July 27, 2007

டாக்டர் மேதகு அப்துல் கலாம் பேட்டி

கேள்வி:- நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்ற அப்சல் குரு தாக்கல் செய்த கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காதது ஏன்? இதுதொடர்பாக உங்கள் மீது விமர்சனமும் எழுந்ததே?
பதில்:- அப்சல் குருவின் கருணை மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை அறிய, அந்த அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் கடைசிவரை, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை பதில் வந்திருந்தால், அதை நான் பரிசீலித்து இருப்பேன்.
கேள்வி:- அதுபோல், நீங்கள் வெளிநாட்டில் இருந்தபடி, பீகார் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியதே?
பதில்:- அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அப்போது நான் ரஷியாவில் இருந்தேன். அங்கிருந்தபடியே, பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஆலோசனை நடத்தினேன். அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அவர் இரண்டு தடவை என்னுடன் அதுபற்றி விவாதித்தார். எனக்கு தேவையான விவரங்கள் எல்லாம் ஈ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், நான் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்தேன்.
கேள்வி:- ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவை நீங்கள் திருப்பி அனுப்பியதும் சர்ச்சை உண்டாக்கியதே?
பதில்:- அதுவும் சரியான முடிவுதான். முதலில் அதை நான் பாராளுமன்றத்துக்கு திருப்பி அனுப்பினேன். மத்திய அரசு அதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தியது. அந்த மசோதா தேவையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேள்வி:- எதிர்காலத்தில், பிரதமர் பதவிக்கு பொது வேட்பாளர் தேவை என்ற நிலை ஏற்பட்டால், பிரதமர் பதவியை ஏற்பீர்களா?
பதில்:- இந்த கேள்வி உங்களுக்கு இனிமையாக இருக்கலாம். ஆனால் எனக்கு கற்பனையாக தோன்றுகிறது. எனக்கு 5 கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வேண்டிய வேலை இருக்கிறது.
கேள்வி:- முதல்முறையாக பெண் ஜனாதிபதி கிடைத்து இருப்பது பற்றி?
பதில்:- இது உண்மையிலேயே நல்ல செய்தி.
கேள்வி:- வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகிய இரண்டு பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- இருவருமே திறமையானவர்கள், சிந்திக்கும் வகையை சேர்ந்தவர்கள், பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுபவர்கள். அவர்களுடன் எனக்கு சிறப்பான உறவு நிலவியது. மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
கேள்வி:- ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மாற்றி அமைக்க வேண்டுமா?
பதில்:- தேவை இல்லை. அரசியல் சட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சோதனைகளை தாங்கி நிற்கிறது. என்னை பொறுத்தவரை எனது பணியில் எந்த முட்டுக்கட்டையும் இருக்கவில்லை.
கேள்வி:- 27 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சினையை சமாளிக்க வழி என்ன?
பதில்:- கல்வி நிறுவனங்களில் `சீட்'களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கேள்வி:- இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதே?
பதில்:- அணுசக்திக்கு நம்மை நாமே சார்ந்திருப்பதுதான் ஒரே வழி. நம்மிடம் நிறைய தோரியம் இருக்கிறது. அதை வைத்து அணுசக்தி உற்பத்தி செய்ய ஈனுலைகள் அமைக்க வேண்டும்.
கேள்வி:- தற்போதைய அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அரசியல் நிலைமை கவலை அளிக்கிறது. முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படுவது இல்லை. வளர்ச்சி பற்றி போதுமான அளவு பேசப்படுவது இல்லை. அதற்கு உயர் முன்னுரிமை கொடுப்பது இல்லை. உதாரணமாக, எந்த ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று எந்த கட்சியும் இலக்கு நிர்ணயிப்பது இல்லை.எல்லா அரசியல் தலைவர்களும், வளர்ச்சிரீதியான அரசியலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது. வளர்ச்சி பணி அடிப்படையில் தலைவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

No comments: