November 01, 2010

தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே!:கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு

தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே!:கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு
மதம் தாண்டி, மனிதத்தை நேசிக்கும் மாமனிதர் கலெக்டர் சகாயம்


03.10.2010 தேதியிட்ட ‘நம் வாழ்வு’ வார இதழில் “காந்தியின் மனசாட்சி” என்று தலைப்பிடப்பட்டு வெளிவந்த பேட்டி ஒன்றை வாசித்தேன். அது 5 பக்கங்களில் விரிந்திருந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.உ.சகாயம்,I.A.S., அவர்களின் மனந்திறந்த அந்தப் பேட்டி என் மனதைத் தொட்டது. முக்கியமான அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இந்தக் காலத்திலும் இவ்வளவு நேர்மையாகவும், இத்துணைத் துணிச்சலோடும், தெளிவோடும், தீர்க்கமாகவும், அடித்தட்டு மக்களிடம் ஆத்மார்த்தமான பாசத்தோடும். கரிசனையோடும் இருக்க முடியுமா என்று ஆனந்த ஆச்சரியப்பட்டேன். எப்படியாவது இவருக்கு நான்கு வரி எழுதிப்போட்டுப் பாராட்ட வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து, அமெரிக்காவிலிருந்து, அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, எனது நண்பர் திரு.ஆல்பர்ட் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டார்கள். எனக்கு இன்ப அதிர்ச்சி! ஏனைய பிற விசயங்களைப் பேசிவிட்டு இந்த விசயத்துக்கு வந்தார்கள். திருவாளர் உ.சகாயம், I.A.S. அவர்களைப் பற்றி மகிழ்ச்சியோடு நான் பகிர்ந்துகொண்டேன். ஆனால், ‘திருவாளர் உ.சகாயம் அவர்கள் மாவட்ட ஆட்சிப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார்” என்று அவர்கள் கூறிய செய்தி என்னைத் துணுக்குறச் செய்தது. உண்மையிலேயே உள்ளம் நொந்துபோன நான் உண்மைத் தகவல்களைச் சேகரித்தேன். திரு ஆல்பர்ட், நாமக்கல் வேதியர் திரு.மரிய சூசை ஆகியோர் அனுப்பியுள்ள தகவல்களுள் சிலவற்றைக் கீழே தருகிறேன்.

கடந்த இரு ஆண்டுகளாக அரசுத் திட்டங்களையும், சிறப்புத் திட்டங்களையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டுவந்துசேர்த்து எங்கள் மாவட்ட நலனுக்காக நேர்மையாகப் பாடுபட்ட எங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு உ.சகாயம் அவர்களை, இன்னும் ஒரு ஆண்டு பணிக்காலம் இருக்கும் நிலையில் திடீரெனப் பணி மாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது சிறுபான்மை இனத்தவர் மனதைப் புண்படுத்துவதாகவும், நாமக்கல் மாவட்ட நலனுக்கு முரண்பட்டதாகவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடபடும் அனைத்து சமூக நல ஆர்வலர்கள் உள்ளத்தையும் நோகடிப்பதாகவும் உள்ளது.

எனவே, சிறுபான்மை இன நலனில் அக்கறையும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் தமிழக அரசு மேற்கண்ட மாறுதல் உத்தரவை இரத்துசெய்து ஆணை வழங்க வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள,
அன்பு குடிமக்கள், ஊர்ப் பொதுமக்கள், நாமக்கல் டவுன்பகுதி.

இது ஒரு சாம்பில்.

அடுத்து வருவது ஒரு நீண்ட, பணிகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு.
இவர் பொறுப்பேற்ற பின் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், கிராமப்புற மக்கள் மிகவும் முன்னேறி உள்ளனர். மாவட்ட ஆட்சியரை நாம் எளிதில் அணுக முடியும், ஏன், மாவட்ட ஆட்சித் தலைவரைத் தங்கள் கிராமத்திலேயே, தாங்கள் இருக்கும் இடத்திலேயே மக்கள் சந்திக்க முடியும். மக்கள் தங்கள் குறைகளை உடனே தீர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பல்வேறு பணிகளை மக்களோடு இணைந்து செயல்படுத்தினார். இப்படி மக்கள் நலனுக்காக அரும்பாடுபட்ட மக்கள் நல அதிகாரி திரு. உ. சகாயம் அவர்களை தமிழக அரசு எந்த வித முகாந்திரமுமின்றி, மக்கள் எண்ணத்திற்கு எதிராக, உடனடி மாறுதல் செய்திருப்பதை, அதுவும் அவர் பயிற்சிக்குச் சென்ற நேரம் பார்த்து மாறுதல் செய்துள்ளதை நாமக்கல் மக்களும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் திரு.உ.சகாயம் அவர்களின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட்டுவரும் திட்டங்கள்

1. கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு விதிப்படி அந்தந்தக் கிராமத்திலேயே தங்குவதை உறுதி செய்தல்.
2. நாமக்கல் மாவட்டத்தில் மரம் நடுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, ஒரு கோடி மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 15 இலட்சம் மரங்களை நட்டுச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தார். “கட்டிடங்களுக்கு நடுவே கானகம்” என்ற திட்டம் இவரின் சீரிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.
3. மக்கள் குறைதீர்க்க ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று நாள் முழுக்கக் காத்திருக்கும் நிலையை மாற்றி, ஆங்காங்கு அமைக்கப்பட்டிருக்கும் கணினி மூலம் ஆட்சித் தலைவருக்கு மின் அஞ்சலில் புகார் அனுப்பி, தீர்வு காணும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக அமல்படுத்தினார். “தொடுவானம்” என்ற பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, உலக மக்களின் கவனத்தையே ஈர்த்தது.
4. மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம புறத்திற்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களோடு, அதிகாரிகளோடு தங்கி மக்களின் குறைகளைத் தீர்த்தார். கிராமப் புறங்கள் இந்நாட்டின் முதுகெலும்பு. கிராம மக்கள் இந்நாட்டின் கண்கள் என்பதை அங்கீகரித்தார். விவசாயிகளுக்காக விவசாயிகள் குறைதீர்க்கும் தினத்தைக் கிராமத்திலேயே நடத்திச் சாதனை புரிந்தார்.
5. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்பட்டார். சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மூலமும் இடைத் தேர்வுகள் மூலமும், சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதன் மூலமும் அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறச் செய்தார். எழை மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார்.
6. மாவட்ட நிர்வாகத்தின் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க அரும்பாடுபட்டார். இலஞ்சத்திற்கு அப்பாற்பட்டவராக, தலைநிமிர்ந்து நின்றார். ஊழல் புரிந்த அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தார். மக்கள் வரிப் பணத்தை யாரும் சுரண்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
7. நுகர்வோர் பாதுகாப்பு கருதி, உணவுக் கலப்படம், போலி மருந்துகள், அதிக கல்விக் கட்டண வசூல் ஆகியவற்றைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
8. கிராமத்தில் தங்கிப் பணிபுரியாத, மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களைப் பணி நீக்கம் செய்து, மக்கள் நலனை உயர்த்திப்பிடித்தார். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராக மாநில அளவில் கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்த சவாலைத் தயக்கமின்றிச் சந்தித்தார்.
9. விவசாய உற்பத்திப் பொருள்களை விவசாயிகள் உரிய விலைக்கு விற்க முடியாமல் வறுமையில் வாடுவதை உணர்ந்து “உழவர் உணவகம்” என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைச்சலை உணவுப் பொருள்களாக மாற்றி விற்க ஏற்பாடுசெய்து, ஒவ்வொரு விவசாயியும் ஒரு நாளுக்கு ரூ.450/- முதல் ரூ.750/- வரை இலாபம் ஈட்டும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்.
10. அரசு ஊழியர்கள், குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீதிபதிகள் தங்களுடைய சொத்துக்களை வெளியிடுவது குறித்து அதிகாரிகள் தயக்கம் காட்டிய நிலையில், தானாக முன்வந்து, தன் சொத்துக்களை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. உ. சகாயம் அவர்கள்.
11. நாமக்கல் மாவட்ட வெப்சைட்டில் நிர்வாகம் குறித்த அனைத்துத் தகவல்களையும் வெளியிட்டு, ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மை மிகவும் முக்கியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர்.
12. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னுடைய பெயர், பட்டியலில் எந்த வரிசை எண்ணில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உறுதி செய்தவர்.
13. தான் பணிசெய்த ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, சவால்களைச் சந்தித்துவருபவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே பெப்சி நிறுவனத்தைக் காஞ்சிபுரத்தில், நுகர்வோர் விரோதமாகச் செயல்பட்டதற்காக, இழுத்து மூடி சீல் வைத்தவர்.
14. அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இடைத்தரகர் இன்றி, முழுமையாக மக்களைச் சென்றடையச் செய்தார். ஊரக வேலை உத்திரவாதத் திட்டம், பொது விநியோகத் திட்டம், பேரிடர் நிர்வாகம், தகவல்பெறும் உரிமை ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதில் இவருக்கு நிகர் இவரே.
15. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப் பிரதேசங்களையும் அங்கு வாழும் ஆதிவாசி மக்களையும் மாவட்ட நிர்வாகத்தின் தனிக்கவனத்திற்குக் கொண்டு வந்தவர். புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு நலத் திட்டங்களை முறையாக அமல்படுத்தினார்; கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரிக்குக் கொல்லிமலையில் விழா எடுக்கச் செய்தவர்.
16. மாற்றுத் திறனாளிகளின் நலனுக்குத் தனிக் கவனம் செலுத்தி, அரசின் கொள்கைப்படி மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு, சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு சலுகைகள் எளிமையாகச் சென்றடையச் செய்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு “ஊன்றுகோல் திட்டம்” என்ற ஒன்றைக் கொண்டுவந்து முன்மாதிரியாகத் தானே ஒரு மாற்றுத் திறனாளியைத் தத்து எடுத்து எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்ததைத் தொலைக்காட்சிகூட வியந்து பாராட்டியது.
17. முதியவர் பாதுகாப்பிற்காகச் சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும் கிராமப் புறங்களில் பல முதியோர்கள் வயோதிக நிலையில் தம் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, உணவின்றி, உறைவிடமின்றி இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களில் பலருக்கு மறுவாழ்வளித்தவர். இந்தியாவிலேயே இந்தச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்த முதல் மாவட்ட ஆட்சியரும் இவரே!
18. மாவட்டத்தின் ‘கிராம குறைதீர் மன்றம்’ அமைத்து, பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து, சத்தமில்லாமல் சாதனை புரிந்தவர்!
19. தமிழ் மீது அதிகப் பற்றுக்கொண்ட நம் ஆட்சியர் இவர் மனுக்களைக்கூடத் தமிழில் தரவும், கையொப்பத்தை அழகுத் தமிழில் எழுத வேண்டுமென்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தியவர்.
20. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாவட்டத்தில் மக்களோடு உரையாடி, குறைகளைத் தீர்த்த எளிமையான ஆட்சித் தலைவர்.

ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவை மூலமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது ஒரு நல்ல அடையாளம், ஆறுதலான செயல்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து, வசதிகள் குறைந்த கிராமத்தில் வளர்ந்து, தம்முடைய சுய முயற்சியால் முன்னேறி, உயர்ந்த ஓர் அரசுப் பணிக்கு வந்துள்ள திரு. உ.சகாயம் அவர்களின் நேர்மைக்காய் நெஞ்சுயர்த்தும் பண்பைப் பாராட்டுகிறோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து’ என்னும் அவரது விருதுவாக்கைப் போற்றுகின்றோம். குழந்தைகள், நரிக்குறவர்கள் தொடங்கி, நீதிபதிகள், செய்தித்தாள்கள்வரை அனைத்துத் தரப்பு மக்களும் ஊடகங்களும் திரு. உ.சகாயத்தின் சார்பாகக் குரல் எழுப்பியுள்ளது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆயினும், அரசியல்வாதிகள், லஞ்சப் பேர்வழிகள், கடமையைச் செய்யத் தயாராக இல்லாத “ச(கி)ம்பளக் காரன்கள்”, பொதுமக்களை ஒரு பொருட்டாக நினைக்காத சுயநலமிகள் போன்றோருக்குத் திருவாளர் உ.சகாயம் போன்றோர் மூலம் நாம் பாடம் புகட்ட வேண்டும். இவர் மீது வி.ஏ.ஓ.க்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. அப்பட்டமான புளுகு மூட்டைகள். அதனால்தான், திருவாளர் சகாயம் அவர்கள் அவற்றிற்கு எல்லாம் சவால் விட்டு உள்ளார்.

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. ஒரு பக்தியான, பாரம்பரியமிக்க கத்தோலிக்கர் இவர். இறையரசின் மதிப்பீடுகளுக்குச் சக்தியான சாட்சிய வாழ்வு வாழும் இவரால் கிறிஸ்தவத்துக்கு கௌரவம் கிடைக்கிறது. அதே வேளையில் அவரது இந்த நற்செயல்களுக்காய் திருச்சபை துணை நிற்கிறதா? “நாங்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறோம்” என்று சொல்லி, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, சத்தியம் வெல்ல தோழமையோடு தோள் கொடுக்கின்றோமா? திருவாளர் சகாயத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுள் ஒன்று, ‘இவர் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கின்றார், இந்து மதத்தைப் பழிக்கின்றார்” என்பதாகும். உண்மையில், அவர் செய்த நற்செயல்களால் பயன் பெற்றவர்களுள் மிகப் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர் அல்லாதவர்களே. அதனால்தான், அவருக்காகக் குரல் எழுப்பியவர்களும் பெரும்பாலும் கிறிஸ்தவர் அல்லாதவர்களே. மதம் தாண்டி, மனிதத்தை நேசிக்கும் இந்த மாமனிதருக்கு நாம் அனைவரும் நம்முடைய ஆதரவையும், பாராட்டையும் தோழமையையும் தெரிவிப்பதும் செயல்படுத்துவதும் கட்டாய கடமையாகும். சிறப்பாக, தமிழகத் திருச்சபை, குறிப்பாக திருச்சபைத் தலைவர்கள் இத்தகைய கத்தோலிக்க அரசு அதிகாரிகளை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்தால் நியாயமான, துணிச்சலான, நீதிக்காக நெஞ்சுயர்த்தும் மக்கள் பணியாளர்கள் அதிகம் அதிகம் உருவாவார்கள். தங்கள் உழைப்பாலும் நேர்மையாலும் உயர் பொறுப்புக்களுக்கு வரும் ஓரிரு கிறிஸ்தவர்களுக்கு நாம் அங்கீகாரம் தர வேண்டும், அரணாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் இறையரசின் மதிப்பீடுகள் உயிர்பெறும், உயிர் தரும்.
அருட்திரு மரிவளவன் S.J.

Fr. Marivalan,S.J
National Director Apostleship of Prayer
Beschi Illam, Karur Road,
Dindigul - 624 001, India

நன்றி : திரு இருதய தூதன்