June 27, 2009
June 12, 2009
தமிழா... உன் கதி இதுதானா?
புல் முளைத்திருக்கிறது அங்கே. தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று அந்த ரகசியத்தைத் தாங்கியிருக்கிறது. கரை மீறிச் சீறியடிக்கும் அலைகள் மட்டுமே சாட்சியம். வல்லமை வாய்ந்த அவ்வலைகள் கூட தொலைதூர இல்லத்துக்கு செய்தியைக் கொண்டுபோக முடியாது...' என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!
விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜ பக்ஷேவின் ராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடெல்லியிலிருந்து கொழும்புக்குப்பறந்தனர். ராஜபக்ஷேவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின.
ஒரே நாளில் பல்லா யிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது! சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின.
இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் 'நாடி ஜோசியம்' சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச்வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், 'இரவு' என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.
'என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது. என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்?
எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!' என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். 'பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது.
அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!' என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா?
முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திரிகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா?
ராணுவத்திலும் காவல் துறையிலும் தமிழர் கணிசமாக இடம் பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.'பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது.ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய ரத்த வெறியே காரணம்!' என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர்.
நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்தயாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956-ல் அறிவிக்கப் பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்?
பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958-ல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்?
யாழ்ப்பாணத்தில் 1974-ல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன் நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977-ல் வெறித்தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்?
'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண் டாடப்பட்ட யாழ்நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக் கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27-ம் நாள் 18 தமிழரும் குரூர மாகக் கொல்லப்பட்டது யாரால்? சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல் களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது.
புத்த பூமியை ரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி... ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான ராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
வீடிழந்து, உறவிழந்து, மனஅமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற ராணுவத்தின் முன்மார் பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும்.
'புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?' என்று பண்டார நாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்ஷேவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்... அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும்.
காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித்தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப் பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ஷே வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத்தமிழரின் இதயரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும். பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும்.
ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ஷே சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவ டிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், ஃபிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக 'நூரம்பர்க் விசாரணை' நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்' உருவானது. 'உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே' என்று தெளிவுபடுத்துகிறது. 'சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்' என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.
'ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ஷே அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்ஷேவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!
வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!'சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும்.
வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!' என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள். ஈழத்தில் வாடும் தமிழரும், புலம் பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம்.
ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். 'அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்' என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடெல்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது.
அதனால்தான் அது ராஜபக்ஷேவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட்பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்!
- தமிழருவி மணியன்
Posted by
தமிழன்
at
2:30 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, manuneedhi, Navanee
June 10, 2009
அந்த மாவீரன் இனி திரும்பி வரப்போவதில்லையென்பதே உறுதியானது!
நம்பினாலும் நம்ப மறுத்தாலும் அந்த மாவீரன் இனி திரும்பி வரப்போவதில்லையென்பதே உறுதியானது! : அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம். சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம்.
எனக்கு எதுவும் தெரியாது.
இன்று இந்த உலகமும், சிங்களவர்களும், இந்தியாவும் அச்சப்படும் விடயம் -
தி.வழுதி
Courtesy : Puthinam
Posted by
தமிழன்
at
3:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : puthinam, Navanee
May 26, 2009
ஈழம்தான் அற்றுப்போய்விட்டதா அல்லது காலம்தான் அற்றுப்போய்விட்டதா
ஈழத்தின் தீயூழ்!மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக் கொண்டு, இனம் புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது! "ஈழம் எங்கள் தாகம்'' என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய் நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதாண்டு காலம் சிம்ம சொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டு விட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன!
ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள் : "அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன் பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போர்க் களங்களில் தென்படுவான்! அங்கே போய்ப் பாருங்கள்!''
ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு மகனை ஈழத்தாய் ஒருத்தி அந்த மண்ணின் விடுதலைக்காகச் சுமந்தாள்!
இலங்கை மக்கள் ஒரே நாட்டின் மக்கள் என்று முழங்குகிறாரே ராஜபட்ச! சிங்கள ராணுவக் குண்டு வீச்சுக்கு அஞ்சி ஈழ மக்கள் ஊர்களைக் காலி செய்து கொண்டுபோன பிறகு, அந்தப் பகுதியிலே கூட அன்று; அந்தத் தமிழர்களின் வீடுகளிலேயே சிங்களவர்களைக் கொண்டு வந்து ராணுவப் பாதுகாப்போடு குடியேற்றுகிறாரே ஏன்? வஞ்சகம்தானே!
தமிழினத்தை முற்றாக அழித்து, அந்தப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளாக்கும் அவருடைய வஞ்சகச் செயலை அறிந்தும், மன்மோகன் சிங் - கருணாநிதி கூட்டணி அரசு அவருக்கு வகைதொகை இல்லாமல் போர்க் கருவிகளை வழங்கியதே! போரால் அவருடைய கருவூலம் வறண்டு விட்டது என்று வகைதொகை இல்லாமல் கடன் கொடுத்து உதவியதே!
வாலி வலிமையானவன்; நேரியவன்; பெருந்தன்மையானவன்; ஆனால் தன்னால் வாலில் கட்டி அடிக்கப்பட்ட ராவணன் தன்னுடைய நட்புக்காக இறைஞ்சுகிறான் என்று இரங்கி, தீயவனோடு நட்புப் பூண்டான். ராவணனின் நட்பால் வாலிக்கு எந்தப் பயனுமில்லை. ஆனால், சிற்றினச் சேர்க்கை காரணமாக ராமனின் அம்புக்கு இரையாக நேரிடவில்லையா? ராவண வதம் நிகழ்வதற்கு வாலி வதம் நிகழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லையா?
வலிமையான நாடு இந்தியா! பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று மாபாதகம் புரிகின்ற ராஜபட்சவுடன் சேராத கூட்டு ஏன் சேர வேண்டும்? அந்த நீச ஆட்சிக்கு ஆயுதங்கள் ஏன் வழங்க வேண்டும்? இந்த நீச நட்பால் இந்தியா மானக்கேடடைந்தைத் தவிர பெற்ற பயன் என்ன?
நடந்து முடிந்த தமிழினப் பேரழிவு குறித்துச் சிங்களக் காடையர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தமிழினத்தைச் சின்னா பின்னப்படுத்தி விட்டதாகக் குதூகலிக்கிறார் ராஜபட்ச! மண்டியிட்டு மண்ணை முத்தமிடுகிறார்!
அந்தக் குறியீட்டின் மூலம் அவர் சிங்கள இனத்திற்குச் சொல்லும் செய்தி இந்த மண்ணை உங்களுக்கு மட்டுமே உரித்தாக்கி விட்டேன் என்பதுதானே!
சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது; ஒருபான்மைதான் உண்டு என்று வெற்றிக்குப் பிந்தைய பாராளுமன்றத்தில் விளம்பி இருக்கிறார் ராஜபட்ச! அதனுடைய பொருள் இதுவரை இருந்து வந்த, இடையில் கேள்விக்குள்ளான, ஒற்றையாட்சி முறையை மீண்டும் உறுதிப்படுத்தி விட்டேன் என்பதுதானே!
ஈழப் பிரிவினைக்குக் கூட பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, முடிந்தால் நிறைவேற்றிக் கொள் என்பது ராஜபட்சவின் அறைகூவல்!
அப்படி முடியாதென்றால் "ஜனநாயகத்தில் நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்'' என்று சமாதானமாகப் போய்விட வேண்டும் என்பது ராஜபட்சவின் அறிவுரை!
அதை விட்டு விட்டு உரிமை பற்றிப் போராடினால் சிங்கள ராணுவம் சுட்டுப் பொசுக்கும்; அதற்குச் சுடத் தெரியவில்லை என்றால் இந்தியாவைத் துணைக்கழைத்துக் கொள்ளும் என்பது ராஜபட்சவின் எச்சரிக்கை.இலங்கையை ஆண்ட அத்தனை சிங்கள அதிபர்களும் தங்கள் தங்கள் பங்குக்குத் தமிழின அழிப்பு வேலையை மேற்கொண்டவர்கள்தான்! ஆனால் கடைசியாக ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் அந்தப் பகுதி சிக்கிக் கொண்டதுதான் பேரவலம்! இந்தியா அந்தக் கசாப்புக் கடைக்காரருக்கு வெட்டுக் கத்தி கொடுத்து உதவியது அதை விடக் கொடுமை!
அந்த வெட்டுக் கத்தியைக் கொடுக்க விடாமல் தடுத்து, ஆடுகளைக் காக்கும் அதிகார பீடத்தில் கருணாநிதியைத் தமிழ் மக்கள் கீழேயும் மேலேயும் ஏற்றி வைத்திருந்தும், இவரும் சேர்ந்து கொண்டு "ஐயோ! ஆடுகள் வெட்டப்படுகின்றனவே! என்று நீலிக் கண்ணீர் வடித்துக் குரலெடுத்து ஒப்பாரி வைத்தது, வஞ்சகத்திலெல்லாம் வஞ்சகம்!
ஈழத் தமிழினத்திற்கு எதிராக நினைக்கவே நெஞ்சு நடுங்கும் கொடுஞ்செயல்கள் ஜெயவர்த்தன காலத்திலேயே தொடங்கி விட்டன! ஆனால் அவருடைய கழுத்தை அப்போதைக்கப்போது பிடித்துக் கட்டுக்குள் வைக்க இந்திரா காந்தி போன்ற வீராங்கனைகளும், எம்.ஜி.ஆர். போன்ற பொன்மனச் செம்மல்களும் ஆட்சிகளில் இருந்தார்கள்! ஈழப் போராளிகளை ராணுவ ரீதியாக வளர்த்தவர்கள் அவர்கள்தான்!
முதல் மூன்று ஈழப் போர்களிலும் மூன்றில் இருபகுதிச் சிங்களவர்கள் மூன்றில் ஒரு பகுதித் தமிழர்களிடம் மண்ணைக் கவ்வியதன் விளைவாக தமிழீழம் அறிவிக்கப்படாத விடுதலை பெற்ற நாடாகச் செயல்பட்டது!
ஈழத்தில் போராளிகளிடம் தரைப்படை இருந்தது; சிறு கப்பல்களும், விமானங்களும் இருந்தன. ஈழத்தின் 16,000 சதுர கிலோ மீட்டர் பரப்புப் போராளிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அவர்களின் நாடு ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக இல்லையே தவிர மற்ற எல்லாம் நடந்தேறின. இதற்கிடையே ரணில் விக்கிரமசிங்க வரவேண்டிய இடத்திற்கு ராஜபட்ச வருவதற்குத் தங்களை அறியாமலேயே ஈழப் போராளிகள் உதவி விட்டார்கள்!
எத்தனையோ பிழைகள் செய்திருக்கிறார்கள்! யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போலத்தான் அது! இவர்களின் இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவையும், இத்தனை லட்சம் தமிழர்கள் அழிவதற்குச் சிங்களவர்களுக்கு உளவு சொல்லி, ஈழப் பிழைப்புக்குப் பதிலாக ஈனப் பிழைப்புப் பிழைத்த கருணாவையும் நினைத்துப் பாருங்கள்! மலத்தை மிதித்து விட்டது போன்ற அருவருப்பு ஏற்படவில்லையா?
ரணிலுக்குப் பதிலாக ராஜபட்ச வந்தது தமிழின அழிவுக்கு முதற் காரணம்.
சோனியாவின் "ரப்பர் முத்திரை' என்று புகழ்கொண்ட மன்மோகன் சிங் பிரதமரான காலமும், சொல் வேறாகவும், செயல் வேறாகவும் வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான காலமும் ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தி அமைந்து விட்டதை ஈழத்தின் தீயூழ் என்றுதான் வள்ளுவ மொழியில் சொல்ல வேண்டும்!
இவ்வளவு கொடுமைகளுக்கும் ஈழம் கசாப்புக் கடை ஆனதற்கும் ராஜபட்ச முதற் காரணம்! ஆயுதம் வழங்கிய மன்மோகன் சிங் துணைக் காரணம்! மன்மோகன் சிங்கை முடக்குகின்ற அதிகாரம் முற்றாக வாய்த்திருந்தும், அந்த அதிகாரத்தை உரிய வழியில் பயன்படுத்தி இந்தியாவின் அயல் விவகாரக் கொள்கையையே மாற்றுவதை விடுத்து, நாளைக்கொரு மனிதச் சங்கிலி, ஒருவேளை தொடங்கி மறுவேளை வரும்வரை உண்ணாநோன்பு என்று பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த கருணாநிதி இன்னொரு துணைக் காரணம்!
ராஜபட்ச என்னும் முதற் காரணமும் மன்மோகன் சிங், கருணாநிதி என்னும் துணைக் காரணங்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பிணமாவதற்கும் நான்காம் விடுதலைப் போர் முடிவுக்கு வரவும் காரணங்களாயின!
நான்காம் விடுதலைப் போர் முடிவுற்று விட்டது. அதனுடைய பொருள் ஐந்தாம் விடுதலைப் போர் அடுத்துத் தொடங்கும் என்பதே!
நான்கோடு எண்ணிக்கை முடிந்துவிட்டதாக ராஜபட்சவோ, மன்மோகன் சிங்கோ, கருணாநிதியோ, கருணாவோ கருத மாட்டார்கள். நான்கின் வளர்ச்சி ஐந்து என்பதை அவர்கள் அறியாதவர்களில்லை! எந்த விடுதலைப் போராட்டமும் இலக்கை அடையாமல் முற்றுப் பெற்றதாக வரலாறு கிடையாது.
ஒருவேளை அந்த ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்! ஈழத்தின் தேவைக்கு ஏற்பக் காலத்தால் வடிவமைக்கப்பட்டவன்தானே பிரபாகரன்! ஈழம்தான் அற்றுப் போய்விட்டதா? அல்லது காலம்தான் அற்றுப் போய்விட்டதா?
உலகின் மூத்த இனம், சிந்து சமவெளி நாகரிகம் கண்ட இனம், தெய்வப் புலமைத் திருவள்ளுவனைப் பெற்ற இனம் நாதியற்றுப் போக இயற்கை அனுமதிக்காது!
Posted by
தமிழன்
at
11:00 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee, Nawin
May 19, 2009
பிளாஸ்டிக் சர்ஜரி பிரபாகரன் மாண்டார் (வீடியோ) தேவைப்படும்பொழுது மீண்டும் புதுப்பொலிவோடு வருவார்
Posted by
தமிழன்
at
2:52 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee
May 18, 2009
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:செ.பத்மநாதன் சேனல் 4 சற்றுமுன்-செவ்வி வீடியோ
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
Posted by
தமிழன்
at
12:10 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, adhikaalai.com, channel 4, Navanee
May 16, 2009
எழுத்தாளர் பாமரன் : அதிகாலைக்கான பிரத்தியேக நேர்முகம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14384&lang=ta&Itemid=107
தமிழினம் அறுந்து/தோற்றுப்போன தேர்தல் – 2009 : நாக.இளங்கோவன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14398&lang=ta&Itemid=163
தமிழர்கள் படுகொலை: போராட தயாராகுமாறு பழ.நெடுமாறன் அழைப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14410&lang=ta&Itemid=52
எழுத்தாளர் பாமரன் : அதிகாலைக்கான பிரத்தியேக நேர்முகம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14384&lang=ta&Itemid=107

ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் செவ்வி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13896&lang=ta&Itemid=107
காசில்லை கனவுகள் மட்டும் நிறைந்து கிடக்கும் இப்பிஞ்சுகளுக்கு உதவுங்கள்!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14371&lang=ta&Itemid=185
சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணியப்போவதில்லை–ரோஹித்த போகொல்லாகம
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14401&lang=ta&Itemid=52
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு : சிறிலங்கா இராணுவ கேணல் கைது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14395&lang=ta&Itemid=52
Posted by
தமிழன்
at
9:22 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee
May 10, 2009
செத்துமடியும் நம் தமிழினம் வீடியோ
Posted by
தமிழன்
at
12:44 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Yahoo
May 02, 2009
கட்டாயம் ஜெயிக்கணும்! சாப்பிட வழி பண்ணணும்!! இவருக்கு ஓட்டளியுங்கள்!!!
http://manuneedhy.googlepages.com/KattayamJaikanum.pdf
Posted by
தமிழன்
at
3:34 PM
0
comments (நெற்றிக்கண்)
தேர்தல் திருவிழா! தெளிந்திடு தமிழா!!
Posted by
தமிழன்
at
1:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, adhikaalai.com, Navanee
May 01, 2009
ஒவ்வொரு தமிழனும் அவசியம் காணவேண்டிய காணொளி
Posted by
தமிழன்
at
1:55 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, அதிகாலை.காம், நன்றி : நெருடல், நவநீ
April 28, 2009
இதோ இன்னொரு பிரபாகரன்! அன்றிருந்த சார்லஸ் ஆன்டனி இதோ மீண்டும்...
சார்லஸ் ஆன்டனி - 20 ஆண்டுகள் கழித்து சிங்கள அரசாங்கத்துக்கு மீண்டும் ஒரு புலி சொப்பனமாக மாறியிருக்கும் பெயர்! அன்று இருந்த ஆன்டனி, பிரபாகரனின் ஆத்மார்த்தமான நண்பன். இன்று இருக்கும் ஆன்டனி, உயிருக்குயிரான மகன்! சார்லஸ் ஆன்டனியைப் பிரபாகரனால் மறக்க முடியாது. 25 ஆண்டுக்கு முன்னால், சாவகச்சேரி காவல் நிலையத்தைக் கைப்பற்றிய சம்பவம்தான் ஜெயவர்த்தனே அரசாங்கத்துக்குப் புலிகள் மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. ஒரு பஸ்ஸைக் கடத்தி, அதில் சார்லஸ் தலைமையிலான புலிப் படை காவல் நிலையத்தை நோக்கி வந்தது. இயந்திரத் துப்பாக்கிகள் முழங்க உள்ளே நுழைந்த சார்லஸ், அங்கு ஆயுத அறை எங்கே இருக்கிறது என்று தேடினார். ஒரு ரிவால்வர், 28 துப்பாக்கிகள், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் என இருந்ததை அள்ளிக்கொண்டு வெளியேறினார்கள். சார்லஸைக் குறிவைத்துத் தேடியது சிங்கள ராணுவம். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் மீசாலை என்ற இடத்தில் அவர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைக்க… போய் இறங்கினார்கள்.பனை மரங்களுக்குள் ராணுவம் பதுங்கியிருக்க, வெட்டவெளியில் மாட்டிக்கொண்டனர் சார்லஸூம் இரண்டு போராளிகளும். முதல் குண்டு நெஞ்சில் பாய்ந்தது. உயிரோடு தான் பிடிபடக் கூடாது என்று நினைத்த சார்லஸ், ‘என்னைக் கொன்றுவிடு. எந்தப் புலியையும் ராணுவம் உயிரோடு பிடிக்கக் கூடாது’ என்று சக போராளிக்கு உத்தரவு போட்டார். அவன் சம்மதிக்கவில்லை. மீண்டும் கட்டாயப்படுத்தி கெஞ்சினார் சார்லஸ். கடைசியில் அழுதுகொண்டே சுட்டான் அவன். ‘பிரபாகரன் இந்த அளவுக்கு உடைந்துபோய் நான் பார்த்ததில்லை’ என்று கிட்டு சொல்லும் அளவுக்கு அந்த மரணம் பிரபாகரனைப் பாதித்தது. ஆன்டனியை மறக்க முடியவில்லை அவரால். இரண்டு ஆண்டுகள் கழித்து தனக்கு மகன் பிறந்தபோது, ‘சார்லஸ் ஆன்டனி’ என்று பெயர் வைத்தார். மீசாலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சார்லஸ் மீண்டு வருவான் என்று சிங்கள ராணுவம் கனவிலும் நினைத்திருக்காது. சாதாரணமாக சைக்கிளில் போய் இயக்கத்தை வளர்த்த பிரபாகரன், இன்று விமானத்தை வைத்து சிங்கள அரசுக்குச் சிக்கல் கொடுத்துவரும் குடைச்சலின் பின்னணியில், அவரது மகன் சார்லஸ் இருப்பதாகச் சந்தேகப்படுகிறது சிங்கள அரசு.
விமானக் குண்டுவீச்சில்தான் சார்லஸின் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. இன்று சார்லஸூக்கு 23 வயது. அவர் பிறந்த காலங்களில்தான் சிங்கள ராணுவம் அதிகமாக விமானப் படைத் தாக்குதலைத் தொடங்கியது. இதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று புலிகள் மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். ‘குண்டுவீச்சில் இருந்து பாதுகாப்பு’ என்ற புத்தகம் போட்டு வீடு வீடாகக் கொடுத்தார்கள். அம்மா மதிவதனியுடன் பெரும்பாலும் பதுங்கு குழிகளில்தான் வளர்ந்தார் சார்லஸ். புதுக்குடியிருப்புப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்தார். அட்வான்ஸ் லெவல் வரை படித்ததாகச் சொல்கிறார்கள். அதாவது, இங்கு நம் ப்ளஸ் டூ போல. ஜெனரல் சர்டிஃபிகேட் ஆஃப் எஜுகேஷன் என்று இதற்குப் பெயர். இதை அவர் முடிக்கும்போது இலங்கையில் போர்ச் சூழல் குறைந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சிக் காலம் ஆரம்பமானது. எனவே, தன்னை உயர் படிப்புக்காக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்க மகன் ஆசைப்பட்டுக் கேட்கிறார். ‘அது பாதுகாப்பானதல்ல’ என்று பிரபாகரன் நினைக்கிறார். கொழும்பில் படிக்க அனுப்பலாமா என்ற யோசனை. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வாங்கி இருக்கிறார்கள்.ஆனால், அதையும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், மகனது படிப்புக்குத் தடை போட பிரபாகரனுக்கு மனமில்லை. காரணம், சார்லஸின் டெக்னாலஜி ஆர்வம். சின்ன வயதில் இருந்தே எதையாவது பிரித்து மேய்வதில் ஈடுபாடு காண்பித்திருக்கிறார். போர்ப் பயிற்சிகளைவிட, போர் ஆயுதங்களைக் கையாளுவது, அது பற்றி படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது. முதலில் ஏற்பட்டது கப்பல் ஆர்வம். படகுகள் கட்டும் பிரிவில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சில மாதங்களில் கம்ப்யூட்டரைக் கையாளும் ஆர்வமாக அது மாறியிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஆஸ்திரேலியாவில் இருந்து கம்ப்யூட்டர் படித்த 8 பையன்கள் கிளிநொச்சிக்குள் வந்திறங்கினர். அவர்கள் சார்லஸூக்குக் கற்றுக்கொடுத்தனர்.
அந்த எட்டு பேரும் பிரபாகரனால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள். கிளிநொச்சியில் இருந்து படிப்பில் ஆர்வமான பையன்களை பிரபாகரன் தேர்ந்தெடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியா அனுப்பிவைத்தாராம். அவர்கள், அங்குள்ள மொனாஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் படித்ததாக சிங்களப் பத்திரிகை ‘தி பொட்டம்லைன்’ எழுதுகிறது. சார்லஸூக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்த ஆசான்கள் இவர்
கள்தானாம். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சார்லஸ் வலம் வந்தார். அடுத்ததாக, கிளிநொச்சிக்கு வந்து இறங்கியதுதான் இப்போது கலக்கிக்கொண்டு இருக்கும் வான் படை. இளம் நீல நிற வரிப்புலிச் சீருடையும் ‘வானோடி’ என்று பொறிக்கப்பட்ட சின்னத்தையும் பொருத்தி ஒரு படை கட்ட வேண்டும் என்பது பிரபாகரனின் பல்லாண்டுக் கனவு. அவருடன் அப்பையா அண்ணை என்று ஒருவர் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறார். அவர்’நான் விமானம் செய்யப் போறேன்’ என்று சில வேளைகளில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அப்போது, எல்லாரும் அவரைக் கிண்டல் செய்வார்களாம். கடற்படையில் வேலை பார்த்த தனது நண்பன் டேவிட் மூலமாக ‘கடற்புலி’களை ஆரம்பித்த பிரபாகரன், வான் படைக்கு ஒரு நண்பரைத் தேடினார். சங்கர் கிடைத்தார். கனடாவில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். ஏர் கனடாவில் வேலை பார்த்தவர். முதல் கட்டமாக பழைய விமானம் வாங்கப்பட்டது.மாவீரர் துயிலுமிடம், வற்றாப்பளை அம்மன் கோயில் ஆகிய இடங்களில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விமானத்தை வைத்துப் பூத் தூவினார்கள். ‘பிரபாகரன் வைத்திருக்கும் விமானம் பூ தூவத்தான் லாயக்கு’ என்று சிங்களத் தளபதிகள் காமென்ட் அடித்தார்கள். ‘விமானங்களை வாங்குவதற்கு முன் இயக்குவதற்கு ஆட்களைத் தயார் பண்ணுங்கள்’ என்று சங்கர் சொல்ல, ஒரு டீம் பிரான்ஸ், மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட நாட்டில் கொண்டுபோய்விட வேண்டியது எங்கள் வேலை. அங்கேயே ஏதாவது வேலை பார்த்துப் படித்து முடிக்க வேண்டியது உங்களது சாமர்த்தியம்’ என்ற அடிப்படையில் 20 பையன்கள் அனுப்பப்பட்டார்கள். வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களும் உதவ, படிப்பை முடித்து 2002-ல் இந்தக் குழு கிளிநொச்சி வந்து இறங்கியது. இவர்கள் விமானப்படை சம்மந்தமான தொழில்நுட்பங்களை சார்லஸூக்கு ஊட்டினார்கள். அவர்களுக்கு தீனியாக சிறு விமானங்கள் தயாராக இருந்தன. ஒரு ஆள் மட்டும் பயணிப்பவை. செக்கோஸ்லோவேகியா நாட்டின் ‘சிலின் இசட் 143 எல்’ ரக விமானங்கள் இவை. நாங்கள் புலிகளுக்கு விற்கவில்லை என்று அந்த நாடு மறுக்கிறது. வாங்கியதை அப்படியே பயன்படுத்தாமல், அதில் பல மாறுதல்களைச் செய்துள்ளார்களாம். இங்குதான் சார்லஸின் முக்கியப் பங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். இப்போது வான் படையை ரத்னம் மாஸ்டர் என்பவர் வழிநடத்தி வருகிறாராம். சிறு விமானத்தை அதிக பயன்பாடு உள்ளதாக மாற்றும் வேலையை சார்லஸ் டீம் பார்த்து வருகிறது.
600 கி.மீ தூரம் போய் திரும்பத்தான் அதில் எரிபொருள் நிரப்ப முடியும். அதாவது ஒரு முறை கொழும்பு போய்விட்டுத் திரும்ப முடியும். விமானத்தில் குண்டு நிரப்பிக்கொண்டு போய் ஓர் இடத்தைத் தாக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்போது, அவ்வளவு எடையைக் கொண்டுசெல்ல இந்த விமானங்கள் வசதிப்படவில்லையாம். எனவே, சுமார் 240 கிலோ எடைகொண்ட குண்டுகளைப் பொருத்தும் பலம்கொண்டதாக மாற்றும் காரியங்களை சார்லஸ் டீம் பார்த்ததாம். அதே போல், ரேடாரின் கண்ணுக்குப் படாமல் தப்பிக்கவைக்கவும் இவர்களது குழு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த தாக்குதலுக்காக இரவு 8.30-க்குக் கிளம்பிய புலிகளின் விமானத்தை 9.20-க்குத்தான் சிங்களப் படை அறிய முடிந்திருக்கிறது. அதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் சண்டை அதிகமாக நடக்கும் புதுக்குடியிருப்புக்குத் தென் மேற்குப் பகுதியில் இருந்துதான் விமானங்களைக் கிளப்பியிருக்கிறார்கள்.
ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது. இன்னொன்று வருமான வரிக் கட்டடத்தின் 3-வது மாடிக்கும் 12-வது மாடிக்கும் மத்தியில் புகுந்தது. 240 கிலோ குண்டு வெடித்ததில் அந்தக் கட்டடமே தீப்பிடித்து எரிந்தது. புலிகள் வைத்திருக்கும் விமானத்தை ‘குரும்பட்டி மெஷின்’ என்று சிங்களவர்கள் கிண்டல் செய்வார்களாம். வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் தேங்காய்க்குக் குரும்பு என்று பெயர். அந்தக் குரும்பை வைத்து இதுவரை எட்டு முறை குடைந்தெடுத்துவிட்டார்கள். அதுவும் குண்டுகளைக் கட்டிக் குதிக்கும் வான் கரும்புலிகள் வந்த பிறகு அச்சம் அதிகமாகி இருக்கிறது. ‘பலவீனமான இனத்தின் பலமான ஆயுதம்தான் கரும்புலிகள்’ என்று பிரபாகரன் சொல்கிறார். ‘உன்னுடைய எதிரி உனக்கு எந்தக் கஷ்டத்தைக் கொடுத்தானோ, அதையே அவனுக்குத் திருப்பிக் கொடு’ என்பது இந்தக் கரும்புலிகளின் லட்சிய முழக்கமாம். ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்று வான் புலிகளின் சட்டையில் எழுதப்பட்டிருக்கிறது. அதுதான் கண்டம்விட்டுக் கண்டம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
Posted by
தமிழன்
at
10:56 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: www.adhikaalai.com, நன்றி : http://www.nankooram.com
ஒருத்தி தாலியறுத்ததால் ஓராயிரம் தமிழச்சிகள் தாலியறுக்கவேண்டுமா? காணொளி
Posted by
தமிழன்
at
2:42 PM
0
comments (நெற்றிக்கண்)
April 25, 2009
காணொளி -"ஈழமும் இங்குள்ள அரசியல்வாதிகளும்" : திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்
Posted by
தமிழன்
at
10:50 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: courtesy : adhikaalai.com, Navanee, Nawin
April 24, 2009
தமிழினத்துரோகி கருணாநிதி : பொங்கியெழும் தமிழின மக்கள்-வீடியோ
Posted by
தமிழன்
at
3:02 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee
ஈழம்:போகும்வழியில் தமது உறவுகளை புதைத்துச்செல்லும் நம் தமழினம்:வீடியோ
Posted by
தமிழன்
at
2:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee
April 20, 2009
இன்றைய சூடான செய்திகள்
சீறிப்பாயும் சீமான் சிங்களப்பெண்ணைக் கதாநாயகியாக்கியது சரியா? S.Ve.சேகர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13041&lang=ta&Itemid=163
இலங்கை தமிழினப்படுகொலை : பாதுகாப்பு வலைய பரிதாபங்கள் - வீடியோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13072&lang=ta&Itemid=52
கருணாநிதி CNN-IBN பேட்டி பற்றி ஜெயலலிதா : CNN-IBN பேட்டி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13103&lang=ta&Itemid=62
கருணாநிதி பேட்டி:அந்தர் பல்டி : சோ, சுப்ரமணியம் சுவாமி, அபிசேக் சிங்வி Video
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13102&lang=ta&Itemid=62
ஜெயலலிதா பிரதமராக முழு ஆதரவு - வைகோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13082&lang=ta&Itemid=52
பிரதமராவதற்கு சரத்பவார் தகுதியானவர் : ஜெயலலிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13081&lang=ta&Itemid=52
பிரபாகரன் என் நல்ல நண்பர் - என்.டி.டி.வி NDTV திரித்துவிட்டது : கருணாநிதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13083&lang=ta&Itemid=52
தோனியின் சகோதரர் பிஜேபி-யில் இணைந்தார் : வீடியோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13096&lang=ta&Itemid=52
பிரபாகரன் என் நண்பர்:நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு:கருணாநிதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13047&lang=ta&Itemid=55
Posted by
தமிழன்
at
10:35 PM
0
comments (நெற்றிக்கண்)
April 07, 2009
ஏப்ரல் 08 ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் வைகோ
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நாளை ஏப்ரல் 08-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் வைகோ
Posted by
தமிழன்
at
10:50 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee, Nawin




