January 02, 2008

பாகிஸ்தான் தேர்தல்கள் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பாகிஸ்தானில் இம்மாதம் எட்டாம் தேதி நடைபெற இருந்த பொதுத் தேர்தல்கள் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோ ராவல்பிண்டியில் ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேற இருந்த நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு நாடெங்கும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளின் போது நாட்டில் பல வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டு வாக்காளர் பட்டியலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் அனைத்துமே மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானின் தலைமை தேர்தல் அணையாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீகின் நவாஸ் பிரிவும் தேர்தல்கள் திட்டமிட்டபடி இம்மாதம் எட்டாம் தேதியே நடைபெற வேண்டும் என வலியுறித்து வந்தன. தேர்தல் பிரச்சாரத்தால் களைகட்டியிருக்கும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இந்த இரண்டு கட்சிகளும் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் அதிபர் முஷாரஃப் மற்றும் அவரது கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சுமத்தின. நாட்டில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை அனைத்துமுக்கிய எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன. தேர்தல் ஆணையம் தனது எண்ணப்படி நடக்க வேண்டுமென அரசு விரும்புவதாகவும், அதற்கேற்ற வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகவும், சுதந்திரத் தன்மையுடன் அது இயங்கவில்லை என்றும், அதனால் மக்கள் தேர்தல் ஆணையத்தை நம்புவதில்லை என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன.

No comments: