December 20, 2007

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பயணித்த பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில், மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு, வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000-வது ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் முறைகேடு வழக்கில், அவருக்கு எதிராக நீதிமன்றம் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது, கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் பல்கலைக்கழக பேருந்தில் தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி அருகே வந்துகொண்டிருந்தனர். அதைத் தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் பேருந்துக்குத் தீ வைத்தது. அதில் சிக்கிய மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், அதிமுகவினர் 28 பேர் குற்றவாளிகள் என சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், நெடுஞ்செழியன், ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையும், மற்ற 25 பேருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் கடந்த 6-ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந் நிலையில், சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம், அந்தக் குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறைக்கு ஓர் உத்தரவை அனுப்பியுள்ளார். அதில், தூக்கு தண்டனை கைதிகள் மூன்று பேரையும் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி, இந்த மூன்று கைதிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறை தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments: