May 02, 2008

"அரைகுறை" மல்லிகா ஷெராவத் மீது போலீசில் புகார்

முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை மல்லிகா ஷெராவத் குட்டை பாவாடை அணிந்து மனதை புண்ணாக்கி விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கனிராஜன், பெரியமேடு போலீசில் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:- நான் இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளராக இருக்கிறேன். தேச நலனுக்காகவும், கலாச்சார நெறிமுறைக்காகவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. கடந்த ஏப்ரல் 25-ந் தேதி ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தசாவதாரம் சினிமாவின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் நாகரீகமாக உடையணிந்தபடி வந்திருந்தனர்.
ஆனால் மல்லிகா ஷெராவத் என்ற இந்தி நடிகை தமிழ் கலாசாரத்தை மீறி, தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் அரைகுறை ஆடையணிந்து, அதாவது குட்டை பாவாடை அணிந்து வந்திருந்தார். இதனால் தமிழ் பண்பாளர்கள் பலர் முகம் சுளித்தனர்.
முதல்-அமைச்சர் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், ஆபாசமாக அறுவருக்கத் தக்க சேஷ்டைகளையும் செய்தார். இதை டி.வி., பத்திரிகைகளில் பார்த்து மனம் புண்பட்டு விட்டது. தமிழ் கலாச்சாரத்தில் பற்று உள்ளவர்களுக்கு இது மன வேதனையையும் அவமானத்தையும் அளித்தது. கீழ்த்தரமான எண்ணங்களை உண்டு பண்ணும் வகையில் அவரது உடை அமைந்திருந்தது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மல்லிகா ஷெராவத் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வழக்கு தொடரவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கனிராஜனின் வக்கீல் ராம் மனோகரனிடம் கேட்ட போது, "இந்த பிரச்சினை தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் கனிராஜனை அழைத்து இன்று (2-ந் தேதி) விசாரணை நடத்துவதாக பெரியமேடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டார்.

No comments: