March 31, 2008

"இலங்கையை இரண்டாகப் பிரித்தால் என்ன தவறு?" - சத்யராஜ் கேள்வி

ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கும், கம்பன் கழகத்துக்கும் மட்டுமே கதவு திறந்த கோவை நானி கலை அரங்கம் (மணி மேல் நிலைப் பள்ளி), முதல் முறையாக கறுப்புச் சிந்தனையாளர்களுக்கு கதவு திறந்தது.

அது - எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழா, பெரியார் படத்தில் நடித்து அழியாப் புகழ் தேடிக்கொண்ட சத்ய்ராஜுக்கு பாராட்டு விழா, எம்.ஆர். ராதாவைப் பற்றிய பத்திரிகையாளர் மணா எழுதிய நூல் அறிமுக விழா.... இப்படி கோவை – ‘நாய் வால் திரைப்ப்ட இயக்கம்’ நடத்திய முப்பெரும் விழா.
எல்லாக் கூட்டங்களிலும் நக்கலோடு பேசி முடிக்கும் எழுத்தாளர் பாமரன் இந்த மேடையில், 'எம்.ஆர். ராதாவுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாரிசுகள் அல்ல. இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கும் நாம்தான் அவரின் உண்மையான வாரிசுகள்.

என் தோழர்களாய் இருக்கும் என் தம்பிககிட்டே நான் வைச்சிருக்கிற ஒரே வேண்டுகோள்; நான் செத்துட்டா என்னோட உடம்பை நீங்க கைப்பத்திடணும்; எனக்கு எந்த மதச் சடங்கையும் யாரும் நடத்திடக் கூடாது. என் கொள்கை என்னோட சாவிலேயும் நிலைச்சு நிக்கணும்'.... கூட்டத்தை கண் கலங்க வைத்தார் பாமரன். விழாவுக்கு தன் 3 வயதுக் குழந்தையை தோளில் சுமந்தபடி சென்னையிலிருந்து வந்திருந்தார் தோழர் தியாகு. அவரும், எம்.ஆர். ராதாவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தது, அவருடன் ஏற்பட்ட நட்பு, அவரின் சமரசமற்ற வாழ்க்கை முறை இப்படி நிறையப் பேசினார். முடிந்தால் தமிழ் சினிமாவின் நாய் வாலை நிமிர்த்த பார்க்கணும். இல்லைனா வெட்டிடணும். அதிர வைத்தார் 'அழித்தொழித்தல்' தோழர் தியாகு.

'காலத்தின் கலைஞன் எம்.ஆர்.ராதா' என்ற புத்தகத்தை எழுதிய ‘புதிய பார்வை’ - இதழின் இணை ஆசிரியர் மணாவின் ஏற்புரையில், எம்.ஆர். ராதா பற்றிய தகவல் திரட்டுவதற்காக அவர் பட்ட அளப்பரிய உழைப்பின் உண்மை தெரிந்தது. எம்.ஆர். ராதா குடும்பத்தைச் சேர்ந்த இன்றையப் பிரபலங்கள் இதற்கு துளிகூட ஒத்துழைப்பு தரவில்லையாம். எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.ஆர். ராதாவை ஏன் இவ்வளவு தூக்கிப் பிடிச்சு ஒரு புத்தகம் எழுதணும்னு ம.நடராஜனுக்கும் (சசிகலா), மணாவுக்கும் ஏகப்பட்ட மிரட்டல் வந்ததாம் ஒரு தரப்பிடமிருந்து.

அடுத்து மைக்கை ரொம்ப உயரத்துக்கு நிமிர்த்தி பேச வந்தார் சத்யராஜ்; தனக்கே உரிய லொள்ளுப் பேச்சில் பெரியாரின் சிந்தனைகளை அள்ளி வீசினார். மெதுவாக ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குள் நுழைந்தார். அரங்கம் அதிரும் அளவுக்கு கை தட்டல்கள். ஒன்றாக இருந்த சோவியத் யூனியன் இன்றைக்கு ஏராளமான நாடுகளாய்ப் பிரிந்து இருக்கும்போது இலங்கைத் தீவு இரண்டாகப் பிரிந்தால் என்ன தவறு? என்ற சத்யராஜின் கேள்வியில் அர்த்தம் இருந்தது.

ஆனால் இனிமேல் ஏனோ, தானோ படங்களில் எல்லாம் சத்யராஜ் தலைகாட்டக் கூடாது என்பதுதான் அனைவரின் வேண்டுகோளாய் இருந்தது. பொறுப்பைச் சுமப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த விழாவுக்காக எந்த அதிபர்களிடமும், ஆலை உரிமையாளர்களிடமும் நிதி சேகரிப்பு நடத்தவில்லையாம். எல்லாம் உணர்வுப்பூர்வமான சகதோழர்களின் 50-ம், 100-தானாம். பெருமையாய்ச் சொல்லிக் கொள்கிறது விழாக் குழு.

'எழுத்தும், சிந்தனையும் எனக்கு சம்பாதிச்சு தந்தது.... ஏராளமான தம்பிகளின் நட்பைத்தான் என்று சொல்லும் எழுத்தாளர் பாமரனின் அலைச்சல் மிக்க உழைப்பும், அவரைச் சுற்றி எப்பொழுதும் இருக்கும் அவரின் தோழர்களின் வியர்வையும் விழாவின் வெற்றியில் வெளிச்சம் காட்டியது.

சமூக அக்கறை உள்ள மனிதர்கள் காலமாகிவிட்டாலும், அவர்களை நினைத்துப் பார்க்க ஒரு கூட்டம் இருக்கும் வரை மனித இனம் பாராட்டுக்குரிய ஒன்றுதான். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=875&Itemid=163

"எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மன நோயாளி" - கவிஞர் கனிமொழி

"எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு மன நோயாளி" என்று கவிஞர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.


தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 9 நாட்களுக்கு கலை இலக்கிய திருவிழா சென்னையில் தொடங்கியது. கவிஞர் கனிமொழி கருணாநிதி குத்து விளக்கேற்றி இதைத் தொடங்கி வைத்தார். தி.நகர் வாணி மஹாலில் இந்த திருவிழா நடைபெறுகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த கலை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று, திராவிட இயக்கப் படைப்பாளிகளில் சிலர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை தாங்கிப் பேசினார். மேலும் முனைவர் வீ.அரசு, ஏ.எஸ்.பன்னீர் செல்வம், ந.முருகேச பாண்டியன், பேரா. சுப.வீரபாண்டியன் ஆகியோர் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினர்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் கலை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- இன்று தொடங்கி 9 நாட்களாக நடைபெற உள்ள இந்தக் கலை இலக்கியத் திருவிழா வெறும் திராவிட இயக்கத்தின் சிறப்புக்களை மட்டும் பகிர்ந்துகொண்டு பாராட்டுவதற்கு அல்ல. தோழர் ஜீவா முதல் சிதம்பர தில்லையம்பல ஓதுவார் வரை இங்கே சிறப்பிக்கப்பட உள்ளனர்.

கனிமொழி
திராவிட எழுத்துக்கள் இலக்கியம் இல்லை என்று தொடர் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு பொய்யைத் தொடர்ந்து சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று இப்பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மேடை முதல் நாடு வரை பெண்கள் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அது திராவிடம் தந்த வெற்றி. கல்வி, சமூக நீதி. சாதீயக் கொடுமைகளிலிருந்து விடுதலை இவை எல்லாம் திராவிடத்தால் மட்டுமே நமக்கு சாத்தியமானவை. அதேபோல் இன்றைய சூழ்நிலையில் போராட்ட உணர்வு இங்கே தேவை இல்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டது. நாடு தன்னிறைவு அடைந்து விட்டது; என்று ஒருவித போலி பிரசாரத்தை எல்லா ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? இன்னும் நம்முடைய போராட்டத்தின் தேவை என்ன என்பது நமக்குத் தெரியும். ராமர் பாலம் பிரச்சினை. அதற்கு மதச் சாயம் பூசப்படுகிறது. அதன் உருவகமாக தலைவர் கலைஞர் ஆக்கப்படுகிறார். தமிழ்நாட்டின் ஆக்கப் பூர்வமான வளர்ச்சியையும், உற்பத்தியையும் தடுக்கும் வகையில் ஒரு தரப்பு நடத்திவரும் சதி இது. ஒரு காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்த சென்னை ஒரு பெரிய நகரமாக ஆனதற்கு என்ன காரணம்? இங்கு உருவாக்கப்பட்ட துறைமுகம்தான் என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் என சகல துறைகளிலும் தமிழகத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய திட்டம்தான் சேது பாலத் திட்டம். ஆனால் அதை ராமர் எனும் பெயரை வைத்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை இங்கே நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் உண்மை என நம்பும் அறிவு மழுங்கடிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நாம் மீண்டும் திராவிட இயக்க கருத்துக்களை நாம் மறு வாசிப்பு செய்ய வேண்டும். பாதை மறந்து விட்டால் நம் பயணத்தின் இலக்கு நமக்குத் தெரியாது. தொடர்ச்சியாக நாம் ஒதுக்கி வைக்கப்பப்டுவோம். தில்லையம்பலத் தீட்டுக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒரு தேவதாசிப் பெண் கட்டிய கோவிலான திருவையாறில் தமிழில் பாடக்கூடாது என்ற நிலை இருந்தது. அப்படிப் பாடினால அந்த இடத்தை தண்ணீர் வைத்துக் கழுவிவிட்டு தீட்டு கழித்த சம்பவம் இங்கே நடந்திருக்கிறது. அதை உடைத்துக் காட்டிய பெருமை திமுகவைத்தான் சாரும். இதனைக் கண்டித்து முரசொலியில் தலைவர் கலைஞர் எழுதிய 'தீட்டாயிடுத்து' என்ற தலையங்கம் பெரியார் அவர்களால் பாராட்டப் பெற்றது. தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=913&Itemid=164