July 30, 2007

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் : ஆனால் இங்கு "உயிருக்கு உயிர்"
இந்தியா போன்ற பாரம்பரியமும், மனிதாபிமானமும் மிக்க நாடுகளில் கடும் துன்பம் இழைத்த, கொடூரமான தீவிரவாத செயல்கள் புரிந்த எத்தனையோ குற்றவாளிகளுக்குக்கூட, தூக்குத்தண்டனை மற்றும் மரணதண்டனை போன்றவற்றைக் குறைத்து தவறிழைத்தவர்களுக்கு, திருந்தி மறுபடியும் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப் பரிந்துரைத்துப் போராடிவரும் மனித உரிமை மற்றும் தன்னார்வக்குழுக்கள் அன்றாடம் முளைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கணினிக் காலத்தில், மனித உயிரின் மதிப்புத்தெரியாத அவலம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
மனிதாபிமானத்துக்கும் சவூதி மக்களுக்கும் தூரம் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது!! ஒரு குழந்தை இறந்ததற்குக் காரணம் இன்னொரு குழந்தை உண்மைதான் என்றாலும், கொலைக்குக் காரணமான குழந்தையையும் கொன்றுவிடுவதால், கொலைசெய்யப்பட்ட குழந்தை திரும்பி வரப் போகிறதா என்று ஒரு கணம் அந்தப் பெற்றோர் யோசித்திருந்தால், இன்னொரு சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டுவிடும். மேலும் மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்....எல்லாவற்றுக்கும் மேலாக புனிதர் நபிகள் நாயகம் நடமாடிய இந்தச் சவூதி மண்ணில் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பறிக்கப்படப்போகிறதோ??
ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வி?
இலங்கைப் பணிப்பெண்ணான ரிசானாவுக்கு கருணை காட்ட உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மறுத்துவிட்டதால் அவரைக் காப்பாற்றும் இலங்கை வெளிநாட்டமைச்சின் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சவுதிஅரேபியாவில் இலங்கைப் பணிப்பெண்ணை ரிசானாவின் கவனக் குறைவால் 4 மாதக் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு அரசு ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்தது.

இலங்கை பணிப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீக்குமாறு இலங்கை அரசும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் உசைன் பைலா பணிப்பெண்ணின் பெற்றோருடன் சவுதி சென்றார்.

அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து றிசானாவை மன்னித்து விடுதலையாக்கும்படி கேட்டபோதும் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிசானாவின் பெற்றோரும் பிரதி அமைச்சர் உசைன் பைலாவும் நாடு திரும்பி விட்டனர்.
மூவருக்கு மரண தண்டனை:
சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் பெண் குழந்தை ஒன்றை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரு இலங்கையர்கள் உட்பட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் பெண்ணாவார். இவர் இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆட்சேபித்து சர்வதேச மன்னிப்பு சபையிடம் புகார் செய்துள்ளனர்.

இலங்கைப் பெண்ணான ஹெல்மா நிஸ்ஸா அவரது கணவன் நௌஸாப் மற்றும் இலங்கையரான கே.எம்.எஸ். பண்டாரநாயக்க ஆகிய மூவருமே சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
இம்மூவரும் சவூதி அரேபியாவில் பொலிஸாரின் விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தடுப்புக்காவலில் இருக்கும்போது அவர் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு மிக மோசமாக சித்திரவதைக்குள்ளான நிலையும் காணப்படுகிறது.
சவூதி அரேபிய அரசு தற்போது மரண தண்டனை குற்றவாளிகள் தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளைக் கையாள்வதன் காரணமாக இவ்வாண்டு இதுவரை 103 பேர் மரண தண்டனைக்குள்ளாகியுள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை, சிரச்சேதம் செய்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments: