January 29, 2008

பறவைக் காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்படும்

அன்புமணி : ராமதாஸ்இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய மேற்குவங்க மாநிலத்தில் அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கியிருப்பதாகவும், திங்கட்கிழமை வரை 21 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அது கட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே, கோழிகளைக் கொல்வது தொடர்பாக பெரும் முறைகேடுகளும், அரசியல்வாதிகளின் நெருக்குதல்களும் அதிகரித்திருப்பதால், மேற்கு வங்க மாநில சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஊழியர்கள் கோழிகளை கொல்வதை நிறுத்திவிட்டதாக பிபிசியின் கொல்கத்தா செய்தியாளர் தெரிவிக்கிறார். ஒரு இடத்தில் ஐந்து கோழிகளைக் கொன்றால், ஐம்பது கோழிகளைக் கொன்றதாக சான்றிதழ் கொடுக்குமாறு தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான கோழிகளைக் கொன்றதாகக் கணக்குக் காட்டினால் அதற்கான இழப்பீட்டுத் தொகையும் அதிகமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால், கிராம மக்களே கோழிகளைக் கொல்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

ஒருவரின் 44 வயதில் மனச்சோர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், மனிதர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு குறித்த சமீபத்திய ஆய்வின் முடிவுகள். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று சுமார் எண்பது நாடுகளில் 20 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், மனிதர்களில் பெரும் பாலானவர்களுக்கு, 40 வயதாகும் போது மனச்சோர்வு அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக 44 வயதில், இந்த மனச்சோர்வு மிக அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆண், பெண், ஏழை, பணக்காரன், திருமணம் ஆனவர், ஆகாதவர், குழந்தைகளை பெற்றவர், பெறாதவர் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி எல்லாதரப்பினரையும், அவர்கள் 40 வயதை கடந்த பிறகு, இந்த மனச்சோர்வு பாதிப்பதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் இப்படி மத்திய வயதாகும்போது மனச்சோர்வால்பாதிக்கப்படுவதற்கு பல காரணங்களையும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

January 02, 2008

திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவகங்கை செழியன்

மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்
மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார். அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தேர்தல்கள் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பாகிஸ்தானில் இம்மாதம் எட்டாம் தேதி நடைபெற இருந்த பொதுத் தேர்தல்கள் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோ ராவல்பிண்டியில் ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேற இருந்த நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு நாடெங்கும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளின் போது நாட்டில் பல வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு வாக்காளர் பட்டியலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் அனைத்துமே மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானின் தலைமை தேர்தல் அணையாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீகின் நவாஸ் பிரிவும் தேர்தல்கள் திட்டமிட்டபடி இம்மாதம் எட்டாம் தேதியே நடைபெற வேண்டும் என வலியுறித்து வந்தன. தேர்தல் பிரச்சாரத்தால் களைகட்டியிருக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த இரண்டு கட்சிகளும் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் அதிபர் முஷாரஃப் மற்றும் அவரது கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சுமத்தின. நாட்டில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை அனைத்துமுக்கிய எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன. தேர்தல் ஆணையம் தனது எண்ணப்படி நடக்க வேண்டுமென அரசு விரும்புவதாகவும், அதற்கேற்ற வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகவும், சுதந்திரத் தன்மையுடன் அது இயங்கவில்லை என்றும், அதனால் மக்கள் தேர்தல் ஆணையத்தை நம்புவதில்லை என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.