October 08, 2007

ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி பா.ஜ.க. வகுக்கும் புதிய வியூகம்

இராமரை வைத்து தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசை கலக்கிவரும் பாரதீய ஜனதாக் கட்சி தற்போது ஈழத் தமிழர்களுக்கான நிவாரண பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையில் குதித்துள்ளதால் மீண்டும் தமிழக அரசியலில் ஈழத் தமிழர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பக்கோரி தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம், பாரதீய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் வீடு வீடாக நிவாரணப் பொருள் சேகரிக்கும் நடவடிக்கை, ஈழத் தமிழருக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்புமாறு கோரி புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் பேரணியென தமிழகமே சூடாகியுள்ளது.

அன்புக்குரிய பேரன்களான மாறன் சகோதரர்களின் பிரிவு, தனது தலைக்கே விலை வைத்துவிட்ட இராமர் பிரச்சினையென தள்ளாத வயதில் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஈழத் தமிழர் பிரச்சினையும் தீராத தலைவலியாக இம்சை கொடுக்கும் நிலையில் தற்போது அதனையே அவரின் எதிர்க் கட்சிகள் கையிலெடுத்துள்ளதால் பெரும் நெருக்கடி நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இராமரை கற்பனையென கூறிய தனது நாத்திகத்தை காட்டமுயன்ற கருணாநிதி அதற்கு விலையாக தலையையும் தனது அரசையும் இழக்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொண்ட போதிலும் அவரின் அரசுக்கெதிரான நெருக்கடிகள், சவால்கள், சதிகள், அனுமான் வாலாக நீண்டுகொண்டே செல்கின்றன.

இதில் தற்போது பா.ஜ.க.வின் ஈழத்தமிழருக்கான உணவு சேகரிப்பும் சேர்ந்துள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பழ.நெடுமாறன் தலைமையில் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் பெருமளவு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஈழத் தமிழர்களிடம் கையளிக்குமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டபோதும் அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. பல தலைவர்கள், கட்சிகள் வேண்டுகோள்களை விடுத்தபோதும் தமிழக அரசோ, மத்திய அரசோ அதனை கவனத்தில் எடுக்கவில்லை.

இந்நிலையில் அவற்றை உடனடியாக ஈழத்தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த மாதம் யாழ்.குடாநாட்டுக்கான படகுப்பயண போராட்டத்தை பழ.நெடுமாறன் ஆரம்பித்தபோது அவர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் மேற்கொண்ட சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், வைகோ போன்றோரின் வாக்குறுதிகளினால் கைவிடப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பும் விடயம் தொடர்பாக இரு நாட்களுக்குள் பழ.நெடுமாறனுடன் நேரில் பேசுவதாக உறுதிகூறிய கருணாநிதி ஒரு மாதமாகின்ற போதும் இன்னும் பழ.நெடுமாறனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. பழ.நெடுமாறனுக்கு உறுதிகூறிய டாக்டர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்றோரும் இது விடயத்தில் மௌனம் சாதித்து வருகின்றனர்.

5 நாட்களாக தமிழகத்தை மட்டுமன்றி சர்வதேசத்தையும் தன் பக்கம் திருப்பிய பழ.நெடுமாறனின் போராட்டத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்த தமிழகத்தின் எதிர்க் கட்சியும் முன்னாள் இந்திய அரசுமான பாரதீய ஜனதாக் கட்சி தற்போது திடீரென ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்களாக நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதீய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழருக்கான நிவாரண பொருள் சேகரிப்பின் பின்னணி சகலருக்கும் தெரிந்தவிடயமாக இருக்கின்றபோதும் அதனால் கருணாநிதியின் அரசுக்கு நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனாலேயே கருணாநிதியை எதிர்க்க இராமரை ஒருகையிலெடுத்த, பாரதீய ஜனதாக் கட்சி தற்போது ஈழத் தமிழரையும் மறுகையில் எடுத்துள்ளது.

இராமர் பிரச்சினையை பூதாகரமாக்கிய பா.ஜ.க. அதன் மூலம் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமிடையே முரண்பாடுகளை தோற்றுவித்தது. இதனை ஒரு கட்டத்தில் தனது வாயாலே ஒப்புக்கொண்ட கருணாநிதி, மத்திய அரசின் நடவடிக்கைகள் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்திருந்தார். இராமர் பிரச்சினையால் கருணாநிதியின் அரசுக்கு எதிரான சில நிலைப்பாடுகளை காங்கிரஸ் எடுத்ததாலேயே கருணாநிதி இவ்வாறு கூறியிருந்தார்.

தற்போது பா.ஜ.க. ஈழத் தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கும் இதுதான் காரணம். ஈழத்தமிழருக்கு உதவும் விடயத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் இணங்காது என்பது பா.ஜ.க.வுக்குமட்டுமல்ல கருணாநிதிக்கும் நன்கு தெரிந்தவிடயம். பழ.நெடுமாறனின் உண்ணாவிரத போராட்டத்தைகூட மத்திய அரசு கணக்கிலெடுக்கவில்லை.

ஆனால், கருணாநிதியால் அவ்வாறிருக்க முடியவில்லை. பழ.நெடுமாறனின் போராட்டத்துக்கு பதிலளிக்காது விட்டால் தான் தமிழின விரோதியாகி விடுவேன் என்பது கருணாநிதிக்குத் தெரியும். அதேவேளை, இருதய நோயாளியான பழ.நெடுமாறனின் உயிருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதன் பிரதிபலிப்புகள் தனது ஆட்சிக்கே வேட்டுவைத்துவிடுமென்பதும் கருணாநிதிக்குத் தெரியும்.

அதனாலேயே பழ.நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதில் முனைப்பாகவிருந்த கருணாநிதி இரு நாட்களில் பழ.நெடுமாறனுடன் பேச்சுகளை நடத்துவதாக பகிரங்கமாக அறிவித்ததுடன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி மன்றாடினார். தனது விசுவாசிகள் மூலம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவும் செய்தார்.

இந்நிலையிலேயே பழ.நெடுமாறனின் உண்ணாவிரத போராட்டத்தின் பலாபலன்களை கூட்டிக்கழித்துப் பார்த்த பாரதீய ஜனதாக் கட்சி ஈழத் தமிழர் பிரச்சினையை கையிலெடுத்தால் கருணாநிதிக்கு சிக்கலை ஏற்படுத்தலாமென்பதை உணர்ந்துகொண்டதாலேயே தற்போது ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்களை எதிர்வரும் 11 ஆம் திகதி ஈழத் தமிழர்களிடம் கையளிக்குமாறு கூறி செஞ்சிலுவைச் சங்கத்திடம் பா.ஜ.க. ஒப்படைக்கவுள்ளது. ஆனால், ஈழத் தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்காது. இது தொடர்பில் தமிழக அரசும் எதுவித அழுத்தமும் கொடுக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இதனை வைத்துத்தான் பா.ஜ.க. தனது அடுத்த அடியை தி.மு.க. அரசுக்கு கொடுக்கப்போகின்றது. அதாவது, இராமர் பிரச்சினைமூலம் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசு என்பதை பிரசாரப்படுத்திய பா.ஜ.க. ஈழத் தமிழர் விவகாரத்தை கையிலெடுத்ததன் மூலம் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதமான அரசு என்னும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தப்போகின்றது.

ஆனால், இன்னொரு வகையில் ஈழத் தமிழர் சார்புக்கொள்கையை பாரதீய ஜனதாக் கட்சி எடுத்தமையை சாதாரண விடயமாகக் கருத முடியாது. ஏனெனில், பா.ஜ.க. முன்னாள் இந்திய அரசு, தற்போதைய பலமான எதிர்க்கட்சி. இதில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலமான அணியே உள்ளது.

இவ்வாறானதொரு கட்சி ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கினால் அதன் பிரதிபலிப்பு மிகவும் பெறுமதியானதாகவேயிருக்கும். ஆகையால்தான் பா.ஜ.க.வின் ஈழத் தமிழருக்கான நிவாரணப் பொருட் சேகரிப்பு அறிவிப்பினால் தமிழக அரசு மட்டுமன்றி மத்திய அரசும் கலக்கமடைந்துள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் இல.கணேசன், பட்டினியால் வாடும் ஈழத் தமிழருக்கு நாம் நிவாரணப் பொருட்களை தமிழகத்தில் வீடு வீடாக சேகரிக்கவுள்ளோம். இதில் முழு மூச்சாக எமது தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.

7 நாட்கள் சேகரிக்கப்படும் இந்த நிவாரணப் பொருட்களை ஈழத் தமிழர்களிடம் கையளிக்குமாறு கோரி எதிர்வரும் 11 ஆம் திகதி செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்படும். அவர்களின் சம்மதம் பெற்றே நாம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாம் கொடுக்கும் நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர்களிடம் கையளிக்க மறுக்கப்படுமானால் அதன் பின்னர் நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று கூறியுள்ளார்.

நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கின்றதோ இல்லையோ, தமது பிணங்களின் மீதும் தாம் சிந்தும் குருதிகள் மீதும் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் நன்றாகவே புரிந்துவைத்துள்ளனர்.

மரபுவழிப் பிரச்சினைகளைத் தீர்க்கவழி (ஸ்டெம் செல் ஆராய்ச்சி) - நோபல் பரிசு


கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்

நன்றி மக்கள் சட்டம்
அன்பார்ந்த நண்பர்களே. ரமலான் மற்றும் தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்தச் சில ஆலோசனைகள்...

1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாகப் பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.

3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.

4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.

5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.

9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.

10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.

11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரச்சினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் "ஸ்வாகா" செய்து விடும் அபாயம் உள்ளது.

17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.

18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது www.creditcardwatch.org என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.

(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)

-மக்கள் சட்டம் குழு


இன்றைய குறள்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு மேலும் ஒரு செல்வமாகும்

அறத்துப்பால் : அடக்கம் உடைமை

திருக்குறள் படிக்காமல் மார்க்சிஸம் படிப்பவன் உருப்பட மாட்டான்

"திருக்குறள் படிக்காமல் மார்க்சிஸம் படிப்பவன் உருப்பட மாட்டான் என்று சொன்னவர் ஜீவா, அதன்பின்தன் கம்யூனிஸ்ட்டுகள் பலரிடம் திருக்குறள் புத்தகம் இருந்தது. தமிழுக்கு கம்யூனிஸ்டுகளால் புதிய பெருமை கிடைத்ததற்குக் காரணம் ஜீவாதான். சிறந்த தமிழனாக உருவாக்கிக் கொள்ளாமல், சிறந்த கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் கொள்ளமுடியாது என்பது ஜீவாவின் கருத்து"
- ஜெயகாந்தன்

சே-குவராவின் நாற்பதாவது நினைவு தினம்

  • கியூபாவின் புரட்சிகர கதாநாயகர்களில் ஒருவரும், சமீபத்திய தசாப்தங்களில் தோன்றிய அதிகபட்ச ஆளுமை நிறைந்த குறியீடுமான எர்னெஸ்டோ சே-குவரா அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மரணத்தை தழுவிய நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளை கியூபா இன்று கடைபிடித்தது. சே என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, எர்னெஸ்டோ குவேரா அவர்கள், பிடெல் கேஸ்ட்ரோ அவர்கள் தலைமையிலான போராளிகளில் ஒருவராக செயல்பட்டார். இந்த போராளிக் குழுவினர், கியூபாவின் தலைவராக இருந்த புல்ஜென்ஷியோ பட்டிஸ்டோ அவர்களை 1959 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார்கள். அர்ஜெண்டினாவில் பிறந்த சே-குவரா அவர்கள், போலிவியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்கு உதவுவதற்காக அங்கு சென்றபோது, பொலிவிய ராணுவத்தினர் அவரை தொடர்ந்து சென்று, 1967 ஆம் ஆண்டு கொலை செய்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் கடைசியிலிருந்து, சே-குவராவின் கொள்கைகளும், தோற்றமும், அமைதியற்ற இளம் தலைமுறையினர் பலருக்கு தூண்டுகோலாக, ஆகர்ஷ சக்தியாக இருந்து வருகிறது. சே-குவராவின் தாடி மண்டிய முகத்தின் படத்தை தாங்கிய டி ஷர்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகின்றன.
  • காச நோய்க்கெதிரான மருந்துகளின் விநியோகம் : காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது எக்ஸ்ரே ஆராயப்படுகிறதுஉலகின் 19 நாடுகளுக்கு காச நோய்க்கெதிரான மருந்துகளை விநியோகிப்பதில், உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகள் சபையும் கூட்டாக செயற்படவுள்ளன
  • பாகிஸ்தானின் துணை இராணுவத் தளபதியாக உளவுத்துறையின் முன்னாள் தலைவர் நியமனம் : பாகிஸ்தானின் உளவுத்துறையின் முன்னாள் தலைவரான ஜெனரல் அஸ்ஃபாக் கியானி அவர்கள், இராணுவத்தின் துணைத்தளபதியாக பதியேற்றுள்ளார்
  • இராக்கில் உள்ள பிரிட்டிஷ் படையினரை குறைக்கும் திட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் அறிவிப்பு : இராக்கில் இருக்கும் பிரிட்டிஷ் படைகளில், பாதி படையினருக்கும் அதிகமானவர்களை குறைப்பதற்கான திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்ணைத்தளபதியாக பதியேற்றுள்ளார்
  • மருத்துவத்துக்கான நோபல் பரிசு : இந்த வருடத்துக்கான நோபல் பரிசு, மரபணுக்களை இலக்கு வைத்தல் என்ற தொழில்நுட்பத்தை விருத்தி செய்த, இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டன் நாட்டவர் ஒருவர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது

தங்களின் படைப்புக்களில் ஆண்வர்க்கத்தைக் கடுமையாகச் சாடுவதாக ஒரு கருத்து நிலவுவது உண்மையா?

அப்படியெல்லாம் இல்லை. ஆனால் இதுவரை இருந்து வந்து கொண்டிருக்கின்ற ஆணாதிக்கப் பார்வைகளுக்கு மாற்று சிந்தனைகளை முன் வைப்பது ஆணாதிக்க சிந்தனைகளுக்குள் இருப்பவர்களுக்கு கலவரத்தை உண்டு பண்ணுகின்றது
கால் சென்டர், இணையம், தொலைக்காட்சி மற்றும் சினிமாவால் நமது கலாசாரம் சீரழிந்து வருகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
அறிவியல் முன்னேற்றங்களை நிராகரிக்க முடியாது, சீரழிக்கின்றதாய் சொல்லுகின்ற இணையம்தான் என்னை இலக்கிய உலகிற்குத் தந்திருக்கின்றது. அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கபூர்வமாக சிந்தனைகளின் வழி நடைமுறைப் படுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு இருந்தால், கலாசாரம் மாறுபடும் போதும் கெட்டு விட்டதாய் தோன்றாத தளத்தில் இருந்து கொண்டிருக்கும்.