October 21, 2015

திண்ணையில்... நானும் என் ஈழத்து முருங்கையும்

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி தன் மண்ணைவிட்டு வரும்போது, தன் கொள்ளைப்புறத்தில் பல வருடங்களாய் பாசத்தோடு பார்த்து பார்த்து  வளர்த்த, அந்த முருங்கை மரத்தை மட்டும் விட்டுவர மனம் வருமா என்ன? போரின் உச்சத்தில் உணவுப் பண்டங்கள் வாங்கக் கூட வெளியில் செல்ல இயலாத நாட்களில் தாயாய் தன் குடும்பத்துக்கே உணவளித்தது அந்த முருங்கை உறவுதானே! தன் சொந்த மண்ணைப் பிரிகையில் கண்ணீர் மல்க இரண்டே இரண்டு முருங்கைக் கிளைகளை மட்டும் வெட்டி தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த நம் தொப்புள் கொடி உறவுத் தாயோடு, அந்த முருங்கைக் கிளைகளும் அகதிகளோடு அகதிகளாய் தமிழகம் வந்து சேர்ந்தன.....