April 24, 2008

செம்மொழித் திட்ட நிதி சீர்குலைவு : மயிலாடுதுறை கல்லூரி

மயிலாடுதுறை கல்லூரியின் மர்மக் கருத்தரங்கம். ‘அதிகாலை’ - நிருபர் குழுவின் அதிரடித் தகவல்கள்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை ( மாயவரம் ) அ.வ‌.அ. த‌ன்னாட்சி கல்லூரி சமீபத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு செலவு செய்பவதற்காக மத்திய அரசின் செம்மொழித் திட்ட நிதியிலிருந்து பெருந்தொகை அளிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகைவரவழைக்கப்பட்ட பேராளர்களுக்கும், நிகழ்வுக்கும் பயன்படுத்தப்பட்டதா? என்றால்.... அது பெரிய மர்மமாகவே இருக்கிறது. அது பற்றி நம் ‘அதிகாலை’-க்கு கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கின. த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரை த‌லைவ‌ராக‌க் கொண்ட‌ துறையில் துணிச்சலாக‌ இப்ப‌டி ந‌ட‌க்குமா? என்று ந‌ம‌க்கு சிறிது ச‌ந்தேக‌ம். ஆனால் தொட‌ர்ந்து கிடைத்த‌ த‌க‌வ‌ல், ந‌ம் அதிகாலை நிருப‌ர்க‌ளை முடுக்கிவிட்டு உண்மை என்ன‌ என்று கருத்தர‌ங்க‌ பேராள‌ர்க‌ள் ப‌ட்டிய‌லை வைத்துக்கொண்டு அலசோ...அலசு... என்று அலச வைத்தது.

ஆதியிலிருந்து:-

இந்திய‌மொழிக‌ளின் ந‌டுவ‌ண் நிறுவ‌ன‌ம் - மைசூர் த‌மிழ்ச் செம்மொழித் திட்ட‌ நிதி உத‌வியில் “உல‌க‌ப் பண்பாட்டிற்கு த‌மிழ் ப‌க்தி இல‌க்கிய‌ங்க‌ள், இய‌க்க‌ங்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு ப‌ன்னாட்டுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்” ஒன்றை ம‌யிலாடுதுறையில் உள்ள அ.வ‌.அ.க‌ல்லூரி த‌ன்னாட்சி ந‌ட‌த்த‌ விரும்பிய‌து. அதற்கு அக்கல்லூரியின் த‌மிழ் இணைப் பேராசிரிய‌ர் தி.நெடுஞ்செழிய‌ன் திட்ட‌மிட்டார்.-
வெளிநாட்டிலிருந்து வரும் பேராளர்களுக்கு அமெரிக்க டாலரில் ஒரு வழிப்பயணச்செலவு தரப்படும் என்று சிலருக்கும், சிலருக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பிவைக்கிறோம் என்றும் மனம்போன போக்கில் இணைய மடலாடற்குழுமம் ஒன்றில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி அறிவிப்புச் செய்திருக்கிறார். இந்த அறிவிப்பைப் பார்த்து சிலர் கூட வெட்டியாய் கூட்டம் கூடிவிடப்போகிறது என்று காமெண்ட் அடித்துச் சிரித்திருக்கிறார்கள்.

திடீரென்று பேரா. நெடு- விற்கு ஒரு ஆலோசனை தோன்றியிருக்கிறது. வெளிநாட்டுக் கூட்டம் போதாது. உள்நாட்டிலிருந்தும் கனிசமான கூட்டம் சேர்த்தால்தான் செம்மொழித் திட்ட நிறுவனம் அளிக்கும் இலட்சங்களை சுலபமாக "சுவாஹா" செய்ய முடியும் என்று தோன்ற தனியார், அரசு கல்லூரி தமிழ்த்துறைக்கெல்லாம் சுற்றறிக்கை அனுப்பி தமிழ்த்துறைப் பேராசிரியர்களுக்குத் தூண்டில் போட்டார். "நெடு"வின் உள்நோக்கம் புரியாத தமிழ்த்துறைப் பேராசிரிய மீன்கள் வசமாக தூண்டிலில் விழ உற்சாகம் கொப்புளிக்க சில திட்டங்களைத் தீட்டீனார் "நெடு!"

பன்னாட்டுக் கருத்தரங்கத்தை எப்படிச் சிறப்பாக நடத்துவது? பேராளர்கள் அளிக்கும் கட்டுரைகளை எப்படித் தொகுத்து புத்தகமாக்குவது? அமர்வுகளை எப்படி நடத்தினால் சிறப்பாக நடத்தமுடியும். ஒரு அமர்வில் ஒரு கட்டுரையாளருக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினால் அது சிறப்பாக அமையும்! பேராளர்களைத் தங்க வைக்க என்ன ஏற்பாடு?

இத்தனை பேராளர்களுக்கு ஒருவர் வீதம் நியமித்து வருகின்ற பேராளர்களை எந்தச் சிரமும் இல்லாமல் கவனித்துக்கொள்ள ஒரு குழு, அந்தக்குழுவை வழி நடத்த இருவர் குழு! வெளிநாட்டிலிருந்து இலட்ச இலட்சமாய் செலவழித்து இதறகாகவே வருபவர்களை எப்படி எதிர்கொள்வது?

அவர்களுடைய அமர்வு சிறக்க அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினால் சிறப்பாக அமையும்? இந்த அமர்வைக் கவனிக்க ஒரு குழு! இப்படியெல்லாம் நெடுஞ்செழியன் ஒவ்வொரு விசயத்தையும் உன்னிப்பாய் நெடுஞ்செழியன் திட்டமிட்டிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு!
அவர் திட்டமிட்டதெல்லாம், கிடைக்கும் நிதியை பேராளர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு கல்லூரி நிர்வாக நெல்லுக்குப் போக புல்லான தனக்கும் பாய்ச்சிக்கொள்ளவே மிக நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கிறார். பேராளர்களுக்கு அவ்வப்போது அதிர்ச்சிவைத்தியம் கொடுப்பது, பாவம் தனிமனிசனாய் எப்படி அல்லல் பட்டு இந்தக் கருத்தரங்கை நடத்துகிறார் என்ற ரீதியிலான எண்ணத்தை ஏற்படுத்தி சாமர்த்தியமாய் அவர் காய்களை நகர்த்தியது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

எதிர்பார்த்தபடி வெளிநாட்டிலிருந்து ஓரிருவர் தவிர எவரும் இசைவு தெரிவிக்காத நிலையில்,க‌ட‌ந்த‌வ‌ருட‌ம் அக்டோப‌ர் மாத‌ம் மீண்டும் இணைய‌த்தில் "வெளிநாட்டுப் பேராளர்களுக்கு ஒரு வழி விமானச் செலவும் விதிகளின்படி நாட்படியும் வழங்கப்படும். தங்குமிட வசதியும் செய்து தரப்படும்.

தங்களின் ஒருவழி விமானச் செலவை இந்திய ரூபாயில் அல்லது அமெரிக்க டாலரில் தெரிவிக்கவும். கருத்தரங்கம் முடிந்து ஒருநாள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்படும்" என்று வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ளுக்கு வ‌லை வீசுகிறார்.

ஒருவ‌ழி விமான‌ச் செல‌வு, நாட்ப‌டி, த‌ங்குமிட‌ வ‌ச‌தி என்றெல்லாம் சொல்லிக் கூவி அழைக்கிறார். இதை எந்த அடிப்படையில் யாருடைய உத்திரவாதத்தின் பேரில் அறிவித்தார்? இன்றுவரை இதற்கான விளக்கம் கிடையாது!?

இந்த‌ அறிவிப்பைக்கேட்டு சில‌ர் த‌மிழார்வ‌த்தில் சிங்க‌ப்பூரிலிருந்து ம‌ட்டும் அதிக‌ப‌ட்ச‌மாக‌வும், இல‌ங்கை, அமெரிக்கா, ம‌லேசியா ம‌ற்றும் கொரியா போன்ற‌ நாடுக‌ளிலிருந்து விண்ண‌ப்பித்த‌ன‌ர். ஆயிற்று.. பேராள‌ர்க‌ள் க‌ண்ணும் க‌ருத்துமாய், "உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இயக்கம் / இலக்கியங்களின் பங்களிப்பு" என்று த‌லைப்புக் கொடுத்திருந்த‌தால் அவ‌ர‌வ‌ர் க‌ட்டுரைக‌ள் த‌யாரிப்ப‌தில் க‌ர்ம‌ சிர‌த்தையாய் ஈடுப‌ட்டு அனுப்ப‌த் துவ‌ங்கின‌ர்.

இப்போது நெடுஞ்செழிய‌னுக்கு புதுச் சிக்க‌ல் உருவாகிவிட்ட‌து. சிக்க‌ல் ஒன்று, "அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு ஏற்ப‌ வான‌வில், பூமிவில் என்று த‌ங்க‌ளுக்குத் தெரிந்த‌ எழுத்துருவில் க‌ட்டுரைக‌ளை க‌த்தையாக‌ க‌ணினியில் அனுப்பிவைத்த‌ன‌ர். பாவ‌ம் நெடுஞ்செழிய‌ன், க‌ணினியைத் திற‌ந்துபார்த்தார். த‌மிழ் மொழியில்தானே க‌ட்டுரை கேட்டோம் ஆளாளுக்கு க‌ற்கால‌ மொழியிலும் பிற்கால‌ மொழியிலும் எழுதி க‌ண்ணாமூச்சி காட்டியிருக்கிறார்க‌ளே என்று நொந்து போனார்! பேராளர்களுக்கு, "நீங்க‌ள் யூனிகோடில் ம‌ட்டுமே எழுதி அனுப்ப‌வேண்டும் என்று அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் எல்லோருக்கும் தகவல் அனுப்பினார்.

அடுத்த‌ சிக்க‌ல் க‌ட்டுரை அளவீடு!

பேராள‌ர்க‌ள் எல்லோரையும் க‌ட்டுரை எழுத‌ச் சொல்லி அழைப்புவிடுத்த‌வ‌ர், க‌ட்டுரை இத்த‌னை ப‌க்க‌ங்க‌ளுக்குள் இருக்க‌ வேண்டும் என்ற‌ வ‌ரைய‌றை செய்ய‌த் த‌வ‌றியது, பேராள‌ர்க‌ள், அவ‌ர‌வ‌ர்க‌ள் ஒரு புத்த‌க‌மே போடும‌ள‌வுக்கு க‌ட்டுரைக‌ளை அனுப்ப‌த் துவ‌ங்கின‌ர்.

ஒவ்வொருவ‌ர் அனுப்பும் ப‌க்க‌ங்க‌ளைப் பார்த்தால் வால்யூம் வால்யூமாக‌ தொகுத்தால் ஒரு ப‌க்தி நூல‌க‌மே வைக்க‌லாம் போல‌ வ‌ந்து குவிந்த‌தும், செம்மொழி திட்ட‌த்திட‌ம் இதையெல்லாம் ப‌திப்பிக்க‌ த‌னியாத்தான் நிதி வாங்க‌வேண்டும் என்று காமெண்ட் அடித்திருக்கிறார். நேர‌ம் இருந்திருந்தால் இதற்கும் செம்மொழி நிறுவ‌ன‌த்திட‌ம் த‌னியாக‌ நிதி கேட்டிருப்பாரோ என்ன‌வோ!? பேராள‌ர்க‌ள் உழைப்பைப் ப‌ற்றி அணுவ‌ள‌வும் க‌வ‌லையில்லாத‌ நெடுஞ்செழிய‌ன், "க‌ட்டுரையின் சுருக்க‌ம் ஒரு 5 ப‌க்க‌ங்க‌ளுக்குள் இருக்குமாறு அனுப்ப‌வும்" என்று ஒரு சுற்ற‌றிக்கையை சனவரி இறுதியில் நிதான‌மாக‌ அனுப்பினார்.

இதைப்பார்த்த‌ பேராள‌ர்க‌ள் "அடக்கடவுளே‌" என்று அல‌றி அவ‌ர்க‌ளாக‌வே புலம்பி அர‌ற்றிக்கொண்டார்க‌ள். எப்ப‌டி இத்த‌னை ப‌க்கங்களைச் சுருக்கி 5 ப‌க்க‌ங்க‌ளுக்குள் சொல்வ‌து என்று கேட்ட‌ பேராள‌ர்க‌ளை, "சொல்ற‌தைச் சுருங்க‌ச் சொல்லி விள‌ங்க‌ வைங்க‌" என்று தொல்காப்பிய அட்வைஸ் கொடுத்து மேலும் திக்குமுக்காட‌ வைத்திருக்கிறார்.

வெளிநாட்டுப் பேராள‌ர்க‌ளை உட‌ன‌டியாக‌ க‌ட‌வுச்சீட்டு அனுப்புக, த‌ன் விப‌ர‌க்குறிப்பை அனுப்புக..என்றும் விசாவுக்கு இதெல்லாம் வேண்டும் அனுப்புக‌, உங்க‌ளை வ‌ரவேற்ப‌த‌ற்கு சிற‌ப்பான‌ ஏற்பாடுக‌ள் எல்லாம் ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து என்று துரித‌மாக‌ வேலை ந‌ட‌ப்பது போல‌க் காட்டிக்கொண்டார்.

பேராள‌ர்க‌ள் குறித்த‌ வேலைக‌ள் ந‌ட‌ப்பத‌‌ற்குப் ப‌திலாக‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் பெய‌ரைச் சாக்குவைத்து, கல்லூரிக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு ப‌ல்வேறு பல்கலைக் க‌ழ‌க‌ துணைவேந்த‌ர்க‌ள், உள்ளூர் எம்.எல்.ஏ, க‌விக்கோ அப்துல்ர‌குமான் இப்ப‌டியான‌வ‌ர்க‌ளை துவ‌க்க‌விழாவிற்கும், நிறைவு விழாவிற்கும் அழைப்ப‌தில் அவ‌ர்க‌ளுக்கான‌ ஏற்பாடுக‌ளைச் செய்வ‌திலுமே த‌ன் பெரும்ப‌குதி நேர‌த்தைச் செல‌விட்டிருக்கிறார், நெடுஞ்செழியன் என்பதை அவருடன் இருந்தவர்களே நமக்கு ஊர்ஜிதப்படுத்தினர்.

“டிச‌ம்ப‌ர் 30.1207-ல் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயங்கி வரும் தமிழ்ச் செம்மொழித் திட்டத்தினர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, வெளிநாட்டு பேராளர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ள விமான பயணக் கட்டணம் வழங்கிட வேண்டுமென்றால் பேராளர்களின் த‌ன் விப‌ர‌க்குறிப்பை எதிர்வரும் ஜனவரி 1-ம் நாளுக்குள் அன்புகூர்ந்து அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்கிறேன். ஜனவரி 4-ம் நாள் அனைத்து விரவங்களுடன் தில்லியில் உள்ள அயல்நாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றிட வேண்டும். நிதிக்கும் ஒப்புதல் பெறவேண்டும் என்பது முக்கிய தேவையாக உள்ளது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் அதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றால் பயணத்தொகை தேவையில்லை என்பதை மின்னஞ்சல் வழி தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன். கருத்தரங்க செலவுகளைத் திட்டமிட்டு மத்திய அரசிடம் பெறவேண்டியுள்ளது. தங்களின் அன்பான ஒத்துழைப்பை அன்புடன் வேண்டுகிறேன்" என்று இர‌ண்டே நாள் இடைவெளியில் மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியிருக்கிறார்.

ச‌ன 27-ம் தேதி ஒரு அறிக்கை அனுப்புகிறார். 2-ம் தேதி அனுப்பிய வெளிநாட்டுப்பேராள‌ர்களுக்கு செம்மொழி மத்திய அயலுறவுத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. மற்றவர்களுக்கு விமானக்கட்டணம் தர இயலாது என்று அறிவித்துவிட்டது, என்று. இடைப்பட்ட காலகட்டத்தில் க‌ருத்த‌ர‌ங்க‌ம் குறித்தோ, க‌ட்டுரை என்னாயிற்று என்றோ, என்ன‌ ஏற்பாடுக‌ள் என்றோ எந்தத் த‌க‌வ‌ல் தொட‌ர்பும் பேராள‌ர்க‌ளோடு கொண்டிருக்க‌வில்லை.

தொட‌ர்புகொண்ட‌ பேராள‌ர்க‌ளிட‌மோ நான் தின‌ந்தோறும் ந‌ள்ளிர‌வு தாண்டியே தூங்க‌ப்போகிறேன். எப்ப‌டியாவ‌து இந்த‌க் க‌ருத்த‌ர‌ங்கை ந‌ல்ல‌வித‌மாக‌ முடித்தால் போதும் என்று ச‌ரியா தூங்காம‌ச் சாப்பிட‌மா அலையிறேன்" என்று ரீல்விட்டிருக்கிறார்.

ஏன் ரீல் விடுகிறார் என்ப‌த‌ற்கும் ந‌ம்மிட‌ம் ஒரு பேராள‌ர் காட்டிய‌ த‌கவ‌ல்தான் கார‌ண‌ம்!

உரிய‌ கால‌த்தில் "நெடு" விற்கு அனுப்பிவைத்தும் 20ம்தேதியே உங்க‌ளுக்கு ம‌த்திய‌ அய‌லுற‌வுத்துறை ம‌றுத்துவிட்ட‌து என்ற த‌க‌வ‌ல் அது! அய‌லுறவுத் துறைக்கு தமிழ் செம்மொழிப்பிரிவுத் தலைவர் முக்கால‌மும் உண‌ர்ந்த‌ முனிவ‌ரோ!அது தான் நெடுஞ்செழிய‌ன்!

இன்னுமொரு சூப்ப‌ர் ஆதார‌ம்.

சனவரி 13-ல் திருச்சி அருகேயுள்ள சொந்த ஊரான கீழக் கல்கண்டார்கோட்டைக்கு குடும்பத்தோடு ஜாலியாகப் போய்விட்டார். 18-ம் தேதி திரும்பிவந்து,19ம்தேதி," மார்ச்சு திங்களில் நடைபெறவிருக்கும் உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் பங்களிப்பு என்னும் பன்னாட்டு கருத்தரங்கில் தாங்கள் கலந்துகொள்வதற்கான விமான கட்டணம் தமிழ்ச் செம்மொழித் திட்டத்தால் உங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. கல்விசார் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயணக் கட்டணம் வழங்க இயலும் என்று கூறிவிட்டார்கள். கருத்தரங்கில் கலந்துகொள்வது குறித்து தாங்கள்தான் இனி முடிவு செய்யவேண்டும்" என்று வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ள் மூவ‌ருக்கு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியிருக்கிறார்.

தமிழ்ச் செம்மொழித் திட்டத்தால் உங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்ப‌தை வாச‌க‌ர்க‌ள் ந‌ன்கு க‌வ‌னிக்க‌வேண்டும். ஒருவ‌ருக்கு ம‌த்திய‌ அய‌லுற‌வுத்துறை ம‌றுத்து விட்ட‌தாக‌ச் சொல்லுகிறார்.. இன்னொருவ‌ருக்கு த‌மிழ் செம்மொழித் திட்ட‌த்தால் ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து என்கிறார்.

சிங்கப்பூர் தேசியபல்கலைக்கழகப் பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு விமானடிக்கெட் வாங்கியனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ‘கடைசிவரை புறப்பட ஏற்பாடுகள் செய்து டிக்கெட் கைக்கு வராததால் நான் மாநாட்டுக்கு வரப்போவதில்லை’ என்றே தெரிவித்திருக்கிறார்.


நமக்குப் புரியாதது இவருக்கு மட்டும் எப்படி விமான டிக்கெட் வாங்கித் தருகிறேன் என்று நெடுஞ்செழியன் எந்த அயலுறவுத்துறை ஒப்புதலோடு சொன்னார் என்பது புரியவில்லை! ஏனிந்த முரண்பாடுகள்?

ந‌ம் கேள்வி இதுதான்.

த‌மிழ் செம்மொழி திட்ட‌மே நிராக‌ரிக்கிற‌து என்றால் அதை ஏன் முத‌லிலேயே,"கல்விசார் ஆசிரியர்களுக்கு" ம‌ட்டுமே விமான‌க் க‌ட்ட‌ண‌ம் என்று தெளிவாக‌ச் சொல்ல‌வில்லை?

தமிழ் செம்மொழி திட்ட‌ம் தெளிவாக‌ச் சொல்லி நெடுஞ்செழிய‌ன் வெளிநாட்டுப் பேராள‌ர்க‌ளுக்கு தெரிவிக்காம‌ல் ம‌றைத்து விட்டாரா?இந்த‌ ஏமாத்து,ப‌ம்மாத்து வேலையில் தொட‌ர்புள்ள‌து நெடுஞ்செழிய‌ன் ம‌ட்டும்தானா?அல்ல‌து செம்மொழித்திட்ட‌ அலுவ‌ல‌ர்க‌ளுக்கும் இதில் ப‌ங்கிருக்கிற‌தா?

இதில் வெளிநாட்டுப் பேராள‌ர் ஒருவ‌ர் த‌மிழ் செம்மொழிதிட்ட‌ அலுவ‌ல‌க‌த்தையே தொட‌ர்புகொண்டு கேட்ட‌த‌ற்கு ம‌த்திய‌ அய‌லுற‌வுத்துறை என்று கைகாட்டியிருக்கிறார்க‌ள்! ஆக‌ ஒரு கூட்டுக்கொள்ளை ம‌வுன‌மாக‌ அர‌ங்கேறியிருக்கிற‌தா?

இதில் மிக‌வும் நொந்து நூடுல்ஸாகிப்போன‌வ‌ர் சிங்க‌ப்பூர் முன்னாள் ஒலி 96.8ன் த‌லைவ‌ர்!பேராளர்களை ச‌ன 27ம்தேதி, "நீங்கள் அனுப்பிய ஆய்வுச் சுருக்கம் ஏற்கப்பட்டுவிட்டது. முழுக்கட்டுரையையும் பிப்.5ம்தேதிக்குள் க‌ருத்த‌ர‌ங்கிற்கு குறுகிய‌ கால‌மே இருப்ப‌தால் ஆய்வுக்கோவை அச்ச‌டிக்க‌ வேண்டும்." முழுக்கட்டுரையையும் உடனே அனுப்பிவையுங்கள் என்று சுற்றறிக்கை நெடுஞ்செழியன் அனுப்புகிறார்.

இந்த‌ ஆய்வுக்கோவை அச்ச‌டிக்க‌ப்ப‌ட‌வும் இல்லை பேராள‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வும் இல்லை. இதைப்பற்றி பேராள‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு அச்ச‌டிக்கும் வேலை ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து. க‌ருத்த‌ர‌ங்க‌ம் முடியும் முன் அனைவ‌ருக்கும் கொடுக்க‌ப்ப‌ட்டுவிடும் என்று க‌டைசிவ‌ரை க‌ண்ணில் காட்ட‌வே இல்லை! ஆனால் ஆய்வுக்கோவை அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ அச்சாபீஸ் பில்க‌ள் எல்லாம் செட்டில் செய்ய‌ப‌ப்ட்டிருக்கின்ற‌ன‌, செம்மொழி அலுவ‌ல‌க‌த்தால்!

தங்குமிட வசதியில் கோல்மால்!

உங்க‌ளுக்கு த‌ங்குமிட‌ வ‌ச‌திக‌ள் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. தாஜ் ரெசிடென்சி ஹோட்ட‌லில் என்று அந்த‌ லாட்ஜ் போன் ந‌ம்ப‌ர், (தாஜ் ரெசிடென்சி செல்போன் எண்கள்- 98423 52009 ம‌ற்றும் 98423 61702)மின்ன‌ஞ்ச‌ல் என்று அனுப்பி 5 - ம்தேதி மாலையிலிருந்து வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ள் த‌ங்குவ‌த‌ற்கு இங்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

த‌ங்கும் வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ளை இங்கிருந்து கருத்தரங்கம் நடக்கும் க‌ல்லூரிக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அமர்க்களமாய் தகவல் அனுப்பியதை நம்பி ஏமாந்த வெளிநாட்டுப்பேராளர்களின் கொடுமை அந்தோ பரிதாபம்!

அமெரிக்க‌ப் பேராள‌ர் ஆல்ப‌ர்ட் தங்குமிடத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள மின்னஞ்சல் அனுப்பி ப‌திலே இல்லை. தொலைபேசியில் தொட‌ர்புகொண்டால் ராங்க் ந‌ம்ப‌ர்! வெளிநாட்டிலிருந்து விமான‌த்தில் வ‌ந்த‌ பேராளர், சென்னையிலிருந்து தாஜ் லாட்ஜ் தொட‌ர்பு எண்ணை தொட‌ர்புகொண்டு இய‌லாம‌ல் போகவே, நெடுஞ்செழியனை செல் போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

வெகு நேரம் பிசி என்றும், பின்னர் சுவிட்ச் ஆஃப்பும் செய்யப்பட்டுள்ளது என்றும் கேட்டு நொந்து ச‌ரி நேரில் போய்விடுவோம் என்று திருச்சிவ‌ழியாக ர‌யிலில் போனால் மாய‌வ‌ர‌ம் போக‌வே 9 ம‌ணியாகிவிடும். அத‌னால் ஒரு வாட‌கைக்காரில் ம‌யிலாடுதுறைக்கு அதிகாலை 4 ம‌ணிக்குச் சென்று விசாரித்து லாட்ஜ் முன்பு இற‌ங்கி காரை அனுப்பிவிட்டு லாட்ஜுக்குள் அப்பாடா என்று நுழைந்திருக்கிறார்.

அங்கு உற‌‌ங்கிக்கொண்டிருந்த‌ சிறுவ‌ர்க‌ளை எழுப்பி க‌ல்லூரி க‌ருத்த‌ர‌ங்கிற்கு வ‌ந்திருக்கிறேன். ரூம் போட்டிருக்கிறார்க‌ளா? என்று விசாரிக்க‌ அந்த‌ச் சிறுவ‌ர்க‌ள் ம‌ல‌ங்க‌ ம‌ல‌ங்க‌ விழித்திருக்கிறார்க‌ள். தூக்கக் கலக்கத்திலிருப்பார்கள் போலிருக்கிறது என்று மெல்ல விசாரித்தவருக்கு தூக்கிவாரிப்போட்டிருக்கிறது.

‘லாட்ஜ் வேலை நடக்கிறது. அடுத்த மாசமதான் லாட்ஜ் திறப்பாங்க’- என்று சொல்ல வந்த வெளிநாட்டுப்பேராளர் மயக்கம் போட்டுவிழாத குறையாக இது தாஜ் ரெசிடென்சிதானே என்று கேட்க இது தாஜ்தாங்க. இப்ப யாருக்கும் வாடகைக்கு விடறது இல்ல என்றதும் சிரமப்பட்டு அந்த‌வ‌ழியாக‌ வ‌ந்த‌ ஒரு ஆட்டோவைப் பிடித்துப்போய் வேறு ஒரு லாட்ஜுக்குப் போயிருக்கிறார்.

முத‌ல் ச‌குன‌மே ச‌ரியில்லையே என்று 750-ரூபாய் குளிர்சாத‌ன‌ அறை எடுத்து உள்ளே போனால் ஏசி ஓடாம‌ல், துண்டு கூட‌ இல்லாம‌ல் நாலாவ‌து மாடியில் அறை கொடுத்திருக்கின்ற‌ன‌ர். விதியே என்று காலையில் நெடுஞ்செழிய‌னிட‌ம் சொல்லி வேறு ந‌ல்ல‌ லாட்ஜ் பார்க்க‌வேண்டிய‌துதான், என்று இருந்திருக்கிறார். க‌டைசிவ‌ரை அதிலேயே இருந்து வெம்பி, வ‌த‌ங்கி நொந்து திரும்பிய‌ அவ‌ல‌ம் அந்த‌ அமெரிக்க‌ப் பேராள‌ருக்கு!

இந்த‌க் க‌ருத்த‌ர‌ங்கில் இன்னொரு மிகப் பெரிய ஜோக் என்ன‌ தெரியுமா சார் என்றாசார். ந‌ம் த‌மிழ‌க‌ப்பேராள‌ர்க‌ளுள் ஒருவர். சொல்லுங்க‌ள் என்றோம். நெடுஞ்செழிய‌ன் சார் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். பேராள‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் தாஜ்விடுதியில் த‌ங்கும் விடுதி வ‌ச‌தி 5.3.08 மாலை 6மணியிலிருந்து 8.3.08 மாலை 6-ம‌ணி வ‌ரை ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. பேராள‌ர்க‌ள் த‌விர்த்து உட‌ன் வ‌ருவோர்க்கு எந்த‌ வ‌ச‌தியும் செய்து த‌ர‌ப்ப‌ட‌மாட்டாது. என்றிருந்த‌துதான்.

ச‌ரி க‌ருத்த‌ர‌ங்க‌ம் எப்ப‌டி ந‌ட‌ந்த‌து என்று மற்றொரு பேராள‌ரிட‌ம் கேட்க‌, "அந்த‌ச் சோக‌த்தை ஏங் கேக்குறீங்க‌? என்று அவ‌ர் புல‌ம்பித் த‌ள்ளிய‌திலிருந்து நாம் சேக‌ரித்த‌து.

6- ம்தேதி பேராள‌ர் ப‌திவு என்று இருக்குமே என்று பார்த்தால் ஒரு ப‌ன்னீர் சொம்போடு மூன்று க‌ல்லூரி மாண‌விக‌ளை நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்க‌ள். ஒவ்வொருவ‌ராக‌ வ‌ந்து ந‌ல‌ன் விசாரித்து அவ‌ர‌வ‌ர்க‌ளாக‌ உட்கார்ந்து கொண்டிருக்க‌ விழா எந்த‌ ப‌ங்சுவாலிட்டியும் இல்லாம‌ல் சாவ‌காச‌மாக‌ 11.45க்கு துவ‌ங்க‌ ஒரு ப‌ழைய‌ நோட்டில் ஒருவ‌ர் ஸார், ஒங்க‌ பேர், ஊர‌ இதுல‌ எழுதுங்க‌ ஸார் என்று வாங்கியிருக்கிறார்.

அப்புற‌ம்தான் தெரிந்த‌து. அதுதான் பேராளார் ப‌திவேடு என்று! செம்மொழித் திட்டம் த‌லைவ‌ர் இராம‌சாமியே வ‌ர‌வில்லை. அவ‌ர் சார்பாக‌ கோத‌ண்ட‌ராம‌ன் என்று ஒருவ‌ர் நோக்கவுரை என்று துணைவேந்த‌ர்க‌ள் அவ‌ர்க‌ள், இவ‌ர்க‌ள் என்று க‌தாகால‌ட்சேப‌ம் ந‌ட‌த்தி முடிக்க‌ பிற்ப‌க‌ல் 1.30-ம‌ணிக்கு மேலாகிவிட்ட‌து. எதோ கொஞ்ச‌ம் உருப்ப‌டியாக‌ப் பேசிய‌து பெரியார் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ துணைவேந்த‌ர் த‌ங்க‌ராசுவும், முனைவ‌ர் தொ.ப‌ர‌ம‌சிவ‌மும்தான்!

கருத்தரங்க சோகம்

எல்லாம் சாப்பாட்டுக்கு க‌லைந்து முத‌ல் கருத்த‌ர‌ங்க அம‌ர்வுக்குப் போனால் வெளிநாட்டுப் பேராளர் ஒருவர் அங்கிருந்தவரிடம் அழமாட்டாத குறையாகச் சொல்லியிருக்கிறார்.அவ‌ர் ம‌லேசியாவிலிருந்து வ‌ந்த‌ ம‌லேசிய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ப் பேராசிரிய‌ர்.ச‌பாப‌தி வேணுகோபால். க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வுக‌ள் எதிலுமே அவ‌ர் பெய‌ர் இல்லை என்ப‌துதான் அவ‌ர‌து புகார் என்று சொல்லி நம்மிடம் க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வுப் ப‌ட்டிய‌லைக் காண்பித்தார். அதில் அவ‌ர் பெய‌ர் இல்லை!

வெளிநாட்டிலிருந்து வ‌ந்த‌தே மொத்த‌ம் 7 பேராள‌ர்க‌ள்தான்!

அதிலும் ஒருவ‌ர் க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வுப்ப‌ட்டிய‌லில் பெய‌ரே இல்லை என்றால் எப்படி? என்ன ல‌ட்ச‌ண‌மாய் திட்டம் தீட்டி க‌ருத்த‌ர‌ங்க‌ம் ந‌ட‌ந்திருக்கும் பாருங்க‌ள்!" என்றார் புகார் சொன்ன‌ பேராள‌ர்!

ஒரு க‌ருத்த‌ர‌ங்க‌ம் வேலாயுத‌ம் அர‌ங்கில் ம‌ற்றொன்று க‌ருத்த‌ர‌ங்க‌ அறையிலும் என்றிருந்திருக்கிற‌‌து. அந்த‌க் க‌ருத்த‌ர‌ங்க‌ம் ஒரு மாடியில்!

யாருக்கும் தெரிய‌வில்லை. வ‌ழிகாட்ட‌வும் ஒருவ‌ரும் இல்லை. பேராள‌ர்க‌ள் மாண‌வ‌ர்க‌ளிட‌ம் இந்தக் க‌ருத்த‌ர‌ங்க‌ம் எங்கேயிருக்கு என்று பேராள‌ர்க‌ளே ப‌ரிதாப‌மாக‌ விசாரித்து அன்ன‌ந‌டை போட்டு போயிருக்கிறார்க‌ள். அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் 2.00 ம‌ணிக்கு அம‌ர்வு. ம‌ணியோ 2:30. பேராள‌ர்க‌ள் வெளியே நின்றுகொண்டிருந்தார்க‌ள். என்ன‌ என்று பார்த்தால் க‌ருத்த‌ர‌ங்க‌ அறை பூட்டிக் கிட‌ந்த‌துதான் கார‌ண‌ம்.

அங்கிருந்த‌ பேராசிரிய‌ர் ஒருவ‌ரிட‌ம் கேட்க‌ அவ‌ர் ஒருவ‌ரைக் கைகாட்டி அவ‌ர் வ‌ந்து திற‌ந்தால் அந்த‌ அறையைக்கூட்டி சுத்த‌ப்ப‌டுத்தியே ஒரு மாம‌ங்க‌மிருக்கும் போலிருக்கிறது. மைக் வேலை செய்ய‌வில்லை. ஏசி வேலை செய்ய‌வில்லை.

அப்போதுதான் நெடுஞ்செழிய‌ன் எங்கிருந்தோ வ‌ந்து அட‌, எங்க‌ப்பா அந்தாளு? என்று விர‌ட்டிக்கொண்டிருந்தார். இந்த‌க் க‌ளேப‌ர‌த்தில் பேச‌வேண்டிய‌ பேராள‌ர்க‌ள் உருப்புடாப்புல‌ என்று எழுந்து ந‌டையைக் க‌ட்டின‌ர். அந்த‌ அம்ர்வுக்கு ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ டெல்லி ப‌ல்க‌லைக்க‌ழ‌க் பேராசிரிய‌ர். கோவிந்த‌சாமி ராஜ‌கோபாலை த‌லைமை ஏற்க‌வைத்து த‌டால‌டியாக அவ‌ச‌ர‌ப் பேச்சாள‌ர் ப‌ட்டிய‌ல் த‌யாரித்து அம‌ர்வை ஆர‌ம்பிக்கும்போது மணி மூன்று!

அத‌ன் பிற‌கு அந்த‌ அறையில் ந‌ட‌க்க‌வேண்டிய‌ அம‌ர்வுக‌ள் எதுவுமே ந‌ட‌க்க‌வில்லை என்று அவ்வ‌ள‌வு சோக‌ம் சொட்ட‌ச் சொட்டச் சொன்னார் த‌மிழ‌க‌ப் பேராளர் நம்மிடம்!

க‌ருத்த‌ர‌ங்கின் 2-வ‌து நாள் குறித்து ந‌ம‌க்கு கிடைத்த‌ த‌க‌வ‌ல் அதைவிட‌க்கொடுமையாக‌ இருந்த‌து. இர‌ண்டு இட‌த்தில் ந‌ட‌க்க‌வேண்டிய‌ அம‌ர்வுக்கு பேராள‌ர்க‌ள் இல்லாத‌தால் வேலாயுத‌ம் அர‌ங்கில் ஒரே அம‌ர்வாக‌ ந‌ட‌த்தி ச‌ரித்திர‌ம் ப‌டைத்தார்க‌ள். நேர‌ ஒழுங்கு, க‌ருத்தர‌ங்க‌ விதிமுறைக‌ள் காற்றில் ப‌ட‌ப‌ட‌க்க‌ ஒலிவாங்கியைப் பிடித்துக்கொண்டு யார்யாரோ தொண்டைகிழிய‌ப் பேசினார்க‌ள். இதில் பேச‌ வேண்டிய‌ சிங்க‌ப்பூர் பேராள‌ர்கள் பேச அழைக்கப்படாமலே அம‌ர்ந்திருந்த‌து ப‌ரிதாப‌ம்!

யாரோ ஒருவ‌ர் வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ள் எல்லாம் நாளைக்கு ஒரே அம‌ர்வில் என்று அவ‌ர்க‌ளிட‌ம்வ‌ந்து சொன்ன‌போதுதான் சிறு முறுவ‌லைப் பார்க்க‌ முடிந்த‌தாம்!

3 நாள் க‌ருத்த‌ர‌ங்க‌ம் முடிந்து பிற்பாடு அழைத்துச் செல்ல‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஆன்மீக‌ச் சுற்றுலாவை 2-ம்நாள் பிற்ப‌க‌ல் என்று அதிலும் ஒரு புர‌ட்சி செய்து க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வைக் கேலிக்குரிய‌தாக்கினார்க‌ள்.

கலந்துகொண்ட க‌ருத்தர‌ங்கப் பேராள‌ர்க‌ளுக்கு சான்றித‌ழ் வ‌ழ‌ங்க‌ அச்ச‌டித்து வ‌ந்திருந்த‌ சான்றித‌ழில் தமிழ் செம்மொழித் திட்ட‌ப்பிரிவிலிருந்து வ‌ந்திருந்த‌ கோத‌ண்ட‌ராம‌ன் கையெழுத்துப்போட‌மாட்டேன் என்று அட‌ம் பிடித்திருக்கிறார். கார‌ண‌ம் சான்றித‌ழில் கையெழுத்துப்போட‌ வேண்டிய‌ இராம‌சாமி வ‌ராத‌தால், அவ‌ருடைய‌ பிடிவாத‌த்துக்காக‌ மீண்டும் புதிதாக‌ சான்றித‌ழ்க‌ளில் கோத‌ண்ட‌ராம‌ன் பெய‌ர் அச்ச‌டித்து வ‌ந்த‌பிற‌கே கையெழுத்துப்போட்டிருக்கிறார்.

எப்ப‌டியெல்லாம் செம்மொழி ப‌ண‌ம் வாரி இறைக்க‌ப்ப‌ட்டது என்பத‌ற்கு இதுவும் ஒரு உதார‌ண‌ம் என்றார் பேராள‌ர்.

3- வதுநாள் வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ளிட‌ம் இது உங்க‌ளுக்கான‌ அம‌ர்வு என்று சொல்லிவிட்டு த‌மிழ‌க‌ பேராள‌ர்க‌ளை அழைத்து, பேச‌முடியாம‌ல் போன‌ துறைத் த‌லைவ‌ர்க‌ள் ஆவ‌ர்த்த‌ன‌ம் செய்ய‌ வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ளோ வெளியே சொல்ல‌முடியாத‌ அவ‌ஸ்தையில் நெளிந்து கொண்டிருக்க‌ கொரியாவிலிருந்து வ‌ந்த‌ பேராள‌ர் க‌ண்ண‌ன், அவ‌ர் வாய்ப்புக்காக முன்வ‌ரிசையில் காத்திருந்திருக்கிறார்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று ஒருவ‌ழியாக‌ வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ள் பேச‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இருந்தாலும் க‌ண்ண‌ன் அழைக்க‌ப்ப‌ட்ட‌போது ம‌ணி 12 ஆகிவிட‌ ம‌னித‌ர் 2 ம‌ணிநேர‌த்துக்கு ப‌வ‌ர்பாயிண்ட்டில் தயாரித்து வ‌ந்த‌தை சுருக்க‌மாக‌ முடிச்சுக்குங்க‌ என்று மூன்று முறை துண்டுச்சீட்டு அனுப்ப‌ ம‌னித‌ர் நொந்து போய் முடித்திருக்கிறார்.

அமெரிக்க‌ப்பேராள‌ர் பேச‌ ஒலிவாங்கி முன் வ‌ந்த‌போது ம‌திய‌ம் 1:15. நெடுஞ்செழிய‌ன் ஓடிப்போய் அவ‌ர் காதில் கிசுகிசுக்க‌, 'தான் அமெரிக்காவை விட்டு கிள‌ம்ப‌ 2-நாள் இருக்கும்போது ஏற்ப‌ட்ட‌ கார் விப‌த்தைக்கூட‌ பொருட்ப‌டுத்தாம‌ல் த‌மிழுக்காக‌ சொந்த‌ச் செல‌வில் இங்கு பேச‌ வந்தேன். ப‌த்து நிமிட‌த்தில் முடிக்க‌ச் சொல்லிவிட்டார்கள் என்று சொல்லி, அவ‌ர் த‌யாரித்து வ‌ந்திருந்த‌ ப‌வ‌ர் பாயிண்ட் மேடைக்கு கீழிருக்க, யாரோ ம‌ன‌ம்போன‌ப‌டி இய‌க்க‌ ப‌சி நேர‌த்தில் யாரையும் சோதிக்க வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ தன் உரையைச் சுருக்க‌மாக‌ முடித்துக்கொண்டார்.

பேராள‌‌ர்க‌ளுக்கு சான்றிதழ் அளிப்பதை, பொன்னாடை போர்த்துவ‌தைக்கூட‌ திட்ட‌மிடாம‌ல் அந்த‌க் க‌ல்லூரியின் செய‌ல‌ரையோ, இல்லை முக்கிய‌ விருந்தின‌ரைவிட்டோ, கொடுக்காம‌ல் யார் யாரையோ கொடுக்க‌ச் சொல்லிவிட்டு நிறைவு விழாவில் கொடுத்த‌தை வாங்கி திரும்ப‌ உள்ளூர் எம்.எல்.ஏவை விட்டு கொடுக்க‌ வைத்திருக்கிறார்க‌ள்! இதெல்லாம் திட்டமிடாததின் எதிரொலியாகவே பட்டது நமக்கு!

தமிழுக்காக உயிர் கொடுப்பவர்; பொருள் கொடுப்பவர் என்று வானளாவப் புகழப்பட்ட மயிலாடுதுறை அ.வ‌.அ. த‌ன்னாட்சி கல்லூரி நிறுவனங்கள் செயலர் பெயரில் மட்டுமே தமிழ்த்திரு. கொண்ட கருத்தரங்கப் புரவலர் செந்தில்வேல் துவக்கவிழாவில் தலைகாட்டியதோடு சரி.ஒரு பெயருக்காகவாவது இந்தியா, தமிழகம், வெளிநாடுகளில் இருந்து வந்த பேராளர்களைச் சந்திக்கவோ, ஒரு புன்னகை சிந்தக்கூட நேரமில்லாமல் தலைமறைவாய் இருந்த காரணம் யாதோ? கடைசிவரை கருத்தரங்கப் பக்கமே தலைகாட்டவில்லை!

இந்த மூன்று நாள் கருத்தரங்கில் துவ‌க்க‌விழா, நிறைவு விழா, ஆன்மீகச் சுற்றுலா விருந்தினர்களை வரவேற்க கலைநிகழ்ச்சி என்று இர‌ண்டுநாட்களை ஒப்பேற்றிவிட்டு க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வை என்ன‌ நோக்கத்திற்காக ந‌ட‌த்தினார்க‌ளோ அந்த‌ நோக்க‌ம் எதுவுமே நிறைவேறாம‌ல் முடிந்திருக்கிறது இந்தக் க‌ருத்த‌ர‌ங்க‌ம். ஆனால், கருத்தரங்கம் முடிந்த சூட்டோடு பேராளர்களுக்கு நெடுஞ்செழியன் ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார். பன்னாட்டுக் கருத்தரங்கம் வெற்றி என்று! யாருக்கு வெற்றி?

க‌ருத்த‌ர‌ங்கில் ஏமாற்ற‌ம் அடைந்து திரும்பிய‌ பேராள‌ப் பேராசிரிய‌ர்க‌ள் நெடுஞ்செழிய‌னுக்கு த‌ங்க‌ள் வேத‌னைக‌ளை, புல‌ம்ப‌ல்க‌ளை தெரிவித்து எழுதியிருகின்ற‌ன‌ர்.

இது பற்றி அவரிடம் ‘அதிகாலை’ தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, "இது எல்லாவற்றுக்கும் நான் மட்டும் காரணம் இல்லை. இது ஒரு நிறுவனம். இதற்கென்று சில வழிகாட்டு முறைகள் உள்ளன. அதன்படிதான் செய்தேன். கருத்தரங்கு பற்றி வீடியோ பதிவு வைத்திருக்கிறேன்" என்று முடித்துக் கொண்டார் நெடுஞ்செழிய‌ன்.

இதில் கலந்து கொண்ட மற்றொரு பேராளரான மறவன் புலவு சச்சிதானந்தத்திடம் பேசினோம். அவரோ, " என்னிடம் நான் வாசித்த கட்டுரை இருக்கிறது வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள். மற்ற விசயங்கள் எல்லாம் பேசுவதற்கு நேரமில்லை. எனக்குப் பணிச்சுமை அதிகம்" என்று கச்சிதமாய் சொல்லி முடித்தார்.

தமிழ் செம்மொழித் திட்ட அலுவலகத்திலிருந்து வந்திருந்தவர்களுக்கு மட்டுமே கல்லூரி விருந்தினர் விடுதியைக் கொடுத்து அவர்களை கடைசிவரை "நன்கு விசேடமாகக் கவனித்து" மனம் கோணாமல் அனுப்பிவைத்திருக்கிறார் நெடுஞ்செழியன்.

எல்லாம் சரி. இதில் தமிழ் செம்மொழித்திட்டம் அளித்த நிதியை கல்லூரிக் கணக்குக்கு மாற்றியது எப்படி எங்களுக்குப் புரியவில்லையே என்று நெடுஞ்செழியனுக்கு நெருக்கமாகக் காட்டிக்கொள்ளும் ஒருவரை மெல்லக் கிளறியபோது, "அட போங்க சார்..! நாங்க வாழைப்பழத்தைக் கொடுத்து சாப்பிடுங்க என்றுதான் சொல்ல முடியும். என்று வில்லன் வீரப்பா சிரிப்பு சிரித்துவிட்டு நம் காதில் மெல்லக் கிசுகிசுத்தார்.

"சார் பேராளர்களுக்கு பிரபல ஓட்டல்ல இருந்தா சாப்பாடு போட்டாங்க? கல்லூரி ஹாஸ்ட்டல்ல சாப்பாடு போட்டாங்க. பேராளர்களுக்கு, விருந்தினர்களுக்கு சாப்பாடு மூன்று நாளைக்கு, மூன்று வேளைக்கு ஒட்டுமொத்தமா ஒரு அமவுண்ட்! சரி அவங்க சாப்பாடு போட்டதுக்குத்தானே காசு வாங்கியிருக்காங்க, இதிலென்ன‌ தப்பு" என்றோம், நாம். அட என்னாங்க விபரம் புரியாத ஆளா இருக்கீங்க, "சாப்புட்டவங்க கம்மி கணக்குக் காட்டி வாங்கியது அதிகம்! இதுல பலபேர் காலைல ஓட்டல்ல வெளியிலயே சாப்பிட்டவங்க. அவங்க கணக்கும் இங்க என்று கண்சிமிட்டினார்.

ஆன்மீகச் சுற்றுலாவுக்கு கல்லூரி பேருந்தை ஓட்டிவிட்டு பேராளர்கள் சுற்றுலாச்செலவு, அவர்களுக்கு டீ, காபி, டிபன் செலவு என்று ஒரு வரவு! பலபேராளர்களுக்கு தங்குமிடச் செலவு செய்யாமலேயே செய்ததாகச் செலவு, பலபேராளர்களின் பயணப்படி அவர்கள் கைக்குப் போகமலே இவர் பைக்குள் போனது, விழாமேடை அலங்கரிப்பு, வரவேற்பு,பொன்னாடை, பரிசுகள் வாங்கியது இப்படி எத்தனை வகை உண்டோ அத்தனையிலும் "இவருக்கும்" கல்லூரி நிர்வாகத்துக்குமே தமிழ் செம்மொழி நிதி மறைமுகமாகச் சேர்ந்துவிட்டதாகத் தெரிகிறதுது.

இப்படியெல்லாம் செய்யமுடியுமா என்று நாம் திகைத்துப்போனோம்!

துவ‌க்க‌விழாவிலும் நிறைவு விழாவிலும் நெடுஞ்செழிய‌ன் பேராள‌ர்க‌ளைப் ப‌ற்றிச் சொன்ன‌ நேர‌த்தைவிட‌ விருந்தின‌ர்க‌ளைப் புக‌ழ்வ‌திலும், கோரிக்கை வைப்ப‌திலும் பெரும் நேர‌த்தை எடுத்துக்கொண்டார். இந்த‌ச் ச‌ட‌ங்குத்த‌ன‌மான‌ துவ‌க்க‌, நிறைவு விழாக்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ருத்த‌ர‌ங்கிற்கு தேவையா? இவையெல்லாம் நம்மிடம் புலம்பிய பேராளர்களின் வேதனைக் குரல்கள்!

ந‌ம் கேள்வி இதுதான்!

க‌ல்லூரிக்கு வெளியேயும் ச‌ரி, உள்ளேயும் ச‌ரி எந்த‌ ஏற்பாடும் செய்யாம‌ல் இப்ப‌டி ஒரு க‌ருத்த‌ர‌ங்கு அதுவும் ப‌ன்னாட்டுக் க‌ருத்த‌ர‌ங்கு என்று எப்ப‌டி ந‌ட‌த்த‌ முடிந்த‌து? நிதி ந‌ல்கிய‌வ‌ர்க‌ளுக்கும் இதில் அக்க‌றை இல்லையா? இது யாருடைய‌ த‌வறு? செம்மொழித் திட்ட‌ம் நிதி வ‌ழ‌ங்க‌ ஒப்புக்கொண்ட‌போதே சில விதிமுறைக‌ளுக்குட்ப‌ட்டுத்தான் கொடுத்திருக்கும். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் சொல்ல‌த் த‌வ‌றியதா?

இல்லை நெடுஞ்செழிய‌ன் த‌ன் ம‌ன‌ம்போன‌ போக்கில் பேராள‌ர்க‌ளுக்கு அறிக்கை அனுப்பிவிட்டாரா?இல்லை சக பேராசிரியர்கள் தங்களுக்குள்ளேயே சொல்லிப் புழுங்கிக்கொண்டிருக்கும் நெடுஞ்செழியனின் " பதவி உயர்வுக்காக" மட்டுமே பல பேராள‌ர்களின் நேரத்தையும் உழைப்பையும் உறிஞ்சி ஏனோதானோவென்று நடத்தப்பட்ட கருத்தரங்கா?

எப்ப‌டி இருந்தாலும், யார் இந்த‌த் த‌வ‌றைச் செய்திருந்தாலும் அது இமால‌ய‌த் த‌வ‌று என்ப‌தால் த‌வ‌றிய‌ இருசாராரின் பேரிலும் ந‌ட‌வ‌டிக்கை எடுத்து எதிர்கால‌த்தில் இது போன்ற‌ பிர‌ச்னைக‌ள் எழாவ‌ண்ண‌ம் முற்றுப்புள்ளி வைக்க‌ வேண்டும்!

இன்றைக்கு இருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி கருத்தரங்கு நடத்திய செயலர் நெடுஞ்செழியனிடமிருந்தும், இந்திய‌மொழிக‌ளின் ந‌டுவ‌ண் நிறுவ‌ன‌ம் மைசூர் த‌மிழ்ச் செம்மொழித் திட்ட தலைவரிடமிருந்தும் பெற்ற நிதியை எப்படிச் செலவு செய்தீர்கள் என்ற விபரமும் கோரிப்பெற்றால் பல மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும். (அதற்கான முயற்சியில் அதிகாலை.காம் ஈடுபட உள்ளது)

இந்தக் கருத்தரங்கால் ஒருவர், இருவர் இல்லை. பலபேரின் வயிற்றெரிச்சலுக்கும் சாபத்துக்கும் கல்லூரி நிர்வாகமும், (நெடுஞ்செழியனும்) தமிழ் செம்மொழி திட்டத்தினரும் ஆளாகியுள்ளனர். தமிழக முதல்வர் இது விசயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதோடு எதிர்காலத்தில் தெளிவான ஒழுங்குமுறைகளும், விதிமுறைகளும் கடைப்பிடிக்க‌ ஆவன செய்வார் என்று நம்புவோம்!

April 17, 2008

பெண் பெயரில் ஆண் எழுதலாமா? மாலதி மைத்ரிக்கு எதிர்வினை - கவிஞர் அமிர்தம் சூர்யா

கவிதையில் மரபின் கைபிடித்து, இப்பொழுது பின் நவீனத்துவத்தில் உலா வருபவர். 'உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை', 'பகுதி நேரக்கடவுளின் நாட்குறிப்பேடு' ஆகிய கவிதைத் தொகுதிகளையும், 'முக்கோணத்தின் நான்காவது பக்கம்' எனும் கட்டுரைத் தொகுதியையும் வெளியிட்டிருப்பவர். விரைவில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. நவீன ஓவியம், விமர்சனம், நாடகம் போன்ற துறைகளிலும் இயங்கி வருபவர். சென்னைவாசியான இவருக்கு நாடு முழுக்க இலக்கிய நட்பு. அவர் கண்டு, கேட்டு, பார்த்து, படித்த பல விசயங்களை பகிர்ந்து கொள்ளும் இத்தொடர் எளிய நடையில் உங்கள் தோள்மீது கை போட்டு உரையாடிச் செல்லும்

இனி அவரும், நீங்களும்....
பெண் பெயரில் ஆண் எழுதலாமா? மாலதி மைத்ரிக்கு எதிர்வினை:-
பெண் பெயரில் ஆண் எழுதுவதை அனுமதிக்கலாமா? என்ற மாலதி மைத்ரியின் கட்டுரைக்கு என் எதிர்வினை: இலக்கிய உலகில் நிறையப் பெண்கள், ஆண்களைப் போல உடை அலங்காரம்,சிகை அலங்காரம் மட்டுமல்ல இலக்கியக் கூட்டத்திலேயே புகைபிடித்தபடியிருக்கும் காட்சியைப் பார்க்கையில் இவர்களுக்கு ஆண்கள் மீது ஏன்தான் இவ்வளவு மோகம் என்று தோன்றுகிறது? இது ஒருபோதும் ஆண் அடையாளத்தை அழிக்கும் முய்ற்சியாக பிதற்ற முடியவில்லை.அல்லது 'அணங்கு' இதழ் தலையங்கத்தைப் போல இம்மாதிரியான பெண்கள் ஆண்களாக தங்களை மாற்றிக் கொள்ள அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள்லாமே என அபத்த காழ்ப்புக் கொட்ட தோன்றவில்லை. ‘பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதலாமா?’ என்று மாலதி மைத்ரி கேட்கிறார். இது அசட்டுத்தனமான பெண்ணாதிக்க உளறாலாக தோன்றுகிறது. 'பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருப்பதை அனுமதிக்கலாமா? மேற்கத்திய உடையில் உலவும் பெண்கள் நமது கலாசாரத்தைச் சிதைக்கும் குறியீடுகள் - இதை ஒப்புக் கொள்ளலாமா?
'கணவன் அனுமதி இல்லாமல் எழுதும் பெண்களை இலக்கிய உலகம் அங்கீகரிக்கலாமா?' இப்படி எல்லாம் கேள்விகளை எழுப்பினால் எப்படி அபத்தமாக, அறிவிலியாக, உளறலாக தோன்றுமோ அப்படியான ஒத்திசையில் உள்ளது அந்தக் கேள்வி. அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுத்து குத்தும் ராஜ்ய முத்திரையை எப்பொழுது பெற்றீர்கள்? சரி இந்தக் கேள்வி எழுப்பும்முன் இப்பிரச்சினை எங்கிருந்து தோன்றியது?
பெண் படைப்பாளிகளின் கவிதகளைத் தொகுக்கும்போது சில ஆண் படைப்பாளர்களின் கவிதையும் சேர்ந்து விடுகிறது. விமர்சனம் செய்த எழுத்தாளர் ஆண்/ பெண் யார்? என்ற அடிப்படை இலக்கிய புழக்கம் கூட தொகுப்பாளருக்கு இல்லையென கிண்டலடிக்க அன்று துவங்கியது இப்பிரச்சினை. குறைந்தபட்சம், இலக்கிய உலகில் பரிச்சயம் வேண்டும். அல்லது தொகுக்கிறபோது சம்பத்தப்பட்ட நபரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்போது 'அம்மணி..நான் பெண் அல்ல;பெண் பெயரில் எழுதும் ஆண் 'என்று பதில் கிடைத்திருக்கும். இந்த அடிப்படைச் சட்ட நாகரீகம் கூடத் தெரியாமல் தொகுத்துவிட்டு அதிலிருந்து தன்மீது படிந்த அங்கதத்தை துடைத்துக் கொள்ள இந்தக் கருத்தியலைக் கையில் எடுக்கிறார்கள்.

"ப்ரியம்'- என்ற சொல் அன்பை / நேசத்தை குறிக்கும் சமஸ்கிருதச் சொல். இதை ஒரு ஆண் கவிஞர் புனைபெயராக கொண்டுள்ளார். இது எப்படி பெண் பெயராகும்? (இவருடைய கவிதையைத்தான் தொகுப்பில் சேர்த்து விட்டனர்)

'அமிர்தம் '-என்ற சொல் அமிழ்தம் என்ற சொல்லின் திரிபு.(தமிழுக்கு அமுதென்று பேர்-பாரதிதாசன்)அமிர்தம் – சாகா வரம் தரும் உணவுப் பொருள் .இது பெண் பெயரா?

சக்தி + அருள்+ஆனந்தம் இதில் இந்த மூன்று சொல்லில் திட்டவட்டமாக பெண் அடையாளம் கொடுக்கமுடியுமா? சக்தி அருளாந்தம் என்று எழுதினால் ஆண் அடையாளம். சக்தி அருளானந்தம் என்பது கூட தோரணையில் ஆண் பிம்பமே!.சமீபத்தில் ஒரு பெண் இந்தப் பெயரில் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.( என்ன ஆணவம்! ஆண் பெயரில் ஒரு பெண் எழுதுவதா?... சும்மா தமாஷ்)

ஆக பொதுச் சொல்லை அல்லது பெண் பெயரை ஆண்கள் சூட்டிக் கொள்வது அவரவர் உரிமை. அதைக் கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு பேராசிரியர். பத்மாவதி விவேகானந்தன் போன்ற மாலதி சகாக்கள் தனது பெயருக்குப் பின்னால் ஆறாவது விரல் போல ஒட்டிக் கொண்டு திரியும் விவேகானந்தன் என்ற ஆண் பெயரை அப்புறப்படுத்திவிட்டு காத்திரமான பெண்ணியவாதியாக மாறவேண்டும். பத்மாவதி விவேகானந்தன் என்பதுதான் தமிழ் மரபு / தமிழ் நாகரீகம் என்றால் அதற்கு தலை வணங்குகிறோம்.

அரசியல் தலைவர்கள் 'தமிழ் இலக்கியவாதிகள் தங்கள் பெயரை தூய தமிழில்தான் வைத்துக் கொள்ள வேண்டும். இனி தமிழ் அடையாளத்தை அழிக்கும் அபத்தம் நிகழக் கூடாது என்று பேச அதிக நாட்கள் இல்லை.அப்படியொரு சூழல் வந்தால் ... இதை நமட்டுச் சிரிப்போடு புறக்கணிப்பார்கள். அப்படித்தான் ‘அணங்கு’ கேள்வியைப் புறக்கணிக்கிறோம்.

இம்மாதிரியான பட்டிமன்றக் கூத்து நவீன கூடாரத்திலுமா? தன் இருத்தலை நியாப்படுத்த, நிலைப்படுத்த இம்மாதிரியான கருத்தியலையா கையில் எடுப்பது? விவாதிக்க,எவ்வளவோ விசயம் இருக்கிறது. இனிமேலாவது, ஆரோக்கியமான விவாதங்களை மாலதி எழுப்ப வேண்டும்.

வைரமுத்து பாசறைக் கலைப்பும், பாண்டிச்சேரியில் ஒரு சிறந்த நூல் கூட வராத அவலமும்-ராஜ்ஜா பேச்சுக்கு கண்டனம் :- பாண்டிச்சேரியில் தோழர் இளங்கவி அருள் என்ற நண்பர் - வைரமுத்துதாசன். ‘கவிஞர் வைரமுத்து பாசறை’ - என்ற பெயரில் கவிஞருக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து விழா எடுப்பார்.

இப்பொழுது நவீன இலக்கியவாதிகளின் அறிமுகம கிடைத்து, அவர் வைரமுத்துவை கடந்து பயணப்படத் தொடங்கி விட்டார். பாசறையைக் கலைத்துவிட்டு 'மீறல்'- என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். அவ்வப்பொழுது புதுவையில் நவீன படைப்பாளிகளைக் கூட்டி நிகழ்ச்சிகள் நடத்துவார்.அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியில்தான் பேரா.ராஜ்ஜா என்பவர் பேசினார்.பாண்டிச்ச்சேரி இலக்கியத்தை ஆங்கிலத்தில் எழுதிவருகிறாராம்.

அதற்கு ஆக்ஸ்போர்டு உதவி வருகிறதாம். இதை எல்லாம் சொல்லிவிட்டு "பாண்டிச்சேரியில் ஒரு சிறந்த் நூல் கூட வரவில்லை 'என்று முடித்தார். கூட்டத்தில் ரமேஷ்(பிரேம்), மாலதி மைத்ரி உள்ளிட்ட பாண்டிச்சேரி படைப்பாளிகளும் இருந்தார்கள்.ஒருவரும் எதிர்ப்புக் காட்டவில்லை. நான் மட்டும் எழுந்தேன். "ராஜ்ஜா அவர்களே, பாரதிதாசன், பிரபஞ்சன், ரமேஷ்-பிரேம், மாலதிமைத்ரி இவர்களில் ஒருவர் கூட சிறந்த நூலைத் தரவில்லை என்றால் உங்களின் வாசிப்பும் , தரவரிசையும் சந்தேகத்திற்குரியது. அல்லது குறுகிய அரசியலுக்கு உட்பட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இனி ஒருபோதும் பாண்டிச்சேரியில் உங்களுக்குத்க்கு தென்படாது.

கூட்டம் முடிந்து வெளியில் வந்தேன். பெரியவர் ஒருவர் இடைமறித்தார். “தம்பி ஏம்பா இது உனக்க்கு? சம்பந்தப்பட்டவங்களே சும்மா இருக்கும்போது தேவையா உனக்கு? .ராஜ்ஜாவை அனுசரிச்சுப்போன இங்கே நிறைய ஆதாயம் இருக்கு தம்பி. மேடையில் மாலதியும், ரமேஷும் அமைதியாகத்தானே இருந்தனர்.."என்றார்.

'சபை நாகரிகம் கருதி அவங்க ரெண்டு பெரும் அப்படி இருந்திருக்கலாம்' என்றேன்.

'அட போப்பா.. சபை நாகரீகமா? எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது உரிமைக்க்காக கூட்டத்தில் கலாட்டா செய்த நவீனவாதிகளுக்கு சபை நாகரீகம் தெரியுமா?' என்றார். நான் அமைதியானேன். இதுவரை 26 நூல்கள் எழுதிய ரமேஷ் -பிரேம் படைப்புகள் ஒரு நாள் கருத்தரங்கம் சமீபத்தில்தான் ந்டைபெற்றது என்பது உபரித் தகவல். ராஜ்ஜா பேசியதற்கு எதிர்வினையாக இதைக் கருத வேண்டியதில்லை.

'திருநங்கை' - மதிப்பீடு ஆண்களிடமிருந்தே தொடங்க வேண்டும்:-

வட சென்னை விளிம்பு நிலை மக்களும், அரவாணிகளும் சகஜமாக தோழமையோடு பழகுவதை கவனித்திருக்கிறேன். எப்படி இந்த இணக்கம் வந்து விடுகிறது? என்பது என்னுடைய பழைய கேள்வி.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் 'இப்படிக்கு ரோஸ்' - என்ற நிகழ்ச்சி பார்த்தேன்.அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்- ரமேஷ்பாபு என அறியப்பட்டு அமெரிக்காவின் லூதியானா பலகலை கழகத்தில் படிப்பு முடித்தவர். அதன்பின் அரவாணியாக மாறி இப்போது ரோஸ் - ஆக அவதாரம் எடுத்துள்ளார்.

ரோஸ், 3 அரவாணிகளை நேர்காணல் செய்தார். ஒருவர் - நவீன இலக்கிய சூழலில் அறியப்பட்ட லிவிங்ஸ்மைல் வித்யா. "ரயிலில் பிச்சையெடுக்குபோது எனக்கு அது பிச்சையாக தெரியவில்லை.உன்னைப் போல நல்ல குடும்பத்தில் பிறந்து .உன்னைப் போல கம்யூட்டர் சயன்ஸ் படித்துள்ள என்னை பெண் தன்மை இருப்பதாலேயே என்னைப் புறக்கணிப்பது என்ன நியாயம்?எனவே எனக்கு நீ அபராதம் செலுத்த வேண்டும் என்று கேட்பது போல்தான் தோன்றும். நான் கேட்டது பிச்சை அல்ல:அது அபராதம்." என்றார். சபாஷ்! நவீனத்துவப் பார்வை அது.

இன்னொரு அரவாணியின் நேர்காணல். அது முற்றிலும் மாறுபட்டது. அரவாணியாக மாற அவருடைய குடும்பமே அனுமதித்ததாம். "பெண்களைப்போல் உறுப்புக்கள் அமைய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன் என்னை ஒருவர் விரும்பினார். என்னை திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார். இருவர் வீட்டிலும் சம்மதம். திருமணமும் நடந்து முடிந்தது. என் கண்வரின் நண்பர்கள் என்னை அக்காள் என்றும் அண்ணி என்றும் அழைப்பார்கள் ' என்று கூறி முடித்தார்.

இப்படியும் ஒரு பக்குவப்பட்ட குடும்பம். சமூக சூழல் மற்றும் மனோ பாவங்கள் மாற்றி அமைக்கும் முன்னுதாரண நண்பர்கள். அரவாணியை மனைவியாக ஏற்றுக் கொண்ட அந்த முகம் தெரியாத மனிதனின் நெஞ்சுரம் கண் முன் வந்து போனது.

ரயில் வண்டியியில் மாறி மாறி வித்யாவை உதைத்த இதே பூமியில்... இன்னொரு அரவாணி சமூக அந்தஸ்த்துக்கு உய்ர்த்தப்ப்பட்ட சம்பவம். முரண்களால் நெய்யப்பட்ட உலகம் நம் கண் முன்னே விரிகிறது.

தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவிஞர் திலகபாமாவிடமிருந்து தொலைபேசி. "சூர்யா இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி பாத்தியா...அந்தப் பொண்ணுடைய துயரமும் , அந்த அம்மாவின் அழகான குடுமபமும் அடடா...அந்தப்பெண்ணின் கணவன் யார் என்று நம்மைத் தேட வைக்கிறது" என்றார். எனக்கு பெரிய குழப்பம்."எந்த அம்மா? எந்தப் பொண்ணு? யாரைச் சொல்லுறீங்க? என்றேன்.

"ஏம்பா இப்ப்டிக்கு ரோஸ் நிகழ்ச்சி பாக்கலையா?" நான் பிறகு சுதாரித்துக் கொண்டேன்.

நான் முழுக்க முழுக்க அவர்களை அரவாணியாக பாவித்து, அவர்களின் துயரங்களை உண்மையில் ஆத்மார்த்த அக்கறையோடுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் திலகபாமாவோ அவர்களை முழுப்பெண்களாகவே நினைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை ‘அந்தப் பொண்ணு… அந்த அம்மா’ என்ற்கிற சொற்பிரயோகத்தின் மூலம் வெகு இயல்பாக ஒன்றிவிடுகிறார். என் பழைய கேள்வி செத்துப் போனது.

இது திலகபாமாவிற்கானது மட்டுமல்ல;பொதுவான எல்லாப் பெண்களுக்குமானதுதான் போலும். பெண்களின் உலகமும், ஆண்களின் நிலைமையும் முற்றிலும் மாறானது.

அரவாணிகள் / பால் குறைபாடுடையோர்/ மாற்றுப் பாலினத்தார் என புதுப்புது அடை மொழியில் விளிக்காமல் 'திருநங்கை' என்ற சொற்பிரயோகமே இனி மரபார்ந்த நாகரீக துவக்கமாயிருக்கும். எல்லா மாற்றங்களும் ஆண்களிடமிருந்தே துவங்க வேண்டியுள்ளது என்பது மறுதலிக்க முடியா உண்மைதான்.

April 01, 2008

கன்னடர்களுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் ரஜினி கலந்து கொள்வாரா?

கர்நாடகத்தின் அட்டூழியங்களையும், அராஜகத்தையும் கண்டித்து தமிழ் திரைப்பட உலகம் வரும் 4-ந்தேதி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உள்ளது. இந்த உண்ணாவிரத்திதில் கன்னடரான ரஜினி கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அப்படி அவர் கலந்து கொள்ளவில்லை எனில் திரைப்பட சங்கத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்றும் இப்பொழுதே பரபரப்பான ஊகங்கள் கிளம்பத் தொடங்கி விட்டது.

ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கர்நாடகா, தமிழக மாநிலங்களுக்கிடையே பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென கன்னட அமைப்புக்கள் வெறித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் திரைப் படங்கள் வெளியிடப்பட்ட 3 திரையரங்குகள் பெஙகளூருவில் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன.

கர்நாடகத் தமிழர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தமிழக சட்டசபை கர்நாடாகவைக் கண்டித்து கண்டனத் தீமானம் நிறைவேற்றி உள்ளது. அதே போல் தமிழ் திரை உலகம் கன்னட அமைப்புக்களுக்கு எதிராக களம் இறங்கி உள்ளது.

இதுபற்றி விவாதிக்க இன்று அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கன்னட அமைப்புக்களைக் கண்டித்து எதிர்வரும் ஏப்ரல் 4-ம் தேதி உண்ணாவிரதம் இருப்பது என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதில் ரஜினி உள்ளிட்ட கன்னடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நடிகர்கள் கலந்து கொள்வார்களா என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஒருவேளை ரஜினி உள்ளிட்ட சென்னை வாழ் கன்னட நடிகர்கள் பங்கேற்காவிட்டால் என்ன நடவ்டிக்கை எடுப்பது என்றும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இந்த உண்ணாவிரதம் தவிர பல அடுக்கு தொடர் போராட்டங்களை நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், ஏப்ரல் 4-ம் தேதி நடக்கும் இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். போராட்டம் நடைபெறும் இடம் காவல்துறையினருடன் விவாதித்து விட்டு அறிவிக்கப்படும்.

போராட்டம் நடைபெறும் நாளின்போது தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெறாது. டப்பிங் பணிகள் ரத்து செய்யப்படும் தியேட்டர்களில் படங்கள் திரையிடுவதும் நிறுத்தப்படும்.
அனைத்து நடிகர், நடிகைகளும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் கலைஞர்களுக்கு திரைத் துறையின் எந்த சங்கமும் ஒத்துழைப்பு தராது. இது திரையுலகின் ஒருமித்த முடிவு என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் ரஜினிகாந்த்துக்கும் இந்த போராட்டம் பொருந்துமா என்று கேட்டபோது குறுக்கிட்ட நடிகர் சத்யராஜ், "தமிழ்நாட்ல இருந்துக்கிட்டு, தமிழனோட சோத்தை திங்கிறவன் அத்தனை பேரும் இதில் கலந்து கொள்ளவேண்டும். இல்லைன்னா அவர்கள் இங்கே இருக்கவே முடியாதுங்க" என்றார் ஆவேசமாக.

ஏற்கனவே நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது காவிரிப் பிரச்சினையில், பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் மாபெரும் போராட்டத்தை நடிகர் சங்கம் நடத்தியது நினைவிருக்கலாம். அந்தப் போராட்டத்தில் கமல்ஹாசன் உள்பட அனைவரும் திரண்டு வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் மட்டும் அதில் பங்கேற்காமல் அடுத்த நாள் சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

ஆனால், அர்ஜூன் உள்ளிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்திலோ அல்லது ரஜினியின் உண்ணாவிரதத்திலோ பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

March 31, 2008

"இலங்கையை இரண்டாகப் பிரித்தால் என்ன தவறு?" - சத்யராஜ் கேள்வி

ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கும், கம்பன் கழகத்துக்கும் மட்டுமே கதவு திறந்த கோவை நானி கலை அரங்கம் (மணி மேல் நிலைப் பள்ளி), முதல் முறையாக கறுப்புச் சிந்தனையாளர்களுக்கு கதவு திறந்தது.

அது - எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழா, பெரியார் படத்தில் நடித்து அழியாப் புகழ் தேடிக்கொண்ட சத்ய்ராஜுக்கு பாராட்டு விழா, எம்.ஆர். ராதாவைப் பற்றிய பத்திரிகையாளர் மணா எழுதிய நூல் அறிமுக விழா.... இப்படி கோவை – ‘நாய் வால் திரைப்ப்ட இயக்கம்’ நடத்திய முப்பெரும் விழா.
எல்லாக் கூட்டங்களிலும் நக்கலோடு பேசி முடிக்கும் எழுத்தாளர் பாமரன் இந்த மேடையில், 'எம்.ஆர். ராதாவுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாரிசுகள் அல்ல. இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கும் நாம்தான் அவரின் உண்மையான வாரிசுகள்.

என் தோழர்களாய் இருக்கும் என் தம்பிககிட்டே நான் வைச்சிருக்கிற ஒரே வேண்டுகோள்; நான் செத்துட்டா என்னோட உடம்பை நீங்க கைப்பத்திடணும்; எனக்கு எந்த மதச் சடங்கையும் யாரும் நடத்திடக் கூடாது. என் கொள்கை என்னோட சாவிலேயும் நிலைச்சு நிக்கணும்'.... கூட்டத்தை கண் கலங்க வைத்தார் பாமரன். விழாவுக்கு தன் 3 வயதுக் குழந்தையை தோளில் சுமந்தபடி சென்னையிலிருந்து வந்திருந்தார் தோழர் தியாகு. அவரும், எம்.ஆர். ராதாவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தது, அவருடன் ஏற்பட்ட நட்பு, அவரின் சமரசமற்ற வாழ்க்கை முறை இப்படி நிறையப் பேசினார். முடிந்தால் தமிழ் சினிமாவின் நாய் வாலை நிமிர்த்த பார்க்கணும். இல்லைனா வெட்டிடணும். அதிர வைத்தார் 'அழித்தொழித்தல்' தோழர் தியாகு.

'காலத்தின் கலைஞன் எம்.ஆர்.ராதா' என்ற புத்தகத்தை எழுதிய ‘புதிய பார்வை’ - இதழின் இணை ஆசிரியர் மணாவின் ஏற்புரையில், எம்.ஆர். ராதா பற்றிய தகவல் திரட்டுவதற்காக அவர் பட்ட அளப்பரிய உழைப்பின் உண்மை தெரிந்தது. எம்.ஆர். ராதா குடும்பத்தைச் சேர்ந்த இன்றையப் பிரபலங்கள் இதற்கு துளிகூட ஒத்துழைப்பு தரவில்லையாம். எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.ஆர். ராதாவை ஏன் இவ்வளவு தூக்கிப் பிடிச்சு ஒரு புத்தகம் எழுதணும்னு ம.நடராஜனுக்கும் (சசிகலா), மணாவுக்கும் ஏகப்பட்ட மிரட்டல் வந்ததாம் ஒரு தரப்பிடமிருந்து.

அடுத்து மைக்கை ரொம்ப உயரத்துக்கு நிமிர்த்தி பேச வந்தார் சத்யராஜ்; தனக்கே உரிய லொள்ளுப் பேச்சில் பெரியாரின் சிந்தனைகளை அள்ளி வீசினார். மெதுவாக ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குள் நுழைந்தார். அரங்கம் அதிரும் அளவுக்கு கை தட்டல்கள். ஒன்றாக இருந்த சோவியத் யூனியன் இன்றைக்கு ஏராளமான நாடுகளாய்ப் பிரிந்து இருக்கும்போது இலங்கைத் தீவு இரண்டாகப் பிரிந்தால் என்ன தவறு? என்ற சத்யராஜின் கேள்வியில் அர்த்தம் இருந்தது.

ஆனால் இனிமேல் ஏனோ, தானோ படங்களில் எல்லாம் சத்யராஜ் தலைகாட்டக் கூடாது என்பதுதான் அனைவரின் வேண்டுகோளாய் இருந்தது. பொறுப்பைச் சுமப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த விழாவுக்காக எந்த அதிபர்களிடமும், ஆலை உரிமையாளர்களிடமும் நிதி சேகரிப்பு நடத்தவில்லையாம். எல்லாம் உணர்வுப்பூர்வமான சகதோழர்களின் 50-ம், 100-தானாம். பெருமையாய்ச் சொல்லிக் கொள்கிறது விழாக் குழு.

'எழுத்தும், சிந்தனையும் எனக்கு சம்பாதிச்சு தந்தது.... ஏராளமான தம்பிகளின் நட்பைத்தான் என்று சொல்லும் எழுத்தாளர் பாமரனின் அலைச்சல் மிக்க உழைப்பும், அவரைச் சுற்றி எப்பொழுதும் இருக்கும் அவரின் தோழர்களின் வியர்வையும் விழாவின் வெற்றியில் வெளிச்சம் காட்டியது.

சமூக அக்கறை உள்ள மனிதர்கள் காலமாகிவிட்டாலும், அவர்களை நினைத்துப் பார்க்க ஒரு கூட்டம் இருக்கும் வரை மனித இனம் பாராட்டுக்குரிய ஒன்றுதான். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=875&Itemid=163

"எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மன நோயாளி" - கவிஞர் கனிமொழி

"எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மன நோயாளி" என்று கவிஞர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.


தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 9 நாட்களுக்கு கலை இலக்கிய திருவிழா சென்னையில் தொடங்கியது. கவிஞர் கனிமொழி கருணாநிதி குத்து விளக்கேற்றி இதைத் தொடங்கி வைத்தார். தி.நகர் வாணி மஹாலில் இந்த திருவிழா நடைபெறுகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த கலை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று, திராவிட இயக்கப் படைப்பாளிகளில் சிலர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை தாங்கிப் பேசினார். மேலும் முனைவர் வீ.அரசு, ஏ.எஸ்.பன்னீர் செல்வம், ந.முருகேச பாண்டியன், பேரா. சுப.வீரபாண்டியன் ஆகியோர் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் கலை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- இன்று தொடங்கி 9 நாட்களாக நடைபெற உள்ள இந்தக் கலை இலக்கியத் திருவிழா வெறும் திராவிட இயக்கத்தின் சிறப்புக்களை மட்டும் பகிர்ந்துகொண்டு பாராட்டுவதற்கு அல்ல. தோழர் ஜீவா முதல் சிதம்பர தில்லையம்பல ஓதுவார் வரை இங்கே சிறப்பிக்கப்பட உள்ளனர்.

கனிமொழி
திராவிட எழுத்துக்கள் இலக்கியம் இல்லை என்று தொடர் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று இப்பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மேடை முதல் நாடு வரை பெண்கள் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அது திராவிடம் தந்த வெற்றி. கல்வி, சமூக நீதி. சாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை இவை எல்லாம் திராவிடத்தால் மட்டுமே நமக்கு சாத்தியமானவை. அதேபோல் இன்றைய சூழ்நிலையில் போராட்ட உணர்வு இங்கே தேவை இல்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டது. நாடு தன்னிறைவு அடைந்து விட்டது; என்று ஒருவித போலி பிரசாரத்தை எல்லா ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? இன்னும் நம்முடைய போராட்டத்தின் தேவை என்ன என்பது நமக்குத் தெரியும். ராமர் பாலம் பிரச்சினை. அதற்கு மதச் சாயம் பூசப்படுகிறது. அதன் உருவகமாக தலைவர் கலைஞர் ஆக்கப்படுகிறார். தமிழ்நாட்டின் ஆக்கப் பூர்வமான வளர்ச்சியையும், உற்பத்தியையும் தடுக்கும் வகையில் ஒரு தரப்பு நடத்திவரும் சதி இது. ஒரு காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்த சென்னை ஒரு பெரிய நகரமாக ஆனதற்கு என்ன காரணம்? இங்கு உருவாக்கப்பட்ட துறைமுகம்தான் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் என சகல துறைகளிலும் தமிழகத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய திட்டம்தான் சேது பாலத் திட்டம். ஆனால் அதை ராமர் எனும் பெயரை வைத்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை இங்கே நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என நம்பும் அறிவு மழுங்கடிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நாம் மீண்டும் திராவிட இயக்க கருத்துக்களை நாம் மறு வாசிப்பு செய்ய வேண்டும். பாதை மறந்து விட்டால் நம் பயணத்தின் இலக்கு நமக்குத் தெரியாது. தொடர்ச்சியாக நாம் ஒதுக்கி வைக்கப்பப்டுவோம். தில்லையம்பலத் தீட்டுக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒரு தேவதாசிப் பெண் கட்டிய கோவிலான திருவையாறில் தமிழில் பாடக்கூடாது என்ற நிலை இருந்தது. அப்படிப் பாடினால அந்த இடத்தை தண்ணீர் வைத்துக் கழுவிவிட்டு தீட்டு கழித்த சம்பவம் இங்கே நடந்திருக்கிறது. அதை உடைத்துக் காட்டிய பெருமை திமுகவைத்தான் சாரும். இதனைக் கண்டித்து முரசொலியில் தலைவர் கலைஞர் எழுதிய 'தீட்டாயிடுத்து' என்ற தலையங்கம் பெரியார் அவர்களால் பாராட்டப் பெற்றது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=913&Itemid=164

March 18, 2008

"சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை" அதிகாலை.காம்

வணக்கம். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம் www.adhikaalai.com எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது. உலகத்தின் 20 -க்கும் மேற்பட்டுள்ள நாடுகளில் எமது செய்தியாளர்கள் உள்ளனர். உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைதான் எமது தளத்தின் வேர்கள். எமது பின்புலமாய் சமூக அக்கறையுள்ள சில மாமனிதர்கள்.
சமூகத்தின் சகலமும் ஒலி-ஒளி வடிவில் இடம் பெறும். இதுவரை நம் ஊடகங்களால் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளும், சம்பவங்களும் உயிரோட்டத்துடன் இங்கு வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். சமூகத்தின் பன்முகத்தன்மைகளும் அசலாய் காட்டப்படும். கண்ணியாமான எழுத்துக்கள் கெளரவிக்கப்படும். சாராம்சம் நிறைந்த சச்சரவுகளுக்கு மட்டுமே சரிசம இருக்கைகள் கொடுக்கப்படும். விடை தேடும் பிரச்சினைகளுக்கான விவாதங்கள் முன் நிறுத்தப்படும்.

உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம், ஆன்மீகம், வர்த்தகம், பிரபலங்களின் நேர்காணல், குறும் படங்கள், புகைப்படத் தொகுப்பு, சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனை, சமூக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை, சுற்றுலா, வணிகம், களஞ்சியம், பாட்காஸ்ட்... இப்படி பலவும் இங்கே ஆழமுடன் இடம்பெறும்.
சுருங்கச் சொல்வதாயின் "சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை" சராசரி மனிதருக்கும் எட்டும் வகையில் எடுத்து வைக்கப்படும். எமது தளத்துக்கான ஆலோசனைகள் எத்திசையிலிருந்து வந்தாலும் அன்போடு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் எமது பயணத்தில் தோள் கொடுக்க விரும்பும் அன்பு நெஞ்சங்களையும் அரவணைத்துக் கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
ஆசிரியர் குழு
அதிகாலை.காம்
www.adhikaalai.com

editor@adhikaalai.com
"அதிகாலை" தமிழ் இணைய இதழ் பற்றி திண்ணையில் வந்த அறிவிப்பு...http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803132&format=html

March 04, 2008

'எழுத்துலக பிரம்மா' சுஜாதா

எழுத்துலக பிரம்மாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சுஜாதா என்கிற எஸ்.ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ஆழ்வார்பேட்டையில் நாரத கான சபாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுஜாதாவின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடந்தது.
ஜெயகாந்தன்: ஜெயகாந்தன் பேசுகையில், எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் சுஜாதா. அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது எழுத்துக்களை நான் வெகுவாக ரசித்தவன். தமிழில் வசீகரமான ஒரு எழுத்து நடையை அறிமுகப்படுத்தியவர், அதற்காக பல மரபுகளை மீறிய துணிச்சல்காரர் என்றார்.

மனுஷ்யபுத்திரன்: சுஜாதாவுக்கு நெருக்கமான எழுத்தாளர்களில் ஒருவரும், உயிர்மை பதிப்பக உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன் பேச்சு மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைந்திருந்தது. அவர் பேசுகையில், மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவர் சுஜாதாதான். இதைப் பலமுறை பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். அந்த எழுத்து மேதையை நினைவு கூறும் வகையில் இனி ஆண்டுதோறும் சுஜாதா இலக்கிய விருதினை உயிர்மை பதிப்பகம் மூலம் வழங்கவிருக்கிறோம். புதிய எழுத்தாளர்களுக்கு அந்த விருது மிகப்பெரிய உற்சாகத்தையும் வேகத்தையும் தரும் என்றார்.
கமல்: நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், சுஜாதா முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, மேலும் அதிக பாரத்தை அவருக்குக் கொடுத்தவன் நான். எனக்கு அவர் எழுதிக் கொடுத்து, ஆனால் சினிமாவாக எடுக்காத கதைகள் இன்னமும் எவ்வளவோ என் வீட்டில் உள்ளன. எனது மருதநாயகம் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் சுஜாதா. டைட்டிலில் திரைக்கதை சுஜாதா-கமல் என நான் எழுதிக் கொடுத்தேன். உடனே அந்த காகிதத்தை வாங்கிய சுஜாதா, அவரது பெயரை அடித்துவிட்டதோடு, உங்க பெயரே இருக்கட்டும் என்றார் பெருந்தன்மையோடு. அவருடன் இணைந்துதான் மீண்டும் அந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் போய்விட்டார். இப்போது மருதநாயகம் படத்தை எடுத்தால் நான் மட்டுமே அதிகம் எழுத வேண்டியிருக்கும். நேர்மை, ஒழுக்கம் இரண்டையும் தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டவர் அவர். தமிழுக்காக இப்படி ஒரு விழா எடுப்பது பெருமையாக உள்ளது. தமிழ் வாசகர்களின் தரத்தை உயர்த்திக் காட்டும் ஒரு நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன். சுஜாதா அதிகம் காதலித்தது தமிழைத்தான். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்ற வார்த்தையில் அதிக நிஜமிருக்கிறது என்றார் கமல்.

சிவகுமார்: நடிகர் சிவகுமார் பேசுகையில், சுஜாதாவின் தீவிர ரசிகன் நான். அவரது நூல்களை ஒரு லைப்ரரியாகவே சேமித்து வைத்திருக்கிறேன். அந்த மேதையை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோமா என்ற கேள்வி இன்னமும் எனக்குள் உறுத்திக் கொண்டே இருக்கிறது. நாடக உலகுக்கு அவர் செய்தவை ஏராளம். அவர் மறுபிறவி எடுக்க வேண்டும், மீண்டும் சுஜாதாவாகவே நம்முடன் வாழவேண்டும் என பேராசைப்படுகிறேன் என்றார்.

வைரமுத்து: வைரமுத்து பேசுகையி்ல், மரபுகளை உடைத்த மாமேதை சுஜாதா. வாழ்க்கை தராத மலர்ச்சியை அவருக்கு மரணம் தந்தது. அவரது உடலை நான் கண்டபோது, அதில் உறைந்த புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் ஒரு கடல். பொதுவாக, தமிழர்கள் செத்தபிறகுதான் சிங்காரித்து அழகு பார்ப்பார்கள். அப்படியில்லாமல், இனியாவது வாழும்போதே வாழ்த்த கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய இலக்கியத்தையும், மேல்நாட்டு இலக்கியத்தையும் கலந்து சுஜாதாயிஸம் என்ற புது இலக்கியமே படைத்தவர் அந்த மேதை. எனக்குத் தெரிந்து எந்த எழுத்தாளரையுமே அவர் புறம் பேசியதில்லை. உங்கள் எழுத்தை மேம்படுத்துங்கள், அடுத்தவர் எழுத்தைக் குறை சொல்லாதீர்கள் என்பார் எப்போதும். தமிழும் அதன் வீச்சும் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும். உண்மை, இது வெறும் புகழ்ச்சியில்லை என்றார்.

கனிமொழி: கவிஞர் கனிமொழி எம்.பி., பேசுகையில், அடுத்த எழுத்தாளர்களைக் குறைசொல்வது சுஜாதாவுக்குப் பிடிக்காத விஷயம். தன்னை மோசமாக விமர்சித்த எழுத்தாளர் ஒருவரின் கவிதையை என்னிடம் காட்டி, 'தமிழின் மிகச்சிறந்த ஹைக்கூ இது' என்று பாராட்டிய பெருமகன் அவர். அவரைப் போன்ற ஆளுமை படைத்த எழுத்தாளரை பார்க்க முடியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்த அவரை இழந்த சோகம் என் ஆயுள் வரை தீராது என்றார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சாருநிவேதிதா, மதன், கணையாழி கஸ்தூரிரங்கன், விகடன் ஆசிரியர் அசோகன், ஓவியர் ஜெயராஜ், சிவசங்கரி, இயக்குனர்கள் பாலுமகேந்திரா, தங்கர் பச்சான், பெண்டாமீடியா சந்திரசேகர், நடிகர் சத்யராஜ், தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் ஞானசம்பந்தன், திருப்பூர் கிருஷ்ணன் உள்பட பலரும் சுஜாதாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் உருவப்படத்தை சுஜாதாவின் மகன்கள் கேசவபிரசாத், ரங்கபிரசாத்திடம் வழங்கினார் கமல்ஹாசன். புகழஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் நடராஜன், இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் வசந்த் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.


* இந்த விழா பற்றிய முழு ஒலி-ஒளி தொகுப்பு www.adhikaalai.com அதிகாலை.காம் இணையதளத்தில் விரைவில் இடம்பெறும்.

March 01, 2008

"ஹாலிவுட் டு கோலிவுட்" ஒரு தமிழ் இளைஞனின் கனவுப் பயணம்

ஒரு பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனர்; பிறகு இணை இயக்குனர்; அதன்பின் கதை சொல்லி உருக வைத்து ஒரு அப்பாவி தயாரிப்பாளரை பணத்தை கொட்ட சம்மதிக்க வைத்தால் போதும். அவர் இயக்குனர். இவர் தயாரிப்பாளர். அதுதான் படம். இதுதான் தமிழ்த்திரை உலக ரசிகர்களுக்கு கிடைத்து வரும் பொக்கிசம்(?).
இப்படி நம் திரை உலகம் விபத்துக்களின் வேடந்தாங்கலாகிவிட்டது. (ஒரு சிலரைத் தவிர). ஆனால்... சினிமா..சினிமா..சினிமா.. உலகத் தரத்துக்கு இணையான ஒரு தமிழ் சினிமா என்ற வெறியுடன் அமெரிக்காவில் கற்று, அங்குள்ள ஜாம்பவான்களிடம் நிறையப் பெற்று, ஒரு பெரிய அங்கீகாரத்துடன் நம் கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார் அருண் வைத்தியநாதன் எனும் தமிழ் இளைஞர்.

அருண் வைத்திய நாதன்... குறும்பட இயக்குனர்கள் வரிசையில் முன்னிலை வகிப்பவர். தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதை இலட்சியக் கனவாக வைத்திருக்கும் சாப்ட்வேர் படித்த இளைஞன். பிறந்தது சிதம்பரம். இப்பொழுது வசிப்பது அமெரிக்கா. தொழில், கணினி மென்பொருள் துறை. ஆனால் மனதுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு....தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்வதுதான். இவர் ஒரு நல்ல இலக்கியவாதியும் கூட. நம் தமிழ் தொலைக்காட்சிகளிலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தயாரித்த அனுபவம் பெற்றவர். இதற்கு சாட்சியாக நிற்பவை இவர் கை வண்ணத்தில் உருவாக்கிய சில குறும்படங்கள். குறும்படங்களிலேயே வெளி நாட்டவரின் கவனத்தை நிறையப் பெற்றிருக்கிறார். அமெரிக்க தேசத்துக்கு பிழைப்புத் தேடிப் போனாலும் அவருக்குள் இருக்கும் சினிமா தாகம் அவரை விட்டுப் போவதாக இல்லை. நியூயார்க் திரைப்படக் கல்லூரி ஒன்றில் தயாரிப்புபற்றி கற்றுக் கொண்டார். அங்கேயே The Noose எனும் குறும் படத்தை இயக்கினார். ஏராளமான பாராட்டுக்கள். கூடுதல் உற்சாகம் பெற்றார். தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=697&Itemid=164

February 29, 2008

லீனா மணிமேகலைக்கு சர்வேதச விருது

மாத்தம்மா பறை மற்றும் பலிபீடம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் சார்ந்த யதார்த்த ஆவணப்படங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. அவருடைய 'தேவதைகள்' எனும் ஆவணப் படத்துக்கு சர்வேதச தங்கச் சங்கு விருது கிடைத்துள்ளது. இந்த விழா சமீபத்தில் மும்பையில் நடை பெற்றது.
"தேவதைகள்" மூன்று சாதாரணப் பெண்களைப் பற்றிய அசாதரணப் படம். இது ஒப்பாரியும், சுடுகாடும் கடலுமாய் வாழும் மூன்று பெண்களைப்பற்றிய ஆவணப்படம். ஆண்கள் மட்டுமே செயல்படுகிற அவர்களே செய்யத்தயங்குகிற மூன்று வெவ்வேறான வேலைகளில் மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழகியல் உணர்வுடன் படம் பிடித்துள்ளார். பாடல் பாடும் ஒரு பெண் அவளுக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தில் இல்லாதவர்களுக்கு உதவுவதும், குரங்கு, நாய் போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட்டு செல்வதும் மனித நேயத்தின் வெளிப்பாடு. சுடுகாட்டில் பிணம் புதைக்கும் வேலை செய்பவர் முதலில் தன்னை எதிர்த்தவர்களையே உடன் வைத்து வேலை வாங்குகிறார்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் பெண் கடலும் கடற்கரையும் மீனவனுக்கே சொந்தம் என்று ஆர்ப்பரிக்கிறார். மூவருமே பெண்கள். துணிச்சலானவர்கள் என்பதையும் மீறி மூவருமே விரும்பி ஏற்காமல் தன்மேல் திணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை எவ்வளவு அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்த ஆவணப் படத்தின் கதை. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=676&Itemid=67

February 27, 2008

"ஈழத்தமிழர்களுக்காக நான் சாகும்வரை சிறையில் இருக்கத் தயார்" - திருமாவளவன் ஆவேசம்

சுஜாதா படைப்புகள் ஒரு பார்வை

இளம் வயதிலிருந்தே கவிதைகள், கதைகள் மீது காதல் கொண்டவர் எழுத்தாளர் சுஜாதா. குறிப்பாக அவருக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் மீதுதான் அதீத நாட்டம் இருந்தது. பின்னாளில் எழுத்தாளராக பிரபலமான பின்னர் அவர் ஏராளமான கதைகள் எழுதியபோதும், அவர் எழுதிய என் இனிய இயந்திரா, ஜீனோ உள்ளிட்ட சயின்ஸ் பிக்சன் கதைகளும் அதிக பாப்புலராயின.

என் இனிய இயந்திரா மற்றும் ஜீனோ ஆகிய கதைகளைத்தான் இயங்குநர் ஷங்கர், ரஜினிகாந்த்தை வைத்து ரோபோட் என்ற பெயரில் படமாக்குகிறார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இதற்கு முன்பே கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்காக ஏவுகணை தொழில்நுட்பம்-கடத்தலை அடிப்படையாக வைத்த திரைக்கதையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் சுஜாதா.

சுஜாதாவின் எழுத்தைத் தாங்காத தமிழ் இதழ்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சாதாரண இதழ்கள் முதல் இலக்கிய வட்டங்களில் மட்டுமே புழங்கும் இதழ்கள் வரை கிட்டத்தட்ட அனைத்து இதழ்களிலும் சுஜாதாவின் படைப்புகள் அலங்கரித்துள்ளன. காரணம் வசீகரிக்கும் வகையில் அமைந்த அவரது தமிழ்.

பாமரரர்களும், அறிவுஜீவிகளும் ஒரே நேரத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க முடியும். அந்த அளவுக்கு தமிழை திறமையாகக் கையாண்டவர் சுஜாதா. ஒரு காலத்தில் அவரது தொடர் கதைகள் இடம் பெறாத பத்திரிகைககளே இல்லை என்று கூறும் அளவுக்கு எந்த இதழைப் பார்த்தாலும் சுஜாதாவின் கதைகளாக இருந்தன. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=675&Itemid=164

எண்பது வயதுக்காரனா தமிழனின் தலையெழுத்தை நிர்ணயிப்பது?" தமிழருவி மணியம் ஆவேசம்

"கன்னத்தில் சதை தொங்கிவிட்டதால் கதாநாயகன் வாய்ப்பில்லை. சினிமாவில் செல்லுபடியாகாது. அரசியலில் 80 வயதிலும் ஓய்வில்லை என்று தெரிந்துகொண்டே எவன் எவனோ தமிழனின் தலையெழுத்தை எழுத நினைக்கிறான்". தமிழக அரசின் "அண்ணல் அம்பேத்கார் விருது" பெற்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 22.02.2008 அன்று, பெரியார் திடலில் அளித்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட தமிழக திட்டக்குழு உறுப்பினரும், காங்கிரஸ் பிரமுகருமான தமிழருவி மணியம் அவர்களின் சொற்பொழிவு: தொடர்ந்து சொற்பொழிவின் அனைத்துப்பகுதியையும் கேட்க இணைப்பில் செல்க. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=660&Itemid=163

18 வயதிற்குள்

1. Post these rules before presenting your list.
2. List 6 actions or achievements you think every person should accomplish before turning 18.
3. There are no conditions on what can be included on the list.
4. At the end of your blog, choose 6 people to get tagged and list their names.
5. People who are tagged write their own blog entry with their 6 suggestions.
6. Don’t forget to leave them a comment telling them they’re tagged.
*******
1. Finish your highschool education, with complete focus on learning atleast 3 languages(before you turn 8, wish you had learned three languages). Book knowledge is necessary as long as the wisdom is tagged with it). Education is the only treasure which cannot be stolen, invest in it NOW.
2. ASK QUESTIONS. Never be ignorant of anything. Listen to your elders about the stories they've learned, and the things they've learned in life. Remember, they have survived many years in this beautiful, raw, rugged, tough teacher of life aka PLANET EARTH. Be humble, and open minded about their stories. In later part of life you will know the relevance of the stories, tid-bits, nuances of their talks.
3. Travelled to different parts of the same country, to expose yourself to people from different walks of life(meeting kids of different ethnicity, socio-economic status).
4. Make friends, good friends who help you and be supportive of you. By 18 you should've known what friendship means. As Thiruvalluvar has mentioned in Friendship in one of his chapter with 10 verses "Neither familiarity nor frequent association maketh friendship between two persons; verily, it is the silent intellectual understanding between them assures their friendship." and in another one he explains, "Friendship hastens in mishaps, like a hand that picks up the dress that slips" (The tamil version of this verse is one of all time favorites).
5. Learn an art form, as a part of your education, or atleast as a Hobby(if your education does not involve art). Everyone should learn about an art, or have it as a Hobby.
6. Spirituality, learn about life and death. Learn about things in life which are a part of the adolescent life. DO indendent investigation of truth which is totally different from any religion
(Read, investigate, ask questions).

February 24, 2008

பதவி விலகுகிறார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்

பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப் பதவி விலகுகிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் அதிபர் பெர்வெஷ் முஷாரப்பை ஆதரித்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Q) கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்கட்சிகளான பெனாசிர் பூட்டோ கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் பெருவாரியான வெற்றி பெற்றன.

இதனை அடுத்து இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. அதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது. பெனாசிர் கட்சியைச் சேர்ந்தவர் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் முஷாரப்புக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் அதிபர் பதவியிலிருந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும்கூட பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியை தனது பக்கம் இழுத்து, க்யூ பிரிவு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வைத்து ஆட்சியமைக்க முஷாரப் தரப்பு முயன்றது. ஆனால் முஷாரப்பின் கோரிக்கையை ஆசிப் அலி சர்தாரி நிராகரித்து விட்டார்.

எம்.ஜி.ஆர். தரப்பு மணமகன் : ஜெயலலிதா தரப்பு மணமகள்

எம்.ஜி.ஆர். பெயர் சூட்டிய ஆண் குழந்தை மணமகனாகவும், ஜெயலலிதா பெயர் சூட்டிய பெண் குழந்தை மணமகளாகவும் ஜெயலலிதாவின் 60-வது பிறந்த நாள் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 60 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த ஜெயலலிதா பேசுகையில்:- போயஸ் தோட்டத்திலிருந்து இந்த புனித ஜார்ஜ் பள்ளியை நோக்கி நான் வருகின்ற வழியெல்லாம் கண்டது மனித நதிகள். இந்த திடலுக்கு வந்த உடன் நான் காண்பது மக்கள் கடல்.

என் தந்தை தனது 42-வது வயதில் மறைந்தார். என் தாயார் 41வது வயதில் மறைந்தார். என் அண்ணன் 49-வது வயதில் மறைந்தார். நான் இன்று 60 வயது நிரம்பி, 61-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இதற்கு என் தாயாரின் ஆசியும், என் அரசியல் ஆசான் எம்ஜிஆரின் அருளாசியும்தான் காரணம். நீங்கள் என்மேல் வைத்திருக்கும் ஈடு இணையற்ற அன்புதான் காரணம்.

என்னிடத்தில் நீங்கள் என்னை பார்க்கவில்லை. உங்களை பார்க்கிறீர்கள். உங்களிடத்தில் நான் என்னையே பார்க்கிறேன். இந்த பாசப்பிணைப்புதான் நம்மிடையே இன்று இந்த அன்பு சந்திப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கைம்மாறு கருதாத இந்த பாசப்பரிமாற்றத்தை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது என் 60-வது பிறந்த நாள் விழாக் கோலமா? இல்லை 65 ஜோடிகளின் மகத்தான மணவிழா கோலமா? என்றால் இரண்டும்தான். அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை என்னும் வள்ளுவப் பெருமானின் வாக்கிற்கு இணங்க இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த 60 மணமக்களுக்கும் அம்மா வீட்டு சீர்வரிசையாக 60 விதமான பொருட்களை வழங்கி இருக்கிறேன். இப்படி இலவச திருமணங்களை நடத்துவதில் இணையற்ற வரலாறு படைத்தது அதிமுக என்பதை இந்த நாடே அறியும். மற்றவர்கள் இந்த சாதனையை படைத்ததுண்டா? வாங்கியே பழக்கப்பட்ட கைகள் பிறருக்கு கொடுக்குமா? எப்படி பெறலாம் என்ற எண்ணம் எப்போதும் அவர்களுக்கு, எப்படி தரலாம் என்ற எண்ணம் எப்போதும் நமக்கு. ஈந்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆரின் வாரிசுகள் நாம். வாங்கி சிவந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.

இந்த 60 ஜோடி மணமக்களில் எம்ஜிஆரால் பெயர் சூட்டப்பட்ட குழந்தை ஒன்று மணமகனாகவும், நான் பெயர் சூட்டிய பெண் குழந்தை மணமகளாகவும் இப்பொழுது வீற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் வளமோடு இருந்து இன்னொரு காலத்தில் வாடிப்போகும் மரமல்ல நமது இயக்கம். இது கால ஓட்டத்தில் காய்ந்து போகாத கற்பக விருட்சம். எந்த வேடனாலும் இதற்கு குறிவைக்க முடியாது. எந்த விஷ அம்புகளாலும் இதனை காயப்படுத்த முடியாது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=635&Itemid=52

February 05, 2008

எழுத்தாளர் பாமரனின் "பஞ்ச்" பதில்கள்!

அன்புமிக்க தோழமைகளுக்கு.... வணக்கம். கடந்த 15 நாட்களுக்கும் மேலாய் சுற்றுப்பயணங்கள்... கருத்தரங்குகள்... எழுத்துப் பணிகள்.. நண்பர்களது சந்திப்புகள்... எனக் கழிந்ததால் எனது பதில்களுக்கான சாத்தியப்பாடுகள் தள்ளிக்கொண்டே போய் விட்டது என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மையில் ஒரு வெங்காயமும் இல்லை. உங்கள் நண்பனது "பலங்களை" எப்படிப் புரிந்து கொள்கிறீர்களோ அப்படி அவனது பலவீனங்களையும் புரிந்து கொள்வதே நட்பின் அடையாளம்.. வேலை இருந்தாலும் இல்லாவிடினும் அடிப்படையில் சோம்பேறி நான். இந்த சோம்பேறித்தனம் மட்டுமே என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்களும் துணை நிற்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.. இல்லாவிடில் இதுவும் ஒரு அலுவலகமாய்... குடும்பமாய்... நிறுவனமாய்... சீரழிந்து விடுவதற்கான சாத்தியப்பாடுகள் அநேகம் இருக்கிறது. இத்தகைய சாத்தியப்பாடுகள் கடந்து நமது தோழமை தொடரவேண்டும் என்பதே எனது கவனம். தொடர்வோம்... வழமையாய் அறிவிக்கப்படும் நாட்களைத் தகர்த்து...

தோழமையுடன்
பாமரன்

பாலா.
பாமரன் அவர்களே, தங்கள் எழுத்தை நேசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை...நேற்று வரை ஈழப்பிரச்சினையில் அமைதியாக இருந்த கலைஞர், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.... நன்று... அதை வரவேற்றோம்...ஆனால் அதே நிகழ்வுக்கு தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பேரணியும், கூட்டங்களும் நடந்தன...ஆனால் அங்கெல்லாம் அமைதியாயிருந்து விட்டு சென்னை யில் நடக்கவிருந்த பேரணிக்கும், கூட்டத்திற்கும் தடை விதித்ததன் மூலம் "காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலுக்கு கலைஞர் பணிந்து விட்டாரோ என்று எண்ணத்தோணுகிறது...." கலைஞரின் இந்த முடிவு இந்திய இறையாண்மையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா.. இல்லை ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளூம் எண்ணமா?


வணக்கம் பாலா....எனக்கு ஈழத்து வாசகம் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. "ஈழத்தில் மொழிக்காகப் போராடியவர்கள்போராட்டத்திற்குப் பிறகு போராளிகள் ஆனார்கள்தமிழகத்தில்மொழிக்காகப் போராடியவர்கள் போராட்டத்திற்குப் பிறகு மந்திரிகள் ஆனார்கள். "கலைஞர் ஆகட்டும்... எவராகட்டும்...ஈழப்பிரச்சனைக்காக ஆட்சியை துறக்கும் அளவுக்கு தியாகிகள் அல்லர். ஓட்டு அரசியலில் இருப்பவர்கள், இந்த அளவிற்காவது முணுமுணுத்தார்களே என்று ஆறுதல்பட்டுக் கொள்ளலாம் அவ்வளவே.

மணி செந்தில்
தற்போது வெளிவரும் திரைப் படங்கள் எவ்வாறு இருக்கின்றன...? எப்படி இருக்க வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்...?

பார்க்கப் பார்க்கவே "பரலோகத்திற்கு" டிக்கெட் வாங்கும் அளவிற்கு இருக்கிறதுமனைவியின் தங்கையை பிராக்கட் போட "ஆசை".....தம்பியின் மனைவியை தள்ளி கொண்டு போக "வாலி".....கணவனின் தம்பியை கவிழ்த்துப்போட "உயிர்".....இனி அப்பா - மகள் அம்மா - மகன் உறவு மட்டும்தான் மிச்சம்.

சுசித்ரா
வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

"எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால்ஆடுகளுக்கு விடுதலை உண்டாகுமா? அதை போலவே ஆண்களால் பெண்களுக்கு ஒருபோதும் விடுதலை உண்டாகாது..." என்று பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.போன நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மார்புக்கு மேலே சேலையை போடுவதற்கே போராட வேண்டி இருந்தது. பிற்பாடு கல்விக்கான போராட்டம்..... அதன் பிறகு பணி இடங்களுக்கான போராட்டம்....பால்ய விவாகம்..... உடன்கட்டை ஏறுதல்..... என கணக்கற்ற தடைகளைத் தாண்டியே வந்திருக்கிறது பெண் இனம். இப்படி சகலத்தையும் முறியடித்த பெண்ணிணம் பணி இட பிரச்சனைகளையும் நிச்சயம் தானே எதிர் கொண்டு முறியடிக்கும்.. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு மெல்லிய கைகுலுக்கல்.

கொலைவாளினை எடடா
ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறார்கள், அதே நேரத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமப்புறங்கள் ஏராளம். இப்படி பரவலாக்கப்படாத வளர்ச்சியின் மூலம், மக்களில் பொருளாதார நிலை இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றுகொண்டு இருக்கின்றன.....2020யில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்கிறார்கள் வல்லரசு எதைபதை எதை வைத்து முடிவுசெய்கிறார்கள்?

சரியான கேள்வி. தவறான இடத்திற்கு வந்திருக்கிறது. இதை அப்படியே.....டாக்டர்.அப்துல்கலாம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை என்ற முகவரிக்கு, redirect செய்கிறேன் தோழா..

ருத்ரா
தவறு செய்தால் சாமி கண்களை குத்திவிடும் என்று சொல்கிறார்கள் அதிக தவறுகள் நடந்துகொண்டு இருக்கின்றன் கடவுளின் சக்தி கேள்விக்குறியாகிறது?
இதில் உங்களின் கருத்து உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது நண்பா. அந்த சாமி....., இந்த சாமி....., சொந்த சாமி..... நொந்த சாமி..... எதுவும் காப்பாற்றாது நம்மை. எனக்கு தெரிந்த "ஒரே சாமி" ஈ.வே.ராமசாமிதான்..


கருணாநிதி
வணக்கம் தோழரே, உங்கள் பகிரங்க கடிதங்களுக்கு நானும் ஒரு ரசிகன். எனது கேள்விகள் :
1. இன்றைய தலித்துகளின் உண்மை நிலை பற்றி?

2. திராவிடம் பேசும் திராவிட கட்சிகள் இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க முன்வருவது இல்லையே?

3. கடல் தாண்டி உள்ள தமிழர்காக கண்ணீர் விடும் சில தலைவர்கள் (வைகோ, நெடுமாறன் மற்றும் பலர்) உள்ளூரில் கொடுமைக்கு உள்ளாகும் (தலித்) மலம் அல்லும் மனிதர்களை மறந்து போவது ஏன்?

4. அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு பற்றி?
நன்றி தோழரே. தலித்துகளின் இன்றைய நிலையை எழுத்தில் வடிக்க இந்த இணையத்தின் பக்கங்கள் போதாது. "இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க திராவிடக் கட்சிகள் முன்வருவது இல்லை...நெடுமாறன் போன்றவர்கள் ஈழத்துக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள்..." என்பதை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு நாம் இந்நிலை மாற துணை நிற்பதே முதல் வேலை.. அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம். மனித மலத்தை மனிதனே சுமக்கும் அவல நிலை மாறாத நாள் வரை யாரும் விஞ்ஞானி என்றோ.... எழுத்தாளன் என்றோ...கவிஞன் என்றோ சொல்லி கொள்வதில் அர்த்தமே இல்லை. இந்த அவல நிலை குறித்து திரு.மதிவண்ணன் அவர்கள் "உள் ஒதுக்கீடு சில பார்வைகள்" என்கிற நூலை அண்மையில் வெளியிட்டு இருகிறார் (கருப்பு பிரதிகள் பதிப்பகம், B-74 பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-5) வாங்கி - வாசித்து - செயல்படுவோம் வழி பிறக்கும்.

ஆர்த்தி
தொலைக்காட்சி ஊடகங்களின் செயல்பாட்டைப் பற்றித் தங்கள் பார்வை என்ன?

இருக்கிற பார்வையும் தொலைந்ததுதான் மிச்சம். Always Making new

வணக்கம் நண்பரே..தமிழனுக்கு சாதி தேவையா தேவையில்லையா?இல்லையெனில் தமிழனை அடையாளம் கொள்வது எப்படி?
வந்தேறிகள் அதிகமாகிவிட்ட இச்சூழ்நிலையில் எவ்வாறு அவர்களை இனம் காணுவது?.. கட்-அவுட்களூக்கு எங்கெங்கு பாலாபிசேகம் நடக்கிறதோ... வாஸ்துகளின் பெயரால் எங்கெங்கெல்லாம் கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதோ...சோதிடத்தின் பெயரால் வாழ்க்கை எங்கெங்கெல்லாம் தொலைக்கப்படுகிறதோ....அங்கெல்லாம் இளித்து கொண்டு நிற்பவன் எவனோ அவனே தமிழன்..தமிழனை இனம் காண்பதில் அப்படி என்ன சிக்கல் உங்களுக்கு?


ஜீவானந்தம்
தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு (இதற்கு ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை) விற்பனைக்காக பாமரன் தேவைப்படலாம். பாமரன் போன்ற புரட்சியாளர்களுக்கு குமுதம் தேவையா?
ஐய்யய்யோ.... என்னைப் புரட்சியாளன் என்று யாரோ உங்களூக்கு தவறான தகவல் தந்துவிட்டார்கள். பாவம்... குமுதம் தவிர வேறு பத்திரிக்கைகள் எதுவும் படிப்பதே இல்லையா நீங்கள்?

ஜெயபிரகாஷ் வேல்
தோழரே, உங்கள் எழுத்து நடை சற்று சலிப்பூட்டுவது போல் உள்ளது. ஓரே மாதிரி எழுதுவது உங்களுக்கு எப்படி உள்ளது?

உண்மை தான். ஞானிகளின் நண்பர்களுக்கு பாமரர்களின் நடை சலிப்பூட்டுவதில் ஆச்சரியங்கள் ஏதும் இல்லை

பாரதி
தோழரே ஈழத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்.........

மதுரை மச்சான்!


தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு இப்படி ஒரு கருத்து நிறையப்பேரிடம் இருக்கிறது!!!! எதனால் என்று கூறமுடியுமா? பாமரன் அவர்களே!!

25 வருடங்களாக எங்கள் வீட்டில் வாங்கி கொண்டிருக்கிறார்கள் இப்படி அவர்களுக்கு தோன்றியதாக எனக்கு தெரியவில்லை!!!

February 01, 2008

மதத்தின் பிடியில் அப்துல் கலாம்!?

பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவுக்கே கிடைத்த மணிமகுடம். நாட்டுப்பற்று மிக்க இலட்சியவாதி, சாதி மதங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா, இந்தியர் என்பதே தன் முகவரியாக வாழ்ந்துகொண்டிருப்பவர். இதுதான் அவருக்கு நாடும் உலகமும் வைத்திருக்கும் அளவுகோல். ஆனால் அவருடைய சமீபத்திய நடவடிக்கை மேற்சொன்ன பெருமைகளையெல்லாம் கொஞ்சம் கேள்விக்குரியாக்கியிருக்கிறது. அந்தச் சம்பவம் வருமாறு : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதாக் பொறியியல் கல்லூரியின் புதிய ஷிப்-இன்-ப்ளாக் கட்டிடத்தைத் திறந்து வைக்க வருகை தந்திருந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிறப்புரையாற்றத் தொடங்கியதுமே அவர் மத அடையாளத்துடன் "அஸ்லாமு அலைக்கும்" என ஆரம்பித்தார். இவருடைய சிறப்புரையைக் கேட்க கூடியிருந்த கூட்டம் கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாகியது. விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த கல்லூரி நிர்வாகம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அங்கு படிக்கும் மாணவர்களும், சிறப்புரையைக் கேட்கக் கூடியிருந்த பொதுமக்களும் வெறும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சமூகத்தினரும் கூடியிருந்த விழாவில் இந்தியாவே தரிசிக்கும் ஏ.பி.ஜே-யின் பேச்சு அனைவரையும் கொஞ்சம் உறையச்செய்ததை யாரும் மறுக்க முடியாது. அவருக்குள்ளும் மதத்தின் வேர்கள் துளிர்விட்டிருக்கிறதா? என கவலையுடன் கூட்டம் கலையத்தொடங்கியது. அந்தச் சர்ச்சைக்குரிய உரை இதோ ஒளி வடிவில்.... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogsection&id=10&Itemid=154

January 29, 2008

பறவைக் காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்படும்

அன்புமணி : ராமதாஸ்இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய மேற்குவங்க மாநிலத்தில் அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கியிருப்பதாகவும், திங்கட்கிழமை வரை 21 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அது கட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே, கோழிகளைக் கொல்வது தொடர்பாக பெரும் முறைகேடுகளும், அரசியல்வாதிகளின் நெருக்குதல்களும் அதிகரித்திருப்பதால், மேற்கு வங்க மாநில சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் கோழிகளை கொல்வதை நிறுத்திவிட்டதாக பிபிசியின் கொல்கத்தா செய்தியாளர் தெரிவிக்கிறார். ஒரு இடத்தில் ஐந்து கோழிகளைக் கொன்றால், ஐம்பது கோழிகளைக் கொன்றதாக சான்றிதழ் கொடுக்குமாறு தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான கோழிகளைக் கொன்றதாகக் கணக்குக் காட்டினால் அதற்கான இழப்பீட்டுத் தொகையும் அதிகமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால், கிராம மக்களே கோழிகளைக் கொல்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

ஒருவரின் 44 வயதில் மனச்சோர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், மனிதர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு குறித்த சமீபத்திய ஆய்வின் முடிவுகள். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சுமார் எண்பது நாடுகளில் 20 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், மனிதர்களில் பெரும் பாலானவர்களுக்கு, 40 வயதாகும் போது மனச்சோர்வு அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 44 வயதில், இந்த மனச்சோர்வு மிக அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆண், பெண், ஏழை, பணக்காரன், திருமணம் ஆனவர், ஆகாதவர், குழந்தைகளை பெற்றவர், பெறாதவர் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி எல்லாதரப்பினரையும், அவர்கள் 40 வயதை கடந்த பிறகு, இந்த மனச்சோர்வு பாதிப்பதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் இப்படி மத்திய வயதாகும்போது மனச்சோர்வால்பாதிக்கப்படுவதற்கு பல காரணங்களையும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

January 02, 2008

திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவகங்கை செழியன்

மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்
மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார். அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தேர்தல்கள் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பாகிஸ்தானில் இம்மாதம் எட்டாம் தேதி நடைபெற இருந்த பொதுத் தேர்தல்கள் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோ ராவல்பிண்டியில் ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேற இருந்த நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு நாடெங்கும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளின் போது நாட்டில் பல வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு வாக்காளர் பட்டியலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் அனைத்துமே மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானின் தலைமை தேர்தல் அணையாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீகின் நவாஸ் பிரிவும் தேர்தல்கள் திட்டமிட்டபடி இம்மாதம் எட்டாம் தேதியே நடைபெற வேண்டும் என வலியுறித்து வந்தன. தேர்தல் பிரச்சாரத்தால் களைகட்டியிருக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த இரண்டு கட்சிகளும் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் அதிபர் முஷாரஃப் மற்றும் அவரது கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சுமத்தின. நாட்டில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை அனைத்துமுக்கிய எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன. தேர்தல் ஆணையம் தனது எண்ணப்படி நடக்க வேண்டுமென அரசு விரும்புவதாகவும், அதற்கேற்ற வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகவும், சுதந்திரத் தன்மையுடன் அது இயங்கவில்லை என்றும், அதனால் மக்கள் தேர்தல் ஆணையத்தை நம்புவதில்லை என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.

December 30, 2007

இன்றைய குறள்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்
அறத்துப்பால் : தீவினையெச்சம்

பெனசீர் பூட்டோவின் கட்சிக்கு அவரது மகன் தலைமை

படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் பெனசீர் பூட்டோவின் கட்சி, பெனசீர் பூட்டோவின் கணவர் மற்றும் அவரது 19 வயதான மகனை கட்சியின் இணைத் தலைவர்களாக அறிவித்துள்ளது. அத்தோடு இன்னும் ஒன்பது நாட்களில் நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்க்க விரும்புகிறது என்பதையும் அக்கட்சி உறுதி செய்துள்ளது. திருமதி பூட்டோவின் மகனான பிலவால், ஜனநாயகத்தை மலர செய்வது தான் சிறந்த பழி வாங்குதல் என தனது தாயார் பலமுறை கூறி இருப்பதாக கூறியுள்ளார். திருமதி, பூட்டோவின் கணவரான ஆசிப் அலி ஜர்தாரி, பாகிஸ்தான் மக்கள் வன்முறையை கைவிட்டு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். அத்தோடு மற்றுமொரு பிரதான எதிர்கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப்பையும் அவர் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Overseas workers to get 24x7 helpline

Overseas Indian Affairs (OIA) Ministry will soon set up a "Resource Centre" here for helping overseas workers in distress. "It will be a one-stop destination for Indian workers," a top official of the OIA ministry said here on Saturday, adding that the Overseas Workers Resource Centre would work round-the-clock on all days. All that a worker in distress has to do is to call a toll-free number 1800-11-3090 to get proper advice on how to overcome his problems in his host country. The Centre would also provide information about how and when to seek legal assistance in case of denial of wages and violation of contract. He pointed out that the centre would help a lot to redress the grievances of Indian workers at a time when many countries are keen to ensure that labour laws are strictly adhered to by the employers there. The toll-free helpline could also be used by the victims of bad NRI marriages so that the ministry could initiate appropriate remedial steps. The official said there was also a plan to set up an overseas employment promotion council to provide information about new job opportunities in foreign countries. "This is envisaged as a counselling mechanism to help Indians go through a legal channel for employment," he said, adding that it would help to reduce incidence of cheating of overseas job seekers by travel agents. http://www.godubai.com/gulftoday/article.asp?AID=3&Section=Asia

December 29, 2007

பாகிஸ்தான் எதிர்காலம்? - நிபுணர் கருத்து

பேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடும்பத்தினரிடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார். பூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார். பேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். தற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார். அதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இலியாஸ் கருத்து தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.

பாகிஸ்தானில் தேர்தல் நடக்குமா?

பாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர். இனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர். தனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்

பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை இலங்கையில் அமைதி ஏற்படாது : டக்ளஸ் தேவானந்தா ஆவேசம்

"பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை, அரசியல் தீர்வுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு ஒப்புக் கொள்ளாது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும்' என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :
பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை, அரசியல் தீர்வுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு ஒப்புக்கொள்ளாது. எனவே, பிரபாகரன் கொல்லப்பட வேண்டும். அவர் அமைதியை விரும்பவில்லை, இலங்கையை துண்டாடத்தான் விரும்புகிறார். வன்னிப்பகுதியில் வசித்து வரும் மக்களில் 99 சதவீதம் பேர் பிரபாகரனை வெறுத்து வருகின்றனர். இதை விட்டால், புலிகளை இணங்கவைக்க மற்றொரு வழி உள்ளது. அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தாங்கள் கைவிடப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தை ஏற்பட வைத்து அமைதி முயற்சியில் அவர்களாகவே சேரும்படி வைக்க வேண்டும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்தான் தற்போது மோதல்கள் நடந்து வருகின்றன. எனக்கு பொறுப்பு அளிக்கப் பட்டால், ஒரே ஆண்டில் அப்பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவேன். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

December 27, 2007

எனக்கே சொந்தம்!

புத்தகங்களை

ஏன் இடதுமார்பில்

வைத்து நடக்கிறேன்

என்கிறாயே தோழி?


சொல்கிறேன் கேள்!


என் இதயத்தினுள்ளிருக்கும்

என்னுயிர்க் காதலரை

வெளியிலுள்ள

வேறு யாரும்

பார்க்கக்கூடாதல்லவா?

"பில்லா" விஷ்ணுவர்தன்

இன்றைய குறள்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்ச மாட்டார்கள், தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்

அறத்துப்பால் : தீவினையச்சம்

பி.சுசீலாவிற்கு பத்மஸ்ரீ?

கண்டசாலாவுடன் தொடங்கி எஸ்.பி.பாலசுப்ரமணியம் வரை மூன்று தலை முறையாக 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் பிரபல பின்ணணிப் பாடகி பி.சுசீலாவிற்கு இந்திய மத்திய அரசின் உயர் விருதான (பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற) பத்ம விருதுகளில் எதுவும் இதுவரை வழங்கப்பட வில்லை. 'இதுவரை அவர் செய்திருக்கும் சாதனைகளுக்கு ஏற்ப அவர் கௌரவிக்கப் படவில்லை என்றாலும், இழப்பு திரையுலகினருக்குத்தானேயன்றி அவருக்கு இல்லை' என்று பத்மவிபூஷண் விருது பெற்ற வரபிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். சுசீலாவின் பெயர் இதற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக ஆந்திர அரசின் தகவல் குறிப்பு தெரிவிக்கின்றது. விரைவில் கிடைத்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்.

பேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார். இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது. அவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார். 1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார். இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார். ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.
நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.
தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது. அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

December 26, 2007

இன்றைய குறள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூறவேண்டும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

பொன்மொழிகள்

  • வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா
  • மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்
  • மகானாய் வேண்டாம் ஒரு தாய்க்கு நல்ல மகனாய் இரு
  • குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள் குணவானாவாய்
  • இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்

பில்லா விஷ்ணுவர்தன்

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்பாக விடுதலைப் புலிகளை வீழ்த்த்த வேண்டும் : இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னதாக விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொள்வது இன்றியமையாதது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் தெற்கே மாத்தறையில் நடைபெற்ற சுனாமி நினைவு நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் காணப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ஆனாலும், அதற்கு முன்னதாக நாட்டில் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கப்பம் செலுத்தும் பாணியிலான சமாதானம் தமக்குத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு போன்ற சில இடங்களில் இந்தப் பணிகள் இன்னமும் பூர்த்தியடையவில்லை என்றும் ராஜபக்ஷ கூறினார். சர்வதேச சமூகம் இலங்கை அரசை புறக்கணித்துவருவதாக கூறப்படுவது தவறு என்றும், வழமையை விட இந்த வருடம் அதிக சர்வதேச உதவி இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவும் ராஜபக்ஷ தெரிவித்தார்

இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி மரணம்

இந்தியாவின் பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி மும்பையில் இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு வயது 93. இந்திய சினிமா வரலாற்றில் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படமான ஷோலே படத்தைத் தயாரித்தவர் என்று பரவலாக அறியப்படுபவர் ஜி.பி.சிப்பி. 'ஷோலே' என்றால் 'தீச்சுவாலை' என்று பொருள். முந்தைய வசூல் சாதனைகள் எல்லாவற்றையும் முறியடித்து அந்தக் காலத்திலேயே 6 கோடி டொலர்கள் வசூலை அள்ளியது இப்படம். மும்பையில் ஒரு திரையரங்கில் தொடந்து ஐந்து ஆண்டுககளுக்கும் அதிகமாக 'ஷோலே' படம் ஓடியது.

December 25, 2007

இன்றைய குறள்

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்லமாட்டார்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

விரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் துகளில் முழு பைபிளையும் எழுதி சாதனை

பூர்வ மொழியான ஹீப்ருவில் மூன்று இலட்சம் வார்த்தைகளைக் கொண்ட நூல் கிறிஸ்துவர்களின் திருமறையான பைபிள். உலகின் மிகச் சிறிய பைபிள் என்ற சாதனையை இதற்கு முன் தக்கவைத்திருந்த நூல் 2.8 செண்டிமீட்டர் அகலமும் 3.4 செண்டிமீட்டர் நீலமும் 1 செண்டிமீட்டர் உயரமும் கொண்டது, இதில் 1514 பக்கங்கள் இருந்தன. தற்போது பைபிளின் மூன்று லட்சம் வார்த்தைகளை ஒரு குண்டூசி முனையில் எழுதி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிலில் உள்ள ஹைஃபா தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்தவர்கள். அரை மில்லிமீட்டர் அளவேகொண்ட ஒரு சதுரங்கத்தில் முழு பைபிளும் மெல்லிய மின்-கதிர் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது

பொன்மொழிகள்

  • தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை

  • காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்


  • எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்


  • படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு

ஒட்டகச்சிவிங்கிகள் ஒற்றை இனம் அல்ல

உலகின் மிக உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கி. உண்மையில் ஒற்றை இனமல்ல அது பல்வேறு இனங்களின் தொகுப்பு என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. தற்போது ஒட்டகச்சிவிங்கிகள் ஓர் இனமாகவும் அவற்றுக்குள் பல உட்பிரிவுகள் இருப்பதாகவும் கருதப்பட்டுவருகிறது. ஆனால் சஹாரா பாலைவனத்துக்கு தென்பகுதியில் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஒட்டகச்சிவிங்கியின் ரோம நிறம் இடத்துக்கு இடம் மாறுபடுவது, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இனம் என்பதைக் காட்டுகிறது. இனப்பெருக்க ரீதியில் - அதாவது ஓரினத்தோடு மற்றொரு இனம் சேர்ந்து பொதுவாக இனப்பெருக்கம் செய்யாத - ஒட்டகச்சிவிங்கிகள் ஆறு பிரிவுகள் இருப்பது மரபணு மூலக்கூறுகள் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது என்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மரபணுக் கல்வி நிபுணர் டேவிட் பிரவுன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்

December 24, 2007

"ஆண்டவனின் கருவறையில் அனைவரும் சமம்" - 'வாரமொரு ஆலயம்' நடராஜ் பிரகாஷ்

நிலாச்சாரலுக்காக நான் கண்ட நேர்முகம் : வாழ்க்கையே வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமது கலாசாரமும், பண்பாடும் மறந்துபோகக் கூடாதென்கிற நல்லெண்ணத்தில் அவற்றை நினைவுபடுத்துகிற சேவைகளைச் செய்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தனது லட்சியமே தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தைப் பற்றியும் இந்த உலகத்துக்கு விளக்கிக் கூறுவதுதான் என்று கூறும் நடராஜ் பிரகாஷ், வாரமொரு ஆலயம் என்ற இணையச் சேவையை நடத்திவருகிறார். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலீஸுக்கு அருகில் வசிக்கிறார். தனது முழுநேரப் பணிக்கு நடுவே, பல்வேறு எதிர்ப்புகளுக்கும், ஏளனங்களுக்கிமிடையில் விடாமுயற்சியோடு தன் சேவையைத் தொடர்கிறாரென்றால் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் அருள்மிகு மலிபு வெங்கடேஸ்வரா திருக்கோவிலில், வாரக் கடைசி நாட்களில் தன்னார்வத் தொண்டராக, அங்கு வரும் பக்தகோடிகளுக்குச் சேவையும் செய்து வருகிறார். துளியும் சுயவிளம்பரத்தை விரும்பாத இந்த வித்தியாசமான துருதுரு இளைஞர், நீண்ட யோசனைக்குப் பிறகு நிலாச்சாரல் வாசகர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார். நண்பருடனான செவ்விக்குச் செல்வோம்.


வித்தியாசமான இந்த “வாரமொரு ஆலயம்” செய்ய எப்படி எண்ணம் வந்தது?



நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பது ஆலயம். ஓவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு ஸ்தலபுராணம் உண்டு. அவை ஆலயத்தின் பெருமையை, ஸ்தலம் (இடம்), விருக்ஷ்ம் (மரம்), தீர்த்தம் (புண்ணிய நீர்), மூர்த்தி (இறைவனின் வடிவம்) ஆகிய பரிமாணங்களால் விளங்குகின்றன. வலைப் பதிவுகளை (Blogs) விட பாட்காஸ்டிங் (podcasting) நான்கு மடங்கு வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இணைய நுட்பமாகும். அதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான பாட்காஸ்டை எந்த நேரத்திலும் கேட்கலாம். நமது ஆலயங்களின் பெருமையை பாட்காஸ்டிங் மூலமாக பரப்ப நினைத்ததில் உருவானதுதான் "வாரமொரு ஆலயம்".


பாரம்பரியம் மிக்க இந்துக் கோவில்களைப் பற்றிய விபரங்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?


பெரும்பாலும் நான் அல்லது எனது குடும்பத்தினர் சென்று தரிசித்த கோவில்களைப் பற்றி பாட்காஸ்ட் செய்கிறேன். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. நமது முன்னோர்கள் மற்றும் அறிஞர்கள் அளித்துள்ள களஞ்சியமான நூல்கள், ஆய்வுகள், கட்டுரைகள், தலபுராணங்கள் என என்னால் முடிந்த அளவு தொகுத்து வழங்குகிறேன். "வாரமொரு ஆலயம்" சிறப்பாக வர எனக்கு உதவி செய்யும் நண்பர்களுக்கும், ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தினருக்கும் எனது உளம் கனிந்த நன்றி.


அமெரிக்காவில் நமது பக்தர்களின் ஈடுபாடு எப்படி உள்ளது?


ஆன்மீக வாழ்வில்தான் நிம்மதி அதிகமென்பதால் அமெரிக்காவில் தற்பொழுது கோவில்களில் நமது பக்தர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. ஆன்மீகம் என்ற பெயரில் ஆண்டவனின் முன் நமது ஆசையை முன்வைத்து வேண்டுகிறோம். ஆன்மீகம் என்பது அன்பு. மற்றவர்களுக்கு உதவுவதும் கூட. அமெரிக்காவில் கோவில்களில் தொண்டு செய்வதையும் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.


இந்தியாவில் இருந்திருந்தால் இதைச் செய்திருப்பீர்களா?


"அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்". கோபத்தைக் குறைத்து அன்புணர்வைப் பெருக்கும் ஆன்மீக இறையுணர்வைப் பரப்புவதற்கு இடம் ஒரு பொருட்டேயல்ல. எங்கிருந்தாலும் கண்டிப்பாகச் செய்திருப்பேன்.


பாட்காஸ்ட் தவிர வேறு ஏதாவது எதிர்காலத் திட்டம்?


இந்த பாட்காஸ்ட் தவிர, "அதிகாலை.காம்" என்ற பெயரில் புதிய தமிழ் இணையதளம் ஒன்று நண்பர்களுடன் இணைந்து தொடங்குகிறேன். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களும் அதில் இடம் பெறும். தமிழ் தளங்கள் தொடாத பகுதிகள் எல்லாம் இதில் பதிவு செய்யப்படும். இது சம்பந்தமாக உலகளவில் நிபுணத்துவம் பெற்ற நம் சமூக முன்னோடிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் அத்தளம் நம் சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்படும்.


பக்திப் படங்கள் முன்புபோல் தமிழில் வருவதில்லையே, இது எதனைக் காட்டுகிறது?


பக்திப் படங்கள் குறைந்துவிட்டால் மக்களிடம் பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தமல்ல. திரையில் பக்தியின் முழுப்பரிமாணத்தைக் காட்ட எந்தத் தயாரிப்பாளரும் முன் வருவதில்லை. தற்பொழுது ரசிகனும் பக்தியைத் திரையில் தேடிக் கொண்டிருக்கவில்லை.


ஆன்மீகம் வியாபாரமாக்கப் படுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?



தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க http://www.nilacharal.com/ocms/log/12240711.asp

இன்றைய குறள்

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்

அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்தமாட்டார்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

ஒரு டாலருக்கு! ஒரு பாலம்

அமெரிக்கா விஸ்கோன்சினில் உள்ள கிகாப்பூ நதியின் மீதுள்ள பாலத்தை வாங்க வேண்டுமா? ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இந்தப் பாலம் கடந்த 31 ஆண்டுகளாக உபயோகிக்கப் படாததால் பழுதாகி நொறுங்கி நதியில் விழுகின்ற நிலையில் இருக்கிறதாம். அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விற்கப் போகிறார்கள் ஒரு டாலருக்கு!

நியுயார்க் டைம்ஸ் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவித் தொகையில் 500 கோடி டொலர்கள் பயங்கரவாததுக்கு எதிரான யுத்தத்தில், மோதல் முன்னரங்கில் செயலாற்றும் துருப்பினரைச் சென்றடையவில்லை என்று நியுயார்க் டைம்ஸ் நாளேட்டில் வெளியான செய்தியை முட்டாள் தனமான கூற்று என்று சொல்லி பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை வாங்குவதில் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தப் பத்திரிகைச் செய்தி குற்றம் சாட்டுகிறது. வடமேற்கு பாகிஸ்தானில் மோதலில் ஈடுபட்டுவரும் படையினர் பனிப் பிரதேசத்திற்கு உதவாத தலைக்கவசமும் காலணிகளும் அணிந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இராணுவ பேச்சாளர் வஹீத் அர்ஷத், குற்றம் சொல்பவர்கள் படையினரின் நிலைமையை நேரடியாக வந்து பார்த்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் உதவுவதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிதி வழங்குகிறது.

December 23, 2007

நடிகை தமானா

இன்றைய குறள்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லிவிடலாம், ஆனால் பயனில்லாத சொற்களை சொல்லாமல் இருப்பதே நல்லது

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் - நடிகர் விஜய்

புகை பிடிப்பதால் புற்று நோய், இதயக்கோளாறுகள் தாக்கக் கூடும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அகில உலகளவில் அண்மையில் செய்த ஒரு ஆய்வின்படி இளமையிலேயே தலை வழுக்கை விழும் சாத்தியங்கள் அதிகமென்ற செய்தி சரும நோயின் ஆவணங்கள் என்ற பிரிடிஷ் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைச் சொல்லும்போது புகை பிடிப்பது பற்றிய ஒரு உபரி செய்தி நினைவுக்கு வருகிறது. மத்திய அமைச்சர் அன்புமணி கேட்டுக்கொண்டதன் பேரில் நடிகர் விஜய் இனி திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேனென்று உறுதி அளித்து அவரின் சபாஷைப் பெற்றிருக்கிறார்.

குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி

இந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பாரதீய ஜனதா கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். குஜராத் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் ஞாயிறுக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், பாரதீய ஜனதா கட்சி, 117 தொகுதிகளில் வென்று, ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தற்போது முடிவடைய உள்ள சட்டப்பேரவையில், பாரதீய ஜனதா கட்சி 127 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 51 இடங்களையும் கொண்டுள்ளது. இந்த முறை பாரதீய ஜனதா 10 இடங்களை இழந்திருக்கிறது. இருந்தபோதிலும் தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் கட்சி 8 இடங்களைக் கூடுதலாகப் பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில், வடக்கு, தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரா பிராந்தியங்களில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு மதக்கலவரம் நடைபெற்ற மத்திய குஜராத்தில், கடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி, இந்த முறை கணிசமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. 2002-ம் ஆண்டு கலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது, முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியதாக நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பாக, உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள வெற்றி, தேசிய அளவில் அந்தக் கட்சி பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்று நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த நரேந்திர மோடி,தேர்தல் பிரசாரத்தின்போது, புதுப்புது வழிகளில், புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், அது எடுபடவில்லை. குஜராத் மக்கள், எதிர்மறை சக்திகளைத் தோற்கடித்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இந்த வெற்றி, ஐந்தரை கோடி குஜராத் மக்களுக்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து ஐந்தாவது முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. என்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு, பிரதமர் மன்மோகன் சிங், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். குஜராத் மாநில முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளர் மகேஷ் ரங்கராஜன் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

December 22, 2007

இன்றைய குறள்

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்

அறத்துப்பால் : பயனில சொல்லாமை

ஒரு சபிக்கப்பட்ட வைரம்

1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் போது கான்பூர் இந்திரன் கோவிலிலிருந்து கொள்ளையடிக்கபட்டு பெர்ரிஸ் என்ற ராணுவ வீரனால் பிரிட்டிஷ் அரசுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பழுப்பு வைரம் இப்போது லண்டன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்படவிருக்கிறது. இது ஒரு சபிக்கப்பட்ட வைரமாம். இந்த வைரத்தை வைத்திருந்த பெர்ரிஸ¤க்கு உடல் நலம் சீரழிந்தது. அதைப் பெற்றுக்கொண்ட அவருடைய மகன் தற்கொலை செய்துகொண்டு இறந்தான். ஸ்கார் ஒயில்டின் நண்பரான விஞ்ஞானி எட்வர்ட் ஹெரான் என்பவர் இந்த வைரத்தின் கடைசி சொந்தக்காரர். 1890வது ஆண்டு இந்த வைரத்தை அவர் பெற்றபோது அவர் பட்ட துயரங்கள் அளவற்றது. அவர் தன் நண்பர்களுக்கு அதைக் கொடுத்தபோது அடுத்தடுத்து சோதனைகளாம். அதை அவர் ஒரு ஏரியில் வீசியெறிந்ததும் கூட மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவரிடமே வந்து சேர்ந்ததாம். ஏழாண்டுகளுக்கு முன்பு விட்டேகர் என்ற தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை பொறுப்பாளர் அதை ஒரு கருத்தரங்குக்கு எடுத்துச் சென்றபோது மேகங்கள் இருண்டு ஒரு பெரிய புயல் காற்றில் சிக்கித் தவித்தாராம். “அந்த அனுபவம் மிகவும் பயங்கரமானது, நாங்கள் பிழைத்ததே மறு பிறப்பு’ என்கிறார் அவர். இப்படி சாப வரலாறு படைத்த வைரம்தான் இப்போது சாதுவாக லண்டன் தேசிய அருங்காட்சியகத்தில் அமரப்போகிறது.

உத்தரப்பிரதேச குண்டுவெடிப்பு தொடர்பில் இருவர் கைது

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் மூன்று நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஹர்கத்-உல்-ஜிஹாதி-இஸ்லாமி என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சனிக்கிழமை அதிகாலை, உத்தரப் பிரதேச போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகளும் இணைந்து, பாரபங்கி ரயில் நிலையத்தில் அந்த இரு நபர்களையும் கைது செய்தார்கள். முகமது காலித் மற்றும் முகமது தாரிக் என்ற அந்த இருவரும், வங்கதேசத்தை மையமாகக் கொண்ட ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். லக்னோ, ஃபைசாபாத் மற்றும் வாரணாசி நகரங்களில் நீதிமன்ற வளாகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இரு நபர்களும், வெடிபொருள்களுடன் பிடிபட்டதாக, உத்தரப்பிரதேச மாநில கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் பிரிஜ்லால் தெரிவித்தார்

இந்தியா சீனா இராணுவக் கூட்டுப் பயிற்சி முகாம் - நிபுணர் கருத்து

உலகின் மிகப்பெரிய இரண்டு இராணுவங்களை கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனா இடையில் முதல்முறையாக இராணுவ கூட்டுப் பயிற்சி முகாம் நடந்துவருகிறது. சீனாவின் தென்மேற்கிலுள்ள யுன்னான் பிராந்தியத்தில் டிசம்பர் 20 தொடங்கி ஒருவாரகாலம் இந்தக் கூட்டுப் பயிற்சி முகாம் நடக்கிறது. 1962-ல் இந்தியா சீனா இடையில் குறுகியகாலமானாலும் ரத்தக்கறை படிந்த யுத்தம் ஒன்று நடந்திருந்தது. பலகாலமாக இறுக்கமாகவுள்ள இருநாடுகளிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அடையாள நடவடிக்கை இந்த இராணுவ கூட்டு முயற்சி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி டி.எஸ்.ராஜன் அவர்களின் செவ்வியை தமிழோசையில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஆற்காடு வீராசாமிக்கும் இராமதாசுக்கும் இடையே நடப்பது என்ன?