September 24, 2007

மனிதனை விட மண்ணுக்கே மரியாதை - தா.பாண்டியன் வேதனை

திருநெல்வேலி : மனிதனுடைய உயிருக்கு கிடைக்கும் மரியாதையைவிட மணலுக்கு தான் அதிக மரியாதை கிடைக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நெல்லை மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் சுடலைமுத்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுக் கூட்டம் நடந்தது.

இதில் தா.பாண்டியன் பேசுகையில், தாமிரபரணியில் நடக்கும் மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நெல்லை மாவட்ட செயலாளர் சுடலைமுத்து கடந்த மாதம் வீரவநல்லூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது வன்மையாக கண்டிக்கதக்கது. சிறைகளுக்கு என்று தனி விதிகள் உள்ளன. 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற காலத்தில், முதல் 14 மாதங்கள் பரோலில் வர அனுமதி கிடையாது. ஆனால் சுடலைமுத்து கொலை தொடர்பாக தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் ஒரே மாதத்தில் பரோலில் வெளியே வந்தது காவல்துறையின் அக்கறையின்மையை காட்டுகிறது.

சுடலைமுத்து கொலையில் தொடர்புடையதாக 12 பேரின் பெயர்களை சாட்சியான நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் 4 பேர் மட்டுமே போலீசாரால் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே சுடலைமுத்துவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மனிதனை விட மணலுக்குதான் மரியாதை. மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய சுடலை முத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தேசிய நிர்வாக குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் அரிகேசவநல்லூர் பஞ்சாயத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அயூப்கான் மட்டும் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

அயூப்கானுடன் சேர்ந்து போராடிய தலித் சமூகத்தை சேர்ந்த சுடலைமுத்து கொலை செய்யப்பட்டதன் மூலம் அரசின் கொள்கை கொல்லப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இன்னமும் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. பதவியேற்ற சில நாட்களிலேயே சேரன்மாதேவி சப்-கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய்த் துறையினர் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மணல் கொள்ளை நடப்பதற்கு இதுவே சாட்சி.

நெல்லை அருகே ஓமநல்லூரில் மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஏழை எளிய மக்கள் 56 பேர் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களுக்காக நல்லாட்சி செய்வதில் கருணாநிதி உறுதியாக இருப்பது உண்மையென்றால் அவர்கள் மீது போட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

No comments: