September 30, 2007

  • திமுக-வின் முழு அடைப்புக்கு உச்சநீதிமன்றம் தடை : திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் திங்கட்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திங்கட்கிழமையோ அல்லது அதன் பிறகு வேறு எந்த நாளிலுமோ இந்தப் போராட்டத்தை நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருந்தபோதிலும் வழக்கத்துக்கு மாறாக சிறப்பு அமர்வு மூலம். பி.என். அகர்வால் மற்றும் பி.பி. நவ்லேகர் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்தது.
    ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதம்ஸ் பாலம் பகுதியை இடிக்கக் கூடாது என பாஜக மற்றும் இந்து அமைப்புக்கள் போராடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி முழு அடைப்புப் போராட்டம் நடத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்தன. உண்ணாவிரதம் இருக்கிற போகிறார் தமிழக முதல்வர் அதை எதிர்த்து அதிமுக சார்பிலும் மேலும் சிலரது சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மாநில அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை ஞாயிற்றுகிழமை காலை மூன்று மணி நேரம் நடைபெற்றது. பந்த் என்று தீர்மானித்த பிறகும் அதற்குத் தடை விதிக்கத் தவறியதன் மூலம் உயர்நீதிமன்றம் தனது கடமையிலிருந்து தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் உரிமைகளைவிட பொதுமக்களின் உரிமைதான் முக்கியமானது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இந்த விசாரணையின்போது அனைத்துத் தரப்பினரும் ஆச்சரியப்படும் வகையில் சேதுசமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவதை எதிர்க்கவில்லை என்று திமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அந்தப் பிரச்சினையைப் பற்றி இப்போது நீதிமன்றம் கவலைப்படவில்லை என்றும் பந்த் நடத்தப்படுவது சரியா என்பதுதான் கேள்வி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். யாருக்கு எதிராக பந்த் நடத்துகிறீர்கள்? மத்திய அரசுக்கு எதிராகவா அல்லது இந்த நீதிமன்றத்துக்கு எதிராகவா? என்று நீதிபதிகள் கேட்டனர். சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே பந்த் நடத்த நீதிமன்றம் தடை விதித்துவிட்டாலும் அதற்குப் பதிலாக திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி அறிவித்துள்ளார்
  • சேது சமுத்திரத் திட்டத்தால் இலங்கை கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிறது இலங்கையின் வல்லுநர் குழு : இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் கடல் எல்லைக்கு அண்மையாக சர்ச்சைக்குரிய இந்தியாவின் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடரப்பட்டால் இலங்கையின் கடல் வாழ் உயிரினங்களுக்கு, மூலப்பொருட்களுக்கும் அது கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துமென இந்தத்திட்டம் குறித்து ஆராந்துவரும் இலங்கை நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்தவரான லங்கா ஹைட்ரோலிக் இன்ஸ்டிடியூட்டின் நிறைவேற்று அதிகாரி, மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார். பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் குறித்து இலங்கை அதிகாரிகள் இந்தியத் தரப்பினரைவிட நன்கு விரிவான முறையில் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கடலின் தற்போதைய ஓட்டத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதோடு, இங்கே கடலின் மடியில் வாழக்கூடிய தாவரங்கள், மற்றும் உயிரினங்களிற்கும் அவை எதிர்வுகூற முடியாத அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்படுமெனவும் மலித் மெண்டிஸ் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான கடலின் மடியில் இருப்பதாகக் கூறப்படும் இராமர் சேது அணையின் குறுக்காக சுமார் 167 கிலோமீற்றர்கள் நீளமாக வெட்டப்படவுள்ள இந்தக் கப்பல் கால்வாய்த்திட்டம் குறித்த இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஏற்கனவே இலங்கை வெளிநாட்டமைச்சிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது
  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் : இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மெக்சிகோவில் நடைபெற்ற உலக சாம்பியனுக்கான செஸ் போட்டியின் இறுதி சுற்றில் ஹங்கேரி நாட்டின் பீட்டர் லீக்கோவை அவர் வெற்றி பெற்றார். இந்தப் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களிலும் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தமிழோசையிடம் ஆனந்த் தெரிவித்தார். இந்தப் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது என்றும், முக்கியமாக ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரை கிருஷ்சுக்கை வெற்றி கொண்டது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியை திங்கட்கிழமை விளையாட்டு அரங்கத்தில் கேட்கலாம்.
  • மன்னார் மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது : இலங்கையின் வடமேற்கே மன்னார் முன்னரங்க பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசியபாதுகாப்புக்கான ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கள்ளிக்குளம் முன்னரங்க பகுதியிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தலிபான்கள் நிராகரிப்பு : ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் பேச்சுவார்த்தைக்கு விடுத்த அழைப்பை தலிபான்கள் சார்பில் பேசவல்லவர் நிராகரித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானில் அன்னியப் படைகள் இருக்கும் வரையில் தலிபான்கள் ஒரு போதும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமாட்டார்கள் என காரி யூசப் அஹமதி என்ற அப்பேச்சுவார்த்தையாளர் கூறினார்
  • எகிப்தில் சிக்கித்தவித்த பாலஸ்தீனர்கள் காசா திரும்ப அனுமதி : கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக எகிப்தில் சிக்கித்தவித்து வந்த 85 பாலஸ்தீனர்கள், காசாவிற்கு திரும்புவதற்கு எகிப்து அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்

No comments: