November 11, 2007

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன

பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைப்பு : விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று இலங்கை விமானப்படை கமாண்டர் ஏர் மார்ஷல் ரோஷன் குணதிலகே கூறியுள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின், `டிவி' சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விரைவில் எங்கள் விமானப்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு இடத்தை கண்டுபிடித்து, அவரை தீர்த்துக் கட்டுவர். பிரபாகரனின் வாழ்நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. வவுனியாவில் மிகச்சிறிய பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளின் எல்லை சுருக்கப்பட்டு விட்டது. எனவே, பிரபாகரன் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்து, தாக்குதல் நடத்துவது எளிதாகி உள்ளது. அவரை கண்டுபிடிப்பது பெரிய சிரமமான காரியமாக தோன்றவில்லை. இம்முறை அவரை பிடித்து விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காகத்தான் இதுவரை நீண்ட பொறுமை காத்து வந்தோம். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. இவ்வாறு ரோஷன் குணதிலகே கூறினார். சமீபத்தில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கை ராணுவம் குறிவைத்துள்ளது.

No comments: