June 14, 2008

"பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்" - கவிஞர் சுகிர்தராணி

கவிஞர் சுகிர்தராணி-நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.

"என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்"

என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்

"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"

என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.

வேலூர் மாவட்டம்- லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் சுகிர்தராணியை சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினோம்.உடல் மொழி பற்றி பேட்டிகளில் கேள்விகள் தொடுப்பதுகூட ஒருவிதமான பாலியல் வன்முறைதான் என்று ஆத்திரப்படும் சுகிர்தராணி தன்னுடைய தலித் அரசியலைப் பற்றி ஆழமான முறையில் இந்த நேர்காணலில் பதிவு செய்தார். அவருடைய பேட்டி ஒலி வடிவில்... http://www.adhikaalai.com/index.php?/en/அதிகாலை-ஸ்பெஷல்/அதிகாலை-ஸ்பெஷல்/பெண்களுக்கு-விடுதலை-கொடுக்காத-தலித்-கட்சிகள்

தந்தையர் தினம்! - ஆல்பர்ட்

அந்த தினம் இந்த தினம் என்று ஆயிரம் தின‌ங்க‌ள் இருக்குது. ஆனாலும் இந்த‌ இய‌ந்திர‌ம‌ய‌மான‌ உல‌க‌த்தில் ஒவ்வொரு தின‌த்துக்குப் பின்னும் ஒவ்வொரு நிஜ‌ங்க‌ள் நிழ‌லாக‌த் திகழ்வ‌தையும் ம‌றுத்துவிட‌ முடியாது. சீர்காழியின் ஒரு பாட‌ல் நினைவுக்கு வ‌ருகிற‌து. பாட‌ல் முழுவ‌துமாக‌ நினைவிற்கு வர‌வில்லையென்றாலும் சில‌வ‌ரிக‌ளைச் சொல்லுவ‌து இங்கு பொருத்த‌ம் என‌ நினைக்கிறேன்.

"ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு தேதி ஆயிர‌ம் இருக்குது சுப‌தின‌ம்! லாட்ட‌ரிச் சீட்டில் ல‌ட்ச‌ம் விழுந்தால் அது கிடைத்த‌வ‌ருக்கே சுப‌தின‌ம்..." இப்ப‌டியாக‌ப் போகும் அந்த‌ப் பாட‌ல். பாட‌ல் உண‌ர்த்துவ‌திலிருந்து ஒன்றை நாம் நிச்ச‌ய‌மாக‌ அறிந்துகொள்ள‌ இய‌லும்.

த‌ன்னை வ‌ள‌ர்த்த‌ த‌ந்தை, என்ற‌ பாச‌மிகுதியால் ம‌ன‌ம் கோணாம‌ல் க‌வ‌னித்துக் கொள்கிற‌ ம‌க‌ன்க‌ள் இருக்கும்வ‌ரை அந்த‌த் த‌ந்தைய‌ர்க‌ளுக்கு என்றும் சுப‌தின‌ம்தான்! எல்லா அப்பாக்களுக்கும் இப்படி மகன்கள் அமைவதில்லை; மகனின்,மகளின் அன்பு கிடைக்காத அப்பாக்களுக்கு சுபதினம்?

முதியோர் இல்ல‌ம் என்றில்லை, வீட்டுக்குள் நுழைந்தால் மரும‌கள் என்ன‌ சொல்வாளோ? இல்லைம‌ரும‌க‌ள் பேச்சைக்கேட்டு ம‌க‌ன் என்ன‌ சொல்வானோ என்று கால்வ‌யிற்றையும் அரைவ‌யிற்றையும் நிர‌ப்பிக்கொண்டு திண்ணையே க‌தி என்றிருக்கும் த‌ந்தைமார்க‌ளுக்கு வ‌ருட‌த்தில் இந்த‌ ஒருநாளாவ‌து சுப‌தின‌மாக‌ இருக்க‌ட்டுமே,என்றால் "த‌ந்தைய‌ர் தின‌ம்" இருந்துவிட்டுப் போக‌ட்டுமே!

அன்னையர் தினம் வரும், பின்னே..... தந்தையர் தினமும் வரும் என்பது இப்போது உலக வழக்கமாகி வருகிறது. தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை என்ற வைர வரிகளை வழங்கிய அவ்வை மூதாட்டி வாழ்ந்த காலத்தில் தோன்றியதா இந்த தந்தையர் தினம்? தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/தந்தையர்-தினம்-ஆல்பர்ட்

May 21, 2008

"ஜெயமோகன் ஒரு மனநோயாளி" : கனிமொழி - பகுதி : 1

மலேசிய தமிழர்கள் கொந்தளித்தது ஏன்? மக்கள் ஓசை ஆசிரியர் நேர்காணல்

மலேசியாவின் 'மக்கள் ஓசை' தினசரிப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ராஜன் என்ற எம்.ராஜேந்திரன்,சமீபத்தில் தமிழகத்துக்கு குறுகிய கால வருகையை மேற்கொண்டிருந்தார். அவர், மலேசிய தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் பத்திது வருபவர்.

மறைந்த பத்திரிகையாளர் ஆதி.குமணனின் பாசறையில் கூர் தீட்டப்பட்டவர். ’மலேசிய நண்பன்’ பத்திரிகையின் ஆசிரியராக நீண்ட காலம் பணிபுரிந்தவர். தற்பொழுது ‘மக்கள் ஓசை’ எனும் முன்னணி பத்திரிகையை ஒரு புதிய பார்வையில் நடத்திக் கொண்டிருப்பவர். அவரிடம், மலேசியாவின் நடப்பு அரசியல் விவகாரங்கள், இந்திய சமூகத்தின் நிலைமை, ஹிண்ட்ராப் இயக்கத்தின் போக்கு.. இப்படி நம்முடைய பல விதமான கேள்விகளை கோடையின் ஒரு நண்பகல் பொழுதில் முன்வைத்தபொழுது...

* மலேசிய இந்தியர்களின் பூர்வீக வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாமே....

மலேசியா என்பது மூவின மக்களைக் கொண்ட நாடு.அவர்களில் மலாய்க்காரர்கள் முதன்மையான எண்ணிக்கை கொண்டவர்கள்.2-வது பெரும்பானமையாக சீனப் பெரு மக்கள் உள்ளனர்.3- வது சிறுபான்மை இனமாக இந்திய சமூகத்தினர் உள்ளனர்.இந்திய சமூகத்தின் பூர்வீகம் இந்தியாதான்.

பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டவர்கள்தான் அவர்கள். அவர்களால்தான் நாடு செப்பனிடப்பட்டது. காடுகளாய் இருந்த மலேசியாவை ஒரு புதிய பூமியாக மாற்றிய பெருமை நம் தமிழர்களையே சேரும்,அதற்கு அவர்கள் உரமாக ப்யன்ப்டுத்தப்பபட்டார்கள். கிட்டத்தட்ட அடிமை வாழக்கை முறைதான் வாழ்ந்தார்கள். ஆங்கிலேயர்கள் எந்த வசதிகளையும் நம்மவர்களுக்கு செய்து கொடுக்கவில்லை. படிப்போ, சுகாதாரமான தங்குமிடமோ, உணவோ இப்படி எதுவும் சரிவரக் கொடுக்கப்படவில்லை.

பிறகு நாடு சுதந்திரத்துக்குப்பின் கொஞ்சம் நிலைமை மாறியது. விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. தொழில் மய நாடாக மாறி இருக்கும் மலேசியாவில் இன்றைய நம்முடைய இந்தியர்கள் மூன்றாம் தலைமுறையை சேர்ந்த மலேசியக் குடிமக்கள்.


* இன்றைய மலேசிய இந்தியர்களின் கல்வி, அரசியல், பொருளாதார நிலைப்பாடு எப்படி இருக்கிறது?

அன்றைய முதல் பிரதமர் தேசத்தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் காலத்திலிருந்து இன்றையப் பிரதமர் டத்தோ அப்துல்லா படாவிவரை ஐந்து பிரதமர்களை நாடு கண்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நிறைய உரிமைகளி நம் சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கியது. சமய உரிமை, ஆலய வழிபாடு, தமிழ்ப் பள்ளிகள், அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு, வர்த்தகங்களில் பங்கு இப்படி நிறையச் செய்தனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

கால ஓட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நமக்கு கிடைத்த வாய்ப்புகளும், வசதிகளும் சிறிது சிறிதாக நம்மை விட்டு போகத் தொடங்கின. அதுவும் குறிப்பாக கடந்த 5 ஆண்டு காலமாக இதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கான் அண்மைய கால வெளிப்பாடுதான் கடந்த ஆண்டு நவம்பரில் மலேசிய இந்தியர்கள் நடத்திய பேரணி.

இதனை அரசாங்கம் கையாண்ட விதம் தவறாகிவிட்டது.ஒரு கோவில் திருத்தலத்தில் கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை இந்தியர்களிடையே பெரும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மேலும் ஆலய உடைப்பு போன்ற சில கசப்பான சம்பவங்கள்தான் பெரிய கொந்தளிப்பாக உருவெடுத்தது. அதுதான் கடந்த தேர்தலிலும் எதிரொலித்தது.

* ஓர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமைதியாக இருந்த இந்திய இனம் திடீரென கொந்தளித்தது எப்படி? அதற்கான அடிப்படைத் தேவை என்ன?

இது ஒரு நல்ல கேள்வி.எல்லா கால கட்டங்களிலும் இந்தியர்களை வழி நடத்தக் கூடிய அரசியல் கட்சி மலேசியன் இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா.)தான். குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளாக ம.இ.கா.வை வழி நடத்தி வருபவரால்தான் ஏராளமான பிரச்சினைகள். அதற்குமுன் தலைவர்களாக இருந்த துன் சம்மந்தன், மாணிக்கவாசகம் இருந்த கால கட்டத்தில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.சமுதாயத்தை வழி நடத்தக் கூடிய தலைமைத்துவப் பண்பும், சமுதாயத்தில் பிளவுகள் ஏற்படாமல் ஒருவித அரவணைப்பும் கொண்ட தீர்க்க தரிசனம் கொண்ட தலைவர்களாய் அவர்கள் இருவரும் இருந்தார்கள்.அதனால் அரசாங்கத்திடம் எல்லா உரிமைகளையும் பெற முடிந்ததது. எல்லாச் சலுகைகளும் கிடைத்தன. அதனால் கேள்விகள் இல்லை.

ஆனால் 1981-க்குப் பிறகு அதாவது டத்தோ சாமிவேலு தலைமைத்துவத்துக்குப் பிறகு பல்வேறு குழப்பங்கள்,குளறுபடிகள். இதனால் ம.இ.கா. எனும் பேரியக்கம் குளறுபடிகளால் சிதறிப் போனது. கட்சியில் ஒற்றுமைச் சீர்குலைவு ஏற்ப்பட்டது. இந்தக் கால கட்டத்திதான் இந்தியர்கள் பிளவுபட்டர்கள். இந்திய சமுதாயத்தின் ஐக்கியம் பிளவுபட்டதால் மக்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்திடம் எடுபடாமல் போனது. இதுதான் அடிப்படைக் காரணம்.

* மலேசியாவில் மாற்றம் நிகழ்ந்தது எப்படி?
* ஹிண்ட்ராப்பின் எதிர்காலம்?
* ஹிண்ட்ராப்பைக் கண்டு மலேசிய அரசு பயப்படுகிறதா?
* மக்கள் செல்வாக்கை இழந்து டத்தோ. அப்துல்லா படாவி அரசு
தடுமாறுகிறதா?
* மலேசிய இந்தியர்களை எதிர்க் கட்சிகள் அரவணைக்குமா?
* டத்தோ சாமிவேலுக்கு எதிராக ம.இ.கா-வில் பெரிய எதிர்ப்புகள்
இல்லையே ஏன்? தமிழக முதல்வர் கலைஞரை கண்டித்தது எந்தவிதத்தில்
நியாயம்?
* மலேசியாவில் தமிழ் மொழி மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. பிறகு ஏன்
தமிழ்ப் பள்ளிகளை முன்னிலைப்படுத்தும் மோதல் தேவையா?... இப்படி
இன்னும் ஏராளமான கேள்விகளுடன் மலேசிய அரசியலின் முழு நிலவரம்
பற்றி மலேசிய 'மக்கள் ஓசை' பத்திரிகை ஆசிரியர் ராஜன் அவர்களுடன்

May 12, 2008

சாருநிவேதிதா-வுக்கு எச்சரிக்கை : அமிர்தம் சூர்யா

எழுத்தாளர் ஜெயமோகனை விமர்சிப்பது; எதிர்வினை புரிவது; வழக்கு தொடுப்பது; மன்னிப்பு கேட்க சொல்லி உரிமை காப்பது எதுவும் தவறில்லை. ஆனால் இம்மாதிரியான விசயங்களை யார்? எதன் பொருட்டு? எந்த அரசியலின் அடிப்படையில் சொல்கிறார்கள்? அதனில் உண்மையில் விகிதாச்சாரம் என்ன? என்பதுதான் அதன் கேள்வி.
'ஜெயமோகனின் சுயமோகம்' என்ற தலைப்பில் சாருனிவேதிதா எழுதியிருப்பதை படித்தபின் நமக்கு புலப்படுவது......

ஜெயமோகனின் சுயமோகத்தை சொல்லிக்கொண்டெ இடையிடையே தனது புகழை, பயணத்தை, தனது பெருமையான கட்-அவுட்டுகளை நடுவதற்காக நட்டுக்கொண்டே தனது மோகத்தை பரைசாற்றி கொள்கிறார் சாரு. உண்மையில் ஜெயமோகன் இருக்கையில், கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொள்வதும், காலச்சுவடு போனதும் கிண்டலடித்து புத்தகம் போடுவதும் தனது தற்புகழ்ச்சிக்காக விலைபோவதும் கேவலமான ஒன்று.

மனுஷ்யபுத்திரனுக்கு ஜெயமோகன் தேவைப்பட்டார், ஜெயமோகனுக்கு உயிர்ம்மை தேவைப்பட்டது. அதனால் காலச்சுவடு எதிரியானது. உயிர்மையின் கருத்து ஒவ்வாமை மற்றும் அரசியல் லாப சமரசம் இவற்றால் ஜெயமோகன் காலச்சுவடு போனார். ஜெயமோகனுக்கு காலச்சுவடு தேவைபட்டது. முன்பு காலச்சுவட்டில் இருந்த சாரு இப்போது உயிர்ம்மை சார்பில் நின்று தாக்குகிறார்.

இது கருத்தியல் மற்றும் படைப்பை முன்வைத்து நிகழும் யுத்தமல்ல. உயிர்ம்மை-காலச்சுவடு- க்கு இடையேயான நிறுவனப்போர். இது முழுக்க முழுக்க வியாபாரம். அதன் பொருட்டான அரசியல் மற்றும் அவர்களின் இருப்பையும் தக்கவைத்துக்கொள்ள, சம்மந்தபட்ட வியாபார போட்டி. அதனூடாக சாரு தன்னை கட் அவுட்டாக நிறுத்திக்கொள்ள இது ஒரு காழ்ப்பு-பிரதி என்பதாக கவிகள், விமர்சகர்கள் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் கருத்தாக ஒரு கோட்டத்தில் முன்வைக்கபட்டுள்ளது.

பக்கம் 53-ல் மனுஷ்யபுத்திரனை அவருடைய பிறவி குறையை கேலி செய்து ஜெயமோகன் எழுதியதாக சாரு எழுதியுள்ளார். இது அபத்தமானது. சொல்புதிது இதழில் வெறொருவர் எழுதியது. இதழில் பிரசுரமானதாலேயே அது ஜெயமோகன் எழுதியாகாது. பக்கம் 52-ல் தமிழ் பண்பாட்டை கீழ்த்தரமாக ஜெயமோகன் பேசிவிடுகிறார் என்கிறார் சாரு. மேலும் அவர் எழுத்தை படித்தால் அசிங்கத்தை மிதித்ததுபோல் இருக்கிறது என்கிறார்.

சபாஷ்....

தொடர்ந்து வாசிக்க அதிகாலை இணைப்பில் செல்க.... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/வேடிக்கை-பார்க்கும்-சாளரம்-அமிர்தம்-சூர்யா

May 06, 2008

ஓர் ஈழக்குழந்தையின் இதயம் வெடிக்கும் கடிதம்! - அண்ணன் கை.அறிவழகன்

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது).

நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......
என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானா"-வின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும். அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்.....
அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்... அதனால் தான் எழுதவில்லை........

ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....

அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது. ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே? கட்டுரையைத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/ஓர்-ஈழக்குழந்தையின்-இதயம்-வெடிக்கும்-கடிதம்-அண்ணன்-கை.அறிவழகன்

May 05, 2008

"ஜெயகாந்தன்... அவன் அப்படித்தான்" - பாரதிராஜா

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 75-வது பிறந்த நாள் விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஆற்றிய உரையின் ஒலி வடிவம் கேட்க..... இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/-ஜெயகாந்தன்-...அவன்-அப்படித்தான்-பாரதிராஜாஒலிவடிவில்

கபிலன் வைரமுத்து

கவிப்பேரரசு

May 03, 2008

இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள்

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி கூடியதற்கு இந்தியர்களும் சீனர்களும் அதிகமாய் சாப்பிடுவதால்தான் என்று அமெரிக்க அதிபர் புஷ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே புஷ்ஷின் கருத்து உண்மைதானா? என்ற பொருளாதார புள்ளி விவர ஆய்வில் பல்வேறு நிஜங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்கள் போன்றவற்றை ஒரு தனி மனிதன் உட்கொள்ளும் அளவை எடுத்துக்கொண்டால் இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் 5 மடங்கு அதிகம் என்று அமெரிக்க விவசாயத் துறையின் 2007- ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. வருடம் ஒன்றுக்கு சராசரியாக இந்தியர் ஒருவர் 178 கிலோ கிராம் தானியத்தைத்தான் சாப்பிடுகிறார். ஆனால் அமெரிக்கர்கள் வருடத்திற்கு 1,046 கிலோ கிராம் தானியத்தை தின்று தீர்க்கின்றனர்.

சீனர்களைவிட மூன்று மடங்கும் ஐரோபியர்களைவிட இரண்டுமடங்கும் அதிகமாக அமெரிக்கர்கள் உணவு உட்கொள்கின்றனர்.

உண்மையில் அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. அதனால்தான் அவர்களின் சாப்பாட்டு அளவும் அதிகரித்துள்ளது. 2003-ல் அமெரிக்கர் ஒருவரின் தனி நபர் உணவு தானியக் கொள்முதல் 946 கிலோ கிராமாக இருந்தது. ஆனால் 2007 -ஆம் அண்டில் இந்த அளவு 1046 கிலோவாக உயர்ந்துள்ளது. இதை இந்தியர்களுடன் ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகமாக அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர்.

இந்த ஒப்பீடு வெறும் தானியங்களுக்கு மட்டுமல்ல. எல்லாவிதமான உணவுப் பொருட்களையும் வாங்குவதில் அமெரிக்கர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.
இந்தியாவின் தனிநபர் ஒருவர் வருடத்துக்கு 38 கி.கி.பாலை மட்டுமே குடிக்கின்றனர். சீனர்கள் 17 கி.கி. பாலை மட்டுமே அருந்துகின்றனர். ஆனால் அமெரிக்கர்களோ 78 கி.கி.பாலை குடித்து தீர்க்கின்றனர்.

அதேபோல் காய்கறியின் அளவு வருடத்துக்கு 11 கி.கி. யை மட்டும் இந்தியர்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் அமெரிக்கர்களோ 41 கி.கி. யை சாப்பிடுகின்றனர். இந்தியாவில் ஏராளமானோர் காய்கறிகளைத்தான் விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதில் அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகிறது.

ஆனால் அமெரிக்கர்களோ அசைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.ஆண்டு ஒன்றுக்கு ஓர் அமெரிக்கர் 42.6 கி.கி மாட்டிறைச்சி சாப்பிடுகிறார். ஆனால் இந்தியாவில் இதன் அளவு 1.6.கி.கி.அதே போல் கோழியை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் தனி நபர் ஒருவர் 45.4 கி.கி. போட்டுத் தாக்குகிறார். ஆனால் இந்தியர் ஒருவர் 1.9.கி.கி மட்டுமே சாப்பிடுகிறார்.

இப்படி அதிர்ச்சி அளிக்கும் உணவு தானிய ஒப்பீடுகள் கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்குமிடையே நிலவி வருகிறது.

இதன் உண்மை புரியாமல் உணவு தானிய விலைவாசி உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கதைவிடுகிறார்.

மேற்கண்ட புள்ளி விவரங்கள் எல்லாம் அமெரிக்க விவசாயத் துறை வெளியிட்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்ஷூக்கு பொருளாதார அறிவு கிடையாது : இந்தியத் தலைவர்கள் கண்டனம்

விலைவாசி உயர்வுக்கு இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதே காரணம் என்று அதிபர் புஷ் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலைமை நீடிக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறி விட்டதாக மத்திய அரசை கண்டித்து பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் உணவு பொருட்கள் பயன் படுத்துவதால் விலை அதிகரித்து விட்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், வாஷிங்டன் அருகே ஒரு பொருளாதார மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், `உலகம் முழுவதும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் அதிக அளவில் உணவு பொருட்களை சாப்பிடுவதால் அவற்றின் தேவை அதிகரித்து விலைவாசி உயர்ந்து விட்டது' என்றார்.

புஷ்சின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:-

இந்தியாவில் உணவு பொருட்கள் பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்பட்டதாலேயே விலைவாசி அதிகரித்து விட்டதாக அதிபர் புஷ் கருதுவது முற்றிலும் தவறானது. இந்தியா, உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு அல்ல. அது ஏற்றுமதி செய்யும் நாடு. வளர்ந்த நாடுகளில் பயோ-டீசல் உற்பத்திக்காக பெரும்பாலான விளைநிலங்களை ஒதுக்கியதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது, இந்தியாவின் உணவு தன்னிறைவுக்காக முதலாவது பசுமைப் புரட்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்து இந்தியா பின்வாங்கவில்லை. இரண்டாவது பசுமை புரட்சி திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை 4 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மணீஷ் திவாரி தெரிவித்தார்.

மத்திய வர்த்தக துறை இணை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அதிபர் புஷ்சுக்கு ஒருபோதும் பொருளாதார அறிவு சிறப்பாக இருந்தது கிடையாது. தற்போது, மீண்டும் ஒருமுறை அதை நிரூபித்து இருக்கிறார். இந்தியாவில் உணவு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால் உலக அளவில் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது'' என்றார்.

பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய மந்திரிகளின் பொறுப்பற்ற அறிக்கைகளுக்கு அதிபர் புஷ், முழு வடிவம் கொடுத்து இருக்கிறார். விலைவாசி உயர்வு குறித்து மத்திய மந்திரி பிரபுல் படேல் கூறியபோது கூட, 'மக்களின் உணவு பழக்க மாற்றத்தால் விலைவாசி அதிகரித்து விட்டது' என்று இதே போன்ற கருத்தை தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி என்பது, அத்தியாவசிய பொருட்களின் அதிகப்படியான தேவையோடு இணைந்தது ஆகும். தேவையான அளவு உணவு பொருட்களை வினியோகம் செய்வதோடு, விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதும் அரசின் பொறுப்பு.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், "இந்தியாவில் அதிக அளவு உணவு பொருட்கள் பயன்படுத்துவது குறித்து புஷ் எதுவும் சொல்லத் தேவையில்லை. அவருடைய நாட்டில் அவருக்கு நிலவும் பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டும். இந்தியாவின் பிரச்சினையை நாங்களே சமாளிப்போம். இதுபோன்று அசிங்கமான முறையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளே காரணம் என்று ஐ.நா.சபை தெளிவாக கூறியுள்ளது. எனவே, அதிபர் புஷ்சின் கருத்து முட்டாள்தனமானது'' என்று கூறினார்.

இந்தியர்கள் நிறைய சாப்பிடுவதால்தான் விலைவாசி உயர்வு : ஜார்ஜ் புஷ்

இந்தியர்கள் வயிறு நிறைய சாப்பிடுவதால்தான் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.

இ‌ந்‌தியா போ‌ன்ற நாடுக‌ளி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி ந‌ல்லதுதா‌ன் ஆனா‌ல், அதனா‌ல் அ‌திக‌ரி‌த்து‌ள்ள உணவு தா‌னிய‌ங்க‌ளி‌ன் தேவையே உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்‌வி‌ற்கு‌க் காரண‌ம் எ‌ன்றும் அவ‌ர், கூ‌றியு‌ள்ளா‌ர்.
இதுகு‌றி‌த்து ‌மிசெள‌ரி‌யி‌ல் நட‌ந்த பொருளாதார‌ மாநாடு ஒ‌ன்‌‌றி‌ல் பே‌சிய ஜா‌ர்‌ஜ் பு‌ஷ், "வள‌ர்‌ந்துவரு‌ம் நாடுக‌ளி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி‌யினா‌ல் உலகள‌வி‌ல் தேவை அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இது உ‌ங்களு‌க்கு‌ம் (அமெ‌ரி‌க்க தொ‌ழில‌திப‌ர்க‌ள்) ந‌ல்லது. ஏனெ‌னி‌ல் இ‌ந்த நாடுக‌ளி‌ல் உ‌ங்க‌ளி‌ன் சர‌க்குகளை ‌வி‌ற்‌கி‌றீ‌ர்க‌ள். வள‌ர்‌ச்‌சி இ‌ல்லாத இட‌த்‌தி‌ல் உ‌ங்க‌ள் சர‌க்குகளை ‌வி‌ற்பது ‌மிகவு‌ம் கடின‌ம்.

வேறு‌விதமாக‌ச் சொ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌‌ல், உலக‌‌த்‌தி‌ல் எ‌வ்வளவு வள‌ர்‌ச்‌சி உ‌ள்ளதோ அ‌வ்வளவு வா‌ய்‌ப்புகளு‌ம் உ‌ள்ளன. அத‌ற்கே‌ற்றவாறு தேவைகளு‌ம் அ‌திக‌ரி‌க்‌கி‌ன்றன.

எடு‌த்து‌க்கா‌ட்டி‌ற்கு ஒரு சுவார‌‌சியமான ‌விசய‌த்தை‌ப் பா‌ர்‌க்கலா‌ம். இ‌ந்‌தியா‌வி‌ல் 35 கோடி ம‌க்க‌ள் நடு‌த்தர வகு‌ப்பை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ஆவ‌ர். இது அமெ‌ரி‌க்காவை ‌விட அ‌திகமாகு‌ம். அதாவது இ‌ந்‌தியா‌வி‌ன் நடு‌த்தர வகு‌ப்பு ம‌‌‌க்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த ம‌க்க‌ள் தொகை‌யி‌‌ன் இர‌ண்டு மட‌ங்காகு‌ம்.

இதனா‌ல் வள‌ர்‌ச்‌சி அ‌திமாகு‌ம்போது தேவை அ‌திக‌ரி‌க்‌கிறது. இ‌ந்‌தியா‌வி‌ல் ‌உ‌ள்ள நடு‌த்தர வகு‌ப்‌பின‌ர் ந‌‌ல்ல ச‌த்தான உணவுகளை வா‌ங்கு‌ம்போது, ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்ப‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை அ‌திக‌ரி‌க்‌கிறது" எ‌ன்றா‌ர்.

உணவு‌ப் பொரு‌‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்‌வி‌ல் பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தி‌ன் ப‌ங்கை ப‌ட்டிய‌லி‌ட்ட அவ‌ர்,எ‌ரிச‌க்‌தி‌த் தேவைகளு‌க்கு தா‌னிய‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்துவதுதா‌ன் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்பதை மறு‌த்தா‌ர்.

"உண‌வு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்‌வி‌ல் எ‌த்தனா‌லி‌ன் ப‌ங்கு இரு‌ப்பதை மறு‌ப்பத‌ற்‌கி‌ல்லை. ஆனா‌ல், அது ம‌ட்டுமே மு‌க்‌கிய‌க் காரண‌ம் அ‌ல்ல.

எ‌ரிபொரு‌ட்‌க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வு‌ம் உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்‌வி‌ற்கு மு‌க்‌கிய‌க் காரணமா‌கு‌ம். ‌நீ‌ங்க‌ள் ஒரு உழவராக இ‌ரு‌‌ந்தா‌ல், நீ‌ங்க‌ள் எ‌ரிபொருளு‌க்கு‌ச் செலவ‌ழி‌க்கு‌ம் தொகையை ‌நீ‌ங்க‌ள் ‌வி‌ற்கு‌ம் பொரு‌ட்க‌ளி‌ன் ‌மீது வை‌ப்‌பீ‌ர்க‌ள். இ‌ல்லை எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌வீ‌ர்க‌ள்.

நீ‌ங்க‌ள் டீசலு‌க்கு அ‌திகமாக‌ச் செல‌விடு‌ம்போது‌ம், உர‌ங்களு‌க்கு அ‌திகமாக‌ச் செல‌விடு‌ம்போது‌ம் ‌நீ‌ங்‌க‌ள் ‌வி‌ற்கு‌ம் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. அதாவது உழவ‌ர்க‌ளி‌ன் அடி‌ப்படை‌ச் செலவுக‌ள் அ‌திக‌ரி‌க்கை‌யி‌ல் உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையு‌ம் உய‌ர்‌கிறது" எ‌ன்றா‌ர் பு‌ஷ்.

"அமெ‌ரி‌க்கா‌வி‌ல் உணவு‌ப் ப‌ற்றா‌க்குறை இ‌ல்லை. ஆனா‌ல் நம‌க்கு‌ம் ‌விலை உய‌ர்வு‌ப் ‌பிர‌ச்சனை உ‌ள்ளது. நா‌ம் அ‌திகமாக‌ச் செல‌விட வே‌‌ண்டியு‌ள்ளது.

உலகள‌வி‌ல் உணவு‌ப் ப‌‌ற்றா‌க்குறை அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. ப‌சி‌யி‌ல் வாடு‌ம் ம‌க்களு‌க்கு உணவு ‌கிடை‌க்க நா‌ம் உதவ வே‌ண்டு‌ம். அமெ‌ரி‌க்கா எ‌ப்போது‌ம் ப‌சியை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ப‌ணி‌யி‌ல் ‌மிகவு‌ம் பெரு‌ந்த‌ன்மையுட‌ன் நட‌ந்து கொ‌ண்டு‌ள்ளது" எ‌ன்று‌ம் பு‌ஷ் கூ‌றினா‌ர்.

நான் ஒட்டிக்கொண்டு பயனித்த போது

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், தமிழ்பால் பற்றும் கொண்ட ஒரு தமிழ் இளைஞனின் உணர்வுகள் இங்கே பிரதிபலிப்பதை நீங்கள் கண்கூடாகக் காணமுடியும்.
தங்கத் தமிழுலகம் - மும்பை சரவணா-வின் இணைய மடலாடற்குழு மின்னஞ்சலை இங்கே தருகிறேன்.
இனி.....
அன்புள்ள குழும உறுப்பினர்களுக்கு வணக்கம், புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய வரவேற்பு. இந்த குழுமம் 2002-ம் ஆண்டு தமிழுக்காக தமிழில் என்ற முகமையுடன் ஆரம்பிக்க பட்டது.

அப்போழுது யுணிக்கோடு எழுத்துறு இல்லாத காலம், ஆரம்பத்திலிருந்தே முரசு அஞ்சல் பயன்படுத்தி வந்து கொண்டிருந்த ஆனாலும் பலர் முரசு அஞ்சல் இறக்கம் செய்ய முடியாத சூழலில் ( அலுவலகங்களில் அல்லது சைபர் கபேக்களில்) நானும் பல கவிதை கட்டுரைகளை எல்லாம் எழுதி பதித்து வந்தும் அது பிரபலமாகாமல் போக காரணம் எழுத்துறு தரவிரக்கம் மேலும் மற்றவர்களை போல் தினம் குழுமத்தை பராமரிக்க வசதியின்மை.

ஆரம்ப காலங்களில் தங்கிலீஸ் டைப்படித்து அனுப்பி வந்தேன். ஆனால் சிலவற்றை எனக்கே படிக்க சிரிப்பு மட்டுமல்ல, புரியவுமில்லை. அதானால் 2004-ற்கு முன்புள்ள அத்தனை பதிவுகளையும் அழிக்க வேண்டியதிருந்தது.

சில நன்பர்களில் யோசனைப்படி அஞ்சல் எழுத்துறுவில் எழுதி அதை பிரிண்ட் எடுத்து ஸ்கேன் செய்து அனுப்பும் முறையையும் செய்து பார்த்துவிட்டேன்.

ஆனால் அதில் செலவு மற்றும் நேரம், இந்த இடைபட்ட காலங்களில் தமிழ் பதிவு பற்றி உலகில் உள்ள பல நன்பர்களிடம் யோசனை கேட்ட பொழுது கிடைத்தது யுனிக்கோடு என்னும் எழுத்துறு.

உண்மையில் இது எனக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லாம்.
பதிய அனுப்ப எளிதானாலும் ஒரு புதிய சிக்கல் 2006 ஆரம்பங்களில் இதன் பயன் புதிய கணினியான எக்ஸ்பி மற்றும் ஹோம் போன்ற வகைகளில் மட்டும்தான் இந்த யுனிக்கோடு வசதி.

அந்த வகை மிஸின் உள்ள கபேக்களை மட்டும் அனுகும் நிலை. ஆனால் பார்ப்பவர்கள் பல அடிக்கடி மடலிடுவது. சரவணா எல்லாம் எண்களாக தெரிகிறது. எல்லாம் எழுத்துறு மாறிவருகிறதென்று. எழுத்துறு தெரிவதற்கு சில செட்டிங்களை சொல்லி விடலாம். ஆனால் பழையவகை சிஸ்டம் உள்ளவர்களுக்கு என்ன செய்ய என்று யோசித்து நாட்களை நகர்த்திவந்த சமயம்(யுனிக்கோடு எழுத்து முறையை இணைய உலகில் முதல் முதலாக பயன்படுத்திய குழுமம் தங்க தமிழ் உலகம்.

அதன் பிறகு யுனிக்கோடு எழுத்து முறை பிரபலமாக 2006-க்கு பிறகு தங்கத்தமிழுலகம் தனது வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்தது. தங்கத்தமிழுலகத்தின் பெயர் இராசியோ என்னவோ தங்கமான பல உறுப்பினர்கள் இணைந்தனர். பொதுவாக தமிழ் குழுமங்களில் அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் உறுப்பினராக இருப்பதும். இளைஞர்கள் பொது மற்றும் நேரப்போக்கிற்கான குழுமங்களில் உலாவருவதும் வழமை.

ஆனால் இங்கு சமய பெரியொர்கள் திரு ஜமால் முகமது ஐயா,
தமிழ் அறிஞர் திரு இராமசாமி, பேராசிரியர் இளங்குமரன் என முது பெரும் அறிஞர்கள் பலர் இருக்க, அதுமட்டுமா சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் பலர் கொண்ட குழுமம் இது. இன்று திருச்சி மாநகரில் மின்னும் இராதாகிருட்டினர் கல்வி சேவை மையத்தை உறுவாக்கிய திரு.ஆனந்த் அவர்கள். கல்வி சேவை மையத்தின் நூலக ஆரம்ப விழா புகைப்படங்கள்
இந்த சுட்டிக்கு செல்லவும் http://picasaweb.google.co.uk/ananthprasath/DRCETInaugurationFunction . சென்னையில் பல சேவை மையங்களுடன் இணைந்து தனது நண்பர்களையும் சேர்த்து பல உதவிகளை செய்து வரும் திரு கலாநிதி அவர்களும் நமது குழும உறுப்பினர். இவரது சேவைகளுக்கு சிறிய உதாரணம் ஆர்குட் என்னும் இந்த பொது குழுச்சுட்டியில் சில நிழற்படங்கள்.

http://www.orkut.com/Album.aspx?uid=17766463706336935098&aid=1209340620

பொதுவாக குழுமங்கள் ஆரம்பித்த இடத்தின் சுற்றுப்புற நண்பர்களுடன் அறிமுகமாகி பிறகு அனைவரிடமும் போய்ச்சேரும் ஆனால் தங்கத்தமிழுலக குழுமத்தை பொருத்தவரை, ஆரம்பகால உறுப்பினர்கள் அனைவரும் சிட்னி, சவுபொலே, ஒஸ்லோ, பாரீஸ், ஜெனிவா மற்றும் லண்டன், நியு ஜெர்ஸி என ஆரம்பித்து இன்று சென்னை திருச்சி அருப்புகோட்டை, தக்கலை, மதுரை என பயணிக்கிறது.

மேலும் சமீபத்தில் வெளியிட்ட தமிழ் குழும அட்டவனையில் 10-ற்குள் ஒன்றாக வந்தது பெருமைபடக்கூடிய விடயமாகும்.

சமீபத்தில் இணைந்த திரு.நவநீதன் (நவின்/நவநீ/மனுநீதி) அவர்களை பற்றி : தமிழ் இணைய உலக நண்பர்களுக்கு மிகவும் பிரபலமானவர். சமீபத்தின் தோன்றி கலக்கிக்கொண்டிருக்கும் அதிகாலை.காம் http://www.adhikaalai.com/ என்ற இணையம் இவரது கைவண்ணம், மேலும் நிலாச்சாரலில் இவரது சாரல் அதிகம். பிலாக்ஸ்-களில் மனுநீதி http://manuneedhi.blogspot.com/ http://manuneedhis.blogspot.com/ http://manuneedhys.blogspot.com/ http://manuneedhigallery.blogspot.com/ http://manuneedhy.blogspot.com/ http://360.yahoo.com/navneethsmart http://www.esnips.com/user/manuneedhi இவரது கைவண்ணம்தான். ஒரு முறை யாழ்சுதாகரிடம், இளைய இராசாவின் பாடல்களை பற்றி சாட்டிங்கில் அரட்டிக்கொண்டிருந்த நேரம் இன்னும் தமிழ்நாட்டில் இணையத்தமிழ் பரவவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது பல தமிழ் இணையங்களை அட்டவணையிட்டோம்.

அப்பொழுது மனுநீதி http://manuneedhi.blogspot.com/ பற்றியும் பேச்சுவந்தது.
ஆனால் கடந்த சனவரி அன்று எனக்கு
நவநீதன் சார் அறிமுகமானார்கள்.

அவரும் எனக்கு பல ஆண்டுகளாய் மடலெழுதியுள்ளார். நானும் பலமுறை அவரது எழுத்துக்களை படித்துள்ளேன் ஆயினும் இன்னார் என்று தெரியாமல் பல மாதங்களாய பேசி, பிறகு "சார் நீங்களா?... சரவணா! நீதான் அந்த சரவணா-வா!" என்று அறிமுகம்.

டைம்ஸ் ஆப் இந்தியா திரு.இராகவன் அவர்கள் 2 வருட பழக்கம். குழும பதிவுகளை பார்த்து அவ்வபொழுது பதில் எழுதுவார். சமீபத்தில் செம்பராப் காமர்ஸ் மும்பை ஒரு விழாவிற்கு சென்றபோது நான் பணிபுரியும் நிறுவனத்தின் அதிகாரியுடன் பேசிக்கோண்டிருந்தார்.

நான் கடை நிலை ஊழியன். லக்கேஜ் தூக்கத்தான் நம்மையும் விழாவிற்கு அழைப்பார்கள்.

எனது உயரதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்த இராகவன் சார் என்னை கண்டதும் அவரிடம் 'யார் இந்த பையன்? எங்கேயோ பார்த்த நினைவு' என்று சொல்ல அந்த அதிகாரியும் "இது சரவணன் எனது நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளி" என்று சொல்ல சரவணன் என்று சொன்ன உடனே சட்டென பிடித்து கொண்டார். என்னை அருகில் அழைத்து "தம்பி நீதான் கோல்டன் தமிழ் வேர்ல்ட் சரவணாவா" என்று வினவ அவர்தான் எனது அதிகாரியிடம் என்னை பற்றி அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதுதான் தமிழுக்குள்ள ஒரு சக்தியோ என்னவோ.

அடுத்து நமது உறுப்பினர் மற்றும் உலகத்தமிழர்களிடத்தில் பிரபலாமன ஒருவர் திரு.நடராசன், 'வாரம் ஒரு ஆலயம்' இன்று 60 வாரங்களை தொட்டுக் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு ஆலயத்தை அதன் மூலம் முதல் ஆழம் வரை சென்று தகவல்களை திரட்டி வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதனை தமிழ் படிக்க தெரியாதவர்களுக்காக ஒலிவடிவில் கொடுத்து வருவது மிகப்பெரும் சாதனை. ஆரம்பித்த முதலாம் வாரத்திலிருந்து இன்றுவரை தங்கத்தமிழுலகத்தின் ஊடாகவும் வாரம் ஒரு ஆலயம் பயணித்திருப்பது ஒரு பெருமைப்படக்கூடிய விடயமே.

சரியாக ஒரு வருடத்திற்க்கு முன்பு வாரம் ஒரு ஆலயத்தில் ஆரம்ப வாரங்களில் எங்களுக்குள் நடந்த உரையாடல்.
10:18:17 PM rajesaravana: hi ji Vanakkam
10:18:46 PM natar_77: hello saravanan
10:19:10 PM rajesaravana: Sir Ungka name enna
10:19:24 PM natar_77: nataraj
10:19:56 PM rajesaravana: ok ok ambala vaanan sthampara nataraajan ;)
10:20:20 PM natar_77: is your yahoomailid rajesaravana@yahoo.com
10:20:34 PM rajesaravana: yes sir
10:20:56 PM natar_77: Thirvadirai star so nataraj name :-)
10:20:56 PM rajesaravana: neenga neeRRu konjam varuththapattiingka illa
10:21:20 PM natar_77: amam konjam varautha, innamum undu
10:21:59 PM rajesaravana: ungkaLukku theriyumaa oru lady unga mailukku oru replay anuppiirunthaangka
10:22:11 PM natar_77: who?
10:22:38 PM rajesaravana: kaRpakaampikai paRRi keetuirunthaarkaL
10:23:37 PM rajesaravana: naapagam illiyaa????
10:23:55 PM natar_77: truthfully,illa sir..but I save my messages,I'll look at my messages
10:24:31 PM rajesaravana: niingka sonna piRaku naan ungka mails ellaaththiyum sek panni parththen
10:24:43 PM rajesaravana: appa avarkaLil mail kitaiththahtu
10:24:55 PM natar_77: oh is it garbharakshambigai
10:25:07 PM rajesaravana: yesss
10:25:13 PM natar_77: yeah i remember
10:25:32 PM natar_77: because I haven't told karpagambigai yet
10:25:49 PM rajesaravana: paarththiiinkaLaa ungka mails evvaLvu peeriya oru uthavi seythirukkirathu
10:26:17 PM rajesaravana: appuram een saar varuththapaturiingka
10:26:55 PM rajesaravana: is okk but ellorum patikka thanee seyraangka ungka mails
10:27:05 PM rajesaravana: no one miss your message
10:27:11 PM rajesaravana: so now you happy
10:27:27 PM natar_77: illa actually the problem was ,Actually I tried posting vaaram oru alayam to one of tamil message baords, they harshly replied back to remove and really sent strong emails to me
10:27:56 PM natar_77: but after talking ith you am happy now
10:28:03 PM natar_77: thanx for encouragement
10:28:07 PM rajesaravana: dont worry naalikku oru message ellorukkum anuppukiren
10:28:34 PM natar_77: thank you so much
10:30:59 PM natar_77: k see you bye

மேலும் பிரான்ஸ் ஜனநாதன் அம்மா அவர்களையும் இந்த மடலில் நினைவு கூர்கிறேன். தமிழ் எழுத படிக்க தெரியாவிட்டாலும், எனது மடல்களை பார்த்து அவர்களது கணவரிடம் பிரென்ஸில் டிரன்ஸ்லேட் செய்து படிப்பார்கள். முக்கியமாக எனது மும்பை ஒரு நாள் கதையை அடிக்கடி படித்து சிரிப்பார்களாம் அவர்களது குடும்பமே சாப்பிட அமரும் வேளையில் நினைவு கொண்டு மகிழ்வார்கள்.

இந்த ஆறுவருட காலம் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை. விரைவில் தனது 7-ம் வருட அகவையை தொட்டிருக்கும் தங்கதமிழ் உலகம் தற்போது உங்களின் உலகமாக மலர்ந்துள்ளது

இந்த வருட முடிவிற்குள் சொந்த கணினி ஒன்று வாங்க முயற்சி எடுத்துள்ளேன். உங்களின் ஆதரவிற்கு எனது பணிவான வணக்கங்கள்.

அன்புடன்
சரவணா மும்பையிலிருந்து

May 02, 2008

பிரியங்கா - நளினி சந்திக்கவில்லை : சிறை அதிகாரி பகீர் தகவல்

சிறையில் ராஜீவ் காந்தி கொலையாளியான நளினியை பிரியங்கா சந்திக்கவில்லை என வேலூர் சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் ராஜசௌந்தரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவையே ஆச்சரியப்பட வைத்த சம்பவங்களில் ஒன்று நளினி- பிரியங்கா சந்திப்பு. அச்சந்திப்பு பற்றி எல்லா ஊடகங்களும் பரபரப்புச் செய்திகள் வெளியிட்டிருந்தன. ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தியும், மார்ச் 19-ல் வேலூர் சிறையில் நளினியை சந்தித்துப் பேசியதை ஒப்புக் கொண்டார்.
அப்பொழுது என்ன பேசிக் கொண்டார்கள்? எப்படி எல்லாம் நளினி, பிரியங்காவின் உணர்ச்சிப் பூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது… பிரியங்கா மனம் விட்டு அழுதது, சோனியாவுக்கு நளினி இனிப்பு பலகாரம் செய்து வைத்திருந்தது…இதனால் தன்னுடைய கணவர் முருகனுக்கும் நளினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது...இருவரும் தற்கொலைக்கு முயன்றது...இப்படி பக்க கணக்கில் இருவரின் சந்திப்பு பற்றி நாடே அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பேசிக் கொண்டது. இவர்களின் சந்திப்பு கிட்டத்தட்ட 10 நாட்கள் நாட்டின் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது.


ஆனால் இப்பொழுது முழுப் பூசணியை சோற்றுக்குள் அமுக்குவது மாதிரி இச்சந்திப்பு நிகழவே இல்லை என சிறைக் கண்காணிப்பாளர் முரண்பட்ட அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு நிக்ழந்தா? இல்லையா? என்பது பற்றி சென்னை வக்கீல் ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சிறைக் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பித்திருந்தார்.

இது பற்றி தெரிந்தவுடன் பிர்யங்காவிடம் டெல்லி பத்திரிகைகள் கேள்வி எழுப்பியது. அவரும் சந்திப்பை ஒத்துக் கொண்டார்.ஆனால் சிறைத்துறை வட்டாரம் அப்பொழுது தகவல் ஏதும் அளிக்கவில்லை.அதற்கான் பதிலை இப்பொழுது தெரிவித்துள்ளது.

"மார்ச் 14 மற்றும் மார்ச் 19 ந் தேதிகளில் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கும்படியான எவ்விதச் சந்திப்பும் நிகழவில்லை." என தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி விண்ணப்பித்திருந்த மனுவுக்கு பதில் அளித்துள்ளது சிறை நிர்வாகம்.

சிறைத் துறையின் இந்தப் பகீர் தகவலை அடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மேல்முறையீடு செய்யப் போவதாக நளியின் வழக்குரைஞர் துரைசாமி கூறி உள்ளார்.

வேலுர்ர் சிறை பதிவேட்டில் ப்ரியங்கா- நளியின் சந்திப்பு பற்றி பதிவு செய்யப்படவில்லை. எனவே இசசந்திப்பு நிகழவில்லை என சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.எனவே நளினி- பிரியங்கா சந்திப்பு பற்றி பல்வேறு சந்தேகங்களும் கிளம்பியுள்ளன. இதனை அடுத்து அடுத்தகட்ட பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.

சந்தன வீரப்பனுக்கு சிலை

தமிழ்நாடு போலீசாருக்கு மிகப் பெரும் சவாலாக திகழ்ந்த `மாயாவி' வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அணை அருகே மூலக்காடு வனப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் வீரப்ப னுக்கு நினைவு மண்டபம் கட்ட அவரது மனைவி முத்து லட்சுமி திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக முத்துலட்சுமி கூறியதாவது:-

எனது கணவர் வீரம் மிக்கவர், அதே சமயத்தில் ஏழை-எளியவர்களிடம் பரிவுடன் பழகி வந்தார். நயவஞ்சக செயல் மூலம் அவரை கொன்று விட்டனர்.

மூலக்காட்டில் அவர் சமாதி உள்ள இடத்தில் நான் நினைவகம் கட்ட உள்ளேன். இதற்கான பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும். அந்த இடத்தில் எனது கணவரின் முழு உருவ வெண்கல சிலை ஒன்றையும் நிறுவ போகிறேன்.

எனது கணவர் தமிழக எல்லையை காக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இதை இப்போது தான் எல்லைப் பகுதி மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். தினம், தினம் என் கணவர் சமாதிக்கு வந்து மண் எடுத்துச் செல்கிறார்கள்.என் கணவர் ஆத்மாவை அவர்கள், "எல்லைச்சாமி'' ஆக பார்க்கிறார்கள்.

இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

தர்மபுரியிலும் "மாயாவி'' வீரப்பனுக்கு சிலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் வீரப்பன் தொடரை இயக்கி வரும் டைரக்டர் ஜி.கவுதமன் யோசனையின் பேரில், பா.ம.க. நிர்வாகி சிவகுமார் இந்த சிலையை உருவாக்கி வருகிறார்.

இதுபற்றி சிவகுமார் கூறு கையில், "2 லட்சம் ரூபாய் செலவில் வீரப்பனுக்கு சிலை செய்து வருகிறேன். தர்மபுரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தாத்த நாயக்கன் பட்டியில் என் சொந்த நிலத்தில் இந்த சிலை நிறுவப்படும்'' என்றார்.

அடுத்த மாதம் (ஜுன்) வீரப்பன் சிலை திறப்பு விழா தர்மபுரியில் நடக்க உள்ளது. இதில் டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை தமிழ்சங்க நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் குடியேற ஒசாமா பின்லேடன் மகனுக்கு தடை

பின்லேடன் மகன் ஒமர், இங்கிலாந்து நாட்டு மனைவியுடன் வசிப்பதற்காக அந்த நாட்டில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பின்லேடன் மகன் ஒமர் ஒசாமா பின். 27 வயதான அவர் எகிப்தில் வசித்தபோது, அந்த நாட்டை சுற்றிபார்க்க வந்த ஆங்கிலேய பெண் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஜேன் தன்னை 25 வயது மூத்தவர் என்பது கூட ஒமருக்கு பெரிய குறையாக தெரியவில்லை. இருவரும் கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எகிப்து நாட்டில் இருவரும் குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.

ஒமரின் மனைவி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தன் பெயரையும் செய்னா அல்சபா பின்லேடன் என்று மாற்றிக்கொண்டார். இருவரும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வாழ திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஒமருக்கு விசா கேட்டு செய்னா மனு செய்து உள்ளார். விசா கிடைக்கும் வரை இருவரும் எகிப்து நாட்டில் தங்குவது என்று முடிவு செய்து உள்ளனர். ஒமருக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்து உள்ளது. அவர் இங்கிலாந்து நாட்டுக்கு குடியேறினால் அது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.
ஒமர் தன் தந்தைக்கு தொடர்ந்து விசுவாசமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து உள்ளன என்றும் அதிகாரிகள் ஒமரிடம் கூறி உள்ளனர்.

தனக்கு விசா வழங்கப்படாததை எதிர்த்து ஒமர் அப்பீல் செய்து இருக்கிறார். என் தந்தையை காரணம் காட்டி எனக்கு விசா வழங்காதது தவறு என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள செஷைர் நகரில் என் பிரிட்டிஷ் மனைவியுடன் வசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார்.

'தசாவதாரம் படத்தை தடை செய்வோம்' - இந்து அமைப்பு போர்க்கொடி

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கமலஹாசன் நடித்த தசாவதாரம் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் அறிவித்துள்ளார். விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் நேற்று ராமேசுவரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடையும் வரையில் ராமர் பாலம் பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் சினிமாவில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது இந்து கடவுள்களின் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சியையும் அவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் இந்த படத்தை வெளியிட விடமாட்டோம். தியேட்டர் முன்பு போராட்டம் நடத்துவோம். பிரியங்கா-நளினி சந்திப்பு அரசியலில் சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது அதேபோல `தீன்பிகார்' என்ற தீவை வங்காளதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்திய பகுதிகளை பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுப்பது தேச பாதுகாப்புக்கு நல்லதல்ல. இந்த நிலை மாற மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

"அரைகுறை" மல்லிகா ஷெராவத் மீது போலீசில் புகார்

முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை மல்லிகா ஷெராவத் குட்டை பாவாடை அணிந்து மனதை புண்ணாக்கி விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கனிராஜன், பெரியமேடு போலீசில் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளராக இருக்கிறேன். தேச நலனுக்காகவும், கலாச்சார நெறிமுறைக்காகவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. கடந்த ஏப்ரல் 25-ந் தேதி ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தசாவதாரம் சினிமாவின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் நாகரீகமாக உடையணிந்தபடி வந்திருந்தனர்.
ஆனால் மல்லிகா ஷெராவத் என்ற இந்தி நடிகை தமிழ் கலாசாரத்தை மீறி, தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் அரைகுறை ஆடையணிந்து, அதாவது குட்டை பாவாடை அணிந்து வந்திருந்தார். இதனால் தமிழ் பண்பாளர்கள் பலர் முகம் சுளித்தனர்.
முதல்-அமைச்சர் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், ஆபாசமாக அறுவருக்கத் தக்க சேஷ்டைகளையும் செய்தார். இதை டி.வி., பத்திரிகைகளில் பார்த்து மனம் புண்பட்டு விட்டது. தமிழ் கலாச்சாரத்தில் பற்று உள்ளவர்களுக்கு இது மன வேதனையையும் அவமானத்தையும் அளித்தது. கீழ்த்தரமான எண்ணங்களை உண்டு பண்ணும் வகையில் அவரது உடை அமைந்திருந்தது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மல்லிகா ஷெராவத் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வழக்கு தொடரவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கனிராஜனின் வக்கீல் ராம் மனோகரனிடம் கேட்ட போது, "இந்த பிரச்சினை தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் கனிராஜனை அழைத்து இன்று (2-ந் தேதி) விசாரணை நடத்துவதாக பெரியமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டார்.

May 01, 2008

"மே தினம்! உழைப்பவர் சீதனம்!!"

உலகமெங்கும் "மே" மாதத்தில் தொழிலாளர் தினம்
கொண்டாடும்போது ஏன்? அமெரிக்காவில்... கனடாவில் மட்டும்
செப்டெம்பர் மாதத்தில்.... என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்?!

அவர்களுக்காக இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.....! இன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது தனியார் தொழில் நிறுவனமாகட்டும்காலையில் 8 மணிக்கு அல்லது 9மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை(கொட்டாவி விடுறது... குட்டித்தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில் ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா", அமெரிக்காவில‌ எலெக்ச‌ன் என்னாச்சு? த‌மிழ‌க‌ சினிமாவின் 75-ம் ஆண்டு விழாவுக்கு ந‌டிக‌ர் ச‌ங்க‌ம் க‌ருணாநிதியையும் செய‌ல‌லிதாவையும் அழைக்க‌ப் போகிறார்க‌ளாமே....".... என்ற அலசல் நேரம் உட்பட) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.

மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த பைலை கொஞ்சம்பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு, எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக்கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம்கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்று.

நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16 மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால்தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிறசலுகைகள் என்று சுகம் காண்கிறோம்.

அன்று...1863-களில்...

அமெரிக்காவில் நியூயார்க் நகர வீதிகளில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் கைகளில் நாளிதழ்களைச் சுமந்துகொண்டு விடிந்தும் விடியாத காலைப்பொழுதுகளில் வாய் வலிக்கக் கத்தி விற்பான். கடைசி நாளிதழ் விற்றானதும் தயாராகத் தோளில் தொங்கவிட்டிருக்கும் பையில் அவனது அடுத்த வேலை ஆரம்பமாகிவிடும். அவசரவசரமாக அலுவலகம் போவோரை, அய்யா ஒங்க ஷூவு-க்கு கொஞ்சம் பாலீஷ் போட்டு விடுறேன், குடுக்குற காசைக் குடுங்கய்யா..."என்ற கெஞ்சலோடு, அவனுடைய ஷூ பாலீஷ் வேலை நடக்கும். ஒருவாறு இந்த வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வெவ்வேறு தெருவில் உள்ள நாலைந்து கடைகளுக்கு அடுத்தடுத்துச் சென்று பம்பரமாகக் கூட்டிப் பெருக்கி அங்குள்ள பொருட்கள் மேலுள்ள தூசி துடைத்து ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும். காலை நாலு மணிக்குத் துவங்கி பத்துமணிக்குள் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அப்பாடா என்று அவனால் ஒரு நிம்மதிப் பெருமூச்சு கூட விடமுடியாது.

ஒரு சில கடைகள், ஒரு சில அலுவலகங்கள் தருகிற கடிதங்களை எடுத்துக்கொண்டு அந்தந்த முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து அந்தத் தபால்களைப் பட்டுவாடா செய்யவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஒரு ரொட்டியை வாயில் போட்டு தண்ணீர் குடித்து காலைக்கும் மதியத்துக்குமான வயித்துப்பாட்டை சரி செய்துகொள்வான். இவ்வளவு பாடும் அவனுடைய அம்மா மற்றும் ஆறு சகோதர சகோதரிகளுக்காக கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த அந்த ஐரிஷ் சிறுவனின் பெயர் பீட்டர் மெக் குரி! ( Peter Mc Guire ) .

டிஸ்மிஸ்...

19-ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நியூயார்க் நகரில் காலூன்றத் துவங்கிய நேரம். அவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி வேறு ஒரு சுவர்க்கபுரிக்குப் போகப்போகிறோம் என்ற கனவோடு இவர்கள் நியூயார்க் நகரில் கால் பதித்தபோது அவர்களின் கனவு நொறுங்கித்தான் போனது. ஆறு குடும்பங்கள் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு வீட்டில் நெருக்கியடித்து மூட்டை முடிச்சுகளாய் மாறியிருந்தனர்.

இரவு எப்போது ஒழியும் என்று காத்திருந்தது போல விடிந்தும் விடியாத... புலர்ந்தும் புலராத வேளையில் வீட்டைவிட்டு வெளியேறும் இவர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பீட்டரைப்போல வேலை தேடித் தெருக்களில் வலம் வந்தனர்.

இவர்களுக்கு கிடைக்கும் வேலைகள் எளிய வேலைகள் அல்ல; வேலைத் தரம் மிக மோசமாக இருந்தது. புலம் பெயர்ந்து வந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்றுவேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட மிகக்குறைந்த நேரமே கொடுக்கப்பட்டது. லை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியான நேரத்துக்கு வேலைக்கு வராவிட்டால் "டிஸ்மிஸ்" தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்கு இரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை. திண்ணை எப்போது காலியாகும் என்பது போல வேலை இல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இவர்கள் இடத்தைக் கைப்பற்றக் காத்துக்கிடந்தார்கள்.

தொழிற்சங்கம்...

பீட்டருக்கு 17 வயாதானபோது ஒரு பியானோ கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இது அவன் பார்த்த மற்ற வேலைகளைவிடப் பரவாயில்லாமலிருந்தது. இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை பார்க்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. இரவு நேரங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை குறித்த வகுப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றான்.

இதில் அவனைக் கவர்ந்த விஷயம் தொழிலாளர்களின் வேலைத் தரம் பற்றியதாகும். நிச்சயமற்ற வேலைகளாலும், மிகக்குறைந்த சம்பளத்தாலும், நீண்ட நேரம் வேலை பார்ப்பதாலும் தொழிலாளர்கள் உற்சாகமிழந்து சலிப்புற்ற நிலையில் களைப்படந்து போய் இருந்ததை பீட்டர் உன்னிப்பாக கவனித்தான். இந்த நிலை மாற என்ன செய்வது என்று தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிப்பேசி தீர்வு கிடைக்காமல் உழல்வதையும் பீட்டர் கவனிக்கத் தவறவில்லை.

தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு வசந்தமாக அந்த வசந்தகாலம் மலரத் துவங்கிய 1872-ல் பீட்டர் நியூயார்க் நகரின் மூலை முடுக்கிலிருந்த தொழிலாளரை எல்லாம் ஒன்று படுத்தி தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற்சங்கம் வேண்டும் என்று பேசிய அவன் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் நியூயார்க் நகரம் கண்டிராத வகையில் பீட்டர் தலைமையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். நீண்ட வேலை நேரத்தைக் குறைக்கவேண்டும் என்ற அவர்கள் பேரணிக்கோஷம் தொழிலதிபர்களுக்கு பேரிடியாக இருந்தது. தொழிலாளர்களுக்கு ஒரு இயக்கம் தேவைதான் என்ற நிலையை இந்தப்பேரணி ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணிக்காக்க ஆங்காங்கே தொழிற்சங்க அமைப்புகளையும் பேரமைப்பையும் தோற்றுவிக்கவேண்டிய அவசியம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பீட்டர் பேசிய பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

வேலையில்லாத் திண்டாட்டம் போக்கவும் அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கவேண்டுமென்றும் அரசிடம் கோரிக்கைகளை பீட்டர் முன் வைத்தபோது அரசு அதை அலட்சியப்படுத்தியது. மாறாக "பொது மக்களின் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற நபர்" என்ற முத்திரை குத்தப்பட்டார். பீட்டர் பார்த்த வேலையும் சில விஷமிகளால் பறிபோனது. தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி இயக்கம் உருவாக்குவதில் முன்னிலும் முனைப்போடு ஊர் ஊராகப் பயணம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் பேசி தொழிற்சங்கம் துவங்கக் கோரினார்.

1881-ல் பீட்டர் மிசூரி மாநிலத்தில் (Missouri State)உள்ள செயிண்ட் லூயிஸில் குடியேறினார். அங்குள்ள தச்சுத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் ஒன்றைத் துவக்கினார். தொடர்ந்து தேசிய அளவில் ஒரு மாநாட்டை சிகாகோ நகரில் கூட்டி தேசிய அளவிலான தச்சுத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்புக்கு பீட்டரையே பொதுச்செயலராகத் தேர்ந்தெடுத்தனர்.

எட்டு மணி நேர வேலை...

இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர் இயக்கத்தைக் கண்ட அமெரிக்க மாநிலங்களில் உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம் பிறந்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த உற்சாகம் ஆலைத் தொழிலாளர்கள், பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காங்கே தொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேரவேலை, வேலைப் பாதுகாப்பு போன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடு கூட்டுக் கூட்டங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். இந்த நாள் அமெரிக்கச் சுதந்திரதின நாளுக்கும், நன்றி கூறும் நாளுக்கும் இடையில் அமையவேண்டுமென்றும் குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.

1882-ம் ஆண்டு செப்டெம்பர் 5-ம் நாள் திடீரென்று நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேர்கள் அடங்கியதொழிலாளர் தின பேரணி ப்ராட்வேயில் துவங்கியது. அவர்கள் தாங்கி வந்த பதாகைகளில் "LABOR CREATS ALL WEALTH" என்றும் "EIGHT HOURS FOR WORK, EIGHT HOURS FOR REST, EIGHT HOURS FOR RECREATION !" என்ற வாசகங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களை வசீகரிக்கும் மந்திரச் சொல்லானது.

பேரணி முடிந்ததும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக விருந்துண்டு மகிழ்ந்தனர். அன்றிரவு வாணவேடிக்கைகள் நியூயார்க் நகரையே வெளிச்ச பூமியாக்கியது. இந்த வெளிச்சம் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மனதில் பிரகாசித்தது. அரசு அறிவிக்காவிட்டால் என்ன? நமக்கு நாமே விடுமுறை எடுத்துக்கொண்டு தொழிலாளர் தின பேரணி நடத்துவோம் என்று ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களும் அடுத்த ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர் தினம் கொண்டாடினர்.

1894 ல்.....

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதுபோல அரசாங்கம் ஒருவழியாக அறிவித்தது. 1894-ல் காங்கிரசு ஓட்டளிக்கவே அமெரிக்கக் கூட்டரசு செப்டம்பர் மாத முதல் திங்கட்கிழமை நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது. இன்றைக்கு அமெரிக்கா, கனடா நாடுகளில் செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகின்றனர். பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும் தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும் நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது.

அரசியல்வாதிகள்கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது. பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக் கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவது வழக்கம்.

சிகாகோ கலகம்

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சிகாகோவில் ஹேய் மார்க்கெட்
பகுதியில் 1886-ம் ஆண்டு 90,000 தொழிலாளர்கள் "எட்டு மணி நேர வேலை" என்கிற பொது கோரிக்கைக்கு பேரணி ஒன்றை அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு "மே" மாதம் 4-ம் தேதி ஏற்பாடு செய்தது. சிகாகோவின் அந்நாள் மேயரும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டார். பேரணி அமைதியாக நடந்து முடிந்து பொதுக்கூட்டம் ஹேய் மார்க்கெட்டில் நடந்துகொண்டிருந்த வேளையில் மேயர் பொதுக்கூட்ட மேடையை விட்டு வெளியேறியதும் அங்கிருந்த காவல் துறைத் தலைவர் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி கண்ணீர் புகைக் குண்டுகளை வீச...... தொழிலாளர் தரப்பிலிருந்த சிலர் போலீசாரிடமிருந்த ஆபத்தான வெடிகுண்டுகளைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீதே வீச நூற்றுக்கணக்கான
காவலர்கள் காயமுற 66 காவலர்கள் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்ப‌ட்ட‌ தொழிலாள‌ர்க‌ள் இற‌ந்த‌ன‌ர். எண்ண‌ற்ற‌ தொழிலாள‌ர்க‌ள் காய‌முற்ற‌ன‌ர்.

கிட்டத்தட்ட காவலர்கள் அதிக அளவில் உயிரிழந்த தொழிலாளர் போரட்டமாய் அன்றைய தினம் அமைந்தது....தொழிலாளர்களின் மன உறுதி, போராட்ட வேகம் எத்தகையது என்பதைக் கொஞ்சம் கற்பனைக் கண் கொண்டு பார்க்க இயலும்.

காவலர்கள் களப்பலியானதும் காவலர்களின் சினம் முழுக்க தொழிலாளர்கள் மீது திரும்ப நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான காயங்களோடும் ஏழு தொழிலாளர்கள் இறக்கவும் நேரிட்டது. இல்லிநாய்ஸ் கவர்னர் ஜான் கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். அரசு ஏராளமான தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுத்தது. இதன் மூலம் தொழிற் சங்க அமைப்பை நசுக்கிடத் திட்டமிட்டது அரசு. தொழிலாளர்கள் தலைவர்கள் சிலரை தூக்கிட்டு அரசு கொக்கறித்தது. ஆனால் நடந்தது வேறு.

பேரியக்கம்... சிகாகோவில் நடைபெற்ற கலகம் உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களைக் கொதித்தெழ வைத்தது. இங்கிலாந்து, ஹாலந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டுத் தொழிலாளர்களின் கடும் கண்டனத்தைப் பெற்றதோடு சிகாகோ கலகத்திற்கு காரணமான இல்லிநாய்ஸ் மாநில அரசினைக் கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தினர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவிடவும் வழக்கு நடத்தப் போதிய நிதி அளித்திடவும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் நிதி சேகரித்துக் கொடுத்தனர். உலகெங்கும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகவும் உலகலாவிய பேரியக்கமாக மலர சிகாகோ கலகம் காரணமாகிப் போனது. அன்றைய ஜெர்மானியப் பிரதமர் பிஸ்மார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டியதும் தொழிலாளர் வரலாற்றில் மிக முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.

கனவும் நனவும்....

தொழிலாளர் ஒற்றுமையும், தொழிலாளர் இயக்க வலிமையும் இறுதியில் "எட்டு மணி நேர வேலை" என்றஅரசின் அங்கீகாரத்தை வென்றெடுத்தன. தொழிலாள வர்க்கத்தின் கனவு நனவானது 1888-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியாகும். முதலில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கிடைத்த அங்கீகாரம் படிப்படியாக ஒவ்வொரு நாடும் பெறக் காரணமாய் அமைந்தது. 1889-ல் பாரீஸ் மாநகரில் 400 சர்வதேச தொழிலாளர் பிரதிதிகள் கூடினர். உலகத் தொழிலாளர்களின் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடித்தளமாகஅந்தக் கூட்டம் அமைந்தது. அதுமட்டுமல்ல, உழைப்பாளிகள் ஒன்று படவும் அவர்தம் கோரிக்கைகள் வென்றெடுக்கக் காரணமான மே முதலாம் நாளை உழைப்பாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடுவதென முடிவெடுத்தனர். 1891-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதன் முதலாக ரஷ்யா, பிரேசில் மற்றும் அயர்லாந்தில் "மே" தினத்தைக் கொண்டாடினர்.

சைனாவில் 1920-லும், இந்தியாவில் 1927-லும் (இந்தியாவில் கல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில்) அமெரிக்காவில் "மே" தினத்தன்று ஊர்வலங்கள் நடத்தினாலும் 1905-ம் வருடத்திலிருந்து வருடம் தோறும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமையன்று தொழிலாளர் தினமாக அரசு அறிவித்து கொண்டாடுகிறது. கனடாவும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள்கிழமையையே தொழிலாளர் தினமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

என்ன ஒரு வருத்தமான செய்தி என்றால், அன்று உண்மையிலேயே உழைப்பாளர்களால் கொண்டாடப்பட்டது! இன்றைக்கு உழைப்பாளர்கள் கட்சி என்ற அடையாளத்துக்குள் மறைந்து சடங்குத்தனமாக, சம்பிரதாயமாக நடப்பதுதான்! தமிழகத்தில் உழைப்போரே உயர்ந்தோர், உழைப்போருக்கே உலகம் உடமை என்ற கொள்கையை தன் உயிர்மூச்சோடு இணைத்துக்கொண்டு வாழ்ந்த சிங்காரவேலர் "மே" தினக் கொடியேற்றிக் கொண்டாடியதும் 1923-ல் இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி முகிழ்க்கவும், சிங்காரவேலரின் இருப்பிடமே தலைமையிடமாகத் திகழ்ந்த வரலாறும் தொழிலாளர்கள் மறந்துவிட முடியாத மாசற்ற உண்மையாகும்.

1908-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற "கோரல் மில்' தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 1918 ஏப்ரல் 27 அன்று "மெட்ராஸ் லேபர் யூனியன்' என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும்.

இதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர் ஆகியோர் செயல்பட்டனர். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன. 1889-லிருந்து தொழிலாளர் விடுமுறை தினமாக மே முதல் நாளை இந்தியாவும் எகிப்தும் அறிவித்ததாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது. சிங்கப்பூர் மே தினத்தை உழைப்பாளர் தினமாக கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
"போராடுவோம், போராடுவோம்...வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!"

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!"
"இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?"
"அஞ்சோம், அஞ்சோம் அடக்குமுறை கண்டு அஞ்சோம்!"
"தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!"
போன்ற சிங்காரவேலரின் சிறப்புக் கோஷ‌ கீதங்கள் இன்றளவும் நம் செவிப்பறையில் ஆங்காங்கே விழுந்துகொண்டுதானே இருக்கிறது! உழைப்பாளர்களுக்கான தமிழகத் தந்தை சிங்காரவேலர் அவர்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு (2006) மார்ச் திங்கள் 2-ம் நாளன்று அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது! உழைப்போரால்தான் இந்த உலகம் இன்னும் கம்பீரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை!!!

ஒரு நாட்டின் பொருளாதாரம் கொழிக்க உழைப்பவர்கள் தொழிலாளர்கள்! தொழிலாளர்கள் என்ற இயந்திரம் சீராக பழுதின்றி இயங்கிட அவர்கள் உற்சாகம் பெற ஒரு நாள் விடுமுறை என்ற அங்கீகாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அதற்கு மூலகர்த்தாக்களாக செயல் பட்ட பீட்டர், சிங்காரவேலர் போன்றவர்களை இந் நாளில் நினைவு கூர்வது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.... இல்லையா?
- ஆல்பர்ட்

உலக அளவில் செல்வாக்குப் பெற்ற 100 பேர்:சோனியா உட்பட 3 இந்தியருக்கு இடம்

2008 - ஆம் ஆண்டில் உலக அளவில் செல்வாக்குபெற்ற 100 நபர்களில் சோனியா காந்தி, தொழிலதிபர் ரத்தன் டாடா, பெப்சி நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி இந்திரா நூயி ஆகிய மூன்று இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
2008-ஆம் ஆண்டில் உலக அளவில் செல்வாக்குப்பெற்ற 100 பிரபலங்களின் பட்டியலை அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.



இந்தப் பட்டியலில் இந்திய அரசியலில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பெண்மணியாக சோனியா காந்தியை தேர்வு செய்துள்ளனர். பலத்த சோதனைகளுக்கு இடையிலும் காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்தியவர் என்ற பெருமை சோனியாவிடம் காணப்படுகிறது.
இந்திரா நூயி (வயது 51) தான், சார்ந்திருக்கும் பெப்சி நிறுவனத்தை உலக அளவில் முன்னணி நிறுவனமாக மாற்றிய சாதனையாளர். அவரின் வியாபார நுணுக்கங்களும், புதுமைகளும்தான் பெப்சியின் சந்தையை உலகமயமாக்கியது. எனவே அவர் செல்வாக்குப் பெற்ற 100 பேரில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 70), இவர் இடம் பெறக் காரணம்- 1 லட்ச ரூபாய்க்கு நேனோ காரை அறிமுகப்படுத்த இருப்பதால்தான்.

திபெத்தின் ஆன்மீகத்தலைவர் தலாய் லாமாவும், சீனப் பிரதமர் ஹூ ஜிந்தோவும் இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் பெயரும் இதில் உள்ளது. டோனி பிளேரின் பெயர் முதல் முறையாக இந்தப் பட்டியலில் இந்த ஆண்டுதான் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இங்கிலாந்து பிரதமரான கோர்டன் பிரௌன் 2005-ஆம் ஆண்டுப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு இடம் பிடித்திருந்த அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டனும், அதிபர் வேட்பாளாரான பராக் ஒபாமாவும் வழக்கம் போல் இந்த ஆண்டுப் பட்டியலிலும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி இருக்கிறார்கள். உலக அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் 100 நபர்களை 'டைம்ஸ் இதழ்' தேர்வு செய்து தனது இணயத் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

மலேசிய முன்னாள் பிரதமர் வலைப்பதிவு எழுதுகிறார்

மலேசிய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் புதிதாக வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். தன்னுடைய கருத்துக்களை எல்லாம் உலக சமுதாயத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் நவீன ஆயுதமாக இணையத் தளங்கள் என்று சொல்லக்கூடிய வலைப் பதிவில் தனது கருத்துக்களை வெளியிடுவதுதான். அந்தப்பட்டியலில் இப்பொழுது மகாதீரும் சேர்ந்துள்ளார்.
'செ டெட்' அல்லது 'மிஸ்டர்.டெட்' என்ற புனை பெயரில் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் தொடந்து பல கட்டுரைகளை எழுதி வந்தவர் மகாதீர். எனவே மீண்டும் தனது புனை பெயரான ‘செ டெட்’ என்ற பெயரிலேயே வலைத் தளத்தையும் தொடங்கி இருக்கிறார். (http://www.chedet.com/)

82 வயதான மகாதீர், 1981 - முதல் 2003 வரை 22 ஆண்டுகாலம் மலேசியாவின் பிரதமராக இருந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த மகாதீர் மருத்துவம் படித்தவர். சில காலம் அரசு மருத்துவராகவும் பணிபுரிந்தவர். அதன்பின் அரசியலில் புகுந்து பிரதமராகி, விவசாய நாடாக இருந்த மலேசியாவை ஒரு முன்னணி தொழிற்துறை நாடாக மாற்றிக் காட்டிய பெருமை கொண்டவர். உலக நாடுகளுக்கு மலேசியாவை ஒரு வளமிக்க நாடாக அறிமுகப்படுத்தியவர் மகாதீர்.

தற்போதைய பிரதமர் அப்துல்லா படாவிக்கு எதிராக தனது கருத்துக்களை தயங்காமல் தெரிவித்து வருகிறார். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். படாவியை அடுத்த பிரதமராக கொண்டு வந்ததில் மகாதீருக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பெற முடியாத படாவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த மார்ச் 8-ல் நடைபெற்ற தேர்தலில் மகாதீரின் புதல்வர் கூட வெற்றி பெற்றார். ஆனால் படாவியை ராஜினாமா செய்யச் சொல்லி தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே தற்போதைய பிரதமருக்கு எதிராக முன்னாள் பிரதமரின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதன் தீவிர நடவடிக்கைகளில் ஒன்றுதான், இப்பொழுது மகாதீர் தொடங்கி இருக்கும் வலைத்தளமும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மலேசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு இணையத் தளங்களின் பங்கு பெரிய அளவில் இருந்தது. இதை பலரும் உணரத் தொடங்கி இருக்கின்றனர். தேர்தல் காலத்தில் “மலேசியாகினி” - என்ற இணையத் தளம் அரசுக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரத்தை கட்டுரை வடிவில் வெளியிட்டது. அதற்கு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான டிஏபி கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங்கும் வலைத் தளத்தில் எழுதி வருகிறார். தேர்தல் சமயத்தில் அவருடைய கருத்துக்கள் பலவும் தனது வலைத் தளம் வழியாகத்தான் பெரும்பான்மை மக்களை சென்றடைந்தது. அதேபோல் மலேசியாவின் வலைத்தள நிபுணர்களில் ஒருவரான ஜெப் ஓய் அரசுக்கு எதிரான அனல் பறக்கும் கருத்துக்களை தனது வலைத் தளத்தில் வெளியிட்டார்.அதனால் அவருக்கு டிஏபி கட்சி சார்பில் தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க...http://www.adhikaalai.com/index.php?/en/செய்திகள்/உலகம்/மலேசிய-முன்னாள்-பிரதமர்-வலைப்பதிவு-எழுதுகிறார்

ஜனாதிபதியின் அரசுப் பயணத்தில் மகன் முறைகேடு?

ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் மகன் ராஜேந்திரசிங் ஷேகாவாத். இவர் மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் பிரதீபா பாட்டில் லத்தீன் அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது அவருடன் சென்றிருந்தார்.
பிரதீபா பாட்டில் மெக்சிகோ சென்றபோது அவருக்கு மெக்சிகோ அதிபர் பெலிப்கால்டரன் விருந்து கொடுத்தார். அப்போது ஷெகாவத்துக்கு மிக முக்கிய பிரமுகர் வரிசையில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த விருந்திற்கு வரவில்லை. இதனால் ஜனாதிபதியுடன் சென்ற அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க..http://www.adhikaalai.com/index.php?/en/செய்திகள்/இந்தியா/ஜனாதிபதியின்-அரசுப்-பயணத்தில்-மகன்-முறைகேடு

சென்னை - இந்தியாவின் இரண்டாவது சிலிகான் பள்ளத்தாக்கு!

இந்தியாவின் ஐ.டி. தலைநகராக சென்னை மாறத் தொடங்கி இருக்கிறது. இதுநாள் வரை சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு வரும் பெங்களூரூக்குப் போட்டியாக சென்னை களம் இறங்கி இருக்கிறது. அதற்கான எல்லா கட்டமைப்பு வசதிகளுடன் சென்னை திகழ ஆரம்பித்துவிட்டது.

இந்தியாவில் உள்ள 10 முன்னணி ஐ.டி. ஏற்றுமதி நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் சென்னையில் செயல்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஐ.டி. நிறுவனங்கள் இல்லை. விப்ரோ, டிசிஎஸ், காக்னிசன்ட், இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான நிபுணர்களுடன் தனது தொழிலை சென்னையில் நடத்தி வருகிறது.

மேலும் மின்ட்ரி, போலாரிஸ், பட்னி,ஹெக்ஸாவேர், டெக் மஹேந்திரா போன்ற நிறுவனங்கள் சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் தனது வியாபார எல்லை நீட்டித்துக் கொண்டே போகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆனால் அதன் மிகப் பெரிய தயாரிப்பு பணிகள் எல்லாம் சென்னையில்தான் நடைபெறுகிறது.

"சென்னையில் மட்டும் எங்களுக்கு 6 நிறுவனங்கள் உள்ளன. இதில் 23 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சென்னை நகரில் இதுவரை நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம். இன்னும் சிலமாதங்களில் சிறுசேரியில் 70 ஏக்கர் பரப்பளவில் 21 ஆயிரம் பணியாளர்களுடன் எங்களின் பணியைத் தொடங்க இருக்கிறோம்" என்கிறார் டிசிஎஸ்-இன் செய்தித் தொடர்பாளர்.

உலகத்தின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஐ.டி. நிபுணர்களைக் கொண்ட நகரமாக விளங்க இருக்கும் சென்னை நகரில் மஹேந்திரா நிறுவனம் 25 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ளது.

விப்ரோ நிறுவனத்தில் மொத்தம் 75 ஆயிரம் பணி இடங்கள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பணியாளர்கள் இருப்பதாகக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் சென்னை பொறுப்பாளார். இந்த எண்ணிக்கை பி.பி.ஓ. பணிகளை சேர்க்காதது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 35 ஆயிரமாக்க திட்டமிட்டுள்ளது விப்ரோ.

இதே சம அளவு எண்ணிக்கையில் செயல்படுகிறது காக்னிஸன்ட் நிறுவனம். உலக அளவில் தனது நிறுவனத்தின் பணிகளில் 40% -யை சென்னையில்... தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?/en/இலக்கியம்/கட்டுரை/சென்னை-இந்தியாவின்-இரண்டாவது-சிலிக்கான்-பள்ளத்தாக்கு

வழக்குகளை ரத்து செய்ய முடியாது : குஷ்பூவுக்கு நிதானம் தேவை - உயர்நீதி மன்றம்

பல்வேறு கோர்ட்டுகளில் நடிகை குஷ்பு மீதுள்ள 26 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது, இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் நேற்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அனைத்து வழக்குகளையும் எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு `எய்ட்ஸ்' விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் பேசிய பேச்சு தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும், பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 26 கோர்ட்டுகளில் அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த 26 வழக்குகளையும் ரத்து செய்யவேண்டுமென்று, குஷ்பு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இதுதவிர, மேட்டூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டுமென்று குஷ்பு இன்னொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். குஷ்பு சார்பில் சீனியர் வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடுகையில், `ஒருவரை குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் பேசினால் மட்டுமே அவதூறாக அமையும் என்றும், ஆனால், குஷ்பு பேசிய பேச்சு அவதூறாகாது' என்று குறிப்பிட்டார். `எய்ட்ஸ்' விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இல்லை என்று வற்புறுத்தி வாதாடினார்.

அவதூறு வழக்குகள் தொடர்ந்தவர்களின் சார்பில் வக்கீல்கள் கே.பாலு, அனந்தநாராயணன், ரூபர்ட் பர்னபாஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். `பேசியதில் தவறில்லை, புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி, புரியாதவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று இழிவுபடுத்தி பேசிய குஷ்பு விமர்சித்து கூறியுள்ளார்' என்று அவர்கள் வாதாடுகையில் குறிப்பிட்டனர்.

நேரடியாக தமிழ் பெண்களை அவதூறாக பேசியுள்ளார் என்றும், அவர் ஒரு நடிகை தானே தவிர, மருத்துவ ரீதியானவர் அல்ல என்றும், இப்படிப்பட்டவர் கூறிய கருத்து எதிர்காலத்தில் சமுதாயம் ஒரு தவறான போக்கிற்கு ஆளாகிவிடும் என்று வற்புறுத்தி வாதாடினார்கள். ஆகவே, இந்த 26 வழக்குகளையும் ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டனர். மேலும், எந்த கருத்துக்களையும் கூறக்கூடாது என்று மேட்டூர் கோர்ட்டு நிபந்தனை விதித்தும், அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்றும் வற்புறுத்தி வாதாடினார்கள்.

குஷ்பு மீதான 26 வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

குஷ்பு பேசியது அவதூறாக எடுத்துக்கொண்டால் கூட, பல கேள்விகளை காணும் நிலையில்தான் வழக்கு உள்ளது. அவர் சொன்ன கருத்துக்கள் நல்ல நோக்கத்தில் பேசப்பட்டதா, எந்த சூழ்நிலையில் பேசப்பட்டது, எந்த நோக்கத்திற்காக பேசப்பட்டது என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டும்.

சாட்சி விசாரணையின்போது தான் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கும். ஆகவே, அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கோர்ட்டு உத்தரவினால் அவர் கைது செய்யப்படாமல் இருக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு விதிவிலக்கு அளிக்கும்போது, இந்த விஷயம் பற்றி ஏதும் பேசக்கூடாது என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையை அவர் கடைபிடிக்க தவறிவிட்டார்.

மேலும், சர்ச்சை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். நீதிமன்றங்களையும், சட்டங்களையும் இழிவாக பேசி பேட்டி அளித்துள்ளார். இதுபோன்று பேசும்போது அவர் நிதானத்தை கடைபிடிக்க தவறிவிட்டார். பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசவேண்டும் என்பதில்லை. இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

இந்திய பண்பாடு, தமிழ் பண்பாடுக்கு எதிராக மோசமாக, அவதூறான கருத்துக்களை ஒருவர் தெரிவிக்கும்போது, அதனால் பாதிக்கப்படும் நபர் இந்த கருத்துக்களினால் தான் புண்பட்டுவிட்டதாக புகார் தரும்பட்சத்தில், அதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. அதே சமயம் வழக்கின் தன்மை குறித்தும், சூழ்நிலை குறித்தும் ஆராய வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. மாஜிஸ்திரேட்டு வழக்கு தொடர்பாக விமர்சிக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்த பிறகும், குஷ்பு தன்னால் கட்டுப்பட்டு இருக்க முடியவில்லை. இவர் மீது வெவ்வேறு கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆகவே, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம். ஆகவே, இந்த வழக்குகள் அனைத்தையும் எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். அக்கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

ஒரே மேடையில் கலைஞர் - ஜெயலலிதா : நடிகர் சங்கம் ஏற்பாடு

தமிழக அரசியலின் இருதுருவங்களான முதல்வர் கலைஞர் கருணாநிதியையும், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமர வைத்து விழா நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ் சினிமாவின் 75-வது வருட பவளவிழாவையொட்டி, சென்னையில் மிக பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம், சென்னையில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் ரூ.3 கோடியே 12 லட்சம் கையிருப்பில் உள்ளது. நடிகர் சங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிப்பு பயிற்சி கல்லூரி வருகிற ஜுலை அல்லது ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும். மும்பையில் நடிகர் அனுபம் கேர் மிகச் சிறப்பான முறையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை நடத்தி வருகிறார். அமெரிக்கா, கனடாவில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேருகிறார்கள். அதுபோன்று தரமான நடிப்பு கல்லூரியை தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கும்.

இப்போது கையிருப்பில் உள்ள பணத்தை தொடாமலே நடிகர் சங்கத்துக்கு, புதிய கட்டிடம் கட்டப்படும். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களை மட்டும் சினிமாவில் நடிக்க வைக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டிருக்கிறோம்.


தமிழ் சினிமாவின் 75-வது வருட பவளவிழாவை சென்னையில் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.

மலேசியா-சிங்கப்பூரில் நடைபெற்றதை போன்று மாபெரும் நட்சத்திர கலைவிழாவை சென்னையில் நடத்த தீர்மானித்திருக்கிறோம். இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்திருக்கிறோம்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

முன்னதாக, நலிந்த நடிகர் நடிகைகள் 50 பேருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்கத் துணைத்தலைவர் மனோரமா, செயலாளர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை, இணை செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், நடிகர்கள் சத்யராஜ், முரளி, கே.ரித்திஷ், எஸ்.எஸ்.சந்திரன் சார்லி, கே.ராஜன், நடிகைகள் மும்தாஜ், விந்தியா, சத்யபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

April 30, 2008

தொழிலில் இறங்கும் பாலிவுட் நடிகைகள்

கதாநாயகர்கள் மட்டும்தான் தொழில் அதிபர்களாய், பெரிய வர்த்தகர்களாய் வலம் வரவேண்டுமா? முடியாது. ‘நாங்களும் தொழிலில் ஜெயித்துக் காட்டுவோம்’ என களம் இறங்கி இருக்கிறது பாலிவுட் நடிகைகள் கூட்டம்.
மிதுன் சக்கரவர்த்தி, ஷாருக்கான், சுனில் ஷெட்டி ஆகியோர் வியாபாரத்துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அவர்களுக்கு கடும் போட்டியாய் களத்தில் இருப்பவர்கள் சுஷ்மிதாஷென், பிரீத்திஷிந்தா மற்றும் ஐஸ்வர்யாராய்.

சுஷ்மிதா ஷென் 2006-லேயே ஒரு தொழில் முனைவோராய் மாறிவிட்டார். மிகப்பெரிய பிரமாண்ட அளவில் கொல்கத்தாவில் ஒரு பெரிய வணிக வளாகத்தை நடத்தி வருகிறார். பார், கேளிக்கை அரங்கு என மக்களின் பொழுது போக்கு ரசனைகளை பணமாக்கும் தொழிலில் இறங்கி இருப்பவர் சுஷ். தன்னை ஒரு நடிகை என்று சொல்வதை விட ஒரு தொழில் முனைவோர் என்று சொல்வதில்தான் பெருமைப்படுகிறேன் என பல முறை கூறி இருக்கிறார்.

இதோடு மட்டுமில்லாமல் சினிமா தயாரிப்பு, இயக்கம் எனும் பணிகளிலும் அவர் தீவிரமாய் செயல்படுகிறார். "ராணி லட்சுமிபாய் - தெ வாரியர் குயின்" எனும் படத்தில் நடிகை, தயாரிப்பளர் மற்றும் இயக்குனர்.

ஐபிஎல்-2020 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை விலைக்கு வாங்கி மைதானங்களில் வலம் வருகிறார் பிரீத்தி ஷிந்தா. "நான் எப்பொழுது எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெறுவேன். இது 2008. பெண்கள் தீவிரமாக தொழிலில் இறங்கவேண்டும், சினிமாவில் நடிப்பது என்பது வேறு. ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவது என்பது வேறு என்கிறார் அவர்.

அமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யாராய் அவர்களின் குடும்ப நிறுவனமான AB கார்ப்பரேசனுக்காக மீண்டும் சினிமா தயாரிக்கும் பணியில் இறங்க இருக்கிறார்.

ரவீனா டான்டான் தன்னுடைய கணவரின் சினிமா வியாபரத்துக்கு பெருந்துணையாக உள்ளார்.

டிவிங்கில் கண்ணா மும்பையில் வெற்றிகரமான இண்டீரியர் டெக்கரேசன் தொழிலை நடத்தி வருகிறார்.

இப்படி கேமராவுக்கு முன்னால் நடித்துக் கொண்டிருந்த பாலிவுட் நடிகைகள் தொழில் அதிபர்களாய் அவதாரம் எடுத்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

சட்டசபையில் வீசிய "நர்கீஸ்" புயல்

சட்டசபையில் இன்று "நர்கீஸ்' புயல் குறித்து ருசிகர விவாதம் நடைபெற்றது.
சட்டமன்றத்தில் இன்று பால் வளம், கால்நடை மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால் பேசிக்கொண்டிருந்தார். கடல், துறைமுகம் தொடர்பாக அவர் பேசிக்கொண்டிருந்த போது அதிமுக உறுப்பினர் பி.கே. சேகர்பாபு எழுந்து ஒரு ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார்.

வங்கக் கடலில் உருவான புயலுக்கு "நர்கீஸ்' என்று பெயர் சூட்டப்பட்டது. பழம் பெரும் இந்தி நடிகை நர்கீஸ். அவர் மிகவும் அமைதியானவர் என்று கூறப்படுகிறது.

கலையுலகில் பலரையும், பெரிதும் கவர்ந்த அந்த நடிகையின் பெயரை புயலுக்கு தேர்வு செய்தது சரியா? புயலுக்கு பெயர் சூட்டுவதை யார் முடிவு செய்வது? இந்த புயல் சின்னத்தால் வேகமாக காற்று வீசி உள்ளது. இதனால் அரசுக்கு மின்சாரம் கிடைத்ததா? என்று சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.

அப்போது துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி குறுக்கிட்டு, இந்த புயலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் பெயர் சூட்டி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு இதற்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது: புயலுக்கு நர்கீஸ் பெயரை வானிலை நிபுணர்கள்தான் சூட்டி இருக்கிறார்கள். இந்த புயலுக்கு நர்கீஸ் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் புயல் அமைதியாக போய் விட்டது.

இந்த புயல் சின்னத்தால் காற்று பலமாக வீசியதன் மூலம் தினமும் அரசுக்கு ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடையலாம் என்றார் ஆற்காடு வீராசாமி. இந்த ருசிகர விவாதத்தால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

April 29, 2008

ரவுடிகளின் பிடியில் தமிழகம் : சென்னையில் மட்டும் 800 பேர்

என்கவுன்ட்டர்-துப்பாக்கிச் சூடு-கைது...என ரவுடிகளுக்கு எதிரான போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம்; மறுபுறத்தில் அரசியல் பலத்துடன் வளர்ந்து கொண்டிருக்கிறது ரவுடிகள் ராஜ்ஜியம். சமீபத்திய புள்ளி விவரம் நம்மை அதிகமாகவே அதிர வைக்கிறது. தமிழகம் முழுக்க 5000 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 800 பேர் கூடாரம் போட்டிருக்கிறார்கள்.

இந்த மாதத்தில் மட்டும் 4 என்கவுன்ட்டர்கள். கடைசியாக போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானவன் திருச்சி 'பாம்' பாலாஜி( 28.04.08) . சென்னையில் ஏப்ரல் 11-ல் தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பிரபல ரவுடிகளை சென்னை, அயனாவரத்தில் வைத்துச் சுட்டுத் தள்ளியது போலீஸ்.
மிகப்பெரிய தீவிரவாதியான நவீன் என்பவனை ஏப்ரல் 19-ல் கொடைக்கானலில் வைத்து போட்டுத் தள்ளினர். இப்படி இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 என்கவுன்ட்டர்கள்.

சென்னையில் உள்ள 800 ரவுடிகளில் 'ஏ பிளஸ்' கிரேடு பட்டியலில் இடம் பெற்றுள்ள தாதாக்கள் 46 பேராம். 'ஏ பிளஸ்' என்றால் அவர்களின் நெட்வொர்க் தமிழகம் முழுவதும். சென்னையில் இருந்தபடியே மாநிலம் முழுக்க தங்கள் ஆட்களை வைத்து ‘தொழில்’ நடத்தி வருபவர்கள்.

சென்னைக்கு அடுத்தபடியாக ரவுடிகள் பதக்கம் பெறும் நகரமாக மதுரை திகழ்கிறது. அங்கு 500 பேர் ஆட்டம் போடுகிறார்களாம். அதற்கு அடுத்தபடியாக சேலம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி என ஒவ்வொரு நகரத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா வருகிறர்கள். இவர்களுக்கு பக்க பலமாய் இருப்பவர்கள் அரசியல் புள்ளிகள்.

‘ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் பல்வேறு அமைப்புக்கள் இருப்பது மாதிரி (மகளிர் அணி, விவாசாயிகள் அணி) ரவுடிகளுக்கு என்றும் பெயர் சூட்டப்படாத அணி செயல்படுகிறது. தாதாக்களின் துணை இல்லாமல் இன்று அரசியல் நடத்துவது ஒரு சிரமமான காரியமாகவே கருதுகின்றனர்’ என்று கூறுகிறார் ஒரு அரசியல் பிரபலம்.

ரவுடிகளின் ராஜ்ஜியத்தை அழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளை இன்னும் இந்தப் பிரிவுக்கான போலீசாரின் எண்ணிக்கை போதவில்லை என்று தெரிவிக்கிறார் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி.

"சென்னையின் முக்கியமான ரவுடிகளின் பட்டியலை எல்லாம் தயார் செய்துவிட்டோம். அந்தப் பணியை நாங்கள் கச்சிதமாக முடித்துவிட்டோம். எனவே இனிமேல் எங்களுக்கு சிரமம் இருக்காது. 2007 ஜூலை 30-ல் வெள்ளை ரவியை சுட்டுக் கொன்ற பின் எல்ல ரவுடிகளுக்கும் உதறல் ஏற்பட்டது. உயிர் பயம் தலை தூக்க ஆரம்பித்தது. சென்னையை விட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்" என்கிறார் அவர்.

2006-ல் 5 என்கவுன்ட்டர்கள், 2007-ல் 4 என்கவுன்ட்டர்கள் இப்படி ரவுடிகளுக்கு எதிராக போலீசாரின் வேட்டை தீவிரமாகியது. இதனால் சிறிது காலம் அடங்கி ஒடுங்கி இருந்தனர். இப்பொழுது மெதுவாக தலை தூக்க ஆரம்பித்து விட்டனர்.

"சென்னை நகரத்தில் எப்பொழுது ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்ததோ அப்பொழுதே ரவுடிகளின் தொழிலும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது. நில மோசடி, கட்டப் பஞ்சாயத்து என கோடிக் கணக்கில் பணம் புரளும் தொழிலில் காலூன்ற ஆரம்பித்தனர். இதில் 'ஏ பிளஸ்' ரவுடிகளின் கைவரிசை அரசியல் புள்ளிகளின் துணையுடன் ஓங்க ஆரம்பித்தது. அதிகார வர்க்கமும், அடியாட்கள் பலமும் ஒன்றாக கை கோர்த்ததால் அப்பாவி மக்களின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. பலரும் இதில் முதலீடு செய்யவும், விற்கவும், வாங்கவும் பயப்படத் தொடங்கினர்" என்கிறார் மற்றொரு காவல்துறை அதிகாரி.

திண்டுக்கல் பாண்டியன், மாலைக்கண் செல்வம், தட்சிணாமூர்த்தி, ராஜேந்திரன், காதுகுத்து ரவி, பங்க் ராஜு, கேட் ராஜேந்திரன், பினு, மார்க்கெட் சிவா, பன்னீர் செல்வம் மற்றும் சுகு என்ற சுகுமார் இவர்கள் எல்லாம் பலே ரவுடிகள். இவர்கள் அனைவரும் குறைந்தது 3 முதல் 4 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார் அந்த அதிகாரி. இவர்களின் முக்கியத் தொழில் கட்டப்பஞ்சாயத்து. ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவை.

போலீசாரின் வேட்டைகளுக்கு இடையிலும், ரவுடிகளின் ஆட்டம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது எனபதுதான் பொதுமக்களின் புலம்பல். என்ன செய்யப போகிறது அரசும், காவல் துறையும்?

"கற்பழிப்பு" தலைநகராய் டெல்லி : 4 மாதங்களில் 330 சம்பவங்கள்

இந்தியத் தலைநகர் டெல்லி கற்பழிப்பு சம்பவங்களின் தலைநகராய் மாறிவருகிறது. இந்த ஆண்டின் கடந்த 4 மாதங்களில் மட்டும் 330 கற்பழிப்பு மற்றும் மானபங்கச் சம்பவங்கள் நடந்துள்ளன. கற்பழிப்பு சம்பவங்கள் மட்டும் 121 ஆகவும், மானபங்க சம்பவங்கள் 210 ஆகவும் கடந்த 4 மாதங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8 சிறுமிகள் உடபட 14 பெண்களை கற்பழிப்பு செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்பழிப்பு கொடுமைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளில் 90 % பேரை கைது செய்திருப்பதாகவும், கற்பழிப்பில் ஈடுபடும் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டோருக்கு அறிமுகமானவர்களாகவும் உள்ளனர் என்று டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில்(2007) மட்டும் 581 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 92.8 % குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் 2005- ஆம் ஆண்டில் 685 கற்பழிப்புகள் நடந்துள்ளன.

2007 ஆம் ஆண்டில் கற்பழிப்புக்கு உள்ளானவர்களில் 68 % பெண்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். 26 சதவீதத்தினர் மட்டுமே 10 வகுப்புக்கு மேல் படித்தவர்கள். 80% க்கும் மேற்பட்டவர்கள் வறுமை நிலையில் உள்ளவர்கள் என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தக் கற்பழிப்பு கொடுமைக்கு இந்த மாதம் இரண்டரை வயது குழந்தை ஒன்று பலியாகி இருப்பதுதான் உச்சகட்ட சோகம். மேலும் 2 சிறுமிகளை காருக்குள் வைத்தே குதறிய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. ஒரு சாலைப் போக்குவரத்து போலீசார்கூட தன் நண்பரின் மகளை கற்பழித்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம்-ஒரு பண்ணை உரிமையாளரால் தன்னிடம் பணி புரிந்த ஒரு சிறுமியை அவள் குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து கற்பழித்திருக்கிறார். அதேபோல் காது கேளாத, வாய் பேச முடியாத நிலைமையில் உள்ள அப்பாவிச் சிறுமியை ஒரு பஸ் டிரைவர் கடித்து குதறி இருக்கிறார்.

அதேபோல் ஏப்ரல் 16-ல் கணவன் உடபட 4 ஆண்கள் ஒன்று சேர்ந்து கூட்டுக் கற்பழிப்பு நடத்தி உள்ளனர் 40 வயது பெண்மணியை!

இப்படி தினம் தினம் டெல்லியில் கற்பழிப்பு காட்சிகள் அரங்கேறிய வண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.

April 28, 2008

திருமாவளவனை கைது செய்ய உத்தரவு

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தொல்.திருமாவளவனுக்கு சிதம்பரம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரக்குடி பகுதியில் கடந்த 11.05.1997-ல் தேர்தல் பிரசாரத்தின்போது விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அத்து மீறி பேசியதாகவும் திருமாவளவன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சிதம்பரம் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் இந்த வழக்கு நீதிபதி பிரகாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு விசாரணைக்காக தொல்.திருமாவளவன் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி பிரகாசன் உத்தரவிட்டார்.

April 27, 2008

"மணிவண்ணன் மகனுடன் ஆடையில்லாமல் நான்" - ஸ்டெபி ஆவேசம்

சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் ஸ்டெபி (வயது 20). சினிமா உதவி டைரக்டர். நேபாளி, சரோஜா உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் மகன் ரகு வண்ணன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கூறினார். ``ரகுவண்ணன் காதலித்து திருமணம் செய்து விட்டு ஏமாற்ற முயற்சிப்பதாக கூறிய அவர் அதற்கு ஆதாரமாக இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை வெளியிட்டார்.
அதோடில்லாமல் ரகுவண்ணன் தரப்பில் இருந்து டைரக்டர் சீமான், அவரது தம்பி நகேந்திரன் ஆகியோர் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவதாக தன்னை மிரட்டுவதாகவும், தன்னுடைய படத்தை வேறு வாலிபருடன் நெருக்கமாக இருப்பதாக கிராபிக்ஸ் செய்து வருவதாக திடீர் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
ஸ்டெபி கொடுத்த புகார் குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் முத்தமிழ் மணி விசாரித்து வருகிறார். நாளை (28-ந் தேதி) விசார ணைக்கு ஆஜராகும்படி, ரகுவண்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே தன் மீதும் தம்பி நகேந்திரன் மீதும் ஸ்டெபி கூறிய குற்ற சாட்டு குறித்து டைரக்டர் சீமான் கூறியதாவது:-

நான் டைரக்டராக உயர்ந்ததற்கு மணிவண்ணன் குடும்பத்தார் தான் காரணம். நானும் அவர்களது குடும்பத்தில் ஒருவன். ரகுவை சிறுவயதில் இருந்தே தூக்கி வளர்த்தவன். அவனை பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்தவன். அவன் மீது அதிக அக்கறை கொண்டவன் என்னுடைய தம்பி படத்தில் ரகு உதவி இயக்குனராக இருந்தார்.

என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி டைரக்டராக உயர்ந்துள்ள துரையிடமும் `நேபாளி' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். படபிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம் லயோலா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேசன் பட்டப்படிப்பு படித்து வந்த ஸ்டெபி என்ற பெண் கல்லூரி கிளாசில் டைரக்ஷன் பற்றி தெரிந்து கொள்ள வந்துள்ளார். 25 நாட்களே பணியாற்றி உள்ளார். அப்போது ரகுவுடன் ஸ்டெபி நட்பாக பழகி உள்ளார்.
ஸ்டெபியின் நடவடிக்கை சரியில்லாததால் துரை அவரை நிறுத்திவிட்டார் ரகு பிரபலமான டைரக்டரின் மகன் நிறைய சொத்து உள்ளது வளைத்து போட்டால் வசதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் ரகுவுக்கு அடிக்கடி போன் செய்து உணர்ச்சியை தூண்டி மயக்கி உள்ளார்.

நட்பு முறையில் வீட்டிற்கு அழைத்து சென்று மயக்கும் வகையில் பேசி அவருடன் நெருக்கமாக இருப்பதை சுவீட் மெமொரிஸ் என்று கூறி கேமராவில் வீடியோ எடுத்துள்ளார். ரகுவும் தோழிதானே என்று விட்டு விட்டார். ரகுவை வளைப்பதில் ஸ்டெபியின் குடும்பத்தினர் முழு ஈடுபாடு காட்டி உள்ளார். அடிக்கடி ரகுவை வீட்டிற்கு அழைத்து பொண்ணுடன் பழக விட்டுள்ளனர்.

ஸ்டெபியின் நடவடிக் கைகள் தவறாக இருப்பதை உணர்ந்த ரகு அவரிடம் பழகுவதை நிறுத்தி விட்டார். தற்போது சுவீட் மெமொரீஸ் என அவர் எடுத்த படங்களை காட்டி ரகுவையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுகிறார். திருமணம் நடந்து விட்டது என கூறி மணிவண்ணனின் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து ரகளையில் ஈடுபடுகிறார். நட்பாக பழகியது உண்மை அவர்களுக்கு முறைபடி திருமணம் நடைபெறவில்லை. ஒரு வீட்டில் மருமகளாக வாழ நினைக்கும் பெண் தானும் அவரும் நெருக்கமாக இருக்கும் படங்களையும், வீடியோக்களையும் பத்திரிகையில் வெளியிட துணிவாளா? இது பெண் இனத்துக்கே இழிவு. ஒரு குடும்பத்தை அசிங்கப்படுத்தி, அவமான படுத்தி, பணம்பறிக்கும் முயற்சியே தவிர எப்படி சொல்வது.

நான் 50 படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிகிறேன் என இவர் கூறியிருக்கிறார். ஒருடைரக்டரிடம் 5 உதவி இயக்குனர்கள் இருப்பார்கள், ஒரு உதவி டைரக்டர் 5 இயக்குனர்களை வைத்திருப்பது இப்போதுதான் கேள்விபடுகிறேன். இவரது உண்மை நிலையை இதை வைத்தே அறியலாம்.

எங்களுக்கு எவ்வளவோ வேலைகள் உள்ளது. இவர் முகத்திற்கு ஆசிட் வீசுவதா எங்கள் வேலை. படம் இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் இவரது படத்தை வைத்தா கிராபிக்ஸ் செய்ய போகிறோம். இவரது முகத்தை பார்த்தால் கிராபிக்ஸ் படம் கூட இவரிடம் ஒட்டாது.

இப்படி பேசுவதில் இருந்தே ஸ்டெபி எப்பேர்ப்பட்ட கிரிமினல் என்பது தெரிந்து விட்டது. இப்படியெல்லாம் பொய்யான, தகவல்களை வெளியிட்டு மோசடி செய்வது இவருக்கு கைவந்த கலை. இவர்கள் குடும்பமே சரியில்லை அவர்கள் தூண்டுதலால் இப்படி நடந்து கொள்கிறார்.

ஸ்டெபியின் அப்பா என்று அறிமுகப்படுத்தி கொண்ட நபர்தான் குடிபோதையில் என்னை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி மிரட்டினார். இது பற்றி போலீஸ் விசாரணையின் போது தெரிவிப்பேன். ரகு ஸ்டெபியை திருமணம் செய்து கொண்டான் என கூறுவோர் திருமண படத்தை வெளியிட வேண்டியது தானே! எதை எதை எல்லாமோ ஆதாரமாக காட்டுவோரிடம் தாலி கட்டும் படம் இல்லை என்றால் அவர்கள் திருமணம் நடக்கவில்லை என்பது தானே உண்மை.
ஸ்டெபியின் கீழ்த்தரமான நடிவடிக்கையால் ரகுவண்ணனின் தாய் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இடைவிடாமல் அழுது கொண்டே உள்ளார். ரகுவை வளைப்பதற்காக ஸ்டெபி குடும்பத்தினர் இப்படியொரு காரியத்தில் இறங்கி உள்ளது வேதனையை தருகிறது. புகாரை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம். இவ்வாறு டைரக்டர் சீமான் கூறினார்.

சீமான் கூறியது பற்றி ஸ்டெபியிடம் கேட்டபோது :-தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க.. http://www.adhikaalai.com/index.php?/en/செய்திகள்/தமிழகம்/-மணிவண்ணன்-மகனுடன்-ஆடையில்லாமல்-நான்-ஸ்டெபி-ஆவேசம்