January 11, 2009

காங்கிரசின் பச்சைத்துரோகமும் தி.மு.கவின் ஒட்டுத் துரோகமும்!

காங்கிரசு கட்சியானது தமிழினத்திற்குத் தொடர் துரோகங்களைச் செய்து வருகிறது என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் காங்கிரசினும் தமிழினத்திற்கின்னல் விளைத்தார் எவரேனும் காட்டலரிது.
1956-ல் தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றச்சொல்லி அறவழியில் உண்ணா நோன்பிருந்தார் சங்கரலிங்கனார். 76 நாள்கள் நோன்பிருந்தும் காங்கிரசின் வஞ்ச மனம் கனியவில்லை. இறுதியில் காலமானார் சங்கரலிங்கனார். இத்தனைக்கும் சங்கரலிங்கனாரும் ஒரு காங்கிரசுக்காரர்தான். காந்தியாருடன் தண்டியாத்திரை சென்றவர் அவர்.தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர் என்பதற்கு இது சான்று. அந்த சூக்குமம் புரிந்ததால்தான் எந்தத் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரரும் தமிழ் தமிழர் என்று பேசுவதில்லை என்பதை ஓர்க. வெள்ளையர் போனபின்னர் தமிழ்நாட்டிற்காக, தமிழருக்காக உயிர் ஈந்த இவரோடு காங்கிரசின் கணக்கு தொடங்கி குறி வைத்து தமிழினத்தை அது அழித்து வருகிறது.

"தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர்"
1965-ல் இந்தி மொழியை தமிழர்களிடம் வலிந்து திணித்த காங்கிரசு, அதற்கெதிராக கிளர்ந்த தமிழ் மக்களை, காவற்துறையாலும், அரணம் கொண்டும் சுட்டுப் பொசுக்கியது. அந்தக் கொடுமையான 1965 ஆம் ஆண்டின் பிப்ரவரி 8-க்கும் 12-க்கும் இடையேயான 5 நாள்களில் மட்டும் சுடப்பட்டுக் கொல்லப் பட்டவர்கள் 63 பேர். பிப்ரவரி 12 ஆம் நாள் மட்டும் கொல்லப் பட்டவர்கள் 31 பேர். பலரின் சோதனைகளும் வேதனைகளும் வெளியே வரவில்லை. திராவிடக் கட்சிகளாய் இருந்தவை சொன்ன கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 145. அண்ணா என்ற சிறந்த தலைவரும், அவருக்குப் பெரியவராகப் பெரியாரும் இருந்து, இராசாசி, டி.டி.கே போன்றோரெல்லாம் இந்தி திணிப்பை எதிர்த்தபோதும், காங்கிரசின் தமிழ்ப் பகைமைக்கு, இரத்த வெறிக்குப் பலியானவர்கள் நூற்றுக்கும் மேல்.

ஒவ்வொரு தமிழரைக் கொன்ற போதும், "இந்தி தெரியாவிட்டால் நீ இந்தியனே இல்லை" என்று சொல்லிக் கொன்று போட்டன காங்கிரசின் வடக்கு மூளைகள்! அந்தப் பகையோடு 1967-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசு 1987-ல் தமிழீழத்தில் திலீபன் உண்ணா நோன்பிற்குக் காரணமாய் இருந்து அவர் உயிரையும் காவு வாங்கியது. காங்கிரசை காந்தியார் கலைக்க வேண்டும் என்று சொன்னது அதன் இரத்த வெறியை அறிந்ததனால் இருக்கக் கூடும்.

தமிழகத்தில் சங்கரலிங்கனாரையும், தமிழீழத்தில் திலீபனையும் பலிவாங்கியது காங்கிரசு. காந்தியம் பேசும் காங்கிரசிடம் அறப்போராட்டங்களும் செல்லாது என்பதற்கு தமிழினத்தின் மேல் அது தொடுத்த இந்தத் தாக்குதல்கள் காட்டா நிற்கின்றன.

தொடரும் அதன் தமிழின இரத்த வேட்கையே, 1987-ல் ஒன்னே கால் இலக்க அரணத்தை அனுப்பி, தமிழீழத்தில் 8000 பேரைக் கொன்றதும், கண்ணில் பட்ட மகளிரை சீரழித்ததும். மற்று, 2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கருணாநிதியுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு, மெல்ல மெல்ல தமிழீழத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளைக்கெடுத்து, தமது இத்தாலி வழி தொடர்புகளாலும், இந்தியாவின் பல்வேறு துறைசார் தொடர்புகளாலும் தமிழீழ மக்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி, சிங்களன் துணையோடு இன்றைக்குப் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று வருகிறது.
தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9668&lang=ta&Itemid=62