September 29, 2007

5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

1. சர்க்கரை நோய் என்றால் என்ன?


முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்றுபார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது. க்ளுகோஸ் எனும் சர்க்கரைதான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்றுவைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால்தான் அது சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம்.


2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?


பல காரணங்களால் இது நிகழலாம். தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம். இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்.


3. சர்க்கரை நோய் யாருக்கு ஏற்படும்?


யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.


4. சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?


பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம், அதிக பசி, மிக வேகமாக எடை குறைதல், அதிகமாக சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல், திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப் பையில் தொற்று நோய்


5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?


இரண்டாம் வகை சர்க்கரை நோயால் ஏற்படக் கூடியவை. பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு

No comments: