November 02, 2011

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

7 ஆம் அறிவு படம் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். தங்கம் ஆசிரியர் ஷேக் மொய்தீன் அக்டோபர் 26 ஆம் தேதி “படம் எனக்கு பிடித்திருக்கிறது. படத்தை பாராட்டி வரும் தங்கம் இதழில் எழுதுவதாக இருக்கிறோம். நீங்கள் அவசியம் பாருங்கள்” என்றார். சரியென்று ஒருவழியாக குடும்பத்தோடு சென்று பார்த்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் கவின் சொன்னான், “தசாவதாரம் கதையையே எடுத்து இருக்காங்கப்பா. அதுலேயும் ஆரம்பத்துல அந்தக் காலத்து சம்பவம் வரும். இதுலேயும் அது மாதிரிதான். அதுல அமெரிக்காவிலிருந்து, ஒருத்தன் மோசமான கிருமியை தேடி இந்தியாவுக்கு வருவான். இதுல சீனாவுல இருந்து ஒருத்தன் வர்றான்.” என்றான்.

உண்மைதான். தசாவதாரம், வைணவப் பெருமையோடு அய்யங்கார் உயர்வை பேசியது. நேரடியான பார்ப்பனிய கருத்தை அய்யங்கார் Version ஆக காட்டியது. 7 ஆம் அறிவோ, இந்து பார்ப்பனிய சார்பு நிலைக்கு தமிழன் Paint அடித்திருக்கிறது.


தசாவதாரம், 7 ஆம் அறிவு இரண்டும், கதையில் மட்டுமல்ல, பவுத்தம் பற்றிய கருத்துக்களை இருட்டடிப்பு செய்ததிலும் ஒரே மாதிரி இணைந்திருக்கின்றன.
தசாவதாரம், வைணவ கோயில்களை சைவர்கள் இடித்ததாக காட்டியது. ஆனால் வரலாற்றில் பவுத்த கோயில்களை வைணவர்கள் இடித்ததே அதிகம்.
ஸ்ரீ ரங்கநாதனிலிருந்து, காஞ்சிபுரம் அத்தி வரதர், திருமலை கோவிந்தா வரை அந்த சிலைகள் இருக்கும் நிலை, உலகம் முழுக்க புத்தர் சிலைகள் இருக்கும் நிலை.


குறிப்பாக பள்ளிகொண்ட நிலையிருக்கும் புத்தர் சிலை உலகப் புகழ் பெற்றது. அதுதான் ஸ்ரீ ரங்கத்திலிருக்கிறது.

***


போதிதர்மன், புத்தனின் பாதங்களில் சரணடைந்தான். அவன் ஒரு பவுத்தன். போதிதர்மன் தமிழன் என்பதினாலோ சித்த வைத்தியனாகவோ சீனாவிற்கு செல்லவில்லை. புத்தரின் கருத்துக்களை சுமந்து கொண்டுதான் அவன் சீனாவிற்கு சென்றான். போதிதர்மன் தமிழனாக மட்டும் இருந்திருந்தால், காஞ்சிபுரத்தில் அவன் இருந்த தெருவுக்கே தெரிந்திருக்க மாட்டான். பவுத்தனாக இருந்ததினால்தான், அவன் உலகமெங்கும் உள்ள பவுத்த நாடுகளில் கொண்டாடப்பட்டு, இந்து ஜாதி வெறி பவுத்த எதிர்ப்பு மன்னர்களால், தமிழகத்தில், இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்டான். புத்தரை எந்த பிராந்திய, மொழி உணர்வுகளுக்குள் அடக்க முடியும்? அவருக்கு இந்தியாவில் என்ன மரியாதை இருக்கிறது? பிறகு அவரின் சீடனுக்கு மட்டும் என்ன மரியாதை இருக்கும்? நல்லதும் கெட்டதும் புத்தருக்கு என்ன நேர்ததோ அதுவே அவர் சீடர்களுக்கும் நேர்ந்தது.


போதிதர்மனிடம் பவுத்தத்தை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமில்லை. ஆக, அவன் தமிழனல்ல. பவுத்தன்.


ஆனால், 7 ஆம் அறிவு பவுத்ததிடமிருந்து அவனை பிரித்து, தமிழனாக அடையாளப்படுத்துகிறது. சிக்கல் அதிலிருந்தே, அதனாலேயே துவங்குகிறது.
தமிழன் என்பதற்கு மொழியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லுபடியான அடையாளங்கள் இல்லை. அதனால்தான் இந்து அடையாளங்களை எல்லாம் தமிழன் அடையாளமாக காட்ட வேண்டிய மோசடியும் அறியாமையும் இணைந்து, 7 ஆம் அறிவாக அவதாரம் எடுத்திருக்கிறது.


“இன்னைக்கு வந்திருக்கிற கடிகாரம் என்னங்க நேரம் காட்டுது, ஒவ்வொன்னும் ஒவ்வொரு நேரம் காட்டுது. எங்க பாட்டி சூரிய வெளிச்சத்த வைச்சே சரியான டைம் சொல்லுவாங்க. துல்லியமா இருக்கும். அதாங்க நம்ம தமிழனோட அறிவியல்” என்று சுவிஸ்லிருந்து வாங்கிய, கருணை கிழங்கு சைசு கடிகாரத்தை கையில கட்டிக்கொண்டு பேசுகிற ஒரு ……… மாதிரி,
இந்த படத்துலேயும் வாழ்க்கையை நவீன அறிவியல் வளர்ச்சியின் மீது வசதியாக வைத்துக் கொண்டு, வாயலேயே வடை சுடுகிற வசனங்கள் நிறைய இருக்கு.


“நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வீரத்தையும நாகரீகத்தையும் இந்த உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தாங்களே அவுங்கதான் உண்மையான தமிழர்கள்” என்று வசனம் பேசிவிட்டு, பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’ என்று தமிழனின் பெருமையாக பேசுகிறது. ஆரிய பட்டா தமிழனா? பெயரிலேயே ஆரிய என்று இருக்கிறது.


பட்டறிவுக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்னவென்று சொல்வது? நல்லா.. வருது.. சொன்னா அசிங்கமாயிடும்.


நவீன தொடர்பு சாதனங்களின் உச்சமான இணையத்தில், Face Book ல் ஜாதி பெருமை பேசுகிற படித்த ஒருவனைப் போல், கிராபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தமிழனின் பெருமையாக இந்துப் பெருமை பேசுகிறது 7 ஆம் அறிவு.

(எப்படியோ சிரமப்பட்டு சினிமாகாரனா ஆயிடுறாங்க. பிறகு கருத்து கந்தசாமியா மாறி கண்டத சொல்லி நம்ம தாலிய அறுக்குறாய்ங்க. இருக்குற முக்கியமான வேலையெல்லாம் உட்டுட்டு இந்த அக்கப்போருக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தொலைக்க வேண்டியதா இருக்கு.)


நம்ம ஊர்ல சண்டைன்னு வந்துட்டா மண்ண வாரி தூத்துறதுதான் வழக்கம். அதையே கிராபிக்ஸ்ல, அப்படியே புழுதிய கிளப்பி போதிதர்மன் எதிரி மேலே குப்பையை வாரி அடிப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். இந்த முறையை சென்னை Corporation க்கு சொல்லிக் கொடுத்தா, சென்னையாவது சுத்தமாகும்.
கொடிய தொற்று நோயிலிருந்து சீன மக்களை காப்பாற்றுவதற்காக போதி தர்மன் சீனாவிற்கு போனாராம்.


ஆனால், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60 வயதை தாண்டியது.


அதுபோல், சீன மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்தியது, போதிதர்மனின் குங்பூ கலையல்ல. மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே.


‘மனிதர்களை கொன்று நரபலி கொடுக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்தபோது, நாம் கலைகள் பல வற்றி்லும் மருத்துவம்…’ என்று பெருமை பேசுகிறது படம்.


போன நூற்றாண்டுவரை பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் உயிரற்ற கணவனின் உடலோடு, ஒன்றாக வைத்துக் கொளுத்திய இந்து சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி இந்த ‘பெருமையை’ கூச்சமில்லாமல் எழுத முடிந்தது?


ஹாலிவுட் படங்களை பார்த்து, வில்லனுக்கு கிறிஸ்துவ பெயர்களை வைக்கிற தமிழ் பட இயக்குநர்கள், கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள். அதுவும் விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.


இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்.


‘ஊழல் விஞ்ஞானியாக வருகிறவருக்கு பெயர், ரங்கராஜன்தானே. அது பிராமண பெயர்தானே’ என்று சிலர் பதில் சொல்லலாம். அது சரி, தமிழை குரங்கு என்று சொன்னவர் பெயர் நெல்சன். உளுந்தூர்பேட்டை ஊரு. அவரைத்தான் மிக அசிங்கமான வார்த்தையால் சுபா சீனிவாசன் திட்டுவார்.
தமிழுக்கு எதிராக கருத்து சொன்னவர் நெல்சன் என்கிற கிறித்துவ குறியீட்டோடு, படத்தின் கடைசியில் ‘மதம் மாற்றத்தினால் நம் அடையாளத்தை அழித்து விட்டார்கள்’ என்ற அறிவுரையை பொறுத்திப் பார்த்தால் புரியும். ஆனால், போதிதர்மனின் சிறப்பே அவர் புவுத்தனாக மதம் மாறியதுதான்.


ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக உருவானதற்கு அவர் குடும்பத்தின் கிறித்துவ மதமாற்றம் ஒரு முக்கியக் காரணம். கிறித்துவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் இசை துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கிறித்துவ மதம் எந்த வகையில் தமிழனின் அடையாளத்தை மறைத்தது.
(பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அதிக சத்தத்தோடு சிரமப்படுத்திட்டாரு. பாடல்களில் இளைராஜா சாயில் அமைந்த, எம்மா..எம்மா.. காதல் பொன்னம்மா… பாடல், அபூர்வசகோதரர்கள் படத்தில் வந்த ‘உன்ன நினைச்சு பாட்டு படிச்சேன்..தங்கமே..’ என்ற பாடலை நினைவுபடுத்தியது. சூழலும் அந்த படம்போன்றே சர்க்கசில் வேலை செய்பவரின் காதல் தோல்வி. அதற்காகத்தான் அதே எஸ்.பி.பியை பாட வைத்தார்களோ? சீன இசை பாடல், ‘டிவிங்கிள், டிவிங்கள் லிட்டில் ஸ்டார்…’ Rhymes யை நினைவுட்டியது.)


“நம்முடைய வீரமும், பெருமையும் நமக்கு தெரியக்கூடாது என்பதினால், நம்ம ஆண்ட ஒவ்வொருத்தரும் அத திட்டமிட்டு மறைச்சிட்டாங்க” என்று வீரமாக பேசுகிறார் போதிதர்மனோட DNA.


சரி, வீரமா இருந்த நம்மள ஒருத்தன் மட்டுமா, ‘ஒவ்வொருத்துனும்’ எப்படி அடிமையாக்கி ஆண்டான்? அப்போ நம்ம வீரம் அப்படிங்கறது என்ன?

‘மஞ்சள உடம்புல பூசிக்கிறத மருத்துவம்ன்னு சொல்லிக் கொடுங்க..’ சரி. சொல்லிக் கொடுத்துடலாம். ஆனால், பொம்பளதான் மஞ்சள் தேச்சி குளிக்கனும்னு இருக்கே, அதுக்கு என்ன சொல்றது?

இதுபோக, சீன எதிர்ப்பு, இலங்கை தமிழர்களின் துயரங்களை நினைவூட்டுவது போன்ற வசனம் இவைகள் எல்லாம் புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்களை குறிவைத்து எழுதப்பட்ட எப் எம் ரைட்ஸ் வசனங்களாகத்தான் இருக்கிறது. இலங்கைக்கு 7 ஆம் அறிவு போகும்போது அந்த வசனங்களை தூக்கிட்டுதான் அனுப்புவாங்க. இல்லன்னா சிங்கள அரசு இந்தப் படம் எடுத்தவங்கள சூ…. லேயே சுடுவான்.


ஆனால், இங்கு இருக்கிற இளியச்சவாய் தமிழன்கிட்ட மட்டும் இடஓதுக்கிட்டுக்கு எதிரான வசனங்களோட திரையிடலாம். காரணம் நம்மதான் தமிழர்களாச்சே.


இதுல பெரிய கொடுமை படத்தோட தயாரிப்பாளர் இடஓதுக்கிட்டுகாகவே கட்சி நடத்துகிற திமுக தலைவரோட பேரன். கஷ்டம். யாருக்கு? யாருக்கோ!

***


பல்லவ மன்னர்களை தமிழர்களாக காட்டியிருக்கிறது 7 ஆம் அறிவு. அவர்கள் தமிழர்களா இல்லையா என்கிற பட்டிமன்றம் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் பவுத்தர்கள் இல்லை.


களப்பிரர்கள் என்கிற சமண மற்றும் பவுத்த மன்னர்களின் காலங்கள் முடிந்த பிறகு, துவங்குகிறது பல்லவர்களின் காலம். களப்பிரர்கள் சமணர்கள் என்பதினாலேயே அவர்களின் காலத்தை இருண்ட காலம் என்று, வரலாற்று ரீதியாக பொய் சொல்லப்பட்டது.


அவர்கள் நிச்சயம் தமிழர்கள் இல்லை என்பது மட்டுமல்ல தமிழின் விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.


பல்லவர்களின் பவுத்த வெறுப்பும், சமஸ்கிருத விருப்பும், சைவ, வைணவ சமயங்களுக்கு அவர்கள் விளக்கு பிடித்த காரணத்தினாலும் அவர்களின் ஆட்சி சிறப்பானது, அவர்கள் தமிழர்கள் என்றும் கட்டுக்கதை பரப்பப்பட்டது. பல்லவர் காலத்தில்தான் தேவாரம் எழுதிய திருஞானசம்பந்தனும், திருநாவுக்கரசும் சமண சமயத்தை கொன்று, சாகும் தருவாயில் இருந்த, சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர்.


அதேபோல் வைணவத்திற்கும் பல்லவர்கள் தீவிட்டி பிடித்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்களை ‘மங்களா சாசனம் செய்த திருப்பதிகள்’ என பல்லவர்களால் அழைக்கப்பட்டன. பல கிராமங்கள் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தானமாக தரப்பட்டன.


பவுத்தத் துறவிகளை கேலி செய்து மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் வட மொழியில் எழுதியுள்ளான். எவனெல்லாம் சமண, பவுத்த சமயங்களை தீ வைத்துக் கொளுத்தி, சைவ சமயத்திற்கு தீவிட்டி பிடித்தானோ அவனை எல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள், தேர்ந்த கதாசிரியர்கள் போல், மகா மன்னர்கள் என்றும் பச்சைத் தமிழர்கள் என்றும் கதைகளையே வரலாறாக எழுதினார்கள்.


அப்படித்தான் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன் போன்றவர்கள், ஆனந்த விகடன் கிருஷ்ணமூர்த்தியாக இருந்து பின் கல்கி அவதாரம் எடுத்த, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கு மகா மன்னர்களாக தெரிந்தார்கள். அதனால்தான் பொன்னியன் செல்வனில் ராஜராஜ சோழனையும், சிவகாமி சபதத்தில் நரசிம்ம பல்லவனையும் தமிழனின் சிறந்த மன்னர்களாக சித்தரித்தும் பவுத்த மன்னன் புலிகேசியை வில்லனாகவும் கதை எழுதினார்.


அதன் பொருட்டே இன்றுவரை ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், புலிகேசி மன்னர்களை கோமாளிகளாக சித்தரித்து தொடர்ந்து கார்டூன், ஜோக் என்று நக்கலடிக்கிறார்கள். ஆனந்த விகடனில் பயிற்சி எடுத்த ஒரு இயக்குரும் புலிகேசி மன்னனை கோமாளியாக படம் எடுத்தார்.


கல்கிக்கும், இந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களும் இவரைப்போல் நாவல்கள்தான் எழுதினார்கள்.
டாக்டர் அம்பேத்கர் சொல்வார், ‘இந்தியாவிற்கு ஒரு முறையான வராலாறு என்று சொன்னால், அது பவுத்ததிற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டம்தான்’ என்பார்.


7 ஆம் அறிவில் குறிப்பிடுகிற காலம் முதலாம் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் காலம். ஏறக்குறைய திருநாவுக்கரசு சைவ சமயம் பரப்பிய காலம். அதற்கு பிறகு இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேஸ்வரவர்மன் இவர்களுக்குப் பிறகு இரண்டாம் நரசிம்மவர்மன் காலம். இவன் காலத்தில்தான் தேவாரம் பாடிய சுந்தரர் இந்த மன்னனின் துணையோடு, சமண சமயத்தை சூறையாடி, சைவ சமயத்தை பரப்பிய காலம். இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டதுதான் காஞ்சி கைலாச நாதர் கோயில்.


அந்தக் கோயில் கல்வெட்டுகளில், அவன் தன் வரலாறை முழுக்க சமஸ்கிருதத்தில் பதித்துள்ளான்.


ஆக, 7 ஆம் அறிவில் காட்டப்படுகிற போதிதருமன், பல்லவ ராஜகுமாரன் அல்ல, அவன் பல்லவர்களால் ஒடுக்கபட்ட பவுத்த போதகர். காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த மடத்தில், பயின்றவர். ‘இனி இங்கு பவுத்தத்தை பரப்ப முடியாது’ என்ற காரணத்தால், சீனா சென்றவர். அவரைப் போலவே அவருடன் படித்த போதிருசி என்பவர் ஜப்பான் சென்றார்.


சரி, போதிதர்மனை தமிழன் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அந்த பெருமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரின் உயரிய கருத்துக்களை பின்பற்றுவதற்கு பதில், வள்ளுவரையே ‘தன் ஜாதிக்காரர்’ என்று எல்லா ஜாதிக்காரனும் உரிமை கொண்டாடுகிறான்.


இப்படி ஜாதி வெறி பிடித்த படித்த தமிழர்களிடம், போதிதர்மனை பரிந்துரைப்பதின் மூலம், இனி போதிதர்மனையும் தங்கள் ஜாதிக்காரராகத்தான் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் தமிழின உணர்வு, ஜாதி உணர்வில்தானே முடிகிறது.


***


இந்தப் படத்தில், நாடு கெட்டுபோவதற்கான மூன்று முக்கிய காரணங்களாக சொல்லபடுவதில் முதல் காரணம் Reservations. இடஓதுக்கீடு. எனக்கும் கூட அப்படித்தான் தோணுது.


தந்தை பெரியார் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, கல்வியில் இடஓதுக்கீடும் கிராமப்புற பள்ளிக்கூடமும் கொண்டு வருவதற்கு பாடுபட்டார்.


ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமூகத்திலிருந்து படித்த வந்த சிலர், சினிமாகக்காரனாக மாறி இப்படி சமூகத்திற்கும், ஒடுக்கபட்ட மக்களுக்கும் எதிராக வாயில வர்றத எல்லாம் வசனமா எழுதிகிட்டு இருக்காங்க. இதுக்கா இவுங்க படிச்சது?


இதுக்கு இவுங்க பெசமா ஆடு, மாடே மேய்ச்சிருக்கலாம். அதுவே இவர்கள் எடுக்கிற சினிமாவை விட மேன்மையானது. சமூகத்திற்கு பயனுள்ளது.


வே.மதிமாறன்