June 20, 2007

"நான்மணிக்கடிகை"


தமிழ்பால் தீராத காதலும், பற்றும், மரியாதையும் கொண்ட எத்தனையோ நபர்களில் இவரும் ஒருவர். திரு.ஆதியக்குடி சம்பத், தற்சமயம் சவூதி அரேபியாவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். நம்மைப்போல் தமிழ்மேல் பற்றிருக்கும் எவருக்கும் அவர்பால் பற்றிருப்பது ஆச்சர்யமில்லைதான். நான் நெடுநாட்களாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது தளத்தில் தொடர்ந்து எழுதி "தமிழ்ச்சேவை" செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். சுவாசிக்கக்கூட நேரமில்லா வேலைப் பளுவுக்கு இடையிலும் தன்னாலான தமிழ்த்தொண்டை அங்கிருந்து நமக்காகச் செய்யத் தயாராயிருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுவார்..ஆவலோடு காத்திருப்போம். இன்று "நான்மணிக்கடிகை"யிலிருந்து ஒரு பாடல், விளக்கத்துடன் தருகிறார். நன்றி.

கள்வம்என் பார்க்கு துயில் இல்லை, காதலிமாட்டு

உள்ளம்வைப்பார்க்கும் துயில் இல்லை, ஒண்பொருள்

செய்வம்என் பார்க்கும் துயில் இல்லை, அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில்.

தமிழ் விளக்கம் :

நான்கு வகையான மனிதர்களுக்கு கண்ணுறக்கம் வராது:

1.பிறர் பொருளை அவருக்குத்தெரியாமல் அபகரிப்பவர்க்கு

2.மனமொத்த அன்புக் காதலியிடம் மனதைக் கொடுத்தவர்க்கு

3.எப்படியாவது பெரும்பொருள்ச் சேர்த்துத் தனவந்தனாகிவிடவேண்டுமென்று சதா எண்ணிக்கொண்டிருப்பவர்க்கு

4.அப்படிப் பாடுபட்டுச் சேர்த்த பெரும்பொருளைக் காத்துக்காத்துக் கிடப்பவர்க்கு

ஆங்கில விளக்கம் :

In the song which follows, the theme is about four different groups of people who cannot sleep well at night, namely, the thief, a person in love, the person after money and the miser looking after his money:

1 comment:

Anonymous said...

Ulagathil entha moolaikku chentralum nam pirantha tamizhukkaga, tamil mannukkaga , thaai mozhikkaga ethavathu seyyavendum endru ninaikkum "Thiruvalar Sampath"-in "Thaymozhi Patru" varavekkathakkathu. Vasitha engalukku perumaiyaga irukkirathu. Enadhu manamarntha nandriyai avarukku urithakkukiren.

- Bala, Chennai