June 29, 2008

"எல்லாம் பதவி சுகம்தான்" - தோலுரிக்கிறார் அன்னாடங்காச்சி

பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போவது சுகமா...? பல்லக்கில் ஏறிப்போவது சுகமா...? என்னப்பா கேள்வி இது? ஏறிப்போவதுதான் சுகம். திராவிடக் கட்சிகளுக்கு இரண்டுமேசுகம்தான்... எப்படி? மத்திய அரசாங்கத்தின் ஓட்டைப்பல்லக்கைத் தூக்கிக்கொண்டுசுகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்களே!
எல்லாம் பதவி சுகம்தான். மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் 'எங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார்கள். தமிழ்நாட்டில் பல்லக்கு சவாரி. சுகமான சவாரி. யார் வேண்டுமானாலும்சுமக்கலாம். ஏறிக்கொள்ள இடமில்லை. சுமக்கிறவர்களுக்கு சுமக்கிற சுகம் மட்டுமே. சண்டித்தனம் செய்தால் 'டூ' பணக்காரன் பொன்னை எடுக்கணும்னா பாட்டாளியோட கடப்பாரைதானே வேண்டியிருக்கு? பாராட்டு மொழிகளுக்கு அகலத் திறந்துகொள்ளும் செவிகள் குற்றச்சாட்டுகளுக்குஅடைத்துபோய்விடுகிறது. கொள்ளுக்கு வாயைத்திறக்கும் குதிரை கடிவாளத்திற்கு இறுக மூடிக்கொள்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கிறது. வேலைக்குப்போகவேண்டுமென்று அவசியமில்லை. சுகமாக சாவடியில் படுத்து தூங்கலாம். விளைவு. விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை. ஆங்காங்கே குளங்களில் மராமத்து நடந்திருக்கிறது. நீர் நிலைகள் நிரம்பிக்கொண்டிருக்கின்றன. விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது. விதையுடன் நம்பிக்கையையும் விதைக்கிறார்கள் இந்த ஆண்டு உணவுக்கு உத்திரவாதம் தெரிகிறது. இந்த சந்தோஷத்தை தூக்கிச் சாப்பிட்டுவிடும் ஒருபிரச்சினை முளைத்திருக்கிறது. உரத்தட்டுப்பாடு. இது செயற்கையான தட்டுப்பாடு. அரசியல்வாதிகள்தான் காரணம் என்கிறார்கள் விவசாயிகள். டிஏபி உரத்தின் மானிய விலை ரூ 486. ஆனால் கிடைக்கவில்லை. தனியாரிடம் ரூ 700-க்கு தாராளமாக கிடைக்கிறது. அரசுபத்தாயிரம் கோடி ரூபாய் உர மானியம் கொடுக்கிறது. கிராம அளவில் உள்ள உரவியாபாரிகளும் கந்து வட்டிக்காரர்களும் மானிய விலையில் விற்கப்படும் உரத்தைவிவசாயிகளின் பெயரில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமடிப்பதாகசெய்திகள். கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள்பெரும்பாலும் நெல்மண்டி அதிபர்களாகவோ, உர வியாபாரிகளாகவோ இருப்பார்கள். இவர்கள்விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும்போது கடனுக்கான வட்டியை கழித்துக்கொண்டு மீதிக்குஉரங்களைக்கொடுத்து விடுவார்கள். அறுவடை நேரத்தில் கடனுக்கு ஈடான தொகையை நெல்லாகவாங்கிக்கொள்வார்கள். ஒவ்வொரு பரிமாற்றத்திலும் லாபம் பார்ப்பார்கள். இதில் ஈடுபடும் தனிநபர்கள் எல்லோருமே அரசியல்வாதிகளாகஇருப்பதுதான் நாம் கவனிக்கவேண்டிய விசயம். மத்தியிலோ மாநிலத்திலோ எந்தக்கூட்டணி முறிந்தாலும் இவர்களின் கூட்டணி மட்டும் முறிந்துபோகாது.
விவசாயிகளின் பெயரில் உரங்களை வாங்கி பதுக்கும் துணிவு அரசியல் தொடர்பினால் ஏற்பட்டுவிடுகிறது. தமிழக அரசு விரைவாக செயல்படவேண்டும்.

அன்னாடங்காச்சி எழுதிக்கொண்டிருக்கும்போது வீட்டிற்குள்பேச்சுக்குரல் கேட்டது. அவரது மனைவிக்கும் விருந்தாளியாக வந்த நாத்தனாருக்கும் உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

"காலைலே ஆறு மணிக்குபோயிடும்."
"அடக்கடவுளே! அப்புறம் எப்பவரும்?"
"எட்டு மணிக்குவந்திடும்."
"சரிதான்.ரெண்டுமணிநேரம்தானே?"
"ம்ஹும்..அப்புறம் மறுபடியும்பத்துமணிக்கு போயிட்டு..."
".....போயிட்டு..."
"பன்னிரண்டு மணிக்குவந்திடும்"
"பாழாப்போச்சு...போ..."
"மறுபடியும் நாலுமணிக்கு போயிட்டுஆறுமணிக்கு வந்திடும்."
"அப்புறம் ராத்திரி எட்டுமணிக்குபோயிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் வந்திடும்."
"இது தேவலையே... எங்க ஊர்ல எப்போநிறுத்துவான் எப்போ விடுவான் என்கிற கணக்கெல்லாம் இல்லே. நின்னுபோன கரண்டு திரும்பிவந்தாத்தான் நிச்சயம்"

"ஏங்க...தமிழ்நாட்டிலே கரண்டு பிரச்சினை இப்படி இருக்கறப்போநீங்க அதெ கவனிக்காம சிடி போட்டுக்கேட்கப்போய் ஜனங்க கவனமெல்லாம் அதிலேபோயிட்டுதுங்க"

"அடுத்த வருடமாவது கரண்டு பிரச்சினெயெ தீர்க்கப்பாருங்க."
"கரண்டு பிரச்சினையில தலை உருளற மாதிரி உரப்பிரச்சினையிலேயும் தலை உருளாம பாத்துக்குங்க!"

- அன்னாடங்காச்சி

நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை

பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு வெற்றித் தேடித்தந்த முன்னாள் ராணுவத் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், வி.ஐ.பி அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வங்கதேச முப்படைத் தளபதிகள் மட்டும் நன்றி மறக்காமல் தங்கள் நாட்டின் விடுதலைக்கு காரணமான மானக்ஷாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு போர் நடந்தபோது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் மானக்ஷா. இவர் வகுத்த போர் யுத்திகள்தான், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைய வழிவகுத்தது. அப்படி நாட்டையே காப்பாற்றிய ராணுவ தளபதி மானக்ஷா தனது 94 வயதில் நேற்று முன்தினம் இறந்தார்.

நியாயப்படி பார்த்தால் முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ இறந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட இவருக்கு அதிகமாகவே கொடுத்திருக்கவேண்டும். ஆனால், மானக்ஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட எந்த அரசியல் வி.ஐ.பி.க்களும் நேரில் வரவில்லை.

ஏன், நமது நாட்டின் முப்படைத் தளபதிகள் கூட இதில் கலந்து கொள்ளாததுதான் வருத்தம் அளிக்கும் விஷயம்.

தரைப்பட தளபதி ரஷ்யா சென்றுள்ளதால், அவரால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் கூறலாம். ஆனால் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, விமானப்படை தளபதி மேஜர் ஆகியோர் டெல்லியில்தான் இருந்தனர். அவர்கள் நேரில் வராமல் தங்கள் சார்பில் மலர்வளையம் வைக்க தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பிவைத்து விட்டனர். ராணுவ இணையமைச்சர் பள்ளம் ராஜூ மட்டும் இந்தியா சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார். மற்றவர்கள் சார்பில் மலர்வளையம் மட்டுமே வைக்கப்பட்டது.

வங்கதேச விடுதலைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி மானக்ஷா காரணமாக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டின் முப்படை தளபதிகள் சமீன், அலீம் சித்திக்தி ஆகியோர் நேரில் ஆஜராகி மானக்ஷாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களின் நன்றி உணர்வு கூட, சொகுசு வாழ்க்கையில் புரளும் நம் நாட்டு வி.ஐ.பி.க்களுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை. பேருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் பலர் இருந்து விட்டனர்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஆட்சியை கவிழாமல் காப்பாத்துவது எப்படி என்ற தீவிர ஆலோசனையில் டெல்லி வி.ஐ.பி அரசியல்வாதிகள் இருந்துவிட்டனர். அவர்களே செல்லாதபோது நாம் ஏன் செல்ல வேண்டும் என மற்றவர்கள் இருந்து விட்டனர்.

இது குறித்து ராணுவ பிரிகேடியர் ஒருவர் கூறுகையில், "நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு இப்போது விழா கொண்டாடி மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டை காத்த உண்மையான ஹீரோக்களை போருக்கு பின் மறந்து விடுகிறார்கள்" என்றார்.