July 05, 2007

அன்றல்ல, இன்றல்ல "தமிழன்" என்றுமே இளிச்சவாயன்தான்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். 'அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை 'அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.

No comments: