November 18, 2007

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா?

கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா? அப்படியானால் உங்களது கிரெடிட் கார்டின் எண்ணைக்கூட யாருக்கும் தெரியப்படுத்தவோ, தரவோ வேண்டாம். ஏனெனில், உங்கள் கிரெடிட் கார்டு எண் வேறு யாருக்காவது தெரிந்திருந்தால் அதைப் பயன்படுத்தி உங்கள் பணத்தைச் சுருட்டிவிட முடியும். இத்தகைய நூதன மோசடிக்கு ஒரு புதுவித சாஃப்ட்வேர் உதவுகிறது என்பது அதிர்ச்சிகரமான தகவல். எனவே, அவ்வப்போது உங்களின் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதுபோல தனி நபர் கடன் பெறுவதற்கோ அல்லது வேறு உபயோகத்துக்கோ கிரெடிட் கார்டின் "இருபக்க ஜெராக்ஸ் நகல்களை' யாருக்கும் கொடுக்கக்கூடாது.
கிரெடிட் கார்டு மோசடி அதிகரிப்பு: சென்னையில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி தொடர்பான மோசடிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு புள்ளி விவரப்படி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போதைய நிலவரப்படி 2007-ல் இதுவரை சுமார் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 32 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக தினந்தோறும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். நூதன மோசடி நடப்பது எப்படி? கிரெடிட் கார்டில் நூதன முறையில் தற்போது மோசடி நடந்து வருகிறது. பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை. நீங்கள் "எலக்ட்ரானிக்ஸ் டேட்டா கேப்சர்' என்ற இயந்திரத்தில் "ஸ்வைப்' செய்தால் உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடக்கும்.
தற்போதோ கிரெடிட் கார்டு இல்லாமலேயே, அதாவது கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு உங்களது பெயரில் பணத்தைச் சுருட்டிவிட முடியும். சில வங்கிகள் இதற்கான சேவைகளை வழங்கி வருகிறது. நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் இம்மாதிரியான சேவையைப் பெற முடியும். இதற்கு "கீ என்ட்ரி ஆப்ரேஷன்ஸ்' என்ற புதிய சாஃப்ட்வேர் முறை பின்பற்றப்படுகிறது.

இதன்படி கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்காவிலோ அல்லது ஃபிரான்ஸிலோ உள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கு அறைகளை புக் செய்து கொள்ள முடியும். தடுப்பது எப்படி? இம்மாதிரியான சேவைகளில் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளன. எனவே, கிரெடிட் கார்டுகளின் எண்களை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. அதேபோல கிரெடிட் கார்டுகளின் இரு பக்க ஜெராக்ஸ் நகல்கள், சிவிவி எண் (கார்டு வேல்யூ வெர்ஃபிகேஷன்), கிரெடிட் கார்டின் பயன்பாட்டுக் காலம் குறித்து தகவல் தெரிவிக்கக்கூடாது. ஆன்-லைன் மூலமாக இந்தச் சேவை நடைபெறுகிறது. ஆன்-லைன் மூலமாக நடைபெறும் இந்த மோசடியைத் தடுக்க வேண்டுமெனில், கிரெடிட் கார்டில் உள்ள சி.வி.வி. எண்களை கறுப்பு பேனாவால் எழுதி மறைத்துவிட வேண்டும். அதன்பின்னர் ஜெராக்ஸ் நகல் கொடுத்தால், மோசடி நடப்பது தவிர்க்கப்படும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மறக்காதீர் பாஸ்வேர்ட் எண்ணை!
கிரெடிட் கார்டு மட்டுமில்லாது டெபிட் கார்டு மோசடிகளும், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் பெண் டாக்டர் ஒருவரின் டெபிட் கார்டு திருடப்பட்டு, பணம் எடுக்கப்பட்டது. விசாரணையில், அந்த பெண் டாக்டரின் செல்போனில் இருந்த டெபிட் கார்டு எண்ணை அந்த நபர் தெரிந்து கொண்டார். பின்னர் டெபிட் கார்டை திருடிச் சென்று, பணத்தை எடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

பாஸ்வேர்ட் முக்கியம்...:
டெபிட் கார்டுகளின் பாஸ்வேர்ட் (ரகசிய இலக்க எண்கள்) நினைவில் வைத்திருப்பது அவசியம் என்கிறது போலீஸ். சிலர் தங்களது செல்போனில், ரகசிய எண்களை பதிவு செய்து வைக்கின்றனர். இன்னும் சிலர் டெபிட் கார்டுகளுக்கான உறைகளிலேயே தங்களது ரகசிய இலக்க எண்களை எழுதி வைக்கின்றனர். அதுபோல எழுதி வைக்கக்கூடாது. சில நேரங்களில் டெபிட் கார்டு தொலைந்து போகும் பட்சத்தில், யாராவது எடுத்து பணத்தை எடுத்துவிட வாய்ப்புள்ளது என்று போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.

No comments: