறியிருப்பதாக, ஐநா மன்றம் தெரிவித்துள்ளது

October 31, 2007

இன்றைய குறள்

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு

  • தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது : உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது
  • பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு : அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷனுக்கு 42-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
  • யுத்தச் செய்தி தணிக்கை வர்த்தமானியை இலங்கை அரசு விலக்கிக்கொண்டது : இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தின்கீழ் உணர்ச்சிபூர்வமான இராணுவச் செய்திகளை வெளியிடுவதற்கும், பிரசுரிப்பதற்கும் தடைவிதிக்கும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் இராணுவ யுத்த செய்தித் தணிக்கையை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை மேற்கொண்டிருந்தார்
  • மட்ரிட் ரயில் குண்டுவெடிப்பு: 20 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு : மட்ரிட் நகரில் 2004 ஆம் ஆண்டில் சுமார் இருநூறு பேர்வரை பலியாகக் காரணமான ரயில் குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று, பெரும்பாலும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 20 பேரை ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் ஒன்று குற்றவாளிகளாகக் கண்டுள்ளது
  • இன்றைய (அக்டோபர் 31 புதன்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன் - ஜெயகாந்தன்

''நான் மகிழ்ந்திருக்கிறேன். பிறரை மகிழ்வித்திருக்கிறேன். நான் துன்புற்றிருக்கிறேன். பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். பிறரை மகிழ்வித்து நான் துன்புறுத்தியிருக்கிறேன். இதெல்லாம் எதற்காக? நான் இந்த வாழ்க்கையோடு என்னைச் சம்பந்தப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த வாழ்க்கை என்னைப் பாதிக்கிறது. நானும் இந்த வாழ்க்கையைப் பாதிக்கிறேன். வாழ்க்கை எனக்கு முடிவும் தொடக்கமுமற்ற நெடுங்கதையாக காட்சி தருகிறது. அவ்வப்போது சிதறிச் சிதறி அலைகளாய் என் மீது மோதும் சிறுகதைகளாகவும் பொருள் கொள்கிறது'' - ஜெயகாந்தன்

"நான் நினைக்கிறததான் எடுப்பேன்" - 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் இயக்குநர் ராமின் பேட்டி

எண்பது, தொண்ணூறுகளில் எஸ்.பி.முத்துராமன்களும், ஜெகன்னாதன்களும் வணிகப்படங்களை கொளுத்திப் போட்டுக் கொண்டேயிருக்க, மகேந்திரன், பாலுமகேந்திரா வகையறாக்களிடமிருந்து வெளிப்படும் கலாபூர்வமான மென்மையான படங்களின் வரவு அபூர்வமாகத்தானிருந்தது. இன்றைய சூழ்நிலையிலும் வணிகப்படங்களின் ஆதிக்கத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லையெனினும் சேரன், பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என்று நம்பிக்கை தரக்கூடிய இயக்குநர்கள் தட்டுப்பட்டு அவர்களின் படைப்புகளும் பொருளாதார ரீதியாக ஒரளவிற்கு வெற்றிகரமாகவே பயணிக்கிறது. அந்தவரிசையில் இன்னொரு இயக்குநராக 'கற்றது தமிழ்' இயக்குநர் ராம்- ஐ சொல்லாம் என்று நினைக்கிறேன். இவரின் படத்தை இன்னும் நான் பா¡க்கவில்லை. பத்திரிகைகளின், நண்பர்களின் விமர்சன ஆரவாரங்கள், பரபரப்புகள் போன்றவைகள் அடங்கிய பின்பே "நல்லபடம்" என்று சுட்டப்படுபவைகளை நான் பார்ப்பது வழக்கம். புதியபார்வை (நவம்பர் 1-15) இதழில் இவரின் ஆரோக்கியமான 'திமிருடன்' கூடிய உரையாடல் பதிவை வாசித்த போது மகிழ்வாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். சற்று நேரம் செலவு செய்து படித்து விடுங்கள். (நன்றி: புதிய பார்வை) இயக்குநர் ராம் உடன் புதிய பார்வைக்காக தொலைபேசியில் நடந்த உரையாடல்..........
"ஹலோ ராம்... எப்படியிருக்கீங்க... புதிய பார்வைக்காக கொஞ்ச நேரம் பேசலாமா?"
"பத்து நிமிஷம் போதும் இல்லையா?.. உங்க பேர் என்ன சொன்னீங்க?"
"பரசுராம்"
"ஓ.. பரசுராம்.. கேள்விப்பட்ட மாதிரி இருக்குது. எங்கேயாவது பாத்திருக்கமா?"
"ஆமாம். படம் வெளிவர்றதுக்கு முன்னால, ஒரு ஹோட்டல்ல மதிய சாப்பாட்டுக்குப் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம்"
" சரி. கேள்வி கேளுங்க"
"எப்படி இந்தப் படத்தை ஆரம்பிச்சீங்க?"
"எனக்கு வசதியா எந்தப் படம் இருக்குமோ அதைத்தான் என்னால எடுக்க முடியும்"
"எப்படி இருக்கு படத்துக்கு இருக்கற வரவேற்பு?"
"நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படல. படம் எடுத்தாச்சு. அவ்வளவுதான். பாலுமகேந்திரா சார் பாத்துட்டு ஆசியாவிலேயே ஐந்து சிறந்த திரைப்படத்தை வரிசைப்படுத்தினா அதுல கற்றது தமிழ் வரும்னார். அவருக்கு கண் கலங்கிடுச்சு. வண்ணதாசன் இந்த வயசுல என்னைத் தேடி வந்து படத்தைப் பத்தி நிறைய பாராட்டிப் பேசி ஒரு இராத்திரி என்னோடவே தங்கிட்டுப் போனார். சாருநிவேதிதா ஒரு பத்திரிகையில படத்தைப் பத்தி பதினைந்து பக்கம் எழுதியிருக்கிறதா சொன்னார். ஊர் ஊரா கூப்பிட்டுப் பாராட்டறாங்க"
"பத்திரிகை விமர்சனங்களை எல்லாம் பார்த்தீங்களா?"
"நீங்க எத்தனை தடவை படம் பார்த்தீங்க?"
"ஒரு தடவை"
"எநதத் தியேட்டர்ல?"
"உதயம்"
"ஒரு நாவலை விமர்சனம் பண்றதுக்கு எத்தனை தடவை படிப்பீங்க?"
"இரண்டு மூன்று தடவை"
"அப்பப் படத்தை மட்டும் ஒரே ஒரு தடவை பாத்திட்டு விமர்சனம் எழுத முடியுமா?"
"கஷ்டம்தான்"
"அதான். பத்திரிகையில வர்றது எல்லாமே வெறும் பதிவுதான். ஒரு தனிநபரால எழுதப்படுகிற பதிவு. என்னை கற்றுக் கொள்ள வைக்கிற விமர்சனம் எதையும் இந்தத்தேதி வரை - இன்னைக்குத் தேதியை குறிச்சுக்கோங்க - வரலை. சில தனிநபர்கள் நேர்ல நான் கத்துக்கற மாதிரி சில விஷயங்கள் சொன்னாங்க. பிரிண்ட்ல இதுவரைக்கும் வந்ததெல்லாம் விமர்சனமே இல்ல"
"ம்.... படம் நீங்க நினைச்சு எடுத்த மாதிரி ரிசீவ் பண்ணப்படுதா?"
"படம் எடுக்கறதுதான் என்னோட வேலை. புரிய வைக்கறதா என்னோட வேலை?"
"எந்த அடிப்படையில் கதாபாத்திரத்தைத் தொடங்க ஆரம்பிக்கிறீங்க?"
"தத்துவத்தின் அடிப்படையில்தான்"
"என்ன தத்துவம்"
"தத்துவத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா? சென்னைதான் என் தத்துவம்"
"சென்னையா?"
"ஆமாம். சென்னை என்கிற நகரம்தான். அதற்குள் புறத்திலிருந்து வரும் மாந்தர்கள்தான் என் கதாபாத்திரங்கள். அவர்களின் அக..புறச் சிக்கல்கள், முடிச்சுகள்"
"தமிழ் படிச்சவனோட பிரச்சினையைத்தான் படத்தில் பேசியிருக்கிறதா நிறைய பேச்சு இருக்கு. நீங்க அப்படி நினைச்சு எடுத்தீங்களா?"
"உங்களுக்கு எப்படி தோணுது?"
"எனக்கென்னவோ தமிழ் படிச்சவனோட பிரச்சினையை மட்டுமே பேசற மாதிரி தெரியலை"
"இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுது. படத்தில் நிறைய sub text வச்சிருக்கேன். அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ பேசிக்கட்டும்"
"இந்த ஐ.டி. துறை மேல வச்சிருக்கிற விமர்சனத்துக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருது?"
"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-னு போடுங்க. ஆயிரக்கணக்குல பேசியிருக்காங்க. படிங்க"
"படம் சுய விவரிப்புல நடக்குது. ஆனா முடியும் போது நீங்க வந்து... ஒரு மூன்றாவது குரல் - பேசுவது எதற்கு?"
"அப்படி வரக்கூடாதுன்னு எந்த சினிமா மேதை எந்தக் கலைக் கோட்பாடுல பேசியிருக்கார். இருந்தா பேர் சொல்லுங்க. இல்ல இது நீங்களே சொல்றதா? சிட்டி ஆப் காட்-னு ஒரு படம் பாத்திருக்கீங்களா? அதுல சுயவிவரிப்பும் வரும். மூன்றாவது குரலின் விவரிப்பும் வரும்"
"ஒரு விவாதத்தை இப்படி ஆரம்பிச்சா முடிவு கிடைக்காது"
"எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கிறததான் எடுப்பேன்"

மிக மிக மெதுவான கேமரா

October 30, 2007

அஞ்சலி : முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ரா மரணம்

லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91-வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர். அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது (ஒரு நாவல்தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார். தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916-ம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18-வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்றைய குறள்

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கவிதையில்தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது

"கவிதைகளுக்கும், வழக்கத்தில் உள்ள மொழிக்கும் உள்ள உறவு தினசரி மாறிக் கொண்டே இருக்கிறது. மொழி குறித்த நமது பிரக்ஞையை விடாமல் புதுப்பித்துக் கொள்ள கவிதை உதவுகிறது. கவிதையில் தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட அனுபங்களை வெளிப்படுத்துவதே சிறந்த கவிதை. ஒரு சொல்லை கவிஞர் தேர்ந்தெடுக்கிறார் என்பதைவிட அந்த சொல்லை கவிதைதான் தேர்ந்தெடுக்கிறது" - பிரம்மராஜன், எழுத்தாளர்

கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

  • நைஜீரியாவில் கடத்தப்பட்டவர்கள் விடுதலை : நைஜீரியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியன்று, பெட்றோலியம் அகழும் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களும், இரண்டு போலந்து நாட்டுக்கார்ரகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய துணைத் தூதர் அணில் திரிகுணாயத் தமிழோசையிடம் தெரிவித்தார். விடுவிக்கப்பட்டவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார். இந்தக் கடத்தல் தொடர்பாக எந்தக் குழுவும் உரிமைகோரவில்லை என்றும் இவர்களை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இந்தியத் தூதர் தெரிவித்தார். கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட அஜித் காமராஜின் இளைய சகோதரர் சுதர்சனன் தனது அண்ணன் விடுவிக்கப்பட்ட பிறகு தம்மிடம் பேசியதாகவும், கடத்தியவர்கள் தம்மை துன்புறுத்தவில்லை என்று தம்மிடம் கூறியதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார். இது குறித்த மேலதிகத் தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • நூற்றுக்கும் அதிகமான ஆப்பிரிக்கக் குழந்தைகளை அழைத்துச் சென்ற தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளை சாட் அரசு கைது செய்துள்ளது : ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இருந்து நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற தன்னார்வ அமைப்பு ஒன்றின் அதிகாரிகளை சாட் நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
  • நானூறு வயதான சிப்பி : சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்
  • இராக்கில் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை நீதி விசாரணைக்கு உட்படுத்த வழி செய்யும் சட்டமூலம் : இராக்கில் செயற்படுகின்ற வெளிநாட்டு பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள், குற்றவிசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க வழி செய்யும் தற்போதைய சலுகையை ரத்துச் செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்றுக்கு இராக்கிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது
  • பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகாமையில் ஒரு தற்கொலைதாரி குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும், பலர் காயமடைந்தார்கள் என்றும் கூறப்படுகிறது
  • எலிசபெத் மகாராணியாரைச் சந்தித்த சவூதி அரசர் : லண்டனில் சவூதி மன்னர்பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருக்கும் சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அவர்களின் பயணத்தின் முதல் நிகழ்வாக, எலிசபெத் அரசியார் அவரை முறைப்படி வரவேற்றார்
  • இராக்கின் மிகப் பெரிய அணையின் பாதுகாப்புக் குறித்து அமெரிக்கா கவலை : இராக்கில் உள்ள மிகப் பெரிய அணையின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    மோசூல் நகருக்கு வடக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் டைக்ரிஸ் நதியின் குறுக்காக இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது

October 29, 2007

இன்றைய குறள்

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப்பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

சம்பாதிக்க வழியா இல்ல.. இவரப்பாருங்க!

முட்டாள்தனம் மனித இனத்தின் அசிங்கம்

"சமூகத்தில் நடக்கிற எல்லா தவறுகளுக்கும் மக்களோட முட்டாள்தனம் தான் மூலகாரணம். அறியாமை மனித இனத்தின் அழகு. முட்டாள்தனம் அசிங்கம்" - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு கத்திக்குத்து

  • தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமியை இன்று திங்கட்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சில அடையாளம் தெரியாத நபர்கள் வேல்கம்புகளாலும் கத்தியாலும் குத்தியிருககின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிசமான அளவு இரத்த இழப்பு ஏற்பட்டிருககிறது, அவர் தற்போது மதுரை தனியார் மருத்துவமனையன்றில் அனுமதிககப் பட்டிருககிறார். உயிருககு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது. நாளை பசும்பொன்னில் நடைபெறவிருககும் முத்துராமலிங்கத்தேவர்அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. முக்குலத்தோரைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவரென நினைத்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டிருகககூடும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
  • நைஜீரியாவில் 3 தமிழர்கள் உட்பட 4 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் : எஃப்.பி.எஸ்.ஓ. மிஸ்ட்ராஸ் என்ற இத்தாலிய நிறுவனத்திற்காக நைஜீரியாவின் எண்ணைக் கிணறு ஒன்றில் வேலைபார்த்துவந்த நான்கு இந்தியர்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட வடக்கான் குளம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டனர். நான்காவது நபர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர்களை விடுவிக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நைஜீரியாவுக்கான இந்தியாவின் துணைத் தூதர் அனில் த்ரிகுணாத் தமிழோசையிடம் விளக்கினார். கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
    அவர் தெரிவித்த விபரங்களை நேயர்கள் கேட்கலாம்
  • மும்பை பங்கு சந்தையின் புதிய சாதனையும், நிலமற்ற ஏழை விவசாயிகளின் போராட்டமும் : இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் இன்று 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துசென்றுள்ளது. பங்குச் சந்தையின் அதிவேக வளர்சியின் காரணமாக இந்திய நிறுவனங்களின் மதிப்பு உயந்துள்ளது
  • வட இலங்கையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல் வலுத்துள்ளது : இலங்கையின் வடக்கே மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மன்னார் தம்பனை பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்திருந்த பொறிவெடியில் சிக்கிய இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் மேற்குலக நாடுகளின் ஈடுபாடு போதாது என்கிறார் சவுதியரேபிய மன்னர் : பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் போதிய முயற்சி எடுக்கவில்லை என்று தான் நம்புவதாக சவுதியரேபிய மன்னர் அப்துல்லா கூறியுள்ளார்