October 30, 2007

அஞ்சலி : முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ரா மரணம்

லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91-வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர். அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது (ஒரு நாவல்தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார். தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916-ம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18-வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இன்றைய குறள்

எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

கவிதையில்தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது

"கவிதைகளுக்கும், வழக்கத்தில் உள்ள மொழிக்கும் உள்ள உறவு தினசரி மாறிக் கொண்டே இருக்கிறது. மொழி குறித்த நமது பிரக்ஞையை விடாமல் புதுப்பித்துக் கொள்ள கவிதை உதவுகிறது. கவிதையில் தான் மொழியின் சாரம் உயிர்ப் பிடிப்புடன் உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட அனுபங்களை வெளிப்படுத்துவதே சிறந்த கவிதை. ஒரு சொல்லை கவிஞர் தேர்ந்தெடுக்கிறார் என்பதைவிட அந்த சொல்லை கவிதைதான் தேர்ந்தெடுக்கிறது" - பிரம்மராஜன், எழுத்தாளர்

கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

  • நைஜீரியாவில் கடத்தப்பட்டவர்கள் விடுதலை : நைஜீரியாவில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதியன்று, பெட்றோலியம் அகழும் கப்பலில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களும், இரண்டு போலந்து நாட்டுக்கார்ரகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள இந்திய துணைத் தூதர் அணில் திரிகுணாயத் தமிழோசையிடம் தெரிவித்தார். விடுவிக்கப்பட்டவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார். இந்தக் கடத்தல் தொடர்பாக எந்தக் குழுவும் உரிமைகோரவில்லை என்றும் இவர்களை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதாக தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இந்தியத் தூதர் தெரிவித்தார். கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் மூவர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட அஜித் காமராஜின் இளைய சகோதரர் சுதர்சனன் தனது அண்ணன் விடுவிக்கப்பட்ட பிறகு தம்மிடம் பேசியதாகவும், கடத்தியவர்கள் தம்மை துன்புறுத்தவில்லை என்று தம்மிடம் கூறியதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார். இது குறித்த மேலதிகத் தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • நூற்றுக்கும் அதிகமான ஆப்பிரிக்கக் குழந்தைகளை அழைத்துச் சென்ற தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளை சாட் அரசு கைது செய்துள்ளது : ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இருந்து நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற தன்னார்வ அமைப்பு ஒன்றின் அதிகாரிகளை சாட் நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
  • நானூறு வயதான சிப்பி : சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்
  • இராக்கில் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை நீதி விசாரணைக்கு உட்படுத்த வழி செய்யும் சட்டமூலம் : இராக்கில் செயற்படுகின்ற வெளிநாட்டு பாதுகாப்புத்துறை ஒப்பந்ததாரர்கள், குற்றவிசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க வழி செய்யும் தற்போதைய சலுகையை ரத்துச் செய்யும் வகையிலான சட்டமூலம் ஒன்றுக்கு இராக்கிய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது
  • பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகாமையில் ஒரு தற்கொலைதாரி குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும், பலர் காயமடைந்தார்கள் என்றும் கூறப்படுகிறது
  • எலிசபெத் மகாராணியாரைச் சந்தித்த சவூதி அரசர் : லண்டனில் சவூதி மன்னர்பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருக்கும் சவூதி அரேபிய அரசர் அப்துல்லா அவர்களின் பயணத்தின் முதல் நிகழ்வாக, எலிசபெத் அரசியார் அவரை முறைப்படி வரவேற்றார்
  • இராக்கின் மிகப் பெரிய அணையின் பாதுகாப்புக் குறித்து அமெரிக்கா கவலை : இராக்கில் உள்ள மிகப் பெரிய அணையின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    மோசூல் நகருக்கு வடக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் டைக்ரிஸ் நதியின் குறுக்காக இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது