August 27, 2008

பழ.நெடுமாறனுக்கு கலைஞர் கவிதைக் குத்து

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தினமணி பத்திரிகையில் நேற்று (ஆகஸ்ட் 26) எழுதிய ஒரு கட்டுரையில், முதல்வர் குறித்து விமர்சித்திருந்தார். காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று அதில் நெடுமாறன் தாக்கியிருந்தார். அதற்குப் பதிலடியாக கருணாநிதி கவிதை புனைந்துள்ளார்.

சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி.

இந்த நிலையில் பழ. நெடுமாறனை மிகக் கடுமையாக சாடி கவிதை எழுதியுள்ளார் கருணாநிதி. அதற்குப் பதிலடியாக முதல்வரின் கவிதை இதோ...


விடுதலைப் போர் நாயகராம்

விருதுநகர் மாவீரர் காமராஜரின்

விசுவாசமிக்க சீடர் என்று

விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்

விலாவில் குத்திய விபீஷ் ஆழ்வார்!

அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்

முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட எட்டப்பன்!

குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க

குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென

தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;

தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!

வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே

குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க

தசரதன் புராணத்தில் இவர் இறங்கி

அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை -

தன்கட்டுரைக்கு விதையாக்கி

விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!

சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!

கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!


என்று மிகக் கடுமையாக தாக்கியுள்ளார் கருணாநிதி.


(முதல்வரின் அடுத்த குத்து யாருக்கோ?)


August 25, 2008

"ஒரு லட்சம் தேவேந்திரகுல வேளாளர் முஸ்லிம்களாக மதம் மாற முடிவு" - சி.பசுபதி பாண்டியன்

தென்காசி, ஆக. 24 : தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஒரு லட்சம்பேர் இஸ்லாமியர்களாக மதம் மாறப்போவதாக தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சி. பசுபதி பாண்டியன் எச்சரித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு :

  • "தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் அனைத்து சிலைகளையும் அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும்.
  • தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசைக் கண்டிக்கிறோம்.
  • ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி, "தேவேந்திரகுல வேளாளர்'' என தனிப்பட்டியல் கோரி புதுதில்லியில் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவேண்டும்.
  • இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி நிரந்தரத் தீர்வு காணவேண்டும்'.
  • இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்தபின், சி. பசுபதி பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.

எங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.

தில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணிக்கவுள்ளோம் என்றார் அவர்.
நன்றி : முதுவை ஹிதயத்


August 24, 2008

தெருவோரத்தில் அனாதைகளாக வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி,பேரன்

ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.

"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?' -என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்' என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைந்து அன்றே உள்ளம் உருகிப் பாடியிருந்தார்.

அப்படிப்பட்ட தியாகச்சுடர் சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகள் கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞான வடிவேலு. இந்திய குடியரசுத்தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலுவுக்கு தொழிலாளர் நலத்துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார். ஞானவடிவேலு-கமலாம்பாளின் மூத்த மகள் தனலெட்சுமி (52). மகன்கள் சங்கரன் (46), ஆறுமுகம் (40), சோமசுந்தரம் (40).


தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில் குடும்பக் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது, பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்கு திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதர ரான ஆறுமுகமும் உடன் வசித்தார். காதல் திருமணம் செய்த தனலட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003-ல் ஞானவடிவேலு இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.


கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தன லெட்சுமி மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபாரம் செய்தார். ஆனால் சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால் வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில் போதிய வருவாய் இல்லை.அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். இப்போது தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்' வளாகத்தில் தங்கியுள்ளனர். சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அவரது சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களை யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை.


வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.மழைக்காலத்தில் அங்குள்ள கடைகளின் முன்பகுதியில் தங்குவார்களாம்.மழை பெய்தால் அன்று இரவு அவர்களுக்கு சிவராத்திரிதான். இந்தச் சூழலால் தற்போது தனலெட்சுமியும்

, அவரது சகோதரர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். சாலையோர வாழ்க்கை; காபி, வடையே காலை உணவு! தெருவோரத் தில் தள்ளுவண்டியில் விற்கப்படும் கேப்பை, கம்பங்கூழே பகலுணவு -என காலத்தைக் கழிப்பதாக விரக்தியுடன் விவரிக்கிறார் தனலெட்சுமி.வ.உ.சி. வாரிசுகள் என உதவி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய்விட்டதாக தனலெட்சுமி விரக் தியுடன் சிரிக்கிறார்.""ஏதாவது ஓர் இடத்தில் குறைந்த ஊதியத்திலாவது என்னை வேலைக்கு சேர்த்துவிட முடியுமா?'' என நம்மைப் பார்த்து அவர் கெஞ்சியதைக் கண்டு கண்ணீர் தான் வருகிறது.


சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஏதேதோ சலுகைகள் செய்ததாகக் கூறி வரும் தமிழக அரசுக்கும், வ.உ.சி. பெயரில் கட்சியும், மன்றமும் நடத்துவோருக்கும் இந்த தனலெட்சுமி போன்றோரது கஷ்டம் தெரியாமல் போனது எப்படியோ? வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கையும், அவர் பயன்படுத்திய பொருளையும்கூட பத்திரப்படுத்தி பாதுகாக்கும் தமிழக அரசு அந்தத் தியாகச்சுடரின் வாரிசுகளுக்கு, வாழ ஒரு வழியும், வசிக்க பாதுகாப்பான இடமும் அளிப்பது அவசியம் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.


"பஞ்சமும் நோயும் நின் அடி யார்க்கோ, பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ'' ன்ற பாரதியாரின் பாடல் வரிகள்தான் அந்த இடத்திலிருந்து புறப்பட்டபோது காதில் ரீங்காரமிட்டது. வசிக்க வீடில்லாமல் மதுரை மூன்றுமாவடி சாலையோரத்தில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன்".

August 16, 2008

புலி வேட்டைக்குப் புறப்பட்டவர்கள் புகைந்து போன வரலாறு! - பழ.நெடுமாறன்

15 August 2008 : "விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபு வழி இராணுவமாக சண்டையிட முடியாது. இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலிமை குன்றிவிட்டார்கள். இனி அவர்களால் எதிர்த்துப்போராட இயலாது" என்று சிங்கள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

கடந்த கால வரலாறுகளை மறந்து சிங்கள இராணுவத் தளபதிகள் பலரும் இதைப்போல வாய்ச்சவடால்கள் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் புளுகுகளைத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. உலக நாடுகளும் உண்மைகளை அறிந்தே வைத்துள்ளன. எனவே உலக நாடுகளையும் இவர்களால் ஏமாற்ற முடியாது. அவ்வப்போது இத்தகைய புனைக்கதைகளை அவர்கள் யாருக்காகக் கூறுகிறார்கள்? சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றுவதற் காகத்தான் இத்தகைய பொய்யான தகவல்களை தொடர்ந்து கூறிவருகிறார். ஏற்கனவே இராணுவ ரீதியில் வலிமை குன்றிப்போய் கிடக்கிறார்கள், பொருளாதார ரீதியில் நொறுங்கிப்போய் சிங்கள தேசம் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய பொய்யுரைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்திலும் இத்தகைய கட்டுக்கதைகளை கூசாமல் சொன்னவர்கள் பலருண்டு.
தளபதி கல்கத்

1988-ஆம் ஆண்டில் இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த கல்கத் வெறும் சவடால் பேர்வழியாக இருந்தார். இந்தியாவில் உள்ள வெத்து வேட்டு அரசியல்வாதிகளைப் போல அடிக்கடி புலிகளைக் குறித்து பொய்யான அறிக்கைகள் விட்டு சுயவிளம்பரப் போர் நடத்திக்கொண்டிருந்தார். தினமும் 20, 30 புலிகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் புலிகளின் முகாம்களைத் தாக்கி அழித்து விட்டதாகவும் செய்திகளைப் பரப்பியபடி இருந்தார்.
இடைஇடையே சென்னைக்கு வருகை தந்து 5 நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் பத்திரிகையாளர்களுக்கு ஆடம்பரமான விருந்து அளிப்பார். இந்த விருந்தில் தளபதி கல்கத் தனது வீரதீர பராக்கிராம செயல்களை விவரிப்பார். இச்செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் பத்திரிகையாளர்கள் தனியே சிறப்பாகக் கவனிக்கப்பட்டனர். சென்னையில் ஒருமுறை இவர் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவிழ்த்துவிட்ட புளுகுகளைக் கேட்டுக் கேட்டு காதுகள் புளித்துப்போன செய்தியாளர் ஒருவர் "எல்லாம் சரி நீங்கள் இதுவரை சுட்டுவீழ்த்தியதாகக் கூறப்படும் புலிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் பல ஆயிரம் வருகிறது. புலிகளிடமிருந்து நீங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை சிங்கள இராணுவத்தினரிடம் உள்ள ஆயுதங்களைவிட அதிகமாக இருக்கும் போல் தெரிகிறதே" என்று கேட்டபோது அனைவரும் சிரித்தனர்.
ஒருமுறை தளபதி கல்கத் "பிரபாகரன் இருக்கும் இடத்தை இந்தியப்படை சுற்றி வளைத்துவிட்டது. இனி அவர் தப்ப முடியாது. எல்லா வழிகளையும் அடைத்துவிட்டோம். விரைவில் உயிருடன் அல்லது பிணமாக பிடிபடுவார்" என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படித் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்யும் தளபதி கல்கத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க பிரபாகரன் விரும்பினார். அதற்கான திட்டத்தையும் தீட்டினார். முல்லைத் தீவில் உள்ள ஒரு காட்டிற்கு அருகில்தான் தளபதி கல்கத்தின் முகாம் அமைந்திருந்தது. ஒருநாள் காலைப்பொழுதில் தனது கூடாரத்திலிருந்து தூங்கி எழுந்து தளபதி கல்கத் வெளியே வந்து நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு இராணுவ வீரர்கள் தேனீர் கொண்டுவந்து கொடுத்தனர். ருசித்து அருந்திக்கொண்டிருந்தார்.

சற்றுத் தொலைவில் இரண்டு உலங்கு வானூர்திகள் தயாராக நின்று கொண்டிருந்தன. ஆங்காங்கே படை வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர்.
அந்த வேளையில் அவர் கண்ணுக்கு எதிரில் சில நூறடிகளுக்கு அப்பால் புலிகள் சிலர் திடீரென்று தோன்றி தரையில் மண்டியிட்டு ஏவுகணைகளை ஏவினர். கண்மூடித் திறப்பதற்குள் இந்திய இராணுவ உலங்கு வானூர்திகள் இரண்டும் தூள் தூளாயின. பயந்து நடுங்கிய தளபதி கல்கத் தாவிக்குதித்து அருகில் இருந்த பதுங்கு குழிக்குள் பாய்ந்தார். அவரது காவலுக்கு நின்ற வீரர்களும் எதிர்பாராத இந்த தாக்குதல்களால் நிலைகுலைந்து சிதறி ஓடினர்.
கண்மூடி திறப்பதற்குள் இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. புலிகள் நிதானமாக நடந்து மீண்டும் காட்டுக் குள்ளே புகுந்து மாயமாக மறைந்து போனார்கள். இவ்வளவு நெருங்கி வந்து ஏவுகணையை ஏவியவர்கள் நினைத்திருந்தால் தன்னையே எளிதாக ஒழித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாததை எண்ணி எண்ணி தளபதி கல்கத்தின் உடம்பு நடுங்கிற்று. அன்றுடன் அவரது ஆணவப்பேச்சு மறைந்தது. புலிகளைப் பற்றி அவதூறு செய்வதை அவர் நிறுத்தினார்.

அமைச்சர் இரஞ்சன் விசயரத்தினா

இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாச இருந்தபோது அவருக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க பாதுகாப்புத்துறை இணையமைச்சராக இரஞ்சன் விசயரத்தினா என்பவர் இருந்தார். சிங்கள பேரினவாத வெறி பிடித்த அவர் தமிழர்களை அடியோடு கருவறுக்க உறுதிபூண்டிருந்தார்.
"புலிகளை அடியோடு அழிப்பதே எனது இலட்சியமாகும். அவர்கள் உயிர்தப்பவேண்டுமானால் எவ்வித நிபந் தனையுமின்றி ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையவேண்டும். இல்லையேல் புலிகள் அழித்து ஒழிக்கப்படுவது நிச்சயம்" என இரஞ்சன் விசயரத்தினா 4-12-90 அன்று கொக்கரித்தார்.

ஆனல், 2-3-91 அன்று கொழும்பு நகரின் வீதியில் காலை 8.30 மணிக்கு தனது பாதுகாப்பு பரிவாரங்கள் புடைசூழ இரஞ்சன் விசயரத்தினா சென்றுகொண்டிருந்தார். அதேவீதியில் ஒருபுறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அமைச்சரின் கார் சுக்கு நூறாக சிதறியது. அமைச்சரும் அவரின் பாதுகாவலர்களும் அடையாளம் தெரியாமல் சிதறிப்போனார்கள்.

தளபதிகள் கொத்தாக பலி

தமிழீழப் பகுதியில் புகுந்து தமிழர்களைக் கொன்று குவித்தும் அழிவு வேலைகளைச் செய்தும் வந்த சிங்கள இராணுவத்தின் முக்கிய தளபதிகள் ஒட்டு மொத்தமாக புலிகளால் அழிக்கப்பட்ட நிகழ்ச்சி சிங்கள அரசையும் மக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. 1992-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாள் யாழ்ப்பாணப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் துணிவுடன் ஊடுருவி புலிகள் புதைத்து வைத்த நிலக்கண்ணிவெடியில் சிக்கி கீழ்க்கண்ட சிங்கள இராணுவ உயர் அதிகாரிகள் ஏறிவந்த வாகனங்கள் வெடித்துச் சிதறின.

1. வடபிராந்திய ஆணைத் தளபதி மேஜர் ஜெனரல் தென்சில் கொப்பேகடுவ
2. வடபிராந்திய கடற்படைத் தளபதி கமோடர் மொகான் ஜயமகா
3. யாழ்பிராந்திய பிரிகேடியர் விசயவிமலரத்தின
4. லெப்.கர்னல் ஆர்ய இரத்தின
5. லெப்.கர்னல் பலிப்பான
6. லெப்.கர்னல் ஸ்டீபன்
7. மேஜர் அல்வீஸ்
8. கடற்படைத் தளபதி லெப்.லங்க திலக
9. கடற்படை லெப்டினன்ட் விசயபுர
10. படைவீரர் விக்கிரம ரத்தின


ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் சிதறி மாண்டனர். சிங்கள இராணுவம் புலிகளுடன் போர் தொடங்கிய பிறகு உயர் இராணுவ அதிகாரிகள் பலர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது இந்நிகழ்ச்சியிலேயே ஆகும்.

வைஸ் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ

சிங்கள முப்படைத் தளபதிகளில் ஒருவரும் கடற்படையின் தளபதியுமான வைஸ்அட்மிரல் கிளான்சி பெர் னாண்டோ பிரிட்டனில் சென்று பயிற்சி பெற்றவர். இந்தியக் கடற்படைத் தளபதிகளுடன் பேச்சுநடத்தி அவர்கள் உதவியுடன் சிங்களக் கடற்படையின் வலிமையைப் பெருக்கியவர். விடுதலைப் புலிகளுக்கு கடல்வழியாக வரும் ஆயுதங்களைத் தடுக்க இருநாட்டுக் கடற்படையின் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தவர். 16-11-1992-ஆம் ஆண்டு காலை 8.30 மணிக்கு கிளான்சி பெர்னாண்டோ தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் ஒருவன் அவர் காரின்மீது மோதினான். கண்மூடித்திறப்பதற்குள் காரும் காருக்குள் இருந்த தளபதியும் உடல் வெடித்துச் சிதறினார்கள். கொழும்பில் குண்டு தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக கூட்டுப்படைத் தலைமையகம் அறிவித்து 4 நாட்களுக்குள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு தொடர்ந்து புலிகளை வேட்டையாடப் புறப்பட்ட பல தளபதிகள் புகையோடு புகையாக மறைந்து போனார்கள் என்பதைத்தான் கடந்த கால வரலாறு எடுத்துக்காட்டுகிறது. புலிகளின் வலிமையை அழித்துவிட்டதாக மார் தட்டும் லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இரண்டாண்டுகளுக்கு முன் புலிகளின் தாக்குதலிலிருந்து படுகாயங்களுடன் தப்பிப்பிழைத்தவர். பலமாதங்கள் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடந்தவர். ஆனால் இப்போது வாய்ச் சவடால் பேசுகிறார்.

சிங்கள அரசு போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டு வெளியேறிய போதும் இதுவரை போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக விடுதலைப் புலிகள் அறிவிக்கவில்லை. எனவே சிங்கள இராணுவத்தினர் மீது மரபுவழியிலான தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவும் இல்லை. உலக நாடுகளுக்கு இந்த உண்மை நன்கு தெரியும்.
2006-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து சிங்கள இராணுவம் புலிகளுக்கு எதிரான போரைத் தொடங் கியபோது அதற்கு எதிராக வழிமறிப்புத் தாக்குதல்களையும் தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளையுமே புலிகள் மேற்கொண்டு வருகிறார்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதல் சிறப்பு அணிகள் எவையும் இன்னும் களம் இறங்கவில்லை. முன்னணி காவல் அரங்குகளில் உள்ள விடுதலைப்புலிகளே ஊடுருவ முயலும் சிங்கள இராணுவத்தினர்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை முறியடித்து விரட்டி வருகிறார்கள். இந்த உண்மையை அடியோடு மறைத்துவிட்டு விடுதலைப் புலிகளால் இனிமேல் மரபுவழி இராணுவமாக சண்டையிட முடியாது எனவும் தனது இராணுவத்தினர் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களால் புலிகள் தங்கள் வலிமையை இழந்துவிட்டார்கள் என்றும் சரத்பொன்சேகா பீற்றிக்கொள்வது நகைப்புக்குரியதாகும்.

தரை, வான், கடல் ஆகிய மும்முனைகளிலும் புலிகளின் படைகள் வலிமையாக இருந்துவருகின்றன. போர் நிறுத்த காலத்தில் பல புதிய அணிகளை புலிகள் உருவாக்கி உள்ளனர். தொடர்ந்தும் பல அணிகள் உருவாக்கப்பட்டும் வருகின்றன. முன்பு இருந்ததைவிட தற்போது வலிமை மிக்க மரபு வழி இராணுவமாக புலிகள் உருவெடுத்துள்ளனர். அவர்கள் தமது முழு வலிமையுடன் இன்னும் களம் இறங்கவில்லை. தங்கள் மண்ணில் நுழைய முயலும் எதிரிகளை விரட்டியடிக்கும் வேலையை மட்டுமே செய்துவருகிறார்கள்.

இறுதிக்கட்டப் போருக்கு விடுதலைப்புலிகள் தயாராகி வருகிறார்கள் என்ற உண்மையை சிங்கள அரசும் இராணுவமும் நன்கு அறியும். எனவேதான் இந்தியாவின் உதவியை நாடி தில்லி நோக்கி சிங்கள அதிபர் இராச பக்சே அடிக்கடி காவடி எடுக்கிறார். சிங்கள இராணுவம் சந்திக்கவிருக்கிற பெரும் தோல்வியை மறைப்பதற்கான முன்முயற்சியாகவே பொன்.சேகா போன்றவர்கள் பொய்யான பரப்பரைகளைக் கூறிவருகிறார்கள். அப்பாவி சிங்கள மக்கள் வேண்டுமானால் ஏமாறக்கூடுமே தவிர, தமிழர்களும் உலகநாடுகளும் இக்கூற்றுகளைக் கண்டு ஏமாறப்போவதில்லை.

August 06, 2008

மதுரையில் கலைஞருக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற ஊனமுற்ற ஒரு வாலிபருக்கு அடி, உதை-கைது

மறைந்த முன்னால் சபாநாநயகர் பண்பாளர் திரு.பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலை திறப்பு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. விழாவில் பேசிய முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி, "யாருமே எதிர்ப் பார்க்காத‌ விழா இது. இவ்வ‌ள‌வு விரைவாக‌ ந‌டைபெறும் என‌ எதிர் பார்க்க‌வில்லை. பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் குடும்பம் திராவிட‌ இய‌க்க‌த்தை வ‌ள‌ர்த்த‌ குடும்ப‌ம். பேராசிரியர் குறிப்பிட்டது போல நீண்ட காலம் திராவிட இயக்கத்தை வளர்த்த பெருமையுடையது பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலையை திறப்பது இந்த மண்ணுக்கு பெருமை" என‌ முத‌ல்வ‌ர் புகழாரம் சூட்டினார்..இதற்காக நேற்று இரவு தூத்துக்குடியிலிருந்து முத்து நகர் விரைவு வன்டியில் மதுரை வந்தார். அவருடன் தமிழக அமைச்சர்களும் உடன் வந்தனர். இன்று காலை மறைந்த முன்னால் சபாநாநயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் சிலை திறப்பு நடைபெற்றது. விழா முடிந்து அரசு சுற்றுலா மாளிகைக்கு புறப்ப‌ட்ட தமிழக முதல்வருக்கு, மதுரை பைக்காராவை சேர்ந்த சுந்தரன் மகன் எஸ்.ராஜா, ஊனமுற்றவரான இவர் ஊனமுற்றவர்களுக்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை என்பதற்காக க‌றுப்புக் கொடி காட்ட முயன்றார்.


('அடி, உதை, அடிக்காதே' என்ற குரல்களை காணொளிப்பதிவில் கேட்கலாம்), உடனே காவ‌ல்துறையின‌ர் கைது செய்து தல்லாக்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் விழா நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாலை ந‌டைபெரும் விழாவில் பின்ன‌னிப் பாட‌க‌ர் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசிலாவிற்கு பொற்கிழி வ‌ழ‌ங்கி பாரட்டு விழா ந‌டைபெறுகிற‌து. இவ்விழாவிற்கான‌ ஏற்பாடுகளை மு.க‌.அழ‌கிரி செய்து வ‌ருகிறார்.