February 12, 2009

Slumdog millionaire: சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்

Slumdog millionaire: Review in TAMIL (Exclusive)
சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்
- தமிழ்ச்செல்வன்

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்க்கை முறையின் தனித்துவத்தை கொச்சைப்படுத்தி இந்தியாவின் மானத்தை ஒரு அயல்நாட்டு திரைப்பட இயக்குனரின் சாமர்த்திய திறமையால் சர்வதேச அரங்கில் அசிங்கப்படுத்தபட்டுள்ளன.
இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா?கடந்த சில தினங்களுக்கு முன் ''சினிமாத்துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவிற்கான பல விமர்சனங்கள் மின் அஞ்சலின் மூலம் வரப் பெற்றேன் அதில் ஒரு விமர்சனம் அமெரிக்காவிலிருக்கும் ஒரு சகோதரரிடமிருந்து வந்தது இவை...

***----------***

From: Navaneetha Krishnan. USA.
வணக்கம்!
மிகவும் உணர்வுப்பூர்வமான... அதே சமயம் ஒவ்வொரு தமிழனுக்கும், ஏன் ஒவ்வொரு மனிதனுக்கு எழ வேண்டிய உணர்வு! அருமை.... அற்புதம்! நீங்கள் ஏன் இதுபோன்ற வித்தியாசமான, நியாயமான ஆக்கங்களை அதிகாலை.காம் இணையம் வழியாக வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது? இன்னும் அதிகமான உள்ளங்கள் படித்துப் பயன்பெறுமே! ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டுப்போகட்டுமே! நாம் அதைச் செய்வோமே!

இதுதான் என்னை தங்களுக்கு எழுதத் தூண்டியது. இந்த உணர்வுகளை நானும் அடைந்தேன்! அமெரிக்காவின் ஒரு பிரபல திரையரங்கிற்கு, நான் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே பார்க்கச் சென்றது நூறு சதம் உண்மை. ஆனால் வெட்கித்தலைகுனிந்தேன். காரணம் மும்பைக்குடிசைகளைப்பற்றிய காட்சியமைப்புக்காக அல்ல, அந்தத் திரையரங்கில் கிட்டத்தட்ட 2-3 நபர்கள்தான் இந்தியர்கள், இதில் நானும் என் மனைவியும் உட்பட. படம் முடிந்ததும் அனைத்து அமெரிக்கர்களின் பார்வையும் எங்கள் மீது இருந்ததை இப்பொழுதும் நான் உணர்கிறேன். ஏதோ அந்தப்படத்தில் நடித்த ஒரு நடிகர் அங்கு வந்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது எப்படி மேலும் கீழுமாக பார்ப்பார்களோ அது போல் பார்த்ததற்கு காரணம் பிறகுதான் புரிந்தது. பச்சையாகச் சொல்லவேண்டுமெனில் "கேவலப்படுத்தியிருக்கிறார்கள்". இந்தியா வல்லரசாகும், அப்படியாகும், இப்படியாகும் என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த 2009-ல் இன்றும் இந்தியா இப்படித்தான் இருக்கிறதா? என்ற கேள்விக்கனைகளும், இந்தியா மீதான் அவர்களின் தவறான கோணமும் இன்னும் தொடருவதற்கு இது உந்துகோலாக இருக்கிறது. இந்தக்காட்சிகளின்படி இது உண்மையா? பொய்யா? என்ற விவாதம் வேறு. ஆனால் ஆஸ்கார் நோக்கி செல்லும் ரஹ்மான் மாத்திரமே நம் கண்ணுக்குத் தெரிவதால் நாம் இதை இப்போதைக்கு ஒரு புறம் தள்ளிவைப்போம் அவ்வளவே! நன்றி!!

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
http://www.adhikaalai.com/
http://manuneedhi.blogspot.com/

***---------------***

இந்த விமர்சனம் கண்டவுடன் நண்பர் வைத்தீஸ்வரன் மூலம் இத்திரைப்படத்தின் குறுந்தகடு வாங்கப் பெற்று இந்த திரைப்படம் பற்றிய விமர்சனம் எழுதினேன். இந்தியாவின் மிகப் பெரும் வர்தக நகரமான, மும்பை நகரை அழகான வார்த்தையில் சொல்வதென்றால் "தூங்காத நகரம்" என்று சொல்லலாம் அந்த நகரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மும்பையின் குடிசை வாழ் பகுதி மக்களின் வாழ்க்கை முறையின் மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்திய மொழிகளில் தயாரித்து வெளியிட்டு வந்த அசிங்கங்கள் ஒரு சில பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மறைத்தோ அல்லது தெரியாமலோ வந்த பல சம்பவங்கள் இந்த படத்தின் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தொழில்துறையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்துவரும் ஒரு நாடு. உலகின் அடுத்த வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது.இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் வாழ்ந்து வரும் அஹமது சல்மான் ருஸ்டி கடந்த 1988 ம் ஆன்டு தனது 4வது நூலான "சாத்தானின் வேதங்கள்" மூலம் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதற்காக ருஸ்டியை ஈரான் முன்னாள் அதிபர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி கொலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் மேற்கத்திய நாடுகள் அவனது நரகல் நடை எழுத்திற்கு விருதுகள் வழங்கி கவுரவித்தது. கர்ப்பப்பை சுதந்திரம் (?) கேட்டு எழுதிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமாவுக்கு அமோக வரவேற்புகள் வாழ்த்துக்கள். இது போல் ஒரு சமூகத்தை இழிவு படுத்தி எழுதினால் அதற்கு ஆஸ்கார் விருது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேற்கத்திய நாட்டின் கேடு கெட்ட கலாச்சாரப் புத்தி இது. மிக திறமைவாய்ந்த இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்கிறதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவனின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதியின்மை, குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில், சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், மத ரீதியான சண்டைகள், வெட்டுக்குத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை, தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம், அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டி இந்தியாவின் மானத்தை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்துள்ளான் அந்த இயக்குனன்.இதன் காரணமாகவோ என்னவோ இந்தியரான அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குலோப் மற்றும் பாஃப்டா விருதுகளும் படத்தொகுப்பாளர், ரெசூல் பூக்குட்டி என்பவருக்கு பாஃப்டா விருதும் வழங்கி அவர்களை ஆஸ்காருக்கும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.இந்தியாவை கவுரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அரிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.

முதல் சந்தேகம், ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?

படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்படவில்லை?நாயகனாக வரும் 2 சகோதரர்களை அதாவது திருடர்களை முஸ்லிம்களாக காட்டியுள்ள இயக்குனன் அதில் ஒரு தொழு‍கைக் காட்சியும் வைத்து 'நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா' என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டு முஸ்லிம்களின் கண்ணியத்தை கொச்சைப் படுத்தியிருக்கின்றான். கதாநாயகனை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன ...?அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அனில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும்.சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொடூரம்?இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனன், உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திரங்களை மட்டும் மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டுகிறான். அந்த காட்சியிலும் கூட இந்திய போலீஸ்காரர் கொடூரமானவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்படியான காட்சி அமைப்பு கதையின் கருவிற்கு கட்டாயம் தேவை தானா?

அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள். மற்ற நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள்? இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின் எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி ஸ்பூனால் கண்களை தோண்டி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார்படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்?வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்ற இந்திய நகரங்கள் பற்றி இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழும். ஆனாலும் இயக்குனன் பொய்யான ஒன்றை காட்டவில்லை, நிஜமான ஒரு சில சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறான். நாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் மக்களையும், அந்த நாட்டு வாழ்க்கை முறையையும் கேவலமாக சித்தரித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா?இந்தியத் திரைப்படத்துறைக்கு அந்த தைரியம் இருக்கிறதா? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?

இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction ) விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய ஏகாதிபத்தியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்காக விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலப்படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெறுகிறது. அந்நிய நாட்டு திரை துறையினரின் இந்த போக்கை இந்திய அரசு தொடர்ந்து அனுமதிக்குமேயானால் வரும் காலங்களில் இந்தியாவின் நீதித்துறை, நிர்வாகத்துறை, பாதுகாப்புத் துறைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் தவறுகள் காட்சிகளாக பதியப்பட்டு சர்வதேச அரங்கில் துகிலுரிக்கப்படும் ஆட்சியாளர்கள் இப்போ‍தே விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.