June 30, 2007

கவிப்பேரரசு வைரமுத்துவின் நான் ரசித்த கவிதைகளில் ஒன்று
எரிக்கத் தெரிந்த நெருப்பு


கிழக்கே தீர்ந்தது வழக்கு -
இரண்டாய்க் கிழிந்து விடிந்தது கிழக்கு -
அட உழைத்த பிறகும் நிரம்ப வில்லையே
உழவன் வீட்டு உழக்கு.
கட்டி இருப்பது கந்தை -
அதுவும் ஒட்டி இருப்பது விந்தை -
இதைத் தட்டிக் கேட்கும்
தைரிய மில்லை மானுட மா இது? மந்தை.
கரும்பும் இங்கே இருக்கும் -
விலை கண்ணீர்போலக் கரிக்கும் -
இங்கே வருஷத் துக்கொரு திவசம்
மாதிரி பொங்கல் வைப்பது வழக்கம்.
வேர்வை வருமே அதைத்தான் -
நிஜ விதையாய் பூமியில் விதைத்தான் -
புது ஆர்வத் தோடவன் விளைத்த
பயிரை அறுத்தவனோ ஒரு சைத்தான்.
என்ன உழுதவன் நிலமை? -
அவனோ இறகை விற்கும் பறவை -
போடா புண்ணியம் என்ன பாவம் என்ன
பூவை விற்பவள் விதவை.
பொங்கி எழட்டும் நெருப்பு -
அந்த நெருப்புக் கென்ன பொறுப்பு? -
அட இங்கே தோழா
இனிமேல் வேண்டும்
எரிக்கத் தெரிந்த நெருப்பு.

No comments: