November 25, 2007

பாகிஸ்தான் திரும்பினார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்

  • கொல்கத்தாவில் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கைது : இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் கடந்த புதனன்று வன்முறை ஏற்பட காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் தலைவர் ஒருவரை ஐந்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்திந்திய சிறுபான்மை கூட்டமைப்பு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இத்ரிஸ் அலி என்ற அவர், வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு கொல்கத்தாவில் அடைக்கலம் தரக்கூடாது என்று கூறி நடைபெற்ற வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். அன்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினை கொல்கத்தாவை விட்டு வெளியேறுமாறு மேற்குவங்க அரசு வற்புறுத்தியது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் போன்றவை கடும் எதிர்ப்புதெரிவித்தன. தற்போது, தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தாவிற்கு திரும்பி வந்தால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக இருப்பதாக இப்போது மேற்கு வங்க முதலமைச்சர் கூறுகின்றார்
  • கிளிநொச்சி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலிலும் வேறு இரண்டு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களிலும் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றர்கள் என்றும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளார்கள் என்றும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • பாகிஸ்தான் திரும்பினார் நவாஸ் ஷெரிஃப் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சவுதி அரேபியாவில் இருந்து லாகூருக்கு சென்றுள்ளார். சவுதி அரேபியாவில் அரசியல் தஞ்சம் அடைந்து இருக்கும் நவாஸ் ஷெரிஃப் அதை முடித்து நாடு திரும்புவதற்கு கடந்த மூன்று மாதத்தில் நடத்தும் இரண்டாவது முயற்சி இது. விமானத்தில் பிபிசியிடம் பேசிய நவாஸ் ஷெரிஃப் தன்னுடைய லட்சியம் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை முறியடிப்பதுதான் என்பதால், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப்புடன் ஒத்துப் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அவரது வருகையையொட்டி லாகூரில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் செப்டம்பரில் இடம்பெற்றது போல உடனடியாக நவாஸ் ஷெரிப்பை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இருப்பது போல தெரியவில்லை என பார்வையாளர்கள் கூறுகின்றனர்
  • தாக்குதலில் ஏராளமான தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர் - ஆப்கான் அதிகாரிகள் : ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான பாக்தியாவில் ஆப்கான் மற்றும் நேட்டோ படைகளுடன் நடைபெற்ற மோதலில் ஏராளமான தலிபான் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்
  • அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை கடுமையாக சாடியுள்லார் ஆங்கிலிக்கன் திருச்சபை தலைவர் : உலகம் முழுவதும் சுமார் எழுபது மில்லியன் ஆங்கிலிக்கன் திருச்சபையை பின்பற்றுவோரின் தலைவரான டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார்.
    இங்கிலாந்து திருச்சபையின் தலைவரும், கேண்டர்பரியின் ஆர்ச்பிஷப்புமான ரோவன் வில்லியம்ஸ் அவர்கள், பிரதானமாக முஸ்லிம் வாசகர்களையே கொண்ட பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்றுக்கு இக்கருத்துக்களை தெரிவித்தார். பலத்தை தவறாக பயன்படுத்தும் அமெரிக்காவின் போக்கை முற்காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நடந்து கொண்ட முறையோடு அவர் ஒப்பிட்டுள்ளார். அத்தோடு உலகம் முழுவதும் செல்வாக்கை பெற முயற்சிக்கும் அமெரிக்காவுக்கு அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு இராக்கை ஒரு உதாரணமாக எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்
  • மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் ஆர்ப்பாட்டம் : மலேசியாவில் அரசின் தடையை மீறி தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்திய இந்திய சிறுபான்மை மக்களுடன் மலேசிய பொலிஸார் மோதியுள்ளனர். நகரத்தின் மைய பகுதியில் விடியற்காலை குழுமிய ஆயிரக்கணக்கானவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு, தண்ணீரையும் பீய்ச்சியடித்த பொலிஸார் குறைந்தப்பட்சம் ஐம்பது பேரை கைது செய்தனர். மலேசியாவில் சிறுபான்மையாக இருக்கும் இந்தியர்கள் பெரும்பான்மை மலாய் அரசாங்கத்தால் தாங்கள் பாரப்பட்சமாக நடத்தப்படுவதாக இந்தியர்கள் கோபமாக இருக்கின்றனர். இந்த பேரணி இன பதட்டத்தை அதிகரிக்கும் எனக் கூறி இந்த பேரணிக்கு மலேசிய அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர்

No comments: