July 31, 2008

ரஜினி இரட்டை வேடம் : தமிழ் திரை உலகம் கண்டனம்

நடிகர் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் மன்னிப்புக் கோரி இருக்கும் செயலுக்கு தமிழ் திரை உலகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒக்கனேக்கல் தொடர்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பேசிய நடிகர் ரஜினி, ‘ஒக்கனேக்கல் திட்டத்துக்கு எதிராக இருப்பவர்களை உதைக்க வேண்டாமா? என்று ஆவேசப்பட்டார். அவரின் இந்த ஆவேசப் பேச்சு கன்னட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரஜினிக்கு எதிரான போக்கு கர்நாடகத்தில் தலைதூக்கியது. அவருடைய படங்கள் உட்பட எந்த தமிழ் படங்களையும் கர்நாடகாவில் திரையிடுவதில்லை என்று அங்குள்ளவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் (வெள்ளிக் கிழமை) ரஜினி நடித்த குசேலன் படம் உலகமெங்கும் நாளை திரையிட உள்ளது. ஆனால் பெங்களூரில் குசேலனை வெளியிட பெரும் எதிர்ப்புக் கிளம்பயது. ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே வெளியிடப்படும் என்று சில கன்னட அமைப்புக்கள் எச்ச்ரித்திருந்தன.
இதனை அடுத்து கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கன்னட மக்களிடம் மன்றாடி உள்ளார். ரஜினியின் இந்த மன்னிப்பு தமிழ் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி இருக்கிறது. இதுகுறித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறி இருப்பதாவது :-

"ரஜினி எதை தவறு என்று சொல்கிறார்? தமிழ்நாட்டில் உள்ள ஒக்கனேக்கலிலிருந்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வேண்டும் என்று தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தவறு என்று சொல்கிறாரா? தமிழ்நாட்டு ரசிகர்களை கவர இங்கே ஒரு பேச்சு; கன்னடர்களிடம் ஆதாயம் அடைய அங்கே ஒரு பேச்சா? ரஜினிகாந்தின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளமுடியாது" என்று கூறி உள்ளார். அதே போல் லட்சிய திமுக கட்சியின் தலைவரும், இயக்குநருமான விஜய டி.ராஜேந்தர் ரஜினிகாந்தின் மன்னிப்பு நடவடிக்கையை இரட்டை வேடம் என்று விமர்சித்துள்ளார். அவர்(ரஜினி) எப்பொழுதும் தன்னை கன்னடர் என்று காட்டிக் கொள்ளத் தவறியதே இல்லை. இதிலிருந்து அவரின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது என்று டி.ஆர்.தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தமிழ் அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

"என்னை மன்னித்து விடுங்கள்"- பணத்துக்காக பல்டி அடித்த ரஜினி

குசேலன் படத்தை நாளை பெங்களூரில் வெளியிட வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டுமென்றால் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று கர்நாடக ரக்க்ஷன வேதிகே எனும் அமைப்பு எச்சரித்திருந்தது. இதனை அடுத்து பணத்தை முக்கியமாக கருதும் ரஜினி குசேலனில் லாபம் சம்பாதிப்பதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஒக்கனேக்கல் குடிநீர் விவகாரம் தொடர்பாக சென்னையில் தமிழ் திரைப்பட சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது கன்னடர்களை தரக்குறைவாக ரஜினி பேசியதாக கூறி கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பு உண்டானது. இந்நிலையில் குசேலன் படத்தை கர்நாடாகவில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று கன்னட திரைப்பட சங்கத்தினருக்கு ரஜினி கடிதம் எழுதி இருந்தார். ஆனால் படத்தை வெளியிடுவதை, தடை செய்வதை நிறுத்துவதற்கு தங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று நடிகை ஜெயமாலா அதற்கு பதில் அளித்திருந்தார்.

இது தொடர்பாக கர்நாடக ரக்க்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் இன்று கூடி விவாதித்தனர். அப்பொழுது கன்னடர்களை தரக்குறைவாக பேசிய ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இல்லை என்றால் எந்தச் சூழ்நிலையிலும் குசேலன் படத்தை பெங்களூரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதனையும் மீறி குசேலன் படம் பெங்களூரில் திரையிடப்பட்டால் மிகப் பெரிய வன்முறை வெடிக்கும் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். கூட்டம் நடந்த பெங்களூர் திரைப்பட சம்மேளன அரங்கத்திற்கு வெளியே கூடியிருந்தவர்கள் ரஜினிகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு ரஜினி இன்று மாலை திடீர் பேட்டி அளித்தார். அதில், தான் தவறு செய்து விட்டதாகவும், எங்கே எப்படி பேசவேண்டும் என்பதை தெரியாமல் பேசிவிட்டதாகவும், இது சம்மந்தமாக கன்னட மக்களிடம் தகுந்த பாடம் கற்றுக் கொண்டதாகவும், எனவே கன்னட மக்கள் தன்னை மன்னித்து குசேலன் படத்தை பார்த்து, ரசித்து ஆதரவு தருமாறும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை பெங்களூரில் குசேலன் படம் திரையிடப்பட உள்ளது. சென்னை உண்ணாவிரத்த்தில் நரம்பு புடைக்க பேசிய ரஜினி இப்பொழுது வருமானத்துக்காக திடீர் பல்டி அடித்திருப்பது அவர் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பது நிரூபணம் ஆகி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை உண்ணாவிரதத்தில் சத்யராஜ் பேசி உசுப்பேற்றியதால் தன்னை தமிழின பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்காக ரஜினி பேசிய ஆவேசப் பேச்சை தமிழ் சமூகம் மறந்திருக்காது.
அந்தச் சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய கல்லாப் பெட்டியை நிரப்புவதற்காக கன்னடர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த தமிழகமே புனிதமடைந்து விடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் செய்திருக்கும் இந்த ஒரு சின்ன விஷயமே அவர் எப்படிப்பட்ட கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை தெளிவாக்கி இருப்பதாக தமிழ் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

July 30, 2008

உலக சினிமா என்ற போர்வையில் இன்னொரு ஏ.பி.நாகராஜனின் இந்துத்துவா சினிமா : மு.சிவகுருநாதன்


(இது தாமதமான பதிவாக இருந்தாலும் தவிர்க்க இயலா பதிவு)


தமிழ் சினிமா வெளியாவதற்கு முன்பு மீடியாக்கள் உருவாக்கும் எண்ணற்ற புனைவுகள், கதைத்திருட்டு, நீதீமன்ற வழக்கு போன்றவைகள் மூலம் மக்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டும் விளம்பர உத்தியாகவும் உலக சினிமா, தொழில்நுட்ப அசத்தல், பொருட்செலவு போன்ற இன்னபிற விளம்பரங்களுடன் வெளிவந்திருக்கிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' (அதிக பணம் செலவழித்து எடுக்கப்படும் சினிமா சிறந்த உலக சினிமா என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது).

10 அவதாரங்கள், 2 ஆண்டுகள் தயாரிப்பு, 70 கோடி செலவு (தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் 700 கோடி செலவில் ஜாக்கிசானை வைத்து மற்றொரு உலக சினிமாவை தயாரிக்கப்போகிறாராம். தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்!) செய்து தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் 'உலகநாயகன்' என தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ளும் கமல்ஹாசன், ஷங்கர் போன்றோரின் அரைவேக்காடு அயோக்கியத்தனத்திற்கு தானும் இம்மியும் குறைந்தவனில்லை என்பதை தனது முந்தைய குருதிப்புனல், ஹேராம் போன்ற படங்கள் ஊடாகவும் இதிலும் நிரூபித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை நடந்த சில சம்பவங்களுடன், 12 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களின் ஆதாரங்களைச் சேகரித்தும், எங்கள் கற்பனைகளைக் கலந்தும் அமைக்கப்பட்டுள்ளது" என்ற குறிப்போடு படம் தொடங்குகிறது. உலக உருண்டை வழியே உலக சினிமா உலக நாயகனின் கண்ணுக்குள் குடிபுகுகிறது. " உலகமெங்கிலும் உன்னை வென்றிட யாரு?" என்ற பாடல் ஒலிக்கிறபோது மேடையில் ஜார்ஜ் டபிள்யு புஷ் (கமலின் ஒரு அவதாரம்; பெருமாளின் ஒரு அவதாரமும் கூட,) டான்ஸே ஆடுகிறார். "இனி ஐ. நா-வும் உன்னை அழைக்கும் என்ற பைத்தியக்காரத்தனமும் வேறு. (ஐ.நா.ஆஸ்கார் விருது அளிக்கிற அமைப்பா என்ன?).
மணல் கொள்ளையன் (பி.வாசு.). "உலகத்தை ஒத்தை ஆளாக காப்பாற்ற நீ என்ன உலகநாயகனா? " என்று கேட்கும் போது வின்சென்ட் பூவராகவன் அசடு வழிய, "ஆமாம், நான் உலக நாயகன்தான்" என்று சொல்கிறார். முதல்வர் கருணாநிதி போன்ற பட்டம் விரும்பிகள் இவருக்கு இப்படத்தை அளித்து மகிழ்கிறார்கள். அதற்குப் பதிலாக கமல், 2004 டிசம்பர் 20-ல் தொடங்கி 26-ஆம் தேதி சுனாமியுடன் முடியும் கதையில், விஞ்ஞானி கோவிந்தராமசாமிக்கு கருணாநிதி, மன்மோகன்சிங், புஷ் சகிதம் பாராட்டுவிழாவில் இடம் அளித்து சொரிந்து கொள்கிறார். ஜெயலலிதா சுனாமியைப் பார்வையிடுகிறார். 2008-ல் 'தசாவதாரம்' கேசட் விழாவில் ஜாக்கிசானுடன் கருணாநிதி பங்கேற்றார். அதற்குப் பதிலுதவியா? இல்லை 4 ஆண்டு விஞ்ஞானிக்கு சிறைத்தண்டனையா?

"கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனா எனபது பிரச்சனை அல்ல. கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடக்கிறேனா இல்லையா என்பதுதான் பிரச்சனை" (சாய்பாபாவுடனான விழாவில் மு. கருணாநிதி) என்ற கருணாநிதியின் பேச்சுக்கு இணையாக படத்தின் இறுதியில் வரும் வசனம் ஒன்று. "நான் கடவுள் இல்லையின்னு எங்கங்க சொன்னேன். இருந்தா நால்லாயிருக்குன்னுதான் சொன்னேன்". (வருங்காலத்தில் பேருந்துகளில் எழுதி வைக்க பொன்மொழிகள் தயார்!).

"என் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! இந்தியர்களே!! (?!) என விளித்து கோவிந்தராஜ சுவாமிகள் சாமிக்கதை சொல்கிறார். "யேசுவும், அல்லாவும் இந்தியாக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் புகாத நூற்றாண்டு, சிவனும், விஷுனுவும் மோதி விளையாடா வேறு கடவுள்கள் இல்லாத காலம். அதனால் அவ்விரு கடவுள்களும் தம் பக்தர்கள் வாயிலாக தம்முள் மோதிக்கொண்ட நூற்றாண்டு " (12 ஆம் நூற்றாண்டு) என்ற கதை சொல்லலில் வரலாற்றுப் புரட்டும் அரசியல் சார்பும் வெளிப்படுத்தப்படுகிறது. இங்கு இன்னொரு ஏ. பி. நாகராஜனாக கமல்ஹாசன் அவதாரம் எடுத்து விஷ்ணுவின் திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார். சமண - பவுத்தத்தை துடைத்தெறிந்த சைவ - வைணவக் கூட்டணி, சமண - பவுத்தர்களை வேட்டையாடிக் கொன்று குவித்த வரலாற்று உண்மைகள் கவனமாக தவிர்க்க/திரிக்கபட்டுள்ளன. சைவ - வைணவ மோதல்கள் கூட உண்மையான மோதல்கள் அல்ல. அவை சிவன் (அ) பெருமாளின் திருவிளையாடல்கள். சைவ - வைணவர்களுக்குமான உண்மையான எதிரி பின்னாளில் வந்த இஸ்லாமியர்களும், கிருத்துவர்களுமே என்பதை தொடக்கத்திலேயே அடையாளம் காட்டி அந்தத் திசையில் படம் முழுக்க பயணிக்கிறது.

"சக நிகழ்வுகளின் கோர்வைதான் உலக சரித்திரம். உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்மந்தமுடையவை" என்றும் "ஓரிடத்தில் படபடக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் பிறிதோரிடத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு காரணமாக இருக்கக்கூடும்" என்ற காயாஸ் தியரியுடன் முடுச்சுப் போட்டு 12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் போன விஷ்ணு 2004-ல் உலகை அழிக்கும் கிருமியை அழிப்பதற்காக சுனாமியாய் வந்து உலகைக் காப்பாற்றியதாக திரைக்கதை அமைத்து காதில் பூ சுற்றி இந்துத்துவ கொடுங்கோன்மைக்கு அரியணை ஏற்றியிருக்கிறார் கமல். இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் சைவர்களுடன் விஷ்ணு-வுக்காக மோதிப் போராடி கடலில் விஷ்ணுவுடன் சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படுகிறான் ரங்கராஜ நம்பி. "வாய்ப்பேச்சில் வீரர்தான் வைணவர்" என்று மன்னனாலேயே பாராட்டப்பெற்று சிவமந்திரத்தை உச்சரிக்க மறுத்து வைணவ மந்திரத்தை உச்சரித்து கடலில் மூழ்கி உயிரைவிடுகிறான். "ரங்கராஜ நம்பி செத்தது சிவனும் செயலும் அல்ல. அந்த நம்பி நம்பியும் பிழைக்காமற்போனது விஷுனுவின் சூழ்ச்சியுமல்ல" என்று விளக்கமளிக்கிறார் கதை சொல்லியான விஞ்ஞானி. எல்லாம் பெருமாளின் திருவிளையாடல்! பின்பு 2004 சுனாமியாய் வெளியே வரும் வரை பல்வேறு சேஷ்டைகளில் ஈடுபடுகிறார் பெருமாள்.




ரங்கராஜ நம்பிக்கு முதல் கல்லடி ஒரு குழந்தையினுடையது. கமலுக்கு குழந்தைகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ தெரியவில்லை? குருதிப்புனலில் குழந்தைகளை அதுவும் " ஜாரே.." பாடிவரும் தேசபக்திக் குழந்தைகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்ப்பது போல காட்சி வைப்பார். " ஜாரே..." பாட்டு இங்கேயும் உண்டு. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கிருமியுடன் பெருமாள் அவதாரம் வரும் விமானம் இறங்கும் பின்னணியில் ஒலிக்கிறது இப்பாடல். என்னே! தேசப்பற்று! கூடவே மதப்பற்றும். "அமெரிக்க செப்டம்பர் 11 க்கு பிறகு தன்னை பயோ ஆயுத தற்காப்புக்குத் தயார்படுத்திக் கொள்கிற மும்மரத்தில் இருந்ததாம். "பாவம் - பாருங்கள்! அமெரிக்காவுக்கு வேறு வழியேயில்லை. உலகமெங்கும் பரவி வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பயோ ஆயுதம் மூலமே அமெரிக்கா தன்னை தற்காத்துக் கொள்ளமுடியும் என்று கதையளக்கிறார். புஷ்-ஆல் பாராட்டப்படும் விஞ்ஞானியொருவன் இப்படித்தான் பேசமுடியும். அமெரிக்காவின் பயோ வார் ஏதோ செப்டம்பர் 11-க்கு பிறகுதான் என்று சொல்வதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது.
தஞ்சை ராமசாமி நாயக்கர் மகன் விஞ்ஞானி கோவிந்த் ராமசாமி பயோ டெக்னாலஜியில் பி.ஹெச்.டி படித்தவர். ('ரா' அதிகாரி பல்ராம்நாயுடு பயாலஜியில் பி.ஹெச்.டி. என்கிறார்). ரங்கராஜ நம்பியின் மனைவி கோதை, நம்பி கடலில் மூழ்கியதும் தனது தாலியைக் கழற்றி வீச அது சிலையில் தொங்குகிறது. பிற்காலத்தில் அவளே ஆண்டாளாக "முகுந்தா முகுந்தா" பாடும் போது கிருஷ்ண அவதாரத்திலிருந்து கோவிந்த் இறங்கி வருகிறார். ('இருவர்' - படத்தில் மோகன்லாலின் மனைவியாகவும், காதலியாகவும் ஐஸ்வர்யா ராய் வருவார். அதுபோல இங்கு அசின்). அப்போதே கோவிந்தராஜன் - ஆண்டாள் சேர்க்கை முடிவாகிவிட்டது. (அப்போது ஒரு டூயட் வைத்து அசினின் வருத்தத்தைப் போக்கியிருக்கலாம்) பெருமாள், விவரமின்றி செத்துப்போன ரங்கராஜ நம்பிக்கு மாற்றாக மிகவும் விவரமான சூத்திர விஞ்ஞானியால் பதிலீடு செய்யப்படுகிறார்.




"ரா" அதிகாரி பல்ராம் நாயுடுவின் (இந்திரன் - சந்திரன் கமல்) தெலுங்கு பாசத்தின் வழி தமிழ்ப்பாசம் கிண்டலடிக்கப்படுகிறது. கோவிந்த் ஆங்கிலத்தில் பேச பல்ராம் நாயுடு, "தமிழ் எப்படி வாழும்?" என்று கேட்க, உங்கள மாதிரி தெலுங்குக்காரங்க யாராவது வந்து வாழ வைப்பாங்க, விடுங்க" என்கிறார். செல்போனில் தெலுங்குப் பாடல் ரிங்க்டோன். தன் உதவியாளர் தெலுங்கு என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுதல். கூரியர் ஆபீஸில் 'நரசிம்மராவ்' என்ற பெயரைக் கேட்டவுடன் தெலுங்கா? என்று கேட்டு 'கன்னடம்' என்று தெரிந்தவுடன் 'ரெண்டு லாங்க்வேஜ்க்கும் ஒரே ஸ்கிரிப்ட் தான்' என்று சமாளிக்கும் பல்ராம் நாயுடு. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? இதுவரையும் இனியும் தமிழை வாழவைக்கப் போகிறவர்கள் பிறர்தான் என்றா?

ஐ.எஸ்.ஐ. லஷ்கர் - அய். தொய்பா, அல் - கொய்தா, ஒசாமா பின்லேடன் போன்றவற்றை அடிக்கடி உச்சரிக்கும் பல்ராம் நாயுடு, சிதம்பரம் வைணவ மடத்தில் விசாரணை செய்யும் போது "மடத்தில் தப்பு நடக்காதா? என்று பொத்தாம் பொதுவாகக் கேட்டு வைப்பார். காமெடியன் இல்லாத குறையைப் போக்க கலிஃபுல்லாவை உயரமாகவும், வேற்று நாட்டு முஸ்லீம் போலவும் கேலிப் பொருளாகவும் ஆக்கி, விசாரணையில் பல்ராம்நாயுடு, "நீ என்ன, ஐ.எஸ்.ஐ. யா, லஷ்கர் அய் தொய்பா - வா, அல் கொய்தா-வா?" என்று கேட்பார்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார், என்றதும் "அதெல்லாம் ஒண்ணும் இல்லாம ஒரு மனுஷன் எப்படி எப்படி இருக்க முடியும்?' என்பார் நாயுடு. இங்கே ஒரு சின்ன திருத்தம், "மனுஷன்" என்பதை 'முஸ்லீம்' என்று மாற்றிக்கொள்ள வேண்டும்.

"ஏணி மாதிரி உயரமா இருக்கிறே. உன்பெயர் என்ன பின் - லேடரா?" என கலிஃபுல்லாவை கிண்டலடித்துக் கொண்டே, "எல்லோருமே டெரரிஸ்ட்தான்" எனச் சான்று வழங்கி, "200 பேரையும் (முஸ்லீம்கள்) புடிச்சு மசூதியில போட்டு கொஸ்டின் பண்ணு" என்று உத்தரவிடுகிறார் நாயுடு. அப்பாவிகளை இவ்வாறு கொடுமைப் படுத்துகிறார்களே என்று பார்வையாளர்கள் யாராவது வருத்தப்பட்டால் இறுதியில் அதற்கான காரணத்தை அறிந்து மிகவும் மகிழ்வார்கள். விசாரணைக்காக மசூதியில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லீம்கள் அனைவரும் சுனாமியில் தப்பிக்க, "நாம 200 பேரும் மசூதிக்குள் இல்லாது இருந்திருந்தால் இவங்க எல்லாரோடையும் சேர்ந்து நாமளும் மவுத்துதான். எல்லாம் அல்லாவோட கருணை" என்கிறார். இஸ்லாமியரான நாகேஷ். ஆனால் இவை நடப்பதே பெருமாளின் கருணையால்தான். கமலின் இந்துத்துவா சார்பு வெளிப்பட்டு முற்போக்குச் சாயம் வெளுக்கிறதல்லவா? இங்கே ஒரு இடையீடு : தமிழக சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகளிடம் அண்ணா நூற்றாண்டு பொது மன்னிப்பு அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தகுதியான கைதிகள் முஸ்லீம் என்பதால் நீதி மறுக்கப்படுகிறது. இங்கே இப்படி என்றால், இந்தியா முழுவதும் சொல்ல வேண்டியதில்லை. நிலைமை இவ்வாறிருக்க முஸ்லீம்கள், போலீஸ்/பெரும்பான்மையினர் கஸ்டடியில் இருப்பதுதான் அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பானது என்று சொல்ல வருகிறார்கள். வழக்கமான 'விஜயகாந்த்' பாணி தமிழ்ப் படங்களிலிருந்து, பெரிதும் சிலாகிக்கப்படும் மணிரத்தினம் படங்கள் வரை இஸ்லாமியரைத் தீவிரவாதிகளாவே காட்டும்போக்கு தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இப்படத்தில் ஃபிளேட்சர் என்ற வில்லனொருவன் இருந்தும் முஸ்லீம் காமெடியனாக சித்தரிக்கப்பட்ட போதிலும் விசாரணை, சிறை, என்கவுண்டர் என்று அனைத்து வகையிலும் அலைக்கழிக்கப்படுதல் இந்துத்துவா விடுக்கும் எச்சரிக்கையாகவே கொள்ள முடியும். வைணவ மடத்திற்குள் ஃபிளேட்சர் வருகை, அங்கு நடக்கும் அசம்பாவிதம், கொலைகள் போன்றவற்றாலும் வைணவர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தமுடியாது. ஆனால் மணல் லாரியில் விபத்துக்குள்ளாகி வில்லனால் கடத்தப்படும் அப்பாவி முஸ்லீம் குடும்பம், தீவிரவாதி முத்திரை குத்தப்படுவதையும், அதனால்தான் உயிர்பிழைத்தோம் என்று சந்தோஷிப்பதையும் படமாக்குவது கூட மோடி வகை பாசிசந்தான்.




இங்கு தலித்தின் உடலும், பெயரும் கூட கேலிப்பொருளாகிறது. படத்தில் வருகிற கபிலனின் பாடல் :




"மை போல உடம்பு இருக்க மனசெல்லாம் வெள்ளையையா அருவா மீசை வச்ச அய்யனாரு பிள்ளையய்யா"




Funny Name (வசனம் : கமலஹாசன்) என்று சிறுவனால் கிண்டலடிக்கப்படுகின்ற வின்சென்ட் பூவராகவனின் கருப்பு நிறத்தை குறிப்பிடுகிறார்கள். தலித் என்றால் இவ்வளவு கருப்பாகவும், விகாரமுமாகத்தான் இருக்க வேண்டுமா? மண்ணுக்கான போராட்டத்திலும், பூவராகவனின் இறப்புக்கும் கபிலனால் புலம்பப்படுகின்ற வைரமுத்து பாணி கவிதைகள் திராவிட இயக்கபாணியை கிண்டலடிப்பவை. அவை இங்கு தலித்தியத்தின் மீது வெறுப்பை கக்கப் பயன்படுகிறது. (இருவர் படத்தின் இறுதியில் மோகன்லால் (எம்.ஜி.ஆர்) மறைவிற்கு பிரகாஷ்ராஜ் (மு.க.) இறங்கற்கவிதை வாசிக்கும் போது திரையில் இறுதி ஊர்வலம் நடக்கும்).

மணல் மாபியாவின் ஆள் (சுந்தர்ராஜன்) பூவராகவனின் காலில் விழும்போது, அவர் தடுத்து, "வயசுக்கு மரியாதை இல்லையா? என்று கேட்க "அதெல்லாம் இந்த காலத்துல எதுக்கு தம்பி" என்று பதிலளிப்பார் சுந்தர்ராஜன். அரசியலில் அடித்தட்டு மக்கள் அடைகிற எழுச்சி பிறரால் இவ்வாறு கணிக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம். மேலும் படிக்காத மேதையாக பூவராகவன் மட்டும் இருக்க அவர்கள் கூட்டத்தில் இப்போது படிக்காதவர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. அனைவரும் படித்து பட்டங்கள் பெற்று எங்கோ உச்சத்துக்கு சென்றுவிட்டார்கள். (இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் கவனிக்க)" என்னோட படித்தவர்கள் இருபது பேர். அதுல நாலு பேர் முஸ்லீம். அவங்க மைனாரிட்டி கோட்டாவுல வேலைக்குப் போயிட்டாங்க" என்றொரு வசனம் 'கற்றது தமிழ்' படத்தில் வரும். அதைப்போலத்தான் இதுவும். மேலும் தலித்துக்கள் பணம், சாப்பாடு, மது, புகழ் ஆகியவற்றிற்கு அடிமைப்பட்டு கிடப்பவர்கள் என்று சொல்லக்கூடிய காட்சிகளும் உண்டு.




தோழர்கள் மதுவில் கட்டுண்டு கிடக்க, வெகுண்டு கிளம்பும் பூவராகவனைப் பார்த்து, 'நில்லு' அதையும் பார்த்துட்டு போ" என மணல் கொள்ளையன் (பி.வாசு) சொல்வது புதிய உத்தியாக இருக்கலாம். ஆனால் தலித்தின் மரணம் இங்கு நிச்சயக்கப்படுகிறது. "நான் மண்ணுக்காக சாவுறேன். ஆனால் உன் சாவு அசிங்கமாகத்தான் இருக்கும்" என்று பூவராகவன் சொன்னபடியே குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு சுனாமியில் உயிர்த்தியாகம் செய்கிறார். அந்த மரணத்தை "உனக்கு நல்ல சாவு" என்று சான்று தந்து அடிமை சாசனத்தை மீண்டும் நிலை நாட்டுகிறது ஒடுக்கும் வர்க்கம். மகாமக குளத்தில், தஞ்சைப் பெரியகோயில் தீயில் இறந்தாலும், நல்ல சாவுதான். சிதம்பரம் நந்தன், வடலூர் வள்ளலார் எரிக்கப்பட்டதும் கூட நல்ல சாவுதான். காக்கும் கடவுள் பெருமாளுக்கு யாரைக் காக்க வேண்டும் என்று தெரியாதா என்ன?




95 வயது கிருஷ்ணவேணி பாட்டி, (ரொம்ப வயதான அவ்வை சண்முகி) 50 ஆண்டுகளுக்கு முன்பு வக்கீலுக்குப் படிக்கச் சென்ற தன் மகன் இறந்துபோக, அது தெரியாமல் சித்த சுவாதினமின்றி, அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் பெருமாளை பூஜித்து வருபவர். சுனாமியில் இறந்த பூவராகவன் வழியே கிருஷ்ணவேணி தம் மகன் ஆராமுதனைக் கண்டடைய பெருமாள் அருள்பாலிக்கிறார். தலித்பிணம் பொது சுடு அல்லது இடுகாட்டிற்குச் செல்ல முடியாமலும், தனிச்சுடு/இடுகாட்டிற்கு கூட செல்லும் வழியில்லாத இந்த நாட்டில் பிணம் கூட தியாகத்தின் உருவாய் ஆதிக்க சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது.



வைரஸ் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் மேலதிகாரி வைரஸ் குப்பியை தீவிரவாதிகளிடம் விற்கும் அநியாயத்தை கண்டு, "நாம் என்ன செய்ய முடியும்? என்று இருக்கும் யுகா, ஃபிளேட்சரால் கொல்லப்படுகிறாள். அவளது தந்தையான ஜப்பானிய வீரர் நரஹஷி கோவிந்துவை பழிவாங்க வந்து, இறுதியில் உண்மைக் கொலையாளி ஃபிளேட்சர் என்பதை அறிந்து, சுனாமி நேரத்தில் வில்லனோடு மோதி, அவனது முடிவு கண்டு திருப்தியடைந்து திரும்புகிறார்.




ஃபிளேட்சரை தீவிரவாதி அல்லது வில்லன் என்று சொல்வது கூட அவ்வளவு சரியாக இருக்காது. ஹீரோவுக்கு இணையாக மல்லிகா ஷராவத்துடன் ரொமான்ஸ் பண்ணுகிறார். அவருக்குத் தேவை வைரஸ் குப்பி மட்டுமே. முடிந்த வரையில் மனிதாபிமான வில்லனாகவும், சாகசக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறார். பெருமாள் அருளால் குப்பி இருக்குமிடம் சிதம்பரம் என்பதைக் கூட அனாயசமாகக் கண்டடைகிறார். தன்னுடைய மொழி பெயர்ப்பாளினி (மல்லிகா ஷெராவத்) யானையால் தூக்கி வீசப்பட்டு குற்றுயிராய் இருக்க, வேறு வழியின்றி அவரை கருணைக் கொலை செய்கிறார். இவை எல்லாவற்றிற்கு மேலாக, தன் மனைவிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு குரலை இழந்தாவது உயிரோடு இருக்க எண்ணும் பஞ்சாபி பாப் பாடகர் அவ்தார் சிங்கின் தொண்டைக்குள் இருக்கும் கேன்சர் பகுதியை வெளியே எடுத்துச் சென்று, அவரை குணப்படுத்தி விடுகிறது ஃபிளேட்சரின் துப்பாக்கி குண்டு. இறுதியாக ஃபிளேட்சர் வைரஸ் குப்பி தன் கையில் கிடைத்த பின்னும் தப்பிக்க வழியின்றி தன்னிடமுள்ள உயிரி ஆயுதத்தை பிறர் மீது பயன்படுத்த வாய்ப்பு இருந்தும் உலகைக் காக்க விஷ்ணு விஷத்தை உண்டது போல் தானும் வைரஸை உண்டு மரணமடைகிறார். உடன் கிருமியை அழிக்கவேண்டும், என்ன செய்வது? ஆரம்பத்தில் குரங்கு வைரஸை சாக்லேட் என்று நினைத்து தின்று சாக, கிருமிகளை அழிக்க டன் கணக்கில் சோடியம் குளோரைடு கொட்டப்படுகிறது. கடற்கரையில் உடனடியாக பல டன் NaCl க்கு எங்கே செல்வது?

12 ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் மூழ்கிய பெருமாள் சுனாமியைக் கொண்டு வந்து, அதன் மூலம் பல டன் NaCl - ஐ வெளிக்கொண்டு வந்து இந்த உலகைக் காக்கிறார். ஒரு பெரிய மரம் வேரோடு சாயும் போது சிற்சில உயிர்கள் அழியத்தான் செய்யும். (நன்றி : முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி!) அந்த மாதிரி அழிவு தான் இந்த சுனாமிச் சாவுகள். சுனாமி பிணக்குவியல்கள் இயந்திரங்கள் மூலம் புதைக்கப்பட்டு, எங்கும் மரண ஓலம் நிறைத்துக்கொண்டிருக்க எந்த பிரக்ஞையுமின்றி கோவிந்தும், ஆண்டாளும் சேரமுடியுமா - முடியாதா..., காதல், கடவுள் பற்றி விவாதம் செய்கின்றனர். கூடவே 12 ஆம் நூற்றாண்டு விஷ்ணுவும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ரங்கராஜ நம்பியின் எலும்புகளுடன் கரையேறி இருக்கிறார். பத்து அவதாரங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் பயன்படும் அவதாரங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று கலிஃபுல்லா; மற்றொன்று வின்சென்ட் பூவராகவன். கிருஷ்ணவேணி பாட்டியை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. சித்த சுவாதினம் இல்லாதவர் என்று கூறப்பட்டாலும் 'அவ்வை சண்முகி-யைப் போல நிறைய சாகசங்கள் செய்து வைரஸ் குப்பியை பெருமாளோடு சேர்த்து அனைவரையும் காப்பாற்றுபவர்.






பல்ராம் நாயுடுவால் 'லைட்ஹவுஸ்' என்று கிண்டலடிக்கப்படுகிற கலிஃபுல்லா கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அளவுக்கு கேலிக்குள்ளாக்கப்படுபவர் எவருமில்லை. அவர் உயரம், உடை, பேச்சு, நடை, தோற்றம் போன்ற பலவற்றாலும் கேலி செய்யப்படுகிறார். முஸ்லீம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்யாமல் 12 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டு மக்கள் தொகையைப் பெருக்குபவர்கள் என்ற சங்பரிவாரின் சொல்லாடல் நிகழ்த்தப்படுகிறது. தலித் தலைவராக வரும் வின்சென்ட் பூவராகவனும் உடல், நடை, உடை, பேச்சு, மொழி, நிறம் போன்றவற்றால் கிண்டலடிக்கப் படுவதோடு மட்டுமல்லாது, தியாகம் செய்வதாகக் காட்டி சாகடித்தும் விடுகிறார்கள். படம் முழுக்க பெருமாளே மையமாக இருக்கிறார். அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். யாரைக் காக்க வேண்டும், யாரை சாகடிக்க வேண்டும் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார். காக்கும் கடவுளான விஷ்ணு எல்லாரையும் காக்காவிட்டாலும், தனக்கு வேண்டியவர்களை மட்டுமாவது காத்து அருள்புரிவார்.




மேம்பாலத்திலிருந்து கோவிந்த் ராமசாமி குதிக்கும் லாரியில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. 'ஸ்ரீராம ஜெயம்'! ரங்கராஜ நம்பியை விஷ்ணுவுடன் சேர்த்து கட்டி இழுத்துச் செல்லும் போது ஒரு பருந்து வந்து அமரும். ஃபிளேட்சர் கையில் வைரஸ் குப்பியுடன் பெருமாள் கிடைக்கும் போது ஆயிரக்கணக்கில் பருந்துகள் அணிவகுக்கின்றன. பார்ப்பனீய - இந்துத்துவா ஆதரவு அதிகரித்திருப்பதை குறியீட்டுத் தளத்தில் உணர்த்துகின்றன. மணல் மாஃபியா ஆள் (சந்தானபாரதி) ஆண்டாளின் துகிலை உரியும் போது 'நாராயணா' என்று கத்த எங்கும் ஒளி வெள்ளம். மைக் சகிதம் பூவராகவன் கூட்டமாக மண்ணைக் காக்க வருகிறார். (குடும்பத்துடன் காண வேண்டிய கற்பழிப்புக் காட்சி ; மண் - பெண் கற்பழிப்பு என்ற வியாக்கியானமும் உண்டு).




புராணக் குப்பைகளை கேள்வி கேட்டு மறு பரிசீலனை செய்யக்கூடிய படைப்புகள் தமிழில் நிறைய வெளியாகின்றன, அவ்வாறில்லாமல் புராண - இந்துத்துவ மதிப்பீடுகளை உயர்த்திப் பிடித்து, அதற்கு அறிவியல் பகுத்தறிவு முலாம்பூசிய தங்கத்தட்டில் இந்துத்துவ மலத்தை அள்ளி தமிழகத்திற்கு ஏன் உலகிற்கே வாரி வழங்கியுள்ளார் 'உலகநாயகன்' கமல்ஹாசன். திராவிட இயக்கச் சீரழிவுகளும், தமிழகத்தில் இந்துத்துவா, சங்-பரிவார் கும்பலுக்கு அடித்தளம் அமைத்தவர்களும் உண்டு, உச்சி மோந்து பாராட்டி ஒருவருக்கொருவர் சொறிந்து கொள்ளட்டும்.

இறுதியாக ஒரு குறிப்பு :




கமலின் இந்த அவதாரங்களைப் பார்த்தப் பிறகு முக்தியடையும் வாய்ப்பை சுஜாதாவுக்கு பெருமாள் அளிக்காமல் போய்விட்டார். உயிர்மை ஜூலை 2008 இதழில் விமர்சனம் எழுதியிருக்கும் நண்பர் சாரு நிவேதிதா படத்தை சரியாகப் பார்க்காதவர் போல கமல் உடனான நட்பு, காயாஸ் தியரி, உலக சினிமா பற்றியெல்லாம் எழுதிவிட்டு, இந்துத்துவா அரசியல் பற்றி தொலைக்காட்சி பேட்டியில் விளக்கவேண்டும் என்று கை ஏந்துகிறார். 105 வயது ருக்மணிப்பாட்டி என்கிறார். கலிஃபுல்லா, அவதார்சிங் ஆகிய இரண்டு அவதாரங்களும் கதைக்குச் சம்மந்தம் இல்லாதவை என்கிறார். (கதை என்று இதில் ஒன்று உண்டா சாரு?) சாருவின் வைணவ - இந்துத்துவ சாய்வு கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

21 ஆண்டுகளாகியும் கிடப்பில் கிடக்கும் ராஜீவ் காந்தியின் சமாதான ஒப்பந்தம்

கைச்சாத்திடப்பட்ட பின்னர் கடந்தோடிவிட்ட 21 ஆண்டுகள் : இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 21 வருடம் ஆகின்றது. இந்த ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் வடக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் அரசியல் நிர்வாகத்தின் தலைமையில் செயற்படுகின்றன. வட, கிழக்கு மட்டும் தொடர்ந்தும் ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது. இணைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணமும் உயர் நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது.

இப்பிரிப்பு பற்றி ஒப்பந்தத்தின் பங்காளியான இந்தியா வாயினையே திறக்கவில்லை. கிழக்கில் இராணுவத்தின் தேவைக்காக மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட்டு பிள்ளையான் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கின்றார். பிள்ளையான் நிர்வாகத்தை பொம்மையாக வைத்து சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளை அரசு அங்கு முன்னெடுக்கின்றது.
இந்நிலையில் இலங்கை, இந்திய ஒப்பந்தம் அதன் நடைமுறைச் செயற்பாடுகள் தோல்விகளுக்கான காரணங்கள் என்பவை பற்றி தமிழ் மக்கள் நிலை நின்று ஓர் மீள்பரிசீலனை அவசியமாகிறது. ஒப்பந்தத்தினை புலிகளும், அரசாங்கமும் ஏற்று நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது என்ற கருத்து ஒரு சிலரிடம் இன்றும் நிலவி வருவதால் இப்பரிசீலனை முக்கியமாகின்றது.

ஒப்பந்தத்தினை ஆராயும் போது மூன்று விடயங்கள் முக்கியமாகின்றன. ஒப்பந்தத்தின் உருவாக்கம், ஒப்பந்தத்தின் உள்ளடக்கம். ஒப்பந்தத்தின் நடைமுறைப் பிரயோகம் என்பவையே அவை மூன்றுமாகும்.
முதலில் நாம் ஒப்பந்தத்தின் உருவாக்கத்தைப் பார்ப்போம். எந்தவொரு ஒப்பந்தத்தையும் உருவாக்கும் போது அதற்கென தார்மீக நெறிமுறைகள் உள்ளன. அவை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
அவற்றுள் பிரதானமானது ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் எவருக்கு விதிக்கப்படுகின்றதோ அவர்களே ஒப்பந்தத்தின் பங்காளிகளாக இருத்தல் வேண்டும் என்பதாகும்.

இதனை இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் எப்பிரச்சினை தொடர்பாக ஒப்பந்தம் வரையப்படுகின்றதோ அப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்வளே பங்காளிகளாக இருத்தல் வேண்டும். வேறொருவர் ஒரு தரப்பாக கைச்சாத்திடுவதாயின் அவர் பங்காளிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இருத்தல் வேண்டும்.

உண்மையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முதல் சறுக்கல் இங்குதான் ஏற்பட்டது. ஒப்பந்தம் நீண்டகாலமாக நிலவிய இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த வகையில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சிங்களத் தேசத்தலைவர்களும், தமிழ் தேசத்தலைவர்களுமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருத்தல் வேண்டும்.
மாறாக இரு நாடுகளின் தலைவர்களே கைச்சாத்திட்டிருந்தனர். தமிழ் மக்கள் தமது சார்பில் கைச்சாத்திடும்படி இந்தியாவைக் கேட்கவுமில்லை. முகவராக நியமிக்கவும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முதல் நாள் நயவஞ்சகமாக இந்தியாவுக்கு வரவழைத்து, டில்லி ஹோட்டலில் காவலில் வைத்துவிட்டே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஹோட்டலில் வைத்தே ஒப்பந்தப் பிரதி அவருக்கு காட்டப்பட்டு சம்மதம் பெற முயற்சிக்கப்பட்டது. இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் தொடக்கம் அப்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வரை பலர் முயன்றும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை ஒப்பந்தம் போதியளவு பிரதிபலிக்கவில்லையென்றும் ஒப்பந்தத்தின் நடைமுறைப் பிரயோகம் தொடர்பாக சிங்கள அரசாங்கத்தினை நம்ப முடியாது என்றும், வடகிழக்கு தற்காலிக இணைப்பினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல ஆதாரங்களுடன் தனது மறுப்பினை அவர் தெரிவித்திருந்தார்.

பிரபாகரனின் கருத்திலுள்ள நியாயத்தன்மையைக் கேட்ட எம்.ஜி.ஆர். "நான் உங்களுடனேயே நிற்பேன்' எனக் கூறிவிட்டு சென்றிருந்தார். இறுதியில் நள்ளிரவு பிரதமர் ராஜீவ் காந்தி தானே நேரடியாகவே வந்து பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொள்ளும் படியும், தமிழ் மக்கள் சம்பந்தமான முழு விடயத்துக்கும் நான் பொறுப்பாக இருப்பேன் எனவும், என்னை நம்புங்கள் எனவும் ஒப்பந்தத்தை எதிர்க்க வேண்டாம் எனவும் வேண்டினார்.

"வடகிழக்கு இணைப்பு தற்காலிகமானது' என்பது சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக கூறப்பட்டது என்றும் அது நிரந்தரமாகவே இணைந்திருக்கும் என்றும் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒருபோதும் நடைபெறாது என்றும் தான் உறுதிதருவதாக குறிப்பிட்டார்.
எல்லாம் தங்கள் கைகளை மீறி நடக்கின்றது. இந்தியாவின் கைதியாக இருந்து கொண்டு சம்மதம் கொடுக்காமல் இருக்க முடியாது எனக் கருதியே இறுதியில் பிரபாகரன் வாய்மூலச் சம்மதத்தை தெரிவித்திருந்தார்.
இச்சம்தம் எதிரி கைது நிலையில் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலமாக கொள்ளப்பட வேண்டுமே தவிர மனப்பூர்வமான சம்மதமாக கொள்ள முடியாது.

பிரபாகரன் அன்று சம்மதம் தெரிவித்திருக்காவிட்டால் தாயகத்துக்கு திரும்பி வந்திருக்கவே முடியாது. பிரபாகரனின் கடைசி இந்தியப் பயணமும் இதுவாகவே இருந்தது. சாராம்சத்தில் இச்சம்மதத்தினை பலவந்தமாக பெற்று சம்மதம் என்றே கூறுதல் வேண்டும். ஒருவகையில் தமிழ் மக்கள் தொடர்பான பொறுப்பினை இந்தியா பலவந்தமாக பெற்றுக் கொண்டது எனக் கூறல் வேண்டும். சரி பலவந்தமாக பெற்றுக் கொண்டாலும் பரவாயில்லை இந்தியா கடைசிவரை அப்பொறுப்பிற்கு விசுவாசமாக இருந்ததா?

அதுதான் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகவும் சோகமான விடயம். இது விடயத்தில் தன்னுடைய நலன்கள் நிறைவேற்றப்பட்டதும் இந்தியா தமிழ் மக்களின் நலன்களை கைவிட்டதே உண்மை நிலையாகும். இந்தியா தன்னுடைய நலனுக்காகவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள் இலங்கையில் காலூன்றுவதைத் தடுப்பதே ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் இலக்காக இருந்தது. எந்த ஒரு நாடும் தன்னுடைய நலனுக்காக ஒப்பந்தம் செய்வதை தவறு எனக் கூற முடியாது. ஆனால் அதற்காக ஒரு தேசிய இனத்தின் அபிலாஷைகளை விலையாக கோரியமைதான் சகிக்க முடியாத ஒன்றாகும்.

இந்தியா இது விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ள விரும்பியிருப்பின் இரு ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும். ஒன்றை தன்னுடைய பிராந்திய நலன் தொடர்பாகவும், மற்றொன்றை இனப்பிரச்சினை தொடர்பாகவும் செய்திருக்கலாம். பிராந்திய நலன்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டிருக்கலாம். ஆனால், இனப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தத்தில் சிங்களத் தமிழ் தலைவர்களை கைச்சாத்திட வைத்துவிட்டுத்தான் மத்தியஸ்தராக இருந்திருத்தல் வேண்டும்.
ஆனால், நடந்தது வேறு. பிராந்திய நலன்கள் தொடர்பான விடயங்களை தனியாக கடிதங்களில் பரிமாறி ஏற்றுக்கொண்டு விட்டு இனப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தத்திலேயே இரு நாடுகளும் கைச்சாத்திட்டிருந்தன.
இரண்டாவது விடயம் ஒப்பந்தத்தின் உள்ளடக்கமாகும். உள்ளடக்கத்தில் பிரதான விடயம் இனப்பிரச்சினை தொடர்பான ஏற்பாடுகளேயாகும்.
இதற்கு ஒப்பந்தத்தினை விட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய ஆலோசனையுடன் அரசியல் யாப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தினையே முக்கியமாக ஆராய வேண்டும். உண்மையில் ஒப்பந்தத்தின் இரண்டாவது சறுக்கல் இங்குதான் இடம் பெற்றது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது குறைந்த பட்சம் கூட்டாட்சி அடிப்படையிலான அதிகாரப்பங்கீடாக இருத்தல் வேண்டும். இது 1957இல் கைச்சாத்திடப்பட்ட பண்டாசெல்வா ஒப்பந்தத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

கூட்டாட்சி என வருகின்ற போது "கூட்டும் பகிர்வும்' என்ற தத்துவமே மேலோங்கியதாக இருக்கும். பொதுவான விடயங்களில் கூட்டும் தனியான விடயங்களில் பகிர்வும் என்பதே கூட்டும் பகிர்வும் என்ற தத்துவத்தின் நடைமுறை அர்த்தமாகும். இக்கூட்டும் பகிர்வும் என்ற தத்துவம் சிறப்பாக செயற்படுவதற்கு நான்கு விடயங்கள் முக்கியமானவையாகும்.
ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனத்தின் கூட்டிருப்பினை பேணக் கூடிய அதிகார அலகு, சுயநிர்ணய உரிமையினை பிரயோக்கிக்கக்கூடிய அதிகாரங்கள், மத்திய அரசான கூட்டு அரசில் தேசிய இனத்திற்கு சமத்துவமான பங்கு, பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்துக்கான பாதுகாப்பு என்பனவே அந்நான்குமாகும். இந்நான்கு விடயங்களையும் ஒப்பந்த உள்ளடக்கம் போதிய அளவிற்கு கவனமெடுக்கவில்லை. அதிகார அலகு தற்காலிகமாக இணைக்கப்பட்டதே தவிர நிரந்தரமாக இணைக்கப்படவில்லை.
அந்த தற்காலிக இணைப்பு கூட அரசியல் யாப்பின் ஒரு ஏற்பாடாக சேர்க்கப்படவில்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட மாகாணசபைகள் சட்டத்திலும் சேர்க்கப்படவில்லை. வெறும் வர்த்தமானி அறிவித்தலாகவே அது இருந்தது. உண்மையில் இது விடயத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும், ராஜீவ் காந்தியும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
யாப்பு ஏற்பாடாக அல்லது பாராளுமன்ற சட்டமாக இருந்திருக்குமானால் நீதிமன்றம் தன் விருப்பம்போல இணைப்பினை இரத்து செய்வது கடினமாக இருந்திருக்கும். சுனாமி பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் கூட இதுதான் நடைபெற்றது. அது பாரளுமன்ற சட்டமாக இருந்திருந்தால் அல்லது அதில் ஜனாபதிபதி கையொப்பமிட்டிருந்தால் நீதிமன்றம் இலகுவாக அதை நிராகரித்திருக்க முடியாது. அதிகாரப் பங்கீட்டினை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமையினை பிரயோகிக்கக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மாகாணசபைப் பட்டியலிலுள்ள விடயங்களில் அதிகாரங்கள் குறைவாக இருந்ததுடன் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் கூட சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை இருந்தது.

குறிப்பாக வரிவிதிப்பு, சுகாதாரம் போன்ற எட்டு விடயங்களில் மாகாணசபைகள் எவ்வளவிற்கு சட்டமியற்றலாமென மத்திய பாராளுமன்றம் சட்டமியற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயமிருந்தது. அன்று வடகிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட வரதராஜப் பெருமாள் தலைமையிலான மாகாண சபை அரசாங்கம் பல தடவைகள் சட்டங்களை இயற்ற முயன்றபோதும் மத்திய அரசு அதனைத் தடுத்து நிறுத்தியது.
இது விடயத்தில் அரச இயந்திரத்தின் நிலைதான் அதிக கொடூரமானதாக இருந்தது. சிங்கள அதிகாரிகள் நடைமுறையில் எந்த அதிகாரப் பங்கீட்டுக்கும் தயாராக இருக்கவில்லை. இந்தியா அதிகாரப் பங்கீடு விடயத்தில் இந்திய மாதிரியையே சிபார்சு செய்ய இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தது. இந்திய மாதிரிக்கு மேலாக எதையும் கேட்கக்கூடாதென தமிழ் தலைவர்களுக்கு முன்னரே எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்தியக் கூட்டாட்சி என்பது அரசியல் அறிஞர்களினால் அரைகுறை கூட்டாட்சி என விமர்சிக்கப்படுகின்ற ஒன்றாகும்.

அந்த அரைகுறை கூட்டாட்சியினைத் தமிழ் மக்களின் தலையில் சுமத்துவது எந்த வகையில் நியாயமானது என்பதற்கப்பால் இந்திய அதிகாரப்பங்கீட்டில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு இருக்கவில்லை என்பதே கவலை தரும் விடயமாகும். மூன்றாவது மத்திய அரசில் மாகாணங்களின் பங்கு தொடர்பானது இதனை இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் மத்திய அரசில் தமிழ் தேசத்தின் பங்கு தொடர்பானது. கூட்டும் பகிர்வும் தத்துவப்படி மத்திய அரசில் தமிழ் தேசத்திற்கு சமத்துவமான பங்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.
உண்மையான கூட்டும் பகிர்வும் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதாயின் சிங்கள தேசம், தமிழ்த்தேசம் என்கின்ற இரு பகிர்வு அரசாங்கங்களும் இரண்டையும் சமமாக இணைத்த கூட்டு அரசாங்கமும் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்படவில்லை.

பகிர்வு விடயத்தில் ஒரு தேசிய இனத்தையே கொச்சைப்படுத்தக்கூடிய வகையில் அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்வு மேற்கொள்ளப்பட்டது.
மத்தியில் கூட்டு என்ற விடயத்தில் எந்தவித பங்கும் கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் தமிழ் தேசிய இனம் சம்பந்தமான விடயங்களில் இரத்து அதிகாரத்தினையாவது அதற்கு வழங்கியிருக்கலாம். அவை எதுவும் வழங்கப்படாமல் மத்திய அரசு என்பது தொடர்ந்தும் சிங்கள ஆதிக்கமுள்ள அரசாகவே இருந்தது. இந்திய மாதிரியில் உள்ளது போன்ற மாநிலங்களவை ஏற்பாடு கூட இருக்கவில்லை.

நான்காவது மிக முக்கியமானது அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பதே அதுவாகும். இதில் தமிழ் மக்களின் சார்பில் ஒப்பந்தத்தினை மேற்கொண்ட தரப்பு என்ற வகையில் இந்தியாவின் பொறுப்பு அதிகமாக இருந்தது.
ஆனால், இந்தியா பெரிதாக இதில் அக்கறை காட்டவில்லை. பேரினவாத செயற்பாடுகளுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது என்ற வகையிலும் 75% பெரும்பான்மை இனத்தைக் கொண்ட நாடு என்ற வகையிலும் இந்தியா மிகவும் கவனமாக இருந்திருத்தல் வேண்டும்.

- பிரசாந்தன்

"சுஜாதா நினைவுகள்"

எழுத்தாளர் சுஜாதா மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் நடைபெற்ற "சுஜாதா நினைவுகள்" நிகழ்ச்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் உரையின் காணொளிப்பதிவு

July 16, 2008

கதாநாயகனாய் கரட்டாண்டி

கரட்டாண்டி... முறுக்கு மீசை, முரட்டு உருவம், மதுரைத்தமிழ் என ராதிகாவின் அரசி தொடரில் சிறைக் கைதியாக கலக்கியவர். சொந்தப் பெயர் பக்தவசலம் என்கிற பக்தன். சொந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தான். ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, நீ வேணுன்டா செல்லம், பழனி, தலைநகரம், தாமிரபரணி, பேரரசு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். சத்யராஜின் வீரநடையில் ஆரம்பித்தது இவருடைய திரை வாழ்க்கை. இன்னும் தன்னுடைய நடிப்புத் திறமைக்கு ஏற்ற சரியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்று ஏங்குகிறார் பக்தன். தன்னை சரியான வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அரசி தொடர் இயக்குனரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

இன்னும் வறுமையுடன் வாழ்க்கை நடத்தும் பக்தனுக்கு தங்குவதற்கென்று வீடு கூட இல்லை. சென்னை வடபழனி பேருந்து நிலையத்துக்கு அருகில், தான் நடத்தும் பிளாட்பார இளநீர் கடையிலேயே தங்கிக்கொள்கிறார். எப்படியும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த தவம் என்கிறார். சினிமா ஆசை தன் வாழ்க்கையை நிறையவே பாதிப்படைய வைத்துவிட்டதாக வருத்தப்படுகிறார். தன்னைப்போல சினிமாவுக்காக வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள் என்று கனவுத் தொழிற்சாலைக்குள் நுழையும் புதியவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார். இளநீர்க் கடை முழுக்க சிவன் படங்கள். அளவு கடந்த தெய்வ பக்தி கொண்ட பக்தன், 'சினிமாவில ஜெயிக்கணும். நிறைய சம்பாதிக்கணும். என்னை மாதிரி சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறவங்களுக்கு வாரத்துக்கு ரெண்டு நாளாவது என் சொந்தச் செலவில சாப்பாடு போடணும். ஊனமுற்றவர்களுக்கு ஆசிரமம் கட்டிக் கொடுக்கணும். இது போதும்ண்ணே எனக்கு’ என்கிறார் 12 ரூபாய்க்கு இளநீரை வியாபாரம் செய்து கொண்டே.
1999-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தனது சொந்த ஊருக்கு அருகில் உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 200 குடுபம்ங்களை, தான் ஒரே ஆளாக நின்று கயிறு கட்டி இழுத்துக் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மாவட்ட நிர்வாகம் இவருக்கு பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறது.

சினிமாவில் ஹீரோவாக முடியாவிட்டாலும் பக்தன் நிஜத்தில் ஹீரோதான்.

July 08, 2008

நிறைய பேசுபவர்கள் ஒருவிதமான மன நோயாளிகள். அது சாருவானாலும் சரி, ஜெயமோகனானாலும் சரி - நாகூர் ரூமி

நாகூர் ரூமி. இவர் தமிழின் மிக முக்கிய தவிர்க்க முடியாத ஆளுமை. நெடுங்காலமாய் எழுத்தோடு இயங்கி வருபவர். இருபத்து ஐந்து நூல்களை இதுவரை எழுதியுள்ளவர். இதில் ஏழு நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்கள். தத்துவத்தின் பின்புலமும் அதனோடு சமயத்தைச் சார்ந்து கேள்விகளை எழுப்பும் நேர் உரையாடலை நிகழ்த்துபவர். சென்னை பெசன்ட் நகரில் தற்போது இருக்கும் அவரோடு ஒரு நேர்காணலை அதிகாலைக்காக நிகழ்த்தினோம்.

அதிகாலை : வணக்கம். தாங்கள் எழுதவந்த சூழல் எத்தகையது?

ரூமி : 1980-களில் நான் எழுதத் தொடங்கினேன். முதன் முதலாக கணையாழியில் ஒரு கட்டுரை வந்தது. மணிச்சுடர் என்ற மாத இதழில் சிறுகதைகள் தொடர்ந்து வந்தன. திருச்சியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவனாக இருந்தபோது நடந்தது இது. ஒரு காதல் ஒன்றும் உண்டு. காதலையும் இலக்கியத்தையும் தவிர எழுதுவதற்கு வேறு சூழல் ஒன்று வேண்டுமா என்ன!

அதிகாலை : தொடக்கக் காலத்தில் மீட்சி போன்ற நவீன இதழ்களில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதில் உங்கள் எழுத்துக்கள் எப்படிப்பட்டதாக இருந்தது?

ரூமி : மீட்சி சிரியர் பிரம்மராஜன் எனது நண்பர். தீவிரமாக இலக்கியம் படிப்பவர். நவீன இலக்கியத்தின் முக்கிய போக்குகளை தமிழுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற பேரவா அவரிடம் இருந்தது. அதன் விளைவாகத்தான் மீட்சி இதழை அவர் தொடங்கினார் என்று நினைக்கிறேன். அதில் நான் சில கவிதைகளையும், கவிதை பற்றிய சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். மற்றபடி பத்திரிகைக்குத் தகுந்த மாதிரி எழுதுவது என் பழக்கமல்ல. நான் மீட்சியிலும் எழுதியிருக்கிறேன், குமுதத்திலும் எழுதியிருக்கிறேன். மீட்சியில் பிரசுரிப்பதாக இருந்தால் குமுதத்தில் எழுதிய கதையையோ, குங்குமத்தில் எழுதிய கவிதையையோ மீட்சிக்குக் கொடுத்திருப்பேன்.

அதிகாலை : சிறுபத்திரிகைகள் குறித்த உங்கள் நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

ரூமி : சிறுபத்திரிகைகள்தான் உண்மையான இலக்கியத்தைக் கொடுத்தன என்ற கருத்தில் மூழ்கியிருந்த கால கட்டம் அது. அது ஒருவகையில் உண்மையாகவும் இருந்தது. ஆனால் போகப்போக சிறுபத்திரிக்கைகளும் தனிமனித வழிபாடு அல்லது எதிர்ப்பு என்று இறங்கிவிட்டன. என்றாலும் அந்தக் காலத்தில் வந்து கொண்டிருந்த கையெழுத்துப் பிரதிகளில் எந்த அரசியலும் கலக்கவில்லை. திருச்சியில் இருந்து ‘மானுடம்’ என்று ஒரு இதழை விஜயகுமார் என்ற நண்பர் கொண்டு வந்து கொண்டிருந்தார். இலக்கு, கொல்லிப்பாவை, யாத்ரா, ஆவரம், மீட்சி, புது எழுத்து போன்ற இதழ்களோடு எனக்கு பரிச்சயமும் தொடர்பும் உண்டு. அ• பரந்தாமனும் மீட்சி பிரம்மராஜனும் இதில் சிறப்பு கவனத்துக்குரியவர்கள். வடிவமைப்பில் தொடங்கியே அவர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களுடைய அபார, தீவிர உழைப்பு ஒவ்வொரு இதழிலும் தெரியும். பல சிறு பத்திரிக்கைகளில் நான் எழுதியும் இருக்கிறேன். தீவிரமான இலக்கிய வாசிப்புக்கும் அறிமுகத்துக்கும் ஒரு கட்டத்தில் சிறுபத்திரிக்கைகள் அவசியம். கணையாழியைக்கூட இலக்கிய உலகில் பெரும்பாலோரின் கவனத்தைப் பெற்ற சிறுபத்திரிக்கை என்றே சொல்ல வேண்டும்.

அதிகாலை : ‘நதியின் கால்கள்’ என்ற கவிதைத் தொகுதி உங்கள் முதல் நூல். அதைப்பற்றி உங்கள் நினைவுகள்?

ரூமி : முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். அது என் விஷயத்தில் பொய்யாகிவிட்டது! படிப்பவர்களுக்கு எளிதில் புரியக் கூடாத வகையில் எழுதப்படுவதுதான் கவிதை என்று நினைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது அது! அதனாலேயே அதிலுள்ள பல கவிதைகள் பலர் புரிந்து கொள்ள எளிதாக இருக்காது! (அதற்கு ஒரு முன்னுரை தருவதற்காக நடிகர், இயக்குனர் நாசர் அதைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆறு மாதம் அலைந்தார் பாவம்)! ஆனால் அதில் உள்ள எல்லாக் கவிதைகளும் அப்படி இருக்காது. என்னையும் மீறி, என்னைக் கேட்காமலே பல கவிதைகள் எளிமையாகவே அதில் வந்துவிட்டன! ‘நதியின் கால்கள்’ நூலுக்கு நான் பிரம்மராஜனுக்குத்தான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவருடைய சிபாரிசின் பேரில்தான் ஸ்நேகா பதிப்பகத்தார் அந்நூலையும் அதன் பிறகு ‘குட்டியாப்பா’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு வந்தனர். நதியின் கால்களில் உள்ள கவிதைகள் பல தரப்பட்டவை. காதல், பாசம், ஆன்மிகம் என ஒரு கலவையாக இருக்கும்.

அதிகாலை : ‘குட்டியாப்பா’ உங்கள் நூலில் உள்ள எழுத்து முறையில் ஏதாவது புதுமை செய்திருக்கிறீர்களா?

ரூமி : ‘குட்டியாப்பா’ ஒரு சிறுகதைத் தொகுப்புதான். எழுது முறையில் நான் எப்போதுமே புதுமை செய்ததில்லை. நான் எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் எழுதி வருகிறேன். என்னுடைய எல்லா எழுத்திலும் இருப்பது இரண்டு குணங்கள். ஒன்று எளிமை, இன்னொன்று நகைச்சுவை. இந்த இரண்டும் இல்லாத நாகூர் ரூமியின் எழுத்தைப் பார்க்க முடியாது. இது தவிர வேறு எந்த உத்தியையும் மனதில் வைத்துக் கொண்டு நான் எழுதுவதில்லை. இந்த இரண்டு குணங்களும்கூட என்னோடு, என் எழுத்தோடு கூடப்பிறந்தவை. அவற்றைப் புகுத்துவதற்காக நான் தனி ‘காமெடி ட்ராக்’ போடுவதில்லை. போகிற போக்கில் அது வந்துவிடுகிறது. அவ்வளவுதான். குறிப்பாக ‘குட்டியாப்பா’ எனக்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான அனுபவம். அதை நான் அப்படியே கொடுத்துள்ளேன்.

அதிகாலை : அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்து என்பது வேண்டுமென்றே புனையப்படுவதா? அல்லது கவிதையின் போக்கில் தேவையா?

ரூமி : அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்தா? அதிர்ச்சியாக இருக்கிறது! அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்தைவிட நம்மை முதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்துதான் தேவை என்று நான் நினைக்கிறேன். ஒரு நோக்கத்துக்காக வலிந்து செய்யப்படும் எந்த எழுத்தும் நிற்காது. பாரதியின் தேசவிடுதலைப் பாடல்களைப் போல.

அதிகாலை : ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்னும் சல்மாவின் நூலுக்கு நீங்கள் எதிர்வினை ஆற்றியுள்ளீர்கள்.அந்த நாவலோடு உங்களுக்கு உடன்பாடு இல்லையா?

ரூமி : ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ இரண்டு வகையில் தோல்வியடைந்த நாவல். ஒன்று அதன் மொழியும் நடையும். கொஞ்சம்கூட இலக்கியத்தன்மையற்ற நடை. உப்பில்லாத சோறு போல. (இலக்கியத்தன்மை என்றால் என்ன என்ற கேள்வி நியாயமானதே. இது எனது கருத்துத்தான்). இரண்டாவது, நாவலின் களமும் கதையும். ஒரு சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி விமர்சனத்தோடு ஒரு நாவல் எழுதப்படலாம். அதற்கு அந்த எழுத்தாளருக்கு அல்லது -ளிக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் வரும் நிகழ்வுகள் எல்லாம் போலித்தனமானவையாக உள்ளன. உதாரணமாக, இறந்த உடலைச் சுற்றி அமர்ந்திருக்கும் பெண்கள் அனைவரும் இறப்பை கொஞ்சம்கூட மதிக்காமல் பிணத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு தன் கணவர்களோடும் காதலர்களோடு அனுபவித்ததையும் அனுபவிக்காததையும் பற்றி கொச்சையான வார்த்தைகளில் பேசிக்கொள்வதாக நாவலில் வருகிறது. இது எந்த உலகிலும் நடக்காதது. இறப்பு நடக்கிறது. பெண்கள் செக்ஸ் பற்றிப் பேசுவது நடக்கிறது. ஆனால் இவை இரண்டும் ஒரே புள்ளியில் இணைந்து நடப்பதாகக் காட்டியிருப்பது நடப்பல்ல. புனைவு. இது படைப்பல்ல. புடைப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் இந்த நாவல் பற்றி எழுதியுள்ள என் நீண்ட கட்டுரையில் எப்படி போலித்தனமான ஒரு சமுகச் சூழலை இந்த நாவல் ஏற்படுத்துகிறது என்று காட்டியுள்ளேன். நீண்ட அந்த கட்டுரையை இங்கே சொல்ல முடியாது. (விருப்பமுள்ளவர்கள் www.tamiloviam.com/rumi என்ற என் தளத்துக்குச் சென்று அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு கருத்தை எனக்கு எழுதலாம்). மற்றபடி சல்மாவுக்கும் எனக்கும் எந்த விரோதமும் கிடையாது. என்னுடைய கருத்தில் அது ஒரு சுயநலமான அரசியலை நோக்கமாக வைத்து புனையப்பட்ட நாவலாகத் தோன்றுகிறது. சல்மா தனது கவிதைகளிலாவது அரசியல் ஏதுமற்ற சுதந்திரக் காற்றை சுவாசித்த வண்ணம் எழுதி இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் நாவலோடு எனக்கு உடன்பாடு இல்லை.

அதிகாலை : ஒரு படைப்பு என்பது சமூக கண்ணோட்டத்துடந்தான் எழுதப்பட வேண்டுமா?

ரூமி : அப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். அப்படி சிறப்பாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

அதிகாலை : தலித் எழுத்துக்கள் வீரியத்தை இழந்துவிட்டன என்று சோ.தர்மன் பேசுகிறாரே?

ரூமி : தமிழிலா அல்லது வேறு மொழியிலா? தமிழில் சிறப்பாக எழுதும் தலித் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக அழகிய பெரியவன், யாழன் தி. வீரியம் என்று சோ.தர்மன் எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ‘தீட்டு’ என்ற அழகிய பெரியவனின் கதையை தர்மன் மறுபடி படித்து விட்டு கருத்து சொல்லட்டுமே.

அதிகாலை : நீங்கள் முற்போக்கா? நற்போக்கா?

ரூமி : நல்லவேளை, வயிற்றுப் போக்கா என்று கேட்காமல் விட்டீர்கள்! எந்த சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் என் போக்கு.

அதிகாலை : எழுத்தின் எல்லா வகைமையிலும் நீங்கள் இயங்கியுள்ளீர்கள் உங்களுக்குப் பிடித்தது கவிதையா? உரைநடையா?

ரூமி : இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே எனக்குப் பிடித்தவைதான். ஆனால் நாடகம் இதுவரை எனக்கு பிடிபடாத ஒரு வகை. மிகவும் பிடித்தது வாமன அவதாரம் போல் இருக்கும் ஆற்றல் மிகுந்த வடிவமான கவிதைதான்.

அதிகாலை : மொழி பெயர்ப்பில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறீர்கள். பர்வேஷ் முஷாரப்பின் சுயசரிதை மற்றும் கிரேக்க இதிகாசமாகிய ‘இலியட்’ போன்றவை குறிப்பிடத்தக்கன. பிற மொழிகளிலிருந்து வருவதைவிட தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் செல்வது மிகவும் குறைவாக இருப்பது ஏன்? நீங்கள் ஏதாவது முயற்சி செய்துள்ளீர்களா?

ரூமி : இல்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான் கொண்டு வந்ததெல்லாம், நான் விரும்பி ஏற்றுக் கொண்ட, கொடுக்கப்பட்ட பணிகள். ஒரு சில சிறுகதைகளை நானாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்திருக்கிறேன். உதாரணமாக வண்ண நிலவனின் மழை என்ற சிறுகதை என்னுடைய மொழிபெயர்ப்பில் The Rain என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்தது. இவ்வித மொழிபெயர்ப்புகள் குறைவாக இருப்பதற்கு ஆங்கில அறிவு குறைவாக இருப்பதுதான் காரணம், வேறென்ன?

அதிகாலை : தற்கால எழுத்தாளர்களில் யாரை நீங்கள் முன்னிறுத்துவீர்கள்?

ரூமி : யாரையும் முன்னிறுத்துவது என் வேலையல்ல. எனினும் சில வார்த்தைகள் சிலரைப் பற்றிச் சொல்ல வேண்டும். இன்னும் ஒரு தொகுதிகூட வெளிவரவில்லை. ஆனால் எழுதிக்கொண்டே இருக்கிறார் தாஜ். அவருடைய தொகுதி ஒன்று விரைவில் வரவேண்டும். ‘நிறங்களின் கூடு’ என்ற தொகுதி மூலம் என் கவனத்தைக் கவர்ந்தவர் ஆனந்தராஜ். அற்புதமான மொழியும் கவிதா அழகும் கொண்ட கவிதைகள். தலித் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் யாழன் ஆதி. பிரச்சனையை இலக்கியத்தின் தீவிர அழகோடு சொல்வது எப்படி என்று இவருடைய கவிதைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். பிரச்சனைகளில் அடிக்கடி மாட்டிக் கொண்டாலும் அற்புதமாக கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவர் ஹெச்.ஜி.ரசூல். “சுமய்யாக்களின் பெண் குறிகளில் அம்பெய்து கொல்லும் அபூ ஜஹில்கள்” என்று ஒரு வரி. இஸ்லாமிய வரலாறும், சமகாலப் பிரச்சனையும் ஒருசேர விமர்சிக்கப்படும் வரி அது. முஸ்லிம் கவிஞர்களில் ஹெச்.ஜி.ரசூல் போன்ற ஆற்றல் மிக்க கவிஞர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

பிதீன் அற்புதமான எழுத்துக்குச் சொந்தக்காரர். இதுவரை இரண்டே சிறுகதைத் தொகுதிகள் வந்துள்ளன. ஒன்று என் முயற்சியில் ஸ்நேகா வெளியீடாக, சொதப்பலாக வெளியான ‘இடம்’ என்ற தொகுதி. தற்போது எனி இண்டியன் வெளியிட்டிருக்கும் ‘உயிர்த்தலம்’ என்ற தொகுதி. ஒருமொழியில் அங்கதம், நகைச்சுவை, கிண்டல், விமர்சனம் இவற்றுக்கான புதிய பரிமாணங்களையும் சாத்தியக்கூறுகளையும் இவர் எழுத்து காட்டும். உளவியல் ரீதியான அருமையான சிறுகதைகளை எழுதுகிறார் களந்தை பீர்முகம்மது. ஒரு சில மிக சிறப்பான சிறுகதைகளை எழுதி இருக்கிறார் நத்தர்சா. ஒரு சில என்று ஏன் சொல்கிறேன் என்றால், நத்தர்சா நிறைய சிறுகதைகளை எழுதி இருக்கிறார். ஆனால் என்னுடைய பாரபட்சமற்ற தேர்வில் ஒரு சிலதான் தேறும். ஆனால் எப்படிப்பட்ட எழுத்தை உருவாக்கவல்லவர் என்று புரிந்துகொள்ள அந்த ஒரு சில கதைகள் போதும். ‘செப்புத் தூக்கி’ என்று ஒரு கதை. இறந்த உடலின் பின்னால் அல்லது முன்னால், அடக்கஸ்தலத்தில் விநியோகம் செய்யப்பட வேண்டிய சில சமாச்சாரங்களைச் சுமந்து செல்லும் ஒரு அனாதையின் இறப்பு பற்றியது. இதுவரை யாரும் தொடாத ஒரு பாத்திரத்தைத் தொட்டு மிகையின்றி மிகச் சிறப்பாக ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். ஒருவர் நிறைய எழுத வேண்டுமா என்ன? ஒரு சோறு போதாதா? அந்த வகையில் நத்தர்சா குறிப்பிடத்தகுந்தவர். செப்புத் தூக்கி பாணியில் அவர் தொடர்வாரேயானால் தமிழுக்கு இன்னொரு சிறந்த படைப்பாளி கிடைப்பார்.

கவிஞர்கள் தாஜ், ஆனந்த ராஜ், ஹெச்.ஜி.ரசூல், யாழன் ஆதி, எழுத்தாளர்கள் பிதீன், களந்தை பீர்முகம்மது, நத்தர்சா போன்றவர்கள் பரவலாக அறியப்படவும் பாராட்டப்படவும் வேண்டியவர்கள்.

அதிகாலை : சினிமா தொலைக்காட்சி தொடர்கள் ஏதாவது முயற்சி நடக்கிறதா?

ரூமி : சினிமாத் துறைக்கும் நாகூருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ரவீந்தர் என்ற நாகூர்க்காரர்தான் ‘மஹாதேவி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். சினிமா உலகில் சிறந்த வசனகர்த்தாவாகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த தூயவன் எனக்கு தாய்மாமா உறவுதான். நடிகர் நாசரும் எனக்கு தூரத்து உறவுதான். சினிமா, தொலைக்காட்சித் துறையில் இயக்குனர்கள், நடிகர்கள், கவிஞர்கள் போன்ற நல்ல நண்பர்கள் இருக்கின்றனர்.

ஆனால் குடும்ப அல்லது ஊர் பெருமை பேசுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என்று சொல்லி என்ன பயன், எங்களிடம் ஒரு கழுதைகூட இல்லாதபோது? என் குடும்பத்தாருக்கும் என் ஊராருக்கும் கலைத்துறையில் இருந்த திறமைகள் எனக்கும் இருப்பதை நான் அறிவேன். வாய்ப்புக் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வேன். ஆனால் அதற்காக யார் வாசலிலும் போய் நிற்க மாட்டேன்.

July 04, 2008

'தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ்' - அத்வானி

மழை மேகங்களுக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். தேர்தல் மேகங்கள் தென்படுகின்றன. தொடைதட்டும் ஓசைகள் அரசியலில் கேட்கத்தொடங்கிவிட்டன.தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்கிறார் காங்கிரஸ் தலைவி.
தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறது காங்கிரஸ் என்கிறார் அத்வானி. வாயில் வருவதெல்லாம் கோதைக்கு பாட்டு என்கிற மாதிரி லாலு சொல்லுகிறதெல்லாம் ஜோக்காகிப்போய்விட்டது. கனவில் கூட அத்வானி பிரதமராக முடியாது என்கிறார் லாலு. இடதுசாரிகளை பார்லிமெண்டில் எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகிக்கொண்டிருக்கிறது. சமாஜ்வாதியின் சகாயத்தினால் ஆட்சி சரிந்துபோகாது என்று தெரிகிறது. மத்தியில் தேர்தல் மேகங்களால் தமிழ்நாட்டிலும் குளிர்காற்று வீசத்தொடங்கிவிட்டது. 'அண்ணன் எப்போது வெளியேறுவான்...திண்ணை எப்போது காலியாகும்' என்று நான்கு வருடங்களாக காத்திருக்கிறது பிரதான எதிர்க்கட்சி.'பசித்தவனுக்கு குழம்பெல்லாம் வேண்டாம்' என்கிற மாதிரி கிடைக்கிற ஆட்களை கட்சிக்குள் கொண்டுவரும் வேலையை எப்போதோ தொடங்கிவிட்டது அம்மாவின் அணி.'இரண்டிலொன்றில் இணையமாட்டோமா...இரண்டொரு இடங்களாவது கிடைக்காதா' என்று கணக்குபோடும் நடிகர்களின் அண்மைக்கால கட்சிகள்...'சூடிய பூவாக இருந்தாலும் பரவாயில்லை. வாடிய பூ வேண்டாம்' என்று ஏதாவதொரு நடிகரின் துணையைத் தேடும் திராவிடக்கட்சிகள்...
"கட்சியாக இருப்பவர்களுக்குத்தான் கவலை. குழுக்களாக இருக்கும் எங்களுக்கென்ன கவலை. சொந்தக் காரியம் ஜிந்தாபாத். இருக்கவே இருக்கிறது டெல்லி காட்டும்பாதை" என்கிறது காமராஜ் ஆட்சி என்கிற சொப்பனத்தில் இருக்கும் காங்கிரஸ். பதவிசுகம் அனுபவித்து விட்ட பாட்டாளிகளோ காற்று வீசும் திசைக்காக காத்திருக்கிறார்கள். மாநிலத்தில் அமையப்போகும் அணிகள் மத்தியில் அமையப்போகும் அணிகளுக்காக காத்திருக்கின்றன. வளைந்து போனாலும் வழியோடு போகணுமல்லவா?இயங்கிக்கொண்டிருக்கும் 'லாபி'கள் இப்போது ஓவர்டைம் செய்து கொண்டிருக்கின்றன.
"மத்தியிலும் பதவி வேண்டும். மாநிலத்திலும் பதவிவேண்டும். அதுமாதிரி ஏதாவது பாரப்பா..? "இது அதிகார மையங்களின் கட்டளை.
'ஃபீலர்'களின் வாகனங்களுக்கு பெட்ரோல் கூடுதலாக தேவைப்படுகிறது. தேர்தல் லாவணியில் கேள்விகளும் எதிர்க்கேள்விகளும் சாதாரணமாக இருக்கப்போவதில்லை. பதவி சுகத்தில் இருந்தவர்களுக்கு முள்ளாய் குத்தும் கேள்விகள் தயாராகிவிட்டன.
விலைவாசி ஏன் உயர்ந்தது?
விலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் என்ன செய்தது?
நீயும்தானே ஆட்சியில் இருந்தாய்? நீ என்ன செய்துவிட்டாய்?
நீ ஏன் ராஜினாமா செய்யவில்லை?
மதுக்கடையை ஏன் திறந்தாய்?
மணல்கொள்ளையில் ஆதாயமா?
பதுக்கலைப்பார்த்து ஏன் பதுங்கிப்போனாய்? இப்படிப்போகும் கேள்விகள்.
அன்னாடங்காச்சி பகல் கஞ்சி குடித்துவிட்டு அரைத்தூக்கத்தில் இருந்தார். மாலைநேரக்கல்லூரிக்குப் போன அவருடைய மகன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.,
"ஏண்டா, காலேஜுக்கு போவலை?"
"இல்லேப்பா, காலேஜு இல்லை."
"என்னடா ஆச்சு?'
"சாயந்திர காலேஜுக்கு வாத்தியாரெல்லாம் இன்னும் போடலியாம். லெக்சரர் எல்லாம் வந்தப்புறம் வாங்கன்னு எளுதிப்போட்டிருக்கு"
"எப்போ வருவாங்களாம்?"
"அரசாங்கத்துலேந்து ஆர்டர் போட்டு புது லெக்சரர் போடணுமாம். அடுத்தவாரம் வந்து பாருங்கன்னு சொல்லிட்டானுக."
"யாருடா சொன்னது?"
"பிரின்ஸ்பால்தான்"
"அது என்னடா பிரின்ஸ்பாலெ மரியாதெ இல்லாமெ பேசுறே?"
"காலேஜுலே எல்லாரும் அப்பிடித்தான் சொல்லுவானுக. அது பலக்கமாயிப்போச்சு"
"ஏய்...அது என்னடா பலக்கம்...? பழக்கம்னு சொல்லுடா?"
"இப்போதானே செம்மொழி கட்டிடம் தொறந்திருக்காங்க. கொஞ்சநாள் போவட்டும். கத்துக்குடுவேன்"
- அன்னாடங்காச்சி