May 01, 2008

உலக அளவில் செல்வாக்குப் பெற்ற 100 பேர்:சோனியா உட்பட 3 இந்தியருக்கு இடம்

2008 - ஆம் ஆண்டில் உலக அளவில் செல்வாக்குபெற்ற 100 நபர்களில் சோனியா காந்தி, தொழிலதிபர் ரத்தன் டாடா, பெப்சி நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி இந்திரா நூயி ஆகிய மூன்று இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
2008-ஆம் ஆண்டில் உலக அளவில் செல்வாக்குப்பெற்ற 100 பிரபலங்களின் பட்டியலை அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.



இந்தப் பட்டியலில் இந்திய அரசியலில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பெண்மணியாக சோனியா காந்தியை தேர்வு செய்துள்ளனர். பலத்த சோதனைகளுக்கு இடையிலும் காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்தியவர் என்ற பெருமை சோனியாவிடம் காணப்படுகிறது.
இந்திரா நூயி (வயது 51) தான், சார்ந்திருக்கும் பெப்சி நிறுவனத்தை உலக அளவில் முன்னணி நிறுவனமாக மாற்றிய சாதனையாளர். அவரின் வியாபார நுணுக்கங்களும், புதுமைகளும்தான் பெப்சியின் சந்தையை உலகமயமாக்கியது. எனவே அவர் செல்வாக்குப் பெற்ற 100 பேரில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 70), இவர் இடம் பெறக் காரணம்- 1 லட்ச ரூபாய்க்கு நேனோ காரை அறிமுகப்படுத்த இருப்பதால்தான்.

திபெத்தின் ஆன்மீகத்தலைவர் தலாய் லாமாவும், சீனப் பிரதமர் ஹூ ஜிந்தோவும் இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் பெயரும் இதில் உள்ளது. டோனி பிளேரின் பெயர் முதல் முறையாக இந்தப் பட்டியலில் இந்த ஆண்டுதான் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இங்கிலாந்து பிரதமரான கோர்டன் பிரௌன் 2005-ஆம் ஆண்டுப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

கடந்த ஆண்டு இடம் பிடித்திருந்த அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டனும், அதிபர் வேட்பாளாரான பராக் ஒபாமாவும் வழக்கம் போல் இந்த ஆண்டுப் பட்டியலிலும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி இருக்கிறார்கள். உலக அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் 100 நபர்களை 'டைம்ஸ் இதழ்' தேர்வு செய்து தனது இணயத் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

No comments: