November 03, 2007

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்

  • பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசரநிலைப் பிரகடனம் சட்டவிரோதமானது என்று சற்று நேரத்துக்கு முன்பு அறிவித்திருந்த நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்
  • பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகள் சிலவற்றை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தீவிரவாதிகள் கூறுகின்றனர் : பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில் பாகிஸ்தான் அரசப்படையினரை எதிர்த்துப் போரிட்டு வரும் தலிபான்களுக்கு ஆதரவான தீவிரவாதிகள், அந்த பகுதியில் இருக்கும் மூன்று தாலுக்கா அளவிலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக கூறியுள்ளனர்
  • பர்மாவிற்கு இரண்டாவது முறையாக செல்கிறார் ஐ.நா விசேடத் தூதுவர் : பர்மாவில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக பர்மா விவகாரங்களுக்கான ஐ.நா வின் விசேட தூதுவர் இப்ராஹிம் கம்பாரி அங்கு விஜயம் செய்யவுள்ளார்
  • மெக்ஸிகோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது : மெக்ஸிகோவில் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தென்பகுதி மாநிலமான டபாஸ்கோவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை வானூர்திகள் மூலம் மீட்கும் பெரிய நடவடிக்கை ஒன்று தொடர்ந்து வருகிறது
  • ஹைதியிலிருந்து இலங்கை அமைதிகாப்புப் படையினர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் : ஹைதியில் ஐ,நா.மன்ற அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை துருப்பினர் நூற்று எட்டு பேர் பாலியல் அத்துமீறல்களிலும் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்
  • கர்ணல் கருணா லண்டனில் கைதுசெய்யப்பட்டார் : விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கர்ணல் கருணா, பிரிட்டிஷ் பொலிசார் மற்றும் குடிவரவுத்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையினால் பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது
  • தமிழ்ச்செல்வன் மறைவையொட்டி புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரப்பகுதி மீது கடந்த வெள்ளிக்கிழமை அரசின் விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 6 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வன்னிப்பிரதேசம் எங்கும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • அமெரிக்க விருது பெற்ற தலாய் லாமாவுக்கு புதுதில்லியில் பாராட்டு விழா; இந்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு : திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு, சமீபத்தில் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கி கெளரவித்தது அமெரிக்க காங்கிரஸ். சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவுக்கு அமெரிக்கா இந்த விருதை வழங்கியது

மனித மொழி பேசிய சிம்பான்சி மரணம்

வாஷிங்டன்: மனிதர்களுடன் சைகை மொழியில் பேச பழக்கப்பட்ட முதல் பெண் சிம்பான்சி குரங்கு இறந்து விட்டது. இது அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்கில் இருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பது டார்வின் தத்துவம். அதே நேரத்தில் மனிதனுடன் குரங்கு பேச முடியுமா என்ற ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கினர். அமெரிக்காவில் நெவாடா மாகாணத்தில் உள்ள சிம்பான்சி மற்றும் மனித தகவல் பரிமாற்றம் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், 1980-ம் ஆண்டு ஒரு பெண் சிம்பென்சி குரங்கு குட்டியை தேர்ந்தெடுத்து வளர்க்க தொடங்கினர். அந்த சிம்பான்சிக்கு `வஷூ' என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். சைகை மொழியில் தகவல் பரிமாற்றம் செய்ய அந்த சிம்பென்சி பல ஆண்டுகளாக பழக்கப்படுத்தப்பட்டது. நாளடைவில் விஞ்ஞானிகளின் சைகையை புரிந்து கொண்டும், அதற்கு உரிய வகையில் செயல்படவும், பதில் அளிக்கவும் `வஷூ' நன்கு பயிற்சி பெற்று விட்டது. மேலும், உலகளவில் `வஷூ'வுக்கு பல மனித நண்பர்களும் உருவாகினர். `வஷூ' நேற்று முன்தினம் இரவு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டது. இதற்கு வயது 42. `வஷூ'வின் மறைவு, அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. `வஷூ' நினைவாக வரும் 12-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.` இயற்கைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை நமக்கு தெரியப்படுத்த ஒரு துாதராக வந்தாள் `வஷூ'. ஏராளமானவர்களிடம் அவள் மிகவும் அன்பாக பழகினாள். அவளை நாங்கள் இழந்து விட்டோம்' என்று விஞ்ஞானிகள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். `வஷூ'வின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த தனியாக ஒரு இணையதள முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில்,` மனித மொழியை புரிந்து கொண்ட முதல் சிம்பென்சி `வஷூ' தான். தனது வளர்ப்பு மகனுக்கும் அந்த மொழியை அவள் கற்றுக் கொடுத்தாள். `வஷூ' மிகவும் தனித்தன்மை வாய்ந்தது' என்பது உட்பட பல உருக்கமான தகவல்களை பலர் அந்த இணைய தள முகவரியில் வெளியிட்டு வருகின்றனர்