September 02, 2007

நான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் `சவுக்கிய'மாக வாழ்கிறார் ஒசாமா

அமெரிக்க படையினரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும், தனது குடும்பம் குழந்தைகளுடன் பாதுகாப்பாகவே இருக்கிறார் அல்-குவைதாவின் ஒசாமா பின் லாடன். ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது அல்-குவைதா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து, அதன் தலைவர் ஒசாமா பின் லாடனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் சி.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பின், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தலைவர், தனது பிரிவினரிடம், `ஒசாமாவின் தலையை அறுத்து, பெட்டியில் வைத்து கொண்டு வாருங்கள். எப்போதும், ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டி உங்களுடன் இருக்கட்டும்' என்று உத்தரவிடும் அளவுக்கு கோபத்தின் உச்சத்தில் இருந்தார். அமெரிக்க படையினரும், உளவுப் பிரிவினரும் ஒசாமாவை தீவிரமாக தேடினர். அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்டாலும், ஒசாமா தனது குடும்பத்துடன் தான் தலைமறைவாக இருக்கிறார். அவரை சுற்றி குறைந்த பட்சம் 40 காவலர்கள் நிற்பர். அதைத்தாண்டி, அடுத்தடுத்த அடுக்கு பாதுகாப்பும் அவருக்கு உள்ளது. ஒரு கட்டத்தில் அமெரிக்க படையினர் ஒசாமா தலைமறைவாக இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து வந்ததை, மெய்காவலர் பார்த்து விட்டார். உடனடியாக ஒயர்லெஸ் ரேடியோ மூலம் தகவல் அனுப்பினார். தனது மெய்க்காவலர்களுக்கு வேத மந்திரமாக ஒரு விஷயத்தை போதித்து வைத்திருக்கிறார் ஒசாமா. அமெரிக்கப் படை சுற்றி வளைத்துவிட்டால், `ஒசாமவை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளவேண்டும்' என்பது தான் அது. அமெரிக்கப் படையினர் நெருங்கியதை அறிந்த மெய்க்காவலர்கள், அவரை படுக்க வைத்து வேறிடத்துக்கு துாக்கிச் சென்று விட்டனர். மலைப்பகுதி போர் தந்திரத்தில் அமெரிக்கப் படையினருக்கு திறமை இல்லாததால், ஒசாமாவை பிடிக்க முடியாமல் போய்விட்டது. மலைக்குகைகளை வெறுமனே சோதனையிடுவது தான் அவர்களது வழக்கமாக இருந்தது. அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவதற்கு முன் ஒசாமாவின் மெய்க்காவலராக இருந்தவர் நசிர் அல் பாரி. ஒசாமாவின் வாழ்க்கை முறை பற்றி, `நியூஸ் வீக்' இதழுக்கு பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: எனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தபோது, பேரீச்சம்பழத்தை தனது வாயில் கூழ்போல அரைத்து, அதை அக்குழந்தைக்கு ஊட்டினார். அப்போது, குழந்தையின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, குழந்தையின் காதருகே, `அல்லா ஓ அக்பர்' என்று கூறினார்.மெய்க்காவலர்களிடம் பெரிதும் அன்பு செலுத்துபவர் ஒசாமா. தலைமறைவு வாழ்க்கை வசித்தாலும், குடும்பத்தை விட்டு அவர் பிரிவது இல்லை. நான் அவரிடம் மெய்க்காவலராக இருந்த போது, அவருக்கு ஆறு மனைவிகள். எட்டு ஆண் குழந்தைகள்; ஆறு பெண் குழந்தைகள். இவர்களில் மூத்த ஆண் குழந்தைகள் மூன்று பேர் சவுதி சென்றிருந்தனர்.தற்போது, ஒசாமா தனது நான்கு மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளுடன், குடும்ப வாழ்க்கையில் தான் உள்ளார். திருப்தியான குடும்ப வாழ்க்கையை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் உண்மையான குடும்பத் தலைவராக செயல்படுகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் தேவையிலும் கவனம் செலுத்துகிறார். அவரை மரியாதையுடன், `ஷேக்' என்று தான் நாங்கள் அழைப்போம். உலகிலேயே வல்லரசு நாடான அமெரிக்காவால் கூட அவரை பிடிக்க முடியாததால், முஸ்லிம்கள் மத்தியில் அவர் மீது மரியதை அதிகரித்து உள்ளது. ஒசாமாவின் கவுரவமும், தைரியமும் முஸ்லிம்கள் மத்தியில் அவரது புகழை மேலும் உயர்த்தி உள்ளது. அல்லாவால் அனுப்பப்பட்டவர் என்று கருதுவதால், ஒசாமா செய்யும் எந்த காரியமும் சரியானதாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர் முஸ்லிம்கள். பயங்கரவாதிகள் ஆவேசமாக பேசுவர் என்று தான் மற்றவர்கள் நினைப்பர். ஆனால், ஒசாமா மென்மையாக பேசக்கூடியவர். தனது பேச்சின் இடையே, குரானில் இருந்தும் சில கவிதைகளில் இருந்தும் மேற்கோள் காட்டுவார். எல்லாமே இஸ்லாமிய வழி அறப்போரை வலியுறுத்துவதாகத்தான் இருக்கும். அவர் பேசும் போது, அமெரிக்கா பற்றி மட்டும் கோபமாக குறிப்பிடுவார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவருக்கு அமெரிக்கா மீது வெறுப்பு வளர்ந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தயாரான எதையும் அவர் பயன்படுத்துவது இல்லை. பெப்சி கூட குடித்தது இல்லை. ஒசாமாவின் மெய்காவலர் குழுவில் இருந்து நான் விலகி ஏமன் வந்து விட்டாலும், இப்போதும் கூட அல்-குவைதாவின் அனுதாபி தான். இவ்வாறு அல் பாரி கூறினார். அல் பாரி கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய, `நியூஸ் வீக்' பத்திரிகை, `இன்னும் மலை சூழ்ந்த பகுதியில் தான் ஒசாமா தலைமறைவு வாழ்க்கையில் இருக்க வேண்டும்; அப்பகுதியில் கவனம் செலுத்தினால், ஒசாமாவை பிடித்து விடலாம்' என குறிப்பிட்டுள்ளது.

No comments: