October 21, 2007

ஜீசஸ் கிறிஸ்ட் பல்லி

இன்றைய குறள்

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து

மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்
அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார் - தமிழக முதல்வர்

"அரசின் நல்ல திட்டங்களுக்கு முட்டுக் கட்டைகள் போடும் கூட்டணி நண்பர்கள், அரசியல் கட்சிகள் எனது ஆட்சியை விரும்பாவிட்டால் நான் ஒதுங்கிக் கொள்ளத் தயார். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். எங்களால் முடியாவிட்டால், இவ்வளவுதான் முடிந்தது என்று உங்களிடம் விடை பெற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். இதற்கு மேல் வேறு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் வேறு யாராவது வந்து செய்யட்டும். நான் தாராளமாக அவர்களை வாழ்த்த, பாராட்ட, அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டக் கடமைப்பட்டுள்ளேன்" - மு. கருணாநிதி, தமிழக முதல்வர்

மேற்குலக நாடுகளின் ஆபத்தான கழிவுகளுக்கு இந்தியா குப்பைக்கூடையா?

  • அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நச்சுத்தன்மை படைத்த கழிவுப்பொருட்களை கொட்டும் இடமாக இந்தியாவைக் கருதுகின்றனவா என்ற கேள்வி இப்போது மீண்டும் எழுந்திருக்கின்றது. காகிதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கழிவுப்பொருட்கள் என்று கூறி கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனம் இறக்குமதிசெய்த சரக்குப்பெட்டகங்களை சோதித்துப்பார்த்தபோது, 60 டன் பொருட்களில் ஏறத்தாழ 40 டன்கள், மருத்துவமனை மற்றும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கழிவுகளாக இருந்ததாக நேற்று முன்தினம் அம்மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஸ்ரீமதி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். வந்த சரக்குப்பெட்டகங்கள் திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். இதனிடையே மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இவ்வாறு ஆபத்தான கழிவுப்பொருட்கள் இந்தியாவுககு அனுப்பப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சம்பவம் பற்றி ஆய்வுசெய்து விவரங்களை திரட்டி பின்னர் அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை எடுககப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில், மேலை நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படாத பழைய கப்பல் உடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நச்சுப்பொருட்களை உள்வாங்கி, தொழிலாளர்கள் பல்வேறு நோய்களால் பீடிககப்படுவது குறித்து அடிக்கடி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாவது உண்டு.
    ஓரிரு சந்தர்ப்பங்களில் அத்தகைய கப்பல்கள் திருப்பி அனுப்பட்பட்டாலும் அத்தொழில் தொடரவே செய்கிறது. ஆனால் காகிதக் கழிவென கூறி ஆபத்தான மருத்துமனை கழிவுப்பொருட்களை அனுப்பிவைப்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் தூய்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், மேலை நாட்டு நிறுவனங்கள் நச்சுத்தன்மைபடைத்த இயந்திர தொழிற்சாலை அல்லது மருத்துவமனை கழிவுகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த சுற்றுப்புறச்சுழல் ஆர்வலர் நித்தியானந்தன் ஜெயராமன். இது தொடர்பான அவரது செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.
  • இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்கள் : இலங்கையின் வடக்கே, மன்னார் தம்பனை, பெரியதம்பனை மற்றும் யாழ்ப்பாணம் நாகர்கோவில் ஆகிய இராணுவ முன்னரங்க பகுதிகளில் நடந்த மோதல்களில் ஒன்பது விடுதலைப்புலிகளும், இரண்டு ராணுவத்தினரும் கொல்லப் பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
  • நெஞ்சம் மறப்பதில்லை - பாகம் ஐந்து : தமிழ் திரையுலகில் புராண பக்தி கதைகள் ராஜா ராணிக் கதைகள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலை மாறி சமுதாய விழிப்புணர்வு, பகுத்தற்றிவுக் கொள்கைகள் ஆகியவற்றைக் கதைக்களமாக கொண்ட திரைப்படங்கள் வரத்தொடங்கியது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வேரூன்றிய காலகட்டமான ஐம்பதுகளின் துவக்கத்தில்தான்
  • இராக் தாக்குதலில் 49 சந்தேக நபர்களை கொன்றுள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது : இராக் தலைநகர் பாக்தாதில் நடந்த ஆக்ரோஷமான சண்டையில் தீவிரவாத சந்தேகநபர்கள் 49 பேரை கொன்றிருப்பதாக இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
    ஷியா போராளிகள் வலுவாக உள்ள இடமென்று அறியப்படும் சதர் நகர் பகுதியில் நடந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என அது தெரிவிக்கிறது

அதிசயம் : இரண்டு கன்றுகள் பிரசவித்த பசு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள கொன்னையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், சாந்தாமணி தம்பதியர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பால் கறப்பதற்காகக் கடந்த வருடம் வாங்கி வந்த சிந்து இனப்பசு ஒன்று கடந்த புதன் இரவு பத்துமணியளவில் அனைவரும் வீட்டிற்குள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புதைந்து மெகாசீரியல்களில் அழுதுகொண்டிருக்கும்போது, திடீரெனச் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து பார்த்தனர். வெளியில் உள்ள தெருவிளக்குக் கம்பத்தில், கட்டாந்தரையில் லேசான தடுமாற்றத்தோடு துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த கன்றுகளைப் பார்த்ததும் தன்னை மறந்து அனைவரும் சந்தோசக்களிப்பில் துள்ளிக்குதித்தனர். அந்தச்சுற்றுவட்டார மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு வந்து பார்த்துச் செல்கின்றனர். கன்றுகளில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு பசு ஒரு கன்று ஈனுவதே வழக்கம். செய்தி : நண்பர் விஜய் - திருச்செங்கோடு