February 05, 2008

எழுத்தாளர் பாமரனின் "பஞ்ச்" பதில்கள்!

அன்புமிக்க தோழமைகளுக்கு.... வணக்கம். கடந்த 15 நாட்களுக்கும் மேலாய் சுற்றுப்பயணங்கள்... கருத்தரங்குகள்... எழுத்துப் பணிகள்.. நண்பர்களது சந்திப்புகள்... எனக் கழிந்ததால் எனது பதில்களுக்கான சாத்தியப்பாடுகள் தள்ளிக்கொண்டே போய் விட்டது என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மையில் ஒரு வெங்காயமும் இல்லை. உங்கள் நண்பனது "பலங்களை" எப்படிப் புரிந்து கொள்கிறீர்களோ அப்படி அவனது பலவீனங்களையும் புரிந்து கொள்வதே நட்பின் அடையாளம்.. வேலை இருந்தாலும் இல்லாவிடினும் அடிப்படையில் சோம்பேறி நான். இந்த சோம்பேறித்தனம் மட்டுமே என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்களும் துணை நிற்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.. இல்லாவிடில் இதுவும் ஒரு அலுவலகமாய்... குடும்பமாய்... நிறுவனமாய்... சீரழிந்து விடுவதற்கான சாத்தியப்பாடுகள் அநேகம் இருக்கிறது. இத்தகைய சாத்தியப்பாடுகள் கடந்து நமது தோழமை தொடரவேண்டும் என்பதே எனது கவனம். தொடர்வோம்... வழமையாய் அறிவிக்கப்படும் நாட்களைத் தகர்த்து...

தோழமையுடன்
பாமரன்

பாலா.
பாமரன் அவர்களே, தங்கள் எழுத்தை நேசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை...நேற்று வரை ஈழப்பிரச்சினையில் அமைதியாக இருந்த கலைஞர், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.... நன்று... அதை வரவேற்றோம்...ஆனால் அதே நிகழ்வுக்கு தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பேரணியும், கூட்டங்களும் நடந்தன...ஆனால் அங்கெல்லாம் அமைதியாயிருந்து விட்டு சென்னை யில் நடக்கவிருந்த பேரணிக்கும், கூட்டத்திற்கும் தடை விதித்ததன் மூலம் "காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலுக்கு கலைஞர் பணிந்து விட்டாரோ என்று எண்ணத்தோணுகிறது...." கலைஞரின் இந்த முடிவு இந்திய இறையாண்மையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா.. இல்லை ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளூம் எண்ணமா?


வணக்கம் பாலா....எனக்கு ஈழத்து வாசகம் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. "ஈழத்தில் மொழிக்காகப் போராடியவர்கள்போராட்டத்திற்குப் பிறகு போராளிகள் ஆனார்கள்தமிழகத்தில்மொழிக்காகப் போராடியவர்கள் போராட்டத்திற்குப் பிறகு மந்திரிகள் ஆனார்கள். "கலைஞர் ஆகட்டும்... எவராகட்டும்...ஈழப்பிரச்சனைக்காக ஆட்சியை துறக்கும் அளவுக்கு தியாகிகள் அல்லர். ஓட்டு அரசியலில் இருப்பவர்கள், இந்த அளவிற்காவது முணுமுணுத்தார்களே என்று ஆறுதல்பட்டுக் கொள்ளலாம் அவ்வளவே.

மணி செந்தில்
தற்போது வெளிவரும் திரைப் படங்கள் எவ்வாறு இருக்கின்றன...? எப்படி இருக்க வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்...?

பார்க்கப் பார்க்கவே "பரலோகத்திற்கு" டிக்கெட் வாங்கும் அளவிற்கு இருக்கிறதுமனைவியின் தங்கையை பிராக்கட் போட "ஆசை".....தம்பியின் மனைவியை தள்ளி கொண்டு போக "வாலி".....கணவனின் தம்பியை கவிழ்த்துப்போட "உயிர்".....இனி அப்பா - மகள் அம்மா - மகன் உறவு மட்டும்தான் மிச்சம்.

சுசித்ரா
வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..இவற்றை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..?

"எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால்ஆடுகளுக்கு விடுதலை உண்டாகுமா? அதை போலவே ஆண்களால் பெண்களுக்கு ஒருபோதும் விடுதலை உண்டாகாது..." என்று பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.போன நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மார்புக்கு மேலே சேலையை போடுவதற்கே போராட வேண்டி இருந்தது. பிற்பாடு கல்விக்கான போராட்டம்..... அதன் பிறகு பணி இடங்களுக்கான போராட்டம்....பால்ய விவாகம்..... உடன்கட்டை ஏறுதல்..... என கணக்கற்ற தடைகளைத் தாண்டியே வந்திருக்கிறது பெண் இனம். இப்படி சகலத்தையும் முறியடித்த பெண்ணிணம் பணி இட பிரச்சனைகளையும் நிச்சயம் தானே எதிர் கொண்டு முறியடிக்கும்.. நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு மெல்லிய கைகுலுக்கல்.

கொலைவாளினை எடடா
ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறார்கள், அதே நேரத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமப்புறங்கள் ஏராளம். இப்படி பரவலாக்கப்படாத வளர்ச்சியின் மூலம், மக்களில் பொருளாதார நிலை இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றுகொண்டு இருக்கின்றன.....2020யில் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்கிறார்கள் வல்லரசு எதைபதை எதை வைத்து முடிவுசெய்கிறார்கள்?

சரியான கேள்வி. தவறான இடத்திற்கு வந்திருக்கிறது. இதை அப்படியே.....டாக்டர்.அப்துல்கலாம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை என்ற முகவரிக்கு, redirect செய்கிறேன் தோழா..

ருத்ரா
தவறு செய்தால் சாமி கண்களை குத்திவிடும் என்று சொல்கிறார்கள் அதிக தவறுகள் நடந்துகொண்டு இருக்கின்றன் கடவுளின் சக்தி கேள்விக்குறியாகிறது?
இதில் உங்களின் கருத்து உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது நண்பா. அந்த சாமி....., இந்த சாமி....., சொந்த சாமி..... நொந்த சாமி..... எதுவும் காப்பாற்றாது நம்மை. எனக்கு தெரிந்த "ஒரே சாமி" ஈ.வே.ராமசாமிதான்..


கருணாநிதி
வணக்கம் தோழரே, உங்கள் பகிரங்க கடிதங்களுக்கு நானும் ஒரு ரசிகன். எனது கேள்விகள் :
1. இன்றைய தலித்துகளின் உண்மை நிலை பற்றி?

2. திராவிடம் பேசும் திராவிட கட்சிகள் இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க முன்வருவது இல்லையே?

3. கடல் தாண்டி உள்ள தமிழர்காக கண்ணீர் விடும் சில தலைவர்கள் (வைகோ, நெடுமாறன் மற்றும் பலர்) உள்ளூரில் கொடுமைக்கு உள்ளாகும் (தலித்) மலம் அல்லும் மனிதர்களை மறந்து போவது ஏன்?

4. அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு பற்றி?
நன்றி தோழரே. தலித்துகளின் இன்றைய நிலையை எழுத்தில் வடிக்க இந்த இணையத்தின் பக்கங்கள் போதாது. "இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க திராவிடக் கட்சிகள் முன்வருவது இல்லை...நெடுமாறன் போன்றவர்கள் ஈழத்துக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள்..." என்பதை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு நாம் இந்நிலை மாற துணை நிற்பதே முதல் வேலை.. அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம். மனித மலத்தை மனிதனே சுமக்கும் அவல நிலை மாறாத நாள் வரை யாரும் விஞ்ஞானி என்றோ.... எழுத்தாளன் என்றோ...கவிஞன் என்றோ சொல்லி கொள்வதில் அர்த்தமே இல்லை. இந்த அவல நிலை குறித்து திரு.மதிவண்ணன் அவர்கள் "உள் ஒதுக்கீடு சில பார்வைகள்" என்கிற நூலை அண்மையில் வெளியிட்டு இருகிறார் (கருப்பு பிரதிகள் பதிப்பகம், B-74 பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-5) வாங்கி - வாசித்து - செயல்படுவோம் வழி பிறக்கும்.

ஆர்த்தி
தொலைக்காட்சி ஊடகங்களின் செயல்பாட்டைப் பற்றித் தங்கள் பார்வை என்ன?

இருக்கிற பார்வையும் தொலைந்ததுதான் மிச்சம். Always Making new

வணக்கம் நண்பரே..தமிழனுக்கு சாதி தேவையா தேவையில்லையா?இல்லையெனில் தமிழனை அடையாளம் கொள்வது எப்படி?
வந்தேறிகள் அதிகமாகிவிட்ட இச்சூழ்நிலையில் எவ்வாறு அவர்களை இனம் காணுவது?.. கட்-அவுட்களூக்கு எங்கெங்கு பாலாபிசேகம் நடக்கிறதோ... வாஸ்துகளின் பெயரால் எங்கெங்கெல்லாம் கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதோ...சோதிடத்தின் பெயரால் வாழ்க்கை எங்கெங்கெல்லாம் தொலைக்கப்படுகிறதோ....அங்கெல்லாம் இளித்து கொண்டு நிற்பவன் எவனோ அவனே தமிழன்..தமிழனை இனம் காண்பதில் அப்படி என்ன சிக்கல் உங்களுக்கு?


ஜீவானந்தம்
தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு (இதற்கு ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை) விற்பனைக்காக பாமரன் தேவைப்படலாம். பாமரன் போன்ற புரட்சியாளர்களுக்கு குமுதம் தேவையா?
ஐய்யய்யோ.... என்னைப் புரட்சியாளன் என்று யாரோ உங்களூக்கு தவறான தகவல் தந்துவிட்டார்கள். பாவம்... குமுதம் தவிர வேறு பத்திரிக்கைகள் எதுவும் படிப்பதே இல்லையா நீங்கள்?

ஜெயபிரகாஷ் வேல்
தோழரே, உங்கள் எழுத்து நடை சற்று சலிப்பூட்டுவது போல் உள்ளது. ஓரே மாதிரி எழுதுவது உங்களுக்கு எப்படி உள்ளது?

உண்மை தான். ஞானிகளின் நண்பர்களுக்கு பாமரர்களின் நடை சலிப்பூட்டுவதில் ஆச்சரியங்கள் ஏதும் இல்லை

பாரதி
தோழரே ஈழத்தின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்.........

மதுரை மச்சான்!


தமிழிலேயே கேவலமான பத்திரிகை என்று பெரும்பாலர்களால் கருதப்படும் குமுதத்திற்கு இப்படி ஒரு கருத்து நிறையப்பேரிடம் இருக்கிறது!!!! எதனால் என்று கூறமுடியுமா? பாமரன் அவர்களே!!

25 வருடங்களாக எங்கள் வீட்டில் வாங்கி கொண்டிருக்கிறார்கள் இப்படி அவர்களுக்கு தோன்றியதாக எனக்கு தெரியவில்லை!!!

No comments: