December 16, 2007

"ஒசாமாவுடன் பணியாற்றியது கட்டுக்கடங்காத சந்தோஷம்'* சொல்கிறான் முன்னாள் கார் டிரைவர்

குவான்டனாமோ: "ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்' என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு காரணமான ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால், இதுவரை அவன் சிக்கவேயில்லை. அதே ஆண்டில் நவம்பர் 24ம் தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் அமெரிக்க வீரர்கள் பல சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பிடிபட்டவன் தான் சலீம் அகமது ஹாம்தான். கியூபாவில் குவான்டனாமோ என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள தனிமை சிறையில் ஹாம்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்கையின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை அவன் மீது வழக்கு நடத்தப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக அவனை மீண்டும் நீதிபதி முன் நிறுத்த ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு முன் அவனிடம் விசாரணை நடத்தி, அவனது வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். அதில் அவன் கூறியிருப்பதாவது:நான், ஒசாமா பின்லாடனின் டிரைவர் மற்றும் பாதுகாவலன். 2001ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் விமானம் மூலம் தகர்க்கப்பட்ட போது, காந்தகாரில் உள்ள ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவரையும், அவரது மகன் ஒட்டமானையும், நான் தான் காரில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றேன். அமெரிக்கர்கள் பிடியில் அவர் சிக்கி விடக் கூடாது என்பதற்காக பல வாரங்கள், ஒவ்வொரு நகராக அவரை நான் தான் அழைத்து சென்றேன். உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட போது, குறைந்தது ஆயிரத்து 500 பேராவது இறப்பர் என ஒசாமா எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு மேலும் இறப்பு எண்ணிக்கை இருந்ததால், மிகவும் திருப்தி அடைந்தார். அவருக்கு விசுவாசமாக இருப்பதாக நான் பிரமாணம் எடுத்துள்ளேன். கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன் அவரிடம் பணியாற்றினேன்.இவ்வாறு ஹாம்தான் கூறியுள்ளான்.

No comments: