May 01, 2008

வழக்குகளை ரத்து செய்ய முடியாது : குஷ்பூவுக்கு நிதானம் தேவை - உயர்நீதி மன்றம்

பல்வேறு கோர்ட்டுகளில் நடிகை குஷ்பு மீதுள்ள 26 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது, இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் நேற்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அனைத்து வழக்குகளையும் எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு `எய்ட்ஸ்' விழிப்புணர்வு கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் பேசிய பேச்சு தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும், பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 26 கோர்ட்டுகளில் அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த 26 வழக்குகளையும் ரத்து செய்யவேண்டுமென்று, குஷ்பு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இதுதவிர, மேட்டூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டுமென்று குஷ்பு இன்னொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். குஷ்பு சார்பில் சீனியர் வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடுகையில், `ஒருவரை குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் பேசினால் மட்டுமே அவதூறாக அமையும் என்றும், ஆனால், குஷ்பு பேசிய பேச்சு அவதூறாகாது' என்று குறிப்பிட்டார். `எய்ட்ஸ்' விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இல்லை என்று வற்புறுத்தி வாதாடினார்.

அவதூறு வழக்குகள் தொடர்ந்தவர்களின் சார்பில் வக்கீல்கள் கே.பாலு, அனந்தநாராயணன், ரூபர்ட் பர்னபாஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். `பேசியதில் தவறில்லை, புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி, புரியாதவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை என்று இழிவுபடுத்தி பேசிய குஷ்பு விமர்சித்து கூறியுள்ளார்' என்று அவர்கள் வாதாடுகையில் குறிப்பிட்டனர்.

நேரடியாக தமிழ் பெண்களை அவதூறாக பேசியுள்ளார் என்றும், அவர் ஒரு நடிகை தானே தவிர, மருத்துவ ரீதியானவர் அல்ல என்றும், இப்படிப்பட்டவர் கூறிய கருத்து எதிர்காலத்தில் சமுதாயம் ஒரு தவறான போக்கிற்கு ஆளாகிவிடும் என்று வற்புறுத்தி வாதாடினார்கள். ஆகவே, இந்த 26 வழக்குகளையும் ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டனர். மேலும், எந்த கருத்துக்களையும் கூறக்கூடாது என்று மேட்டூர் கோர்ட்டு நிபந்தனை விதித்தும், அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்றும் வற்புறுத்தி வாதாடினார்கள்.

குஷ்பு மீதான 26 வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

குஷ்பு பேசியது அவதூறாக எடுத்துக்கொண்டால் கூட, பல கேள்விகளை காணும் நிலையில்தான் வழக்கு உள்ளது. அவர் சொன்ன கருத்துக்கள் நல்ல நோக்கத்தில் பேசப்பட்டதா, எந்த சூழ்நிலையில் பேசப்பட்டது, எந்த நோக்கத்திற்காக பேசப்பட்டது என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டும்.

சாட்சி விசாரணையின்போது தான் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கும். ஆகவே, அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கோர்ட்டு உத்தரவினால் அவர் கைது செய்யப்படாமல் இருக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு விதிவிலக்கு அளிக்கும்போது, இந்த விஷயம் பற்றி ஏதும் பேசக்கூடாது என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையை அவர் கடைபிடிக்க தவறிவிட்டார்.

மேலும், சர்ச்சை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். நீதிமன்றங்களையும், சட்டங்களையும் இழிவாக பேசி பேட்டி அளித்துள்ளார். இதுபோன்று பேசும்போது அவர் நிதானத்தை கடைபிடிக்க தவறிவிட்டார். பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசவேண்டும் என்பதில்லை. இந்த வழக்கு முடியும் வரை அவர் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

இந்திய பண்பாடு, தமிழ் பண்பாடுக்கு எதிராக மோசமாக, அவதூறான கருத்துக்களை ஒருவர் தெரிவிக்கும்போது, அதனால் பாதிக்கப்படும் நபர் இந்த கருத்துக்களினால் தான் புண்பட்டுவிட்டதாக புகார் தரும்பட்சத்தில், அதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. அதே சமயம் வழக்கின் தன்மை குறித்தும், சூழ்நிலை குறித்தும் ஆராய வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. மாஜிஸ்திரேட்டு வழக்கு தொடர்பாக விமர்சிக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்த பிறகும், குஷ்பு தன்னால் கட்டுப்பட்டு இருக்க முடியவில்லை. இவர் மீது வெவ்வேறு கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆகவே, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம். ஆகவே, இந்த வழக்குகள் அனைத்தையும் எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். அக்கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

No comments: