April 30, 2008

தொழிலில் இறங்கும் பாலிவுட் நடிகைகள்

கதாநாயகர்கள் மட்டும்தான் தொழில் அதிபர்களாய், பெரிய வர்த்தகர்களாய் வலம் வரவேண்டுமா? முடியாது. ‘நாங்களும் தொழிலில் ஜெயித்துக் காட்டுவோம்’ என களம் இறங்கி இருக்கிறது பாலிவுட் நடிகைகள் கூட்டம்.
மிதுன் சக்கரவர்த்தி, ஷாருக்கான், சுனில் ஷெட்டி ஆகியோர் வியாபாரத்துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அவர்களுக்கு கடும் போட்டியாய் களத்தில் இருப்பவர்கள் சுஷ்மிதாஷென், பிரீத்திஷிந்தா மற்றும் ஐஸ்வர்யாராய்.

சுஷ்மிதா ஷென் 2006-லேயே ஒரு தொழில் முனைவோராய் மாறிவிட்டார். மிகப்பெரிய பிரமாண்ட அளவில் கொல்கத்தாவில் ஒரு பெரிய வணிக வளாகத்தை நடத்தி வருகிறார். பார், கேளிக்கை அரங்கு என மக்களின் பொழுது போக்கு ரசனைகளை பணமாக்கும் தொழிலில் இறங்கி இருப்பவர் சுஷ். தன்னை ஒரு நடிகை என்று சொல்வதை விட ஒரு தொழில் முனைவோர் என்று சொல்வதில்தான் பெருமைப்படுகிறேன் என பல முறை கூறி இருக்கிறார்.

இதோடு மட்டுமில்லாமல் சினிமா தயாரிப்பு, இயக்கம் எனும் பணிகளிலும் அவர் தீவிரமாய் செயல்படுகிறார். "ராணி லட்சுமிபாய் - தெ வாரியர் குயின்" எனும் படத்தில் நடிகை, தயாரிப்பளர் மற்றும் இயக்குனர்.

ஐபிஎல்-2020 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை விலைக்கு வாங்கி மைதானங்களில் வலம் வருகிறார் பிரீத்தி ஷிந்தா. "நான் எப்பொழுது எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெறுவேன். இது 2008. பெண்கள் தீவிரமாக தொழிலில் இறங்கவேண்டும், சினிமாவில் நடிப்பது என்பது வேறு. ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவது என்பது வேறு என்கிறார் அவர்.

அமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யாராய் அவர்களின் குடும்ப நிறுவனமான AB கார்ப்பரேசனுக்காக மீண்டும் சினிமா தயாரிக்கும் பணியில் இறங்க இருக்கிறார்.

ரவீனா டான்டான் தன்னுடைய கணவரின் சினிமா வியாபரத்துக்கு பெருந்துணையாக உள்ளார்.

டிவிங்கில் கண்ணா மும்பையில் வெற்றிகரமான இண்டீரியர் டெக்கரேசன் தொழிலை நடத்தி வருகிறார்.

இப்படி கேமராவுக்கு முன்னால் நடித்துக் கொண்டிருந்த பாலிவுட் நடிகைகள் தொழில் அதிபர்களாய் அவதாரம் எடுத்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

சட்டசபையில் வீசிய "நர்கீஸ்" புயல்

சட்டசபையில் இன்று "நர்கீஸ்' புயல் குறித்து ருசிகர விவாதம் நடைபெற்றது.
சட்டமன்றத்தில் இன்று பால் வளம், கால்நடை மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால் பேசிக்கொண்டிருந்தார். கடல், துறைமுகம் தொடர்பாக அவர் பேசிக்கொண்டிருந்த போது அதிமுக உறுப்பினர் பி.கே. சேகர்பாபு எழுந்து ஒரு ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார்.

வங்கக் கடலில் உருவான புயலுக்கு "நர்கீஸ்' என்று பெயர் சூட்டப்பட்டது. பழம் பெரும் இந்தி நடிகை நர்கீஸ். அவர் மிகவும் அமைதியானவர் என்று கூறப்படுகிறது.

கலையுலகில் பலரையும், பெரிதும் கவர்ந்த அந்த நடிகையின் பெயரை புயலுக்கு தேர்வு செய்தது சரியா? புயலுக்கு பெயர் சூட்டுவதை யார் முடிவு செய்வது? இந்த புயல் சின்னத்தால் வேகமாக காற்று வீசி உள்ளது. இதனால் அரசுக்கு மின்சாரம் கிடைத்ததா? என்று சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.

அப்போது துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி குறுக்கிட்டு, இந்த புயலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் பெயர் சூட்டி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு இதற்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது: புயலுக்கு நர்கீஸ் பெயரை வானிலை நிபுணர்கள்தான் சூட்டி இருக்கிறார்கள். இந்த புயலுக்கு நர்கீஸ் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் புயல் அமைதியாக போய் விட்டது.

இந்த புயல் சின்னத்தால் காற்று பலமாக வீசியதன் மூலம் தினமும் அரசுக்கு ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடையலாம் என்றார் ஆற்காடு வீராசாமி. இந்த ருசிகர விவாதத்தால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

April 29, 2008

ரவுடிகளின் பிடியில் தமிழகம் : சென்னையில் மட்டும் 800 பேர்

என்கவுன்ட்டர்-துப்பாக்கிச் சூடு-கைது...என ரவுடிகளுக்கு எதிரான போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம்; மறுபுறத்தில் அரசியல் பலத்துடன் வளர்ந்து கொண்டிருக்கிறது ரவுடிகள் ராஜ்ஜியம். சமீபத்திய புள்ளி விவரம் நம்மை அதிகமாகவே அதிர வைக்கிறது. தமிழகம் முழுக்க 5000 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 800 பேர் கூடாரம் போட்டிருக்கிறார்கள்.

இந்த மாதத்தில் மட்டும் 4 என்கவுன்ட்டர்கள். கடைசியாக போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானவன் திருச்சி 'பாம்' பாலாஜி( 28.04.08) . சென்னையில் ஏப்ரல் 11-ல் தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பிரபல ரவுடிகளை சென்னை, அயனாவரத்தில் வைத்துச் சுட்டுத் தள்ளியது போலீஸ்.
மிகப்பெரிய தீவிரவாதியான நவீன் என்பவனை ஏப்ரல் 19-ல் கொடைக்கானலில் வைத்து போட்டுத் தள்ளினர். இப்படி இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 என்கவுன்ட்டர்கள்.

சென்னையில் உள்ள 800 ரவுடிகளில் 'ஏ பிளஸ்' கிரேடு பட்டியலில் இடம் பெற்றுள்ள தாதாக்கள் 46 பேராம். 'ஏ பிளஸ்' என்றால் அவர்களின் நெட்வொர்க் தமிழகம் முழுவதும். சென்னையில் இருந்தபடியே மாநிலம் முழுக்க தங்கள் ஆட்களை வைத்து ‘தொழில்’ நடத்தி வருபவர்கள்.

சென்னைக்கு அடுத்தபடியாக ரவுடிகள் பதக்கம் பெறும் நகரமாக மதுரை திகழ்கிறது. அங்கு 500 பேர் ஆட்டம் போடுகிறார்களாம். அதற்கு அடுத்தபடியாக சேலம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி என ஒவ்வொரு நகரத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா வருகிறர்கள். இவர்களுக்கு பக்க பலமாய் இருப்பவர்கள் அரசியல் புள்ளிகள்.

‘ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் பல்வேறு அமைப்புக்கள் இருப்பது மாதிரி (மகளிர் அணி, விவாசாயிகள் அணி) ரவுடிகளுக்கு என்றும் பெயர் சூட்டப்படாத அணி செயல்படுகிறது. தாதாக்களின் துணை இல்லாமல் இன்று அரசியல் நடத்துவது ஒரு சிரமமான காரியமாகவே கருதுகின்றனர்’ என்று கூறுகிறார் ஒரு அரசியல் பிரபலம்.

ரவுடிகளின் ராஜ்ஜியத்தை அழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளை இன்னும் இந்தப் பிரிவுக்கான போலீசாரின் எண்ணிக்கை போதவில்லை என்று தெரிவிக்கிறார் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி.

"சென்னையின் முக்கியமான ரவுடிகளின் பட்டியலை எல்லாம் தயார் செய்துவிட்டோம். அந்தப் பணியை நாங்கள் கச்சிதமாக முடித்துவிட்டோம். எனவே இனிமேல் எங்களுக்கு சிரமம் இருக்காது. 2007 ஜூலை 30-ல் வெள்ளை ரவியை சுட்டுக் கொன்ற பின் எல்ல ரவுடிகளுக்கும் உதறல் ஏற்பட்டது. உயிர் பயம் தலை தூக்க ஆரம்பித்தது. சென்னையை விட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்" என்கிறார் அவர்.

2006-ல் 5 என்கவுன்ட்டர்கள், 2007-ல் 4 என்கவுன்ட்டர்கள் இப்படி ரவுடிகளுக்கு எதிராக போலீசாரின் வேட்டை தீவிரமாகியது. இதனால் சிறிது காலம் அடங்கி ஒடுங்கி இருந்தனர். இப்பொழுது மெதுவாக தலை தூக்க ஆரம்பித்து விட்டனர்.

"சென்னை நகரத்தில் எப்பொழுது ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்ததோ அப்பொழுதே ரவுடிகளின் தொழிலும் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது. நில மோசடி, கட்டப் பஞ்சாயத்து என கோடிக் கணக்கில் பணம் புரளும் தொழிலில் காலூன்ற ஆரம்பித்தனர். இதில் 'ஏ பிளஸ்' ரவுடிகளின் கைவரிசை அரசியல் புள்ளிகளின் துணையுடன் ஓங்க ஆரம்பித்தது. அதிகார வர்க்கமும், அடியாட்கள் பலமும் ஒன்றாக கை கோர்த்ததால் அப்பாவி மக்களின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. பலரும் இதில் முதலீடு செய்யவும், விற்கவும், வாங்கவும் பயப்படத் தொடங்கினர்" என்கிறார் மற்றொரு காவல்துறை அதிகாரி.

திண்டுக்கல் பாண்டியன், மாலைக்கண் செல்வம், தட்சிணாமூர்த்தி, ராஜேந்திரன், காதுகுத்து ரவி, பங்க் ராஜு, கேட் ராஜேந்திரன், பினு, மார்க்கெட் சிவா, பன்னீர் செல்வம் மற்றும் சுகு என்ற சுகுமார் இவர்கள் எல்லாம் பலே ரவுடிகள். இவர்கள் அனைவரும் குறைந்தது 3 முதல் 4 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார் அந்த அதிகாரி. இவர்களின் முக்கியத் தொழில் கட்டப்பஞ்சாயத்து. ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவை.

போலீசாரின் வேட்டைகளுக்கு இடையிலும், ரவுடிகளின் ஆட்டம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது எனபதுதான் பொதுமக்களின் புலம்பல். என்ன செய்யப போகிறது அரசும், காவல் துறையும்?

"கற்பழிப்பு" தலைநகராய் டெல்லி : 4 மாதங்களில் 330 சம்பவங்கள்

இந்தியத் தலைநகர் டெல்லி கற்பழிப்பு சம்பவங்களின் தலைநகராய் மாறிவருகிறது. இந்த ஆண்டின் கடந்த 4 மாதங்களில் மட்டும் 330 கற்பழிப்பு மற்றும் மானபங்கச் சம்பவங்கள் நடந்துள்ளன. கற்பழிப்பு சம்பவங்கள் மட்டும் 121 ஆகவும், மானபங்க சம்பவங்கள் 210 ஆகவும் கடந்த 4 மாதங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8 சிறுமிகள் உடபட 14 பெண்களை கற்பழிப்பு செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கற்பழிப்பு கொடுமைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளில் 90 % பேரை கைது செய்திருப்பதாகவும், கற்பழிப்பில் ஈடுபடும் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டோருக்கு அறிமுகமானவர்களாகவும் உள்ளனர் என்று டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில்(2007) மட்டும் 581 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 92.8 % குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால் 2005- ஆம் ஆண்டில் 685 கற்பழிப்புகள் நடந்துள்ளன.

2007 ஆம் ஆண்டில் கற்பழிப்புக்கு உள்ளானவர்களில் 68 % பெண்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். 26 சதவீதத்தினர் மட்டுமே 10 வகுப்புக்கு மேல் படித்தவர்கள். 80% க்கும் மேற்பட்டவர்கள் வறுமை நிலையில் உள்ளவர்கள் என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தக் கற்பழிப்பு கொடுமைக்கு இந்த மாதம் இரண்டரை வயது குழந்தை ஒன்று பலியாகி இருப்பதுதான் உச்சகட்ட சோகம். மேலும் 2 சிறுமிகளை காருக்குள் வைத்தே குதறிய சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. ஒரு சாலைப் போக்குவரத்து போலீசார்கூட தன் நண்பரின் மகளை கற்பழித்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம்-ஒரு பண்ணை உரிமையாளரால் தன்னிடம் பணி புரிந்த ஒரு சிறுமியை அவள் குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து கற்பழித்திருக்கிறார். அதேபோல் காது கேளாத, வாய் பேச முடியாத நிலைமையில் உள்ள அப்பாவிச் சிறுமியை ஒரு பஸ் டிரைவர் கடித்து குதறி இருக்கிறார்.

அதேபோல் ஏப்ரல் 16-ல் கணவன் உடபட 4 ஆண்கள் ஒன்று சேர்ந்து கூட்டுக் கற்பழிப்பு நடத்தி உள்ளனர் 40 வயது பெண்மணியை!

இப்படி தினம் தினம் டெல்லியில் கற்பழிப்பு காட்சிகள் அரங்கேறிய வண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.

April 28, 2008

திருமாவளவனை கைது செய்ய உத்தரவு

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தொல்.திருமாவளவனுக்கு சிதம்பரம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரக்குடி பகுதியில் கடந்த 11.05.1997-ல் தேர்தல் பிரசாரத்தின்போது விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அத்து மீறி பேசியதாகவும் திருமாவளவன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சிதம்பரம் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் இந்த வழக்கு நீதிபதி பிரகாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு விசாரணைக்காக தொல்.திருமாவளவன் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி பிரகாசன் உத்தரவிட்டார்.

April 27, 2008

"மணிவண்ணன் மகனுடன் ஆடையில்லாமல் நான்" - ஸ்டெபி ஆவேசம்

சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் ஸ்டெபி (வயது 20). சினிமா உதவி டைரக்டர். நேபாளி, சரோஜா உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். இவர் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் மகன் ரகு வண்ணன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கூறினார். ``ரகுவண்ணன் காதலித்து திருமணம் செய்து விட்டு ஏமாற்ற முயற்சிப்பதாக கூறிய அவர் அதற்கு ஆதாரமாக இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை வெளியிட்டார்.
அதோடில்லாமல் ரகுவண்ணன் தரப்பில் இருந்து டைரக்டர் சீமான், அவரது தம்பி நகேந்திரன் ஆகியோர் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவதாக தன்னை மிரட்டுவதாகவும், தன்னுடைய படத்தை வேறு வாலிபருடன் நெருக்கமாக இருப்பதாக கிராபிக்ஸ் செய்து வருவதாக திடீர் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
ஸ்டெபி கொடுத்த புகார் குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் முத்தமிழ் மணி விசாரித்து வருகிறார். நாளை (28-ந் தேதி) விசார ணைக்கு ஆஜராகும்படி, ரகுவண்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே தன் மீதும் தம்பி நகேந்திரன் மீதும் ஸ்டெபி கூறிய குற்ற சாட்டு குறித்து டைரக்டர் சீமான் கூறியதாவது:-

நான் டைரக்டராக உயர்ந்ததற்கு மணிவண்ணன் குடும்பத்தார் தான் காரணம். நானும் அவர்களது குடும்பத்தில் ஒருவன். ரகுவை சிறுவயதில் இருந்தே தூக்கி வளர்த்தவன். அவனை பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்தவன். அவன் மீது அதிக அக்கறை கொண்டவன் என்னுடைய தம்பி படத்தில் ரகு உதவி இயக்குனராக இருந்தார்.

என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி டைரக்டராக உயர்ந்துள்ள துரையிடமும் `நேபாளி' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். படபிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம் லயோலா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேசன் பட்டப்படிப்பு படித்து வந்த ஸ்டெபி என்ற பெண் கல்லூரி கிளாசில் டைரக்ஷன் பற்றி தெரிந்து கொள்ள வந்துள்ளார். 25 நாட்களே பணியாற்றி உள்ளார். அப்போது ரகுவுடன் ஸ்டெபி நட்பாக பழகி உள்ளார்.
ஸ்டெபியின் நடவடிக்கை சரியில்லாததால் துரை அவரை நிறுத்திவிட்டார் ரகு பிரபலமான டைரக்டரின் மகன் நிறைய சொத்து உள்ளது வளைத்து போட்டால் வசதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் ரகுவுக்கு அடிக்கடி போன் செய்து உணர்ச்சியை தூண்டி மயக்கி உள்ளார்.

நட்பு முறையில் வீட்டிற்கு அழைத்து சென்று மயக்கும் வகையில் பேசி அவருடன் நெருக்கமாக இருப்பதை சுவீட் மெமொரிஸ் என்று கூறி கேமராவில் வீடியோ எடுத்துள்ளார். ரகுவும் தோழிதானே என்று விட்டு விட்டார். ரகுவை வளைப்பதில் ஸ்டெபியின் குடும்பத்தினர் முழு ஈடுபாடு காட்டி உள்ளார். அடிக்கடி ரகுவை வீட்டிற்கு அழைத்து பொண்ணுடன் பழக விட்டுள்ளனர்.

ஸ்டெபியின் நடவடிக் கைகள் தவறாக இருப்பதை உணர்ந்த ரகு அவரிடம் பழகுவதை நிறுத்தி விட்டார். தற்போது சுவீட் மெமொரீஸ் என அவர் எடுத்த படங்களை காட்டி ரகுவையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுகிறார். திருமணம் நடந்து விட்டது என கூறி மணிவண்ணனின் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து ரகளையில் ஈடுபடுகிறார். நட்பாக பழகியது உண்மை அவர்களுக்கு முறைபடி திருமணம் நடைபெறவில்லை. ஒரு வீட்டில் மருமகளாக வாழ நினைக்கும் பெண் தானும் அவரும் நெருக்கமாக இருக்கும் படங்களையும், வீடியோக்களையும் பத்திரிகையில் வெளியிட துணிவாளா? இது பெண் இனத்துக்கே இழிவு. ஒரு குடும்பத்தை அசிங்கப்படுத்தி, அவமான படுத்தி, பணம்பறிக்கும் முயற்சியே தவிர எப்படி சொல்வது.

நான் 50 படத்தில் உதவி டைரக்டராக பணிபுரிகிறேன் என இவர் கூறியிருக்கிறார். ஒருடைரக்டரிடம் 5 உதவி இயக்குனர்கள் இருப்பார்கள், ஒரு உதவி டைரக்டர் 5 இயக்குனர்களை வைத்திருப்பது இப்போதுதான் கேள்விபடுகிறேன். இவரது உண்மை நிலையை இதை வைத்தே அறியலாம்.

எங்களுக்கு எவ்வளவோ வேலைகள் உள்ளது. இவர் முகத்திற்கு ஆசிட் வீசுவதா எங்கள் வேலை. படம் இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நாங்கள் இவரது படத்தை வைத்தா கிராபிக்ஸ் செய்ய போகிறோம். இவரது முகத்தை பார்த்தால் கிராபிக்ஸ் படம் கூட இவரிடம் ஒட்டாது.

இப்படி பேசுவதில் இருந்தே ஸ்டெபி எப்பேர்ப்பட்ட கிரிமினல் என்பது தெரிந்து விட்டது. இப்படியெல்லாம் பொய்யான, தகவல்களை வெளியிட்டு மோசடி செய்வது இவருக்கு கைவந்த கலை. இவர்கள் குடும்பமே சரியில்லை அவர்கள் தூண்டுதலால் இப்படி நடந்து கொள்கிறார்.

ஸ்டெபியின் அப்பா என்று அறிமுகப்படுத்தி கொண்ட நபர்தான் குடிபோதையில் என்னை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி மிரட்டினார். இது பற்றி போலீஸ் விசாரணையின் போது தெரிவிப்பேன். ரகு ஸ்டெபியை திருமணம் செய்து கொண்டான் என கூறுவோர் திருமண படத்தை வெளியிட வேண்டியது தானே! எதை எதை எல்லாமோ ஆதாரமாக காட்டுவோரிடம் தாலி கட்டும் படம் இல்லை என்றால் அவர்கள் திருமணம் நடக்கவில்லை என்பது தானே உண்மை.
ஸ்டெபியின் கீழ்த்தரமான நடிவடிக்கையால் ரகுவண்ணனின் தாய் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இடைவிடாமல் அழுது கொண்டே உள்ளார். ரகுவை வளைப்பதற்காக ஸ்டெபி குடும்பத்தினர் இப்படியொரு காரியத்தில் இறங்கி உள்ளது வேதனையை தருகிறது. புகாரை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம். இவ்வாறு டைரக்டர் சீமான் கூறினார்.

சீமான் கூறியது பற்றி ஸ்டெபியிடம் கேட்டபோது :-தொடர்ந்து படிக்க அதிகாலை.காம் இணைப்பில் செல்க.. http://www.adhikaalai.com/index.php?/en/செய்திகள்/தமிழகம்/-மணிவண்ணன்-மகனுடன்-ஆடையில்லாமல்-நான்-ஸ்டெபி-ஆவேசம்

April 24, 2008

செம்மொழித் திட்ட நிதி சீர்குலைவு : மயிலாடுதுறை கல்லூரி

மயிலாடுதுறை கல்லூரியின் மர்மக் கருத்தரங்கம். ‘அதிகாலை’ - நிருபர் குழுவின் அதிரடித் தகவல்கள்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை ( மாயவரம் ) அ.வ‌.அ. த‌ன்னாட்சி கல்லூரி சமீபத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு செலவு செய்பவதற்காக மத்திய அரசின் செம்மொழித் திட்ட நிதியிலிருந்து பெருந்தொகை அளிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகைவரவழைக்கப்பட்ட பேராளர்களுக்கும், நிகழ்வுக்கும் பயன்படுத்தப்பட்டதா? என்றால்.... அது பெரிய மர்மமாகவே இருக்கிறது. அது பற்றி நம் ‘அதிகாலை’-க்கு கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கின. த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரை த‌லைவ‌ராக‌க் கொண்ட‌ துறையில் துணிச்சலாக‌ இப்ப‌டி ந‌ட‌க்குமா? என்று ந‌ம‌க்கு சிறிது ச‌ந்தேக‌ம். ஆனால் தொட‌ர்ந்து கிடைத்த‌ த‌க‌வ‌ல், ந‌ம் அதிகாலை நிருப‌ர்க‌ளை முடுக்கிவிட்டு உண்மை என்ன‌ என்று கருத்தர‌ங்க‌ பேராள‌ர்க‌ள் ப‌ட்டிய‌லை வைத்துக்கொண்டு அலசோ...அலசு... என்று அலச வைத்தது.

ஆதியிலிருந்து:-

இந்திய‌மொழிக‌ளின் ந‌டுவ‌ண் நிறுவ‌ன‌ம் - மைசூர் த‌மிழ்ச் செம்மொழித் திட்ட‌ நிதி உத‌வியில் “உல‌க‌ப் பண்பாட்டிற்கு த‌மிழ் ப‌க்தி இல‌க்கிய‌ங்க‌ள், இய‌க்க‌ங்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு ப‌ன்னாட்டுக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்” ஒன்றை ம‌யிலாடுதுறையில் உள்ள அ.வ‌.அ.க‌ல்லூரி த‌ன்னாட்சி ந‌ட‌த்த‌ விரும்பிய‌து. அதற்கு அக்கல்லூரியின் த‌மிழ் இணைப் பேராசிரிய‌ர் தி.நெடுஞ்செழிய‌ன் திட்ட‌மிட்டார்.-
வெளிநாட்டிலிருந்து வரும் பேராளர்களுக்கு அமெரிக்க டாலரில் ஒரு வழிப்பயணச்செலவு தரப்படும் என்று சிலருக்கும், சிலருக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பிவைக்கிறோம் என்றும் மனம்போன போக்கில் இணைய மடலாடற்குழுமம் ஒன்றில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி அறிவிப்புச் செய்திருக்கிறார். இந்த அறிவிப்பைப் பார்த்து சிலர் கூட வெட்டியாய் கூட்டம் கூடிவிடப்போகிறது என்று காமெண்ட் அடித்துச் சிரித்திருக்கிறார்கள்.

திடீரென்று பேரா. நெடு- விற்கு ஒரு ஆலோசனை தோன்றியிருக்கிறது. வெளிநாட்டுக் கூட்டம் போதாது. உள்நாட்டிலிருந்தும் கனிசமான கூட்டம் சேர்த்தால்தான் செம்மொழித் திட்ட நிறுவனம் அளிக்கும் இலட்சங்களை சுலபமாக "சுவாஹா" செய்ய முடியும் என்று தோன்ற தனியார், அரசு கல்லூரி தமிழ்த்துறைக்கெல்லாம் சுற்றறிக்கை அனுப்பி தமிழ்த்துறைப் பேராசிரியர்களுக்குத் தூண்டில் போட்டார். "நெடு"வின் உள்நோக்கம் புரியாத தமிழ்த்துறைப் பேராசிரிய மீன்கள் வசமாக தூண்டிலில் விழ உற்சாகம் கொப்புளிக்க சில திட்டங்களைத் தீட்டீனார் "நெடு!"

பன்னாட்டுக் கருத்தரங்கத்தை எப்படிச் சிறப்பாக நடத்துவது? பேராளர்கள் அளிக்கும் கட்டுரைகளை எப்படித் தொகுத்து புத்தகமாக்குவது? அமர்வுகளை எப்படி நடத்தினால் சிறப்பாக நடத்தமுடியும். ஒரு அமர்வில் ஒரு கட்டுரையாளருக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினால் அது சிறப்பாக அமையும்! பேராளர்களைத் தங்க வைக்க என்ன ஏற்பாடு?

இத்தனை பேராளர்களுக்கு ஒருவர் வீதம் நியமித்து வருகின்ற பேராளர்களை எந்தச் சிரமும் இல்லாமல் கவனித்துக்கொள்ள ஒரு குழு, அந்தக்குழுவை வழி நடத்த இருவர் குழு! வெளிநாட்டிலிருந்து இலட்ச இலட்சமாய் செலவழித்து இதறகாகவே வருபவர்களை எப்படி எதிர்கொள்வது?

அவர்களுடைய அமர்வு சிறக்க அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினால் சிறப்பாக அமையும்? இந்த அமர்வைக் கவனிக்க ஒரு குழு! இப்படியெல்லாம் நெடுஞ்செழியன் ஒவ்வொரு விசயத்தையும் உன்னிப்பாய் நெடுஞ்செழியன் திட்டமிட்டிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு!
அவர் திட்டமிட்டதெல்லாம், கிடைக்கும் நிதியை பேராளர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு கல்லூரி நிர்வாக நெல்லுக்குப் போக புல்லான தனக்கும் பாய்ச்சிக்கொள்ளவே மிக நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கிறார். பேராளர்களுக்கு அவ்வப்போது அதிர்ச்சிவைத்தியம் கொடுப்பது, பாவம் தனிமனிசனாய் எப்படி அல்லல் பட்டு இந்தக் கருத்தரங்கை நடத்துகிறார் என்ற ரீதியிலான எண்ணத்தை ஏற்படுத்தி சாமர்த்தியமாய் அவர் காய்களை நகர்த்தியது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

எதிர்பார்த்தபடி வெளிநாட்டிலிருந்து ஓரிருவர் தவிர எவரும் இசைவு தெரிவிக்காத நிலையில்,க‌ட‌ந்த‌வ‌ருட‌ம் அக்டோப‌ர் மாத‌ம் மீண்டும் இணைய‌த்தில் "வெளிநாட்டுப் பேராளர்களுக்கு ஒரு வழி விமானச் செலவும் விதிகளின்படி நாட்படியும் வழங்கப்படும். தங்குமிட வசதியும் செய்து தரப்படும்.

தங்களின் ஒருவழி விமானச் செலவை இந்திய ரூபாயில் அல்லது அமெரிக்க டாலரில் தெரிவிக்கவும். கருத்தரங்கம் முடிந்து ஒருநாள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்படும்" என்று வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ளுக்கு வ‌லை வீசுகிறார்.

ஒருவ‌ழி விமான‌ச் செல‌வு, நாட்ப‌டி, த‌ங்குமிட‌ வ‌ச‌தி என்றெல்லாம் சொல்லிக் கூவி அழைக்கிறார். இதை எந்த அடிப்படையில் யாருடைய உத்திரவாதத்தின் பேரில் அறிவித்தார்? இன்றுவரை இதற்கான விளக்கம் கிடையாது!?

இந்த‌ அறிவிப்பைக்கேட்டு சில‌ர் த‌மிழார்வ‌த்தில் சிங்க‌ப்பூரிலிருந்து ம‌ட்டும் அதிக‌ப‌ட்ச‌மாக‌வும், இல‌ங்கை, அமெரிக்கா, ம‌லேசியா ம‌ற்றும் கொரியா போன்ற‌ நாடுக‌ளிலிருந்து விண்ண‌ப்பித்த‌ன‌ர். ஆயிற்று.. பேராள‌ர்க‌ள் க‌ண்ணும் க‌ருத்துமாய், "உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இயக்கம் / இலக்கியங்களின் பங்களிப்பு" என்று த‌லைப்புக் கொடுத்திருந்த‌தால் அவ‌ர‌வ‌ர் க‌ட்டுரைக‌ள் த‌யாரிப்ப‌தில் க‌ர்ம‌ சிர‌த்தையாய் ஈடுப‌ட்டு அனுப்ப‌த் துவ‌ங்கின‌ர்.

இப்போது நெடுஞ்செழிய‌னுக்கு புதுச் சிக்க‌ல் உருவாகிவிட்ட‌து. சிக்க‌ல் ஒன்று, "அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு ஏற்ப‌ வான‌வில், பூமிவில் என்று த‌ங்க‌ளுக்குத் தெரிந்த‌ எழுத்துருவில் க‌ட்டுரைக‌ளை க‌த்தையாக‌ க‌ணினியில் அனுப்பிவைத்த‌ன‌ர். பாவ‌ம் நெடுஞ்செழிய‌ன், க‌ணினியைத் திற‌ந்துபார்த்தார். த‌மிழ் மொழியில்தானே க‌ட்டுரை கேட்டோம் ஆளாளுக்கு க‌ற்கால‌ மொழியிலும் பிற்கால‌ மொழியிலும் எழுதி க‌ண்ணாமூச்சி காட்டியிருக்கிறார்க‌ளே என்று நொந்து போனார்! பேராளர்களுக்கு, "நீங்க‌ள் யூனிகோடில் ம‌ட்டுமே எழுதி அனுப்ப‌வேண்டும் என்று அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாய் எல்லோருக்கும் தகவல் அனுப்பினார்.

அடுத்த‌ சிக்க‌ல் க‌ட்டுரை அளவீடு!

பேராள‌ர்க‌ள் எல்லோரையும் க‌ட்டுரை எழுத‌ச் சொல்லி அழைப்புவிடுத்த‌வ‌ர், க‌ட்டுரை இத்த‌னை ப‌க்க‌ங்க‌ளுக்குள் இருக்க‌ வேண்டும் என்ற‌ வ‌ரைய‌றை செய்ய‌த் த‌வ‌றியது, பேராள‌ர்க‌ள், அவ‌ர‌வ‌ர்க‌ள் ஒரு புத்த‌க‌மே போடும‌ள‌வுக்கு க‌ட்டுரைக‌ளை அனுப்ப‌த் துவ‌ங்கின‌ர்.

ஒவ்வொருவ‌ர் அனுப்பும் ப‌க்க‌ங்க‌ளைப் பார்த்தால் வால்யூம் வால்யூமாக‌ தொகுத்தால் ஒரு ப‌க்தி நூல‌க‌மே வைக்க‌லாம் போல‌ வ‌ந்து குவிந்த‌தும், செம்மொழி திட்ட‌த்திட‌ம் இதையெல்லாம் ப‌திப்பிக்க‌ த‌னியாத்தான் நிதி வாங்க‌வேண்டும் என்று காமெண்ட் அடித்திருக்கிறார். நேர‌ம் இருந்திருந்தால் இதற்கும் செம்மொழி நிறுவ‌ன‌த்திட‌ம் த‌னியாக‌ நிதி கேட்டிருப்பாரோ என்ன‌வோ!? பேராள‌ர்க‌ள் உழைப்பைப் ப‌ற்றி அணுவ‌ள‌வும் க‌வ‌லையில்லாத‌ நெடுஞ்செழிய‌ன், "க‌ட்டுரையின் சுருக்க‌ம் ஒரு 5 ப‌க்க‌ங்க‌ளுக்குள் இருக்குமாறு அனுப்ப‌வும்" என்று ஒரு சுற்ற‌றிக்கையை சனவரி இறுதியில் நிதான‌மாக‌ அனுப்பினார்.

இதைப்பார்த்த‌ பேராள‌ர்க‌ள் "அடக்கடவுளே‌" என்று அல‌றி அவ‌ர்க‌ளாக‌வே புலம்பி அர‌ற்றிக்கொண்டார்க‌ள். எப்ப‌டி இத்த‌னை ப‌க்கங்களைச் சுருக்கி 5 ப‌க்க‌ங்க‌ளுக்குள் சொல்வ‌து என்று கேட்ட‌ பேராள‌ர்க‌ளை, "சொல்ற‌தைச் சுருங்க‌ச் சொல்லி விள‌ங்க‌ வைங்க‌" என்று தொல்காப்பிய அட்வைஸ் கொடுத்து மேலும் திக்குமுக்காட‌ வைத்திருக்கிறார்.

வெளிநாட்டுப் பேராள‌ர்க‌ளை உட‌ன‌டியாக‌ க‌ட‌வுச்சீட்டு அனுப்புக, த‌ன் விப‌ர‌க்குறிப்பை அனுப்புக..என்றும் விசாவுக்கு இதெல்லாம் வேண்டும் அனுப்புக‌, உங்க‌ளை வ‌ரவேற்ப‌த‌ற்கு சிற‌ப்பான‌ ஏற்பாடுக‌ள் எல்லாம் ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து என்று துரித‌மாக‌ வேலை ந‌ட‌ப்பது போல‌க் காட்டிக்கொண்டார்.

பேராள‌ர்க‌ள் குறித்த‌ வேலைக‌ள் ந‌ட‌ப்பத‌‌ற்குப் ப‌திலாக‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் பெய‌ரைச் சாக்குவைத்து, கல்லூரிக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு ப‌ல்வேறு பல்கலைக் க‌ழ‌க‌ துணைவேந்த‌ர்க‌ள், உள்ளூர் எம்.எல்.ஏ, க‌விக்கோ அப்துல்ர‌குமான் இப்ப‌டியான‌வ‌ர்க‌ளை துவ‌க்க‌விழாவிற்கும், நிறைவு விழாவிற்கும் அழைப்ப‌தில் அவ‌ர்க‌ளுக்கான‌ ஏற்பாடுக‌ளைச் செய்வ‌திலுமே த‌ன் பெரும்ப‌குதி நேர‌த்தைச் செல‌விட்டிருக்கிறார், நெடுஞ்செழியன் என்பதை அவருடன் இருந்தவர்களே நமக்கு ஊர்ஜிதப்படுத்தினர்.

“டிச‌ம்ப‌ர் 30.1207-ல் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயங்கி வரும் தமிழ்ச் செம்மொழித் திட்டத்தினர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, வெளிநாட்டு பேராளர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ள விமான பயணக் கட்டணம் வழங்கிட வேண்டுமென்றால் பேராளர்களின் த‌ன் விப‌ர‌க்குறிப்பை எதிர்வரும் ஜனவரி 1-ம் நாளுக்குள் அன்புகூர்ந்து அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்கிறேன். ஜனவரி 4-ம் நாள் அனைத்து விரவங்களுடன் தில்லியில் உள்ள அயல்நாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றிட வேண்டும். நிதிக்கும் ஒப்புதல் பெறவேண்டும் என்பது முக்கிய தேவையாக உள்ளது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் அதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றால் பயணத்தொகை தேவையில்லை என்பதை மின்னஞ்சல் வழி தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன். கருத்தரங்க செலவுகளைத் திட்டமிட்டு மத்திய அரசிடம் பெறவேண்டியுள்ளது. தங்களின் அன்பான ஒத்துழைப்பை அன்புடன் வேண்டுகிறேன்" என்று இர‌ண்டே நாள் இடைவெளியில் மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியிருக்கிறார்.

ச‌ன 27-ம் தேதி ஒரு அறிக்கை அனுப்புகிறார். 2-ம் தேதி அனுப்பிய வெளிநாட்டுப்பேராள‌ர்களுக்கு செம்மொழி மத்திய அயலுறவுத்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. மற்றவர்களுக்கு விமானக்கட்டணம் தர இயலாது என்று அறிவித்துவிட்டது, என்று. இடைப்பட்ட காலகட்டத்தில் க‌ருத்த‌ர‌ங்க‌ம் குறித்தோ, க‌ட்டுரை என்னாயிற்று என்றோ, என்ன‌ ஏற்பாடுக‌ள் என்றோ எந்தத் த‌க‌வ‌ல் தொட‌ர்பும் பேராள‌ர்க‌ளோடு கொண்டிருக்க‌வில்லை.

தொட‌ர்புகொண்ட‌ பேராள‌ர்க‌ளிட‌மோ நான் தின‌ந்தோறும் ந‌ள்ளிர‌வு தாண்டியே தூங்க‌ப்போகிறேன். எப்ப‌டியாவ‌து இந்த‌க் க‌ருத்த‌ர‌ங்கை ந‌ல்ல‌வித‌மாக‌ முடித்தால் போதும் என்று ச‌ரியா தூங்காம‌ச் சாப்பிட‌மா அலையிறேன்" என்று ரீல்விட்டிருக்கிறார்.

ஏன் ரீல் விடுகிறார் என்ப‌த‌ற்கும் ந‌ம்மிட‌ம் ஒரு பேராள‌ர் காட்டிய‌ த‌கவ‌ல்தான் கார‌ண‌ம்!

உரிய‌ கால‌த்தில் "நெடு" விற்கு அனுப்பிவைத்தும் 20ம்தேதியே உங்க‌ளுக்கு ம‌த்திய‌ அய‌லுற‌வுத்துறை ம‌றுத்துவிட்ட‌து என்ற த‌க‌வ‌ல் அது! அய‌லுறவுத் துறைக்கு தமிழ் செம்மொழிப்பிரிவுத் தலைவர் முக்கால‌மும் உண‌ர்ந்த‌ முனிவ‌ரோ!அது தான் நெடுஞ்செழிய‌ன்!

இன்னுமொரு சூப்ப‌ர் ஆதார‌ம்.

சனவரி 13-ல் திருச்சி அருகேயுள்ள சொந்த ஊரான கீழக் கல்கண்டார்கோட்டைக்கு குடும்பத்தோடு ஜாலியாகப் போய்விட்டார். 18-ம் தேதி திரும்பிவந்து,19ம்தேதி," மார்ச்சு திங்களில் நடைபெறவிருக்கும் உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் பங்களிப்பு என்னும் பன்னாட்டு கருத்தரங்கில் தாங்கள் கலந்துகொள்வதற்கான விமான கட்டணம் தமிழ்ச் செம்மொழித் திட்டத்தால் உங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. கல்விசார் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயணக் கட்டணம் வழங்க இயலும் என்று கூறிவிட்டார்கள். கருத்தரங்கில் கலந்துகொள்வது குறித்து தாங்கள்தான் இனி முடிவு செய்யவேண்டும்" என்று வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ள் மூவ‌ருக்கு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியிருக்கிறார்.

தமிழ்ச் செம்மொழித் திட்டத்தால் உங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்ப‌தை வாச‌க‌ர்க‌ள் ந‌ன்கு க‌வ‌னிக்க‌வேண்டும். ஒருவ‌ருக்கு ம‌த்திய‌ அய‌லுற‌வுத்துறை ம‌றுத்து விட்ட‌தாக‌ச் சொல்லுகிறார்.. இன்னொருவ‌ருக்கு த‌மிழ் செம்மொழித் திட்ட‌த்தால் ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து என்கிறார்.

சிங்கப்பூர் தேசியபல்கலைக்கழகப் பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு விமானடிக்கெட் வாங்கியனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ‘கடைசிவரை புறப்பட ஏற்பாடுகள் செய்து டிக்கெட் கைக்கு வராததால் நான் மாநாட்டுக்கு வரப்போவதில்லை’ என்றே தெரிவித்திருக்கிறார்.


நமக்குப் புரியாதது இவருக்கு மட்டும் எப்படி விமான டிக்கெட் வாங்கித் தருகிறேன் என்று நெடுஞ்செழியன் எந்த அயலுறவுத்துறை ஒப்புதலோடு சொன்னார் என்பது புரியவில்லை! ஏனிந்த முரண்பாடுகள்?

ந‌ம் கேள்வி இதுதான்.

த‌மிழ் செம்மொழி திட்ட‌மே நிராக‌ரிக்கிற‌து என்றால் அதை ஏன் முத‌லிலேயே,"கல்விசார் ஆசிரியர்களுக்கு" ம‌ட்டுமே விமான‌க் க‌ட்ட‌ண‌ம் என்று தெளிவாக‌ச் சொல்ல‌வில்லை?

தமிழ் செம்மொழி திட்ட‌ம் தெளிவாக‌ச் சொல்லி நெடுஞ்செழிய‌ன் வெளிநாட்டுப் பேராள‌ர்க‌ளுக்கு தெரிவிக்காம‌ல் ம‌றைத்து விட்டாரா?இந்த‌ ஏமாத்து,ப‌ம்மாத்து வேலையில் தொட‌ர்புள்ள‌து நெடுஞ்செழிய‌ன் ம‌ட்டும்தானா?அல்ல‌து செம்மொழித்திட்ட‌ அலுவ‌ல‌ர்க‌ளுக்கும் இதில் ப‌ங்கிருக்கிற‌தா?

இதில் வெளிநாட்டுப் பேராள‌ர் ஒருவ‌ர் த‌மிழ் செம்மொழிதிட்ட‌ அலுவ‌ல‌க‌த்தையே தொட‌ர்புகொண்டு கேட்ட‌த‌ற்கு ம‌த்திய‌ அய‌லுற‌வுத்துறை என்று கைகாட்டியிருக்கிறார்க‌ள்! ஆக‌ ஒரு கூட்டுக்கொள்ளை ம‌வுன‌மாக‌ அர‌ங்கேறியிருக்கிற‌தா?

இதில் மிக‌வும் நொந்து நூடுல்ஸாகிப்போன‌வ‌ர் சிங்க‌ப்பூர் முன்னாள் ஒலி 96.8ன் த‌லைவ‌ர்!பேராளர்களை ச‌ன 27ம்தேதி, "நீங்கள் அனுப்பிய ஆய்வுச் சுருக்கம் ஏற்கப்பட்டுவிட்டது. முழுக்கட்டுரையையும் பிப்.5ம்தேதிக்குள் க‌ருத்த‌ர‌ங்கிற்கு குறுகிய‌ கால‌மே இருப்ப‌தால் ஆய்வுக்கோவை அச்ச‌டிக்க‌ வேண்டும்." முழுக்கட்டுரையையும் உடனே அனுப்பிவையுங்கள் என்று சுற்றறிக்கை நெடுஞ்செழியன் அனுப்புகிறார்.

இந்த‌ ஆய்வுக்கோவை அச்ச‌டிக்க‌ப்ப‌ட‌வும் இல்லை பேராள‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வும் இல்லை. இதைப்பற்றி பேராள‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு அச்ச‌டிக்கும் வேலை ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து. க‌ருத்த‌ர‌ங்க‌ம் முடியும் முன் அனைவ‌ருக்கும் கொடுக்க‌ப்ப‌ட்டுவிடும் என்று க‌டைசிவ‌ரை க‌ண்ணில் காட்ட‌வே இல்லை! ஆனால் ஆய்வுக்கோவை அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ அச்சாபீஸ் பில்க‌ள் எல்லாம் செட்டில் செய்ய‌ப‌ப்ட்டிருக்கின்ற‌ன‌, செம்மொழி அலுவ‌ல‌க‌த்தால்!

தங்குமிட வசதியில் கோல்மால்!

உங்க‌ளுக்கு த‌ங்குமிட‌ வ‌ச‌திக‌ள் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. தாஜ் ரெசிடென்சி ஹோட்ட‌லில் என்று அந்த‌ லாட்ஜ் போன் ந‌ம்ப‌ர், (தாஜ் ரெசிடென்சி செல்போன் எண்கள்- 98423 52009 ம‌ற்றும் 98423 61702)மின்ன‌ஞ்ச‌ல் என்று அனுப்பி 5 - ம்தேதி மாலையிலிருந்து வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ள் த‌ங்குவ‌த‌ற்கு இங்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

த‌ங்கும் வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ளை இங்கிருந்து கருத்தரங்கம் நடக்கும் க‌ல்லூரிக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அமர்க்களமாய் தகவல் அனுப்பியதை நம்பி ஏமாந்த வெளிநாட்டுப்பேராளர்களின் கொடுமை அந்தோ பரிதாபம்!

அமெரிக்க‌ப் பேராள‌ர் ஆல்ப‌ர்ட் தங்குமிடத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள மின்னஞ்சல் அனுப்பி ப‌திலே இல்லை. தொலைபேசியில் தொட‌ர்புகொண்டால் ராங்க் ந‌ம்ப‌ர்! வெளிநாட்டிலிருந்து விமான‌த்தில் வ‌ந்த‌ பேராளர், சென்னையிலிருந்து தாஜ் லாட்ஜ் தொட‌ர்பு எண்ணை தொட‌ர்புகொண்டு இய‌லாம‌ல் போகவே, நெடுஞ்செழியனை செல் போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

வெகு நேரம் பிசி என்றும், பின்னர் சுவிட்ச் ஆஃப்பும் செய்யப்பட்டுள்ளது என்றும் கேட்டு நொந்து ச‌ரி நேரில் போய்விடுவோம் என்று திருச்சிவ‌ழியாக ர‌யிலில் போனால் மாய‌வ‌ர‌ம் போக‌வே 9 ம‌ணியாகிவிடும். அத‌னால் ஒரு வாட‌கைக்காரில் ம‌யிலாடுதுறைக்கு அதிகாலை 4 ம‌ணிக்குச் சென்று விசாரித்து லாட்ஜ் முன்பு இற‌ங்கி காரை அனுப்பிவிட்டு லாட்ஜுக்குள் அப்பாடா என்று நுழைந்திருக்கிறார்.

அங்கு உற‌‌ங்கிக்கொண்டிருந்த‌ சிறுவ‌ர்க‌ளை எழுப்பி க‌ல்லூரி க‌ருத்த‌ர‌ங்கிற்கு வ‌ந்திருக்கிறேன். ரூம் போட்டிருக்கிறார்க‌ளா? என்று விசாரிக்க‌ அந்த‌ச் சிறுவ‌ர்க‌ள் ம‌ல‌ங்க‌ ம‌ல‌ங்க‌ விழித்திருக்கிறார்க‌ள். தூக்கக் கலக்கத்திலிருப்பார்கள் போலிருக்கிறது என்று மெல்ல விசாரித்தவருக்கு தூக்கிவாரிப்போட்டிருக்கிறது.

‘லாட்ஜ் வேலை நடக்கிறது. அடுத்த மாசமதான் லாட்ஜ் திறப்பாங்க’- என்று சொல்ல வந்த வெளிநாட்டுப்பேராளர் மயக்கம் போட்டுவிழாத குறையாக இது தாஜ் ரெசிடென்சிதானே என்று கேட்க இது தாஜ்தாங்க. இப்ப யாருக்கும் வாடகைக்கு விடறது இல்ல என்றதும் சிரமப்பட்டு அந்த‌வ‌ழியாக‌ வ‌ந்த‌ ஒரு ஆட்டோவைப் பிடித்துப்போய் வேறு ஒரு லாட்ஜுக்குப் போயிருக்கிறார்.

முத‌ல் ச‌குன‌மே ச‌ரியில்லையே என்று 750-ரூபாய் குளிர்சாத‌ன‌ அறை எடுத்து உள்ளே போனால் ஏசி ஓடாம‌ல், துண்டு கூட‌ இல்லாம‌ல் நாலாவ‌து மாடியில் அறை கொடுத்திருக்கின்ற‌ன‌ர். விதியே என்று காலையில் நெடுஞ்செழிய‌னிட‌ம் சொல்லி வேறு ந‌ல்ல‌ லாட்ஜ் பார்க்க‌வேண்டிய‌துதான், என்று இருந்திருக்கிறார். க‌டைசிவ‌ரை அதிலேயே இருந்து வெம்பி, வ‌த‌ங்கி நொந்து திரும்பிய‌ அவ‌ல‌ம் அந்த‌ அமெரிக்க‌ப் பேராள‌ருக்கு!

இந்த‌க் க‌ருத்த‌ர‌ங்கில் இன்னொரு மிகப் பெரிய ஜோக் என்ன‌ தெரியுமா சார் என்றாசார். ந‌ம் த‌மிழ‌க‌ப்பேராள‌ர்க‌ளுள் ஒருவர். சொல்லுங்க‌ள் என்றோம். நெடுஞ்செழிய‌ன் சார் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். பேராள‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் தாஜ்விடுதியில் த‌ங்கும் விடுதி வ‌ச‌தி 5.3.08 மாலை 6மணியிலிருந்து 8.3.08 மாலை 6-ம‌ணி வ‌ரை ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. பேராள‌ர்க‌ள் த‌விர்த்து உட‌ன் வ‌ருவோர்க்கு எந்த‌ வ‌ச‌தியும் செய்து த‌ர‌ப்ப‌ட‌மாட்டாது. என்றிருந்த‌துதான்.

ச‌ரி க‌ருத்த‌ர‌ங்க‌ம் எப்ப‌டி ந‌ட‌ந்த‌து என்று மற்றொரு பேராள‌ரிட‌ம் கேட்க‌, "அந்த‌ச் சோக‌த்தை ஏங் கேக்குறீங்க‌? என்று அவ‌ர் புல‌ம்பித் த‌ள்ளிய‌திலிருந்து நாம் சேக‌ரித்த‌து.

6- ம்தேதி பேராள‌ர் ப‌திவு என்று இருக்குமே என்று பார்த்தால் ஒரு ப‌ன்னீர் சொம்போடு மூன்று க‌ல்லூரி மாண‌விக‌ளை நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்க‌ள். ஒவ்வொருவ‌ராக‌ வ‌ந்து ந‌ல‌ன் விசாரித்து அவ‌ர‌வ‌ர்க‌ளாக‌ உட்கார்ந்து கொண்டிருக்க‌ விழா எந்த‌ ப‌ங்சுவாலிட்டியும் இல்லாம‌ல் சாவ‌காச‌மாக‌ 11.45க்கு துவ‌ங்க‌ ஒரு ப‌ழைய‌ நோட்டில் ஒருவ‌ர் ஸார், ஒங்க‌ பேர், ஊர‌ இதுல‌ எழுதுங்க‌ ஸார் என்று வாங்கியிருக்கிறார்.

அப்புற‌ம்தான் தெரிந்த‌து. அதுதான் பேராளார் ப‌திவேடு என்று! செம்மொழித் திட்டம் த‌லைவ‌ர் இராம‌சாமியே வ‌ர‌வில்லை. அவ‌ர் சார்பாக‌ கோத‌ண்ட‌ராம‌ன் என்று ஒருவ‌ர் நோக்கவுரை என்று துணைவேந்த‌ர்க‌ள் அவ‌ர்க‌ள், இவ‌ர்க‌ள் என்று க‌தாகால‌ட்சேப‌ம் ந‌ட‌த்தி முடிக்க‌ பிற்ப‌க‌ல் 1.30-ம‌ணிக்கு மேலாகிவிட்ட‌து. எதோ கொஞ்ச‌ம் உருப்ப‌டியாக‌ப் பேசிய‌து பெரியார் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ துணைவேந்த‌ர் த‌ங்க‌ராசுவும், முனைவ‌ர் தொ.ப‌ர‌ம‌சிவ‌மும்தான்!

கருத்தரங்க சோகம்

எல்லாம் சாப்பாட்டுக்கு க‌லைந்து முத‌ல் கருத்த‌ர‌ங்க அம‌ர்வுக்குப் போனால் வெளிநாட்டுப் பேராளர் ஒருவர் அங்கிருந்தவரிடம் அழமாட்டாத குறையாகச் சொல்லியிருக்கிறார்.அவ‌ர் ம‌லேசியாவிலிருந்து வ‌ந்த‌ ம‌லேசிய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ப் பேராசிரிய‌ர்.ச‌பாப‌தி வேணுகோபால். க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வுக‌ள் எதிலுமே அவ‌ர் பெய‌ர் இல்லை என்ப‌துதான் அவ‌ர‌து புகார் என்று சொல்லி நம்மிடம் க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வுப் ப‌ட்டிய‌லைக் காண்பித்தார். அதில் அவ‌ர் பெய‌ர் இல்லை!

வெளிநாட்டிலிருந்து வ‌ந்த‌தே மொத்த‌ம் 7 பேராள‌ர்க‌ள்தான்!

அதிலும் ஒருவ‌ர் க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வுப்ப‌ட்டிய‌லில் பெய‌ரே இல்லை என்றால் எப்படி? என்ன ல‌ட்ச‌ண‌மாய் திட்டம் தீட்டி க‌ருத்த‌ர‌ங்க‌ம் ந‌ட‌ந்திருக்கும் பாருங்க‌ள்!" என்றார் புகார் சொன்ன‌ பேராள‌ர்!

ஒரு க‌ருத்த‌ர‌ங்க‌ம் வேலாயுத‌ம் அர‌ங்கில் ம‌ற்றொன்று க‌ருத்த‌ர‌ங்க‌ அறையிலும் என்றிருந்திருக்கிற‌‌து. அந்த‌க் க‌ருத்த‌ர‌ங்க‌ம் ஒரு மாடியில்!

யாருக்கும் தெரிய‌வில்லை. வ‌ழிகாட்ட‌வும் ஒருவ‌ரும் இல்லை. பேராள‌ர்க‌ள் மாண‌வ‌ர்க‌ளிட‌ம் இந்தக் க‌ருத்த‌ர‌ங்க‌ம் எங்கேயிருக்கு என்று பேராள‌ர்க‌ளே ப‌ரிதாப‌மாக‌ விசாரித்து அன்ன‌ந‌டை போட்டு போயிருக்கிறார்க‌ள். அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் 2.00 ம‌ணிக்கு அம‌ர்வு. ம‌ணியோ 2:30. பேராள‌ர்க‌ள் வெளியே நின்றுகொண்டிருந்தார்க‌ள். என்ன‌ என்று பார்த்தால் க‌ருத்த‌ர‌ங்க‌ அறை பூட்டிக் கிட‌ந்த‌துதான் கார‌ண‌ம்.

அங்கிருந்த‌ பேராசிரிய‌ர் ஒருவ‌ரிட‌ம் கேட்க‌ அவ‌ர் ஒருவ‌ரைக் கைகாட்டி அவ‌ர் வ‌ந்து திற‌ந்தால் அந்த‌ அறையைக்கூட்டி சுத்த‌ப்ப‌டுத்தியே ஒரு மாம‌ங்க‌மிருக்கும் போலிருக்கிறது. மைக் வேலை செய்ய‌வில்லை. ஏசி வேலை செய்ய‌வில்லை.

அப்போதுதான் நெடுஞ்செழிய‌ன் எங்கிருந்தோ வ‌ந்து அட‌, எங்க‌ப்பா அந்தாளு? என்று விர‌ட்டிக்கொண்டிருந்தார். இந்த‌க் க‌ளேப‌ர‌த்தில் பேச‌வேண்டிய‌ பேராள‌ர்க‌ள் உருப்புடாப்புல‌ என்று எழுந்து ந‌டையைக் க‌ட்டின‌ர். அந்த‌ அம்ர்வுக்கு ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ டெல்லி ப‌ல்க‌லைக்க‌ழ‌க் பேராசிரிய‌ர். கோவிந்த‌சாமி ராஜ‌கோபாலை த‌லைமை ஏற்க‌வைத்து த‌டால‌டியாக அவ‌ச‌ர‌ப் பேச்சாள‌ர் ப‌ட்டிய‌ல் த‌யாரித்து அம‌ர்வை ஆர‌ம்பிக்கும்போது மணி மூன்று!

அத‌ன் பிற‌கு அந்த‌ அறையில் ந‌ட‌க்க‌வேண்டிய‌ அம‌ர்வுக‌ள் எதுவுமே ந‌ட‌க்க‌வில்லை என்று அவ்வ‌ள‌வு சோக‌ம் சொட்ட‌ச் சொட்டச் சொன்னார் த‌மிழ‌க‌ப் பேராளர் நம்மிடம்!

க‌ருத்த‌ர‌ங்கின் 2-வ‌து நாள் குறித்து ந‌ம‌க்கு கிடைத்த‌ த‌க‌வ‌ல் அதைவிட‌க்கொடுமையாக‌ இருந்த‌து. இர‌ண்டு இட‌த்தில் ந‌ட‌க்க‌வேண்டிய‌ அம‌ர்வுக்கு பேராள‌ர்க‌ள் இல்லாத‌தால் வேலாயுத‌ம் அர‌ங்கில் ஒரே அம‌ர்வாக‌ ந‌ட‌த்தி ச‌ரித்திர‌ம் ப‌டைத்தார்க‌ள். நேர‌ ஒழுங்கு, க‌ருத்தர‌ங்க‌ விதிமுறைக‌ள் காற்றில் ப‌ட‌ப‌ட‌க்க‌ ஒலிவாங்கியைப் பிடித்துக்கொண்டு யார்யாரோ தொண்டைகிழிய‌ப் பேசினார்க‌ள். இதில் பேச‌ வேண்டிய‌ சிங்க‌ப்பூர் பேராள‌ர்கள் பேச அழைக்கப்படாமலே அம‌ர்ந்திருந்த‌து ப‌ரிதாப‌ம்!

யாரோ ஒருவ‌ர் வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ள் எல்லாம் நாளைக்கு ஒரே அம‌ர்வில் என்று அவ‌ர்க‌ளிட‌ம்வ‌ந்து சொன்ன‌போதுதான் சிறு முறுவ‌லைப் பார்க்க‌ முடிந்த‌தாம்!

3 நாள் க‌ருத்த‌ர‌ங்க‌ம் முடிந்து பிற்பாடு அழைத்துச் செல்ல‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஆன்மீக‌ச் சுற்றுலாவை 2-ம்நாள் பிற்ப‌க‌ல் என்று அதிலும் ஒரு புர‌ட்சி செய்து க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வைக் கேலிக்குரிய‌தாக்கினார்க‌ள்.

கலந்துகொண்ட க‌ருத்தர‌ங்கப் பேராள‌ர்க‌ளுக்கு சான்றித‌ழ் வ‌ழ‌ங்க‌ அச்ச‌டித்து வ‌ந்திருந்த‌ சான்றித‌ழில் தமிழ் செம்மொழித் திட்ட‌ப்பிரிவிலிருந்து வ‌ந்திருந்த‌ கோத‌ண்ட‌ராம‌ன் கையெழுத்துப்போட‌மாட்டேன் என்று அட‌ம் பிடித்திருக்கிறார். கார‌ண‌ம் சான்றித‌ழில் கையெழுத்துப்போட‌ வேண்டிய‌ இராம‌சாமி வ‌ராத‌தால், அவ‌ருடைய‌ பிடிவாத‌த்துக்காக‌ மீண்டும் புதிதாக‌ சான்றித‌ழ்க‌ளில் கோத‌ண்ட‌ராம‌ன் பெய‌ர் அச்ச‌டித்து வ‌ந்த‌பிற‌கே கையெழுத்துப்போட்டிருக்கிறார்.

எப்ப‌டியெல்லாம் செம்மொழி ப‌ண‌ம் வாரி இறைக்க‌ப்ப‌ட்டது என்பத‌ற்கு இதுவும் ஒரு உதார‌ண‌ம் என்றார் பேராள‌ர்.

3- வதுநாள் வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ளிட‌ம் இது உங்க‌ளுக்கான‌ அம‌ர்வு என்று சொல்லிவிட்டு த‌மிழ‌க‌ பேராள‌ர்க‌ளை அழைத்து, பேச‌முடியாம‌ல் போன‌ துறைத் த‌லைவ‌ர்க‌ள் ஆவ‌ர்த்த‌ன‌ம் செய்ய‌ வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ளோ வெளியே சொல்ல‌முடியாத‌ அவ‌ஸ்தையில் நெளிந்து கொண்டிருக்க‌ கொரியாவிலிருந்து வ‌ந்த‌ பேராள‌ர் க‌ண்ண‌ன், அவ‌ர் வாய்ப்புக்காக முன்வ‌ரிசையில் காத்திருந்திருக்கிறார்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று ஒருவ‌ழியாக‌ வெளிநாட்டுப்பேராள‌ர்க‌ள் பேச‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இருந்தாலும் க‌ண்ண‌ன் அழைக்க‌ப்ப‌ட்ட‌போது ம‌ணி 12 ஆகிவிட‌ ம‌னித‌ர் 2 ம‌ணிநேர‌த்துக்கு ப‌வ‌ர்பாயிண்ட்டில் தயாரித்து வ‌ந்த‌தை சுருக்க‌மாக‌ முடிச்சுக்குங்க‌ என்று மூன்று முறை துண்டுச்சீட்டு அனுப்ப‌ ம‌னித‌ர் நொந்து போய் முடித்திருக்கிறார்.

அமெரிக்க‌ப்பேராள‌ர் பேச‌ ஒலிவாங்கி முன் வ‌ந்த‌போது ம‌திய‌ம் 1:15. நெடுஞ்செழிய‌ன் ஓடிப்போய் அவ‌ர் காதில் கிசுகிசுக்க‌, 'தான் அமெரிக்காவை விட்டு கிள‌ம்ப‌ 2-நாள் இருக்கும்போது ஏற்ப‌ட்ட‌ கார் விப‌த்தைக்கூட‌ பொருட்ப‌டுத்தாம‌ல் த‌மிழுக்காக‌ சொந்த‌ச் செல‌வில் இங்கு பேச‌ வந்தேன். ப‌த்து நிமிட‌த்தில் முடிக்க‌ச் சொல்லிவிட்டார்கள் என்று சொல்லி, அவ‌ர் த‌யாரித்து வ‌ந்திருந்த‌ ப‌வ‌ர் பாயிண்ட் மேடைக்கு கீழிருக்க, யாரோ ம‌ன‌ம்போன‌ப‌டி இய‌க்க‌ ப‌சி நேர‌த்தில் யாரையும் சோதிக்க வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ தன் உரையைச் சுருக்க‌மாக‌ முடித்துக்கொண்டார்.

பேராள‌‌ர்க‌ளுக்கு சான்றிதழ் அளிப்பதை, பொன்னாடை போர்த்துவ‌தைக்கூட‌ திட்ட‌மிடாம‌ல் அந்த‌க் க‌ல்லூரியின் செய‌ல‌ரையோ, இல்லை முக்கிய‌ விருந்தின‌ரைவிட்டோ, கொடுக்காம‌ல் யார் யாரையோ கொடுக்க‌ச் சொல்லிவிட்டு நிறைவு விழாவில் கொடுத்த‌தை வாங்கி திரும்ப‌ உள்ளூர் எம்.எல்.ஏவை விட்டு கொடுக்க‌ வைத்திருக்கிறார்க‌ள்! இதெல்லாம் திட்டமிடாததின் எதிரொலியாகவே பட்டது நமக்கு!

தமிழுக்காக உயிர் கொடுப்பவர்; பொருள் கொடுப்பவர் என்று வானளாவப் புகழப்பட்ட மயிலாடுதுறை அ.வ‌.அ. த‌ன்னாட்சி கல்லூரி நிறுவனங்கள் செயலர் பெயரில் மட்டுமே தமிழ்த்திரு. கொண்ட கருத்தரங்கப் புரவலர் செந்தில்வேல் துவக்கவிழாவில் தலைகாட்டியதோடு சரி.ஒரு பெயருக்காகவாவது இந்தியா, தமிழகம், வெளிநாடுகளில் இருந்து வந்த பேராளர்களைச் சந்திக்கவோ, ஒரு புன்னகை சிந்தக்கூட நேரமில்லாமல் தலைமறைவாய் இருந்த காரணம் யாதோ? கடைசிவரை கருத்தரங்கப் பக்கமே தலைகாட்டவில்லை!

இந்த மூன்று நாள் கருத்தரங்கில் துவ‌க்க‌விழா, நிறைவு விழா, ஆன்மீகச் சுற்றுலா விருந்தினர்களை வரவேற்க கலைநிகழ்ச்சி என்று இர‌ண்டுநாட்களை ஒப்பேற்றிவிட்டு க‌ருத்த‌ர‌ங்க‌ அம‌ர்வை என்ன‌ நோக்கத்திற்காக ந‌ட‌த்தினார்க‌ளோ அந்த‌ நோக்க‌ம் எதுவுமே நிறைவேறாம‌ல் முடிந்திருக்கிறது இந்தக் க‌ருத்த‌ர‌ங்க‌ம். ஆனால், கருத்தரங்கம் முடிந்த சூட்டோடு பேராளர்களுக்கு நெடுஞ்செழியன் ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார். பன்னாட்டுக் கருத்தரங்கம் வெற்றி என்று! யாருக்கு வெற்றி?

க‌ருத்த‌ர‌ங்கில் ஏமாற்ற‌ம் அடைந்து திரும்பிய‌ பேராள‌ப் பேராசிரிய‌ர்க‌ள் நெடுஞ்செழிய‌னுக்கு த‌ங்க‌ள் வேத‌னைக‌ளை, புல‌ம்ப‌ல்க‌ளை தெரிவித்து எழுதியிருகின்ற‌ன‌ர்.

இது பற்றி அவரிடம் ‘அதிகாலை’ தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, "இது எல்லாவற்றுக்கும் நான் மட்டும் காரணம் இல்லை. இது ஒரு நிறுவனம். இதற்கென்று சில வழிகாட்டு முறைகள் உள்ளன. அதன்படிதான் செய்தேன். கருத்தரங்கு பற்றி வீடியோ பதிவு வைத்திருக்கிறேன்" என்று முடித்துக் கொண்டார் நெடுஞ்செழிய‌ன்.

இதில் கலந்து கொண்ட மற்றொரு பேராளரான மறவன் புலவு சச்சிதானந்தத்திடம் பேசினோம். அவரோ, " என்னிடம் நான் வாசித்த கட்டுரை இருக்கிறது வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள். மற்ற விசயங்கள் எல்லாம் பேசுவதற்கு நேரமில்லை. எனக்குப் பணிச்சுமை அதிகம்" என்று கச்சிதமாய் சொல்லி முடித்தார்.

தமிழ் செம்மொழித் திட்ட அலுவலகத்திலிருந்து வந்திருந்தவர்களுக்கு மட்டுமே கல்லூரி விருந்தினர் விடுதியைக் கொடுத்து அவர்களை கடைசிவரை "நன்கு விசேடமாகக் கவனித்து" மனம் கோணாமல் அனுப்பிவைத்திருக்கிறார் நெடுஞ்செழியன்.

எல்லாம் சரி. இதில் தமிழ் செம்மொழித்திட்டம் அளித்த நிதியை கல்லூரிக் கணக்குக்கு மாற்றியது எப்படி எங்களுக்குப் புரியவில்லையே என்று நெடுஞ்செழியனுக்கு நெருக்கமாகக் காட்டிக்கொள்ளும் ஒருவரை மெல்லக் கிளறியபோது, "அட போங்க சார்..! நாங்க வாழைப்பழத்தைக் கொடுத்து சாப்பிடுங்க என்றுதான் சொல்ல முடியும். என்று வில்லன் வீரப்பா சிரிப்பு சிரித்துவிட்டு நம் காதில் மெல்லக் கிசுகிசுத்தார்.

"சார் பேராளர்களுக்கு பிரபல ஓட்டல்ல இருந்தா சாப்பாடு போட்டாங்க? கல்லூரி ஹாஸ்ட்டல்ல சாப்பாடு போட்டாங்க. பேராளர்களுக்கு, விருந்தினர்களுக்கு சாப்பாடு மூன்று நாளைக்கு, மூன்று வேளைக்கு ஒட்டுமொத்தமா ஒரு அமவுண்ட்! சரி அவங்க சாப்பாடு போட்டதுக்குத்தானே காசு வாங்கியிருக்காங்க, இதிலென்ன‌ தப்பு" என்றோம், நாம். அட என்னாங்க விபரம் புரியாத ஆளா இருக்கீங்க, "சாப்புட்டவங்க கம்மி கணக்குக் காட்டி வாங்கியது அதிகம்! இதுல பலபேர் காலைல ஓட்டல்ல வெளியிலயே சாப்பிட்டவங்க. அவங்க கணக்கும் இங்க என்று கண்சிமிட்டினார்.

ஆன்மீகச் சுற்றுலாவுக்கு கல்லூரி பேருந்தை ஓட்டிவிட்டு பேராளர்கள் சுற்றுலாச்செலவு, அவர்களுக்கு டீ, காபி, டிபன் செலவு என்று ஒரு வரவு! பலபேராளர்களுக்கு தங்குமிடச் செலவு செய்யாமலேயே செய்ததாகச் செலவு, பலபேராளர்களின் பயணப்படி அவர்கள் கைக்குப் போகமலே இவர் பைக்குள் போனது, விழாமேடை அலங்கரிப்பு, வரவேற்பு,பொன்னாடை, பரிசுகள் வாங்கியது இப்படி எத்தனை வகை உண்டோ அத்தனையிலும் "இவருக்கும்" கல்லூரி நிர்வாகத்துக்குமே தமிழ் செம்மொழி நிதி மறைமுகமாகச் சேர்ந்துவிட்டதாகத் தெரிகிறதுது.

இப்படியெல்லாம் செய்யமுடியுமா என்று நாம் திகைத்துப்போனோம்!

துவ‌க்க‌விழாவிலும் நிறைவு விழாவிலும் நெடுஞ்செழிய‌ன் பேராள‌ர்க‌ளைப் ப‌ற்றிச் சொன்ன‌ நேர‌த்தைவிட‌ விருந்தின‌ர்க‌ளைப் புக‌ழ்வ‌திலும், கோரிக்கை வைப்ப‌திலும் பெரும் நேர‌த்தை எடுத்துக்கொண்டார். இந்த‌ச் ச‌ட‌ங்குத்த‌ன‌மான‌ துவ‌க்க‌, நிறைவு விழாக்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌ருத்த‌ர‌ங்கிற்கு தேவையா? இவையெல்லாம் நம்மிடம் புலம்பிய பேராளர்களின் வேதனைக் குரல்கள்!

ந‌ம் கேள்வி இதுதான்!

க‌ல்லூரிக்கு வெளியேயும் ச‌ரி, உள்ளேயும் ச‌ரி எந்த‌ ஏற்பாடும் செய்யாம‌ல் இப்ப‌டி ஒரு க‌ருத்த‌ர‌ங்கு அதுவும் ப‌ன்னாட்டுக் க‌ருத்த‌ர‌ங்கு என்று எப்ப‌டி ந‌ட‌த்த‌ முடிந்த‌து? நிதி ந‌ல்கிய‌வ‌ர்க‌ளுக்கும் இதில் அக்க‌றை இல்லையா? இது யாருடைய‌ த‌வறு? செம்மொழித் திட்ட‌ம் நிதி வ‌ழ‌ங்க‌ ஒப்புக்கொண்ட‌போதே சில விதிமுறைக‌ளுக்குட்ப‌ட்டுத்தான் கொடுத்திருக்கும். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் சொல்ல‌த் த‌வ‌றியதா?

இல்லை நெடுஞ்செழிய‌ன் த‌ன் ம‌ன‌ம்போன‌ போக்கில் பேராள‌ர்க‌ளுக்கு அறிக்கை அனுப்பிவிட்டாரா?இல்லை சக பேராசிரியர்கள் தங்களுக்குள்ளேயே சொல்லிப் புழுங்கிக்கொண்டிருக்கும் நெடுஞ்செழியனின் " பதவி உயர்வுக்காக" மட்டுமே பல பேராள‌ர்களின் நேரத்தையும் உழைப்பையும் உறிஞ்சி ஏனோதானோவென்று நடத்தப்பட்ட கருத்தரங்கா?

எப்ப‌டி இருந்தாலும், யார் இந்த‌த் த‌வ‌றைச் செய்திருந்தாலும் அது இமால‌ய‌த் த‌வ‌று என்ப‌தால் த‌வ‌றிய‌ இருசாராரின் பேரிலும் ந‌ட‌வ‌டிக்கை எடுத்து எதிர்கால‌த்தில் இது போன்ற‌ பிர‌ச்னைக‌ள் எழாவ‌ண்ண‌ம் முற்றுப்புள்ளி வைக்க‌ வேண்டும்!

இன்றைக்கு இருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி கருத்தரங்கு நடத்திய செயலர் நெடுஞ்செழியனிடமிருந்தும், இந்திய‌மொழிக‌ளின் ந‌டுவ‌ண் நிறுவ‌ன‌ம் மைசூர் த‌மிழ்ச் செம்மொழித் திட்ட தலைவரிடமிருந்தும் பெற்ற நிதியை எப்படிச் செலவு செய்தீர்கள் என்ற விபரமும் கோரிப்பெற்றால் பல மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும். (அதற்கான முயற்சியில் அதிகாலை.காம் ஈடுபட உள்ளது)

இந்தக் கருத்தரங்கால் ஒருவர், இருவர் இல்லை. பலபேரின் வயிற்றெரிச்சலுக்கும் சாபத்துக்கும் கல்லூரி நிர்வாகமும், (நெடுஞ்செழியனும்) தமிழ் செம்மொழி திட்டத்தினரும் ஆளாகியுள்ளனர். தமிழக முதல்வர் இது விசயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதோடு எதிர்காலத்தில் தெளிவான ஒழுங்குமுறைகளும், விதிமுறைகளும் கடைப்பிடிக்க‌ ஆவன செய்வார் என்று நம்புவோம்!

April 17, 2008

பெண் பெயரில் ஆண் எழுதலாமா? மாலதி மைத்ரிக்கு எதிர்வினை - கவிஞர் அமிர்தம் சூர்யா

கவிதையில் மரபின் கைபிடித்து, இப்பொழுது பின் நவீனத்துவத்தில் உலா வருபவர். 'உதிரி சயனத்தை நீரில் அலசும் வரை', 'பகுதி நேரக்கடவுளின் நாட்குறிப்பேடு' ஆகிய கவிதைத் தொகுதிகளையும், 'முக்கோணத்தின் நான்காவது பக்கம்' எனும் கட்டுரைத் தொகுதியையும் வெளியிட்டிருப்பவர். விரைவில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. நவீன ஓவியம், விமர்சனம், நாடகம் போன்ற துறைகளிலும் இயங்கி வருபவர். சென்னைவாசியான இவருக்கு நாடு முழுக்க இலக்கிய நட்பு. அவர் கண்டு, கேட்டு, பார்த்து, படித்த பல விசயங்களை பகிர்ந்து கொள்ளும் இத்தொடர் எளிய நடையில் உங்கள் தோள்மீது கை போட்டு உரையாடிச் செல்லும்

இனி அவரும், நீங்களும்....
பெண் பெயரில் ஆண் எழுதலாமா? மாலதி மைத்ரிக்கு எதிர்வினை:-
பெண் பெயரில் ஆண் எழுதுவதை அனுமதிக்கலாமா? என்ற மாலதி மைத்ரியின் கட்டுரைக்கு என் எதிர்வினை: இலக்கிய உலகில் நிறையப் பெண்கள், ஆண்களைப் போல உடை அலங்காரம்,சிகை அலங்காரம் மட்டுமல்ல இலக்கியக் கூட்டத்திலேயே புகைபிடித்தபடியிருக்கும் காட்சியைப் பார்க்கையில் இவர்களுக்கு ஆண்கள் மீது ஏன்தான் இவ்வளவு மோகம் என்று தோன்றுகிறது? இது ஒருபோதும் ஆண் அடையாளத்தை அழிக்கும் முய்ற்சியாக பிதற்ற முடியவில்லை.அல்லது 'அணங்கு' இதழ் தலையங்கத்தைப் போல இம்மாதிரியான பெண்கள் ஆண்களாக தங்களை மாற்றிக் கொள்ள அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள்லாமே என அபத்த காழ்ப்புக் கொட்ட தோன்றவில்லை. ‘பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதலாமா?’ என்று மாலதி மைத்ரி கேட்கிறார். இது அசட்டுத்தனமான பெண்ணாதிக்க உளறாலாக தோன்றுகிறது. 'பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருப்பதை அனுமதிக்கலாமா? மேற்கத்திய உடையில் உலவும் பெண்கள் நமது கலாசாரத்தைச் சிதைக்கும் குறியீடுகள் - இதை ஒப்புக் கொள்ளலாமா?
'கணவன் அனுமதி இல்லாமல் எழுதும் பெண்களை இலக்கிய உலகம் அங்கீகரிக்கலாமா?' இப்படி எல்லாம் கேள்விகளை எழுப்பினால் எப்படி அபத்தமாக, அறிவிலியாக, உளறலாக தோன்றுமோ அப்படியான ஒத்திசையில் உள்ளது அந்தக் கேள்வி. அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுத்து குத்தும் ராஜ்ய முத்திரையை எப்பொழுது பெற்றீர்கள்? சரி இந்தக் கேள்வி எழுப்பும்முன் இப்பிரச்சினை எங்கிருந்து தோன்றியது?
பெண் படைப்பாளிகளின் கவிதகளைத் தொகுக்கும்போது சில ஆண் படைப்பாளர்களின் கவிதையும் சேர்ந்து விடுகிறது. விமர்சனம் செய்த எழுத்தாளர் ஆண்/ பெண் யார்? என்ற அடிப்படை இலக்கிய புழக்கம் கூட தொகுப்பாளருக்கு இல்லையென கிண்டலடிக்க அன்று துவங்கியது இப்பிரச்சினை. குறைந்தபட்சம், இலக்கிய உலகில் பரிச்சயம் வேண்டும். அல்லது தொகுக்கிறபோது சம்பத்தப்பட்ட நபரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்போது 'அம்மணி..நான் பெண் அல்ல;பெண் பெயரில் எழுதும் ஆண் 'என்று பதில் கிடைத்திருக்கும். இந்த அடிப்படைச் சட்ட நாகரீகம் கூடத் தெரியாமல் தொகுத்துவிட்டு அதிலிருந்து தன்மீது படிந்த அங்கதத்தை துடைத்துக் கொள்ள இந்தக் கருத்தியலைக் கையில் எடுக்கிறார்கள்.

"ப்ரியம்'- என்ற சொல் அன்பை / நேசத்தை குறிக்கும் சமஸ்கிருதச் சொல். இதை ஒரு ஆண் கவிஞர் புனைபெயராக கொண்டுள்ளார். இது எப்படி பெண் பெயராகும்? (இவருடைய கவிதையைத்தான் தொகுப்பில் சேர்த்து விட்டனர்)

'அமிர்தம் '-என்ற சொல் அமிழ்தம் என்ற சொல்லின் திரிபு.(தமிழுக்கு அமுதென்று பேர்-பாரதிதாசன்)அமிர்தம் – சாகா வரம் தரும் உணவுப் பொருள் .இது பெண் பெயரா?

சக்தி + அருள்+ஆனந்தம் இதில் இந்த மூன்று சொல்லில் திட்டவட்டமாக பெண் அடையாளம் கொடுக்கமுடியுமா? சக்தி அருளாந்தம் என்று எழுதினால் ஆண் அடையாளம். சக்தி அருளானந்தம் என்பது கூட தோரணையில் ஆண் பிம்பமே!.சமீபத்தில் ஒரு பெண் இந்தப் பெயரில் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.( என்ன ஆணவம்! ஆண் பெயரில் ஒரு பெண் எழுதுவதா?... சும்மா தமாஷ்)

ஆக பொதுச் சொல்லை அல்லது பெண் பெயரை ஆண்கள் சூட்டிக் கொள்வது அவரவர் உரிமை. அதைக் கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு பேராசிரியர். பத்மாவதி விவேகானந்தன் போன்ற மாலதி சகாக்கள் தனது பெயருக்குப் பின்னால் ஆறாவது விரல் போல ஒட்டிக் கொண்டு திரியும் விவேகானந்தன் என்ற ஆண் பெயரை அப்புறப்படுத்திவிட்டு காத்திரமான பெண்ணியவாதியாக மாறவேண்டும். பத்மாவதி விவேகானந்தன் என்பதுதான் தமிழ் மரபு / தமிழ் நாகரீகம் என்றால் அதற்கு தலை வணங்குகிறோம்.

அரசியல் தலைவர்கள் 'தமிழ் இலக்கியவாதிகள் தங்கள் பெயரை தூய தமிழில்தான் வைத்துக் கொள்ள வேண்டும். இனி தமிழ் அடையாளத்தை அழிக்கும் அபத்தம் நிகழக் கூடாது என்று பேச அதிக நாட்கள் இல்லை.அப்படியொரு சூழல் வந்தால் ... இதை நமட்டுச் சிரிப்போடு புறக்கணிப்பார்கள். அப்படித்தான் ‘அணங்கு’ கேள்வியைப் புறக்கணிக்கிறோம்.

இம்மாதிரியான பட்டிமன்றக் கூத்து நவீன கூடாரத்திலுமா? தன் இருத்தலை நியாப்படுத்த, நிலைப்படுத்த இம்மாதிரியான கருத்தியலையா கையில் எடுப்பது? விவாதிக்க,எவ்வளவோ விசயம் இருக்கிறது. இனிமேலாவது, ஆரோக்கியமான விவாதங்களை மாலதி எழுப்ப வேண்டும்.

வைரமுத்து பாசறைக் கலைப்பும், பாண்டிச்சேரியில் ஒரு சிறந்த நூல் கூட வராத அவலமும்-ராஜ்ஜா பேச்சுக்கு கண்டனம் :- பாண்டிச்சேரியில் தோழர் இளங்கவி அருள் என்ற நண்பர் - வைரமுத்துதாசன். ‘கவிஞர் வைரமுத்து பாசறை’ - என்ற பெயரில் கவிஞருக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து விழா எடுப்பார்.

இப்பொழுது நவீன இலக்கியவாதிகளின் அறிமுகம கிடைத்து, அவர் வைரமுத்துவை கடந்து பயணப்படத் தொடங்கி விட்டார். பாசறையைக் கலைத்துவிட்டு 'மீறல்'- என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். அவ்வப்பொழுது புதுவையில் நவீன படைப்பாளிகளைக் கூட்டி நிகழ்ச்சிகள் நடத்துவார்.அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியில்தான் பேரா.ராஜ்ஜா என்பவர் பேசினார்.பாண்டிச்ச்சேரி இலக்கியத்தை ஆங்கிலத்தில் எழுதிவருகிறாராம்.

அதற்கு ஆக்ஸ்போர்டு உதவி வருகிறதாம். இதை எல்லாம் சொல்லிவிட்டு "பாண்டிச்சேரியில் ஒரு சிறந்த் நூல் கூட வரவில்லை 'என்று முடித்தார். கூட்டத்தில் ரமேஷ்(பிரேம்), மாலதி மைத்ரி உள்ளிட்ட பாண்டிச்சேரி படைப்பாளிகளும் இருந்தார்கள்.ஒருவரும் எதிர்ப்புக் காட்டவில்லை. நான் மட்டும் எழுந்தேன். "ராஜ்ஜா அவர்களே, பாரதிதாசன், பிரபஞ்சன், ரமேஷ்-பிரேம், மாலதிமைத்ரி இவர்களில் ஒருவர் கூட சிறந்த நூலைத் தரவில்லை என்றால் உங்களின் வாசிப்பும் , தரவரிசையும் சந்தேகத்திற்குரியது. அல்லது குறுகிய அரசியலுக்கு உட்பட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இனி ஒருபோதும் பாண்டிச்சேரியில் உங்களுக்குத்க்கு தென்படாது.

கூட்டம் முடிந்து வெளியில் வந்தேன். பெரியவர் ஒருவர் இடைமறித்தார். “தம்பி ஏம்பா இது உனக்க்கு? சம்பந்தப்பட்டவங்களே சும்மா இருக்கும்போது தேவையா உனக்கு? .ராஜ்ஜாவை அனுசரிச்சுப்போன இங்கே நிறைய ஆதாயம் இருக்கு தம்பி. மேடையில் மாலதியும், ரமேஷும் அமைதியாகத்தானே இருந்தனர்.."என்றார்.

'சபை நாகரிகம் கருதி அவங்க ரெண்டு பெரும் அப்படி இருந்திருக்கலாம்' என்றேன்.

'அட போப்பா.. சபை நாகரீகமா? எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது உரிமைக்க்காக கூட்டத்தில் கலாட்டா செய்த நவீனவாதிகளுக்கு சபை நாகரீகம் தெரியுமா?' என்றார். நான் அமைதியானேன். இதுவரை 26 நூல்கள் எழுதிய ரமேஷ் -பிரேம் படைப்புகள் ஒரு நாள் கருத்தரங்கம் சமீபத்தில்தான் ந்டைபெற்றது என்பது உபரித் தகவல். ராஜ்ஜா பேசியதற்கு எதிர்வினையாக இதைக் கருத வேண்டியதில்லை.

'திருநங்கை' - மதிப்பீடு ஆண்களிடமிருந்தே தொடங்க வேண்டும்:-

வட சென்னை விளிம்பு நிலை மக்களும், அரவாணிகளும் சகஜமாக தோழமையோடு பழகுவதை கவனித்திருக்கிறேன். எப்படி இந்த இணக்கம் வந்து விடுகிறது? என்பது என்னுடைய பழைய கேள்வி.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் 'இப்படிக்கு ரோஸ்' - என்ற நிகழ்ச்சி பார்த்தேன்.அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்- ரமேஷ்பாபு என அறியப்பட்டு அமெரிக்காவின் லூதியானா பலகலை கழகத்தில் படிப்பு முடித்தவர். அதன்பின் அரவாணியாக மாறி இப்போது ரோஸ் - ஆக அவதாரம் எடுத்துள்ளார்.

ரோஸ், 3 அரவாணிகளை நேர்காணல் செய்தார். ஒருவர் - நவீன இலக்கிய சூழலில் அறியப்பட்ட லிவிங்ஸ்மைல் வித்யா. "ரயிலில் பிச்சையெடுக்குபோது எனக்கு அது பிச்சையாக தெரியவில்லை.உன்னைப் போல நல்ல குடும்பத்தில் பிறந்து .உன்னைப் போல கம்யூட்டர் சயன்ஸ் படித்துள்ள என்னை பெண் தன்மை இருப்பதாலேயே என்னைப் புறக்கணிப்பது என்ன நியாயம்?எனவே எனக்கு நீ அபராதம் செலுத்த வேண்டும் என்று கேட்பது போல்தான் தோன்றும். நான் கேட்டது பிச்சை அல்ல:அது அபராதம்." என்றார். சபாஷ்! நவீனத்துவப் பார்வை அது.

இன்னொரு அரவாணியின் நேர்காணல். அது முற்றிலும் மாறுபட்டது. அரவாணியாக மாற அவருடைய குடும்பமே அனுமதித்ததாம். "பெண்களைப்போல் உறுப்புக்கள் அமைய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன் என்னை ஒருவர் விரும்பினார். என்னை திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தார். இருவர் வீட்டிலும் சம்மதம். திருமணமும் நடந்து முடிந்தது. என் கண்வரின் நண்பர்கள் என்னை அக்காள் என்றும் அண்ணி என்றும் அழைப்பார்கள் ' என்று கூறி முடித்தார்.

இப்படியும் ஒரு பக்குவப்பட்ட குடும்பம். சமூக சூழல் மற்றும் மனோ பாவங்கள் மாற்றி அமைக்கும் முன்னுதாரண நண்பர்கள். அரவாணியை மனைவியாக ஏற்றுக் கொண்ட அந்த முகம் தெரியாத மனிதனின் நெஞ்சுரம் கண் முன் வந்து போனது.

ரயில் வண்டியியில் மாறி மாறி வித்யாவை உதைத்த இதே பூமியில்... இன்னொரு அரவாணி சமூக அந்தஸ்த்துக்கு உய்ர்த்தப்ப்பட்ட சம்பவம். முரண்களால் நெய்யப்பட்ட உலகம் நம் கண் முன்னே விரிகிறது.

தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவிஞர் திலகபாமாவிடமிருந்து தொலைபேசி. "சூர்யா இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி பாத்தியா...அந்தப் பொண்ணுடைய துயரமும் , அந்த அம்மாவின் அழகான குடுமபமும் அடடா...அந்தப்பெண்ணின் கணவன் யார் என்று நம்மைத் தேட வைக்கிறது" என்றார். எனக்கு பெரிய குழப்பம்."எந்த அம்மா? எந்தப் பொண்ணு? யாரைச் சொல்லுறீங்க? என்றேன்.

"ஏம்பா இப்ப்டிக்கு ரோஸ் நிகழ்ச்சி பாக்கலையா?" நான் பிறகு சுதாரித்துக் கொண்டேன்.

நான் முழுக்க முழுக்க அவர்களை அரவாணியாக பாவித்து, அவர்களின் துயரங்களை உண்மையில் ஆத்மார்த்த அக்கறையோடுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் திலகபாமாவோ அவர்களை முழுப்பெண்களாகவே நினைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தை ‘அந்தப் பொண்ணு… அந்த அம்மா’ என்ற்கிற சொற்பிரயோகத்தின் மூலம் வெகு இயல்பாக ஒன்றிவிடுகிறார். என் பழைய கேள்வி செத்துப் போனது.

இது திலகபாமாவிற்கானது மட்டுமல்ல;பொதுவான எல்லாப் பெண்களுக்குமானதுதான் போலும். பெண்களின் உலகமும், ஆண்களின் நிலைமையும் முற்றிலும் மாறானது.

அரவாணிகள் / பால் குறைபாடுடையோர்/ மாற்றுப் பாலினத்தார் என புதுப்புது அடை மொழியில் விளிக்காமல் 'திருநங்கை' என்ற சொற்பிரயோகமே இனி மரபார்ந்த நாகரீக துவக்கமாயிருக்கும். எல்லா மாற்றங்களும் ஆண்களிடமிருந்தே துவங்க வேண்டியுள்ளது என்பது மறுதலிக்க முடியா உண்மைதான்.

April 01, 2008

கன்னடர்களுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் ரஜினி கலந்து கொள்வாரா?

கர்நாடகத்தின் அட்டூழியங்களையும், அராஜகத்தையும் கண்டித்து தமிழ் திரைப்பட உலகம் வரும் 4-ந்தேதி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உள்ளது. இந்த உண்ணாவிரத்திதில் கன்னடரான ரஜினி கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அப்படி அவர் கலந்து கொள்ளவில்லை எனில் திரைப்பட சங்கத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்றும் இப்பொழுதே பரபரப்பான ஊகங்கள் கிளம்பத் தொடங்கி விட்டது.

ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கர்நாடகா, தமிழக மாநிலங்களுக்கிடையே பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென கன்னட அமைப்புக்கள் வெறித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் திரைப் படங்கள் வெளியிடப்பட்ட 3 திரையரங்குகள் பெஙகளூருவில் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன.

கர்நாடகத் தமிழர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தமிழக சட்டசபை கர்நாடாகவைக் கண்டித்து கண்டனத் தீமானம் நிறைவேற்றி உள்ளது. அதே போல் தமிழ் திரை உலகம் கன்னட அமைப்புக்களுக்கு எதிராக களம் இறங்கி உள்ளது.

இதுபற்றி விவாதிக்க இன்று அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கன்னட அமைப்புக்களைக் கண்டித்து எதிர்வரும் ஏப்ரல் 4-ம் தேதி உண்ணாவிரதம் இருப்பது என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதில் ரஜினி உள்ளிட்ட கன்னடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நடிகர்கள் கலந்து கொள்வார்களா என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஒருவேளை ரஜினி உள்ளிட்ட சென்னை வாழ் கன்னட நடிகர்கள் பங்கேற்காவிட்டால் என்ன நடவ்டிக்கை எடுப்பது என்றும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இந்த உண்ணாவிரதம் தவிர பல அடுக்கு தொடர் போராட்டங்களை நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், ஏப்ரல் 4-ம் தேதி நடக்கும் இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். போராட்டம் நடைபெறும் இடம் காவல்துறையினருடன் விவாதித்து விட்டு அறிவிக்கப்படும்.

போராட்டம் நடைபெறும் நாளின்போது தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெறாது. டப்பிங் பணிகள் ரத்து செய்யப்படும் தியேட்டர்களில் படங்கள் திரையிடுவதும் நிறுத்தப்படும்.
அனைத்து நடிகர், நடிகைகளும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் கலைஞர்களுக்கு திரைத் துறையின் எந்த சங்கமும் ஒத்துழைப்பு தராது. இது திரையுலகின் ஒருமித்த முடிவு என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் ரஜினிகாந்த்துக்கும் இந்த போராட்டம் பொருந்துமா என்று கேட்டபோது குறுக்கிட்ட நடிகர் சத்யராஜ், "தமிழ்நாட்ல இருந்துக்கிட்டு, தமிழனோட சோத்தை திங்கிறவன் அத்தனை பேரும் இதில் கலந்து கொள்ளவேண்டும். இல்லைன்னா அவர்கள் இங்கே இருக்கவே முடியாதுங்க" என்றார் ஆவேசமாக.

ஏற்கனவே நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது காவிரிப் பிரச்சினையில், பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் மாபெரும் போராட்டத்தை நடிகர் சங்கம் நடத்தியது நினைவிருக்கலாம். அந்தப் போராட்டத்தில் கமல்ஹாசன் உள்பட அனைவரும் திரண்டு வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் மட்டும் அதில் பங்கேற்காமல் அடுத்த நாள் சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

ஆனால், அர்ஜூன் உள்ளிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்திலோ அல்லது ரஜினியின் உண்ணாவிரதத்திலோ பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.