May 25, 2007

அன்னை தேசத்தை விட்டு
எண்ணை தேசத்தில்
எரியும் எண்ணற்ற
இந்தியச் சகோதரர்களுக்கு…..

பால் குடிக்கும் குழந்தையையும் மறந்து
பாதி ராத்திரி வரை தன் கணவனின்
தொலைபேசி மணிக்காகக் காத்துக்கிடந்து
மொபைல் போன்களுடனேயே
முழு வாழ்க்கையையும் வாழ்ந்து விடும்
என் தேசத்தின் கற்புக்கரசிகளுக்கு….

தள்ளாத வயதிலும்
தன் தனையன் வரவை நோக்கி
நாழிகைக் கணக்காக
நாட்களைத் தள்ளிக்கொண்டிருக்கும்
என் தாயகத்துத் தாய்மார்களுக்கு…

நிலவைக் காட்டிச் சோறு ஊட்டும்போதெல்லாம்
‘அப்பா எப்பம்மா வருவாரென'க் கேட்கும்
பச்சிளங்குழந்தையின் கண்ணில் படாமல்
கண்ணைக் கசக்கி உயிரைப் பிசைந்துத்
தொண்டை வழியாக தானும் விழுங்கும்
அந்தத் தாயுள்ளத்துக்கு….

வாழ்க்கையில் வளம் சேர்த்து
வாழ்ந்து பார்த்துவிடவேண்டுமென்ற
வைராக்யத்தோடு வையகம் விட்டு
வான்வழியே பறந்துபோய்
பொருள் தேடும் போதையில்
வாழ்க்கையை தொலைத்து விட்ட
என்னைப்போன்ற
எண்ணற்ற சகோதரனுக்கு….

இருக்கும் நாடு
வேறாக இருந்தாலும்
இதயங்கள் என்
இந்தியாவை நோக்கியே….
என்று தாய்நாட்டை எப்போதும்
தாயைப்போல் நேசிக்கும்
என் இந்தியச் செல்வங்களுக்கு…

எத்தனை யுகங்கள்
எந்தெந்த நாட்டில் இருந்தாலும்
என் கடைசி மூச்சு
என் தாய் மடியில்….
என் தாய் மண்ணில்தான்
என்ற வைராக்யத்தோடு
உயிரற்று வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னதத் தோழனுக்கு….


அமெரிக்க ‘ஹைவே’யில்
அதிவேகக் கார்களில்
ஆங்கில இசைகளில்
ஆர்ப்பரிக்கச் சென்றாலும்…
ஒற்றையடிப் பாதைகளில்
சைக்கிளில் ‘விசில்’ அடித்துச் சென்று
லயித்துப்போன
என் இந்திய மண்ணை
இன்றுவரை நினைத்து நெகிழ்ந்துபோகும்
நிஜமான மனங்களுக்குத்…....

தெரியும்……………

இந்த உயரின் வலி

ஏ! இந்தியனே!
உன்னைப்பெற்ற
உன் தாய்நாடு கேட்கிறேன்!

மகனே!
நீ எப்போது வருவாய்?
குறைந்தபட்சம்
என் கடைசி நிமிடங்களிலாவது!!

நீ
உன் தாய்த்திரு நாட்டில்
விளக்கேற்ற வரவேண்டாம்…
வீதி வழி போகிற பொழுதுகளிலாவது!!

என் புதல்வனே!
நீ
இழந்தது
வாழ்க்கையை மட்டுமல்ல
உன் தாய்த்திருநாட்டையும்தான்…..

கண்ணீருடன்
இந்தியத்தாய்.


நவநீ
இதனைப்படித்துவிட்டு இந்த வீடியோவைத் தவறாமல் பார்க்கவும்...


No comments: