August 23, 2007

கர்நாடகாவில் நாங்கள்தான் பூர்வக்குடிகள்! நாங்கள் பிழைக்கவந்த தமிழர்கள் இல்லை

பெங்களுர் வாழ் தமிழ் மக்களுகெல்லாம் தாம் இம் மண்ணின் மைந்தர் அல்ல பிழைக்க வந்த மக்கள் என்ற தவறான என்ணம் இருக்கின்றது. அந்த கருத்தாக்கம் தவறு தமிழரே இம் மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2001-வருட மக்கள் தொகை கணக்குப்படி கருநாடகத் தமிழரின் எண்ணிக்கை 95-இலக்கம். அவர்கள் எல்லாம் வந்தேறிகளாய் இங்கு வந்தவர்களா? தொன்று தொட்டு இங்கேயே வாழ்ந்து வந்தவர்களா? இதற்கு விடை காண, வரலாற்றை விவரிக்க வேண்டும். 1956-ம் ஆண்டில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, அதன் பிறகு, பழைய சென்னை மாகாணத்திலிருந்த எல்லையோரப் பகுதிகளான பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, சித்திரதுருகம், கொள்ளேகாளம் போன்ற இடங்களில்தான் கரு நாடகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கெல்லாம் அப்பகுதிகளுடனான தனி வரலாறு உண்டு. பத்திராவதி, சிக்கமக்ளூர், சிவமுகா போன்ற பகுதிகளில் உள்ள இரும்பாலைகள், கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய கண்கானி முறையில் ஆசைக்காட்டியும் வலியவும் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பணிக்கமர்த்தப்பட்டனர். கருநாடகத்தின் உட்பகுதியில் தனி பண்பாட்டு தீவுகளாக வாழ்வமைத்துக் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் பெங்களூர் மற்றும் தங்க வயல் தமிழர்களின் நிலையோ, இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை. பெங்களூர் தமிழர்கள் நகரின் மக்கள் தொகையில் தற்போது 35% விழுக்காடுகள் உள்ளனர். முசுலிம்களோ, பெங்களூரில் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். கன்னடரோ, கருநாடகத்தின் தலைநகரில் 25% விழுக்காடுதான் உள்ளனர். தெலுங்கரில் சிலரும் மராட்டியரில் சிலரும் தங்களை கன்னடர் என்றே சொல்லிகொள்கின்றனர். பழைய சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளையும், ஐதராபாத் நிசாமிடமிருந்து சில பகுதிகளையும், பம்பாய் மாகாணத்திருந்து சிலபகுதிகளையும், மைசூர் மாகாணத்தின் சில பகுதிகளையும் இணைத்து கருநாடக மாநிலம் அமைக்கப்பெற்ற பின்னரே கன்னடர்கள் பெங்களூர் நகருக்கு பெரிய அளவில் வந்து குடியேறத் தொடங்கினார்கள் என்பதே வரலாற்று உண்மை.
பெங்களூரிலும், கோலார் தங்க வயலிலும் காணப்படும் தமிழர்-கன்னடர் இனப்பூசல் தமிழர்கள் பிழைப்புத் தேடி வந்தேறியதால் வந்த ஒரு பூசல் அன்று. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த தமிழகத்தின் எல்லைப்புறத் தமிழ்ப்பகுதிகளை 1956-ம் ஆண்டில் "மொழிவழியில்" கன்னடருக்கு அரிந்துகொடுத்தமையால் வந்த வினையே அப்பூசலாகும். அண்மையில் பெங்களுருக்கு வந்து குடியேறிய கன்னட வெறியர்கள், இப்பெங்களுரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல், இப்பகுதியில் தொன்று தொட்டுவாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கு அண்டி பிழைக்க வந்தவரே என்று சொல்லித் தமிழரை விரட்டவும் அழிக்கவும் பார்க்கின்றனர். இந்நிலையில், பெங்களுரின் வரலாற்றை சுருங்கப் பார்க்கலாம். பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களுர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத்தலை நகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கி.பி.997-ம் ஆண்டில் ஓசக்கோட்டை முதலான இம் மாவட்டத்தின் பல பகுதிகள் சோழ அரசன் இராசராசதேவனால் வெல்லப்பட்டன. மாகடிப் பட்டணத்தை 1139-ம் ஆண்டில் நிறுவியவர்கள் சோழர்கள்தான். இன்று எலவங்கா என்றழைக்கப்படும், பெங்களுர் பகுதி சோழவள நாட்டின் ஒருபகுதியாக இருந்தது. அதற்கு "இலைப்பாக்கநாடு" என்று பெயர். இந்த இலைப்பாக்கநாடு ஹொய்சோழர்கள் ஆட்சியில் "எலவக்கா" என்றாகி பிறகு "எலவங்கா" என்று திரிந்தது. சோழ கங்கர்கள் அல்லது நுளம்பர்கள் என்னும் சிற்றரச மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலி சோழர்க்கு அடங்கிய சிற்றரசாக ஆண்டு வந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. மைசூர் மாவட்டத்திலுள்ள தலைக்காட்டை தலைநகராக் கொண்டு ஆண்டு வந்த கங்கர்கள் தமிழையே பேசி வந்ததால், தமிழ் கங்கர் எனப்பட்டனர். Source : (பெங்களுரில் சோழர் ஆட்சியா..? )
தொடரும்
அன்புடன்அரவிந்தன்
பெங்களூர்

1 comment:

TBCD said...

இந்த நிலபரப்பும் தமிழன் ஆண்டிருக்கக்கூடும் என்று ஒரு அனுமானமாக தான் கூறிறேன்..இது தொடர்பாக
இங்கே (பெங்களுரில் சோழர் ஆட்சியா..? )பாருங்கள்
நீங்கள் சொன்னது இதற்கு மெருகுயேற்றுகிறது..நன்றி..